![](pmdr0.gif)
யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 1
yacOtara kAviyam with the
commentary/notes of auvai turaicAmi piLLai - part 1
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, CMC Karthik, R. Navaneethakrishnan, P. Thulasimani,
V. Ramasami, A. Sezhian, SC. Tamizharasu, V. Jambulingam and P. Sukumar
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 1
Source:
காப்பிய நூல்கள் தமிழிற் பல உள்ளன. அவை பெருங்காப்பியம் சிறுகாப்பிய மென்று இருவகைப்படும். சி்ந்தாமணி, சிலப்பதிகார முதலிய நூல்கள் பெருங்காப்பியங்கள்; சிறுகாப்பிய வகையுள் யசோதரகாவியம், சூளாமணி முதலியன அடங்கும்.
யசோதரகாவியம் சமணசமய நூல். யசோதரன் என்னும் அவந்திநாட்டு மன்னன் வரலாறு கூறுவது. இந்நூல் முதன் முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு இத தமிழ் மொழியிற் சிறுகாப்பியமாக இயற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் இன்னார் என்பது புலப்படவில்லை. நூல் ஐந்து சருக்கங்களாக வகுக்கப்பட்டு 330-செய்யுட்களைப் பெற்றுள்ளது. செய்யுட்கள் எளிய நடையில் அமைந்துள்ளன.
நல்வினை தீவினைகளால் விளையும் விளைவுகளை இந்நூல் நன்கெடுத்துக் காட்டுகின்றது. இவ்வுண்மை புலப்படுத்துதல் நோக்கமாகவே யசோதரகாவியம் இயற்றப்பட்டுள்ளது. இது, வாழ்க்கையில் அறிந்தொழுகுதற்குரிய உண்மையே யாதலின், பயில்வார்க்கு இந்நூல் தக்க ஒழுக்கங்களைப் பயந்து நன்மையே விளைப்பதாகும்.
இதற்குமுன் யசோதரகாவியம் மூலமட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. உரை இல்லை. இப்போது புதிதாக இதற்கு உரையும் எழுதி, மூலமும் உரையுமாகக் கழகப் பதிப்பாக வெளிவருகின்றது. தமிழ்த்தாய்க்கு இஃதொரு புதிய அணிகலனாகும். இதுகாறும் உரையில்லாத தமிழ் நூல்கட்கெல்லாம் இங்ஙனமே புதிய உரைகள் கண்டு வெளியிட்டுத் தமிழ்மக்கட்கு அவற்றை நன்கு பயன்படச் செய்ய வேண்டுமென்பது கழகத்தின் பேரார்வம். தமிழ்த்தாய் விளங்கத், தமிழ்மக்களும் விளங்குவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னணித் தமிழாசிரியரும், சிலப்பதிகார முதலிய பெருங்காப்பியங்களின் சுருக்கங்களும் ஆராய்ச்சிகளும் முன்னர் வகுத்துதவியவருமாகிய திருவாளர் வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இந்நூலின் உரையாசிரியராவர். யசோதர காவியத்தின் பலபடிகளை ஒப்புநோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரையும் அவர் வகுத்துள்ளார். உரை தெளிவான பதவுரையோடும், விளக்கவுரையோடும் இயன்றுள்ளது. உரிய பாடவேறுபாடுகளும், மேற்கோட் குறிப்புக்கள் முதலியனவும் அவ்வப்பக்கங்களில் அடிக்குறிப்புகளாகக் காட்டப்பெற் றுள்ளன. இறுதியிற் பாட்டு முதற்குறிப் பகராதியும் இணைக்கப்பெற்றிருக்கின்றது. நூலின் முகப்பில், உரையாசிரியர், விளக்கமான ஆராய்ச்சி முன்னுரையொன்று தந்துள்ளார். நூல் கற்பார்க்கு இவையெல்லாம் பெரிதும் உதவும். இத்தனை நலங்கெழும இந்நூல் வெளிவருதற்கு உதவிபுரிந்த உரையாசிரியர் பிள்ளையவர்கட்குக் கழகத்தார் தமது நன்றியறிவினைப் புலப்படுத்திக்கொள்கின்றனர்.
தமிழ்த்தாய்க்குப் புதிய புதிய அணிகலன்களை இங்ஙன மெல்லாம் அணிந்துவருமாறு, தோன்றாத் துணையாயிருந்து கழகத்துக்கு அருள்புரிந்துவரும் முழுமுதற் செம்பொருளுக்குக் கழகத்தின் நெஞ்சங்கனிந்த வணக்கம் உரித்தாகின்றது. தமிழ்மக்கட்கு இந்நூலுரை நன்கு பயன்படுமென்று நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
------------
பொருளடக்கம்
-----------------
யசோதரகாவியம்
சமண முனிவர்கள் தமிழகத்திற் புகுந்து நம் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டுகள் மிகவும் போற்றற்குரியன வாகும். அவர்கள் செய்த தொண்டின் பயனே நாலடியார் முதலிய அறநூல்களும், சூளாமணி சீவகசிந்தாமணி முதலிய காவியங்களும், சின்னூல் நன்னூல் முதலிய இலக்கணங்களும் தோன்றுதற்குக் காரண மாகும்.
தமிழ் இலக்கியத்துறையில் வியந்து பேசப்படும் காவியங்கள் பெருங்காப்பியம், சிறுகாப்பியமென இருவகைப்பட்டு ஒவ்வொன்றும் ஐயைந்தாக விரித்துரைக்கப்படும். அவற்றுள் சிறுகாப்பியங்கள் இவ் யசோதரகாவிய முதலாக ஐந்தாகும். அவை, யசோதர காவியம், சூளாமணி, உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், நீலகேசியென விரியும். இவற்றுள் நாககுமாரகாவிய மொழிய ஏனை நான்கும் வெளியாகியுள்ளன.
யசோதரகாவியம் சிறுகாப்பிய வகையுள் முதற்கண் வைத்து மொழியப்படுவது. எனினும், இவ்வகையுள் வைத்துக் கூறப்படும் சூளாமணி, நீலகேசி என்ற இரண்டையும் நோக்க, இஃது அத் துணை இலக்கிய நலம் உடையதாக இல்லை. ஆயினும் உதயண குமாரகாவியத்தினும் செய்யுட்பொலிவும் பொருணலமும் மிகவுடையதென்பது ஒருதலை.
இவ் யசோதரகாவியத்தின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இதன்கண் அடங்கிய யசோதரன் முதலாயினார் வரலாறு தமிழில் வேறு எந்நூலினும் காணப்படவில்லை. வடமொழிக்கண் இவ் வரலாறு பல ஆசிரியர்களால் எடுத்துக்கூறப்படுகிறது.
வடநூல்களை நோக்கின், தமிழ்மொழியினும் வடமொழிக்குச் சமண் சான்றோர் செய்துள்ள தொண்டுகள் மிகப் பலவாகும். அவற்றை ஆராய்ச்சியாளர் நான்கு வகைப்படுத்து முறையே பிரத மானுயோகம், கரணானுயோகம், திரவியானுயோகம், சரணானு யோகம் என்று கூறுவர். பிரதமானு யோகத்தில் பல்வகைப் புராணங்களும் அடங்குகின்றன. அவற்றுள், பத்மபுராணம், அரிவம்ச புராணம், மகாபுராணம், உத்தரபுராணம் முதலாயின சிறப் புடையனவாகும்.
மகாபுராணமென்பது சமண் சமயத்து அறுபத்து மூன்று பெருமக்களைப்பற்றிக் கூறுவதாகும். இந்த *அறுபத்து மூவரையும் தீர்த்தகரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர். பிரதி வாசுதேவர் ஒன்பதின்மர் என வகுத்துரைப்பர். இவ்வாறு தொகை வகை விரியால் அறுபத்து மூவராயினும் ஆள் வகையில் அறுபதின்மரே யாகின்றனர்.
இவர்கள் வரலாறுகள் சுவேதாம்பரிகளால் சாரித்திரம் என்று கூறப்படுமாயினும், திகம்பரிகளால் புராணமென்றே வழங்கப்படு கின்றன.
மகாபுராணம் ஆருகதமாபுராணமென்றும் ஆதிபுராணமென் றும் வழங்குவதுண்டு. இதன்கண் நாற்பத்தேழு புராணங்கள் உள்ளன. இவற்றுள் முதல் நாற்பத்திரண்டினை ஜினசேனரும், ஏனை ஐந்தினை அவர் மாணவர் குணபத்திரரும் எழுதினர். இவர் கள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டென்பர். இனி, பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்த ரென்பவரால் ஒரு மகாபுராணமும், பதினோராம் நூற்றாண்டில் மல்லிசேன ரென்பவரால் ஒரு மகாபுராணமும் எழுதப் பட்டிருக்கின்றன. இவருள் ஒருவரான ஜினசேனர் வேறு என்றும், அரிவம்சபுராணம் பாடிய ஜினசேனர் வேறு என்றும் † ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.
இனி, மகாபுராணத்தை யடுத்து நிற்கும் உத்தர புராணத்தை ஜினசேனர்க்கு மாணவராகிய குணபத்திரர் ஒருவரே எழுதினார். இவரைக் குணபத்திர முனிவரென்றும் குணபர முனிவர் என்றும் கூறுப. இப் புராணத்தின் முதற்கண் இவ் யசோதரகாவிய நிகழ்ச்சி கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வடநூற்கண் கூறப்பட்ட முறையே தமிழில் கூறப்படவில்லை. கூறப்பட்டிருப்பின், இந் நிகழ்ச்சி கற்றோர் நினைவில் சிறந்த இடம் பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் வரலாறுகள் மகாபுராண மெனப்படு வது நோக்கியும், தமிழில் திருத்தொண்டர்புராணம் பெரியபுராண மெனப்படுவது பற்றியும் இவர்களுடன் அறுபான்மும்மை நாயன் மார்களை ஒப்புநோக்கி மயங்குதல் நேரிதன்று.
சமண்சான்றோருள் மிகப்பலர் இந்நிகழ்ச்சியில் பேரீடுபாடு உடையராய் இருக்கின்றனர். உத்தரபுராணத்திற் காணப்படும் இக்கதை பல சான்றோர்களால் தனித்தனி நூலாக உரைக்கப்பட்டிருக்கிறது. சோமதேவசூரி யென்பவரால் யசஸ்திலகம் என்ற பெயரால் சம்புடையிலும், வாதிராசசூரி யென்பவரால் யசோதர சரிதம் என்ற பெயராலும், ஹரிபத்திர ரென்பவராலும், புட்பதந்த ரென்பவ ராலும் இவ் யசோதரகாவியம் வடமொழியில் அழகுறக் கூறப்பட்டுள்ளது. இவையாவும் எழுந்த காலம் பத்தாம் நூற்றாண்டாகும்.
இவ் வடநூல்களுட் காணப்படும் யசோதரகாவிய *நிகழ்ச்சிச்கும் தமிழிற் காணப்படும் காவிய நிகழ்ச்சிக்கும் வேறுபாடு பெரிதாக இருக்கின்றது. இதன்கண்வரும் மாரிதத்தன் வரலாற்றை யசஸ் திலகம் என்ற நூலின்கண் சோமதேவசூரி கூறும் முறையே வடித்துத் தருகின்றோம்.
மாரிதத்தன் என்பவன் இளமையிலே அரசு மேற்கொண்டு இன்பத்துறையில் இறப்பவும் எளியனாகின்றான். ஒருநாள் புரோகிதனுரைத்த உரையை மேற்கொண்டு சண்டமாரி யென்னும் குல தேவதைக்கு இரட்டையிரட்டையாக உயிர்ப்பலியிடத் தொடங்குகின்றான். தான் இரட்டை நரபலியிட நினைந்து, வீரரைச் செலுத்தி மக்களுள் இரட்டையராவார் இருவரைக் கொணருமாறு பணிக்க, அங்ஙனமே அவர் சென்று சிறுவனும் சிறுமியுமாகிய இரட்டையர் இருவரைக் கொணர்கின்றனர். அவ்விருவரும் மாரிதத்த னுடைய தங்கையின் மக்களாய்ப் பிறந்து இளமையிலே துறவு பூண்டவர். இச்செய்தியை மாரிதத்தன் கேள்வியுற்றிருந்தானே யன்றி நேரிற் கண்டதிலன். இப்போது நேரிற் கண்டதும் ஒரு கால் இவ்விரட்டையர் தன் தங்கையின் மக்களோ என்றெண்ணி அவர்தம் வரலாற்றினை மாரிதத்தன் கேட்கின்றான். அவர்கள் தம் முடைய பண்டைப் பிறவிகளின் வகையும் அவ்வவற்றின் காரணங் களையும் இடையிடையே சைன வறங்களையும் எடுத்துக் கூறுமுகத் தால் தாம் அவன் உடன்பிறந்தாள் மக்களே என்பது விளங்கக் கூறுகின்றனர். மாரிதத்தன் அதுகேட்டு மனம் திருந்தித் துறவு மேற்கொண்டொழிகின்றான்.
இம் மாரிதத்தன் ஓதயநாட் டரச னென்றும், சண்டமாரி தேவதைக்குச் செய்யவேண்டிய பலியூட்டினை நகரத்தவர் கூறக் கேட்டுச் செய்யலுற்றா னென்றும் இத் தமிழ்நூல் கூறுகின்றதேயன்றி,அபயருசியும் அபயமதியுமாகிய இரட்டையர் அவன் உடன் பிறந்தாள் மக்களே என்று கூறுகின்றிலது.
இனி,மேலே கூறிய உத்ரபுராணத்தை முதலாகக்கொண் டும், ஹரிபத்திரர் எழுதிய வரலாற்றைப் பின்பற்றியும் வாதிராசர் என்பார் யசோதர சரிதத்தை மிக அழகு திகழக் கூறியுள்ளார். முதனூலாகிய உத்தரபுராணத்துக்கும், பின்னூலாகிய யசோதர சரித காவியங்கட்கும் விளக்கமும் வழிமுறையும் நிகழ்ச்சிநிரலும் வகுத்தும் தொகுத்தும் கூறிய பெருமை ஹரிபத்திரருக் குண்டு. அவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லிருந்தவராவர். அவர் கூறும் யசோதர வரலாற்றை ஈண்டு வடித்துத் தருகின்றாம்.
யசோதர வேந்தன் ஒருநாள் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்ணாடியிற் கண்டு துறவு பூணத் துணிகின் றான். ஒருநாள் இரவு தன் மனைவி கூனிய முதுகுடைய காவற் காரனொருவனுடன் தீநட்புக் கொண்டு கள்ளக்காமக் களியாட் டில் மயங்கி யொழுகுவதோடு அவனால் அலக்கழிக்கப்படவும் காண் கின்றான். அவனெஞ்சிற் பிறந்த துறவுணர்வு திண்ணிதாகிறது. தன் துறவுக் குரிய காரணத்தைத் தன் தாயிடம் வெளிப்படக் கூற நாணித் தீக்கனாவொன்றின்மேல்வைத் துரைக்கின்றான். அதன் உண்மைக் குறிப்புணரமாட்டாத அவன் தாய், தீக்கனாவின் விளைவைத் தவிர்த்தற்குத் துறவிவேடம் தாங்கிக் குலதேவதைக்கு உயிர்ப்பலியிட்டு வணங்குமாறு வற்புறுத்துகின்றாள். அதனைச் செய் தற்கு அவன் விரும்புகின்றிலனாயினும், வேறு செய்வகை யறியாது திகைத்தவன், ஒருவாறு தெளிந்து, மாவினாற் கோழியொன்று செய்து பலியிட்டு அம் மாவினை யுண்டொழிகின்றான். அவ்வினையின் பயனாக அவனும் அவன் தாயும் இறந்து, மயில், மீன், ஆடு, கோழி முதலிய பிறப்புக்கள் பிறந்து துன்புறுகின்றனர். இறுதியில் கோழிப்பிறப்பில் முனிவர் ஒருவர் உரைத்த சைனவறங் கேட்டு அரசனொருவனுக்கு ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மக்களாகப் பிறக்கின்றனர். இவர்களாலே மாரிதத்தன் சைனதருமநெறிபற்றி உய்திபெறுகின்றான்.
இத் தமிழ்நூல் யசோதரற்குத் தந்தை அசோக னென்றும் அவன்தான் தன்தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்டு துறவு பூண்டானென்றும் யசோதரன் தாய் பெயர் சந்திரமதி யென்றும் மனைவி அமிழ்தமதியென்றும் அமிழ்தமதி கள்ள நட்புற்றுக் காமக் களிப்பில் நெறிதிறம்பி வழுவுற்றது யானைப்பாகனொருவனுட னென்றும் இறுதியில் யசோதரனும் சந்திரமதியும் அபயருசியும் அபய மதியு மென்ற இரட்டையராய்ப் பிறந்தது யசோதரன் மகனான யசோமதி யென்பான் மனைவி வயிற்றி லென்றும் கூறுகின்றது.
இனி, இத் தமிழ்நூலில் வடநூலுட் காணப்படும் வேறு நிகழ்ச்சிகள் காணப்படவில்லை. அவற்றைப் படிப்பவர் தெரிந்து கோடற்பொருட்டு ஈண்டுக் குறிக்கின்றாம்.
1. விலாசவதி யென்பாளொருத்தி சனற்குமாரனென்றொரு காளைபால் உழுவலன்புகொண்டு காதற்காமவின்பந் துய்த்து மகிழ்ச்சி யெய்த, தன்பால் உண்மை யன்பு செலுத்திய தாரணன் என்பானை வஞ்சித்து, ஆறலைப்போன் ஒருவன்பால் அழிகாமங்கொண்டு, இலக் குமி யென்பவள் அலைந்து துன்புற்ற செய்தி ஒன்று.
2. தான் செய்த கொலைவினைக் கீடாகத் தன் மனையிலே பன்றியாகப் பிறந்து தன் சிரார்த்தத்துக்கே தன் வீட்டுச் சமையற் காரனால் கொலை செய்யப்பட்ட வணிகனொருவன், பின் நாயாய்ப் பிறந்து, பன்றியாயிருந்தபோது தன்னைக் கொன்ற மடையனைக் கடிக்காதுவிட்ட நல்வினைப்பயனால் தன் மகற்கு மகனாய்த் தோன்றி, தன்மகனையும் மருகியையும் இன்ன முறைச்சொல்லால் அழைப்ப தென்றறியாது மூங்கையாய்க்கிடந்து, சைனமுனிவரால் அறங் கூறப்பட்ட செய்தி ஒன்று.
3. முன்னைப்பிறப்பில் தன் தோழிக்குக் காமக்கள்ளருத் திய குற்றத்திற் கீடாய் யானை, குரங்கு, பூனை முதலிய பல பிறவி யெடுத்து முடிவில் ஒரு சண்டாளப் பெண்ணாய்ப் பிறந்து உறவின ரால் கைவிடப்பட்டுக் காட்டில்அலைந்து சைனமுனிவர் அறங் கூறக்கேட்டு மறுபிறப்பில் வேந்தனொருவன் மனையிற் பிறந்து கோசலநாட்டு வேந்தனுக்கு மனையாட்டியாகிய சுசங்கதை யென் பவள், பெண்பேயொன்றின் சூழ்ச்சியால் அவனால் துறக்கப்பட்டுக் காடொன்றை யடைந்து முனிவர்பால் சைனவறங்கேட்டிருப்ப, கோசல வேந்தன் சின்னாட்குப் பின்பு உண்மையுணர்ந்து அவளைத் தேடிக்கண்டு, தானும் அறங்கேட்டு உய்திபெற்ற செய்தி ஒன்று.
இத் தமிழ்நூலாசிரியர் இந்நிகழ்ச்சிகளை இக் காவியத்தின்கண் குறிக்கா தொழிந்ததற்குக் காரணம் புலப்படவில்லை.
புட்பதந்த ரெழுதிய யசோதர சரிதத்தின்கண் கூறும் நிகழ்ச்சியைப் பின்பற்றியே இத்தமிழ் நூல் எழுதப்பட்டிருக்கு மென்று சில அறிஞர் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக,
என வரும் இவ்வெண்பாவைக் காட்டுவர்.
புட்பதந்தர் என்பவர் கி.பி.965-ல் மகாபுராணம் எழுதியவர். இதன்கண் ஆதிபுராணம் முப்பத்தேழு பகுதிகளாகவும் உத்தர புராணம் அறுபத்தைந்து பகுதிகளாகவும் உள்ளனவென்றும் இவரே நாககுமார சரிதத்தையும் யசோதர சரிதத்தையும் வட மொழியில் எழுதினாரென்றும் கூறுப. இவ்வெண்பாவில் கூறப் படும் "பொருள்சேர் கதை" நாககுமார காவிய மென்றாதல் யசோதரகாவிய மென்றாதல் துணியாவாறு நிற்கிறது. கேள்விவழி யசோதர காவியத்தைச் சுட்டிநிற்பது கொண்டு "வெண்ணாவ லூருடையார் வேள்" என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டதென்று ஒருவாறு கொள்ளலாம். இவருடைய இயற்பெயரும் பிறவும் தெரிய வில்லை. சமண் சமயச் சான்றோர் சிலரை உசாவியதில் கன்னட நாட்டில்தான் இவ்விருநூல்களும் சிறப்பாகப் பரவியிருந்தன என் கின்றனர்.
இனி, இந் நூலாசிரியரைப்பற்றி வேறொன்றும் தெரிதற்கு வழி இன்றுகாறும் ஒன்றும் பிறந்திலதாயினும் இந் நூற் புணர்ப்புக் கண் இவரது அறிவு நுழைந்து செய்திருக்கும் வேலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
முதற்கண்,வேந்தனான மாரிதத்தன் சண்டமாரி தேவதைக் குப் பலியிடக்கருதும் கருத்தினை மேற்கொள்வதற்கு வசந்தகாலத் தையும் மக்கள் மனப்பான்மையையும் வாயிலாகப் புணர்க்கின்றார். சண்டமருகன் இரட்டையரைக் கொணர்கையில், அவர்கள் நினைவு கருவியாக நால்வகைக்கதியினும் உயிர்கள் பிறந்து வளர்ந்து துன் புறும் திறத்தை வெளிப்படுக்கின்றார். வேந்தன் இரட்டையரைக் கொல்லாது விடுத்து அவர்கள் வரலாற்றைக் கேட்ட விழைவு கொள் ளற்கும் கேட்டற்கும் ஏதுவாக, அவர்களை அரசனை வாழ்த்துக என வற்புறுப்பதும், அவர்கள் புன்முறுவல் பூத்தலும் விதந்து கூறப்படுகின்றன.
--------
*1930 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் 17 திரு. கா. நமச்சிவாய முதலியார் காவிரிப்பாக்கம் திரு. வச்சிரவேல் முதலியார் பெரு மனையில் தங்கியிருந்தபோது இதைச் சொன்னார்கள். வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் பிரதியிலும் இது காணப்படுகிறது.
இவ்வாறே, யசோதரன் வரலாற்றிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக் கும் தக்க காரணத்தை முன்னிறுத்தி யுரைக்கும் திறம் மிக்க இன்பமாக வுளது. வடநூல்களில் யசோதரன் துறவுமேற்கோடற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அவன் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் காண்பது; இரண்டாவது அவன் மனைவி வேறொருவன்பால் கள்ளக்காம நட்புற்றிருத்தலை யறி வது. ஆனால் இத்தமிழ்க்காவியமுடையார் மயிர்நரைப்புக் கண்டு துறவுமேற்கொள்ளும் செய்தியை யசோதரன் தந்தையான அசோ கன் துறவுக்குக் காரணமாகப் புணர்த்துவது மிக்க நயமாகவுளது. ஒருவன் துறவு பூண்பதற்குரிய காரணங்களுள் தன் மனைவியின் தீ யொழுக்கமே போதிய காரணமாதலின் அதற்குமேலும் ஒருகார ணம் மிகையாகும். அசோகன் துறவு பூண்பதற்கு வேறுதக்க காரணம் கிடையாமையின் அதனை அவன்மே லேற்றியது மிகவும் பொருத்தமாகவே யுளது.
இனி, யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் இழிந்தானொருவனுடன் கள்ளக்காம நட்புற்றதற்குக் காரணம் காட்டவேண்டி இசையினைப் பயன் கொள்கின்றார். சமண் சமயத் தவர் இசையும் நாடகமும் காமத்தை விளைவிப்பன என்னும் கருத் துடையரென்றும் அதனால் அவர் அவற்றை யூக்காது புறக்கணித் தனரென்றும் அறிஞர் கூறுப. அதற்குச் சான்றுண்டோ எனச் சமண் சமய முனிவர்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுள் சீவக சிந்தாமணி இசையும் நாடகமும் காமப்பைங்கூழை வளர்க்கும் துணைகள் என்ற கருத்துப்பட "கிளைநரம் பிசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன்" (இலக்கணை, 221) என்று கூறுவதைக் காண்கின்றோம், இவ்வாறே அவர்கள் செய் துள்ள ஏனை நூல்களிலும் காமக்களிப்பு நிகழுமிடங்கடோறும் இசை நாடகங்கள் மிகவும் தொடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாற் றால், இந்நூலாசிரியரும், தன் கணவனுடன் கூடி இன்புற்றிருந்த அமிழ்தமதி அக்கூட்டத்தின் பயனாய் மகனொருவனைப் பெற்றாளா யினும், அமையாது தன்னின் மிகமிக இழிந்தானொருவனைக் கூடிக் கள்ளத் தீ யொழுக்கம் மேற்கோடற்குக் காரணமாக இசையினைக் கொணர்ந்து நிறுத்துகின்றார். அக் கீழ்மகன் அட்டபங்கன் என்னும் யானைப்பாகனாவான். அவன் இசைத்துறையில் மிக்க வன்மை யுடையனென்றற்குப் போதிய ஆதரவில்லை. ஆயினும் அவன் பாடிய மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை அமிழ்தமதியின் நெஞ்சையுருக்கி நெறியல்லா நெறியில் செலுத்தி விடுவதாக இந்நூலாசிரியர் அறிவிக் கின்றார். அத் தீயொழுக்கத்தின் விளைவாக அவள் தன் கணவனை யும் மாமியான சந்திரமதியையும் நஞ்சூட்டிக் கொலைபுரிந்துவிடுகின் றாள். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க காரணங்களை முன் னிறுத்தி இந்நூலை யமைத்திருப்பது நூற்புணர்ப்பு நெறிக்கு ஏற்ற சிறப்பை நல்குகிறது.
இனி, இந்நூலின் செய்யுணடையை நோக்கின், இஃது ஏனைச் சிந்தாமணி சூளாமணி முதலியவற்றைப் போல அத்துணை நலமமைந்தில்லை யென்பதை முன்பே கூறினாம். ஆயினும், இந் நூற்செய்யுட்களில் சீவகசிந்தாமணியிலும் மேருமந்தரபுராணத்தி லும் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களுமே பெரிதும் பயில வழங்குகின்றன. அவை அவ்வவற்றிற்குரிய உரை விளக்கத்தே காட்டப்பட்டுள்ளன; இதனால், இந்நூலாசிரியர் இவ்விருநூல்களை யும் நன்குபடித்து, உயர்நிலை யின்றெனினும் நடுநிலையான தமி ழறிவு பெற்றவரென்று அறிகின்றாம்.
இனி, இந்நூலாசிரியர் இந்நூலைத் தாம் பாடுதற்குக்கொண்ட நோக்கத்தை நன்கு விளங்கவுரைப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். அறிவுடையனெவனும் எதைச்செய்யினும் அதனைச் செய்தற்குச் சிறப்பாகவுரிய நோக்கமொன் றுடையனாவனென்பது உண்மை. அதனை விளங்க வுரைப்பது அறிவுடைமையின் பயனாகும்.
இந்நெறியினைப் பல நூற்றாண்டுகட்குமுன் எடுத்தோதித் தெருட் டிய பெருந்தகை ஆசிரியர் இளங்கோவடிகளாவர். அவர்க்குப்பின் மிகச்சிலரே இதனைப் பின்பற்றியவர். அவருள் இந்நூலாசிரியரும் ஒருவர் என்னலாம். புண்ணியம் போகம் விளைக்கும் என்றும், கொலைவினையாகிய பாவம் துன்பம் எய்துவிக்கும் என்றும் விளக்கு வது தமது நோக்கமென்பார் "மருவு வெவ்வினை வாயின் மறுத் துடன், பொருவில் புண்ணியம் போகப் புணர்ப்பதும், வெருவு செய் யும் வினைப்பயன் இற்றெனத் தெரிவு றுப்பதும் செப்புதலுற்றதே" (4) என்று கூறுகின்றார்.
இனி, இந்நூலாசிரியரால் பழிதூற்றப்பட்ட இசையினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற்பாலதொன்று. இசை யென்பது வழுத்த வாயும் கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப்பொருளாகும். உடலுட்சென்றியங்கும் காற்று மிடற்றுவழியாக வெளிப்படுக்கப்படுங்கால் உண்டாகும் ஓசையே இதற்கு அடிப்படை. ஓசை கொண்டும் கொள்ளாமலும் வெளிப்படுவது காற்றுக்கு இயல்பாயினும் ஓசைகொண்டு இனிமை தழுவி நீண்டெழுப்பப்படுகிறபோதுதான் இசையுண்டாகிறது. இவ் வாறு உண்டாகும் இசை உயிர்கட்கு இன்றியமையாதது என்பர் அறி ஞர். நிலவுலக வாழ்விற்கு நான்கு பொருள்கள் இன்றியமையாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை யென் பனவாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர் 1 கூறுகின் றார். புலவர் மனமுவந்து இனிமை யமைந்த சொல்லோசை யமை யத் தொடுத்துப் பாடப்படும் பான்மையுடைமைபற்றியன்றோ ஒரு வனது புகழ்க்கும் இசையென்பது பெயராகப் பண்டைப் பெருமக்க ளால் வகுக்கப்படுவதாயிற்று. புகழ் விரும்பாதவர் இவ்வுலகத்தில் எக்காலத்தும் இருந்ததில்லையெனின், இசையை விரும்பாதவர் எவரும் இரார். அவ்வாறும் ஒருவர் இருப்பின் அவரை எவரும் விரும்பலாகாது என மேனாட்டுச் செகப்பிரியர் கூறுவது மிகவும் பொருத்தமாகவேயுளது.
இவ்விசை உடலோடு கூடிவாழும் மக்கட்கு மிக இன்றியமை யாததென்பது மேற்கூறியவற்றால் தெளியப்படும். இதற்கு வேறும் ஒருகாரணம் உண்டு. நாடோறும் ஓய்வின்றி யுழைக்கும் எந்திர மொன்று உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல, உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சியும் தூய்மை யில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக் ககற்றப்படுவது போன மனமும் நாடோறும் தூய்மைசெய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற் படியும் தீயவுணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை எழுப்புவதாகும். "ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை" என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந்தருளினர். சென்ற நூற்றாண்டில் சருமனி யில் வாழ்ந்த ஆவர்பாச் (Auerbach) என்பவர் மனத்திற் படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை 2 யென்று கூறினர். இவ்வாறே அறிஞர் பலரும் சொல்லியிருக்க இதனைக் காமம் வளர்க்கும் தூய்மையில் பொருளாகக் கருதிக் கூறுவது குற்ற மென்பது ஒருதலை. மக்களுயிர்க்குச் சீரிய துணையாமெனக் கருதிப் பேணப்பெற்ற விஞ்ஞானவுணர்வு இந்நாளில் அம் மக்களுயிர்க்கே இறுதிவிளைக்கும் கூற்றாயிற்றென்று மெய்யாக அறிகின்றோம். அதனால், அதனை அறவே விலக்குவது அறமாகாதவாறுபோல இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து அதனை விலக்குவது அறமன்று
இவ்விசையின்பத்தில் ஈடுபட்டு இன்புறும் உள்ளம் எப்போதும் உணர்வுத் தொழிலைச் செய்வது பற்றியும், இசையானது உள்ளத் தைத் தூய்மைசெய்து அமைதிநிலவச் செய்வது பற்றியும் பண்டை நாளை அறிஞர் கடவுளுணர்வை இசைவாயிலாகப் புணர்த்துவது சிறப்பெனக் கருதுவாராயினர். இசைப்பாட்டுக்கள் பலவும் கடவு ளுணர்வு கொளுத்தும் மொழிகளாகவே இருக்கத் தலைப்பட்டன. இவ்வுணர்வு தலைசிறந்தகாலம் தமிழ் நாட்டில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளாகும். சைவ வைணவப் பெரியார் பலரும் இசைகலந்த இயற்பாட்டுக்கள் பல யாத்து இசைக்கத் தொடங்கினர். இதனால் நாட்டில் சமயக்கொள்கைகள் மிக விரைவாகப் பரவி வேரூன்றி விட்டன. இற்றை நாளிலும் வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த அரசிலுணர்ச்சிகளும் அரசியற் கட்சிக் கொள்கைகளும் இனிய இசைப்பாட்டுக்கள் வாயிலாக நாட்டில் நன்கு பரவி நிற்பதைக் காண்கின்றோ மன்றோ? இசையின்பால் இத்தகைய இயல்பு இருத்தல்பற்றியே மேனாட்டவரும் கடவுட் கொள்கை பரவி நிலைபெறுதற்கு இசையே கருவியெனக் கருதி அத னைப் போற்றிப் பெருமை செய்வாராயினர். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்டின் லூதர் என்பவர், சமய வுணர்வு களுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத்தகுவது இசையே யென்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள் தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற்கருஞ் செயல்களைச் செய்தனர்* என்றும் கூறுவாராயினர்.
----
*"Next to theology I give to music the highest place and honour. And we see low David and all the saints have wrought their godly thoughts into verse, rhyme and song"- M.Luther.
இவ்வகையால் ஞானசம்பந்தர் முதலாயினாரும் "கோழை மிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால், எழை யடியா ரவர்கள் யாவை சொன சொல் மகிழு மீசனிடமாம்" என்றும் "செந்தமிழ்க்கீதமும் சீரினால் இசைதர" என்றும் இசை கலந்த தமிழ்ப்பாட்டுக்களால், கடவுளுணர்வு ஒழுக்கங்களை நாட்டில் பரப் பினாராக, அது சமண் சமய முனிவர்கள் மேற்கொண்டிருந்த சமயத் தொண்டிற்கு இடையூறாய் இருந்ததுபற்றி இசையினை இவ்வாறு புறக்கணித் துரைத்தனரோ என எண்ணுதற்கிட முண்டாகிறது. மேலும், இம்முனிவர்கள் கருதுமாறு இசை மக்களைக் காமத்துறை யில் எளியராமாறு செய்திருக்குமாயின் பண்டைத் தமிழ்மக்கள் புலவரைப்பேணித் தமிழ் இயலையும், பாணரைப் பேணித் தமிசையை யும், கூத்தரைப் பேணித் தமிழ் நாடகத்தையும் போற்றிப் புரந் திருக்கமாட்டாரன்றோ?
இனி, இவ்விசையில் மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை வாயி லாக யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் அட்டபங் கன் என்னும் கயவன்பால் கழிகாமம் கொள்கின்றாள் என்று இந் நூலாசிரியர் கூறுகின்றார். இப் பண், கான்பாஸ்கரம் என்ற நூலி லும், சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூலிலும் காணப்படு கிறது. இவை கருநாடக சங்கீத நூல்களாதலால் இப்பண்ணும் கருநாடக சங்கீதத்தைச் சார்ந்தது என்பது விளங்கும். மேலும், சம்பிரதாய பிரதர்சனி யெழுதிய சுப்பராம தீக்ஷிதர் அவர்கள் இது வேங்கடமதி யென்பார் எழுதிய சதுர்த்தண்டி பிரகாசிகை யில் உள்ளது என்று கூறுகின்றனர். இதன் பிறப்பு மாயா மாளவ கௌளம் என்றும் "சாடவசம்பூர்ண ராகம்" என்றும் இதன் ஆரோசை சுரம் ச, ரி, க, ம, ப, நி, ச (பண்ணியல்) என்றும், அமரோசை ச, நி, த, ப, ம, க, ரி, ச (பண்) என்றும் பதினைந்தாவது மேளகர்த்தாவென்றும் கானபாஸ்கரம் என்ற நூல் கூறுகின்றது. இதற்கு இசை நிரவல் நெறி (இராக சஞ்சாரி) சுப்பராம தீக்ஷிதராலும் "வாசுதேவ" என்று தொடங்கும் கீர்த்தனை யொன்று முத்துசாமி தீக்ஷிதராலும் செய்யப்பட்டுள் ளன. இத்துணையும் கூறியவாற்றால் இம் மாளவபஞ்சமம் என்னும் பண், கருநாடக சங்கீதத்துள் அடங்;கியுள்ளதென்பது தெளிவா கிறது.
இனி, கருநாடக சங்கீத நூல்களுள் சதுர்த்தண்டி பிரகாசி கைக்கு முற்பட்ட சங்கீத சூரியோதயம், சாரங்கதரபத்ததி முதலிய நூல்களில் இப் பண் காணப்படாமையால் இந்நூலாசிரியர் காலம் முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பது துணிவாகிறது
"இனி, இக் கருநாடக சங்கீதத்தைப்பற்றி ஒன்று ஈண்டுக் கூறுவது மிகையாகாது. இந்நாளில் இசை வரலாறு காணாத சிலர் கருநாடக சங்கீதமென்பது தமிழ் நாட்டுத் தண்டமிழ்க்குரிய தல்லா தது போலப் பிறழவுணர்ந்து தவறான கருத்துக்களைப் பிதற்றித் திரி கின்றனர். புதினமுடையோமெனத் தருக்கிப் பொய் புனைந்தும், பதவி செல்வாக்கினைப் பயன்படுத்தியும் தமிழ் வளர்ச்சியில் அழுக் காறுற்றும் அவர் கூறுவன அத்தனையும் பொருளில் வறுங்கூற்று என்பதைச் சிறிது காட்டுதும்.
கருநாடக சங்கீதத்துக்கு ஆதரவாகக் கூறப்படும் வடமொழி முதலிய தமிழல்லாத பிறமொழிகளில் காணப்படும் சங்கீத நூல் களுடைய வரலாறு காணின், அவற்றுள் மிகப் பழமையானது கி.பி. நான்காம் நூற்றாண்டிலெழுந்த பரத நூலாகும். அதற்கு அடுத்த நிலையில் காணப்படுவன சங்கீத மகரந்தம், நாரதசிக்ஷை முதலி யனவாகும். இவற்றிற்குப் பின்பே, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பார்சுவ தேவர் என்பவரால் சங்கீத சமயாசார மென்ற நூலும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னரே பிற நூல்களும் பிறந்துள்ளன. இவற்றால் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்பெல்லாம் "அரு மறைத் துழனி" தவிரத் திருந்திய இசை (சங்கீதம்) தமிழ் நாட் டிற்கு வடக்கிலுள்ளார்க்கு இல்லை யென்பது இனிது விளங்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் இசைநூல்களும் இசை வகைகளும் இருந்தன என்பதற்குச் சிலப் பதிகாரம் நல்ல சான்றுபகருகிறது. சாரங்க தேவர் எழுதிய சங் கீதரத்னாகரம் ஒன்றே தமிழிசையின் மாண்பை வடநாட்டவர் அறிந்து வியந்து போற்றி மேற்கொண்டதற்கு ஆதரவு நல்குகிறது. வடநாட்டவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாடு போந்து இசைபயின்ற செய்திக்குக் குடுமியான்மலைக் கல்வெட்டும், அக் காலத்தே விளங்கிய ஞானசம்பந்தர், திருமறைக் காட்டுத் திருப்பதி கத்தே, 'ஊறுபொரு ளின்தமி ழியற்கிளவி தேருமட மாதருடனா, வேறுதிசை யாடவர்கள் கூடியிசை தேறுமெழில் வேதவனமே" என்று கூறியருளுவதும் அசைக்கமாட்டாத சான்றுகளாகும். இக் காலத்துக்குப் பின்னே, தமிழ் மக்கள் பிறமொழி வேட்கையும், தமிழ்த்திறத்தைப் புறக்கணித்தலும் மேற்கொண்டதன் பயனாய், தமிழ்இசை ஒளிகுன்ற, வடவர் அதனைத் தாம் விரும்பியவாறு திரித்து அமைத்து வளர்க்கலுற்றனர். அவ் வளர்ச்சியின் விளைவே இப்போதைய கருநாடக சங்கீதமாகும்.
வடவர் கருநாடக சங்கீதத்தைத் தமிழினின்றும் திரித்துக் கொண்டது இருவகைப்படுகுறது. ஒன்று, தமிழ்ப்பண்ணின் மேல் நிலைக்குரிய சுரத்தை இலதாக்கி, ஆளத்திக்கு (ஆலபனைக்கு இடமில்லையாகச் செய்துவிடுவது;* இரண்டாவது, பண்களை (இர கங்களை) வக்கிரமாகப் பாடுவது; அஃதாவது பாஷாங்கம் எனப்படும் கலப்புச் சுருதிகளையுடையதாகப் பாடுவது. தமிழ்ப்பண்களுக்கு வக்கிரமில்லாத நிலைமையே உரித்தாகும். சுருங்கச்சொன்னால் "வர்ஜியராகங்" களெல்லாம் தொன்றுதொட்டு வந்த தமிழ்ப்பண்கள் என்று இசைப்புலவர் பலரும் கூறுப. இதனால், கருநாடக சங்கீதத் துள் நிலவும் "வர்ஜியராகம்" பலவும் தமிழ்ப்பண்கள் என்றும் "வக்கிரராகம்" பலவும் வடவர் புணர்ப்பென்றும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மாளவபஞ்சமம் என்பதை இந்நூல் பண் ணென்று கூற, ஏனை வட நூல்கள் இராகம் என்று கூறுவது காண்மின்.
தமிழ் நிலத்துத் தமிழ் மக்கள் உள்ளத்தே பிறந்து அவர் வழங்கும் தமிழ் மொழியிலே வளர்ந்து தமிழின்பம் பயந்து சிறந்த தமிழ்ப்பண்களின் சுருதிகளைக் குறைத்தும் திரித்தும் வேறுபடுத் திக்கொண்டதோடு நில்லாது, அதற்குரிய தாய்மொழியாகிய தமி ழும் அவ்விசைக்குப் பொருந்தாது; தமிழ்மொழியில் அதனைப் பாடச்செய்வது சங்கீத வளர்ச்சிக்குக் கேடுதரும் என்று தகவில்லாத பொய்மொழி கூறுவோரும், அவர்வழி நிற்போரும் பெருங்குற்றத் தினைச் செய்தொழுகுகின்றனர். பொய், மெய்யை ஒருகாலும் வெல்லாது.
இது நிற்க. இங்கே காட்டிய மாளவபஞ்சமம் என்ற பண், கரு நாடக சங்கீதத்துட் காணப்படினும் "வர்ஜியராக" மாதலால் தமிழ்ப் பண்ணென்றே தெளியவேண்டும். இதனைப் பாடுதற்குரிய காலம் விடியற்காலமாகும். அமிழ்தமதி இதனை அட்டபங்கன் பாடக்கேட்ட காலமும் அதுவேயாகும். சுப்பராம தீக்ஷிதர் "கால நிர்ணயமில்லை" யென்று கூறுவர். தமிழிசைப்புலவர் வழக்காறு கொண்டு நோக்கின் இது ஆறாவது மேளகருத்தாவாகும்; வடவர் முறைப்படி பதினைந்தாவது மேளகருத்தா என்பர்.
-------
* குறிஞ்சி, புன்னாகவராளி, நாதநாமக்கிரியை முதலிய தமிழ்ப் பண்க (இராகங்க)ளின் ஆரோசை அமரோசைகளை முடிவுறக்காட் டாமல் ஒரு தானத்துக்குரிய முழுப்பகுதியையும் புலப்படாமல் மறைத்து விடுவது என்று இசைவாணர் கூறுவது உலகறிந்த செய்தி.
இவ்விசை நெறியின் வரலாறும் வகையும் பிற இயல்புகளும் ஆராய்ந்து காண்பதற்கு இப்போது பேரறிஞர் முன்வந்து விட்டனர். உயர்திரு சுவாமி விபுலானந்தர் முதலாயினாரும், திரு. பொன் னையாப் பிள்ளை முதலாயினாரும் செய்த ஆராய்ச்சிகள் உருவாகி வருகின்றன. தமிழ் மக்களுக்கும் தங்கள் தமிழ் வாயிலாக இசை யமுது பெறுதற்கு ஆர்வம் பொங்கியெழத் தொடங்கிவிட்டது. செட்டிநாட் டரசர்பெருமான் ராஜா-சர். அண்ணாமலை செட்டியார் அவர்களும் "மலையே வந்து விழினும் மனிதர்காள், நிலையில் நின் றீர்" கலங்காதீர் என்று நாவரசர் மொழிந்த நல்லுரையை நயந்து மொழிந்து நல்லாதரவு புரிகின்றார். இனி, தமிழ்க்கும் தமிழிசைக் கும் நல்ல காலமேயாம். ஆகவே தமிழ் வாழ்க, தமிழிசை வாழ்க என வாழ்த்தி மேற்செல்கின்றாம்.
இனி, இந்நூல் முதன்முதலாக 1887-ஆம் ஆண்டில் காஞ்சி புரம் பாகுபலி நயினார் என்பவரால் அச்சிடப்பட்டதென்று சி.வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பின் தில்லையம்பூர் வேங்கடராம அய்யங்காரவர்களால் 1908-ஆம் ஆண்டில் இஃது அச்சிடப்பட்டது. திரு. அய்யங்காரவர்கள் அச் சிட்டு வெளியிட்ட காலத்தே இந்நூல் அச்சாகியிருப்பவும், எக் காரணம் பற்றி, அதனை அவர் தமது முன்னுரையிற் குறியா தொழிந்தனரென அறிய முடியவில்லை. இந்நூலை ஆராய்தற்குச் சென்னை, வித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் பிரதி யொன் றும், விழுக்கம் குப்புசாமி நயினார் அவர்கள் பிரதி யொன்றும் திருநெல்வேலிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் பிரதி யொன்றும் துணை செய்தன. இப் பிரதிகளால் பல திருந்திய பாடங்களும் அச்சுப் பிரதியிற் காணப்படாத சில செய்யுட்களும் கிடைத்தன. இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பு நோக்கிக் கோடற்குத் துணை புரிந்த என் நண்பர் திரு.C.அரங்கநாதன், M.A. அவர்கட்கு இந்நிலையில் என் அன்பார்ந்த நன்றி யுரியதாகின்றது. சீர் குலைந் திருந்த கைப்பிரதியிலிருந்து படியெடுத்துத் தந்தவர் வேலூர் மகந்து உயர் கலாசாலையில் தமிழாசிரியராய் இருக்கும் வித்துவான் கதிர்வேலருடைய இளவலாவார்.
இவ்வாறு இந்நூலை யான் செப்பம் செய்த உரையும் வகுத் திருந்த செய்தியையறிந்து இதனை விரைய அச்சிடுவது நலமென்று நண்பர் திரு. திருவரங்கம் பிள்ளை யவர்கள் தம்பால் இருந்த பிரதி யொன்றினை உதவி யூக்கியது இப்போது இவ்வெளியீட் டிற்குச் சிறந்த காரணமாகும். நல்ல, இனிய தமிழ்நூல்களை மிகச் செவ்விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு வழங்கும் தென்னிந் திய சைவசத்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சரும் தமிழ்ப் புலவர் பால் மெய்யன்பு பூண்டு, அவர்கட்கு வேண்டுவனவற்றைச் சலிப்பின் றிப் புரியும் தக்கோரும், தனித்தமிழ் வளர்ச்சியும் சித்தாந்த சைவச் சிறப்பும் ஆகிய இரண்டையும் தம் இருகண்ணெனப் பேணிப்புரந்த பேரறிஞருமாகிய அவர்கள் இவ் வெளியீட்டின் தொடக்கமுதலே பேரூக்கங்கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்போது இந்நூல் முழு தும் செவ்வே அச்சாகிக் கண்கவர்வனப்புடன் கட்டுற்றுக் காட்சி வழங்குவதைக் காணாது இறைவன் தாணிழலெய்தியது என்நெஞ்சில் பெருவருத்தத்தை விளைவிக்கின்றது.
இந்நூலை ஆராய்ந்து உரைகாணும் முயற்சி முடிந்து ஓராண் டாகிக், காகிதம் முதலியன கிடைக்கும் அருமைப்பாடும் நினையாது அழகு திகழ அச்சிட்டு வெளியிட்டு வழக்கம்போல் என்னை யூக்குவிக் கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னோடு உடன் இருந்து அச்சுப்பிழை பார்த்தல், உரைத்திட்பம் காண்டல் முதலிய பணிகளில் சிறந்த துணைபுரிந்த என் நண்பர் திரு. வித்து வான், வெள்ளைவாரணர் அவர்களின் உதவி என் நெஞ்சில் என் றும் நிலைபெறும் பான்மைத்தாகும்.
தமிழறிவிலும் பிற செல்வாக்கு வகைகளிலும் மிக்க குறைபா டடுடைய அடியேனையும் பொருளாக்கி, தமிழன்னைக்குச் செய்தற் குரிய இப் பணியினைப் புரிவிக்கும் அம்மையப்பனாய் ஆரருள் புரியும் ஆடலரசின் திருவடிகளை மன மொழி மெய்களால் முறையே நினைந்தும் வழுத்தியும் வணங்கியும் அமைகின்றேன்.
"தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே"
அண்ணாமலைநகர், ஔவை சு. துரைசாமி. 5-1944.
-----
உரிமையுரை
திருநெறித் தொண்டர் திருத்தொகை வழங்கிய அருந்தமிழ் நாவ லாரூரர் திருநாள் ஆண்டுதோ றாற்றும் அமைவும் தண்டமிழ்ப் புலவரை யோம்பும் புலமையும் திருவும் என்நலம் பேணும் இனிமையும் பொருந்தியோன் பாலியாற் றடைகரைப் பல்பொழி னடுவண் மாடமலி மறுகி னார்க்காட் டண்ணல் அறுவை வாணிகன் அருந்தமி ழன்பன் சச்சிதா னந்தச் சான்றோற் கினியன் பொன்னும் பொருளும் பூந்துகில் வகையும் மன்னும் புலவர்க்கு மாண வழங்குவோன் வரத ராசனென வருபெருஞ் செல்வன் செய்த வண்மைச் சிறப்பினால் இத்தமிழ்க் காவிய முரையுடன் காண்டலின் தாவில் சீர்மிகு மவன்றன் செழுங்குடி விளங்கப் புரிமனம் உவப்ப வவற்கே உரிமை செய்தனன் இவ் வொண்டமி ழுரையே.
ஔவை சு. துரைசாமி.
---------------------
கடவுள் துணை.
காப்பு
உரை:- உலக மூன்றும்-மூன்று உலகங்களிலும் நிகழும் நிழ்ச்சி முற்றும், ஒருங்கு உணர்-ஒருங்கே யுணர்ந்து கொள்ளுதற் கேதுவாகிய கேவலத்து-கேவல ஞானத்தை யுடைய, அலகு இலாத-அளவில்லாத; அனந்த குணக்கடல்- கடையிலாஞானம் முதலாகக் கூறப்படும் குணங்கள் நிரம்பிய கடலாகிய அருகபரமேட்டியின், இலகு மாமலர்ச் சேவடி - விளங்குகின்ற அழகிய பூப்போலும் திருவடியை, வெவ்வினை விலகி-கொடிய வினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு-வீடு பேற்றினை எய்துவித்துக் கோடற்கு, ஏத்துவாம்-பரவிப் பணிவோம் என்றவாறு.
குணக்கடல், அன்மொழித்தொகை. கேவலத்து என்பது தொகையாற்பெறப்படும் அருகபரமேட்டியை விசேடித்து நின்றது. மூன்றுலகினும் நிகழ்வனவற்றை முற்றவும் ஒருங்கேயுணரும் ஞானக் காட்சி நல்குவதெனக் கேவலத்தின் தன்மை தோன்ற "உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து" என்றார். "எல்லாம் உணர்ந் தான் அவனே இறையாக ஏத்தி"1 என்ற நீலகேசிச்செய்யுட்கு, "தானும் பிறிதுமாகிய திரவிய குண பரியாயங்களைப் பிரத்தியட்ச மாக உணர்ந்த கேவலஞானமும், அதனோடு அவினாபாவிய *ரகி கேவலதரிசன கேவலவீரிய கீவலசுகமு முடையானவனே சுவாமி யாகத் துதித்து" எனவரும் உரை காண்க.
"பன்மாண் குணங்கட்கு இடனாய்"1 எனத் திருத்தக்கதேவர் கூறினாராக, இந்நூலாசிரியர் அக்குணங்களின் பன்மையை "அல கிலாத" என்றும் முடிவின்மையை "அனந்த" என்றும் விசேடித்து "அலகிலாத அனந்த குணக்கடல்" என்றார்.
குணக்கடல் சேவடி, வீடு விளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க. வெவ்வினையின் விலகி யென மாறி இன்னுருபு விரித்துக் கொள்க.
ஒருங்குணர் கேவலத்து என்றது நன்ஞானம்; அலகிலாத அனந்த குணக்கடல் என்று தெளிந்தது நற்காட்சி; அக்குணக்கடல் சேவடி யேத்துதல் நற்சீலம். இம்மூன்றன் பயன் வினையை வீட்டி வீடுபேறாகிய கடையிலாஅறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கும் எய்துவது. "கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல் நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு ஆடெழில் தோளினாய் அநந்த நான்மையே"2 எனத் தேவரும் கூறுவர்.
இனி, வெவ்வினை விலகி வீடு விளைப்பதற்கு என்பதற்கு வெவ்வினைகள் தாம் பற்றிநிற்கும் உயிர்களைவிட்டு நீங்குவதாகிய செம்மைநிலை உண்டாதற்கு என்று உரைப்பினுமாம்.
-------
பாயிரம்
உரை:- நம் நாதன்-நமக்குத்தலைவனாகிய; முனி சுவ் வதன்-முனி சுவ்விரத தீர்த்தங்கரர்; நல்கிய-அருளிய; தீதுதீர்திகழ்-குற்றமின்றி விளங்கும்; தீர்த்தம் செல்கின்ற நாள்-ஆகமோபதேசம் நடைபெறுங்காலத்தில்; யசோ தரன்-யசோதரன் என்பவன்; ஏதம் அஃகி-வினைச்சார்பு அற்றுக் கெடுதலால்; எய்தியது-வீடுபேறு எய்திய நிகழ்ச்சியை, ஓத-உரைப்பதற்கு, உள்ளம் ஒருப்படுகின்றது- நெஞ்சமானது விரும்பிச் செயற்கண் ஒன்றி நிற்கிறது எ-று
நாதன், தலைவன். ஞானச் செல்வ முடையவ னென்றுமாம். தீர்த்தங்கரர் என்போரும் இந்நாதர்களே. இவர் இடப தீர்த்தங்கரர் முதல் ஸ்ரீவர்த்தமானர் ஈறாக இருபத்து நால்வராவர். இவருள் முனி சுவ்விரதர் இருபதாம் தீர்த்தங்கரர். தீர்த்தங்கரர், தீர்த்தகரர் எனவும் வழங்கும். தீர்த்தங்கரர்களின் இயல்பு கூறுமிடத்து, "ஆப்தனும், உபாசக ஜனங்கட்கு, ஜபம், தியானம், அருச்சனை முதலிய பிரகாரங்களால் சுவர்க்க அபவர்க்க பலப்பிரதனாவன்; இவ்வண்ணம் நிக்கிரக அனுக்கிரகங்கள் இன்றிப் பரமஉபேக்ஷா சாத னனாகிய பகவான் உபாசக ஜனங்கட்குச் சுகத்தினையும் பிரத்வேஷி ஜனங்கட்குத் துக்கத்தினையும் ஆக்குவனாகு மென்றறிக"1 என்று அஷ்ட பதார்த்த சாரம் என்னும் நூல் கூறுகின்றது.
முனி சுவ்விரத தீர்த்தகரருடைய காலத்தில், தன்னை வழி படுவோர்க்குத் சுகத்தை நல்கி ஒழுகுதலால், அவர் கால இயல்பை, "முனி சுவ்வதன் நல்கிய தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்றநாள்" என்றார். திகழ்தல், விளங்குதல். தீர்த்தகரருடைய காலத்தைத் தீர்த்தம் என்றார். அஃகுதல், சுருங்கிக்கெடுதல்.
---------
அவையடக்கம்
உரை:- உள் விரிந்த புகைக்கொடி உண்டு என- அனலுக்குள்ளே தொக்குநின்று மேலே விரிவதாகிய புகை யொழுங்கு விளக்கிடத்தே உளது என்ற காரணத்தால், விளக்கினை-அவ்விளக்கை, எள்ளுகின்றனர் இல்லை-இகழ் பவர் யாவரும் இல்லை. உள்ளுகின்ற பொருள்திறம்- உள்ளுறுத்து உரைக்கப்படுகின்ற பொருட் கூறுபாட்டினை, ஓர்பவர்-ஆராய்ந்து மேற்கொள்ளும் அறிஞர், கொள்வர்- ஈண்டுக்கூறப்படும் இதனையும் ஏற்றுக்கொள்வர்; (ஆதலால் எம் உரை-எமது இந்நூலும், கூறுதற் பாலதே-கூறப் படும் பான்மையுடைத்தே எ-று.
கூறுவோர் தகுதி நோக்காது, கூறப்படும் பொருளினது தகுதி நோக்கிக் கொள்ளுவதும் தள்ளுவதும் அறிஞர் செயலாதலின் "உள்ளுகின்ற பொருள்திற மோர்பவர் கொள்வர்" என்றார். பொருளும் அறிஞர் ஏற்கும் தகுதி வாய்ந்ததென்பார் "எம்முரை கூறுதற்பாலதே" என்றார். இனி, பொருள்திற மோர்பவர், எம் முரை கூறுதற்பாலதே என்றுகொண்டு மேற்கொள்வர் என்றார் என்றுமாம்.
-------
நூற்பொருள்
உரை:- வெவ்வினை மருவு வாயில் மறுத்து-கொடிய வினையானது வந்து பொருந்தும் வாயிலை அடைத்து, பொரு வில் புண்ணியம் போகம் உடன் புணர்ப்பதும்-ஒப்பில்லாத அருளறத்தைச் செய்தல் வீட்டின்பத்தை உடனே யெய்து விக்கும் என்பதையும், வெருவு செய்யும் வினைப்பயன் இற்று எனத் தெரிவுறுப்பதும்-உயிர்கட்கு அச்சத்தைச் செய்யும் தீவினையின் பயன் இத்தன்மைத்து என்று தெரிவிப்பதையும், செப்புதல்-இந்நூலின்கண் உரைப்பது, உற்றது-யாம் கருதியதாகும் எ-று.
செயப்படும் வினையானது செய்பவனைச் சென்று சாரும் இயல் பிற்றாதலின், அதனை மறுப்பது அதன் சார்பினைக் கெடுப்பதாம் என்க. அஃதாவது "அருள்புரி மனத்தராகி ஆருயிர்க் கபயம் நல்கிப், பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு, இருள்புரி வினைகள் சேராது இறைவனது அறத்தை"1 எய்துவ தாகும். எய்தினார்க்கு வீட்டின்பம் இடையீடின்றி எய்துதலின் "உடன் புணர்ப்பது" என்றார். பொருவில் புண்ணியம் போகம் புணர்க்கு மெனவே வீட்டின்பமாயிற்று. வெருவு செய்யும் வினை, உயிர்க்கொலை;
அதன் பயன் உயிரின்கட் கிடந்து அது புக்குழிப்புக்கு வருத்தும் என்பது "உயிர்க்கொலையினில் அருவினை நரகத் தாழ்ந்து, எய்தும் வெந்துயர் எனைப்பல கோடி கோடி"1 எனப் பிறாண்டும் கூறுப. இக் கருத்தே இந்நூல் முடிவிலும், "வெருவுறு வினைவலி விலக்குகிற்பது, தருவது சுரகதி தந்து பின்ன ரும், பொருவரு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே"2 என்று கூறப்படுவது காண்க. இக்காவியத்தின் வாயிலாக இந்நூலாசிரியர் தாம் மக்கட்கு உணர்த்தக் கருதுவது இஃது என இதனால் தெரித்துரைத்தாராயிற்று.
ஓதய நாட்டு இராசபுரத்து வேந்தனான மாரிதத்தன் என்பான் இனிது ஆட்சிபுரிந்து வருவதும், இளவேனிற் பருவம் எய்துவதும், அரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சோலைகட்குச் சென்று வேனில்விழா அயர்வதும், நகர மாந் தர் போந்து அரசனை அடிபணிந்து மாரிதேவிக்கு உயிர்க் கொலையோடு கூடிய சிறப்பினைச் செய்யாவிடின் வரும் தீங்கு களை வகுத்தோதி உடனே சென்று அதனைச் செய்தல் வேண்டுமென்று அரசனை ஒருப்படுத்துவதும், அரசன், ஏனைமாந்தர் விலங்குகளை இரட்டை யிரட்டையாய்க்கொன்று பலியிட்டுத் தேவியை வழிபடின், தான் மக்களில் இரட்டை யரைக்கொன்று பலியிட வேண்டுமெனக் கருதுவதும், அத் தகைய இரட்டையரைக் கொணருமாறு அவன் தன் தளபதி சண்டகருமன் என்பானைப் பணிப்பதும் அவன் சென்று தெருவில் பலி வேண்டித் திரிந்த அபயருசி அபயபதி என்ற இரட்டையரைக் கொண்டு போதருவதும், வருங்கால் அவ்வி ரட்டையர் தம்முள் யாக்கை நிலையாமை, அச்சத்தின்புன்மை, சென்ற பிறவிகளில் எய்திய துன்பம், வினையின் செயற்பாடு முதலிய பலவற்றைப் பேசி மனத்திண்மை கோடலும், தேவி கோயில்முன் பலியிடுதற்காக இவ்விரட்டையரை நிறுத்தி ஒரே கருத்துடன் தேவியைப் பரவி "அரசன் நீடுவாழ்க" என வாழ்த்துமாறு கூறுவதும், அவர்கள் மலர்ந்த முகத்துடன் "எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாமனத்தனாய், அரு ளறம் பூண்டு பிறவிப்பிணி போக்கும் திருவறம் தழுவிப் புகழுடன் இவ்வுலகம் காத்து நீடுவாழ்க" என்பதும் அரசன் அவர்தம் முகமலர்ச்சியும் உவகை மொழியும் கண்டு வியந்து அவர் அஞ்சாமைக்குக் காரணம் வினவுவதும், அவற்கு அவர்கள் உயிர்க்கொலையின் தீமை மிகுதி புலப் படுத்தி "அதனைச் செய்யும் வேந்தனை வாழ்த்தின் யாது விளையுமோ" எனத் தாம் நினைத்ததும், தம் வரலாறுகூற ஒருப்பட, அரசன் அவர் பண்டைப்பிறப்பு வரலாறு கேட் கத் தொடங்குவதும் பிறவும் இப்பகுதிக்கண் கூறப்படுகின்றன.
ஓதய நாட்டுச் சிறப்பு
உரை:- பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை- பசிய பொன்னை விளைவிக்கும் நாவலந் தீவில் உள்ளதாகிய பரதகண்டத்தில், ஓதயம் என்பது-ஓதயமென்று உயர்ந் தோரால் சிறப்பித்துக் கூறப்படுவதாகிய; நம்பும் நீரணி நாடு-எவ்வுயிரும் விரும்பும் நீர்வளம் சான்ற நாடு ஒன்று, உளது-உண்டு, வம்பு வார்பொழில்-மணம்கமழும் நீண்ட சோலையானது, ஊடுபோய் மாமுகில் சூடுவது- நிலத்தின்மேல் உள்ள காற்றுமண்டலத்தின் உள்ளுருவி உயர்ந்து மேகமண்டலத்தை யடைந்து பெரிய மேகங்கள் தன்பால் தவழவிளங்குவது, இம்பர் ஈடு இலது-இம்மண் ணுலகத்தே ஒப்பில்லாததாகும் எ-று.
மேருமலையின் தெற்கிலே நாவல்மரம் செறிந்த சோலைகளை யுடையது இந்நாவலந்தீவு என்றும், "இந் நாவல் பழத்தின் சாறொ ழுகி ஆறாய்ப்பரந்து அந்நிலத்தையும் பொன்மயமாக்கி மேருவின் மூலத்தையுடையு மென்றும், அச்சா றூறிய பயனே பொன்விளை" வென்றும் "நாவலோங்கிய மாபெருந் தீவு" என்றும் கூறுவர். "நாவலந் தீவு தன்னுள் பரதத்து நடுவண்"1 என மேருமந்தர புராணம் கூறும். நம்பும் நீர்அணி நாடு என்பதற்கு நாடாவளமுடைமையால் எவ்வுயிரும் தன்கண் வாழ்தற்கே விரும்பும் தன்மையினையுடைய நாடு என்றலுமாம். இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண் டல முண்டென்பது சமண்சமயக் கொள்கை. அம்மண்டலத்தின் மேல் உளது மேகமண்டலம். மேகமண்டலத்தை யளாவி நிற்கும் பொழில் காற்றூடு உயர்தல் வேண்டுதலின், "ஊடுபோய் முகில் சூடு வது" என்றார். ஓதயநாடு, யௌதயநாடு என்பதன் சிதைவு. ஔதய நாடு என்றும் பாடம். இதனைச் தசார்ணம் என்றும், உசீ நரன் மகனான நிருகன் வழியினோராண்ட நாடென்றும் கூறுப.
பரதத்திடை ஓதயமென்பது, நீரணி நாடு, உளது; பொழில், போய், முகில் சூடுவது, ஈடிலது என இயைக்க.
இராசபுரச் சிறப்பு
உரை:- திசையுலாம் இசையும் திருவும் நிலாய்-நாற்றி சையும் பரந்த புகழும் செல்வமும் பொருந்துதலால், வசை யிலா நகர்- குற்ற மில்லாத நகரம், வானவர் போகம் மல்கு-தேவருலகத்து நுகர்ச்சி முற்றும் நிரம்பிய, அசைவு இலா அளகாபுரி அலால் இசைவு இலாத-குறைவொன்றும் இல்லாத அளகாபுரியையன்றி ஒப்புக்கூறற்கில்லாத, இராச புரம்-இராசபுரமாகும் எ-று.
நிலாய், வினையெச்சம் காரணப் பொருட்டு. திசையுலாம் இசை என்பது "ஏமாங்கத மென்று இசையால் திசை போயதுண்டே"2 என்றாற்போல்வது. வசை, குற்றம்; "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"3 என்ப வற்றிற்கு மறுதலையாய ஐந்து. அளகாபுரி, இந்திரன் நகர்; குபேரன் நகரம் என்றும் கூறுதலுண்டு.
அசைவு, குறைவு; "அசைவிலாப் புரவி வெள்ளத் தரிஞ்சயன்"1 என வருதல் காண்க. இசைவு-உவ மித்தல். தான், அசை. இராசபுரமது என்றவிடத்து அது பகுதிப் பொருட்டு. வசையிலா நகர் இராசபுரம் என்க. ஓதயமென்னும் நாட் டிற்கு இராசபுரம் என்பது தலைநகர் என்றவாறாம். இதனைப் பின்பு மன்னகர் என்றே மொழி பெயர்ப்ப. உலாம் என்புழி, செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது.
---------
உரை:- இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது-நகரத்தின் மதிலானது மேகமண்டலத்தை யடைந்து அதன் மேலும் உயர்ந்தது, மஞ்சு உலாம் மாளிகை மதிசூடின-மேகங்கள் உலவும் மாளிகைகள் மதிமண்டலத்தை அளாவித் திங்கள் தவழ நின்றன, அஞ்சொலாரவர் பாடலொடு ஆடலால்- அழகிய சொற்களையுடையரான மகளிருடைய பாடல் ஆடல் என்பவற்றால், விஞ்சையர் உலகத்தினை வெல்லும்-(இந் நகரமானது) வித்தியாதரர் உலகத்தினும் மேம்படுவதா யிற்று எ-று.
மஞ்சுலாம் மாளிகை மதிசூடின என்று இயையும். மஞ்சு, ஆகுபெயர். நகரமதிலினும் நகரத்து மாளிகைகள் உயர்ந்திருந்தன என்பர், "இஞ்சிமஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சுலாமதி சூடின மாளிகை" என்றார். மகளிர் அனைவரும் இசையும் கூத்தும் பயின்று தாம் இன்புற்றும் பிறர்க்கு இன்புறுத்தியும் இனிதொழுகினர் என் பதாயிற்று. "ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக், கேடில் புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டும், ஊடலொடு கூடலுணர் வார் கள்புணர் வாராய்ச், சேடரொடு சேடியரும்"2 என்று பிறரும் கூறுதல் காண்க. ஆடல், விளையாட்டுமாம். அஞ்சொலாரவர் என் றது, சாத்தனவன் என்றாற் போல நின்றது. வெல்லுதல்-மேம் படுதல்.
---------
வேந்தன் மாரிதத்தன் சிறப்பு
உரை:- பா இதத்தினை-நிலத்து மக்கட்கு நலத்தினை; பண்டையின் மும்மடி பூரிதத்து-முன்னையினும் மும்மடங்கு மிகும்படி செய்து; ஒளிர்-விளங்குகின்ற; மாலை வெண் பொற்குடை-பொன்னாரமும் வெண்கொற்றக் குடையும் பொற்குடையும் கொண்டு; வாரிதத்தின்- மேகத்தைப் போல; மலர்ந்த கொடைக்கரன்-விரிந்த கொடையினைச் செய்யும் கையை யுடையவனான; மார்தத்தன் என்பான்- மாரிதத்தன் என்று பெயர் கூறப்படுவான்; மன்னவன் உளன்-ஒரு வேந்தன் உளனானான். எ-று.
தன் குலத்து முன்னோரினும் மூன்று மடங்கு சிறப்புண்டாக ஆண்டானென்பது அவனது ஆட்சிநலம் குறித்து நின்றது. மும்மடி- மும்மடங்கு. பிறாண்டும் "முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்"1 என்று கூறுப. பூரிதம்-நிறைதல்; மாலையும் குடையும் கொடைக்கரனும் உடைய மாரிதத்தன் என்பான் மன்ன வன் உளன் என இயைக்க. வெண்குடை அரசு கட்டிற்கு நிழலாகி வேந்தனது கொற்றமும் தண்ணளியும் சுட்டிநிற்பது. பொற்குடை, உலாவருங்கால் வருங்குடை. "பொன்னாங்குடை நிழற்ற"2 என்றதற்கு "இது பவனிக்குடை யாதலின் பொற்குடையாயிற்று" என நச்சினார்க்கினியர் உரைத்தல் காண்க. வாரிதம்-மேகம். மலர்தல்-விரிதல். "கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்"3 என்றாற்போல.
செல்வச் சிறப்பு
உரை:- அரசன் அவன் தன்னொடும்-அரசனாகிய அம்மாரி தத்தனுடன், அந் நகர் மருவும் மானுயர்-அவ்விராசபுர நகரத்தே வாழும் மக்கள், செல்வ மயக்கினால்-குறை வின்றி நிறைந்த செல்வக்களிப்பினால், வானவர் போகமும்- தேவருலகத்திலே பெறக்கூடிய இன்பமும், பொருவில் வீடு புணர் திறமும்-ஒப்பில்லாத வீடு பேற்றை யடையும் நெறிகளும், இவை-ஆகிய இவற்றை, தெரிவது ஒன்று இலர்-ஆராய்வது ஒன்றும் இலராயினர் எ-று.
மற்று, அசை. அரசனவன் என்பது சாத்தனவன் என்றாற் போல நின்றது. உம்மை, இசைநிறை. ஒடு, உயர்பின்மேற்றாகிய ஒரு வினை யொடு. அரசனெவ்வழி அவ்வழியினர் குடிகளாதலின், அவன் உயர்நெறி நின்று மக்களைச் செந்நெறிக்கட் செலுத்தற்பாலன் என் பதுபட நின்றது. மானுயர்-மக்கள்; வடசொற் சிதைவு. "சிறு முனுயர்"1 என நீலகேசியும் கூறுதல் காண்க. வானவர் போகத்தைத் தோலாமொழித்தேவர் "இன்பமே பெரிதாகி இடை யறலின் றிமைப்பளவும், துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ் செல்வம்"2 என்று கூறுதல் காண்க. வீடு புணர்திறம் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மூன்றும் ஒருங்கு நிகழ்வது; நற்காட்சி முதலியன தனித்தனியே வீடுபெறு நெறியாகா என்பர் நீலகேசி உரைகாரர். போகமும் வீடுபேறும் என்ற இவையிரண்டுமே மக்கள் பெறற் குரியன வாதலின் "இவை" யெனத் தொகுத்தோதினார். "மானுய ரென்னப் படுவார் தாம் மா விதையமென்னும், கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த், தானுய ரின்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார்"3 என்பதும் அதன் உரையும் காண்க. செல்வச் செருக்கி னால் அறிவுக்கண் மூடப்பட்டமையின் மறுமை வீடு என்ற ஆராய்ச்சி யுணர்வே இலராயினர் என்பதாம். ஒன்றும் என்புழிச் சிறப்பும்மை தொக்கது எ-று.
வேனில் வரவு
உரை:- நெரிந்த நுண்குழல் நேரிழையார் உழை- நெறித்த நுண்ணிய கூந்தலையும் உயரிய அணிகலன்களையு முடைய மகளிர்பால்; சரிந்த காதல் தடையிலதாக-உண் டாகிய காதலின்பம் இடையீடின்றிப் பருகிவராநிற்ப; வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்து கட்டப் பட்ட வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன் இன்பத்திலே மூழ்கிக் கிடக்கும் நாளில்; இன் இளவேனில் பருவம் விரிந்தது.- இன்பத்தைத் தரும் இளவேனிற் பருவம் வந்தது எ-று.
மன்னவன் , இழையாருழை, காதல் தடையிலதாக வைகும் நாள் இளவேனிற் பருவம் விரிந்தது என இயையும். நெறிந்த எனற்பாலது நெரிந்த என வந்தது. "நெறிதாழ் இருங் கூந்தல்", "நெறிகூந்தல்"1 என வருதல் காண்க. நுண்குழல் நுண்மை மயிர்க்கேற்றுக. சரிதல்-உண்டாதல். தடை-துனி. புலவியும் ஊடலும் காம வின்பத்துக்குச் சிறந்தனவாதலின், துனியே பொருளாமாறு காண்க. "உப்பமைந்தற்றால் புலவி" என்றும் "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம், கூடியார் பெற்ற பயன்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. நாடு முற்றும் ஒரு காலத்தே விளங்கித் தோன்றுதலின் "விரிந்தது" என்றார்.
-------------
சோலை நலம்
உரை:- கோங்கு பொற்குடைகொண்டு கவித்தன- கோங்கமரங்கள் பொன்னாற்செய்த குடைபோலப் பூத்துத் தொங்கின; வாங்கு வாகை சாமரை வளைத்தன-வளைந்த வாகை மரங்கள் சாமரைபோலப் பூத்துச் சாய்ந்து கிடந் தன. கூம்குயிற் குலம்-கூவுகின்ற குயிற்கூட்டம். இன் இயம் கொண்டு ஒலிபாங்கு-இனிய முழவுபோல இசைக்கும் இடங்களில், வண்டொடு தேனினம் பாடின-வண்டின மும் தேனினமும் பண் பாடின எ-று.
கோங்கம்பூவினைக் குடையோடு உவமித்தலின், அதற்கேற்பக் "கலித்தன" என்றார். வாங்குதல்-வளைதல். சாமரைபோல் வதனைச் சாமரை என்றார். கொண்டு, உவமப்பொருட்டு; "யாழ் கொண்ட இமிழிசை"1 என்றாற்போல. கோங்கு குடைபோல் மலர்தலை "குடையவிழ்வன கொழுமலரின குளிர்களியன கோங் கம்"2 என்றும், வாகைப்பூ சாமரை போறலை "ஓகைச் சாமரை யூழ்த்தன வாகை"3 என்றும் சான்றோர் கூறுப. குயிலோசை முழவு போல்வதனை "களிவாய்க் குயில்கள் முழவாக"4 என்ப. வண்டு, தேன் என்பன வேறுவேறுவகை. கோங்கு குடைகவிப்ப, வாகை சாமரைவீச, குயில் முழவு முழக்க, வண்டும் தேனும் பண் மிழற்ற, இளவேனில் விரிந்தது என்று கொள்க. பாங்கு-பக்கம்.
----------
உரை:- வார்கொடி பூஞ்சிகை மலர்ந்த-நீண்டகொடிகள் அழகிய தலையிலே பூக்களைப் பூத்தன, தலம் தலந்தொறும் மங்கையர் ஆடினர் தாழ்ந்தனர்-இடந்தோறும் மகளிர் விளை யாடி யமர்ந்தனர்,கலந்த காதன்மை காட்டுநர்போல-மனக் கினிய காதலரைக் கூடிய நலமுடைமையைக் காட்டுபவரைப் போல, மாவினம் எல்லாம் வண்தளிர் வலந்த-மாமரங்க ளெல்லாம் வளவிய தளிர்களை ஈன்றன எ-று.
கொடிகள் இடையிடையேயன்றித் தலையிலே பூத்து விளங்குத லின் "பூஞ்சிகை வார்கொடி" என்றார்.. "பூத்தலைப் பூங்கொடி" என்பர் கபிலர். பூவும் புதுத்தளிரும் செறிய இனிய நிழல் பயந்து வெண்மணல் பரந்து இனிது தோன்றும் இடங்கள் என்றற்கு, "தலந் தலந் தொறும்" எனப் பொதுப்படக் கூறினார். காத லரைக்கூடி மகிழும் மகளிர், மேனி மாமை நிறமுற்றுத் திகழ்பவாதலின், "கலந்த காதன்மை காட்டுநர் போலவே, வலந்த வண்டளிர் மாவினமே யெலாம்" என்றார்.
மாவினமே என்புழி ஏகாரம் இசை நிறை, தேமாவும் புளிமாவும் என இனமுண்மையின் "மாவினம்" எனப்பட்டது. எல்லாம், எஞ்சாமைப்பொருட்டு; இளவேனிலில் இவையாவும் ஒழியாது தளிரீனுமாகலின். இனி, கொடிபோலும் மங்கையர் ஆடினராய்த் தாழ்ந்தனராய்க் காட்டுநர்போல மாவின மெல்லாம் தளிரீன்றன என்றுமாம். வலத்தல்-சூழ்தல்.
-----------
வேனில் விழா
உரை:- உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர்கொண்டிட- உயர்ந்த மரம் செறிந்த சோலைகள் தளிரும் பூந்துணரும் ஈன்று கொள்ளுமாறு, வயந்த மன்னவன் தென்றலின் வந் தென-வசந்த காலமாகிய வேந்தன் தென்றலுடன் வந் தானாக, நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும்-வரவேற்று விரும்பிய வேந்தர்களும் அவ்விராசபுரத்துமக்களும், வயந்த மாடு வகையினர் ஆயினர்-வசந்த விழாக் கொண்டாடும் கூறுபாடுடையராயினர் எ-று.
வேனில் வரக்கண்ட பல்வகை மரம் செடி கொடிகள் புதுத் தளிரீன்று புதுமலர் பூத்து நறுமணம் கமழ, மன்றல் நாறும் தென்றல் தவழ, வண்டு தேனுண்டு பாட இனிய காட்சி வழங்குவது அதனை வரவேற்பது போறலின், "உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர் கொண்டிட" என்றார். "உயர்ந்த சோலை" என்றும், "எதிர் கொண்டிட" என்றும் "மன்னவன்" என்றும் நின்ற சொற்கள், மன்னன் தம் நகர் நோக்கி வந்தவிடத்து, நகரத்து உயர்ந்தோர் பூச்சொரிந்து எதிர்கொள்ளும் இயைபினைக் குறிப்பித்தல் காண்க.
தென்றலின்நயந்த என்றற்குத் தென்றலால் அறிந்து மகிழ்ந்த என்று உரைத்தலுமொன்று. வேனில் வரவினைத்தென்றல் போந்து அறி வித்தலை "இன்னிள வேனில் வந்தனன் இவணென, வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த, இளங்கால் தூதன் இசைத்தனன்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. வயந்தம்-வேனில் விழா; "குழவி வேனில் விழவுஎதிர் கொள்ளும், சீரார் செவ்வி"2 என வருதல் காண்க. வயந்த மாடு உவகையராயினார் என்று கொள்ளி னுமாம். "வேனிலாடல் விரும்பிய போழ்தினில்"3 எனப் பிறாண்டும் கூறுப. மன்னர் என்று பன்மையாற் கூறினார், மாரிதத்தனும் அவன்கீழ் அரசுபுரியும் சிற்றரசரும், துணைபெற்று வாழும் ஏனையரசரும் அகப்பட.
நகரமாந்தர் வேந்தற் குரைத்தல்
உரை;- மான யானைய மன்னவன்-பெருமை பொருந் திய யானைகளையுடைய மன்னவனான மாரிதத்தன், கான் உலாவியும்-காடுகளில் உலாவியும், கா உடன் அடுத்தும்- சோலைகளில் உடன் சென்று தங்கியும், வானிலாடல் விரும் பிய போழ்தினில்-வேனில் விளையாட்டை விரும்பிச் சென் றிருந்தபோது, தன் உழை-அவன்பால், ஏனைமாந்தர்- ஏனை நகரமக்கள் சென்று, இறைஞ்சுபு கூறினார்- வணங்கி நின்று பின் வருமாறு கூறலயினர் எ-று.
மரம் செறிந்து குளிர்ந்த நிழல் பரந்து உலாவுவார்க்குத் தட்பம் பயந்து மாவும் புள்ளும் இனிய காட்சியும் இசையும் வழங்க இன் புறுத்தலின். "கான் உலாவியும்" என்றும், தங்குதற்குரிய தூமண லும் பசும் புல்லும் அமைந்த நறுமலரால் மணம் கமழ்ந்து அமர் வார்க்கு இன்பம் நல்குதலின், "காவுடன் அடுத்தும்" என்றும் கூறி னார். எண்ணும்மை பிரித்துக்கூட்டப்பட்டது. கானும் காவும் கூறவே, ஏனை யாறும் குளமும் படிந்து நீர்விளையாட் டயர்தலும் கொள்க. இனி, வேனிலாடல் என்பதை வேனிலும் ஆடலுமாகப் பிரித்து வேனில் விழவும் நீர் விளையாடலுமாகக் கொள்ளலுமாம். யானைய, குறிப்புப்பெயரெச்சம்.
------------
சண்டமாரிக்கு வழிபாடாற்ற வேண்டுமெனல்
உரை:- என்றும்-ஆண்டு தோறும், இப்பருவத்தினோடு- இவ்வேனிற் பருவத்து வேனிற்காலத்தும், ஐப்பசி-ஐப் பசித்திங்களிலும், சென்று-போய், தேவி சிறப்பது செய் தும்-காளி தேவிக்குச் சிறப்புச்செய்து வருவேம், அஃது ஒன்றும் ஓரலமாயினம்-இப்போது வேனில் விழா வயர்கின் றோமே யன்றித் தேவிக்குச் சிறப்புச் செய்வதாகிய அஃது ஒன்றுமட்டில் நினையேமாயினேம், ஒன்றலா-(அதனால்) ஒன்றல்லாத பல, நன்றலாதன-தீங்குகள், நங்களை வந்து றும்-நம்மை வந்தடைந்து வருத்தும் என்று அஞ்சுகின்றேம் எ-று.
ஒடு, எண்ணொடு. ஐப்பசி கார்ப்பருவத்ததாகலின் அக் காலத்தே புதுநீர் விழவயர்த லுண்மையின், வேனில் விழாவும் புது நீர்விழாவும் நகரமாந்தர் கொண்டாடுமிடத்துத் தேவிக்குச் சிறப்புச் செய்வர் என்பது எய்துதலின், "செய்தும்" என்கின்றனர். ஐப்பசித் திங்களில் இவ்வாழா நிகழும்காலத்தை, பிறாண்டு, "ஐப்பசி மதிய முன்னர் அட்டமி பக்கந் தன்னில், மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னில், கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியின் காளை, மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென் றாள்"1 என்று கூறுதல் காண்க. வேனில் விழாவிற்சென்று இது கூறுதலின், அஃது என்பது தேவிக்குரிய சிறப்பாயிற்று. ஒன்றலா என்பது தீமையின் பல்வேறு வகைமை குறித்து நின்றது. அஞ்சுகின்றேம் என்பது கூற்றெச்சம்.
வழிபாடு தவறின் தீங்குண்டாமென நகரவர் கூறல்
உரை:- காவல் மன்ன-எங்களைக் காத்தலில் வல்லுந னான அரசே; தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்-தேவி யானவள் மனம் திரிந்து வெகுளுவாளாயின்; நோவு செய்தி டும் நோய் பல ஆக்கிடும்-துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டு பண்ணுவாள்; ஆவி கொள்ளும் அலாதனவும் செய்யும்-(நோய் பலவற்றால் நம்மை மெலி வித்தலே யன்றி) உயிரைக்கொள்ளுதற்குரிய தீங்குகள் பல வற்றையும் செய்வாள்; கடிது எழுக-(ஆதலால்) விரைய எழுவாயாக, என்றனர்-என்று வேண்டினர் எ-று.
மன்ன, சீறுமேல், ஆக்கிடும், செய்யும்; அதனால் எழுக என்ற னர் நகரமாந்தர் என இயையும். தேவி சினத்தால் நோயும் சாக் காடும் எய்தும் என்பார், "நோவு செய்திடு நோய்பலஆக்கிடும், ஆவி கொள்ளு மலாதன வும்செயும்" என்றார். நோவு செய்திடும், ஆவி கொள்ளும் என்பன முறையே நோயையும் அலாதனவற்றையும் விசேடித்து நிற்கின்றன. நோவு-வருத்தம். அலாதன: மழை யின்மை, பெருங்காற்று, இடி, தீ முதலியவற்றால் உண்டாவன. உம்மை, எச்சவும்மை. சிந்தை திரிதலாவது, அருள் இலளாதல். நாடு காக்குந் தொழிலில் எத்துணை வலியனாயினும் அவள் செய்வன வற்றைத் தடுக்கமுடியா தென்றற்கு "காவல் மன்ன" என்றார். அவர் கூறுவனவற்றைக்கேட்கும் அரசன் உள்ளத்தில் அச்சம் பிறத் தலின், "கடிதெழுக" என அவர்தாமே அரசற்குக் கூறலாயினர்.
-----------
மாரிதத்தன் தேவிக்குச் சிறப்புச் செய்யப்போதல்
உரை:- என்று கூறலும்-என்று நகரமாந்தர் கூறியதும்; நல் அறத்திற் சென்று தெளிவின்மையால்-அருளறமாகிய நன்னெறிக்கண்சென்று அறிவு தெளியாதவனாதலால்; இது ஏதம் என்றிலன்-இச்செயல் தீதுஎன்று கூறிற்றிலன்; இது நன்று என்றனன்-இது நல்லதே என்று நகரமாந்தர்க்குச் சொல்லி; நல் நகரப்புறம் தென் திசைக்கண்-நல்ல நகரத் தின் புறத்தே தெற்கின்கண்ணே யுள்ள தேவி கோயிலுக்கு சிறப்பொடு சென்றனன்-தனக்குரிய சிறப்புடன் சென் றான் எ-று.
கூறலும், வினையெச்சம் விரைவுப்பொருட்டு; அக்கூற்று செவி யிற் புகுதலும் அறவுணர்வுடையார் அஞ்சித் தம் செவியிற் பொத்திக் கொள்ளு வாராக, இவன் அவ்வாறன்றிச் செவிநிரம்பக் கேட்டு, மனத்திற்கொண்டு, நன்றென்று தெளிந்து வாயாலும் கூறுகின்றா னாதலின், "ஏதம் இது என்றிலன், சென்று நல்லறத்தில் தெளி வின்மையால்" என்றும், "நன்றிது என்றனன்" என்றும் கூறி னார். இது என ஒருமுறைக்கு இருமுறை ஆசிரியர் கூறியது, அச் சிறப்பின்கண் தமது அருவருப்புத்தோன்ற. சென்றென்னும் வினை யெச்சம், தெளிவென்னும் வினைப்பெயர்க்கண் வினைகொண்டது. நல்லறத்திற் சேறலாவது, அருளறம் உணர்த்தும் நூல்களைத் துறை போகக் கற்றுத் தெளிதல்; தெளிவுடையார்க்கன்றிக் கற்கும் நூற் பொருளும் செயல் வகையிற் பயன்படா தாகலின், "தெளிவின்மை யால்" என்றார். சண்டமாரியென்னும் தேவி கோயில் நகர்க்குத் தெற்கில் புறத்தே இருக்கிறதென்றற்கு "நகர்ப்புறத்தென்றிசைக் கண் சென்றனன்" என்றாராயிற்று. ஏனைமாந்தரினும் தான் சிறப்பு வேறுடையனாதல் வேண்டுமென்பது மாரிதத்தனுடைய உட் கோளாதலின், அவன் செலவை "சிறப்பொடு சென்றனன்" என விதந்தோதினார். உயிர்ப்பலி கொடுக்கும் கால;த்தில், ஏனை மாந்த ரைப்போலாது தான் வேறு சிறப்புடையபலியே கொடுக்கக் கருதுவ தொன்றே (21) இவன் மனப்பான்மை இஃதெனத் தோற்றுவித்து நிற்கிறது.
--------------
சண்டமாரியின் இயல்பு கூறல்
உரை:- சண்டகோபி-மிகுந்த கோபமுடையவளும், தகவிலள்-நடுவு நிலைமையில்லாதவளும், தத்துவம் கொண்ட கேள்வியும்-மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வி யறிவும், கூர் அறிவும்-நுண்ணிய நூல்களைக்கற்ற கல்வி யறிவும், இலா-இல்லாத, தொண்டர் தொழும் துருத் தேவதை-கீழ்மக்கள் மேற்கொண்டு வழிபடும் கொடிய தேவதையாவாளும், சண்டமாரி தனது-சண்டமாரி என்று பெயர் கூறப்படுபவளுமாகிய தேவியினுடைய, இடம்- கோயில் எல்லையை, எய்தினான்-(சிறப்பொடுசென்ற மாரி தத்தன்) அடைந்தான் எ-று.
உயிர்ப்பலி கொடாவிடின் "சிந்தை சிதைந்து சீறு" தலின் "சண்டகோபி" என்றும், ஓருயிரைத்தின்று பிறிதோருயிர்க்கு நலம் செய்தலின், "தகவிலள்" என்றும், கீழ்மக்களால் ஊனும் உயிரும் படைக்கப்படுதலின் "துருத்தேவதை" யென்றும் பழித்தார். தகவு, நடுவு நிலைமை; தக்கார் தகவிலர் என்பது"1 என்பதன் உரைகாண்க. தத்துவம், மெய்ம்மை. "கற்றலின் கேட்டலே நன்று"2 என்பவாகலின் கேள்வியை முற் கூறினார். கல்வி கேள்வி யிலாத்தொண்டர் எனவே பிறர்க்குத் தொண்டுபட்டுக் குற்றேவல் செய்தொழுகும் கீழ்மக்களையே ஈண்டுத் "தொண்டர்" என்றா ராயிற்று. துருத்தேவதை, வடசொற் சிதைவு. இடம், கோயில் எல்லை.
வேந்தன் தேவியை வணங்குதல்
உரை:- பாவமூர்த்தி படிவம் இருந்த-பாவத்தின் வடிவ மாகிய சண்டமாரியின் உருவச்சிலை இருந்த, அத்தேவி மாடம் அடைந்து-அவள் கோயிலை யடைந்து, செறிகழல் மாவலோன்-செறிந்த கழலையணிந்த குதிரை செலுத்து வதில் வல்லவனாகிய மாரிதத்தன், வலம் கொண்டு-வலம் வந்து, தேவி எம் இடர் சிந்துக என்று-தேவியே எமது இடர்களைக் களைவாய் என்று சொல்லித் துதித்து, வணங் கினான்-வணங்கி நின்றான் எ-று.
தேவி, இரண்டனுள் ஒன்று சுட்டுமாத்திரையாயும், மற்றொன்று விளியாயும் நின்றன. மாவலோன் மாடம் அடைந்து, வலம்கொண்டு, சிந்துக என்று வணங்கினான் என இயையும். மாடம், திருக்கோயில். மாவலோன் என்றதனால் தேவி கோயிற்கு அரசன் குதிரைமேல் வந்தான்போலும். பிறாண்டும் (307) இவ்வாறே உரைத்துக்கொள்க.
-----------
தேவிக்குப் பலியீடு குறித்து வந்துள்ள உயிர்த்திரள்
உரை:- மன்னன் -அரசனான மாரிதத்தன்; ஆணையின்- தான் இட்ட கட்டளைப்படி; மாமயில் தொகை-அழகிய மயிற்கூட்டமும்; வாரணம் தொகை-கோழிகளிின் கூட்ட மும்; துன்னு சூகரத்தொகை-நெருங்கிய பன்றிகளின் திரளும், ஆடு எருமைத்தொகை-ஆடு எருமை முதலியவற் றின் திரளும் என்ற; இன்னசாதி விலங்கில்-இந்த இனத்து விலங்குகளில்; இரட்டைகள் பின்னி வந்து பிறங்கின- இரண்டிரண்டாகப் பிணிக்கப்பட்டுவந்து மிகுந்து நின்ற வற்றை; கண்டனன்-கண்ணாரக்கண்டான் எ-று.
தொகை யென்பதனை மயில் முதலிய ஏனையவற்றிற்கும் கூட்டுக. புள், விலங்கு என்ற இவற்றை ஆணும் பெண்ணுமாக இரண்டிரண் டாய்க் கொணர்ந்து நிறுத்தினமை தோன்ற "இரட்டைகள்" என் றார்; பின்னர் ஆணும்பெண்ணுமாகிய மக்களிரட்டையைக் கொணர் தலின், இவ்விரட்டை ஆணும் பெண்ணுமாதல் பெற்றாம். இவற்றைத் தனித்தனியின்றி இரட்டையாய்ப் பிணித்து வந்தனரென்றற்கு, "பின்னிவந்து" என்றார். பிறங்குதல், மிக்குத்தோன்றுதல். "கண்டனன்" என்றார்,அவன்கருத்தில் அப்பெருந்தொகையான உயிர்களைக் கண்டும் இவையனைத்தும் வறிதே கொலையுண்கின்றனவே என்ற அருட்கருத்துச் சிறிதும் பிறந்திலது என்பதை வற்புறுத்தற்கு.
--------------
மாரிதத்தன், தான் நரபலியிடுவது தக்கதெனக் கருதுதல்
உரை:- இவ்வாளினின்-இந்த வாட்படையால், மக்கள் இரட்டையை-ஆணும் பெண்ணுமாகிய மக்களுள் இரட்டை யரை, ஈனமில் பலியாக-தாழ்வில்லாத பலியாக, யான் இயற்றினால்-யான் வெட்டித்தருவேனாயின், ஏனை மானுயர் தாம்-ஏனைய மாந்தரெல்லாரும், இவ்விலங்கினில் ஆன பூசனை-இவ்விலங்குகளைக்கொன்று செய்வதாகிய பலி யீட் டினை, ஆற்றுதல் ஆறு எனா-செய்தல் முறையாம் என்று கருதி எ-று.
தலைவனாகிய தான் தேவிக்குப் பலிகொடுத்த பின்பே, ஏனை மக்கள் தாம் கொணர்ந்த உயிர்களைப் பலியிடுதல் முறையென்று வரிசை வகுக்கின்றான் என்பார், இவ்வாறு கூறினார். தானும் விலங் கிரட்டையைப் பலிதரின், தன் தலைமைக்கு அமையாது என்ற கருத்தால், "மக்களிரட்டையை ஈனமில் பலியாக இயற்றினால்" என்றான். "ஈனமில் பலி" என்றும், "விலங்கினில் ஆனபூசனை" என்றும் கூறியன, விலங்கு முதலியவற்றைப் பலியிடல் தனக்குத் தாழ்வு என்றும், உயிர்களைக்கொன்று பலியிடுவதுதான் தேவிக்குச் செய்தற்குரிய வழிபாடு என்பது அவன் கருத்தென்றும் உணர்த்தி நிற்கின்றன. இனி, "ஈனமில்பலி" என்பதனை"ஈனமில் மக்க ளிரட்டையைப் பலியாக" எனப் பிரித்துக்கூட்டி, "உடற்குற்றம் சிறிது மில்லாத மக்களுள் இரட்டையரை" என்று கோடலும் அரசன் கருத்தாகும். அதனை வருஞ்செய்யுளுட் காண்க.
--------------
நரபலிக்கு இரட்டைப் பிள்ளைகளை நாடிக்கொணர்க என வேந்தன் சண்டகருமனைப் பணித்தல்
உரை:- ஏட சண்ட கரும-ஏ, சண்ட கருமனே, வாடல் ஒன்று இலர்-மேனியில் குறை சிறிதும் இல்லாதவரும், மக் கள் இரட்டையர்-மக்களுள் இரட்டையரும், ஈடிலாத இயல்பினர்-நிகரில்லாத குணஞ்செயல்களை யுடையவரும் ஆகிய இருவரை, இவ்வழி தந்தீக என-இவ்வி டத்தே சென்று தேடிக்கொணர்க என்று ஏவ, நல்நகர் தன்னுள்-அந்த நல்ல நகருக்குள்ளே, நாட-தேடிக் கொணர்வதற்காக, ஓடினன்-விரையத் திரும்பி வருவது குறித்து அச் சண்டகருமன் ஓடினான் எ-று.
தான் "ஈனமில் பலி" யிட விரும்பினானாதலின், அவ்வீன மின்மை விளக்குவான், ஆண் பெண் என்ற இருபாலினும் முறையே உறுப்புக்குறைவின்மையும், இரட்டைப் பிறப்புடைமையும் ஈடிலாத இயல்புடைமையும் எடுத்தோதினான்.ஈடின்மை, உருவாதலும் குணத் தாலும் செயலாலும் ஒப்பில்லாமை. தந்தீக, வினைத்திரிசொல். நன்னகரென்றார், ஆங்குக் காணப்படும் இரட்டையரால் இப்பலியாகிய தீவினை கடிந்து அரசன் அருளும் அறமும் கொண்டு ஓங்குகின்றானா தலின். அரசன் குறித்த இலக்கணமுடைய இரட்டையர் கிடைப் பதன் அருமை நினைந்து "நாட" என்றும் "ஏட" என்று அது நினையாது விளித்த அரசன், தாழ்ப்பின் கண்ணோடாது ஒறுப்ப னென்ற அச்சமுடைமை தோன்ற, "ஓடின" னென்றும் கூறினார்.
--------------
சுதத்த முனிகள் உபாசகர் குழுவுடன் வருதல்
உரை:- ஆயிடை-அந்நகர்க்கு அப்போது, சுதத்தன்- சுதத்தன் என்னும் முனிவன், ஐஞ்ஞூற்றுவர் அருந்தவர்கள் தொகையோடு-அரிய தவத்தை யுடையவர் ஐந்நூறு பேர்களும், தூய மாதவத்தின் மிக்க-தூய்தான பெரிய தவத் தால் மேம்பட்ட, உபாசகர் தொகையும்-உபாசகர் கூட்ட மும், சூழ-சூழ்ந்துவர, சேயிடைச்சென்று-சேய்மைக் கண் சென்று, ஓர் தீர்த்த வந்தனை செய்ய-ஆங்குள்ள ஒரு சைத்தியத்தில் எழுந்தருளிய அருகபரமேட்டியைக் கண்டு வழிபடுவதற்காக, செல்வோன்-செல்வானாய், மாயம் இல்-குற்றமில்லாத, குணக் குன்றன்ன மாதவர்க்கு- குணங்களையும் மலைபோன்ற பெரிய தவத்தையு முடைய முனிவர்க்கு, இறைவன்-இறைவனாகிய அவன். வந்தான்- வந்துகொண்டிருந்தான் எ-று.
தவமாவது, "வென்றவர் படிமம் தாங்கி, சித்தமெய் மொழிகள் மூன்றில் இருதொடர்ப் பாட்டி னீங்கி, பத்தறம் பன்னி ரண்டாம் தவத்தொடு பயின்று தன்கண், உத்தமக்காட்சி ஞானவொழுக்கத்தை யழுத்தல்"1 என்று மேருமந்தர புராணம் கூறுவது காண்க. இத்த வத்தின் அருமையும் உடையோரது பெருமையும் தோன்ற "அருந் தவர்" என்றும் "மாமயில் குணக்குன் றன்ன மாதவர்" என்றும் கூறினார். இவர்தாம் மாதவர், ஓசனர், மோனதரர், உக்கதவர், தித் ததவர், தத்ததவர், கோரதவர் எனப் பலராவர்; இவர் இயல்பினை மேருமந்தர புராணத்துட் காண்க. உபாசகராவார், உபவாசிகள். "அட்டமி பருவங்களில் தமது சக்திக்கு அனுகூலமாகத் தருமகதா சிரவணமும் பஞ்ச நமஸ்கார ரூபாதிகளோடு கூடிக் கிருஷியாதிகளை நிவர்த்தித்து உபவசித்தலும் ஏகபுத்தி பண்ணுதலுமாகிய"2 இவற்றை யுடையவர் உபாசகர். வாமனமுனிவரும் "பக்க இவர்களை, முதல் நோன்புடைய பரமதவர்"3 என்று உரைப்பர். தொகை யென்பதை அருந்தவர்க்கும் கூட்டுக. ஒடு, ஒருவினை யொடு. உபாசகரும் "பரமதவ" ராதலின், "தூயமா தவத்தின்மிக்க உபாசகர்" எனச் சிறப் பித்தார். அருகபரனமேட்டியைத் "தீர்த்தன்" என்பது வழக்கா தலின், அவனை வழிபடுஞ் செய்கை "தீர்த்தவந்தனை" எனப்பட் டது. "செய்தவப் பாவமெல்லாம் தீர்த்திடும் தீர்த்தன்"4 எனத்தேவரும், "தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"5 எனச் சமயதிவாகரரும் வழங்குதல் காண்க. மாயமில் குண மெனவும், குன்றன்னமாதவமெனவும் வகுத்துக்கொள்க. "மலைய னைய நிலையுடைய மாதவர்க ளொருபால்"6 என வருதல் காண்க. "குணமென்னும் குன்றேறி நின்றார்"7 என்றாற்போலக் கொள்ளினுமாம். இறைவன், சுட்டுமாத்திரையாய் நின்றது. வந்து நகர்ப்புறத்தே ஒரு பொழிலுள் தங்குகின்றானென வருஞ்செய்யுளுட் கூறுதலின், வந்தான் என்பதற்கு வந்துகொண்டிருந்தான் எனல் வேண்டிற்று.
சுதத்தன் அனசனத் தவமமர்தல்
உரை:- முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் வந்து-சுதத்தன் மேலேகூறிய அருந்தவரும் உபாசகரும் உடன்வர வந்து, மாநகர்ப்புறத்து ஓர் வளமலர் பொழி லுள்-அழகிய இராசபுரத்துக்கு வெளியேயுள்ள வளவிய மலர் நிறைந்த ஒரு சோலையில், விட்டு-தங்கி, நெறிக்கண் தீமைதீர்த்திடும் நியமம்-தான்வந்த நெறியின்கண் தன்னை யறியாது நிகழ்ந்த பாவத்தைப் போக்குதற்குரிய நியமத்தை, சிந்தையால் முற்றி-மனத்தால் மந்திர தியானத்தால் போக் கிக்கொண்டு, ஆசனம் கொண்டு-ஓரிடத்தே இருந்து, அனசனத்தவம் அமர்ந்தான்-தவரும் உபாசகரும் உள்ளிட்ட அனைவருடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தான் எ-று.
சுற்றம் முழுவதினோடும் வந்து , விட்டு, நியமமுற்றித் தவம் அமர்ந்தான் என இயைக்க.
நெறியின்கண் தாம் வருங்கால் உடலாலும் சொல்லாலும் உள் ளத்தாலும் தம்மையறியாது நிகழ்ந்த குற்றத்தைப் போக்குதற் காகப் பஞ்சநமஸ்கார மந்திரத்தையுரைப்பது அப்பியந்தர தவம் எனப்படுகிறது. "செய்கை சொல் மனங்களால், மரிய மாசினைக் கெடுக்கும் அத்திவாரமாகிய பெரியவர் மனங்கொளப்... பெருந்தவம்"1 என்று மேரு மந்தரபுராணம் கூறுதல் காண்க. அனசனத்தவம் -*உண்ணாநோன்பு; இதன் பயனை "வினைகளுக் குதிர்ச்சி வேட்கை நீக்கி மெய் வசம்வரல், புனைவரும் பொறிச் செறிப்புயிர்க்கழிவு போற்றுதல், நினைவின தொருக்கமும் நெறி விளக்கமும் செயும்"2 என்று அப்புராணம் கூறும். விடுதல், தங்குதல். கழுவாய் முறையாதலின் இத்தவத்தை "நியமம்" என்றார். "சிந்தையால்" என்றதனால், ஏனைச் சொல்லாலும் செயலாலுமென்பது கொள்ளப்படும்.
அபயருசி அபயமதி யென்னும் இரட்டையர் உபாசகர்குழுவில் இருத்தல்
உரை:- உளங்கொள மலிந்த கொள்கை- மனதிலே நிரம் பக்கொண்ட விரத வொழுக்கங்களையுடைய, உபாசகர் குழுவி னுள்ளார்-உபாசகர் கூட்டத்தில் உள்ளவரும், அளந் தறிவரிய கேள்வி-அளந்து காண முடியாத கேள்வியை யுடையவருமான, அபயமுன் உருசி யென்பானும்-அபயம் என்ற பெயரின் முன் ருசியென்பது சோர்ந்த அபயருசி என்ற பெயர் சொல்லப்படுபவனும், தங்கை-அவன் தங்கையாகிய, இளம் பிறை யனைய நீராள்-இளம் பிறையை யொத்த இயல்பினையுடைய, அபயமாமதி யென்பாளும்- அபயமதி எனப்படுபவளும், துளங்கிய மெய்யர்-தளர்ந்த மேனியராய், உள்ளம் துளங்கலர்-தளராத உள்ளமுடைய ராய், தொழுது நின்றார்-சுதத்த முனிகளை வணங்கி நின்றார்கள் எ-று.
புரோடோப வாசிகட் குரிய விரதமும் ஞானமும் நிரம்பி யிருத் தல் பற்றி "உளங்கொள மலிந்த கொள்கை" என்றார். உளம் கொளமலிதலாவது ஐயந்திரிபற வுணர்ந்து செய்கையிற் கைவரப் பெறுதல்.அளக்கலாகாத கலைத்துறை பலவும் கற்று நிரம்பியிருப் பது பற்றி, அபயருசியை "அளந்தறிவரிய கேள்வி" யென்றார். இனி, இதற்கு அளவைகளைக் கொண்டு வாதம் புரிந்து வெல்லுதற் கரிய தருக்கநெறி முழுதும் நிரம்பக் கற்றும் கேட்டுஞ் சிறந்த அறிவு என்றுமாம். கலை நிரம்பியிருப்பது பற்றி அபயருசிக்குப் பிறாண்டும் முழுமதியை, உவமிப்பர். அபயமதி அத்துணையளவு அறிவு நிரம்பா மையின், "இளம்பிறையனைய நீராள்" என்றார். பசியால் மேனி வாடினாராயினும், "உளங்கொளமலிந்த கொள்கை" யில் வாட்ட முறாமையின், "துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர்" என்றார். அப யமாமதி என்புழி, மா, அசை; "அநங்கமாவீணை" என்றாற்போல.
-----------
இரட்டையர் சரிதை போதல்
உரை:- அம்முனி-அச்சுதத்த முனிவன், அவர்கள் தம்மை-அபயருசி அபயமதியாகிய இருவரையும் பார்த்து, அருளிய மனத்தனாகி-அருள்மேவிய உள்ளத்தனாய், வம்மின்- வருக, நீர் பசியின் வாடி வருந்திய மெய்யரானீர்-நீவிர் பசியி னால் வாடி வதங்கிய மேனியுடையீராயினீர், இன்று-இந்நா ளில், எம்முடன் உண்டி மாற்றாது-எம்மோடு கூடி உணவு கொள்ளா தொழிவதை விட்டு, சரிதை போகி-பிச்சையேற் றுண்டு, நீர் நம்மிடை வருக-நீவிர் நம்பால் வருவீராக, என்ன-என்று பணித்தருள, நற்றவர்த் தொழுது சென் றார்-நல்ல தவத்தையுடைய முனிவர் கூட்டத்தை வணங்கி விட்டுச் சென்றனர் எ-று.
தொழுது நின்ற இருவர்தம் மேனியும் குறிப்பும் கண்டமாத்தி ரையே முனிவற்கு அருள் நிறைந்து பொழிவதாயிற் றென்பார், "அருளிய மனத்தனாகி" யென்றார். வம்மின், வருக என்னும் பொருளதாய முகமனுரை. இளையராதலின், அவர் மேனியில் வாட்டமும் மனத்தில் வருத்தமும் முனிவன் கண்ணைக் கவர்ந்தன என அறிக. உணவு மறுத்தலை உணவு மாற்றுத லென்றும், உண்டலை, உணவுமாற்றாமை யென்றும் கூறுபவாதலின், அவ்வியல்பு வழுவாது "உண்டிமாற்றாது" என்றார். தனக்குச் சீலமன்மையின், உண்டுவருக என்றிலன். சரிதை, செல்லுதல்; வடசொற்சிதைவு. சரிதை போதலாவது, "விசுந்தராகிய ஜைன ஜனங்களது கிருகம் புக்குப் பிக்ஷாவிருத்தி பண்ணிப் பின்பு ஏகக் கிருகத்துள் புக்கிருந்து பாணிபாத்ரத்தா:$ லுண்டல். விடை பெற்றுச்செல்வார் தலைமை வீற்றிருக்கும் சுதத்தனுடன், ஏனை முனிபுங்கவரையும் தொழுது விடை பெற்றமை தோன்ற "நற்ற வர்த்தொழுது சென்றார்" என்றார்.
நற்றவற்றொழுது-என்பது பாடமாயின், நற்றவனாகிய சுதத் தனைத் தொழுது என்று உரைக்க. அப்போது அது சுட்டுப் பொருட்டாமாறு காண்க.
முனிவன் இவ்விருவரையும் சரிதை போகுமாறு ஏவுதற்கு ஏது, மாரிதத்தனது நல்வினையென அறிக.
------------------
இரட்டையர் நகர்க்குட் சேறல்
உரை:- வள்ளிய மலரும் சாந்தும் மணிபுனை கலனும் இன்றாய்- வளவிய பூமாலையும் சந்தனமும் மணி முதலிய வற்றாலாகிய அணிகலன்களும் இன்றி, வெள்ளியது உடை ஒன்றாகி-வெள்ளாடை யொன்றை யுடுத்துக்கொண்டு, வென்றவர் உருவம் ஏலார்-புலன்களைவென்ற முனிவருடைய கோலத்தை ஏலாராயினும், கொள் இயல் அமைந்த-காண் பார் தகும் எனக் கொள்ளத்தகுந்த இயல்பு அமைந்த, கோலக் குல்லகவேடம் கொண்ட-அழகிய இளமைப் பரு வத்துக்குரிய கோலம்கொண்ட, வள்ளலும் மடந்தை தானும்- வள்ளலாகிய அபயருசியும் அபயமதியும், வளநகர் மருள- வளவிய நகரத்தவர் கண்டு வியப்பெய்துமாறு, புக்கார் அந்நகர்க்குள்ளே சென்றார்கள் எ-று.
இன்றாய்,ஒன்றாகி, அமைந்த குல்லக வேடம் என இயைக்க, குல்லகம், இளமை; வடசொற் சிதைவு. கோலக் குல்லகம் என்கின்றாராதலின் அதற்கேற்ப, மலரும் சாந்தும் புனைகலனும் விதந்து விலக்கினார். வென்றவர் உருவத்துக்கு வெள்ளாடையும் வேண்டாமையின், அதனையுடையராய இவர்களை. "வென்றவ ருருவமேலார்" என்றார். கொள்ளியலமைந்த என்பதற்கு, கோலம் கோடற் கமைந்த என்றலுமொன்று. மேனியின் தோற்றமும் வனப் பும் இளமையுடைமையினை மெய்ப்படுத்திக் காட்ட, உள்ளத்தே நிறைந்த முதுக்குறைவு விளங்கினமையின், அவர் கொண்டிருந்த தோற்றத்தைக் "குல்லக வேடம்" என்றார். தன்னைக் கொல்ல லுற்ற மாரிதத்தனுக்கு உறுதி பயப்பன நல்குதலின், அபயருசியை ஈண்டு "வள்ளல்" என்றார். மடந்தை, பருவமன்று; பெண்பாற் பெயர்.
---------------
இருவரும் தெருவில் உண்டியேற்றல்.
உரை:- வில்லினது எல்லை கண்ணால் நோக்கி-செல்லும் போது எதிரே ஒரு விற்கிடைத் தூரம் கண்களால் கூர்ந்து நோக்கி, மெல்லடிகள் பாவி-அடிகளைமெல்ல வைத்து, உயிர்க்கண் நல்லருள் புரிந்து-ஓரறி வுயிர்முதல் அனைத் துயிர்க்கும் நல்ல அருளைச் செய்து, நகை முதலாய நாணி- நகை முதலிய குற்றம் தங்கண் நிகழாவாறு நீக்கி, இல்லவர் எதிர்கொண்டு ஈயின்-மனையவர் தம்முடைய வருகைகண்டு எதிர்கொண்டு மனமுவந்து ஈவாராயின், எதிர்கொள் உண் டியருமாகி-எதிரேற்றுண்ணும் உணவினையுடையராய், நல்லற அமிர்தம் உண்டார்-நல்லறமாகிய அமிர்தத்தை யுண்ட இருவரும், வீதியூடு நடந்தனர்-தெருவழியே செல் வாராயினர் எ-று.
வில்லினது எல்லை, நான்குமுழதூரம். நெடிது நோக்கின் இடையிலுள்ள சிற்றுயிர்கள் கட்புலனாகாமை குறித்து, ஒருவிற் கிடையே நோக்குதல் கூறினார். அடிவைத்தலாகிய தொழிலது தன்மையினை அடிமே லேற்றி "மெல்லடிகள் பாவி" என்றார்; அப்பண்பின் பயன் அத்தொழிலால் உறுதலின், பரவுதல், அடியிடு தல். நல்லருள் என்றார்., ஓரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமையின். இளமையின் பயனாதலின், நகையினை விதந்தோதினார்; 'எள்ளல் இளமை பேதைமை மடனென், றுள்ளப்பட்ட நகைநான்கென்ப'1 என ஆசிரியர் ஓதுதல் காண்க. நகை, குற்றமாதலின், அது நிகழுங்கால் உயர்ந்தோர் செய்வது இதுவாகலின் "நாணி" யென்றார். மனமுவந்தீயின் என்பார், "எதிர்கொண்டீயின்" என்றார்; உவப்பில்வழி எதிர்கோடல் இன்றாகலின். அதனை விரைந்தேற்றனர் என்றற்கு "எதிர்கொள் உண்டிய" ரென்றார்.
அறத்தை அமிர்தென்றல் சைன நூலில் பயில வழங்கும் வழக்கு; "ஊட்டரும் அறவமிர் துலக முண்டதே"1 எனத் திருத்தக்க தேவரும் "மாண்புடை யடிகள் தறவமிர் துண்ட வாற்றலான்"2 எனத் தோலாமொழித்தேவரும் "அறவியான்றானும் அறவமிர்தீந் தான்"3 என நீலகேசி யாசிரியரும் பிறரும் கூறுப.
--------------
மக்களுள் இரட்டையரை நாடுவான் போந்த சண்டகருமன்
இரட்டை யாகிய இவ்விருவரையும் காண்டல்
உரை:- கண்டால்-தம்மைக்காணின், அண்டலர் எனி னும்-பகைவரே யெனினும், அன்பு வைத்து-தம்மனத்துட் கொண்ட பகைமை நீங்கி அன்புகொண்டு, அஞ்சும்-தீங்கு செய்தற்கு அஞ்சத்தக்க, நீரார் கண்டனன். - தன்மையினை யுடைய இருவரையும் சண்டகருமன் பார்த்தான், கண்ட சண்டகருமன்-பார்த்த அவன்., மனம் கலங்கா-மனம் கலங்கி, புண்டரீகத்தின் கொம்பும்-தாமரைப்பூவிலிருக்கும் திருமகளையும்- பொருவிலா மதனும்-ஒப்பில்லாத மன்மதனை யும், போன்று- போல, இளம்பருவம்-இளமைப்பருவம், கொண்டு-பெண்ணுமாணுமாகிய இரண்டுருக் கொண்டு, இவண்-இந்நகருக்கு இப்போழ்தில், குழைந்து வந்தது- வாடியமேனியுடன் வந்தது, என் கொல்-என்னகாரணமோ, என்றான்-என்று தனக்குள்ளே நினைத்தான் எ-று,
இளமைச்செவ்வி யுடையோரைக் காணின் எத்துணைப் பகைமை யுடையோர்க்கும் நெஞ்சில் ஈரம் பிறக்குமாதலின் "அண்டலரெனி னும் கண்டால் அன்புவைத்து" என்றார்; "செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்"4 எனப் பண்டைச்சான்றோரும் கூறுதல் காண்க. அன்புவைப்பதன் பயன், அன்புற்ற பொருட்கு
ஏதம் வருமோஎன அஞ்சும் அச்சம் பயத்தலாகலின், "அஞ்சும் நீரார்" என்றார்.
அரசன் ஏவலை மேற்கொண்ட உள்ளத்தனாய் வரும் சண்டகருமன் உள்ளத்திலும், அவ்வேவலைத் தம் காட்சியால் மறப் பித்து அன்பாற் குழையப்பண்ணுதலின் "அன்புவைத்தஞ்சுநீரார்" என்றவர், சண்டகருமன் இவர்களைக் கண்டு மனம் கலங்கினான் என்றார். மேனிவனப்பால் அன்பும், விரதத்தால் அச்சமும் பயப்பிக் கும் நீர்மையுடையார் என்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கண்டமாத்திரையே சண்டகருமன் இவ்விருவருடைய வனப்பாலும் வாட்டத்தாலும் தன்னை மறந்து வியந்துநின்றமை தோன்றக் "கண்டனன் கண்ட சண்ட கருமனும்" என்றார். உம்மை, சிறப்பு. அபயமதியை முன்பும் அபயருசியைப் பின்பும் அவன் கண்டமை விளங்க "புண்டரீகத்தின் கொம்பும் பொருவிலா மதனும்" என்றார். அருவப்பொருளான இளமைச்செவ்வி உருவப்பொருளாய் ஆணும் பெண்ணுமாய் உருக்கொண்டு வந்ததென்னும் கருத்தின னாய்,உருக்கொண்டு என்பவன், உருவிலே தோய்ந்து நின்றமையின் கொண்டென்றே யொழிந்தான். இது பிறர்கட்டோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை. இவ்வாறு காண்போர்த் தடுக்கும் காட்சியுடைய இருவரும் பசியால் வாடியிருந்தமையின், அதனைத் தேறாது, "குழைந்திவண் வந்த தென்கொல்" என்று நினைக் கின்றான்.
சண்டகருமன் இருவரையும் உழையரால் கைப்பற்றிக்கொண்டு போதல்
உரை:- எனமனத்து எண்ணி-சண்டகருமன் இவ்வாறு தன்மனத்தே நினைத்து, நெஞ்சத்து இகல்உடை மன்னன் ஏவல்தனை நினைந்து- நெஞ்சிலே மாறுபாட்டையுடைய வேந் தனது கட்டளை நினைவுவரவெண்ணி, தன் உழையவரின்- தன்னொடுபோந்த வீரர்களைக்கொண்டு, அவர்கள் தம்மை வவ்வி-அவர்களை வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான் - சினம் மிகக்கொண்டுள்ள சண்டமாரியின் கோயிலுள்ள திக்கு நோக்கிச் செல்வானாயினான், இளையரும்-இளையோராகிய அபயருசியும் அபயமதியும், இனையது பட்டது என் என்று எண்ணினார்-இது நிகழ்வது என்னோ வென்று திகைப்பாரா யினர் எ-று.
"இளம்பருவம் என்கொக் குழைந்திவண்வந்தது" என நினைத்து இரக்கமுற்ற சண்டமருகன், அரசன் ஏவலை நினைந்து இரக்கமிழந்து அச்சம் மிகுந்து, தானே சென்று பற்றுதற்கு எண்ண மின்றி உழையவரால் பற்றிச்சென்றான் என்பார் "உழையவரின் வவ்வி" என்றும், அவரது மேனி யழகும் வாட்டமும் தன்நெஞ்சின் திண்மையைக் குலைக்குமென்ற கருத்தால் "தேவி கோயில் திசை முகம் அடுத்துச் சென்றான்" என்றும் கூறினார். அரசன் சினமே யன்றித் தேவியின் சினமும் அவன் நெஞ்சில் நின்று நிலவினமை தோன்ற "சினமலிதேவி" யென்றார்போலும். நல்விரதம் பூண் டிருப்பினும் இளமைச் செவ்வி குன்றாமையின், "இளையரும்" என்று இரங்கிக் கூறினார்.
அபயருசி தங்கையான அபயமதி நெஞ்சில் அஞ்சுதலை யறிதல்
உரை:- மதியம்-முழுத்திங்களானது, ஓர் மின்னோடு ஒன்றி-ஒருமின்னலுடன் கூடி, தன் பரிவேடம் தன்னுள்- தன்னுடைய பரிவட்டத்தின் நடுவே, வருவதுபோல்-செல் வதுபோல, வன்சொல்வாய் மறவர் சூழ-கடுஞ்சொற் களையே சொல்லும் வீரர் சூழ்ந்துவரச் செல்லும், ஐயன்- மூத்தோனான அபயருசி, தன் தங்கை நெஞ்சில் அஞ்சுதல்- தன் தங்கையாகிய அபயமதி தன் மனத்தே அஞ்சுவதை யுணர்ந்து, அஞ்சி-அவள்கொண்ட அவ்வச்சத்தாற் பிறக் கும் குற்றத்துக்கு அஞ்சி, அன்பினால்-அன்போடு, அவள் முன்கை-அவளுடைய முன்கையை, தன்கையால் பற்றி- தன்னுடைய கையால் பற்றிக்கொண்டு, அவட்குத்தான் இனைய சொல்வான்-அவளுக்கு இவற்றைச் சொல்லு வானாயினான் எ-று.
வன்சொல்லை யன்றிப்பிற நன்சொற்களைப் பயிலாதவரென் றற்கு "வன்சொல்வாய் மறவர்" என்றார். மறவரெனவே, அவ் வன்சொற் பிறத்தற் கேதுவாகிய நெஞ்சீரமின்மையும் கூறினாராம். கலை நிரம்பியிருத்தல்பற்றி அபயருசிக்கு மதியம் உவமமாயிற்று. மதி யம்-முழுத்திங்கள். அஞ்சுதல் தெளிவிலார் செயலாதலாலும், அது வெளிப்படின் மறவர் துன்புறுத்துவராதலாலும், அபயருசி தன் தங்கையின் அச்சமுணர்ந்து அஞ்சினானென்பார் "அஞ்சி" யென்றும், அச்சத்தைப்போக்கும் கருத்தினனாதலின் "தங்கை முன்கைபற்றித் தானவட்கினைய" சொல்வானானான் என வறிக.
உடம்பிற்கேயன்றி உயிர்க்கு ஏதமில்லையென அபயமதியை அவன் தேற்றல்
உரை:- நங்கை-நங்காய், நெஞ்சில் நீ அஞ்சல்-நின் நெஞ்சின்கண் நீ அஞ்சுவதொழிக. இவண்-இப்போது, நமக்கு அழிவு ஒன்றும் இல்லை-நமக்குத் தீங்கு சிறிதும் இல்லை, (எனினும்) இங்கு-இப்பிறப்பின்கண், நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது-நம் உயிர் நிற்றற்கு இடமாகிய உடம்பிற்கு உளதாகும் அழிவு என்றேனும் வரக்கடவதாகும். இவரின் எய்தின்-அஃது இவரால் எய்துமாயின், அதற்கு-அதன் பொருட்டு, அழுங்கல் என்னை-அஞ்சி வருந்துவது என்னை யோ, மங்கை-மங்கையே, அது-அவ்வுடம்பு, நமது அன்று என்று அன்றோ-நம் உயிரேபோல் நமக்கே உரிய தன்று என்று தெளிந்தன்றோ, யாம் அதனை முன்னே மனத் தினில் விடுத்தது-நாம் அவ்வுடம்பை சுதத்த முனிகளை யடைந்தபோது அவர் தெளிவிக்கக்கேட்டு மனத்தால்அதன் பால் பற்று வையாது விட்டோம், என்றான்-என்று உரைத் தான் எ-று.
நங்கை, மங்கை யென்பன அண்மைவிளி. மங்கை, பருவ மன்று; பெண்பாற்பெயர். முதற்கண் அச்சத்தைப் போக்கவேண்டுதலின், "அஞ்சல்" என்றும், அதற்கு ஏதுவாக "நமக்கு இவண் அழிவொன்றில்லை" என்றும் கூறினான். அழிவெய்து மெனக் கருதி அபயமதி யஞ்சுதலின், அவ்வழிவின் இயல்புணர்த்துவான், அஃது உயிரைப் பற்றாது உடலைப்பற்றி நிற்பது என்பான் "உடம்பிற் கேதம்" என்றும் உடலின் நிலையாமை சுட்டி "எய்துவது" என்றும், அது வருங்கால் யாதானு மொரு வாயில் வேண்டுதலின், இம்மறவரை வாயிலாகக் கொள்ளும் என்பான் "இவரினெய்தின்" என்றும் கூறினான். இவரின் எய்தின் என்றதனால், எய்தாமையினை அவட்குத் தெளிவித்தானாம். உடலழிவிற்கு அழுங்குதல் நன் றன் றென்பான், சுதத்த முனிகள்பால் கேட்டுத் தெளிந்த தெளிவினை நினைவுறுத்தி "அது நமதன்றென்றன்றோ அதனை முன்னே மனத் தினில் விடுத்தது" என்றான்.
அச்சத்தாற்பயன் துன்பமே என்று கூறல்
உரை:- அஞ்சினம் எனினும்-"எய்துவது" எண்ணி அஞ்சினோமாயினும், அடைப-எய்தக்கடவனவாகிய துன் பம், மெய்யே வந்து அடையும்-ஒழியாது வந்து பற்றும், ஆனால், -ஆதலால்; அஞ்சுதலதனின்-அஞ்சுவதால், நமக்கு என்னை பயன்-நமக்கு யாதுபயன், அதுவுமன்றி-அதுவேயு மன்றி, அஞ்சுதல் துன்பம்-அச்சமும் துன்பத்தையே பயக்கும், அல்லதும்-அன்றியும், அதனின் சூழ்ந்த வினைகள்-அதன்பால் காரண காரியமாய்ச் சூழ்ந்திருக்கும் வினைகள், நம்மை நாடொறும் நஞ்சென நலியும்-நம்மை நாளும் விடம்போல வருத்தாநிற்கும் எ-று.
எய்தக்கடவது குறித்து நாம் கொள்ளும் அச்சம் அதனை ஒரு காலும் தடுக்கும் நலமுடைத்தன்றென்றற்கு *"அஞ்சினமெனினும் மெய்யே அடைபவந்தடையும்" என்றான். எய்தக்கடவது நாம் அஞ்சுவதால் சிறிதும் தன்னியல்பில் திரியாது என்பது "மெய்யே" என்பதால் வற்புறுத்தப்பட்டது. தடுக்கும் நலமின்றாதலே யன்றி வருவதன் இயல்பைத் திரித்தலும் கூடாமையின், அச்சம் சிறிதும் பயனுடைத்தன் றென்பது எய்துதலால் "அஞ்சுத லதனின் என்னை பயன் நமக்கு" என்றான். அது, சாத்தனவன் என்றாற் போலச் சுட்டுமாத்திரையாய் நின்றது. அஞ்சுவது பேதைமை யென் றற்கு "அஞ்சுதல் துன்பந்தானே" என்றான். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்"1 என்று சான்றோருன் கூறுப ஏகாரம் தேற்றம். நஞ்சு, தன்னை யுண்டானை நினைவு செயலிழப்பித்துத் துன்புறுத்துவது போல, அச்சமும் துன்புறுத்தலின் "நஞ்சென நலியும்" என்றான். எனவே அச்சத்தைத் தீதெனக் கருதி நீங்குக என்பது குறிப்பு.
விலங்குகதித் துன்பம்
உரை:- அன்னை-அன்னாய், நின்னொடு யானும்-நீயும் யானும், முன்-முற்பிறப்புக்களில், அநேக வாரம்- அநேக காலம், தொல்வினை துரப்ப ஓடி-பழவினை செலுத்தச்சென்று, விலங்கிடைச் சுழன்றபோது-விலங்கு கதியுட்பிறந்து வருந்தியபோது, நல்லுயிர்-நல்ல உயிர் களாகிய அவ்விலங்குகளை, நமர்கள்தாமே நலிந்திட- நம் மவரே கொல்ல, இறந்தது எல்லாம் -இறந்தும் பின்னரும் பிறந்து கொலையுண் டிறந்தும் பட்ட துன்பமெல்லாம், மல்லல் மாதவனின்-வளவிய பெரிய தவத்தையுடைய சுதத்த முனிகளால், யாம்-நாம், மறித்தும் உணர்ந்தனம்- அப்பிறவிகளில் உற்றுணர்ந்ததே யன்றி மீட்டும் கேட்டறிந் தோம், அன்றோ-அல்லவோ, அதனை மறந்து அச்சம் கொள்வது என்னை எ-று.
இருவருயிரும் பிறப்புத்தோறும் இயைந்து உரும் உழுவலன் பால் பிணிப்புண்டு பிறந்திறந்து பிறந்துவருதல் தோன்ற, "நின் னோடியானும்" என்றான். வாரம், காலப் பாகுபாட்டில் ஒன்று; அவை: கணம், ஆவளி, உயிர்ப்ப, தோவம், இலவம், நாளி, மூழ்த்தம், நாள், வாரம், பக்கம், திங்கள், இருது, அயனம், ஆண்டு, பணை, யுகம், பூவம், பல்லம், பவ்வம், அனந்தம் என்பனவாகும்.
இவை யிற்றைப் பதார்த்தசாரம் முதலிய நூல்களுட் காண்க. பல்வகைப் பிறப்புக்கட்கும் ஏது, ஊழ்வினை யாதலின் "தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்றபோது" என்றான்; இவ்வாறே, "ஊழ்வினை துரப்பவோடி யொன்று மூழ்த்தத்தி னுள்ளே, சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து, வீழ்வன போ வீழ்ந்து"1 என்று தேவரும் கூறுதல் காண்க. விலங்கு கதியுட் பிறந்த உயிர்கள் படும் துன்பம் "வேள்விவாய்க் கண் படுத்தும் வெவ்வினைசெய் யாடவர்கள், வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல், கோளிமிழ்ப்பு நீள்வலைவாயக் கண்படுத் தும் இன்னணமே, நாளுலப்பித் திட்டார் நமரலா தாரெல்லாம்"2 எனச் சான்றோர் கூறுப. இவ்வாறே இந்நூலுள்ளும் பிறநூல்களிலும் விலங்குகட்கு மக்கள் செயயுந் தீங்குகள் விரியக் கூறப்படுகின்றன; அவற்றை யாங்காங்கே கண்டு கொள்க.
இறப்பெல்லாம் பிறப்பிற்கே எனல்
உரை:- வினையின்-வினையினால், கதியொரு நான்கினுள் ளும், நால்வகைக் கதிகளிலும், கறங்கு என ஓடி-காற்றாடி போலச் சுழன்று, பிறந்த நாம்-பலபிறப்பும் பிறந்த நாம், பெற்ற பெற்ற பிறவிகள்-மிகப்பலவாகப் பெற்ற பிறப்புக்கள், பேசல் ஆகா-சொல்ல முடியாதனவாகும், இறந் தன இறந்து போக-கழிந்தவை கழிய, எய்துவது எய்தி- எய்தக்கடவன எய்தப்பெற்று, பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம்-பின்னும் பிறப்பதற்கே இறந்த இறப்பெல்லா மாயினமையின், இதுவும் அவ்வியல்பிற்றேயாம்-இப் போது இறக்கும் இறப்பும் அத்தன்மைத்தேயாகும் எ-று.
நால்வகைக்கதிகளாவன, நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு. பிறப்புக்கு வினை யேதுவாதலை, "அவாச்சார்ந்து பற்றாகும் பற்றினால் வினைமுதிர்வாம். தவாதவிவ் வினைமுதிர்வாற் பிறப்பாகும் பிறப்பினால், குவாவிய பிணிமூப்புச் சாக்காடின் கூட்ட மாம், உபாயவித் தடுமாற்ற மொழிவின்றி யுருளுமே"1 என்பதனால் அறிக. இப் பிறப்பிறப்புக்களும் கறங்கனெச் சுழலுதற்கு, "உபாயவித் தடுமாற்றம் ஒழிவின்றி யுருளுமே"1 என்பதே சான்று பகர்கிறது. அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. பிறவிகள் மிகப்பல வென்றற்குப் "பேசலாகா" என்றார்; பிறவிகளில் எய்தும் கன்மப் பயன் வகையாற் பலவாயினும், பயன் என்ற விடத்துத் தொகை யாய் ஒருமைப்படுதலின், "எய்துவ" தெனப்பட்டது. இறந்தது, தொழின்மாத்திரையாய் நின்றது. இப்போது எய்தும் இறப்பும் மீட்டும் பிறத்தற்கே என்பான் "அவ்வியல்பிற்றே" என்றான். ஏகாரம், தேற்றம். இதுவும் என்புழி உம்மை, இறந்தது தழீஇயற்று.
----------
1. நீல 575 மேற்கோள் (பாடம்)* செய்யத்தாமே
அறம்புணர்ந்தோர் உடம்புற்றுப் பெறவார் என்று கூறல்
உரை:- தோகாய்-மயில்போலும் தங்கையே, பிறந்த நாம் பிறவிதோறும். மக்களிற் பிறந்த நாம் பிறப்புத்தோறும், பெறும் உடம்பவைகள்-பெறுகின்ற உடம்புகள். பேணாத் துறந்து-பற்றுவையாது துறந்து, அறம் புணரின்-பிறவா மைக்குரிய அறநெறியை மேற்கொள்வோமாயின், நம்மைத் தொடர்ந்தன வல்ல-நம்மைத்தொடராது ஒழியும், இது சிறந்ததை என்று எண்ணி-இந்நெறெயே சிறந்ததாம் என்று துணிந்து, செம்மை செய்யார்-அறத்தைச் செய்யாராய், இறந்த காலத்து-முற்காலத்தே, எண்ணிறந்தனர்கள்- எண்ணில்லாத மக்கள், எல்லாம்-அனைவரும், இறந்தனர்- பலகாலும் பிறந்திடற்கே இறந்தார்கள் காண் எ-று.
தோகை, மயில்; காதல்பற்றி உயர்திணைக்கண் வந்தது. இவ் வாறு பிறப்பது குறித்து முன்னைப்பிறவியில் இறந்தோம் என்பதை நினைப்பிக்கும் குறிப்பால் "பிறந்த நாம்" என்றான். உடம்பவை: அவை, சுட்டு. உடம்பை நமதென்னாது கழித்து அறம்புணர்தல் வேண்டுமென்றற்கு "பேணாத் துறந்து அறம்புணரின்" என்றான். பேணாமைக்கு ஏது துறவுள்ளமாதலின், பேணாமையும் துறவும் உடன் கூறினான். புணரின் எனவே, புணர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டதாம். அறம்புணர்ந்தார்க்குப் பிறவியில்லை யென் றற்கு உடம்பின்மேல் வைத்து, "உடம்பவைகள் அறம்புணரின் தொடர்ந்தனவல்ல" என்றான்.; பிறவியாவது உடம்பெடுத்தலாத லின். உடம்பின்மேல் பற்றுவையின், அதுகாரணமாக வினைபலவும் வந்து கூடுமேயன்றி, அறம் கைகூடாதென்பது கருத்து. அறத்தின் பயன் பிறவிகெடுதல்; இஃது உடனிகழ்ச்சியாதலின் "தொடர்ந்தன வல்ல" என இறந்த காலத்தாற் கூறினான். சிறந்ததை:ஐகாரம், சாரியை. பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. செம்மை, அறம். "செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்"1 என்புழிப்போல. தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. ஏகாரம், அசை; தேற்றமுமாம். உடம்பைத்துறந்து அறம்புணர்ந்தார் பெறும் நலன் கூறுவார், துற வாது அறம்புரியாதார் செயலால் விளக்கி "இறந்த காலத் தெண் ணிறந்தனர்களெல்லாம்" என்றார். இது "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று"2 என்ற திருவள்ளுவப் பயனை உட்கொண்டிருத்தல் காண்க.
நரககதியிற் பெற்ற உடம்பின் பெருமையும் அழிவும் கூறல்
உரை:- உழைவிழி-மான்போலும் கண்களையுடைய தங்கையே, முழம் ஒரு மூன்றில் தொட்டு-உடம்பின் உயரம் ஒரு மூன்று முழம் தொடங்கி, மூரிவெஞ்சிலைகள் ஐஞ்ஞூறு- வலிய வெவ்விய வில்லென்னும் அளவு ஐஞ்ஞூறு ஈறாக, எழு முறை-ஏழ்நரகத்தும் ஏழுமுறை. மேன்மேல்-ஒவ்வொரு நரகத்து ஒவ்வொரு புரையிலிருந்தும் மேன்மேலாக, பெருகி- ஒன்றினொன்று இரட்டித்துப் பெருகுவதால், எய்திய உருவ மெல்லாம்-உண்டாகிய உடம்புகளெல்லாம், அழலினுள் மூழ்கியன்ன- நெருப்பில் மூழ்கினாற்போன்ற, அருநவை நரகம் தம்முள்-பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும் நரகங்களில், நம்மோடு ஒன்றி-நம்முயிர் இருத்தற்கு இடனா யிருந்து, ஒருவின-ஒழிந்தன, உணரலாமோ-அவை இத் துணையவென்று உணர முடியுமோ, முடியாது எ-று.
நரவகை யேழ் என்றும், ஒவ்வொன்றிலும் முறையே பதின் மூன்றும், பதினொன்றும், ஒன்பதும், ஏழும், ஐந்தும், மூன்றும், ஒன்றுமாகப் புரைகள் உண்டென்றும், இவற்றுள் பதின்மூன்று புரையினையுடைத்தாகிய முதல் நரகம் எல்லாவற்றிற்கும் கீழாம் நரகமென்றும், அதன்மேல் ஏனைய படிப்படியாக வுளவென்றும் மேரு மந்தரம் முதலிய நூல்கள் கூறும். கீழாம் நரகத்துப் பதின்மூன்றாம் புரையிலுள்ளோர் மூன்று முழ வுயரமுள்ள வுடம்பினராய்த் தொடங்கி ஏழே முக்காலே வீசம் வில்லளவு உயர்ந்து, பின்பு அதற்குமேற்பட்ட புரையையடைந்து இரட்டித்த உயரம் பெற்று, இவ்வாறே புரை புரையாக ஏழு நரகத்தும் எழுமுறை , ஐஞ்ஞூறு வில்லுயரம் எய்துங் காறும் உழலுவரென்றும் கூறுப. "முழுமூன் றுயர்வாம் முதலாம் புரையின், முடிமூன்று வில்லேழ் விரலா றுளகீழ், எழுவாயி தைஞ் ஞூறு வில்லெய் தளவும், வழுவா திறுதொறு மிரட்டிய தாம்"1 என வருதல் காண்க. சிலையென்றதற் கேற்ப, "மூரிவெஞ் சிலை" என்றான்; "குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்" என்றாற்போல. பிறவருமிடத்தும் இவ்வாறே கூறிக்கொள்க. இந்நரகத்துள் பொறுத் தற்கரிய வெப்பமுண்மையின், "அழலினுள் மூழ்கியன்ன யருநவை நரகம்" என்றார். "மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே, நீரென வுருக்கும் சீத வெப்பங்கள் நின்ற"2 என்ப. இந்நரகத்துப் பட்டாரைத் தேவர்க்கும் மீட்டல் அரிதாதலின், அருநவை யென்றா ரென்றுமாம்; "வினையிலிரண் டாநரகில் வீழ்ந்த வுனை மீட்டல், முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்"3 என்றல் காண்க. பிறவிதோறும் எடுத்த வுடம்புகளும், அவற்றால் செய்துகொண்ட தீவினைகளும், அவற்றிற்காக நரகத்தில் வீழ்ந்து புரை புரைதோறும் எடுத்த வுடம்புகளும் எண்ணுக்கு அடங்கா மையின் "உணரலாமோ" என்றான்.
அக்கதி நீங்கி விலங்குடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
உரை:- அணு-எண்ணிறந்தனவாகிய அணுக்கள், அங் குலி யயங்கம் பாகம்-ஓர் அங்குலத்தின் கணிக்கமுடியாத ஒருபாகமாக, முறை பெருகி-குணங்களால் கட்டுண்டல் மூவகையாற்றலொடு நீங்காமை முதலியவற்றால் பெருகி, மேன்மேல் பொங்கிய-படிப்படியாக உயர்ந்த, ஓர் ஐஞ் ஞூறு புகைபெறும்-ஓர் ஐஞ்ஞூறு யோசனை யளவினதாகிய, முடையுடம்பு-முடைநாறும் உடம்பு, வெங்கனல் வினையின்- வெவ்விய நெருப்புப்போல வெதுப்பும் வினையினால், மேல் நாள்-முற்பிறவிகளில், விலங்கிடைப் புக்கு வீழ்ந்து-விலங்கு கதிக்குட் சென்று பல்வகை விலங்குடம்பாய்த் தோன்றி, நங்களை வந்துகூடி-நம்மை வந்து கூடியிருந்து, நடந்தன அனந்தம் அன்றோ-அழிந்தவை அளவில்லாதனவாகும் எ-று.
அணுக்கள் அங்குலியயங்கம்பாகம் முறையே பெருகுந்திறத்தை, "அனந்தமா மணுக்கள் கூடி யங்குலி யயங்கம் பாகிற், குணங்களாற் செறியக் கட்டிக் குணங்களோ டாற்றல் மூன்றில்,"1 தணந்திடாது பெருகு மென்ப. புகை-யோசனை. ஏழாம் நரகத்திலுள்ள நாரகன், ஐஞ்ஞூறு புகை யுயரமுற்ற உடம்புபெற்று உலந்த பின் விலங்குகதியுட் பிறப்பனாதலின், "ஓரைஞ்ஞூறு புகைபெறும் உடம்பு" என்றார். "எழுதா நரகத்து இயல்பாய வைஞ்ஞூறு, ஒழி யாது விழுந்தெழு மோசனையே"2 என்றார் பிறரும் எனவறிக. வினைகனல்போல வெதுப்பு மென்பதைத் திருவள்ளுவரும் "தீயவை தீயினு மஞ்சப் படும்"3 என்றல் காண்க. இதனால் நரககதிக் கண் பிறந்துழன்ற காலத்து வந்த உடம்பனைத்தும் ஐஞ்ஞூறு யோசனை உயரமுடையவாகியும் முடிவில் அழிந்தன என்றும், அதன் பின் விலங்குகதியுட்டோன்றிய காலத்தெய்திய விலங்குடம் புகளும் அவ்வாறே அழிந்தன என்றும் கூறி உடம்பின் நிலையாமையை வற்புறுத்தி, அபயருசி அபயமதியைத் தேற்றுவானாயினன் என்க.
மக்களுடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
உரை:- ஓரின்-ஆராயுமிடத்து, ஓர் முழங்கை தன்மேல்- ஒரு முழங்கை உயரத்திலிருந்து மேல்நோக்கி, ஓரொரு பதேசம் ஏறி-ஒவ்வொரு பிரதேசமாக உயர்ந்து, மூரிவெஞ் சிலைகள் மூவீராயிரம் முற்ற உற்ற-பெரிய வெவ்விய வில்லென்னுமளவு ஆறாயிரங்காறும் உயர்ந்து சென்று பின் படிப்படியாகக் குறைந்து முழவுயரமே பொருந்திய, பாரின் மேல் மனிதர் யாக்கை-நிலத்தின்மேல் வாழும் மக்களு டைய உடம்புகளுள், பண்டு -முற்பிறவியில், நாம் கொண்டு விட்ட-நாம் எடுத்துக் கழித்த உடம்புகளின் அளவுக்கு, வாரிவாய் மணலும்-கடலிடத்து நுண் மணலின் தொகை யும், ஆற்றாவகையின் அல்லவோ-ஈடாகாவாம் எ-று.
உச்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் இருவகைக் காலத்தும் மக்களுடம்பு ஒரு முழ உயரத்திலிருந்து பெருகிப் பெருகி ஆறாயிரம் வில்லளவு உயர்ந்து பின்னர் அதனினின்றும் குறுகிக் குறுகி ஒருமுழ வுயரத்தை யடையு மென்று சைன நூல்கள் கூறும். முன்னைப்பிற வியில் எடுத்த உடம்புகட்கு வாரிவாய் மணலுமாற்றா என்றாற்போலத் திருத்தக்கதேவரும் "தொல்லைநம் பிறவி யெண்ணில் தொடுகடல் மணலு மாற்றா வெல்லைய"1 என்றார். பதேசம், பிரதே சம் என்பதன் திரிபு. "உயிர்ப்பதேசம்"2 என்புழிப்போல.
தேவருடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
உரை:- இருமுழமாதியாக-இரண்டு முழம் முதலாக, வகையின் ஓங்கி-மனிதர் பவணர் என்ற கூட்டத்துப் பல வேறு வகைகட் கேற்ப உயர்ந்து, வரு-வருகிற, சிலை இருபத்தைந்தின் வந்துறும்-இருபத்தைந்து வில்லளவாக உயர்ந்து வரும், அங்கமெல்லாம்-உடம்பெல்லாம், திருமலி தவத்தின் சென்று-செல்வமிக்க தவங்காரணமாக எடுத்து, தேவர்தம் உலகிற் பெற்றது-தேவருலகிற் சென்று பெற்ற தாகிய உடம்ப, ஒருவரால் உரைக்லாமோ-ஒருவரால் அளவிட்டுரைக்க முடியாது. உலந்தன அனந்தம்-அழிந்த தேவவுடம்புகளும் அளவில்லன வாகும் எ-று.
மனிதர், ஆரியர் மிலேச்சர் என்னும் இருவகையர், இவருள் ஆரியராகிய நன்மக்கள், உத்தமபூமி, மத்தியபூமி, சகன்னியபூமி யென்ற மூன்றிடத்தும் வாழ்பவராய், தீக்காலத்து இருமுழ வுடம்பு பெற்று உயர்வர். பவணராவார்: அசுரர், நாகர், பொன்னர், தீவர், திசையர், தீயர், உதகர், வாயுவர், மின்னவர், மேகர் எனப் பலராய் மேகரிற் றொடங்கி, அசுரரீறாக இருபத்தைந்து வில்லுயர்ந்த உடம்ப பெறுவர். இவற்றின் விரிவை மேருமந்தர புராணத்துட்1 காண்க. நன்மக்களாய்ப் பிறந்து பெற்ற உடம்புகளையே எடுத்தோது தலின், அவர்கட்குரிய "இருமுழமாதியாக" என்று கிளந்தோ தினான். இவ்வுயர்ச்சிக்கும் ஏது தவமாதலின், "திருமலி தவத்திற் சென்று" என்றான். இவ்வுடம்பெடுத்துக் கழித் துயர்ந்தவர் தேவரு டம்பு பெறுபவென்றற்கு, "தேவர்தம் உலகில் பெற்றது" என்றார். பெற்றது உரைக்கலாமோ என இயைக்க. ஓ, எதிர்மறை. உரைத் தற் காகாமைக் கேது, இஃதென்பான் "உலந்தன அனந்த" மென் றான். "திருமலி...அனந்தம்" என்பது, "பவங்க டோறும், மரு விநா மகிழ்ந்து சென்ற பிறப்பு மற்றதனுக் கப்பால், ஒருவரா லுரைக்கலாகா வுலந்தன பிறவி மேனாள்"1 என்ற மேருமந்தர புராணச் செய்யுளடியை நினைப்பித்தல் காண்க.
நரககதி முதல் தேவகதி யீறாகப் பெற்ற உடம்புகளின் அழிவைத் தொகுத்துக் கூறல்
உரை:- இது துன்பகாரணம் என்று-இவ்வுடம்பு துன் பத்துக்கு ஏதுவாம் என்று கருதி, துடக்கு அறுக எனவும் அதன் தொடர்ச்சி யில்லாதொழிக என்று முயற்சி செய் தொதுக்கப்படும், துஞ்சா-அழியாத, அன்புறா-எவராலும் விரும்பப்படாத, நரகர் யாக்கை அவைகளும்-நரகருடைய உடம்புகளும், அமரர் கற்பத்து-தேவருலகங்களில், இது இன்பகாரணம் என்று-இஃது இன்பத்துக்குக் காரணமா மென்றறிந்து, எம்முடன் இயல்க என்று-எம்மை விடாது தொடர்வனவாக என்று விரும்பி, அன்பு செய்தனகள் தாமும்- அன்பு செய்து ஈட்டப்படும் உடம்புகளும், அழியும் நாள்-தத்தம் எல்லை முடிவில், அழியும்-அழிந் தொழியும் எ-று.
எழுவகை நரகத்துப் பல்வகைப் புரைகளிலும் நரகர் எத் துணையோ துன்பத்துக்குட்பட்டு வருந்தியபோதும் இறத்தல் இல ராதலின் "துஞ்சா" என்றும், துஞ்சாதாயினும் துன்பத்துக் கேது வாமெனத் தெளிந்தமை தோன்ற, "அன்புறா நரகர் யாக்கை யவைகளும்" என்றும் கூறினான்; "எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. தேவர் பெறும் உடம்பு பேரழகும் பெருமணமும் பேரின்பமும் உடையவாகலின் அவற்றை யனைவரும் விரும்புதல் பற்றி "அன்புசெய்தனகள்தாமும்" என்றான். தேவ ராயவரும் முடிவில் இறந்துபடுத லுண்மையின் இதனைக் கூறினான் என்க.
இந்திரருடம்பும் அழிவதே யெனல்
உரை:- உடன்வந்து வணங்கும் வானோர்-திரளாகக்கூடி வந்து வணங்கும் தேவர்களின், மணிபுனை-மணிகளால் இயன்ற, மகுட கோடி-முடிகளின் தொகை, தம்திருவடிகள் ஏந்தும்-தம் திருவடிகளைச் சுமக்கும், தமனிய பீடமாக- பொற் பீடமாக அமைய, இந்திரவிபவம் பெற்ற-இந்திர போகத்தைப் பெற்றுள்ள, இமையவர் இறைவரேனும்- தேவர்க்கிறைவராயினும், தம் திருவுருவம்-தங்களுடைய திருவும் உருவும், பொன்றித் தளர்ந்தனர்-தளர்ந்து அழிந் தவர், அனந்தம்-எண்ணில்லாதவராகும் எ-று.
வானோர், இந்திரகற்பத்து வாழும் தேவர்கள், தேவராகிய போதும் பிற தேவர்களால் ஒறுக்கப்படுதலும், பிறரை வணங்கலும் பிறர்க்குப் பணிசெய்தலும் அவர்கட்கு இயல்பாதலின் "வணங்கும் வானோர்" என்றும் "மகுட கோடி தமனிய பீடமாக" என்றும் கூறினார். "தேவரே தாமுமாகித் தேவரால் தெழிக்கப்பட்டும், ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டும் அணிகமாப் பணிகள் செய்தும், நோவது"1 என்று தேவரும் கூறினர். இந்திரவிபவம், இந்திர போகம், "இந்திர விபவ மேனும் நின்றதொன் றியார்க்கு மில்லை"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. திருவுருவம், உம்மைத் தொகை. திருவை உருவத்துக்கு அடையாக்கினுமமையும். "மகுடகோடி திருவடிகளேந்துந் தமனிய பீடமாக" என்றது, திருவடிவில் முடி வைத்து வணங்க என்றவாறு.
மண்ணாளும் வேந்தர் பெற்ற உடம்பும் அழிவதே எனல்
உரை:- மக்களிற் பிறவியுள்ளும்-மக்களாய்ப் பிறந்தோ ருள்ளும், மன்னர்தம் மன்னராகி-அரசர்க்கரசராய், திக்கு எலாம் அடிப்படுத்தும்-எட்டுத் திக்கிலுமுள்ள வேந்தரை வென்று அடிபணியவைக்கும், திகிரியஞ் செல்வரேனும்- ஆணை செலுத்தும் திருவுடைய பேரரசராயினும், அக்குலத்து உடம்பு தோன்றி-அவ்வரசர் குலத்திற் பிறந்து, அன்று தொட்டு இன்றுகாறும்-அன்றுமுதல் இன்றுவரை, ஒக்க நின்றார்கள்-ஒருதன்மையாக அழிவின்றி இருந்தவர்கள். ஒரு வரும் இல்லை-ஒருவரேனும் இல்லையாயினர், காண் எ-று.
பிறவி, ஆகுபெயர். இன், அல்வழிக்கண் வந்த சாரியை. திகிரி, அரசியலாணை, "திகிரியஞ்செல்வரேனும்" என்றதனால், அத்தகைய செல்வராதல் மிகவரிதென்பது பெற்றாம். அக்குலத்து என்புழிச் சுட்டு அவ்வருமை குறித்து நின்றது. உடம்பு தோன்றி என்றது உடம்பொடு பிறந்து என்றவாறு. அரசர்க் குரிய உருவும் திருவுமமைந்த உடம்புபெறல் அரிது "உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலு மரிதே"1 என்றார் தேவரு மென வறிக. ஒக்கநின்றார், ஒருதன்மையாய் உடம்பழியாது நிலைத்து நின்றவர். ஒருவரும், உம்மை, முற்று. இச்செய்யுளை, "மலைமிசை மதியி னீழல் பருதிபோல் மத்தயானைத், தலைமிசைக் குடையி னீழல் தரணியை முழுது மாண்டோர், நிலமிசை யின்று *காறு நின்றவ ரில்லை"2 என்பதனோடு ஒப்புநோக்குக.
உடம் பெடுத்தலும் விடுத்தலும் இதுபோலும் எனல்
உரை:- நங்கை-நங்கையே, முன் அசைஇயது ஆடை இட்டு-முன்னே உடுத்துப் பழையதாகிய ஆடையைக் கழித் துவிடு, ஓர் அம்துகில் அசைத்தல்-ஓர் அழகிய புத்தாடை யணிவதும், முன்னது மாடம்-முன்னே வாழ்ந்ததாகிய பெருமனை, விடுத்து- நெடிதுநாள் கழிந்தமையின் நிலை தளர்ந்ததென்று அதனின் நீங்கி, வளமனை புகுதல்-வளவிய புதுமனையொன்றின் கண்ணே சென்று வாழ்வதும், நாடின்- ஆராயுமிடத்து, நமது இறப்பொடு பிறப்பும்-நம்முடைய இறப்பும் பிறப்பும், எவ்வகையும்-எல்லாவற்றாலும் ஒத்தன வாம், அஃது இனி பாடுவதுஎன்-அதனை இனிப்பாட்டாற்பாடு வதால் உளதாகும் பயன் யாது? ஒன்றுமில்லை. பரிவு ஒழிந் திடுக-அவ்விறப்புக் குறித்து வருந்துதலை யொழிவாயாக, என்றான்-என்று அபயருசி கூறினான் எ-று.
முன்னுடுத்த ஆடைகழித்துப் புத்தாடை யுடுத்தலும், பழைய மனையின் நீங்கிப் புதிய வளமனை புகுதலும் இறந்து பிறப்பார். ஒரு கதிக்கண்ணே ஓருடம்பு நீங்கிப் பிறிதோர் உடம்பு பெறு தற்கும், ஒரு கதிக்குரிய உடம்பை விட்டுப் பிறிதோரு கதிக்குரிய உடம்பு பெறுதற்கும் முறையே உவமமாம். ஒன்றோ, எண்ணிடைச் சொல். ஒத்தன என்பது அவாய்நிலையான் வந்தது. அஃதே என்பதை இறப்புக்கும் பிறப்புக்கும் தனித்தனியே கூட்டி முடிப்பினு மமையும். ஆடையுவமத்தை இறப்புக்கும், மனையுவமை பிறப்புக்கும் கோடலுமொன்று.
-----------
அபயமதி தன்பால் அச்சமின்மை கூறல்
உரை:- அண்ணல்-அண்ணலே, நீ அருளிற்று எல்லாம்- நீ உரைத்தவை யாவும், அருவருப்புடைய மெய்யின்-அரு வருப்பை உண்டுபண்ணுகின்ற தேகத்தை, நமது என்று- நமக்கே யுரிய பொருள் என்று கருதி, நண்ணிய உள்ளத் தவர்களுக்கு-அதன்மேல் மிக்க பற்றுவைத்திருக்கின்ற உ்ள்ளத்தை யுடையோர்க்கு, நாடின்-ஆராயின், உறுதி- உறுதிப்பொருளாகும், விண்ணின் மேல் இன்பம் அல்லால்- தேவருலகத்துக்கும் மேற்பட்ட உறச்சிக்கண்ணுள்ள கேவலப் பேரின்பமன்றி, விழை பயன்-இந்நிலவுலகத்தே புலன் களால் விரும்பப்படும் போகப்பொருள்களை, வெறுத்து நின்ற நங்கட்கெல்லாம்-வெறுத்துத் துறவு பூண்டிருக்கும் நமக்கெல்லாம், கண்ணனாய்-கண்போன்றவனே, கட்டுரை என்னை- வகுத்தும் விரித்தும் உரைப்பது ஏனோ, என்றாள்- என்று அபயமதி கூறினாள் எ-று.
என்பும் நரம்பும் குருதியும் தோலும் அழுக்கும் புழுக்களும் சேரவிருக்கும் யாக்கையின் இயல்பைப் புறமறியாப் பார்த்து வெறுத் தொதுக்கினமை தோன்ற, "அருவருப்புடைய மெய்யின்" என்றாள். பிறரும், "என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப், புன்புறந் தோலின் மூடி யழுக்கொடு புழுக்கள் சோரும், ஒன்பது வாயிற் றாய வூன்பயில் குரம்பை"1 என்றார். இதனை இவ்வாறு உணராதார் இவ்வுடம்பே தாமெனக் கருதி யுழல்வர் என்றற்கு, "நமதென்று நண்ணிய உள்ளத்தவர்கள்" என்றாள். இவ்வுள்ளம் அறிவின் சிறுமை காரணமாகப் பிறப்பதாகலின், அவ் வுள்ள முடையார்க்கு அபயருசியின் சொற்கள் மிக்க பயன் தருவன என்றதைத் தெளிந்து, "உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடின்" என்றாள். "ஊன்பயில் குரம்பை தன்மேல் அன்பறா மாந்தர் கண்டாய் அறிவினாற் சிறிய நீரார்"2 என்று சான்றோரும் கூறுதல் காண்க. மூவுலகத்துக்கும் மேற்பட்டதாகிய உச்சியிடத்தே இருந்து பேரின்பம் நுகர்தலை கேவல முத்தியின்பம் என்பது "முனிவரு முலக மூன்று மிறைஞ்சமூ வுலகி னுச்சி, கனைகழ லரச நிற்றல் கைவல மாகுங் கண்டாய்"3 என்பதனா லறிக. கட்டுரை, கட்டுரைத்தல்; அஃதாவது கேட்பார் மனங்கொள்ளுமாறு வகுத்தும் விரித்தும் தெளித்துரைத்தல். அபயருசி, "நங்கை நீயஞ்சல்" (32) என்பது முதல் "ஆடை முன் னசைஇயது" (44) என்னும் செய்யுள்வரைப் பல்வகைக் கதிர்களிலும் பிறந்திறந்து வந்த வரலாற்றை எடுத்தோதினமையின், "கட்டுரை யென்னை" யென்றாள்.
உடம்பை விடுதற்கண் தன்மனத்தே அச்சமின்மை கூறல்
உரை:- அருவினை விளையுளாய - போக்குதற்கரிய வினை கள் தோன்றுதற் கிடமாகிய, அருந்துயர்ப் பிறவிதோறும் - பொறுத்தற் கரிய துனபத்தைத் தருகின்ற பிறப்புக்கள் தோறும், வெருவிய மனத்து நம்மை - அவற்றிற்கு அஞ்சி மனம் முதலியவற்றைக் காத்தொழுகிய நம்மை, வீடு இல விளைந்தவாறும் - விடாது தோன்றித் துன்புறுத்திய வகை யும், திருவுடையடிகள் தந்த - கேவல ஞானமாகிய செல் வத்தையுடைய சுதத்த முனிகள் நமக்கு உரைத்தருளிய, திருவறப்பயனும்-சினதருமப்பயன்களும், தேறி-தெளிய வுணர்ந்து, வெருவிதா-பயனற்றதாகக் கருதி, விடுத்த வாழ்க்கை-பற்றுவையாதுவிட்ட இவ்வுடம்பின, விடு வதற்கு- இப்போது விட்டுவிடுதற்கு, அஞ்சல் உண்டோ. அஞ்சுவது ஆகாது எ-று.
வினையானது தன்னைச் செய்த உயிரின்கட் கிடந்து அதுபுக் குழிப் புகுவதன்றி, உடம்பொடு நின்று, அஃதழியுங்கால் அழிவதன்றாகலின், "அருவினை" யென்றும், உயிர் உடம்பொடு கூடி யுலவுங் காலத்தே அவ்வினை யீட்டப்படுதலின், உடம்பை அதற்கு "விளையுள்" என்றும், அவ்வினைத் தொடர்பால் கதி தோறும் பெருந்துயர் எய்துதலின் "அருந்துயிர்ப்பிறவி" யென்றும் கூறினாள். "பிறந்துநாம் கதிகள் நான்கிற் பெருந்துய ருழக்கும் போதும் துறந்திடா வினைகள்"1 என்றும் "தீக்கதிநான்குற்சார்ந்து செல்வுழித் துணையுமில்லை"2 என்றும் பிறரும் கூறுதல் காண்க. வினைவிளைவுக் கஞ்சித் தம்மைக் காத்தொழுகிய போழ்தும் செய் தீட்டிய வினைப்பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின், பல பிறவி களும் விளைந்தன என்பாள் "வீடில விளந்தவாறும்" என்றாள். வீடு-விகாரம். ஸ்ரீசினதருமத்தை, திருவறம் என்ப; "அரியது திருவறமல்லதில்லை"3 என்றார் பிறரும். வெறுவிதா எனற்பாலது எதுகையின்பங்குறித்து "வெருவிதா" என வந்தது. மனத்தால் வெறுத்தொழித்த வொன்றினை மெய்யே விடுதற்கு அஞ்சுவதில்லை யாதலின், "விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சலுண்டோ" என்றாள். வாழ்க்கை, ஆகுபெயரால் உடம்பிற் காயிற்று. "வாழ்த லுயிர்கன்னள் ஆயிழை"4 எனவரும் திருவள்ளுவப் பயனும் இச்சொற்குறிப்பைத் தெளிவித்தல் காண்க. ஓகாரம், எதிர்மறை.
அபயருசி கூறியதற்கு அபயமதி அமைதி காட்டல்
உரை:- பெண்ணுயிர்-பெண்ணுடம்பெடுத்த உயிர்கள், அளிய-அளிக்கத்தக்கன, பெருந்திறல் அறிவும்-பெருமை சிறக்கும் நுண்ணறிவும், பேராச் சிந்தையின் திண்மையும் கலங்காத மன வன்மையும், உடைய வல்ல-உடையவை யல்ல, என்பது-என்று சான்றோர் கூறுவதை, எண்ணி- கருதிக்கொண்டு, நீ அருளிச்செய்தாய்-நீ இவற்றை உரைத்தாய்போலும், அன்றி-அல்லதூஉம், நல்லறத்தில்- சினேந்திரதருமத்தில், கண்ணிய மனத்தர்- கருத்தூன்றித் தெளிந்த மனமுடையவர்கள், இம்மை-இப்பிறவியின்கண், காதல் உடையரோ-விருப்பத்தைக் கொள்ளார் எ-று.
செய்த வினைக்கேற்ப உயிர்கள் ஆணாகப்பிறந்தன பெண்ணாகவும் பெண் ஆணாகவும் பிறக்குமாதலின், பெண்ணென்னாது வேற்றுமை நயந் தோன்ற "பெண்ணுயிர்" என்றாள். "வினையெனுங் குயவ னம்மை வேற்றுரு வியற்றல் கண்டாய், அனகனா முருவந் தன்னைப் பெண்ணுரு வாக்கி யாங்கே, மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி, நினைவினால் முடித்து நின்றார்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும் பேதமைத்தே"2 என்றதுகொண்டு, "பெருந்திறல் அறிவும்" என்றும், "பெண்ணெனப்படுவ கேண்மோ பீடில பிறப்புமன்னோ, உண்ணிறை யுடையவல்ல வொராயிர மனத்தவாகும்"3 என்றும், "மகளிர் மனம்போல வேறுபடும்"4 என்றும் சான்றோர் உரைப்பதால், "பேராத்திண்மையும் உடையவல்ல சிந்தையின் என்பது" என்றும் உரைத்தாள். மேலே, "கட்டுரையென்னை" (45) என்றவள், அக் கட்டுரைக்கு அமைதியும் உடன் கூறலுற்று, தன்னைப் பிறர்போல கூறும் குறிப்பில்வைத்துப் பெண்ணுயிரின் இயல்பை எடுத்துரைக் கின்றாள். மூன்றுலகத்தும் துன்புறும் உயிர்களை, "ஈன்றதாய் போல ஓம்பி இன்பத்துள் இருத்தி"5 அருகந்த பதவியையும் சித்த பதவியையும் கொடுத்து மகிழ்வித்தலின், இம்மைக்கண் காத லுண்டாகாமையின், "நல்லறத்திற் காட்சி கண்ணிய மனத்தர்; இம்மைக் காதலு முடைய ரோதாம்" என்றாள்.
அபயருசி கூறியதைப் பாராட்டித் தான் தனக்கு அவனை இறைவனாகக் கொள்வதுரைத்தல்
உரை:- ஐய,-ஐயனே, இவண்-இவ்விடத்து, இன்று- இப்போது, என் கண் அருளிய பொருள் இது எல்லாம்-என் பால் உரைத்தருளிய உறுதியுரைகளெல்லாம், நன்று என நயந்துகொண்டேன்,-நன்றென்று விரும்பியேற்று மனத்துட் கொண்டேன்; நடுக்கமும் அடுத்தது இல்லை-அச்சத்தால் உளதாகும் மனநடுக்கமும் என்பால் இல்லாது கெட்டது, என்தனக்கு இறைவன் நீயே என-அடியேனுக்கு ஆசிரிய னும் நீயே யாவாய் என்று,இருகையும் கூப்பி-இருகையும் எடுத்துத் தொழுது, இன்று-இப்போது, யான்செய்வது யாது தெருள அருளுக-யான் செய்யக்கடவது யாதோ அதனைத் தெளிய உரைத்தருளுவாயாக, என்றாள்-என்று வேண்டினாள் எ-று.
பொருளிது எல்லாம், ஒருமை பன்மை மயக்கம். கொலைபுரி தற்குச் சண்டகருமன் இவர்கலளைக் கொண்டேகுவதை அறிந்திருத்த லின், அச்சமும் எய்திற்றில்லை யென்கின்றாள். அதற்கு ஏது, அச்சம் நிகழ்தற்குரிய மனத்தின்கண் அறப்பொருள் நிறைந்து தெளிவு செய்தலைக் குறிப்பிப்பாள் "அருளிய பொருளிதெல்லாம் நன்றென நயந்து கொண்டேன்" என்றாள். தெளிவின் பயன் தெளிவித்தாரை வியந்து வழிபடுவதாகலின், "இறைவன் நீயே" என்றும் "இருகையும் கூப்பி"யும், "யாது செய்வது அருளுக தெருள" என்றும் கூறினாள். தெருள என எடுத்தோதியது, கொலைவினை நிகழுமிடத்து மீட்டும் மருட்சி யெய்தினு மெய்து மென அஞ்சியெனின், திருவறப்பயனுக்கு முரணாதலின், அவ்வாறு கொள்ளாது, கேட்போர் தெருளுமா றுரைக்கும் அபயருசியின் சொல்வன்மையை வியந்து கூறியது என அறிக.
---------
பஞ்சபரமேட்டிகளை வணங்கித் தன் உடம்பை விடுவதென இருவரும் துணிதல்
உரை:- ஒன்றிய உடம்பின்-உயிரோடு ஒற்றுமை யுற்றிருக்கும் உடம்பிலிருந்து, வேறாம் உயிரினது-உண்மை யுணர்வால் நோக்குமிடத்து வேறுபட்டுத் தோன்றும் உயிரினுடைய, உருவம் உள்ளி-அருவமாகிய இயல்பை யெண்ணி, நங்கள் நல்லறப் பெருமை நாடி-நாம் மேற்கொண்டிருக்கும் சைனதருமத்தின் பெருமையைத் தெளிய உணர்ந்து, நன்று என நயந்து-ஏனைய அறம் பலவற்றினும் இதுவே நலந்தருவதென விரும்பி, வென்றவர்-காதிகன்மப் பகையை வென்றுயர்ந்தவரான பஞ்சபரமேட்டிகளின், சரணம் மூழ்கி-திருவடி நீழலில் எய்தும் இன்பம் நிறைந்து, நம் உடலம் விடுதும் என்றான்-நமது இவ்வுடம்பை விட்டொழிப் போம் என்று அபயருசி கூறினானாக, இது செய்கை நன்று என்று-இதனைச் செய்வது நல்லறமே என்று கருதி, நங்கையும்-நங்கையாகிய அபயமதியும், நயந்து-மனத் தால் விரும்பி, கொண்டாள்-அச்செய்கையை மேற்கொள் வாளாயினள் எ-று.
உண்மையுணர்வால் நோக்குமிடத்தென்பது இசையெச்சம் வினையாகிய பகையை வெல்லக் கருதுவார்க்குச் சைன தருமம் நெறியும், நற்காட்சி முதலியன படையுமாய்ப் பயன்படுதலின், "நல்லறப் பெருமை நாடி" என்றும், "நன்றென நயந்து" என்றும் கூறினான். உருவம் என்றவழி அதன் இன்மையும் அடங்குதலின், "உயிரினது உருவம் உள்ளி" எனல் வேண்டிற்று., "உண்மையு மின்மைதானு மொருபொருட் டன்மையாகும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. மூழ்கி யென்ற குறிப்பால், சரணமாகிய இன்பக்கடல் என்று கொள்க. "அறிவரன் சரணமூழ்கி"2 என்றும் "அருகன சரணமூழ்கி"3 என்றும் இந்நூலுள்ளும் பிறாண்டும் வருதல் காண்க. மனத்தால் நினைத்தலும் செய்தலோடொக்கு மென்பவாயினும், செயலும் உடன் நிகழ்தலின், நயந்தென் றொழியாது "கொண்டாள்" என்றார். இதனை, நன்றென்று தேறி யுடன்பட்ட சிறப்புக் குறித்து அபயமதியை "நங்கையும்" என்றார். உம்மை, சிறப்பு. இது வென்பதனைப் "பொருளொடு புணராச்சுட்டு" எனினுமாம்.
சினேந்திர துதி
உரை:- அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - ஞானமும் காட்சியும் உள்ளிட்ட, அனந்தமாம் இயல்பிற்றாகி - அள வில்லாத இயல்பினையுடையதாய், அறிதலுக் கரியதாகி - அறிவாராய்ச்சிக்கு அடங்காததாய்,அருவமாய் - உருவ மில்லாததாய், அமலாகி - தூயதாய், குறுகிய தடற்று - குறுகியதான உறையின்கண் அடங்கிய, ஒள்வாள்போல் - ஒளி பொருந்திய வாட்படைபோல, கொண்டு இயல் உடம் பின் வேறாய் - தனக்கு இடமாகக்கொண்டு இயங்கும் உடம் பிற்கு வேறுபட்டதாய், இறுகிய வினையும் - எப்போதும் விடாது பிணிக்கும் வினைத்தொடர்பும், இல்லது - இல்லாத உயிராகிய, எமது இயல்பு - எம்முடைய இயல்பு, என்று - என்று தெளியக்கொண்டு, நின்றார் - அருகபதத்தில் நிலை பெற்றிருக்கும் பரமேட்டிகளே நமக்குச் சரனாவார் எ-று.
இயல்பாகவுள்ள தூய வுயிர்கட்கு ஞானமும் தரிசனமும் இயற்கைக் குணமாதலின், "அறிவொடாலோகம் உள்ளிட்டு" என்றார். ஆலோகம் - ஒளி; ஈண்டுப் பொருள்களையுள்ளவாறு காணும் காட்சி. அளவின்றிப் பலவாய்ப் பல்வகை அணுக்களோடும் கூடி உலகம் முதலிய தத்துவங்களைச் செய்து தன்மா தன்மாத்திகளால் அளவுகடந்து அறிவாராய்ச்சிக்கும் எட்டாது போதலின், "அனந்த மாம் இயல்பிற்றாகி" யென்றும், "அறிவினுக் கரியதாகி" என்றும் கூறினார். "அளவின்றி யத்தியாய் அமூர்த்தியாய் ஆதியாய், உளவென்ற பொருள்" 1 "அளவில் ஆகாயத்தில் அணுக்களோடு உயிர் அளவளாவிப்" 2 பல்கு மென்றும், "உலகினோடு உலக லோக மாந் தத்துவந் தனைச்செய்து, தன்ம தன்மமா மத்திகள் செலவொடு நிலையிற் கேதுவாம்" 3 என்றும் கூறுப. உயிர் அருவ மென்பது சினேந்திர சமயக் கருத்துமாதலின், "அருவமாய்" என்றும், தன் நிலையில் தூய்தாதலின், "அமலமாய்" என்றும் கூறினார்; "அத்தியாய் அமூர்த்தியாய் அளவில் தேசியாய்" 4 என்று பிறரும் கூறுதல் காண்க. உயிர் உடலின்கண் நிறைந்து நிற்றற்குத் "தடற்று ஒள்வாள்போல்" என்று உவமித்தார்.
உள்ளுறையும் வாள் ஒளியுடைத்தாதல்போல் உடம்பின்கண் உறையும் உயிரும் ஒளியுடைத்தாதல் பெற்றாம். இன்னும் அதனாலே, தடற்றின் அளவும் வாள் நிறைந்திருப்பதுபோல உயிரும் உடம்பளவும் நிறைந்து நிற்பது பெறப்படும். "குடங்கையின் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்"1 என்றார் பிறரும். இக்கருத்தே பற்றி இந் நூலாசிரியரும், "தடற்று ஒள்வாள்போற் கொண்டியல் உடம்பு" என்றார் என உணர்க. வாள் தடறாகாதவாறுபோல, உயிர் உடம்பாகாமையின், "உடம்பின் வேறாய்" என்றும், உயிரைப் பிணித்து நிற்கும் ஞானாவரணீயம் தரிசனாவரணீயம் முதலிய காதிகன்மங்கள் வீடுபெறுவதற்குச் சமைந்த உயிர்களை இறுகப் பிணித்து நிற்றல் இன்மையின், "இறுகிய வினையும் இல்லது" என்றும், இவ்வியல்புணர்ந்து பிற வுயிர்கட்கும் இதனைத் தெரிவித்தருளும் பரமேட்டியாதலின், "எமது இயல்பு" என்றும் உரைத்தார். நமக்குச் சரணாவார் என்றது எஞ்சிநின்றது. இதனை மேல் வருவனவற்றிற்கும் உரைத்துக்கொள்க.
அருகபரமேட்டி வணக்கம்
உரை:- உறுதியைப் பெரிதும் ஆக்கி - உயிர்கட்கு உறுதி யாவனவற்றை மிகுதியும் உண்டாக்கி, உலகினுக்கு இறைமை நல்கி - உலகிற்குத் தான் இறைவனாம் தன்மை யினைத் தெளிவித்து, பிறவி செற்று - பிறவி இனி வாரா வகைக் கெடுத்து, அரிய வீட்டின் பெருமையைத் தெரி விப்பனவாகிய அறுவகை நயங்களையும், அறிவினில் தெரிந்த மாட்சி - தூய அறிவினால் ஆராயப்படும் மாட்சியினையுடைத் தாகிய, அரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல் வம் - இரத்தினத்திரய மெனப்படும் பெறுதற் கரிய செல் வத்தையும், பெரிதும் பெற்றனம் - மிகுதியும் பெற்றேம், (இவற்றைப் பெறவளித்த அவரே நமக்குச் சரணாவார்) என்றார்-என்று தொழுதார்கள் எ-று.
உயிர்க்கு உறுதியல்லாத பொருள்கள்மேல் விரைந்து இனிது செல்லும் உள்ளத்தை, உறுதிப்பொருளின்பால் கலங்காது சென்று பொருந்துவித்தமையின் "உறுதியைப் பெருது மாக்கி" யென்றார். மூவுலகின் உச்சிக்கண் இருந்து உயிர் முதலிய பொருள் கட்கு எப்பொருளும் அருள் செய்தலின், "உலகினுக்கு இறைமை நல்கி" யென்றார். "இராகமின்றி யெழுந்தருளி வந்திருந் தெப்பொருளு மருளிய வெங்கள் இறைவன் நீயே"1 என்று சான்றோர் கூறுதல் காண்க. பிறவிக் கேதுவாகிய காதிகன்மங்களை வீட்டற்குரிய நெறியினை நல்குதலின் "பிறவிசெற்று": என்றும், பெறற்கரிய வீடுபேற்றுக்கு வாயிலாகிய அறுவகை நயங்களையும் அவற்றின்மேலும் வேண்டப்படும் "சப்தபங்கி நயங்களையும்" அருளிய சிறப்புக் குறித்து "வீட்டின் பெருமையைத் தருதலாறும்" என்றும் கூறினார்.; ஆறு நயங்களாவன நித்தியம், அநித்தியம், அவாச்சியம், பின்னம், அபின்னம், சூனியம் என்பனவாம். சப்த பங்கி ஏழாவன: இருப்பது, இராதது, இருப்பது மிராததும், சொல்லொணாதது, இருப்பதுஞ் சொல்லொணாததும், இல்லையாஞ் சொல்லொணாதது, உள்ளது மில்லாததுமாஞ் சொல்லொணாதது என்பன. இனி இவ்வேழனையுமே, அறிவினால் தெரிந்த மாட்சி யென்றாரென்றும், அறிவாராய்ச்சிக்கு மாட்சி தருதலின், இவற்றை மாட்சி யென்றா ரென்றும் கூறுப. இரத்தினத்திரயம் மூன்று மாவன: நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்பன. இம்மூன்றும் வீடுபேற்றுக்கு நெறியாதலின் "பெறுதலுக்கரிய செல்வ" மென்றார்.; "முத்தியிதற்குபாயம் இரத்தினத்திரயம்"2 என்றார் பிறரும்.
சித்தர்பரமேட்டி வணக்கம்
உரை:- ஈங்கு-இவ்விடத்தே, நம் இடர்கள்-நமக்குற்ற துன்பத்தை, நினைந்து-தமக்குற்றவை போலக் கருதி, தீர்க் கும் இயல்பினார்-போக்கும் இயல்புடையவரும், மேல் மேலே, ஓங்கிய-உயர்ந்துள்ள, இவ்வுலகத்து உம்பர்- இவ் வுலகின் உச்சிக்கண்ணே, ஒளி சிகாமணியின் நின்றார்-ஒளி யினையுடைய முடிமணிபோல விளங்குகின்றவரும், வீங்கிய கருமக் கேட்டின்-மிக்க காதிகன்மங்களின் வீழ்ச்சிக் கண்ணே, விரிந்த எண்குணத்தராகி-பெருகிய எட்டுவகைக் குணங்களையு முடையராய், தீங்கெலாம் அகற்றிநின்ற - குற்ற மெல்லாம் போக்கி மேம்பட்டுநின்ற, சித்தர் - சித்தர்கள், செல்லல் தீர்ப்பார் - இப்போதும் நம் துன்பத்தைப் போக்கு வராதலின் அவர்களும் நமக்குச் சரணாவார் எ-று.
பிற உயிர்கட்குண்டாகும் துன்பத்தைத் தமக்கு நேர்ந்தன போலக் கருதி அதனை விரைந்து போக்கும் அருளறமே அவர்கட்கியல் பென்றற்கு "இடர்கள் தீர்க்கும் இயல்பினார்" என்றார். நம் என்றது எல்லா வுயிர்களையும் உளப்படுத்தி நின்றது. கேவல ஞானிகள் என்றற்குச் சித்தரை "ஓங்கிய வுலகத்தும்பர் ஒளி சிகாமணியின் நின்றார்" என்றார். காதி நான்கும் அகாதி நான்கும் ஆகிய வினைகள் எட்டாதலின், "வீங்கிய கருமம்" எனப்பட்டன.; அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம், வேதனீயம், நாமிகம், சோத்திரிகம், ஆயுட்கம் என்பன. அகாதிகன்மம் எண்பத்தைந்து. இக்கன்மங்கள் கெட்டவிடத்து எண் குணங்களும் பொருந்துமென்று கூறுப வாத லின் "கருமக்கேட்டின் விரிந்த வெண்குணத்தராகி" என்றார். "ஆயிடை யெண்பத் தஞ்சு வினைகெட்ட வக்கணத்தே, போயுல குச்சி புக்கான் பொருந்தியெண் குணங்க ளோடும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. வினையின் நீங்கிக் குணமெட்டும் நிறைந்தவழி, உலகுச்சியிற் பொன்போல் ஒளிர்பவாதலின் "ஒளிசிகா மணியின் நின்றார்" என்றார். "மாற்றற வோட்டி வைத்த செம்பொன்னொத் தொளிருமே"2 என்று கூறுப. இவ்வண்ணம் உச்சிக்கண் நின்றொளிருமிடத்துத் தேவர்பலரும் வந்து அடிவணங்கிப் பரவுப வாதலின், அப்பராவலால் உள்ளத்தே பெருமிதம், செருக்கு முதலிய தீக்குணம் சிறிதும் அணுகாமையின், "தீங்கெலா மகற்றி" என்றார். அகற்றி யெனப் பிறவினையாற் கூறியது, தாம் நீங்கினா ராயினும், நீங்காது தீதுற்று வருந்தும் பிற வுயிர்பால் அருள்கொண்டு நீக்குதல்பற்றி யென அறிக.
தீர்த்தகர வணக்கம்
உரை:- பெருமலை யனைய-பெரிய மலையையொத்த, காதிப் பெரும்பகை பெயர்த்து-காதிகன்மங்களாகிய பெரிய பகையைக் கெடுத்து, பெற்ற - அப்பொழுதே பெற்றனவாகிய, திருமலி - ஞானநலம் மிகுந்த, கடையில் நான்மைத் திருவொடு - அனந்த சதுட்டயங்களைக்கொண்டு பெறக்கடவ கேவலஞான மென்னும் திருவுடன், திளைப்ப ரேனும் - மகிழ்வாராயினும், உரிமையின் -முறைப்படி, உயிர்கட்கெல்லாம் -எல்லாவுயிர்களுக்கும், ஒருதனி விளக்க மாகி-ஒப்பற்ற ஞானவிளக்கமாய், திருமொழி யருளும் - முத்திநெறியைத் தெரிவிக்கும், தீர்த்தகரர்கள் - தீர்த்தங்கர சுவாமிகளே, துயர்கள் தீர்ப்பார்-நம் துன்பத்தை நீக்கு வார்கள் எ-று.
எளிதில் பெயர்த்த லருமை குறித்து, காதிகன்மங்களைப் "பெருமலையனைய" என்றும், கேவல ஞானத்தை எய்தலுறுவார்க்கு மனத்தில் நிகழற்பாலதாகிய சுக்கில தியானத்துக்;கு ஆக்கமாகும் அனந்த சதுட்டயங்களை எய்தாவகைத் தகைத்து நிற்றலின், "பெரும்பகை" யென்றும் கூறினார். காதிகன்மக் கேட்டின்கண் அனந்த நான்மைகள் விளங்கித் தோன்றலின் "பெற்ற திருமலி கடையி னான்மைத் திரு" என்றார். நான்குமாவன: கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வின்பம், கடையிலா வீரம் என்பன. இந்நான்கும் நிறைந்தவழி எய்தக்கடவதாய் இருப்பது கேவலஞான மாதலின், அதனையே கடையிலா நான்மையொடு கூடிய திருவென்றார் என்று அறிக. திரு, திருமகள். "காதிகள் நான்கும் நீங்க மேலெலா முறங்கு நான்மை விழித்துல கனைத்துங் காண, மாலிலா மனத்துச் சிந்தை யருக்கன துதித்த தன்றே"1 என்றார் பிறரும். திருமொழி-பஞ்சநமஸ்காரமென்னும் மந்திரமொழி,. தீர்த்தங்கரர், தீர்த்தகரர் என வந்தது.; "சம்சாரமாகிய கடலைத் தாண்டியவர்" என்பது இச்சொற்குப் பொருள் என்ப. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர்; முதல்வர் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர்; இறுதியில் இருந்தவர் ஸ்ரீவர்த்தமான வீரர்.
ஆசிரியர் வணக்கம்
உரை:-ஐவகை ஒழுக்க மென்னும் அருங்கலம் - ஐந்து வகையான விரதமெனப்படும் கிடைத்தற்கரிய அணிகலனை, ஒருங்கு அணிந்தார் - ஒவ்வொன்றாகவன்றி ஒருசேர அணிந் திருப்பவரும், மெய்வகை - தத்துவக் கூறுபாடுகளை, விளக்கம் சொல்லி - விளக்கமுண்டாகுமாறு சொல்லி, நல்லறம் மிக அளிப்பார் - வீடுபேற்றிற் கேதுவாகிய அறநெறிகளை மிகவும் எடுத்தோதி ஆதரிப்பவரும், பவ்வியர் தம்மை - பக்குவமுற்றவர்களை, தம்போல் - தம்மைப்போலவே, பஞ்ச நல்லொழுக்கம் பாரித்து, - ஐவகைப்பட்ட நல்லொழுக் கங்களை மேற்கொள்வித்து, அவ்வியம் அகற்றும் - குற்றத் தைப்போக்கும்,தொல்லாசிரியர் - பழைமையான ஆசிரியர் களுமாகிய பரமேட்டிகள், எம்' அல்லல் தீர்ப்பர் - நமது துன்பத்தைப் போக்குவார்கள் எ-று.
நன்மக்கட் குரிய ஒழுக்கத்தைச் சைனர் "சாரித்தரம்" என்ப வாகலின், அதற்குரிய விரதம் பன்னிரண்டனுள் சிறப்புடைய அணுவிரதமைந்தனையும் ஈண்டு "ஐவகையொழுக்க மென்னு மருங் கலம்" என்றார் எனவுணர்க; அவை: கொலை, பொய், களவு, பிறர்மனை விழைவு, பிறர்பொருள் வௌவல் என்பனவாம். மெய்வகைை - தத்து வங்கள். அவை: உயிர், உயிரல்லது, நல்வினை, தீவினை, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்ற ஒன்பதுமாம். கட்டுநீங்கி வீடு பெறுதற்குரிய நெறி நலம்பயக்கும் அறமாதலின், அதனை "நல்லறம்" என்றார். பவ்வியர், அறங்கேட்டு வீடுபெறுவதற்குச் சமைந்தவர். முற்கூறிய ஐவகையொழுக்கத்தை மீட்டுங் கூறியது, அவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்துதற்கு. ஆசிரியாராதலின், "அவ்விய மகற்றும் தொல்லாசிரியர்" என்றார்; பரமேட்டிகள் ஐவருள் ஒருவராய் வழிபடுதற்குரியராதல்பற்றி, "தொல்லாசிரியர்" எனச் சிறப்பித்தார்.
-----------
உபாத்தியாயர் வணக்கம்
உரை:- தீமைப்பங்கம் - துமன்பமாகிய சேறு நிறைந்த, ஏழ்பங்கம் ஆடி – ஏழ் நரகத்திலும் வீழ்ந்து மூழ்கிக் கரையேறி (நன்மக்கட் பிறப்பில்வந்து) அங்கநூல் ஆதியாவும் - பரமா கமங்கட்கு அங்கமாகிய ஆகமங்கள் பலவற்றையும் - அரில் தபத் தெரிந்து-குற்றமறத் தெளிந்து, பரமன் நன்னெறி பயின்றிட்டு,- அருகபரமேட்டி ஆதியில் காட்டியருளிய அறநெறியைப் பயின்று, அங்கபூவாதி - அங்காகமம் பன்னிரண்டும் பூர்வாகமம் பதினான்குமாகிய, மெயந்நூல் அமிழ்து - பரமாகமத்து மெய்ப்பொருளாகிய அமுதத்தை, அகப்படுத்து - உணர்ந்து உட்கொண்டு,அடைந்த - இப்பிறப்பில் தம்மை வந்தடைந்த, நங்களுக்கு - நமக்கும் நம்போலியர்க்கும், அளிக்கும் நீரார் - அருள்செய்யும் தன்மையுடைய சான்றோர், நம்வினை கழுவும் நீரார்-நம்முடைய வினையாகிய அழுக்கைக் கெடுக்கும் அருளாகிய தூய நீரையுடையோராவர் எ - று.
வீட்டு நெறியில் நில்லாத உயிர்கள் தாம் செய்யும் வினைகட் கேற்ப, தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்ற நான்கு கதியானும் பிறந் திறந்துழலுமாதலின், எல்லாக்கதியினும் கீழ்ப்பட்ட கதியாகிய நரக கதியை ஈண்டு எடுத்தோதுகிறார்,. அந்நரகம் எழுவகையாய் ஒவ்வொன்றும் பல்வகைப் புரைகளையுடையதாய் நினைத்தற்காகாத துன்ப நிலையமாயிருத்தல் பற்றி "தீமைப்பங்கமேழ்பங்கம்" என்றார். நற்காட்சி நல்லொழுக்கம் முதலியவற்றால் நரககதி, விலங்குகதி, இரண்டினின்றும் ஏறிவரும் உயிர்கள் வீடுபெறுவது குறித்துக் கற்பன இவையென்றற்கு "கணதராதி குருக்களால் செய்யப்பட்ட திரவியா கமங்களானவை" ஈண்டு "அங்கநூலாதியாவும்" என்று குறிக்கப் பட்டன. ஏனை அங்காகமமும் பூருவாகமமும் பரமாகமமாதலின் "அங்க பூவாதி மெய்ந்நூல்" எனப் பிரித்தோதப்பட்டன. இப்பரமாக மங்களைப்போல அவையும் பிரமாணநூல்களாதலின் "அரில்தபத் தெரிந்து" என்றும், அவற்றைத் தெரிந்து அறநெறிக்கட் பயின்று மனந் துயரானாலன்றி ஒருவர்க்கு நன்ஞானம் வாயாதென்றற்கு இவ்வாறு பிரித்தும் முறைசெய்தும் கூறினாரெனவுணர்க. இவற்றின் இயல்புகளை மேருமந்தர புராணத்தும் பதார்த்தசாரத்தும் கண்டு கொள்க.
---------
சாதுக்கள் வணக்கம்
உரை:- பேதுறு பிறவி போக்கும்-மயக்கத்தை யுண்டு பண்ணும் பிறப்பினைக் கெடுக்கும், பெருந்திரு உருவுக்கு- பெரிய அழகிய உருவத்துக்கு, ஏற்ற-ஏற்புடையனவாகிய, கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் - குற்றமில்லாத குணமாகிய அமிழ்தத்தைப் பெய்துவைத்த நன்கலத்தை, அனையராகி-போன்றவராய்,. சேதியின்-ஒருவர் தம்மை உறுப்புறுப்பாக அரிந்தாலும், எறியின்-வாளால் போழ்ந்தாலும், சிறந்தது-சிறந்ததாகிய அறமொன்றையன்றி, வேறு சிந்தை செய்யா-வேறே எவ்வகைத்தீநினைவும் கொண்டறியாத, சாதுவரன்றி-சாதுக்களையன்றி, நமக்கு உலகின்- நமக்கு இவ்வுலகத்தே, சரண் ஆவர் யார்-புகலளிப்பார் யாவர்? ஒருவரும் இல்லை எ-று.
காதிகன்மங்களால் மறைப்புண்டு துன்பத்துக்கேதுவான செய்தற்கே பெரிதும் இடமாகலின் "பேதுறுபிறவி" யென்றார். சாதுக்களின் திருவுருவமே பிறவியைப் போக்கவல்ல பெருமையும் ஒட்பமும் உடையதென்பர் "பிறவிபோக்கும் பெருந்திருவுரு" என்றார். குணங்களுள்ளும், கோதுறுகுணங்களுள, அவை நன்மக்களில் உயர்நிலைப் பிறப்புக்கும், தேவகதிக்கும் ஏதுவாய் மீட்டும் பிறப்பினைத்தந் தொழிதலின், அவற்றின் நீக்குதற்கு "கோதறுகுணங்கள்" என்று சிறப்பித்தார். உருவத்தைக் கொள்கல மென்றதுபோல, குணத்தை அமிழ் தென்னாமையின், இஃது ஏகதேசவுருவகம்,. "செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும்" நெஞ்சுநிறை யழிந்து வெகுளல் முதலியன சாதுக்கட்கு ஆகா என்பார் "சேதியின் எறியின் வேறு சிந்தைசெய்யாச் சாதுவர்" என்றார். வெகுளல் முதலியவற்றை நினைத்தலும் கூடாதென்பார் "வேறு சிந்தைசெய்யா" என்றொழிந்தார். சிறந்தது, இன்னாசெய்த அவர்க்கு இனியவே நினைத்துச்செய்தல், "சிதைந்தின்னாதன செய்தார்க்குமினியவே செய்து, சிந்தைக் கதங்கடிந்தொழுகல்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. ஏகாரம் இசைநிறைத்தற்கண் வந்தது.
சண்டகருமன் இருவரையும் தேவிகோயிலில் அரசன்முன் நிறுத்தல்
உரை:- இனையன நினைவின்-இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நெஞ்சால் வழிபட்டுக்கொண்டு, ஏகும்-செல்லும், இளைஞரை-அபயருசி அபயமதி யென்ற இளையவர் இருவரையும், சண்டன்-சண்டகருமனான தளபதி, தனை அரசு அருளும் என்று-தன்னை மாரிதத்தனாகிய வேந்தன் பாராட்டி மகிழ்வன் என்றுநினைத்து, விரைவிற்கொண்டு-விரைவாக அழைத்துச்சென்று, அச்சண்டமாரி முனைமுக வாயிற்பீடம் முன்னர்-அந்தச் சண்டமாரிதேவியின் போர்முனை போலும் திருவாயிலில் உள்ள பலிபீடத்தின்முன்னே, உய்த்திடுவான் நிற்ப-உய்த்து நிறுத்துதற்கு அரசன் குறிப்பு நோக்கி நின்றானாக, கனிகழல் அரசன்-ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனாகிய மாரிதத்தன், ஓகை கைம்மிக்-மகிழ்ச்சி மிக்கெழவே, கழறினான்-சண்டமருகனை நோக்கிக் கூறுவானாயினன் எ-று.
"இனையன நினைவின் ஏகும்" எனவே, இருவரும் மனத்தே இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நினைந்து வழிபட்டுச் சென்றமை பெற்றாம்; "வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம்முடலம்" (49) என்று அபயருசி கூறியதும் அபயமதி "நன்றிது செய்கை" என்று மனங்கொண்டாள் ஆதலின், ஈண்டு "நினைவின் ஏகும்" என் பாராயிற்று. முதற்கண், அரசன் சண்டமருகனை நோக்கி மக்களுள் இரட்டையரைக் கொணர்க எனப் பணிப்பான், தான் கருதியவாறு பெறலருமை நினையாது "மக்களிரட்டையர், ஈடிலாத வியல்பினரிவ் வழி, ஏட சண்டகரும, தந்தீக"(22) என்று ஏவியது, இப்போது அவன் விரும்பியவாறே கொண்டுசெல்லின், அவன் மகிழ்ந்து தன்னை யருள்வன் என இச்சண்டமருகனை நினைப்பித்தது, அரசனது அருள் நோக்கிநிற்றலினாலும், தானே பலி பீடத்திற் கொண்டுய்ப்பின் அரசன் வெகுள்வானாதலினாலும் "பீடமுன்னர் உய்த்திடுவான்நிற்ப" என்றார். அப்பீடத்தே எண்ணிறந்த உயிர்கள் கொலை செய்யப் படுதலின், போர்முனையிடத்தை அதற்கு உவமித்தார். இளையர் இருவரைக் கண்டதும், தான் இடக்கருதிய நரபலி இனிது நடக்குமென்ற உணர்வுபிறத்தலின் "ஓகை கைம்மிக" லாயிற்று,
-------
மாரிதத்தன் இருவரையும் பலிபீடத்துய்க்க எனப் பணித்தல்
உரை:- முனைத்திறம் முருக்கும் ஆற்றல்-பகைவர் போர் முனையில் செய்யும் போர்வகைகளைக் கெடுத்தழிக்கும் வன்மையும், மூரித்தேன் தாரினாய்-பெரிய தேன் பொருந்திய மாலையுமுடையாய்; நின்வினைத்திறம் நன்று-நீ செய்தசெயல் நல்லது, யாம் விழை நரபலி-யாம் இடக்கருதும் நரபலியை, ஈதற்கு-தேவிக்கு ஈயும்பொருட்டு, இனையவர்தம்மை-இவ் விளையோர் இருவரையும், தேவியிரும் பலியிடத்து-அவளுடைய பெரிய பலிபீடத்திலே, உய்க்க என்றான்-கொண்டு நிறுத்துக என்று சொல்லி, கனைகழலரசன்-ஒலிக்கின்ற வீர கண்டையணிந்த அந்த மாரிதத்தன், கையில்-தன் கையினிடத்தே, வாள் உருவினான்-உடைவாளை உறையினின்றும் எடுத்து உருவினான் எ-று.
சண்டமருகன் தளபதியாதலால், அவன் மகிழுமாறு, அவனுடைய ஆற்றலை விதந்தோதினான். மூரி-பெருமை. தான்விரும் பியவாறே பலியிடுதற்கேற்ற இரட்டையரை விரைவிற்கொணர்ந்த மையின், "நின்வினைத்திறம் நன்று" என்றான்,. எனவே, தான் செய்யக்கருதும் வினைத்திறம் தீதென்பதை அவன் நினைத்திலன்
எனவறிக. நினையாமைக்கு ஏது இஃதென்பார் "விழைநரபலி" என்றார். நெஞ்சில் விழைவு நிலவுங்கால், நன்று தீது காணும் நல்லறிவு ஆங்குத் தொழிற்படாது. ஈதற்கு என வேண்டாது கூறினான், நெஞ்சில் ஆராய்ச்சியின்மையின் எனவுணர்க. இனையவர், இவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. எண்ணிறந்த உயிர்க் கொலை கண்டும் இருத்தல்பற்றி, பலிபீடத்தை "இரும்பலியிடம்" என்றார். என்றான், முற்றெச்சம், பெயர்ப்படுத்து, என்றவனாகிய அரசன் என இயைப்பினுமாம். வாளை மனக்கண்ணாற் கண்டு அஞ் சியும் இளையர்பால் அருள்மிகுந்தும், இனைகின்றாராதலின், ஆசிரியர் "ஐயோ" என்றார். இஃது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல், அன்னோ என்பதுபோல. இஃது பிற்கால வழக்கு; வீரர், வாளை உறையினின்று கழித்ததும் முதற்கண் அதனை உருவுதல் இயல்பு.
பின்னர், பலியீடு தவிர்ந்து போதலின், தனக்குரிய செயல் இல்லாதுபோம் வாள் என்னும் நயம், "கையில் வாள்" என்புழி அமைந்திருத்தல் காண்க.
----------
அருகிலுள்ளோர் அரசனை வாழ்த்துமின் என்றல்
உரை:- இருவரும் கொலைக்களம் குறுகிநின்றும் - இளையர் இருவரும் பலிபீடத்தையடைந்து அதனிடத்தே நின்றாராயினும், குலுங்கலர் - மனநிலை குலையாராய், குணங்கள் தம்மால் - குணங்களாலும், இலக்கணம் - உடலழகாலும், அமைந்த மேனியர்-நிறைந்து பொருந்திய மேனியுடையாராய், இயைந்து நிற்ப - உயிர்கொடுத்தற்கு ஒருப்பட்டு நிற்க,. இறை மன்னன் - தங்கட்கு இறைவனாகிய வேந்தன், நிலத்து நெடிது வாழ்க என உரைமின் - நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று சொல்லுமின், என்றார் - என்று அருகே நின்ற தளபதி முதலாயினார் கூறினாராக, மலக்கிலா மனத்தர் - குற்றமில்லாத மனத்தினையுடையராகிய இளையரிருவரும், தம் வாய்-தமதுவாயிடத்தே, வறியதோர் முறுவல் செய்தார் - சிறியதொரு புன்னகை புரிந்தார்கள் எ-று.
எத்துணைத் திட்பமுடைய மனத்தாராயினும், உயிர்க்கொலை புரியும் இடத்தைக் காணில் அவர் உள்ளத்தே சிறிது அசைவுதோன்றி மெய்ப்பட்டுக் காட்டுமாயினும், இவர்பால் அதுதானும் இல்லையென்றற்கு, "கொலைக்களங் குறுகிநின்றும் குலுங்கலர்" என்றார். ஒருவரொருவர்க்குளதாகும் தீங்கு குறித்து, "தானாடாவிடினும் தன் தசையாடும்" என்பதுபற்றி நோக்கினும், சிறிதும் வேறுபடாராயின ரென்றற்கு, "இலக்கணமமைந்த மெய்யர்" என்றார். இயைதல், சாதற்கு உடன்படல், தன்கீழ் வாழ்வார்க்கு முறை செய்பவனாதலின், "இறை" என்றனர். நிலத்திறை மன்னன் என்றே கொண்டு நிலத்தவர்க்கு முறைசெய்தலால் இறைவனாகிய வேந்தன் என்றுரைப்பினுமாம். உயிர்ப்பலியாவார் தேவியால் நயக்கப்படுதலின், அவர் உரை பொய்யாவண்ணம் தேவியருள்புரிவள் என்ற கருத்தால், அருகுநின்றவர், "மன்னன் வாழ்க நெடிதெனவரைமின்" என்றார்கள். அரசன் செயல் அறமன்மையின் உவவாராயினும், அருகிருந்தவர் கூறும் மடமைமொழி நினைந்து முறுவலித்தனராதலின், "தம் வாயில் வறியதோர் முறுவல் செய்தார்" என்றார். "வாயில்" என்று விதந்ததனால், நகை முதலியன அவித்தொழுகும் அவ்விருவருடைய ஒழுக்கத்தின் விழுப்பம் பெறப்பட்டது; "உயிர்க்கண் நகை முதலாய நாணி" (28) என்று முன்பே கூறியிருத்தல் காண்க. மலக்கு - அழுக்கு.
----------
இருவரும் அரசனை வாழ்த்துதல்
உரை:- வையத்து மறவியின் மயங்கி - தான் உலகுயிர்கட்கு உயிராவதை மயக்கத்தால் மறந்து, உயிர்களை வருத்தம் செய்யாது - அவ்வுயிர்களை வருத்தாமல், அறவியல் மனத்தையாகி - அருளறம் நிறைந்த மனமுடையனாய், உயிர்க்கு - எல்லா உயிர்களுக்கும், ஆர்அருள்பரப்பி - நிறைந்த அருளைச் செய்து, சிறையன பிறவி போக்கும் - உயிர்க்குச் சிறைக் கோட்டம் போல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும், திருவறம் மருவி - சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து, சென்று - ஒழுகி, புகழ்நிறை உலகம் காத்து - அழியாப் புகழை நிறுவி உலகத்தை இனிது காத்தளித்து, நீடுவாழ்க என்று-நெடிது வாழ்வாயாக என்றுசொல்லி, நின்றனர்- பலிபீடத்தில் உயிர்கொடுப்பான் நின்றனர் எ-று.
மறவிக்கு ஏது மயக்கமாதலின், மயக்கத்தால் மறந்து என மாறி இயைத்துரைத்தாம். வருத்தம் செய்யாது என்பது ஒரு சொல்லாய் உயிர்களை என்பதற்கு முடியாயிற்று. இரண்டாவதன்கண் நான்காவது மயங்கியதாகக் கொண்டு வருத்தத்தைச் செய்யாது என விரித் துரைப்பினுமமையும். "மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம், அதனால், யானுயிர் என்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக்கடனே"1 என்பவாகலின், அதனை மயக்கத்தால் மறந்து உலகுயிர்கட்குத் தீங்கு செய்தலாகாது என்றாராயிற்று. அரசன்பால் அறமும் அருளும் இல்லை யென்பது அவன் செய்யும் கொலைத்தொழிலால் விளங்குதலின், அவை யுண்டாதல் வேண்டுமென்னும் கருத்தால் "அற வியல் மனத்தையாகி" யென்றும் "ஆருயிர்க் கருள் பரப்பி" என்றும் கூறினார். ஆரருள் எனல் வேண்டிற்று, அறவியல் மன மில்லாதார்பால் இருத்தலின்மையின், "அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுள"2 என்பது பொதுமறை முடிபு. ஓரறிவுயிர் முதல் பல்வகையுயிரு மடங்குதற்கு "உயிர்கள்" எனப் பொதுப்படக் கூறினார். செய் தென்னாது, பரப்பி யென்றது உயிர்களின் பன்மை குறித்து நிற்றல் காண்க. உயிர்க்கு உடல் சிறை போறலின் "சிறையன பிறவி" யென்றார்,. சினேந்திர தருமம் பிறவிப்பிணி போக்குமென்பதை, "வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்குமெய்யே, நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின், கம்பமில் நிலைமை யாகித் திருவறங் கைக்கொளென்றேன்"3 என்று பிறரும் கூறுதல் காண்க. புகழ் நிறுத்தற்கு உலகம் இடமாதலின், "புகழ் நிறை உலகம்" எனல் வேண்டிற்று. நிறைபுகழ் என்றே கண்டு பெற்றென வொருசொல் வருவித்து முடிப்பினுமாம். இவ்வாறு தாம் கூறிய சொற்கள் அரசன் செவிக்குட் சென்று அவனது மனமயக்கத்தை மாற்றாநிற்க, இவர்கள் கொலைக்குடன் பட்டு நின்றமை தோன்ற "நின்றார்" என்றார்.
இருவரையும்கண்ட வேந்தன் தன் மனத்துக்குள் வியத்தல்
உரை:- நின்றவர் தம்மை நோக்கி-அவ்வாறு நின்ற இருவரையும் கண்ணாரக்கண்டு நிலைதளர்-நரபலியிடுவது குறித்த மனநிலை தளர்ந்த, நீதி மன்னன்-நீதியைச் செய்யும் வேந்தனாகிய மாரிதத்தன், மின்திகழ் மேனியார்-ஒளிவிளங்கும் மேனியையுடைய இவர்கள், விஞ்சையர்கொல்-வித்தி யாதரரோ, விண்ணுளார்கொல்-தேவருலகத்துத் தேவர்களோ, அன்றி-விஞ்சையரும் விண்ணவருமல்லர் மக்களே என்பதாயின், மண்மேல் அவர்களுக்கு-மண்ணின்மேல் வாழும் மக்களுக்கு, இவ்வுருவம்-இவ்வழகிய உருவம் அரியது-எய்துவது இல்லையாம், என்னா-என்றிவ்வாறு நினைந்து, நின்று-அசைவற நின்று, இவர் நிலைமைதானும்- இவரது தன்மையும், நினைவினுக்கு அரியது-நினைத்தற்கு அருமையாகவுளது, என்றான்-எனறு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் எ-று.
அபயருசியும் அபயமதியும் கொலைக்குடன்பட்டு நின்றநிலை அரசற்குச் சூழ்ச்சி பயப்பித்தமை தோன்ற "நின்றவர்" என்று மீட்டும் எடுத்தோதுவாராயினர்,. இளையோர் நிலைதளராராக, அவரைக் கண்ட மாரிதத்தனே நிலைதளர்ந்தான் என்பார், "நிலைதளர் நீதி மன்னன்" என்றார். இக்கணம்முதல் அவ்வேந்தன் நீதிமானாகும் செந்நெறித் தலைப்படலை ஊழ்கூட்டுதலின், அவ்வியைபு பற்றி, "நீதிமன்னன்" என்று சிறப்பித்தார். சம்மியஞான சம்மிய தரிசனங்களுடன் சம்மிய சாரித்திரமும் உடையராதலின், "மின் திகழ் மேனியார்" என்றார். விஞ்சையரும் விண்ணவருமல்லரெனவும், மக்களாம் எனவும் துணிந்தவழியும், மனநிலை தளர்ந்தொழிந்தானாதலின் மாரிதத்தன் "இவ்வுருவம் மண்மேலவர்களுக்கரியது" என்றும், மேலும் நினைவு செல்லாமையின், "நினைவினுக்கரியது" என்றும் தன்னுட் கூறிக்கொள்வானாயினன்.
---------
வேந்தன், இருவரும் நகைத்ததற்குக் காரணம் என்னென்ன அபயருசி காரணம் கூறல்
உரை:-இடுக்கண் வந்துறவும் - உங்கள் உயிர்க்கே இறுதி வந்திருப்பவும், எண்ணாது - அதனை நினையாதது, என் கொல்- என்ன காரணம், எரிசுடர் விளக்கின் - சுடர் விட்டெரியும் விளக்குப்போல, நடுக்கம் ஒன்றும் இன்றி - நெஞ்சில் சிறிதும் துணுக்கமின்றி, நம்பால் நகுபொருள்-நம்மைப் பார்த்து நீவிர் நகுதற்குரிய காரணம், கூறுக-யாதோ அதனைக் கூறுக, என்ன - என்று மாரிதத்தன் கேட்க, அடுக்குவது-எம்மை வந்தடைய வேண்டுவது, அடுக்குமாயின் - வந்தடையுமானால், அஞ்சுதல் பயன் இன்று - அஞ்சுவதால் பயன் யாதும் இல்லை, என்றே - என்று நினைத்தே, நடுக்கமது இன்றி - மனத்தும் மெய்யிடத்தும் அசைவின்றி, நின்றாம் - நிற்பேமாயினேம், நல்லறத் தெளிவு சென்றாம் - சினேந்திரனுரைத்த நல்லறத்தைத் தெளிய அறிந்திருக்கின்றோ மாகலான் எ-று.
கொலைவினைக்கு வினைமுதலாகிய தானும், கருவியும், இடமும், காலமும் ஒருங்குதொக்கமையின், "இடக்கண் வந்துறவும்" என்றும், அதனை எண்ணியவழி எத்திறத்தார்க்கும் உடலில் நடுக்கந் தொன்றுமாதலின், "எண்ணாது" என்றும், இருவரது இளமைக்கும் செயற்கும் ஒவ்வாமையின் "என்கொல்" என்றும் கூறினான். எண்ணாதது எனற்பாலது "எண்ணாது" என நின்றது. காணும் போதே, அவர்தம் மேனியின் ஒளிகண்டு "மின்திகழ் மேனியர்" என்றவன், அஃது இப்போதும் ஒளி குன்றாது திகழ்தலின், “எரி சுடர் விளக்கின்” என்றான். “இடுக்கண்வந்துற்ற காலையெரி கின்ற விளக்குபோல, நடுக்கமொன்றானுமின்றி நடுக”1 என்றார் தேவரும்.
உயிரை ஒளியுடைப் பொருளோடு உவமித்தல் நூல்மரபு; "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன் உடம்பின தளவுமாம்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. அவரோடு சொல்லாடுங் கருத்தினனாதலின், அவர் தோற்றுவித்த வறிது நகைக்கு வெகுண்டான்போல் "நடுக்க மொன்றின்றி நம்பால் நகுபொருள் கூறுக" என்றான். அதனைப் பொருள் செய்யாமை தோன்ற, நடுக்கமின்மைக்குக் காரணங் கூறலுற்று "அடுக்குவதடுக்குமாயின் அஞ்சுதற் பயனின்றென்றே, நடுக்கமதின்றி நின்றாம்" என்றும், "நல்லறத் தெளிவு சென்றாம்" என்றும் கூறினர். நடுக்கமது என புழி, அது பகுதிப்பொருட்டாகாது சூட்டு மாத்திரையாய், நடுக்கத்தின் புன்மை தோற்றி நின்றது. இச்செய்யுளால் மாரிதத்தன் மிக்கெடுத்தோதிய இடுக்கண், நடுக்கம் என்ற இரண்டினையும், தாம் இருவரும், மதியாமையும் அதற்கேதுவாகிய நல்லறத்தின் பெருமையும் அபயருசி எடுத்துரைத்தானாயிற்று. வருஞ்செய்யுளால் நகுதற் கேதுவாயதனை உரைக்கின்றான்.
இதுவுமது.
உரை:- முன்-முன்னைப் பிறப்புக்களிலே உயிர் உருவிற்கு-உருவில்லாத உயிர்க்கு உருவுபோல் நிலவும் உடம்புகட்கு, ஏதம் முயன்று-தீங்கு நினைந்து, செய் பாவம் தன்னால்-செய்த கொலை முதலிய பாவத்தால், இன்ன பல் பிறவிதோறும்-இத்தன்மையாகப் பெற்ற பல பிறப்புக்களிலும், இடும்பைகள் தொடர்ந்த-துன்பங்கள் எம்மைத் தொடர்ந்து வந்தன, வந்தோம்-அதனால் இப்பிறப்பெடுத்து வருவோமாயினோம், மன்உயிர்க் கொலையினால்-மிக்க பல உயிர்க்கொலை புரியும் செயல் காரணமாக, இம் மன்னன் வாழ்க-இந்த மாரிதத்தனாகிய வேந்தன் நெடிது வாழ்க, என்னும் மாற்றம்-என்று சொல்லும் அறத்திற்கு மாறான சொல், என்னதாய் விளையும்-எத்தன்மைத்தான பாவத்தை விளைவிக்குமோ, என்றே-என்று நினைத்தே, எம்முள் நக்கனம்- எங்களுக்குள் யாங்களே நகுவேமாயினேம், என்றான்- என்று அபயருசி விடையிறுத்தான் எ-று.
உயிர் அருவப்பொருள் என்றும், அஃது எடுத்த உடம்புதோறும் அவ்வுடம்பளவிற் பரந்து நிறைந்து நிலவுமென்றும், அதன் உண்மைகாண்டற்கு உருவமாகிய உடல் கருவியென்றும் கூறுப. அருவப்பொருளாய உயிர்க்கு ஒருவரும் ஒரு தீங்கும் செய்தலாகாமையின், "உயிர்க்குத் தீங்கு செய்தா" னென்றவழி, உயிர் ஆகு பெயராய்த் தனக்கு இடமாயும் உருவமாயும் இருக்கும் உடம்பையே குறித்து நிற்பது குறித்து, "உயிர் உருவிற் கேதமுயன்று" என்றான். முன் உயிருருவில் கேதம் முயன்று என்று பிரித்து, முன்னைப் பிறவிகளில் எடுத்த உடம்பிலிருந்துகொண்டு, பிற வுயிர்கட்குத் தீங்கு செய்ய முயன்று என்று உரைத்தலுமொன்று. முன்னைப் பிறவியிற் செய்த பாவப்பயனே பின்னே பல துன்பமிக்க பிறவிகளை யெடுத்தற்குக் காரணமாயிற்று என்பான், "பல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த" என்றும், "வந்தோ" மின்றும், காரிய வாய்பாட்டாற் கூறினான். மன், பெருமை; ஈண்டு மிகுதி குறித்து நின்றது. மாற்றம்,சொல்; ஆற்றலால், அறத்திற்கு மாறான சொல்லெனப்பட்டது. முன்னைப்பிறவியிற் செய்த பாவம் காரணமாகப் பின்னே மிகப்பல பிறவி பிறந்து பெருந்துன்பமுற்று இப்பிறப்பில் இவ்வாறு வந்தோம்; இனி, இப்பாவம் மேலே எத்துணைப்பிறவி பயந்து துன்புறுத்துமோ என்று நினைந்து நகைத்தேம் என்றானாயிற்று. "எம்முள் நக்கனம்" என்றது, நீ அதனை நின்பால் செய்ததாகத் கருதுவது பேதைமை யென்றானு மாயிற்று.
-------------
இருவரையும் கேட்டோர் வியத்தல்
உரை:- கண்ணினுக்கு இனிய-காண்பதற்கு இனிமையா யிருக்கின்ற, காளைதன்-காளையாகிய அபயருசியினுடைய, கமலவாயின்-தாமரைப் பூவைப்போலும் வாயிலிருந்து வந்த, பண்ணினுக்கு இனிய சொல்லை-பண்ணிசையை யொத்த இனிமை வாய்ந்த சொற்களை, படியவர்-பலி பீடத்தின் கீழே நின்ற மக்களனைவரும், முடியக்கேட்டு- முற்றவும் கேட்டிருந்து, அண்ணலுக்கு-அண்ணலாகிய அபயருசிக்கு, ஆண்மை அழகிது-இத்திண்மை அழகியதேயாகும், அழகினுக்கு அமைந்ததேனும்-இவன் பெற்றுள்ள அழகுக்கும் இவ்வாண்மை நன்கு அமைந்திருக்கின்ற தென்றாலும், பெண்ணினுக்குஅரசி-மங்கையர்க்கு அரசி போல விளங்குகின்ற அபயமதியின், ஆண்மை-மனத்திட்பம், பேசுதற்கு அரியது-சொல்லும் தரத்தன்று, என்றார்- என்று தம்முள் பேசிக்கொள்வாராயினர் எ-று.
எனவே, ஈண்டு நாம் வேறு கூறுவது வேண்டாவென்பது குறிப்பெச்சம், "அண்டல ரெனினும் கண்டா லன்புவைத் தஞ்சும் நீரார்" (29) என்று இவர்தம் மேனியழகை முன்பே சுருக்கமாய்க் கூறினாராதலின்,அம்முறையே" கண்ணினுக்கினிய மேனிக்காளை" என்றார். பலிபீடத்தின் மேலேயிருந்து அபயருசிகூற, கீழே தரை மீது நின்றவர் அவன்கூறின முற்றும் செவியாரக் கேட்டமை தோன்ற "படியவர் முடியக் கேட்டே" என்றார். ஆண்மை- திண்மை, ஈண்டு அஞ்சாமையைச் சுட்டிநின்றது. சிறப்புடைய ஆண்மகனாதலின், அபயருசிபால் அழகும் ஆண்மையும் விளங்கித் தோன்றுவதில் வியப்பில்லை; மண்ணுலகத்து மகளிரனைவர்க்கும் கற்புப் பொற்பு முதலிய நற்பண்புகளெல்லாவற்றாலும் மேம்பட்டு நிற்கும் அபயமதியின் மென்மைத்தன்மையை நோக்கினார்க்கு அவளது மனத்திண்மை பெருவியப்பைப் பயந்தமையின் "பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற்கரிய" தென்றார்.
-----------
மாரிதத்தன் முன்னைப்பிறவி வரலாறு கூறுக எனக் கேட்டல்
உரை:- மன்னனும் -மாரிதத்தனாகிய வேந்தனும், அதனைக்கேட்டு-அபயருசி கூறியதைக்கேட்டு, மனம் மகிழ்ந்து-மனத்தில் களிப்புற்று, இனியனாகி-அன்புடையனாய், நும்-உங்களுடைய, முன்னர் பிறவி இறந்தன என்னை- முற்பிறப்புக்களுள் கழிந்தனயாவை, பிறந்து நின்ற- நீவிர் பிறந்திருக்கும், மன்னிய குலனும் என்னை-நிலைபெற்ற குலம் யாது, வளர் இளம்பருவம் தன்னில்-மேலும் வளர்தற்குரிய இளமைப்பருவத்தே, நீர் இனையராகி வந்ததும் என்னை-நீவிர் இத்தன்மையையுடையராய் வந்தது எதற்காக, இயம்புக-எனக்குச் சொல்வீராக, என்றான்-என்று அவ்விருவரையும் கேட்டான் எ-று.
தான் குறித்த பொருளை நன்கு வகுத்து ஒன்றும் விடாது விடையிறுத்த அபயருசியின் சொற்றிறங்கண்டு, தன் கருத்து மாறி அன்பு செய்யத் தொடங்கினானாதலின் "கேட்டு மனமகிழ்ந்தினிய,னாகி" என்றார். இனியனாதல், மனத்தன்பினை மலர்ந்த முகத்தால் இனிமையுறக் காட்டல். முன்னைப் பிறப்பும் இம்மையில் பிறந்த குலமும் இளமைக்கண் துறவுபூண்ட காரணமும் அறியும் வேட்கையனாதலின், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து வினவலுற்றான். இருவரது இளமைச் செவ்வியைக் காணுந்தோறும் அவன் கருத்து அன்பால் நெகிழ்தலினாலும், துறவுநிலை வியப்பை மிகுவித்து உண்மையறியக் கடவுதலினாலும் "வளரினம் பருவந் தன்னில் என்னை நீர் இனையராகி வந்தது" என்றான். இளமையினை "வளரிளம் பருவம்" என்றும், துறவுக்கோலத்தை "இனையராகி" என்றும் கூறினான். மேன்மேலும் வளர்ச்சிக்குரிய இளமைக்கண் துறவு பொருந்தா தென்பது தன் கருத்தாதல் தோன்ற.
----------
அருள் நிலவிய உள்ளத்துடன் கேட்க என அரசற்கு அபயருசி கூறல்
உரை:- புரவல-அரசே, அருளுடைமனத்தராகி-அருள் பொருந்திய மனமுடையவராய், அறம் புரிந்தவர்கட்கு அல்லால்-நல்லறத்தைச் செய்பவர்க்கன்றி, மருள் உடை மறவருக்கு-மயக்கம் பொருந்திய நெஞ்சினையுடையராய் உயிர்க்கொலை முதலிய பாவத்தைச் செய்பவர்க்கு, எம் வாய் மொழி-யாம் உரைக்கும் மெய்ம்மொழிகள், மனத்திற் சென்று-மனதிற்படிந்து, பொருள் இயல்பாகி நில்லா- அவர் விரும்பும் பொருளாய் நிலைபெறாவாதலால், கருதிற் றுண்டேல் - இவ்வறவுரையை நீ கேட்கக் கருதினையாயின், அருள் இயல் செய்து - நெஞ்சில் அருள் நிலவப்பண்ணிக் கொண்டு, செல்க - கேட்டு அறநெறியே ஒழுகுவாயாக, ஆகுவதாக - வரக்கடவது வருக எனக் குறித்து நீ கவலல் வேண்டா, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
அது குறித்து என்பது முதலாயின கூற்றெச்சம். புரிதல், எப்பொழுதும் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் செய்தல். அருளறம் பூண்டவர்க்கன்றி நின்போல் கொலை மேற்கொண்டொழுகுவோர்க்கு எம்முரை பொருளாகத்தோன்றா என்றதற்கு, "எம்வாய் மொழி மனத்திற்சென்று பொருளியல்பாகி நில்லா" என்றான். மருளுடை மறவர் எனப் பொதுப்படக் கூறினானாயினும், மாரிதத்தன் அதனை முன்னிலைப்புறமொழியாகக் கொள்வானாவது கருத்தென்க. மாரிதத்தன், தான் கூறலுறும் அறத்தைக் கேட்டற்கு வேட்கை யுடையனாதலை அவனுடைய குறிப்புக்களால் அறிந்தானாயினும், "மருளுடைமறவ" னாதல்பற்றி, "கருதிற்றுண்டேல்" என்றான். தான் கூறுதற்குமுன், பலியீடு குறித்து ஆங்கு நிறுத்தப் பெற்றிருக்கும் உயிர்களைக் கொல்வது தவிர்த்தல் வேண்டியும், தான் கூறவிருக்கும் அறத்தைக் கேட்டற்கு அவன் மனம் செம்மை யுடைத்தாதல் வேண்டியும், "அருளியல்செய்து செல்க" என்றும், பலியீடுநிற்பின் சண்டமாரியால் தீங்கு நிகழும் என்பது நினைந்து ஒருகால் அரசன் மயங்குவன் என்பதையுட்கொண்டு, வரக்கடவது வந்தேதீரும், அதனைத்தவிர்த்தல் தேவர்க்கும் ஆகாதென்பான், "ஆகுவதாக" என்றும் கூறினான்.
---------
மாரிதத்தன் அருள் நிலவும் மனத்துடன் பணிந்து கேட்டல்
உரை:-- அன்னணம் அண்ணல் கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி கூறலும், மன்னவன் - அரசனாகிய மாரிதத்தன், தன் கைவாள் மாற்றி - தன்னுடைய கைவாளை உறையில் செருகிக்கொண்டு, மனத்திடை - மனத்தின் கண் நிலவி, மறனும் மாற்றி - பாவக்கருத்தையும் மாற்றி அருளுடைய மனத்தனாகி-அருள் நிலவும் மனமுடையனாய், இன்னினி-இப்பொழுது, எனக்கு இறைவன் நீயே- எனக்கு அறமுரைக்கும் ஆசிரியன் நீயே யாவாய்; என- என்றுரைத்து, இறைஞ்சி நின்று-அவனை வணங்கி நின்று, குமர-குமரனே, நுங்கள் பவத்தொடு பரிவும் பன்னுக- உங்களுடைய முன்னைப்பிறவி வரலாறும் அப்போது நீவிர் உற்ற துன்பமும் உரைப்பாயாக, என்றான்-என்று வேண்டினான் எ-று.
கைவாளை உறையில் மாற்றியது மனத்திடை மறத்தை மாற்றியதைத் தோற்றுவித்த தாயினும், அம்மறம் மீட்டும் தோன்றா வகை யவித்தற்கு "அருளுடை மனத்த" னானானென்றார். இவ்வண்ணம் அருள்மேற் கொண்டவன், அறங்கேட்டற்கு உள்ளம் சேறலின் "இன்னினி இறைவன் நீயே எனக்கு" என்றான்; இறைவன் நீயே என வாயாற் சொல்லியதைச் செயலிலும் மெய்ப் பிப்பான் "இறைஞ்சி" நின்றான் என்க. முன்னர், "மன்னுயிர்க் கொலையினாலிம்மன்னன் வாழ்கென்னுமாற்றம், என்னதாய் விளையு மென்றே நக்கனம்"(63) என்று அபயருசி கூறியசொல், நெஞ்சில் நின்று கொலைப்பாவத்தின் பயனறிதற்கண் வேந்தனை முடுகுதலின், "பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்" என்றார். இறைவவென்னாது, குமரவென்றான், இறைவனாகக் கருதும் கருத்தினும் குமரனாகக் கண்டுகொண்ட கருத்து ஊறியிருத்தலின், "இனியினி என்பது இன்னினி என மருவிற்று, "இன்னினி வாராமாறு கொல்"1 என்றாற்போல.
அபயருசி கூறத்தொடங்கல்
உரை:- மேகம்-மேகமானது, மின்னொடு-மின்னொடு தொடர்ந்து- மின்னலுடன் கூடி, மேதினிக்கு ஏதம் நீங்க-நிலத்திலுள்ள உயிர்களின் துன்பம் நீங்குமாறு, பொன்வரை முன்னர் நின்று-பொன்மலையின் முன்பு நின்று, புயல் பொழிந்திடுவதுபோல்-மழையைப் பெய்வதுபோல், அன்னமெல் நடையனாளின்-அன்னம்போல மெத்தென்ற நடையினையுடைய அபயமதியின்;, அருகு அணைந்து-அருகிற்சென்று, உருகும் வண்ணம்-கேட்போர் நெஞ்ச நீராய் உருகுமாறு, மன்னவகுமரன்-அரசகுமரனாகிய அபயருசி, மன்னற்கு- மாரிதத்தனுக்கு, அறமழை-அறவுரையாகிய சொற்பொழிவை, பொழியலுற்றான்-நிகழ்த்தத்தொடங்கினான் எ-று.
அபயமதியையும் சேர வுவமம் செய்தலின், மின்னொடு "தொடர்ந்து" என்றார். "பொன்வரை முன்னர்" என்றது, மாரிதத் தன் முன்னர் நின்றதை யுட்கொண்டு, நடையனாள், நடையினாள்போல இன்பெறாது அன்பெற்று முடிந்தது. அருகணைந்து எனவே, இருவரும் இதுகாறும் தனித்தனி வேறு நிறுத்தப்பட்டிருந்தமை பெற்றாம். அபயருசி அரசகுமாரனே யாதலின், "மன்னவ குமரன்" என்றார். யசோமதி யரசனுக்கும் அவன் மனைவி புட்பாவலிக்கும் பிறந்த இரட்டைமக்களாதலை "அன்னவர் தம்முள் முன்னோ னபய முன்னுருசி தங்கை, யன்னமென்னடையி னாளு மபயமுன்மதியென் பாளாம்"1 என்பதனா லறிக. அறவுரையை மழை யென்றமையின், "பொழியலுற்றான்" என்றார்.
அபயருசி நிரைசெய்து கூறுவல் என்றல்
உரை:- அரைச-அரசே, நின் அகத்து மாட்சியது- நின் மனத்தின் மாண்பானது, பெரிது அழகிதாயிற்று- மிகவும் அழகாகவுளது, உரைசெய்தால்-யாம் எம் முன்னைப் பிறவி வரலாற்றைச் சொல்லலுற்றால், உறுதியாயது- நினக்கு உறுதியாகும் பொருளினை, உணர்ந்து-தேர்ந்தறிந்து, கொண்டு-அதனையே மேற்கொண்டு, உய்திபோலும்- உய்திபெறுவாயாக, விரை செய்தார்-மணம்கமழும் மாலை யணிந்த; வரை செய் மார்ப - மலைபோலும் மார்பையுடையோய், வினவிய பொருள் இது எல்லாம் - நீ கேட்ட இப்பொருள் அனைத்தையும், யான் நிரைசெய்து புகல்வன் - யான் வரிசைப்படுத்தி முறையாகவுரைப்பேன், நினைவொடு - ஒரு முகமான கருத்துடன், இதுகேள் - இதனைக் கேட்பாயாக; என்றான் - என்று அபயருசி கூறினான் எ -று.
அரைச. மொழியிடைப்போலி. "இன்னினி இறைவன் நீயே எனக்கு" (67) என்று வாயாற் சொல்லி, மெய்யால் "இறைஞ்சி நின்று", முன்னைப் "பவத்தொடு பரிவும்" மொழிக என்று வேண்டியது கண்டு, அபயருசி மனம் கனிந்து அரசன் கேட்டது கூறலுறுகின்றானாக, அவ்வரசனது மனவேட்கையின் மிகுதி அவன் முகத்தே திகழக்கண்டு பாராட்டுவானாய், " நின் அகத்து மாட்சியது பெரிது அழகிதாயிற்று" என்றும், முன்னைப் பவமும் பரிவும் மொழிந்து செல்லுங்கால் இடையிடையே உறுதியாய பொருள்கள் விரவிவருமாதலின், அவற்றை அறிவால் தேர்ந்து மேற்கொண்டு உய்தல் வேண்டும் என்பான், " உறுதியாய துணர்ந்து கொண்டுய்தி" என்றும் கூறினான், போலும், உரையசை; இதனை வடநூலார் வாக்கி யாலங்காரம் என்ப. விரைசெய் தார் வரை செய் மார்ப, என்பது இணையெதுகை. தார் மார்ப, வரைசெய் மார்ப என இயையும். இதற்குப் பிறவாறும் கூறுப. நிரை செய்துரையாவழி, இடையிடையே விரவப்படும் உறுதிப்பொருள்கள் இனிது தேர்ந்து கொள்ளப்படாவாதலின், " நிரை செய்தே புகல்வன்" என்றான், ஏகாரம், தேற்றம். உறுதியாய கேள்வியால் தோட்ட செவியனல்லனாதல் தோன்ற, "நினைவொடு கேள்" என வற்புறுத்தினான்.
----------
கேள்வியாலாம் பயன் கூறல்
உரை:-- வேந்தே - அரசே, இதனை எவ்வளவு கேட்பார் - யாம் கூறும் இவ்வழரவுரையை ஒருவர் எவ்வளவு கேட்கின்றாரோ, இருவினைக் கழுவும் நீரார் - அவர் இருவகை வினைகளாகிய அழுக்கினைக் கழுவிக்கொள்ளும் தன்மை யுடையராவர், அவ்வளவு-அவ்வளவும், அவருக்கு ஊற்று செறித்து-அவருக்கு உறுகின்றனவாகிய ஊற்றுகளையும் அடைத்து, உதிர்ப்பை உடன் ஆக்கும்-நன் ஞானத்தைப் பெறுவிக்கும், மெய்வகை தெரிந்து-உயிர் முதலிய தத்துவக் கூறுகளை யாராய்ந்து, மாற்றை வெருவினர் வீட்டை-உலக வாழ்க்கையை யஞ்சித் துறவுபூண்டோ ரெய்தும் வீடு பேற்றினை, எய்தும்-எய்தக்கூடிய, செவ்வியராகச் செய்து தகுதியுடையராக்கி, சிறப்பினை நிறுத்தும்-முத்திச்சீவனாகிய சிறப்பை நிலை பெறுவிக்கும் எ-று.
இச் செய்யுளால், இவ்வறங்கேட்டலால் வரும் பயன் கூறுகின்றானாதலின் "ஏனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்"1 என்ற கருத்தையுட்கொண்டு, முதற்கண் இக்கேள்வி இருவினைகளாகிய அழுக்கைக் கழுவித் தூய்மை செய்துகொள்ளும் தகுதியை யுண்டுபண்ணும் என்றற்கு, "கேட்பார் இருவினை கழுவும் நீரார்" என்றான். ஊற்று, இருவினையும் உயிரையுறுவது, உறுவது, ஊற்று; இரும்பைப் பழுக்கக் காய்ச்சிய விடத்து அதனிடத்தே உற்றுத்தோன்றும் நீர்போல உயிரிடத்தே இருவினையும் தோன்றுதலால் ஊற்றாயிற் றென்பர், "ஓதிய விரண்டும் (நல்வினை தீவினைகள்) உயிரினை யுறுதல், ஊற்றாம், தாதுறக்காய்ந்த போழ்தில் தானுறும் நீரை யொத்தே"2 என்று சான்றோர் கூறுதல் காண்க. இஃது ஈனம், அதிகம், ஈராபதம், சாம்பராயம், ஞானம், அஞ்ஞானம், புண்ணியம், பாவம், தவியம், பரிணாமம் எனப் பத்து வகையாகும்,. இவ்வூற்றுக்கள் தவத்தால் அடைக்கப்படுவனவாம்.; "ஊனந்தீர்தவத்தினூற்றுச் செறித்தமாதவனை யேத்தி"3 என வருதல் காண்க. அடைத்தலாவது குப்தி, சமிதி, தருமம், சிந்தை, அடக்கம், தாபனம் என்பனவற்றால் "பரிசை வெல்லும் தன்மை"4 என்பர். இவற்றுள் அடக்கம், தாபனம், பரிசைவெற்றி என்ற மூன்றும், நன்னினைவு, நல்லுணர்வு இரண்டும்கூடி முத்தி நிலையை யுண்டுபண்ணும் என்பவாகலின், "ஊற்றுச் செறித்துடன் உதிர்ப்பை யாக்கும்" என்றான்.
அடைப்ப செறிப்பெனப் படுதலின் ஊற்றுச் செறிப்பு உதிர்ப்பை யாக்கும் என்றானாயிற்று "நின்ற வந்தத்தின் மூன்றும். (அடக்கம் முதலிய மூன்றும்) நினைப்பு உணர்வு உதிர்ப்பை யாக்கும்" என்று பிறரும்1 கூறுதல் காண்க. இவற்றின் விரிவெல்லாம் பதார்த்தசாரம் மேருமந்தரபுராணம் முதலிய நூல்களுட் கண்டு கொள்க. உலக வாழ்வின் பொய்ம்மையும் முத்தி வாழ்வின் மெய்ம்மையும் வேறுபடுத்து நோக்;குமிடத்து, உடலோடு கூடிச் செய்யும் உலக வாழ்வு துன்ப ஏதுவாவது தோன்றுதலின், அறிவுடையோர் முத்தி வாழ்வைத் தெரிந்துணர்ந்து, உலக வாழ்விற்கு அஞ்சித் துறவு பூண்டு வீட்டு வாழ்வை உரிமை செய்து கொள்வர் என்றற்கு "மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை" யென்றான். மெய்வகை தெரியாதார் உலக வாழ்வில் துன்பமும், தெரிந்தார் வீட்டு வாழ்வில் இன்பமும் நுகர்வர் என்றகருத்தேபட, "மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டுமாம், சென்ற தத்துவந் தெளியாமை தேறலால்"2 என்று வாமன முனிகளும் உரைத்தல் காண்க. மெய்-தத்துவம். வீட்டின்ப வாழ்வை நோக்க, உலக வாழ்வு துன்பமாய் மாறுபட்டிருத்தலின் "மாற்று" என்று சமண் சான்றோர் கூறுகின்றனர். வீட்டுயிரின் சிறப்பாவது, "வெவ்வினை யெண்மையின், கேட்டில் எண்குண மெய்தியோர் கேடிலா, மாட்சியால்"3 உலகந்தொழ விளங்குவது. கேட்பதனால் உளதாம் பயன் தெரியாவழிக் கேட்போர்க்குக் கேள்விக்கண் மனம் செல்லாது என்னும் கருத்துப்பற்றி இவ்வளவும் அபயருசி தொகுத்துக் கூறினா னென வுணர்க.
இதுவுமது
உரை:-மலம் மலி குரம்பையின்கண்-(மேலேகூறிய கேள்வி)மலம் நிறைந்த உடம்பின்கண்ணதாகிய, மனத்து எழு விகற்பை மாற்றும்-மனத்தில் எழுகின்ற திரிபுணர்ச்சிகளைப் போக்கி உண்மையுணர்வுகளாக்கும், புலம் மலி போகத்தின்கண்-ஐம்புலன்களாலும் நுகரப்படும் நுகர்ச்சிக்கண் உண்டாகும், ஆசையைப் பொன்றுவிக்கும்- ஆசையைக் கெடுத்து வீட்டின்பத்தில் வேட்கை நிகழப் பண்ணும், கொலை மலி கொடுமைதன்னைக் குறைத்திடும்- கொலை முதலிய தீவினைக் கேதுவாகிய தீயவுணர்ச்சிகளைத் தழையாவாறு வெட்டி வீழ்த்தும், கோலச் சிலைமலிநுதலினார் தம் காதலின்-அழகிய வில்போலும் புருவத்தினையடைய மகளிர்பால் உண்டாகும் காமவிச்சைக்கு, மனத்தில் தீமை செய்யும்-மனத்திடத்தே கொடிய வெறுப்பினை யுண்டு பண்ணும் எ-று.
மலம்,அழுக்கு, குரம்பை, உடம்பு; "பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பைப்"1 என்று ஔவையாருங் கூறுதல் காண்க. இவ்வுடம்பை இடமாகக் கொண்ட மனம், பொருள், இடம், காலம், பாவம், பவம், உருவம், பெயர் என்ற இவற்றால் திரிபுணர்ச்சி கொள்வதாதலின், அவ்வுணர்ச்சி இவ்வற வுணர்வால் செம்மை யெய்தும் என்றற்கு "மனத்தெழு விகற்பை மாற்றும்" என்றான். போகத்தின்கட் பிறக்கும் ஆசை ஒன்று பலவாய்ப் பெருகிப் பிறவிக் கேதுவாதலின் "ஆசையைப் பொன்றுவிக்கும்" என்றான். விகற்ப வுணர்வும், போகத்தின்கண் ஆசையும் கொலை முதலிய பெருந் தீவினையாகிய மரத்தை வளர்த்து மேலும் பல வினைகளாகிய கனி வகைகளை விளைவித்தல் பற்றி "குறைத்திடும்" என்றான். மகளிர்பால் உண்டாகும் காம விச்சை மனத்தின்கண்ண தாகலின், அவ்விடத்தே எழாதவாறு கெடுத்தழிக்கும் என்றற்குத் "தீமை செய்யும்" என்றான். நுதல், ஆகுபெயர். நெற்றிக்கே யுரைப்பினுமாம்.
இதுவுமது
உரை:- பிறந்தவர்-மண்ணில் உடம்பொடு பிறந்தவர்கள், பெறுபயன்-பெறுதற்குரிய நலங்களை, முயற்சியால்- தத்தம் முயற்சியினால், அடைவர் என்று-பெறுவார்கள் என்றும், அல்லால்-அல்லாமலும், இறந்தனர் பிறந்ததில்லை என்று-இறந்தவர்கள் பிறந்தது கிடையாதென்றும், இருவினைதானும் இல் என்று-இருவினை என்பவைகளும் இல்லையென்றும், அறைந்தனர்-சொல்பவர்கள், அறிவில்லாமை அது விடுத்து-அவ்வாறு தாம் சொல்வதற் கேதுவாகிய அறியாமையைப் போக்கி, அறநெறிக்கண்- அறநெறியின் கண்ணே செலுத்தி, சிறந்தன-வீடுபேற்றுக் குரியவற்றைக் குறித்து, செப்பும் இப்பொருண்மை-யாம் இப்போது சொல்லுகின்றதாகிய இவ்வறப்பொருள், முயலப்பண்ணும்-முயற்சி செய்விக்கும் எ-று.
இப்பொருண்மை, அறிவில்லாமை விடுத்து, அறநெறிக்கண் செலுத்தி, சிறந்தன முயலப்பண்ணும் என்று முடிக்க. செலுத்தி யென்பது எஞ்சி நின்றது. இப்பொருளின் தன்மை இது வென்பான், பொருண்மையென் றொழிந்தான். அறைந்தவர் தாமே அறியாமை விடுத்து அறநெறிக்கண் நின்று சிறந்தன முயலுமாறு செய்யுமென்றுமாம். வினைத்தொடர்பென்ப தொன்று வேண்டா, பிறந்தவர் பெறும் பயனுக்கு அவர் முயற்சியே காரண மென்பார், "முயற்சியாலே பெறுபயனடைவ"ரென்கின்றனர். மறுபிறப்பில்லை, இருவினையில்லை என்பன முதலாயின பிறர் கூறுவதைக் கொண்டு கூறியனவாம். என்று என்பது எங்கும் கூட்டப்பட்டது, "வினை பகை யென்றிரண்டினெச்சம்"1 என்புழிப்போல.
தாம் அறமுணர்ந்த வரலாறு கூறல்
உரை:- அறப்பொருள் விளைக்கும் காட்சி-யான் கூறும் அறமாகிய பொருள் விளைவிக்கும் பயனை, அருந்தவர் அருளிற்றன்றி-அரிய தவத்தையுடைய முனிவரர்கள் உரைத்தருளியதனாலு மன்றி, பிறப்புணர்ந்ததனின்-பழம் பிறப்பு வரலாறுகளை யறியு மறிவுடைமையால், யாமே- எம்மால், பெயர்த்தும் உணர்ந்திடப்பட்டது-மறுபடியும் உணரப்பட்டதாகும், அதன்கண்-அதனால் அவ்வறப் பொருளின்கண், தேற்றம் - கருத்தை,இறப்பவும் - மிகவும் தெளிவாக, இனிது வைத்திடுமின் - இனிது வைத்துக் கேட்பீராக, என்றான் - என்று அபயருசி கூறினானாக, எவரும் - ஆங்கிருந்த யாவரும், உறப்பணிந்து - மிகவும் பணிந்து, உவந்தனர் கேட்கலுற்றார் - விருப்பத்துடன் கேட்பாராயினர் எ-று.
அறமாகிய பொருளால் விளையும் பயன் கருவிகளால் காணப்படுதலின் காட்சி யெனப்பட்டது. கோழியாயிருந்த காலத்து அகம்பன முனிகளும், இரட்டையராய்ப் பிறந்தபின் சுதத்த முனிகளும் பழம்பிறப்பினை யுணர்த்தினமையின், "அருந்தவர்" என்றான். திருவறம் உணர்ந்து திருந்திய அறிவின ரானபோது தாமாகவும் உணர்ந்து கொண்டது என்பான், "பெயர்த் துணர்ந்திடவும் பட்டது" என்றான். உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது. இறப்பவும் இனிது என்பன வன்புறை குறித்து நின்றன. இவ்வாறு உபதேச முகத்தாலும் காட்சி வகையாலும் உணர்ந்தது எனவே, யாவர்க்கும் அப்பொருளைக் கேட்டற்கு நாட்ட முண்டாயிற்றென்பார், "உறப்பணிந்து எவரும் உள்ளத் துவந்தனர் கேட்கலுற்றார்" என்றார். உவந்தனர், முற்றெச்சம். அரசன் முதல் ஆங்கிருந்த மக்களனைவரும் என்றற்கு "எவரும்" என்றார்.
முதற் சருக்கம் முற்றிற்று.
---------------
இப்பகுதிக்கண், அவந்திநாட்டு உஞ்சயினி நகரத்தே அசோகன் என்னும் வேந்தன் சந்திரமதியென்பாளை மணந்து யசோதரனென்னும் மகனைப்பெற்று இனிதிருப்பதும், அவன் ஒருகால் தனக்கு நரையுண்டானது கண்டு வருந்தி, யசோதரனை அரசனாக்கிவி்டுத் தவமேற்கொள்வான் குணதரனென்னும் முனிவன்பால் அறங்கேட்டுத் தவம்புரிந்திருப்பதும், யசோதரன், அறத்தை நெகிழ்த்துப் பொருளின்பங்களில் தோய்ந்து கிடப்பதும், அவற்கும் அவன் மனைவி அமிர்தமதியென்பாட்கும் யசோமதியென்னும் மகன் பிறந்திருப்பதும், சில யாண்டுகட்குப்பின் ஒருநாள் அமிர்தமதி கணவனோடு பள்ளியில் கண்ணுறங்குபவள், அட்ட பங்கனென்னும் யானைப்பாகனொருவன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணைப் பாடக்கேட்டு மனமுருகி அவன்பாற் கள்ளக் காமங் கொள்வதும், குணவதி என்னும் தோழி பலவாறு எடுத்தோதி அவள் செயலை விலக்கவும், அமிர்தமதி ஏலாது, அட்டபங்கனைக் கூட்டுவிக்கவேண்டுமென அக் குணவதியை வற்புறுத்துவதும், அவள் இசைந்துசென்று அட்டபங்கனை மதியுடம்படுப்பதும், அமிர்தமதியும் அட்டபங்கனும் கள்ளக்காம நுகர்ச்சி பெற்றுவருவதும், அவட்கு யசோதரன்பால் முனிவு முறுகுவதும், அரசன் ஐயுற்று அவளது கள்ளவொழுக்கத்தை யறிந்து முதற்கண் கொலை புரிய நினைந்து பின் மாறுவதும், அரசவைக்கண் அமிர்தமதியுடன் அசதியாடிக்குறிப்புரையால் இகழ்வதும், தனக்குள்ளே மகளிர்போகமும் அரசியற்போகமும் வெறுத்து, அமிர்தமதியின் கள்ளவொழுக்கத்தை ஒரு கனவின்மேல் வைத்துத் தாயாகிய சந்திரமதிக்கு உரைப்பதும், அவள் சண்டமாரிக்கு உயிர்ப்பலி தந்து வழிபட்டுக் கனவுகாட்டிய தீங்கு ஒழிக என்பதும், அவன் உடன்படாதொழிவதும், அவள் சினந்து மாவால் கோழியொன்று செய்து பலியிட்டுவழிபடுக வென்பதும், அவன் அவ்வாறே செய்தபோது மரக்கோழி உயிருடையதுபோல் கூவி விழுதலும், அவன் வருந்தித் துறவு பூண்பதும், அமிர்தமதி அவனுக்கும் சந்திரமதிக்கும் நஞ்சுணவுதந்து கொல்வதும், இருவரும் விலங்குகளாய்ப் பிறப்பதும், யசோமதி அரசனாதலும் பிறவும் கூறப்படுகின்றன.
-----------
அவந்திநாட்டு உஞ்சயினி நகரம்
உரை: வளவயல் வாரியின் - வளவிய வயல்களாகிய வருவாயால், மலிந்த - செல்வம்நிறைந்த, பல்பதி - பலநகரங்கட்கு இடமாகிய, அளவறு சன பதம் - அளவில்லாத மக்களையுடைய நாடு, அவந்தியாம் - அவந்திநாடாகும், அதின் விளைபயன் - அதன்கண் வாழ்வார்க் கெய்தும் போகம், அமரரும் விரும்பும் நீர்மையது - தேவரும் விரும்பத்தக்க தன்மைத்தாகும், ஒருநகர் உளது - அந்நாட்டிற்குத் தலையாய நகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று பெரியோர் கூறுவார்கள். எ - று.
வயல்வளத்தால் மிக்க விளைபொருளும், அதன் வாயிலாகப் பெருஞ்செல்வமும் பெருகுதலின், வளவயலை “வாரி” யென்றார். வாரி, வருவாய்; “புயலென்னும் வாரி” (14) என்ற திருக்குறட்குப் பரிமேலழகியார் கூறும் உரை காண்க. சனபதம், நாடு; உம்மை, சிறப்பு. அஃதென்னல் வேண்டும் ஆய்தம், விகாரத்தால்தொக்கது. உஞ்சயினி, வடசொற்சிதைவு. என்ப வென்றதனை அசையாக்கினுமமையும்.
----------
நாட்டரசன் அசோகன் எனல்
உரை: கந்துஅடு களிமத யானை - கட்டுத்தறியை அலைக்கும் மதக்களிப்பினையுடைய யானைகளையுடைய, மன்னவன். அரசனாவான், இந்திரன் எனும் திறல் - துறக்கவேந்தனான இந்திரனேயென்று சொல்லத்தக்க திறல்படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன் என்று பெயர் கூறப்படுவான் உளன், சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் - சந்திரமதியென்னும் மங்கைநல்லாளுடன்கூடி, அந்தம் இல் உவகையில்-முடிவில்லாத இன்பத்தையுடையனாய், அமர்ந்து வைகும்நாள் - அதனை விரும்பிவாழும் நாட்களில் எ-று.
வறிதேயுள்ள யானை கந்தினை அலைப்பதற்குக் காரணம் மதக்களிப்புடைமை யென்றற்கு, "கந்தடு களிமதயானை" என்றார். பொழிகின்ற மதமுடைமை தோன்றற்கு, "களிமதயானை" எனல் வேண்டிற்று. போகப்பேற்றாலேயன்றி வலியாலும் இந்திரனை யொப்பான் என்பார், "இந்திரனெனுந் திறல் அசோகன்" என்றார். மடந்தை, பருவத்தாலும் பொதுவியல்பாலும் கூறியது. சந்திரமதியின் கூட்டம் கூடுந்தோறும் புத்தின்பம் பயந்துவந்தமையின், "அந்தமில் உவகையன்" என்றார். அந்தமின்மை அமர்ந்து வைகற்கு ஏது.
-------------
யசோதரன் பிறப்பு
உரை:-இந்து - மழுமதியானது, ஓர் இளம்பிறை பயந்த தென்ன - ஓர் பிறைச்சந்திரனைப் பெற்றாற்போல, சந்திரமதி - சந்திரமதியாகிய அரசி, ஒரு தனயன் தந்தனள் - ஒரு மகனைப் பெற்றாள், எம் துயர் களைபவன் - எங்கள் துன்பத்தைத் துடைப்பவனான அசோகமன்னன், நந்திய புகழ் அவன் - மிக்கபுகழையுடைய அந்த மகனுக்கு, இசோதரன் என - யசதோரன்னென்று, நாமம் ஓதினான் - பெயர் வழங்கினான் எ-று.
சந்திரமதி யசோதரனைப்பெற்றது, முழுமதி இளம்பிறையை ஈன்றதுபோல என்றார், சந்திரமதியின் அறிவே யசோதரன் மதியைத் தன்வழி யொழுகுவித்த தாதலின். முழுமதி இளமதியையீனல், இல்பொருளுவமை. எம்மைப்போல் பிறவித்துயர்களையும் நல்லொழுக்கமுடையனென்பான்,"எம்துயர் களைபவ" என்று அபயருசி கூறுகின்றான். எம் துயர் களைபவன் என்றதை யசோதரற்கே யேற்றி, துயர்களைபவனாதலால் யசோதரனெனப் பெயரிட்டான் என்றுமாம்.
--------------
யசோதரன் இளவரசனாய் அமிர்தமதியென்பாளை மணந்து மகிழ்தல்
உரை:- இளங்களிற்று உழுவையின் ஆண்புலிக்குருளை போல. ஏதம் இன்றி - நலிவு சிறிதும் இன்றி, வளம்கெழு குமரனும் - வலிபொருந்திய யசோதரனும், வளர்ந்து - வளர்ச்சிபெற்று, மன்னனாய் - இளவரசனாகி, விளங்குஇழை அமிழ்தமுன்மதியை - விளங்குகின்ற அணிகலன்களையுடைய அமிர்தமதியென்பவளை, வேள்வியான் - திருமணத்தால், உளங்கொள - மனம் இன்பம்நிறைய, புணர்ந்து - கூடி, உடன் உவகை எய்தினான் - உடனெய்தும் இன்பத்தை நுகர்ந்து வரலானான் எ-று.
களிறு, விலங்கின் ஆண்பாற்பெயெர்; “ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்”1 என ஆசிரியர் கூறுதல் காண்க. இக் களிறென்னுஞ் சொல் வேழம், கேழல் என்ற இரண்டற்கும் சிறப்பவெய்துவிப்பவாயினும், ஈண்டு இது பொதுவிதியான் அமைந்ததெனவுணர்க. “இளங்களி றுழுவையின் ஏதமின்றியே”என்று பாடங் கொள்ளின், புலியால் தீங்கின்றி இளங்களிறு வளர்ந்தாற்போல என்று பொருள்கொள்க. அசோகனாட்சியிலாதல், யசோதரனாட்சி யிலாதல் உழுவை போலும் பகையுண்மை கூறப்படாமையின், அது பாடமன்மையறிக. வளம், ஈண்டு மெய்வன்மைமேற்று. “மன்னனாய்” என்று ஈண்டுக்கூறியது, பிறாண்டு, “யசோதரன்னெனுந் தனயனை நிலமகட்டலைவனாகென” (83) முடிசூட்டல் கூறப்படுதலின், இளவரசனாதலைக்குறித்து நிற்பதாயிற்று. புணர்ச்சி நிகழுமிடத்தே இன்பமும் உடன்நிகழ்தல்பற்றி, “உடன் உவகையெய்தினான்” என்றார். புணர்ச்சியின்பமே நெஞ்சில் எஞ்ஞான்றும் நிலவப் புணர்ந்தனரென்றற்கு, "உளங்கொளப் புணர்ந்து" எனச் சிறப்பித்தார்; இதனாற்பயன், நல்லறிவுகாட்டும் நன்னெறியைக் கடைபோகச் செல்லும் கடைப்பிடி அவன்பால் இன்மையுணர்த்துவது.
யசோதரனுக்கு யசோமதியென்னும் மகன் பிறத்தல்
உரை: இசோதரன் - யசோதரனாகிய இளவரசன், இளையவள் - இளமையுடையவளான அமிழ்தமதியின், எழில் - அழகையும், நலம் - குணஞ்செய்கைகளின் நலத்தையும், ஏந்து கொங்கையின் விளைபயன் - உயர்ந்த முலையிடத்தே பெறும் இன்பத்தையும், விழைந்து - விரும்பி, செல்லும் நாள் - இனிதிருக்குங்காலத்தில், கிளையவர் - சுற்றத்தார், உவகையின் கெழும - மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, வளையவள் - வளையணிந்த அவ்வமிர்தமதி, இசோமதிமைந்தன் தன்னை - யசோமதியென்னும் மகனை, ஈன்றனள் - பெற்றாள், எ - று.
யசோதரன் அமிழ்தமதியின் இளமை, எழில், ஏந்து கொங்கை என்ற இவற்றின் நலத்தை விழைந்து இன்புற்றொழுகியதும், அவ்வொழுக்கத்தின் பயனாக, யசோமதியைப் பெற்றதும் இதன்கட் கூறினார். காமவின்பத்துக்குச் சிறப்புத்தருவது இளமையாதலின், "இளையவள்" என்றெடுத்து, அமிழ்தமதியின் பிற எழில் நலங்களையும் கொங்கைப்பயனையும் விதந்தோதினார். யசோமதியின் பிறப்பு அசோகனது வழியெஞ்சாமைக்கு ஆக்கமாதலின், "கிளையவர் உவகையிற் கெழும வீன்றனள்" என்றார். இவ்வாறு மனைக்கு விளக்காகிய அமிழ்தமதி தனக்கு விளக்கந் தரும் மகனைப் பெற்றாளென்றற்கு, "வளையவள் இசோமதிமைந்தன்தன்னை யீன்றனள்" என அவள்மேலேற்றினார். அவளுடைய எழில்நலச் சிறப்பை, யசோதரன்மேலும் மகற்பேற்றினை அவள்மேலும் கூறியது, பின்னர் அவள் தன் நலத்தைப் பொருந்தா வொழுக்கத்தில் ஈடுபடுத்திக் கெடுவதும், யசோமதி சிறப்புற்று மேம்படுவதும் குறிக்கொண்டு போலும். வளையவள், சுட்டு.
-----------
அசோகன் தனக்கு முதுமை வரவு காண்டல்
உரை:- ஒருநாள் - இவ்வாறு செல்லுங்காலத்து ஒரு நாள், மன்னவன் - வேந்தனாகிய அசோகன், கண்ணடி பற்றுவான் - கண்ணாடி யேந்திக்காட்டுவோன், அடிதொழ - அடிபணிந்து அதனைக் காட்ட, படிவம் மகிழ்ந்து நோக்குவான் - தன் வடிவத்தைக் காணவிரும்பி அதிற் காண்பவன்- வார்குழல் ஒற்றைமயிர் - நீண்ட கடைகுழன்ற மயிரொன்று, உச்சி - நுனியில், வெண்மையை உற்று - வெள்ளை நிறத்தைப் பொருந்தி, உறாவகையதை - புறத்தே நன்கு தோன்றாவகை மறைந்திருப்பதை, உளைந்துகண்டனன் - மனம் வருந்திப் பார்த்தான் எ-று.
பண்டையரசர்பால் அடைப்பை தாங்குவோர், அடியீடேந்துவோர்,கண்ணடியேந்துவோர் எனக் குற்றவேல் செய்வார் பலர் இருந்தைமையின் ஈண்டுக் கண்ணடியேந்துவோனைக் குறிப்பித்தார். தன்னை நன்கு ஒப்பனை செய்துகொள்ளக் கருதிக் கண்ணாடி நோக்குங்கால்; மகிழ்ச்சி பிறத்தல் இயல்பாதல்பற்றி, "மகிழ்ந்து நோக்குவான்" என்றார். அவன் மகிழ்ச்சி முற்றும் வருத்தமாய் மாறிற்றென்பது, "உளைந்து கண்டனன்" என்பதனால் பெற்றாம். ஒரு மயிர் நுனியில் நரைத்துத் தன் நரைப்புத் தோன்றாவகை மறைந்திருப்பினும் அதனைக் கண்டு களைந்தவன், மனத்தே வருத்தமுற்றானென வறிக. அதற்குரிய காரணத்தை மேல்வரும் பாட்டுக்களால் உரைக்கின்றார்.
-----------
அசோகன் தன் மனத்தே பலபட நினைத்தல்
உரை:- வண்தளிர்புரை - வளவிய மாந்தளிர்போலும், திருமேனி மாதரார் - அழகியமேனியுடையமகளிர், கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழிய மூப்பு - ஆண்டு மிகுதியையுடைய முதுமைப்பருவமானது, உண்டுஎனில் - உளதாயின் அது வரையிற்றான், உளைந்து- மனம் திரிந்து, இகல் - மாறு பாட்டினையுடைய, உருவ வில்லிதன் - அழகிய வில்லினையுடைய மன்மதனது, வண்டுஉள கணை - வண்டு மொய்க்கும் பூவாகிய அம்பு, மனிதர்க்குப் பயன் - மக்கட்குக் காம வேட்கையாகிய பயனை விளைவிக்கும், என்றனன் - என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எ-று.
தளிரனப் பொதுப்படக்கூறினமையின், சிறப்புடைய மாந் தளிர் கொள்ளப்பட்டது, "மாவின் அவிர்தளிர்போலும் மேனியர்"1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. கண்டார் மனம் கவரும் அழகு திகழும் மேனியைத் "திருமேனி" யென்றார். மிக்க காதலராயினும், மூப்பெய்தியவழி அக்காதலாற் பெறும் காமவின்பம்குன்றுதலின், அவர் காமக் காதலும் நீங்கும் என்பார், "கண்டு அகலுற" என்றும், யாண்டு மிகமிக மூப்புமிகுதலின், "கழிய மூப்பு" என்றும் கூறினார். எனில் - என்றால். காமவேட்கையுற்றார்க்கு மனத்துன்பம் இயல்பாதலின் "உளைந்து" என்றார். காமன் உருவிலியாயினும், அவன் வில் உருவுடைத்தாய், சான்றோர்க்கு அச்சம் தருவதாதலின், "உருவவில்லி" என்றார்.வண்டுள கணை, வண்டு தங்கியிருக்கும் பூங்கணை. மலர்க்கணை, காம வேட்கையைக் கிளரச் செய்வது, பயனாதலின், அதனை, "வண்டுளகணை பயன்" என்றான்.
அசோகன் இளமையின் வளமையின்மையைத் தன்னுள் நினைத்தல்
உரை:-இளமையின் இயல்பு இதுவாகும் என்னின் - இளமைப்பருவத்தின் இயல்பு இத்தன்மைத்தாகுமாயின். இவ்வளமையில் இளமையை - இவ்வளப்பமில்லாத இளமைப் பருவத்தை, மனத்துவைப்பது என் - மக்கள் தம் மனத்தே பொருளாக மதித்துக்கொள்வது எற்றுக்கு, கிளைமையும் அன்னதே - ஏனையோர் உறவுமுறைமையும் அத்தன்மைத்தேயாகும், இனி - இனிமேல், நம் உளம் கெழுமும் தளைமையை - நம்மனத்தே எழும் அன்பினை, விடுவது தகுவதாம் - பற்றற விட்டொழிப்பதே சால்பாகும் எ-று.
இளமைகுன்றாது இன்பத்திற் செம்மாந் திருக்கின்றேமெனத் தருக்கிய வுணர்வால் மகிழ்ச்சியுற்றுக் கண்ணாடி நோக்கிய வேந்தற்கு மயிரின் நரை தோன்றி அவ்விளமையின் கழிவினைக் காட்டக்கண்டு, அதன் நிலையாமையினையும் தேர்ந்து கூறுகின்றாதலின், "இளமை யினியல்பிதுவாகும் என்னின்" என்றான். இளமையே வளமை யென்றும், "இளமைற் சிறந்தவளமையுமில்லை”1 என்றும் கூறப்படுவன கொண்டு, அதனைப் பேணுதலும் உலகியலாதலின், அதனை முனிந்து, "இவ்வளமையில் இளமையை மனத்து வைப்பது என்" என்றான்; எனவே, இளமையின் வளமையாவது, நிலை பேறுடைத்தாய் இன்பநுகர்ச்சித்தாய் இருத்தலென்பதும், அதுகழிந்த வழிச் செல்வமும் இன்பந்தாரா தென்பதும் பெற்றாம்" இளமை கழிந்த பின்றை வளமை, காமம் தருதலுமின்றே2" என்று பிறரும் கூறுதல் காண்க. மனைவி மக்கள் அடியாகப் பிறக்கும் கிளைஞர் உறவும், அரசு, செல்வம் முதலிய பற்றுக்கோடாக, "உறின் நட்டு அறின்" ஒருவும் இயல்பிற்றாதலை யுணர்ந்து நிற்றலின், "கிளைமையும் அணையதே" என்றான். அன்பின்பயன் அதனைச்செய்வோரும் செய்யப்படுவோரும் பிணிப்புண்டுநிற்றலாதலின், அதனைத் "தளைமை" யென்றும், அதுகாரணமாக வேண்டுதல் வேண்டாமை தோன்றித் துன்பம் விளைத்தலின், "விடுவது தகுவதாம்" என்றும் கூறினான். ஏகாரம் இரண்டும் தேற்றம்.
புண்ணியமே செயற்பாற்றென அசோகன் நினைந்து தெளிதல்
உரை:- முந்து செய் நல்வினை - முன்னைப் பிறவியிற் செய்த நல்வினையானது, இத் தலை முளைப்ப - இப்பிறவியில் தன் பயனைத் தோற்றுவிக்க, சிந்தைசெய் பொருளொடு - உயர்ந்தோர் மதிக்கத்தக்க நல்லறிவுடன்;செல்வம் எய்தினாம் -அரச போகத்தையும் அடைந்தள்ளோம், முந்தையின்- முன்னையினும், மும்மடி புண்ணியம் முயலின் - மூன்று மடங்கு மிகுதியாக நல்வினையைச் செய்யின், இந்திர வுலகமும் எய்தலாம்-தேவருலகத்துப் பெறும் போகத்தையும் பெறலாம், எனா-என்று எ-று.
ஒருவன் செய்யும் வினை அவன் உயிரின்கட்கிடந்து, அவன் புக்குழிப்பகும் இயல்பிற்றென்பவாதலின், "முந்துசெய்நல்வினை முளைப்ப வித்தலை" என்றார். "முளைப்ப" என்ற குறிப்பு, நல் வினையாகியவிதை உயிராகியநிலத்து விதைக்கப்பெறுதலை யுணர்த்தி நின்றது; "வெவ்வினை செய்யுமாந்தர் உயிரெனும் நிலத்துவித்தி அவ்வினைவிளையுளுண்ணும் அவ்விடத்து"1என்று பிறரும் கூறுதல் காண்க. ஒருவன் சிந்தைசெய்வன, இம்மைக்கண் புகழும் மறுமைக் கண் பண்ணியமும் வீடுபேறுமாதலின், அவற்றிற்கேதுவாய புகழும் உறுதிப்பொருளறிவும் கூறுவார், "சிந்தை செய் பொருளொடு செல்வம் எய்தினாம்" என்றார்.செல்வத்தினும் பொருள்சிறந்து நிற்றலின், "பொருளொடு" என்றார்.பிறந்த பிறப்பால், இறந்த பிறவியிற் செய்த வினையினைத் தெரிந்து கொண்டானாதலின், "சிந்தைசெய் பொருளொடு செல்வமெய்தினா" மென்றும், "முந்து செய்நல்வினை" யென்றும் கூறினானெனவுணர்க. மீட்டும் முன் செய்த அளவாதல், இருமடியாதல் நல்வினை செய்யின், மறுமையில் மண்ணுலகத்தே அரசர்போகமும், அவர் எல்லாருள்ளும் தலையாய போகமுமே எய்துமெனத் தெளிதலின், "மும்மடி புண்ணியம் முயலின்" என்றும், அதனாற்பயன் விண்ணுலத்துப்பெறும் இந்திரபோகம் எய்துமென்றுகண்டு, "இந்திரவுலகமும் எய்தலாம்" என்றும் தனக்குள் தெரிந்துரைப்பானாயினன். இவ்வாராய்ச்சி யுடையவன், நிலையில்போகமாகிய இந்திரவுலகத்தையும் பின்னர்த் துறந்து வீடுபேற்றிற்கே முயல்வான் என்றறிக.
அசோகன் துறவு
உரை:- காவலன்-வேந்தனான அசோகன், இனையன நினிவுறீஇ-இத்தன்மையானவற்றை நினைந்து, யசோதரன் எனும் தனயனை-யசோதரன் எனப்படும் தன் மகனை, நில மகள் தலைவன் ஆக-நிலத்துக்கரசனாகுக, என-என்று சொல்லி, கனமணி வனைமுடி கவித்து-பெரிய மணிகளைக் கொண்டு செய்யப்பட்ட முடியைச் சூடி, புனைவளை மதிமதி புலம்ப-வளையணிந்த சந்திரமதியாகிய தன்தேவி தனித்து வருந்த, போயினான்-அரசியல் தொடர்பு துறந்து சென்றான் எ-று.
"முந்தையின் மும்முடி முயலிற் புண்ணியம், இந்திரவுலகமும் எய்தலாம்" (82) என்பதனோடு, இம்மை மறுமை வீடுபேறுகட்கு ஏதுவாகும் இயல்புடைய வினைத்திறமும், அவற்றின் கட்டும், அக் கட்டின் நீங்குந் திறமும், நீங்காவழிப் படும் துன்பமும் என்ற இவற்றையும் பல்வேறு நிலையாமைகளையும் பிறவற்றையும் நினைத் தமை தோன்ற, "இனையன நினைவுறீஇ" என்றார். நாட்டுவேந்தனை, நாடாகிய மகட்குக் கணவனென்பவாகலின், வேந்தனாவானை, "நில மகட்டலைவனாக" என்றான். சொல்லியதனோடு அமையாது, மந் திரிச்சுற்றத்தாரோடு கலந்து திருமுடியும் யசோதரர்க்குச்சூட்டினான் என்றார். பின்பு அசோகன், அரசியற்றொடர்பு நீங்கி, மனைவியாகிய சந்திரமதியையும் துறக்க வெண்ணியபோது, அவள் பிரிவாற்றாமை கூறி வருந்தவும் அவட்கு இணங்காது துறவேபூண்டு சென்றான் என்பார் "புனைவளைமதிமதி புலம்பப் போயினான்" என்றார். வளை புனைமதிமதியென்பது எதுகைநோக்கி, "புனைவளைமதிமதி" யென வந்தது, "புனைவளை" என வளையை விதந்தோதியது, அசோகனது துறவுமொழி செவியிற் பட்டமாத்திரையே அவள் முன்கையின் நில்லாது கழன்றோடி அவளது பிரிவாற்றாமையை மெய்ப்படுத்திக் காட்டிற்றாதலின். இஃது உடம்பு நனி சுருங்கல். மதிமதி-சந்திரமதி.
-----------
அசோகன் குணதர முனிகள்பால் அறங்கேட்டுத் தவம் செய்வான் வனத்துக்குச் செல்லுதல்
உரை:- குரைகழல் அசோகன்-ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த வேந்தனான அசோகன், மெய்க்குணதரன் பணிந்து- மெய்யறிவினையுடைய குணதர முனிகளை வணங்கி அவர் உரைத்த அறங்களைக் கேட்டு, அரைசர்கள் ஐம்பதிற்றிருவர் தம்முடன் -துணையாய் வந்த அரசர் நூற்றுவருடன், உரை செய அருந்தவத்து-சொல்லுதற்கரிய தவக்கோலம் பூண்டு, வரையுடை வனமது-மலையையுடைய காடொன்றை, போய் மருவினான்-போய்ச் சேர்ந்தான் எ-று.
மெய்யறிவுபெற்றுத் தவவொழுக்கம் சிறந்துநிற்றலின், குணதர முனிகளை "மெய்க்குணதரன்" என்றார். இவர்பால் அசோகன் சைன தருமமும், சைனதீக்கையும் பெற்றான் என்றற்குப் "பணிந்து" என்றார்; தீக்கையும் அறமும் பெறுமுன்பும் பின்பும் பணிதல்வினை நிகழ்தலின் "பணிந்து" என உரைக்கப்பட்டன; இத்தருமமும் தீக்கையும் ஆசாராங்கமென்னும் நூலுட்கூறப்படுகின்றன; அவை பஞ்சபரமேட்டிகளின் பதமுபதேசித்தல், மயிர்பறித்தல் முதலாயின. பேரரசனாதலின், சிற்றரசர் நூற்றுவர் உடன்சென்றாரெனவறிக. தவத்துருவு, தவவேடம்; "உற்றநோய்நோன்றல் உயிர்க்குறு கண்செய்யாமை, அற்றே தவத்துக்குரு"1 என்றபடி, நோன்பையும் உறுகண்செய்யாமையையும் கொள்ளலுமொன்று. வரையுடை வனம், மலையைச்சார்ந்த காடு; மூங்கில்களையுடைய காடுமாம்.
யசோதரன் நாடாட்சி மேற்கொள்ளல்
உரை:- எரிமணி இமைக்கும் பூணான்-விளங்குகின்ற மணிகளாலாகிய ஒளிவீசும் அணிகலன்களையுடையனாகிய, இசோதரன்-யசோதரன், இருநிலத்தாட்கு-பெரிய நிலமாகிய மடந்தைக்கு, ஒரு மணித்திலகம் போலும்-ஒப்பற்ற அழகிய திலகம் போல்வதாகிய, உஞ்சயினிக்கு நாதன்- உச்சயினி நகரத்துக்கு அரசனாய், அருமணி முடிகொள் சென்னி அரசு-அரிய மணிகளால் இயன்ற முடியணிந்த தலையினையுடைய அரசர்களை, அடிப்படுத்து-தன்னடி வணங்கச் செய்து, உயர்ந்த-ஓங்கிய, குருமணிக் குடையின் நீழல்-நிறமுடைய மாணிக்கங்கள் வைத்திழைத்த கொற்றக் குடையின் நீழலிலே, குவலயம்-உலகம் தங்க, காவல் கொண்டான்-ஆட்சிபுரியத்தலைப்பட்டான் எ-று.
அசோகன் துறவுபூண நினைந்தவுடனே யசோதரனை முடி சூட்டி அரசனாக்கிவிட்டானாதலால், "உஞ்சயினிக்குநாதன்" என்றார். இருநிலத்தாள், நிலமகள்.பெரியநகரங்களை நிலமகட்கு" திலகமாகக் கூறுவது கவிமரபு; "நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ"1 என்று கம்பரும் கூறுதல் காண்க. நாடுகாக்கும் வேந்தர் ஏனையரசரைத் தன் அடிப்படுத்தி உயர்தலே தன் அரசியற்குச் சிறப் பென்றும், வலிக்கு மாண்பென்றும் கருதுபவாதலின், அதனைச் செய்தான் யசோதரன் என்றாராயிற்று. கொற்றக்குடை வெள்ளி தாயினும், மாணிக்கங்களும் இழைக்கப் பெறுதல்பற்றி, "குருமணிக்குடை" என்றார். குவலயம், நிலமாகிய வட்டம். பூணானாகிய இசோதரன் நாதனாய்க் காவல்பூண்டான் என்க. குவலயங்காவல், விகாரம்.
யசோதரன் செல்வச் செருக்கால் அறத்திறம் நெகிழ்த்தல்
உரை:- திருத்தகு குமரன்-திருமகளின் விருப்பம் தக்கிருக்கின்ற அரசகுமரனான யசோதரன், செல்வச் செருக்கினால்-செல்வமிகுதியால் உளதாகும் மயக்கத்தால், நெருக்குப் பட்டு-அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின்-காற்றால் மோதப்பட்ட கடல் பொங்கி அலமருவதுபோல, பொங்கி மறுகிய மனத்தனாகி-அவாமுதலியவற்றால் பொங்கிக் கலங்கிய மனமுடையனாய், உருத்து எழு சினத்தின்-மிக்கு எழுகின்ற சினமுதலியவற்றின்கண், சென்ற-படர்கின்ற, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி-மனம், உடல், சொல் என்ற மூன்றும் ஒருப்பட்டு நிற்க, அருத்த காமத்து அருத்தி செய்து-பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு, அறத்திறம் அறத் துறந்தான்-அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான் எ-று
புண்ணியமுள்ளளவும் ஒருவனைப்பற்றி நின்று, அது நீங்கிய வழி நீங்கு மியல்புடைய திருமகள், புண்ணியமுடைமையால் அரச போகந்துய்க்கும் யசோதரன்பால் நீங்காதிருக்கின்றமை தோன்ற "திருத்தகு குமரன்;" என்றும், தான் பெற்ற செல்வத்திற்குத் தான் மேற்பட்ட தலைவனாதலை யுணராது, அதற்கு அடிமையாய்த் தன் இயற்கையறிவை யிழந்தானென்னற்குச் "செருக்கினால் நெருக்குப்பட்டு" என்றும் கூறினார். "புண்ணியமுலந்தபின் பொருளிலார்களைக், கண்ணிலர் துறந்திடுங் கணிகைமார்கள்போல் எண்ணிலள் இகழ்ந்திடும்"1 என்றும்; "பற்றினர் பாலள்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தன்னையுடையான் எளியனாயின், அவனை மயக்குவது செல்வத்தின் சிறப்பியல்பாதலின், "செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டா" னென்றுமாம்; "மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மையுறுக்கும் புரையில் அரும்பொருள்" என்று வளையாபதியும் கூறிற்று. "மருத்தெறிகடல்" என்ற உவமையால் அவா முதலியவற்றால் யசோதரன் அலைக்கப்பட்டமை பெறுதும். சினத்தை விதந்தோதியதனால், அதற்கேதுவாய காமமும், பயனாகிய மயக்கமும் கொள்க. காமவெகுளி மயக் கங்களே அதற்கு நெறியாயினமையின், அந்நெறிக்கண் அவனுடைய நினைவும் செயலும் சொல்லும் ஒருப்பட்டு நிலவின என்பார் "சினத் திற்சென்ற உள்ளமெய்ம்மொழியோடொன்றி" என்றார். இவ் வியல்புடையார்க்கு வேண்டப்படுவன காமவின்பமும், அதனை இனிது நுகரத் துணைசெய்யும் பொருளுமே யாதலின், அவற்றை, "அருத்தி செய்து" , "அறத்திறம் அறத்துறந்தான்" என்றார். அருத்தி, ஆர்வம்,
பொருளின்பங்களை அருத்திசெய்தொழுகும் திறம் கூறல்
உரை:- தெவ்வர் அவிய-தனக்கு அஞ்சிப் பணிந்தொழுகாத பகைவேந்தர் வலி கெடுமாறு, அஞ்சுதல் இலாது-அச்சம் சிறிதுமின்றி, மேல்சென்று-படையுடன் மிக்குச்சென்று பொருது, வஞ்சனை பலவும் நாடி-அவர் செய்யும் வஞ்சனை பலவும் ஆராய்ந்தறிந்து, வகுப்பன வகுத்து-அவரை வேறற் பொருட்டுத் தானும் வஞ்சனைகள் பலவற்றையும் நாடிச் செய்து, புஞ்சிய பொருளும்-அவருடைய மிக்கதாகிய பொருளும், நாடும்-அதற்கு வருவாயாகிய நாடும், புணர் திறம்-தான் கவர்ந்து கோடற்குரிய சூழ்ச்சித்திறங்களை, நெஞ்சில் புணர்ந்து-மனத்தே ஆராய்ந்து கொண்டு, துஞ்சுதல் இலாத கண்ணன்-நாளும் கண்ணுறக்கம் இல்லானாய், துணிவன துணிந்து-செய்யத்தகுவனவற்றைச் செய்து, நின்றான்-அத்துறையிலே தெளிவின்றி யொழுகுவா னாயினான் எ-று.
பகை வேந்தரை வென்று ஒடுக்கி நாட்டில் நலக்குறைவு நிகழா வகையிற் காத்தல் வேந்தர்க்கு இயல்பாயினும், அச்செயற்கண் அறமல்லது நிகழ்வது எண்ணி யஞ்சுவது நல்வேந்தர் மனப்பண்பாக, இவன், அதற்கு அஞ்சினானில்லை யென்றற்கு, "அஞ்சுதலிலாது" என்றும், அப்பகையரசர் வஞ்சனை செய்தாராயினும், அஃது அறமன்றென வொழியாது தானும் அவற்றைச் செய்தமை தோன்ற, "வகுப்பன வகுத்து" என்றும், அவர்க்குரிய பொருளும் நாடும் கவரும் திறமே நினைந்து, தன் பொருளும் நாடும் மிகுதற்கேற்பனவற்றை நினைந்தில னென்றற்கு, "புணர்திறம் நெஞ்சிற் புணர்ந்து" என்றும், நினைவொடு நில்லாது செயற்கண்ணும் செய்தொழுகினா னென்பார் "துணிவனதுணிந்து நின்றான்" என்றும் கூறினார். இதனால், "அறத்திறம் அறத்துறந்தான்" பொருள் செயல் கூறப்பட்டது.
-----------
உரை:-தோடு அலர் கோதைமாதர்-இதழ்களையுடைய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த கூந்தலையுடைய பாடல்மகளிர், துயரியின்தொடுத்த-யாழ்நரம்பினால் தொடுத்துப் பாடும், இன்பப்பாடலொடு இயைந்த பண்ணின்-இன்பத்ததைத்தரும் பாடலொடு இயைந்து நிற்கும் பண்ணிடத்து எழும், இசைச்சுவை பருகி-இசையமுதாகிய அமுதத்தைப் பருகி, பல்கால்-பன்முறையும், ஊடல் அங்கு இனிய-ஊடிய விடத்தும் புணர்ந்தாற்போலும் இன்பத்தைத் தருகின்ற, மின்னில் ஒல்கிய-மின்னலைப்போல அசைந்தாடும், மகளிர்- ஆடல்மகளிர், ஆடும் நாடகம் நயந்து கண்டும்-ஆடுகின்ற நாடகங்களை விரும்பிப்பார்த்து மகிழ்ந்தும், நாள்சில செல்ல- நாட்கள் சில கழிய, சென்றான்-ஒழுகிவரலானான் எ-று.
இதனால் இன்பத்தை அருத்திசெய்து ஒழுகும் திறம் கூறுகின்றார். தோடு-பூவிதழ்; துயரி-யாழ்நரம்பு; "தூமம் கமழும் கோதை தொடுத்ததுயரிமுலையாத், தேமென்கீதம் பாலாச் சுரந்து"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. "பண்ணென்னாம் பாடற் கியை பின்றேல்"2 என்பவாகலின் "பாடலொ டியைந்த பண்ணின்" என்றார். காமக்காதலுடைய மகளிர் ஊடுதலும் காமத்திற் கின்பமாதலின் "ஊடலங்கினியமகளிர்" என்றார். "ஊடினும் புணர்ந்த தொத்தினியவள்"3 என்று பிறரும் கூறுவர். பருகி யென்புழி எண்ணும்மை விகாரத்தால் தொக்கது.
யசோதரன் அமிர்தமதியொடு கூடி யின்புறும் சிறப்பு
உரை:- மற்று ஓர் நாள்-வேறொருநாள், மன்னர் தம்மை-அரசவைக்கண் வந்திருந்த அரசர்களை, மனைபுக விடுத்து-தத்தம் மனைக்குச் செல்லவிடுத்து, மாலைகொற்றம்- மாலையும் வெற்றியுமுடைய, வேலவன்-வேலேந்திய வேந்தனாகிய யசோதரன், தன் கோயில்-தன் அந்தப்புரத்தேயுள்ள, குளிர்மணிக் கூடம் ஒன்றில்-குளிர்ந்த ஒளிவீசும் மணிகளால் இயன்ற ஒரு கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த, சுற்றுவார் திரையின்-சுற்றிலும் நீண்ட திரைகளையுடைய, தூமம் கமழ்-நறும்புகையின் மணம்கமழும், துயில்சேக்கை துன்னி-பள்ளியணையையடைந்து, கற்றைவார் கவரி வீச- கற்றையாகவுள்ள சாமரையை மகளிர் வீச, களிசிறந்து- காமக்களிப்பு மிகுந்து, இனிது இருந்தான்-அமிர்தமதியின் வரவுநோக்கி இனிதிருந்தான் எ-று.
"மன்னர்தம்மை மனைபுக விடுத்து" எனவே, இரவுப்போதின் வரவு குறித்தவாறு பெற்றாம்.பகற்போதில் மகளிர் தொடுத்த பாட்டும், ஆடிய நாடகமும் கண்டு காமம் சிறந்து அந்தப்புரத்தை யடைகின்றானாதலின், நேரே பள்ளியறையைத் துன்னினான் என்றார். "குளிர்மணிக்கூடம்" என்றார், காமவெப்பத்தால் வெதும்பிவருமாறு தோன்ற. களி-காமக்களிப்பு. மகளிர் கவரி வீசியது, காமவெப்பத்தைத் தணித்தற்கு. இனிதிருந்தான் என்றார், அமிர்தமதிபால் தான் நுகரவிருக்கும் காமவின்பமே நினைந்திருத்தலின்.
----------
உரை:- தேனும்-தேனினமும், திருமணி வண்டும்- அழகிய நீலமணிபோலும் வண்டினமும், பாட-பாட்டிசைக்க, கலம் பல-அணிகலம் பலவற்றோடு, அல்குல் அணிந்த கலையொலி-அல்குலிடத்தே யணிந்த மேகலையின் ஒலியானது, சிலம்பொடு கலவி சிலம்பியார்ப்ப-சிலம்பொலியொடு கலந்து மிக்கொலிக்க, நலம் கலந்து-பெண்மைநலம் முதிர்ந்து, இனிய காமர் நறுமலர்த் தொடையல்போல்- இனிய அழகிய மணங்கமழும் பூமாலை வருதல்போல, அலங்கல்-பூமாலைசூடிய, அம் குழல் பின்தாழ-அழகிய கூந்தலானது முதுகிடத்தே தாழ்ந்தசைய, அமிழ்தமுன்மதி- அமுதமதி, அணைந்தாள்-யசோதரனிருந்த பள்ளியை யடைந்தாள் எ-று.
தேனும் வண்டும் பாட, கலையொலி, சிலம்பொடு கலவி, சிலம்பி யார்ப்ப, குழல் பின் தாழ, அணைந்தாள் என இயையும். இனிக் கிடந்தபடியே, தேனும் வண்டும் சிலம்பிப்பாட, கலையொலி ஏனைக் கலன்களுடன் கலவி யார்ப்ப, குழல் பின்தாழ அணைந்தாள் எனினுமாம். தேன், வண்டினத்துள் ஒன்று. "வண்டுகாள் மகிழ் தேனினங்காள்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. கலை, மேகலை. நறுமலர்த் தொடையல் அணைவதுபோல அணைந்தாள் என்க; "மருவளர்மாலையொர் வல்லியினொல்கி யனநடை வாய்ந், துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே"2 என்று திருக்கோவையாருள்ளும் வருதல் காண்க.
---------
உரை:- ஆங்கு-அவ்விடத்திற்கு, அவள் அணைந்தபோழ்தின்-அவள் வந்தடைந்தபோது, ஐங்கணைக் குரிசில்- ஐவகைப் பூக்களாலாகிய அம்புகளையுடைய மன்மதன், தந்த- விடுத்த, பூங்கணைமாரி-மலரம்பு மழைபோல் வந்து வீழ, வெள்ளம் பொருது வந்து அலைப்ப-காமவெள்ளமானது அறிவுமுதலிய கரைகளை அலைத்துக்கொண்டுவந்து அவர்தம் நெஞ்சை வருத்த, இருவரும் புல்லி- இருவரும் தம்மில் தழுவி, நீங்கலர்-நீங்காராய், ஒருவர் உள் ஒருவர் புக்கு-ஒருவர் உடற்குள் ஒருவர் புகுந்து, ஒருவராகி-இருவரும் ஒருவரேயாய், தேம்கமழ் அமளிதேம்ப-தேன்மணக்கும் படுக்கையசைந் தொலிக்க, செறிந்தனர்-புணர்ந்து, திளைத்து விள்ளார்-ஒருவரொருவரைப் பிணித்த கை நெகிழாது அணைமீதே கிடந்தனர் எ-று.
மலரம்புகளை மழைபோலச் சொரிந்ததனால், அதன் பயனாகிய காமவேட்கை வெள்ளமாய்ப் பெருகுதலின் "பூங்கணை மாரி வெள்ளம்" என்றார். காமம் கைம்மிக்கவழி அறிவும் நிறையும் பிறவும் நீங்குதலின், அவற்றைக் கரையாக்கி, "பொருதுவந்தலைப்ப" என்பாராயிற்று. ஒருவருள் ஒருவர் புக்குப் புணரும் புணர்ச்சியை நாகர் புணர்ச்சியென்பர். "நஞ்சுற்ற காமம் நனிநாகரிற்றுய்த்த வாறும்"3 என்றவிடத்து "நாகரோடுவமை ஓருடம்பாதலும் நீங்கல்வன்மையும்பற்றி" என வரும் அதன் உரை காண்க. விள்ளல், நீங்குதல்.
உரை:- மடம் கனிந்து-இளமை மிகுந்து, இனிய- இனியளாகிய, நல்லாள் வனமுலைப் போகமெல்லாம்-நல்ல அமுதமதியின் அழகிய முலையிடத்தே பெறும் இன்ப முழுதும், அடங்கலன் அயர்ந்து-அடங்காத ஆர்வத்தோடு நுகர்ந்து, தேன்வாய் அமிர்தமும் பருகி-எயிற்றிடத்தூறிய தேன்போலும் நீரைப்பருகி, அம்பொன் பாம்பு படம் கலந்து அழகிய பாம்பின் படத்தையொத்து, அகன்ற அல்குல்அணை- அகன்ற அல்குலாகிய படுக்கையையே, புணையதாக-தெப்பமாகக்கொண்டு, இடம் கழிந்து-நெஞ்சிடம் நிரம்பி வழிந்தும், ஒழிவில்-நீங்குதலில்லாத, இன்பக்கடலிடை-காமவின்பக் கடற்குள்ளே, மூழ்கினான்-வீழ்ந்து கரையேற மாட்டாது அதனுள்ளே மூழ்கிவிட்டான் எ-று.
மடம், இளமை; அழகுமாம். முன்னேகூடி, யசோமதி யென்னும் மகனைப் பெற்றுளனாயினும், யசோதரன் அவள்பால் வேட்கையடங்கானாயினானென்றற்கு "அடங்கலனயர்ந்து" என்றார். கழிகாமத்தனென்பது கருத்து. எயிறூறியநீர், "பாலொடு தேன்கலந்தற்று"1 எனச் சான்றோர் கூறுதலின், "தேன்வா யமிர்தம்" என்றார். பருகுதலை, அதரபானம் என்பர். பாம்பணை என்பது பிரித்துக்கூட்டப்பட்டது; அல்குலாகிய பாம்பணையென்று கோடலு மொன்று. பாம்பின் படமும் புணையும் முறையே உருவும் தொழிலும் பற்றி வந்தன. இடம்கழிதல்-நெஞ்சகம் நிரம்பித் துளும்புதல், "இடங்கழிகாமமொடடங்கானாகி"2 என்று பிறரும் கூறுப.
புணர்ச்சி யவசத்தால் இருவரும் கண்ணுறங்கல்
உரை:- இன் அரிச் சிலம்பும்-இனிய ஓசைசெய்யும் பரல்களையுடைய காற்சிலம்பும், தேனும் -வண்டினமும், எழில்வளைநிரையும்-அழகிய வரிசையுற்ற வளையல்களும், ஆர்ப்ப-ஒலிக்க, பொன் அவிர் தாரோடு-யசோதரனணிந்த பொன்னாலியன்ற மாலையும், ஆரம்-அமுதமதி யணிந்த முத்துமாலையும், புணர்முலை பொருது பொங்க-புணர்ச்சி நிகழுமிடத்து , முலையால் தாக்குண்டு மேலெழ, மன்னனும் மடந்தைதானும்-யசோதரனும் அமுதமதியும், மதன கோபத்தின்-காமக் களிமயக்கினால், தொல்நலம் மாறாய்த் தொலைய-புணராதமுன்பிருந்த மேனிநலம் மாறுபட்டு மெலிய,உண்டார்-காமவின்பத்தைத் துய்த்து அயர்ந்தாராக விழிகள் துயில்கொண்ட- அவருடைய கண்கள் உறங்குவனவாயின எ-று.
தார், மார்பிலணியும் மாலை, இஃது ஆடவர்க்கு உரித்து, தார் எனப் பிரித்தமையின், ஆரம் அமிர்தமதி யணிந்த முத்துமாலைக்காயிற்று. "மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்;"1 என்புழித்தார். ஆடவர்க்குரித்தாகக் கூறப்படுதல் காண்க. காமவேட்கையால் நெஞ்சு கலங்குதல்பற்றி "மாறாய்" என்றாரென்றுமாம். "தொன்னலம் தொலையவுண்டார்"என்றார் மீட்டும் அவர் இவ்வின்பம் நுகராதொழிவது கருதி. உறக்கத்தை அவர் வினையாக்காது, விழிமேல் ஏற்றியதனால், உடல் அயர்ந்தனரேயன்றி, உள்ளத்தால் காமநுகர்ச்சிக்கண் அயர்வுற்றிலரென்று கொள்க.
அட்டபங்கன் இசைத்த இசையால் அமிர்தமதி அறிவு திரிதல்
உரை:- ஆயிடை--அப்போது, அத்திகூடத்து அயல் எழுந்து-யானை கட்டுமிடத்தின் புறத்தே எழுந்து, அமிர்தம் ஊற-கேட்போர் உளத்தே இன்பமுண்டாகுமாறு, சேயிடைச் சென்ற-நெடுந்தொலைவு படர்ந்து மக்கள் இசைக்கின்ற, ஓர் கீதம்-ஒரு பாட்டு, செவிபுக விடுத்தலோடும்-செவிக்குட்சென்று தன் இசையின்பத்தை யூட்டவே, வேயிடைத்தோளி-மூங்கில்போலும் தோளையுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள்-தன் கண்களை மெல்லத் திறந்து, வியந்து நோக்கா-அவ்விசையின்பத்தை வியப்போடு கேட்டு மருண்டு நாற்றிசையும் பார்த்து, தீயிடை மெழுகின்-நெருப்பிலிட்ட மெழுகுபோல, நைந்த சிந்தையள்-மெலிந்த மனத்தையுடையளாய், உருகினாள்- உருகலானாள் எ-று.
ஆயிடை, சுட்டு நீண்டு யகரம் பெற்றது. யானைக்கூடத்தின் கண் இருந்த அட்டபங்கன் எடுத்திசைத்த பாட்டு எங்கும் பரந்து, கேட்போர் செவிவழிச் சென்று இன்பத்தை யுண்டுபண்ணிற்று என்பதாம், சென்ற என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இன்னிசை சென்று அமிர்தமதியின் செவியிடை யிசைத்தலும் அவள் துயிலுணர்ந்தாளாகலின், "மெல்ல விழித்தனள்" என்றார். விழித்தாட்கு அவ்விசையின் இன்பம் நெஞ்சினை யுருக்கி மெலிவித்த தென்றற்கு, "தீயிடைமெழுகின்நைந்த சிந்தைய ளுருகினாளே" என்றார்.
-----------
அமிர்தமதி மதிமயங்குதல்
உரை:- பண்ணினுக்கு-பாட்டின்பத்துக்கு, ஒழுகும் நெஞ்சின் பாவை-நீராய் உருகி யோடும் நெஞ்சினையுடைய பாவைபோன்ற அமுதமதி, இப்பண்கொள் செவ்வாய் அண்ணலுக்கு-இவ்விசையமுதத்தைச் சொரியும் சிவந்த வாயையுடைய பெரியவனிடத்தே, அரிவையர்க்கு உரிய- மகளிர் பெறுதற்குரித்தாயுள்ள, அமிர்தமாய போகம்- பேரின்பத்தைத் தரவல்ல காமபோகம், விண்ணினுக்கு உளது-விண்ணுலகத்தே பெறும் போகமாகும், என்று எண்ணி-என்று தனக்குள்ளே நினைத்து, வெய்துயிர்த்து- பெருமூச்செறிந்து, உய்தல் செல்லாள் - உய்வகையறிய மாட்டாளாய், மண்ணினுக்கு அரசன் தேவி - அவந்திநாட்டுக் கரசனாகிய யசோதரற்கு மனைவியாகிய இவள், மதிமயக்கு உற்று - அறிவு கலங்கி, இருந்தாள்- கையறவுபட்டிருந்தாள் எ-று.
ஒழுகுதல், நீரா யுருகி வழிதல்; "ஒழுகுநீர் ஆரல்பார்க்கும் குருகு"1 என்புழிப்போல, முன்னைச் செய்யுளில் "உருகினாள்" என்றாராதலின், ஈண்டு " ஒழுகும் நெஞ்சின்" என வாளாமொழிந்தார். நாண்வழி யொழுகும் பாவைபோல, பண்ணின் சுவைவழியோடும் நெஞ்சின ளாதல்பற்றி, " பாவை" யென்றார். இதனால், மனவுணர்வின்மையும் பெற வைத்தாராயிற்று. செவிச்சுவை யமுதமாகிய இசையினை வழங்கும் சிறப்பு நோக்கி, " செவ்வாயண்ணல்" என அட்டபங்களைக் கருதுகின்றாள். அண்ணலுக்கு, விண்ணினுக்கு என்புழி ஏழாவதன்கண் நான்காவது வந்து மயங்கிற்று. அமிர்த மாயபோகம், அரிவையர்க்குரிய போகம் என இயையும். உளது, உளதாகிய போகம். விண்ணினுக்குளதென்று எண்ணிய துணையே, பெறுதற்கரிதுபோலும் என்று உட்கொண்டு வருந்தலுற்றாள் என்பார், "வெய்துயிர்த் துய்தல் செல்வாள் " என்றார். மண்ணினுக்கரசன் தேவியாய் இன்பக்குறைபாடின்றியே இருந்தாளாயினும், அறிவறை போகி அட்டபங்கன்பால் பொல்லாக் காமவேட்கை கொண்டு மனம் புழுங்கும் புன்மைகண்டு இகழ்வார், "மண்ணினுக் கரசன் தேவி" என்று விதந்தோதினார்.
---------
பெண்மையின் புன்மை கூறல்
உரை:-- பெண் - பெண்கட்கு, உள்ளம் - மனமானது மின்னினும்நிலையின்று - மின்னலைக்காட்டிலும்நிலையில்லாதது, விழைவுறின் - எவற்றையேனும் விரும்புமாயின், விழைந்த - அவ்விரும்பியவற்றைப்பற்றிய, யாவும் துன்னிடும் - நினைவு செயல்களையே பொருந்தியிருக்கும், இனத்தின் தூய்மை - துணையாயினார் கூறும் தூய்மையும். சூழ்ச்சியும் - ஆராய்ச்சியுரையும், ஒழிய-கெட, நிற்கும்-தான் செல்லக்கருதிய நெறியிலேயே ஊன்றி நி்ற்கும், பின்னுறு பழியிற்கு அஞ்சா- பின்னே எய்துகின்ற பழிபாவங்கட்குச் சிறிதும் அஞ்சாது, உயிர்ப்பெருமை பேணாது-பெண்ணுயிராகிய தான் பிறந்த குடிப்பெருமையும் கருதாது, என்னும் இம்மொழிகட்கு- என்று அறிந்தோர் அறிந்துரைத்த இவ்விலக்கணங்கட்கு, இலக்கியமாயினாள்-சிறந்த எடுத்துக்காட்டாயினாள், அந்தோ-ஐயோ, இவ்வமுதமதியின் இயல்பு இருந்தவாறு என்னே எ-று.
"பெண்ணுயிர்...பேராத்திண்மையும் உடையவல்ல"1 (47) என முன்பே கூறினமையின், ஈண்டு வாளா உவமமுகத்தால், "மின்னினும் நிலையின்றுள்ளம்" என்றும், ஒரு பொருண்மேற் செல்லும் விழைவினை நீக்கிநிறுத்தும் மதுகையில்லை யென்பதையும் முன்னர் "பெருந்திறலறிவும் உடையவல்ல" (46) என்றதனை விளக்கி, "விழைவுறின் விழைந்தயாவும் துன்னிடும்" என்றும் கூறினார். விழைவு தோன்றியவிடத்து, அவ்விழைவினை நிறைவு செய்து கோடற்கேதுவாய நினைவுசெயலே அவர் உள்ளத்திற் பொருந்தி வேறு எவ்வகைச் செயற்கண்ணும் செல்லாதொழிதலின், விழைந்த யாவும் துன்னிடும்" என்றார். விழைந்த வென்னும் பெயரெச்சம் கருவியொடு முடிந்தது. துணையாய் ஒழுகும் குணவதி யென்பாளது தூய்மையும் அறிவுரையும் கெடச்செய்யும் இவளது செயல் மேல்வரும் நிகழ்ச்சிகளால் உணரப்படும். அஞ்சாதென்பது ஈறு கெட்டு நின்றது. உயிர்ப்பெருமை, ஈண்டுக் குடிப்பிறப்பின் மேற்று, இவ்வமுதமதியின் என்பது முதலாயின குறிப்பெச்சம்.
------------
குணவதி என்னும் தோழி உற்றது வினாதல்
உரை:- துன்னிய இரவு நீங்க-பொருந்தியிருந்த இராப் போது கழிய, துணைமுலை தமியளாகி-இரண்டாகிய முலைகளையுடைய அமுதமதி ஓரிடத்தே தனித்திருந்து இன்னிசை யவனை-இனிய இசையையுடையனாகிய அட்ட பங்கனை, நெஞ்சத்து இருத்தினள்-மனத்தே காமக் காதலனாகக்கொண்டு, இருந்த எல்லை-வேறுசெயல்மறந்து இருந்தபோது, தோழி துன்னினள்-உயிர்த்தோழியாகிய குணவதி அவளையடைந்தாள், துன்னி-(அடைந்தவள்) அமுதமதியை நெருங்கி, இரைவி-அரசியே, துணைவரில் தமியர் போன்று-மனக்கினிய காதலர் உடனில்லாமையால் தனித்துப்புலம்பும் மகளிரைப்போல, இது-வேறுபட்டிருக்கும் இச்செயல், என் - என்னை, நீ உள்ளத்து நினைந்தது- நீ நின்மனத்தில் கருதியதனை, அருளுக-அடியேனுக்குத் தெரிவித்தருள்க, என்றாள்-என்று வேண்டினாள் எ-று.
“துன்னிய இரவு நீங்க” என விதந்தோதியது, அஃது அவட்கு ஓர் ஊழியாய்த்தோன்றி நெடிது கழிந்தமை யுணரநின்றது. யசோதரனோடு கூடியிருப்பவும், நெஞ்சிலே “இன்னிசையவளை” இருத்திக்கொண்டமையின், அவனையின்றி யிருக்குமது அவட்குத் தனிமையாயிற் றென்றற்குத் “தமியளாகி” என்றார். யசோதரனையும் ஏனைத்தோழிமார்களையும் நீங்கித் தனித்திருந்தமை தோன்ற “தமியளாகி” என்றாரென்றலுமாம். துன்னி யென்ற மிகையால், குனவதி போதரக்கண்டும் அவளை வரவேற்காது தான் வாடிய முகத்துடன் சாம்பியிருந்தமையும், அவள் திடுக்கிட்டு நின்று நோக்கி மெல்ல அருகணைந்தமையும், அமுதமதியின் மறுகிய நெஞ்சமும் மையல்நோக்கமும் மெய்ப்பட்டுத் தோன்றினமையும் பெற்றாம். இறைவனாகிய யசோதரனுடன் பிரிவின்றிக் கூடியிருத்தலின், “இறைவி” யென்றும், பிரிவால் மெலியும் மகளிர்க்குரிய மேனி வேறுபாடுகாண்டலின், “துணைவரில் தமியர் போன்று” என்றும், காரணம் காணமாட்டாமையின், “என்னிது” வென்றும் கூறினாள்.
----------
அமிர்தமதி உற்றது உரைத்தல்
உரை:- தவளவாள் நகையாய் - வெள்ளிய ஒளி பொருந்திய பற்களை யுடையாய், தண்தார் மன்னவன் - குளிர்ந்த மாலையணிந்த வேந்தனாகிய யசோதரனுடைய, தகைமை யென்னும் - காதலன் பென்னும், கவளம் ஆர் - கவளத்தை யுண்கின்ற, அகத்து - இன்ப வொழுக்கத்தையுடைய, என் உள்ளம் - என்மனமாகிய, கருங்களி மதநல்யானை - கரிய மதக்களிப்பினையுடைய நல்லயானையை, ஒருவன் - எவனோ வொருவன், பவளவாய் மணிக்கை - பவளம்போலும் தன் வாயாகிய அழகிய கையிடத்தே, கொண்ட - வைத்துள்ள, பண்இயல் தோட்டி - இசையாகிய அங்குசத்தால், பற்றி- கைப்பற்றி, துவளுமாறு - மெலியுமாறு, எல்லி - நேற்றிரவு,துயரத்துடக்கினன் - வருந்த வணக்கிப் பிணித்துக் கொண்டான் எ-று.
சொல்லாடலின்றித் துயருற்றிருந்த அமிர்தமதி சிலசொல்லத் தொடங்கியதும் குணவதி முகமலர்ந்து முறுவலித்துக் காட்டினமையின், "தவளவாணகையாய்" என்றாள். இப்போது அமுதமதியின் உள்ளம் யசோதரனிற் பிரிந்து நீங்கினமையின், பிரியாமை முன்னிருந்த நிலைமையினை, "தண்டார் மன்னவன் தகைமை யென்னும் கவளம்" என்றாள். கவளம், யானையுண்னும் உணவு. ஆர்தல், உண்டல்; "ஆர்ந்தோர் வாயிற்றேனும் புளிக்கும்" (குறுந். 854) என்புழிப்போல. அகம், ஆகுபெயராய் இன்பவொழுக்கத்தைக் குறித்து நின்றது, இசையவன்பால் களவினால் காமவின்பம் துய்க்கக் கருதுகின்றாளாதலின், அவள் உள்ளத்தைக் "கருங்களி மதநல்யானை" யென்றார். யானையின் கருமையை உள்ளத்துக்கும் கொள்க, களவினால் தீய காமம் நுகரக் கருதுதலின்; "கள வென்னும் காரறிவான்மை"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. இசையவன் வாயை முன்பு, "பண்கொள் செவ்வாய்" (95) என்றாளாதலின், ஈண்டு "பவளவாய்" என்றாள். யானை நல்லிசைக்கு வணங்குதல் பற்றி, நெஞ்சினை யானையோடு உருவகம் செய்தார், உள்ளத்தை மதயானை யென்றும், அதனை இசையால் ஒருவன் வணக்கினன் என்று கூறியதனால், யசோதரனால் அதனை வணக்க மாட்டாமையும், "இன்னிசையவன்" வழியே செல்வதையும் குறித்தாளாயிற்று. இசையிசைத்தவன் அட்டபங்கன் என்பது அறியாமையால் "ஒருவன்" என்றாள். "துவளுமாறு" என்றும், "துயர" வென்றும் கூறியது, அவனது இன்றியமையாமையும் தனது ஆற்றாமையும் உணர்த்திநின்றது.
கண்டது கனவெனக் குணவதி கழறல்
உரை:- அங்கு - அவ்விடத்து, அவள் அகத்துச்செய்கை - அமுதமதி தன்மனத்தே கருதியிருக்கும் செய்கையை, அறிந்தனள் - தெரிந்து கொண்டாலாயினும், அல்லள்போல - தெரியாதவள்போல, கொங்கு அவிழ் குழலி அக்குணவதி - தேன்பொருந்திய பூச்சூடிய கூந்தலையுடையளாகிய அக்குணவதி யென்னும் தோழி, உறழ்ந்து கூறும் - அவளோடு மாறு பட்டுக்கூறுவாளாயினள். நங்கை - நங்கையே, நின்பெருமை - நினக்குள்ளபெருமையோ, நன்று - பெரிதாகும், கனவினால் - கனவின்கண், நனவெனக் கண்டபங்கமது-நனவுபோலத் தோன்றக் கண்ட இழித்தக்க நிகழ்ச்சியை, உள்ளி-நினைந்து, உள்ளம் பரிவுகொண்டு-மனத்தில் வருத்தமுற்று, இனையல்- வருந்தாதே கொள்; என்றாள்-என்று உரைத்தாள் எ-று.
நினைவு வடிவாகவே நின்றொழியாது செய்கைக்கண்ணும் ஒன்றி நிற்றலின், எண்ணமென்னாது, "அவளகத்துச் செய்கை" யென்றார். அமுதமதியின் கருத்தறிந்தும் அதன் தீமைகருதி விலக்கும் கருத் தினளாதலின், "அறிந்தனளல்லளேபோல் உறழ்ந்து கூறும்" என்றார். "உயர்மொழிக் குரிய வுறழுங்கிளவி"1 என ஆசிரியர் தோழிக்கும் உரித்தென்றலின், தோழி ஈண்டு தேவியை உறழ்ந்து கூறுகின்றாள். நன்றே என்புழி ஏகாரம் எதிர்மறையாகக் கொண்டு, இது நின்பெருமைக்குத் தீது என்று உரைப்பினுமாம். பங்கம், இழிவு; ஈண்டு இழித்தக்க கனவின்மேற்று. இனைவது பேதையார் செயல் என்பாள், "இனையல்" என்றாள். மற்று, அசைநிலை.
அமுதமதி சொற்கேட்டுக் குணவதி அஞ்சுதல்
உரை:- என்மனத்து-என்நெஞ்சில், இவரும்-மேன்மேன்மிகும், இந்நோய்-இக்காம நோயை, இவள் அறிந் திலள்-இவள் இன்னும் அறியவில்லை, என்று-என்று அமுதமதி நினைத்து, தன்மனத்தினை-தன் மனத்திருந்த எண்ணங்களை, அவட்கு-அக்குணவதிக்கு, தான்-தானே வாய்விட்டு, உரைத்திடுதலோடும்-உரைத்தலும், சில்மலர்க் குழலி-சிலவாகிய பூக்களை யணிந்த கூந்தலையுடையாய், நின்மனத்து இலாத-நின் நெஞ்சில் இல்லாத இச்சொற்களை, நீபுனைந்து-நீயே படைத்துக்கொண்டு, அருளிற்று-உரைத்தது, என்கொல்-என்னை, என்று-என்று சொல்லி, செவி புதைத்து- தன் இருகாதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டு, இனிது சொன்னாள-அறவுரையைக் குணவதி சொன்னாள் எ-று.
இவர்தல், மேலும் மிகுந்தேகுதல், "இவர்தந்தென் மேனி மேலுரும் பசப்பு"1 என்புழிப்போல. கொல்லிரண்டினுள் முன்னது ஐயம், பின்ன தசைநிலை. குலமகளிர்க் கொவ்வாத சொல்லை அமுதமதி கூறுதலின், "நின்மனத்து இலாத சொல்" என்றும், அது மெய்யன் றென்றற்கு "நீ புனைந்தருளிற்று" என்றும், அது நகையேயும் வேண்டற்பாற் றன்றாகலின், "என்கொல்" என்றும் கூறினாள். "புனைந்துரை யன்று; மெய்யே" என அமுதமதி வற்புறுத்தினமையின், குணவதி பொறாது அஞ்சினமை தோன்றச் "செவிபுதைத்து" என்றும், அறவுரை பகர்ந்தமை விளங்க, "இனிது சொன்னாள்" என்றும் கூறினார். அறவுரை இன்பம் பயப்பதாதலின், "இனி" தென்றார்; அவ்வுரை அங்கணத்துளுக்க வமிழ்துபோல் பயன்படா தொழிந்தமையின், இனிதென்றே யொழிந்தார்.
அமுதமதி தனது ஆற்றாமை கூறல்
உரை:- வாள் அளவு உண்கண் மாதே-ஒளி கலந்தமையுண்ட கண்களையுடைய அன்புள்ள தோழி, அவன் அமுதவாயில்-அந்த இன்னிசையோனுடைய அமுதம் பொருந்திய வாயால், மாளவப்பஞ்சவப்பண்-மாளவ பஞ்சமம் என்ற பண்ணின் இசையை, மகிழ்ந்து கேளலமாயின்- அவனைக் கூடி மகிழ்ந்து கேளாதொழிவோமாயின், நாமும் கேளலமாதும்-நாமும் தோழமையினின்றும் நீங்கிவிடுவோம், மறுத்து உரைமொழியின்-நீ என்விருப்பத்தை மறுத்து மாறு கூறுவாயாயின், நாள்-உயிரோடு கூடிவாழும் வாழ் நாளும், அவமாகி-பயனற்றதாகி, இன்னே ஆவிநடந்திடும்- இப்பொழுதே உயிர் நீங்கிவிடும், நடு ஒன்று இல்லை- இதற்கிடையே நம்மை வாழ்விப்பது வேறொன்றும் கிடையாது எ-று.
மறுத்துரை மொழியின், நாள் அவமாகி ஆவி இன்னே நடந்திடும் என இயைத் துரைத்துக் கொள்க. மாளவபஞ்சமம் என்பது ஒருவகைப் பண்; மாளவ கௌளம், கேதார கௌளம் என்பன போல்வது, இஃது அட்டபங்கன் பாடியது. கேளாவழிப்படும் பயன் இது வென்பாள் "நாமும் கேளலமாதும்" என்றும், மறுத்து மொழியின் வரும் பயனை "ஆவியின்னே நடந்திடும்" என்றும் கூறுகின்றாள். ஒன்று, நாள் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கன. வாள், ஒளி, அளவு-அளவுதல், கலத்தல். இவ்வாறு அறந்திறம்பிய நெறியொழுகுபவள் கேண்மையும் உயிர்வாழ்வும் பெறுதலினும் பெறாதொழிவது பெண்ணுலகிற்குச் சிறப்பாமென்று கருதி மறுப்பினும் மறுப்பளென்ற எண்ணத்தால், வரும் பாட்டில் குணவதியுடன் மிகநயமாக இவ்வமுதமதி பேசுதலைக் காண்மின்.
---------
அவ்விசையவன் யாவனென் றறியக் குணவதி துணிதல்
உரை:- என் உயிர்க்கு அரணம்-என் உயிர்க்குப் பாது காப்பாவார், நின்னோடு-உன்னோடு, இன்னிசை புணர்த்த காளைதன்னின்-இனிய இசையைப்பாடிய அக்காளையேயன்றி, மற்று-வேறே, ஒருவர் இல்லை-ஒருவரும் இல்லை,. தக்கது துணிக-செய்யத்தகுவது யாதோ அதனைச் செய்க, தாழ்க்கின்-காலம் நீட்டிப்பின், என் உயிர்க்கு ஏதம்-என் உயிர்க்கு இறுதியுண்டாகும், எய்தின்-அவ்வாறஃது உண்டாயின், இது-இத்தாழ்க்கையினால், பழி பெருகும்- பெண்பழி தோன்றி நின்வழிவழிப் பெருகிநிற்கும், என்றாள்- என்று அமுதமதியுரைத்தாளாக, தோழியும்-தோழியாகிய குணவதியும், அவளோடு-அவ்வமுதமதியுடன், துன்னும் வாய்-அவ்விசையவனைத் தேடி யடைதற்குரிய நெறிகளை, எண்ணி-ஆராய்ந்தறிந்து, எண்ணினாள்-அவன் இருக்குமிடத்தைத் தேடிச் செல்லத் துணிந்தாள் எ-று.
"உயிர்க்கு அரணமாவார் அதற்குக் கேடு செய்யார்" என்பது பற்றி "என்னுயிர்க்கரணமாவார்" என்றெடுத்து "நின்னோடு" என்று உயர்பின்வழித்தாகிய ஒடுக்கொடுத்துச் சிறப்பித்தாள்; ஒடு ஓடென விகாரம். தோழிவாயிலாக இசையவனைப் பெறும் இயைபு பற்றி, அவட்கு உயர்பு தந்தாள் என வறிக. பலரறிய இசையவனைத் தேடிக் காண்டல் அமுதமதியின் கருத்து நிறைவேறற்காகாமையின் "தக்கது துணிக" என்றும், அதனையும் விரைந்து செயல்வேண்டுமென்றற்கு "தாழ்க்கின் ஏதம்" என்றும், "பழிபெருகும்" என்றும் கூறினாள். இரவுப்போதில் உறங்குங்காலத்தே அவ்வின்னிசையை அமுதமதி கேட்டாளாதலின், இசை வந்த பக்கம் இசையவனுறைவிடம், அதன் அணிமை சேய்மைநிலை, அவனைக் காணுந்திறம், அவனை யுடன்படுவித்தற்கு வேண்டும் சொற்பொருள்கள் என்று இன்னோரன்னவற்றைத் தோழி அமுதமதியோடு கலந்தே யாராயவேண்டியிருந்தமையின், "துன்னும் வாய் அவளோ டெண்ணா" என்றும், எண்ணியபின் எண்ணியாங்குச் செய்வன செய்யத் தொடஙகினாளென்றும் கூறினார். எண்ணுவதன் பயன் இயற்றலே யாதலின், "எண்ணினாள்" என்று உபசரித்தார். எண்ணா, செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
-----------
இசை பாடியவன் அட்டபங்கனென்று குணவதி மகிழ்ச்சியுடன் மீளுதல்
உரை:-- இருள் மழுகு இரவின் வைகி - நள்ளிருள் நெகிழும் கடையாமத்தில் தன் இருக்கையிலே இருந்து, மாளவப் பஞ்சவத்தேன் - மாளவபஞ்சமம் என்ற பண்ணாகிய தேனை, ஒழுகிய மிடற்று - சொரிந்த கண்டத்தையுடைய, காளையுள்ளவன் - காளைப்பருவத்தான், யாவன் என்று - யாவனோ என்று, நாடி - தேடிச் சென்று, கழுது உரு அவனை- பேயின் வடிவத்தையுடைய அவனை, கண்டனள் - குணவதி தன்கண்களால் பார்த்தாள், கண்டு - அவ்வாறு கண்டதனால்,தையற்கு - தையலாகிய அமுதமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கழிகாமத்துறையில் பெருகியோடும் மனமானது, ஒழியும் - இனி அதனின்றும் நீங்கும், என்று உவந்து - என்று நினைந்து மகிழ்ந்து, மீண்டாள் - அமுதமதிபால்வந்து சேர்ந்தாள் எ-று.
நடுவியாமத்தே செறிந்திருக்கும் திணியிருள், கடையாமத்தே கட்டுவிட்டு நெகிழ்ந்து மழுகியிருத்தலின், அதனை, " மழுகிருளிர வின்" என்றார். அவள் அச்சமின்றிச் சேறற்கும் அது நன்றாதலின், மழுகிருளை எடுத்தோதினார். பண்ணினஐத் தேனாக வுருவகஞ்செய் தமையின், அதற்கேற்பப் பாடுதலை ஒழுகுதலென்றார். ஓர், அசை. காளையுள்ளவன் யாவன் என்பதற்கு, காளைபோல்வானாய் உள்ளான் ஒருவன். அவன் யாவன் என்று கூறலு மொன்று. கழுது - பேய். யாவன் என்று நாடிக் கண்டனள் என இயைக்க. காணப்போந்த குணவதிக்கு அமுதமதியின் காமவொழுக்க்த்தின்கண் விருப்பமின்மையின், அட்டபங்கனது பேய்போலும் காட்சி அருவருப்பை விளைத்ததாயினும் ஒருபால் மிக்க மகிழ்ச்சியே விளைத்ததென்பார், அதற்கு ஏதுவின்மேல்வைத்து "காமத்தொழுகிய வுள்ளம் தையற் கொழியும் என்று உவந்து" என்றும் "மீண்டாள்" என்றும் கூறினார். "மீண்டாள்" என்றதனால், இனித் தனக்கு இத்தகைய வினை நிகழாது; இஃது இவ்வளவில் முடிந்தொழிந்தது என்ற கருத்துடையளாய்க் குணவதி திரும்பினமை பெற்றாம். எடுத்த வினை முற்றினல்லது மீளுதல் வினைசெய்வார் தொழிலன்றாதலின்.
---------
குணவதி தான் கண்டதனை அமுதமதிக்குக் கூறல்
உரை:- மன்னன்மாதேவி-அரசமாதேவி, நின்னை வருத்துவான்- நின் நெஞ்சு வருந்தும்படியாக, வகுத்த கீதத்து அன்னவன் - பாடிய இசையினையுடையவன், அத்திபாகன்- ஓர் யானைப்பாகனாவான், அட்டமாபங்கன் என்பான்- அட்டபங்கன் என்று பெயர் கூறப்படுவான், தன்னை-அவனை, மெய்தெரியக்கண்டு-உடல்முழுதும் நன்குகண்டு, தளர்ந்து- மனம் சோர்ந்து, கண்புதைத்து மீண்டேன்-கண்களை மூடிக்கொண்டு திரும்பினேன், என்னை நீ முனிவை என்னா- சென்ற கருமத்தை அவற்கு உரைப்பின் என்னை நீ வெகுள்வாய் என்று அஞ்சி, ஈது அவற்கு இசைக்கிலன்-இதனை அவனுக்கு யான் சொல்லவில்லை, என்றாள்-என்று குணவதிகூறினாள் எ-று.
மன்னன்பால் ஒன்றி அவற்கு உரிமைப்பட்டிருந்த மனம் நீங்கி, அயலான் ஒருவன்மேற் சென்றமையின், அமுதமதியை, அரசன்தேவி யென்னாது, "நங்கை" (99) என்றும் "சின்மலர்க்குழலி" (100) என்றும் கூறிப்போந்தவள், இனி அவ்வாறு செல்வதொழிந்து, அரசற்கே யுரித்தானமையின் "மன்னன் மாதேவி" என்றாள். அட்டபங்கன்பால் தனக்குண்டான அருவருப்பைக் குணவதி, அவனிசைத்த பண்மே லேற்றி "வருத்துவான் வகுத்த கீதம்" என்றாள். பலவேறுபண்களாக வகுக்கப்படுதலின், "வகுத்த கீதம்" என்றார். அத்தி, யானை. மா, அசை. அட்டபங்கன் வடிவு முழுதும் விளங்கக்கண்டமை தோன்ற, "மெய்தெரியக்கண்டு" என்றும், அவ்வடிவின் பொல்லாங்கினைத் "தளர்ந்து கண்புதைத்து" என்று குறித்தும், அதனைக் காணின் அமுதமதி அறவே அவனை வெறுப்பளென்னும் துணிவால், "என்னை நீ முனிவை யென்னா விசைக்கில னவற்கீ" தென்றும் கூறினாள். தளர்ச்சி அமுதமதியின்
பொருட்டு.
-----------
அட்டபங்கன் வடிவைக் குணவதி கூறல்
உரை:-நரம்புகள் விசித்தமெய்யன் - நரம்புகள் புறத்தே தோன்றுமாறு எழுந்த மெய்யினையுடையவன், நடையினில் கழுது அணைந்தோன் - நடையால் பேய்க் கோட்பட்டானை யொப்பன், திரங்கிய விரலன் கையன் - தோல்சுருங்கித் தேய்ந்த விரலையும் கையையுமுடையவன், சிறுமுகன் - சிறுத்த முகத்தையுடையவன், சினவன் - முன் கோபி, சீறின் குரங்கினையனையன் - சினந்தவழி முகம் குரங்கினை யொப்பன், கூனன் - கூனிய முதுகை யுடையவன், குழிந்துபுக்கு - குழிந்து உட்சென்று, அழிந்தகண்ணன் - இதழ் புண்ணுற்று அழுகிய கண்களையுடையவன், நெருங்கலும் நிரலும் இன்றி - நெருக்கமும் வரிசையுமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிலபல் நிமிர்ந்து - சிலபற்களே மிக நீண்டு, உள - அவன் வாயில் உள்ளன, என்றாள் - என்று எடுத்துரைத்தாள் எ-று.
நரம் பெழுந்து விசித்தது போலத் தோன்றலின், "விசித்த மெய்யன்" என்றாள். புழுதி யளைந்த மேனியும் மருண்டநோக்கமும் தள்ளாடுநடையும் உடைமையின், "நடையினிற் கழுதணைந்தோன்" என்றாள். திரங்கிய என்பதனைக் கையன் என்புழியும் கூட்டுக. தலைக்கும் உடற்கும் ஒவ்வாதுசிறுத்திருத்தலின், "சிறுமுகன்" என்றும், அச்சிறுமை விரைவில் வெகுளும் இயல்பினைக்காட்டலின் "சினவன்" என்றும். சினந்து சீறுங்கால் முகம் பெறும் வடிவினை "சீறிற் குரங்கினை யனையன்" என்றும் கூறினாள். குழிந்தெனவே யமையுமாயினும் "புக்கு" என்றது, நெடி தாழ்ந்து கிடைந்தமை தோன்ற. இதழ்புண்ணுற்று மயிருதிர்ந்து சீயும் பீளையும் நீரும் ஒழுகுதல் பற்றி, "அழிந்த கண்ணன் என்றாள், "சிலபல்" என்றும் "நிமிர்ந்துள" என்றும் கூறியதனால், இருகடைவாயிலும் முன்னும் மேலும் கீழும் இவ்விரண்டு பற்களுள வென்றும், முன்னுள்ளவை மிக நீண்டு புறத்தே வெளிப்பட்டுத் தோன்றின வென்றும் கொள்க.
--------
இன்ன இயல்பினனான இவனை நீ வேண்டற்கஎனக் குணவதி கூறல்
உரை:- பூதி கந்தத்தின்-புழுதி நாற்றமும், மெய்யிற் புண்களும்-உடலிடத்தேயுள்ள புண்களும், கண்கள் கொள்ளா-கண்கள்தாமும் பார்த்தற்கு உடன்படா, சாதியும் தக்கதன்று-அவனுடைய குடிப்பிறப்பும் தகுதியுடையதன்று, அவன் வயின் தளரும் உள்ளம்-அவன் பொருட்டு வருந்திமெலியும் நின்மன விருப்பத்தை, நீ தவிர்ந்திடுக-நீ விட்டொழித்து, நெஞ்சின்-அவன்பாற்செல்லும் நின் நெஞ்சத்தை, நிறையினை-நினக்கு இயல்பாயுள்ள நிறையைக் கொண்டு, சிறைசெய்க-தடுத்து நிறுத்திக் கொள்க, என்றாள்-என்று பரிவோடு கூறினாள். கோது அவிழ்ந்திட்ட-குற்றம் இல்லாத, உள்ளக் குணவதி-மனத்தையுடைய குணவதி யென்னும், கொம்பன்னாள்-பூங்கொம்பு போலும் தோழி எ-று.
பூதி-புழுதி. கந்தம்-நாற்றம். காண்டற்கு நம் நெஞ்சு ஒருகால் விரும்பினும், கருவியாகிய கண்கள் அதற்கு உடன்படா எனப் பார்த்தற்கு மிக்க அருவருப்புடைய அவனது உடல் வடிவை யுணர்த்துவாள் "கண்கள் கொள்ளா" என்றாள். மெய்யிற் புண் கூறவே, அவ் வட்டபங்கன் குட்ட நோயால் வருந்துதல் பெற்றாம். சாதி, ஈண்டு இற்பிறப்பின் மேற்று. நெஞ்சின் என்புழி ஐயுருபு, சாரியை நிற்கத் தான்நிலையாதாயிற்று. நிறையினை யென் புழிக் கொண்டு என்று ஒருசொல் வருவிக்க. நிறையினை யென்புழி ஐயுருபைப் பிரித்து நெஞ்சோடு கூட்டி, நெஞ்சினை நிறையினால் சிறை செய்க என்றுரைப்பினுமாம். இனி, நெஞ்சு இல் நிறையினைச் சிறை செய்க என்று கொண்டு, நெஞ்சிடத்தே நில்லா தொழுகும் நின் நிறையினை நிறுத்துச் சிறை செய்கை எனினுமமையும். கோது, குற்றம். குணவதியைக் "கொம்பனாள்" என விசேடித்ததனால், அமுதமதியாகிய பூங்கொடிக்குக் கொழு கொம்பாய் நின்று, அக்கொடி படர விரும்பும் இடத்திற்குக் கொம்பு துணைசெய்து நிற்குமாறு போல, அமுதமதி விரும்பும் அட்ட பங்கனை அடைந்து மகிழ்தற்கு இக்குணவதி துணையாவது பெற்றாம்.
----------
குணவதி கூறியவற்றை அமுதமதி மேற்கொள்ளாது மறுத்தல்.
உரை:- என்றலும்-என்று குணவதி கூறினதும், இறைவளை-இறைபொருந்திய வளையுடையாய், இவற்றினால் என்-நீ கூறிய இக்குறைபாடுகளால் வரும் கேடு என்னை, அவன்கண் ஆர்வம் சிறந்து முன்னே சென்றது-அவ்வட்ட பங்கன்பால் என் நெஞ்சம் காமக்காதல் மிகுந்து முன்னமே சென்றொடுங்கிவிட்டது. திருவொடுதிறலும்-செல்வத்தோடு கூடிய வலியும், தேசும்-புகழும், ஒன்றிய அழகும்- உடலோடு ஒன்றுபட்டுத் தோன்றும் வனப்பும், கல்வி-கல்வியறிவும், ஒளியமை குலத்தோடு-புகழ்நிறைந்த குடிபிறப்போடு, எல்லாம்-கூறப்படாத பிறவுமெல்லாம், நின்று- எஞ்சாமல் நின்று.செய்பயனும்-ஒருவர்க்குவிளைக்கக்கூடிய பயன்தானும். நல்லார் நெஞ்சமும்-அழகிய மகளிரின் மனமும் அதன் வாயிலாக எய்தும் அவரது போகமும், பெறுதல்-பெறுவதாம், என்று சொல்லி மேலும் கூறுகின்றாள் எ-று.
குணவதி கூறிய குற்றங்களைக் கேட்ட அமுதமதி, அவளை மறுக்குமாற்றால், குணமெனக் கருதப்படுவனவற்றுட் சிலவற்றைக் கூறலுற்று, திருவும், திறலும், தேசும், அழகும். கல்வியும், ஒளியும், குலனும், பிறவுமெல்லாம் ஒன்றி நின்று ஒருவர்க்குச் செய்யும் பயன் அழகிய மகளிர் நெஞ்சும் அவர் தரும் போகமும் பெறுதலேயாம்; பெறாவழி அவையும் குற்றமாம்; குற்றமென்று கூறப்பட்டனதாமும் அப்பயனை எய்துவிக்குமாயின், குணமாம் என்பது குறிப்பால் உரைத்தாளாயிற்று. எல்லாம் என்றது, கூறப்படாத குணமெல்லாம் எஞ்சாமல் தழுவி நின்றது. பயனும் என்புழி உம்மை சிறப்பு; நெஞ்சமும் என்புழி உம்மை, எச்சப் பொருட்டு. பிற எண்ணுப்பொருளில் வந்தன. அன்றோ, அசை.
-----------
உரை:- நேரிழை-நேரிய இழையினையுடைய தோழி. காரியம் முடிந்த பின்னும்-ஒருவன் எடுத்த காரியம் முடிந்த பின்னரும், காரண முடிவு காணல்-அக்காரியம் தொடங்கு முன் காணவேண்டிய காரணமும் பயனும் ஆராய்தல், காரியமன்று என்று-செய்யத்தகுவதன்று என்றும், இது என்றும்-இதுவும் அதுபோல்வதே யென்றும். கருதிடு- உணர்வாயாக, கடவுள் காமன்-கடவுளாகிய காமதேவன், யாருழை அருளைச் செய்யும்-எவன்பால் தன் அருளைச் செய்கின்றானோ, அவன் நமக்கு ஐயன்-அவனே நமக்குக் காமக் கிழவனாவான், ஆக,-ஆதலால், நினைந்துபோகி- இதனை நினைத்துக்கொண்டு சென்ற, நீடலை-நீட்டியாது, இது முடி-இதனை முடித்துக்கொண்டு வருக, என்றாள்- என்று அமுதமதி சொன்னாள் எறு.
ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டின், தொடக்கத்தே அக்காரியத்துக்குரிய காரணங்களையும் அவற்றால் அது முடிவதையும், அதனாலாம் பயனையும் சீர்தூக்கிக் காண்டல் வேண்டு மென்றும், முடிந்தபின் காண்டலால் ஒரு பயனும் விளையாதென்றும் பொருள் நூல் கூறுதலின், "காரிய முடிந்த பின்னும் காரண முடிவு காணல், காரிய மன்று" என்றாள். என்று என்பதனை அன்றென்பதனோடும் கூட்டுக. இது வென்புழி எச்சவும்மையை விரித்து அன்னதே என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனி, தான் மேற்கொண்டிருக்கும் செயற்கு ஓர் அமைதி கூறுவாளாய், மகளிர் ஆடவர்பால் காமவின்பந் துய்த்தலே பொருளாகவுடைய ரென்றும், அக்காமவின்பத்தை நியமிக்கும் காமக் கடவுள் யாவர்பால் அதனைக் கூட்டுகின்றானோ, அவர்பால் அம் மகளிர் அதனைப் பெறற்பாலர் என்றும் சொல்வாள், "கடவுட் காமன் யாருழை அருளைச் செய்யும் அவன் நமக்கு ஐயன்" என்றாள். முன்பு வேறு நினைவொடு சென்றமையின் முடித்திலை; இப்போது இக்கருத்தை நினைந்து சென்று முடிக்க வென்பாள், "நினைந்து போகி" என்றும், விரைந்துசெய்தல் வேண்டுமென்றற்கு, "நீடலை" யென்றும், முடித்துக்கொண்டன்றி வறிது மீளலாகா தென்பாள் "முடி" யென்றும் விரைவுதோன்ற "யிது" என்றும் கூறினாள்.
-----------
குணவதி மனம் நடுங்கி நிற்றல்
உரை:- தேவி-அரசமாதேவி, நீ கமலையாவாய்- நீ தாமரைமேலிருக்கும் திருமகளை யொப்பாய், திருவுளத்து- நின் அழகிய மனத்தால், அருளப்பட்டான்-விரும்பப் பட்டவனோ, ஆவி செல்கின்ற-உயிர் போதற்கேதுவாகிய, வெந்நோய் அருநவை-கொடிய குட்டநோயால் உற்ற தாங்கமுடியாத துன்பத்தையுடைய, ஞமலியாகும்-நாயினை யொப்பான், பூவின்வார் கணையன்-பூவாகிய நீண்ட அம்பினையுடைய காமக்கடவுள், இதனைப் புணர்த்தவாறு- நின்னை அவனுக்கு நியமித்த வகைதான், என்னே-என்னென்பது, என்று நடுங்குபு-என்று மனங்கலங்கி, நாவினால் உளைந்து கூறி-நாவால் வருந்திச் சொல்லி, ஒடுங்கி நின்றாள்- உடல் சுருங்கி நின்றொழிந்தாள். எ-று.
கமலை, கமலத்தை இருக்கையாகவுடையவள்; கமலம்-தாமரை. புண்ணிய முடையாரை யருளுவதே திருமகளினன் உளப்பண்பு என்றதற்குத் "திருவுளம்" என்றும், நின் உளத்தால் விரும்பப் பட்டவன் அன்னனாகாது பெரும் பாவத்தின் பயனாக வெய்தும் குட்ட நோயும் கொடுந் துன்பமும் உடையானென்பாள், "அருளப் பட்டான் ஆவி செல்கின்ற வெந்நோய் அருநவை ஞமலியாகும்" என்றும் கூறினாள். அருவருப்பு மிகுதி தோன்றற்கு, "ஆவி செல்கின்ற வெந்நோய்" என்றாள். "பூவின்வார் கணையன் இதனைப் புணர்த்தவாறு என்னே" என்றது, திருமகளை ஒரு நாயிடத்தே காமவின்பந் துய்க்குமாறு நியமிக்கும் காமக்கடவுளை இகழ்ந்தவாறாம். இவ்வாறு காமக்கடவுளை இகழ்ந்தும், தேவியின் செய்கையை வெறுத்தும், தான் அவள் செய்கைக்குத் துணையாக நேர்ந்ததற்கு வருந்தியும் வெறுப்புத் தோன்றும் சொற்களை வழங்குதலின், "நாவினாலுளைந்து கூறி" யென்றும், பின்விளைவு நினைந்து அஞ்சி உளங்குலைவது தோன்ற, "நடுங்குபு வொடுங்கி நின்றான்" என்றும் கூறினார்.
---------
குணவதி அட்டபங்கனிடம் செல்லுதல்
உரை:-அணங்கனாரும்-திருமகளை யொத்த மகளிர் தாமும், ஆடவரின்றி-தாம் விரும்பும் ஆண்மக்களை யன்றி மேலார்-மணந்து கூடுதற்கமைந்தவர் மிக்க மேலோராயினும், அருவருத்து-அவரை வெறுத்து, கூடலர்-கூடுவ தொழித்து, நோன்மைக் குணம் புரிந்து-தவமும் விரதமும் மேற்கொண்டு, உயர்தற்காக-தேவராய்த் தாம் விழைந்த போகத்தைத் துய்ப்பது குறித்து, துறந்தனர்-துறவு பூண்டனர், பீடுடை அயனார்-பெருமை பொருந்திய பிரமனால், தந்த-படைக்கப்பட்ட, பெருமகள் இவள்-பெருமையினை யுடையவள் இவ்வமுதவதி, ஆதலின் இவள் துறத்தலின் இறத்தலே தவறாது செய்வள், என்று எண்ணி - என்று தனக்குள்ளே ஆராய்ந்து, துணிந்தனள்-அட்டபங்கன்பாற் சென்று தேவி விரும்பிய காரியத்தை முடித்துத்தர மனம் துணிந்து, பெயர்த்து-மறுபடியும், தோடு அலர் குழலி தோழி-பூக்களையணிந்த கூந்தலையுடைய அமுதமதிக்குத் தோழியாகிய குணவதி, சென்றாள்-அட்டபங்கன் இருக்குமிடத்திற்குச் சென்றாள் எ-று.
ஆடவர், மெய்வன்மையும் இளமைச் செவ்வியும் உடைய ஆண் மக்கள். உம்மை, சிறப்பு. எத்துணை மேலோராயினும் தம் மனம் செல்லாவழி மகளிர் அருவருப்பரென்பது உலகறிந்த செயலாதலின், "அருவருத்து அணங்கனாரும் கூடலர்" என்றும், அவர் கருத்தறியாது அம்மேலோரைப் புணர்த்தவழி அம்மகளிர் செய்யும் செய்கை கூறுவாள் "துறந்தார் நோன்மைக்குணம் புரிந்துயர்தற்காக" என்றும், அழகும் திருவும் இளமையும் அடைய மிக்கிருத்தலின், பிரமன் சிறப்பாக முயன்று படைத்த பெருமையுடையவள் இவ்வமுதமதி யென்றற்கு "பீடுடையயனார் தந்த பெருமகள்" என்றும், கணவனோடு கூடியிருத்தலின், துறவு பூண்பதை விடுத்து இறத் தலையே செய்வள் என்பாள் "பெருமகள் இவள்" என்றும் குணவதி எண்ணினாளாயிற்று. "இறப்பள்" என்று கூறிற்றிலள், நெஞ்சினுள் அதனைத் தெளிய வுணர்ந்து கொண்டமையின். குணவதியும் அமுதமதியின் கருத்துக்கு நேர்ந்து உடம்பட்டமையின் "தோடலர் குழலி தோழி" என்றும், துணியாதிருந்தவள், இப்போது அட்டபங்கன்பால் செல்வது தக்கது என்று துணிந்தாளென்பார் "துணிந்தனள்" என்றும், இடையறவின்றி உடனே செல்லுதல் தோன்ற, "துணிந்தனள் சென்றாள்" என்றும், முன்னொருகாற் சென்றிருத்தலின், "பெயர்த்து" என்றும் கூறினார். நோன்மை, தவம். குணம், விரதம்,. தவமுடையார்க்கு விரதம் பண்பாதலின், அதனைக் "குணம்" என்றார். சீவகனை மணக்கக் கருதியிருந்த குணமாலைக்கு வேற்று வரைவு பேசப்பட்டபோது, "காளைக்கு எந்தையும் யாயும் நேராவிடின் இறத்தலொன்றோ, சிந்தனை பிறிதொன்றாகிச் செய் தவம் முயறலொன்றோ"1 எனக் கூறுதல் காண்க.
சமண் சமயத்தவர், மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்பவாகலின், உயர்தல் என்பதற்குத் தேவராய் இன்புறுதல் என்று உரை கூறப்பட்டது. "விரதசீ லத்தராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து, அருகன சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து, கருது நற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தி னீங்கிக் கற்பத் துத்தம தேவ ராவார்" (739) என்றும் "மாதவந் தாங்கி வையத்தையராய் வந்து தோன்றி, ஏதமொன்றின்றி வீடு மெய்துவர்" (740) என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. தேவர் பெறும் இன்பத்தை,
எனத் தோலாமொழித் தேவர் கூறுவது காண்க.
----------
குணவதி அட்டபங்கன்பால் தேவியின் விழைவைத் தெரிவித்தல்
*
*இதுமுதல் ஐந்து பாட்டுக்கள் அச்சுப்பிரதியில் இல்லை.
உரை:- முடைப்படு நாற்றம் மேனி-முடைநாற்றம் நாறுகின்ற வுடம்பு, முழுது-முழுதும், அழுக்காடை போர்த்து-அழுக்கேறிய ஆடையால் போர்த்துக்கொண்டு, கடைப்படுதுகளும்-தூய்மையற்றதாகக் கருதப்படும் கூளமும், மண்ணும்-மண்பொடியும், கஞலிய கூடத்து- நிறைந்த யானைக் கூடத்தில், ஓர் புடை-ஒரு புறத்தே, கிடந்து உறங்குவானை-படுத்துறங்கிய அட்டபங்கனை, புழுங்கிய மனத்தோடு அண்மி-அருவருத்த மனத்துடன் அருகே சென்று, விடைப்பு அருந் தானை வேந்தன் தேவியின் விழைவு-வேறுபடுத்தற்கரிய தானையினையுடைய வேந்தனான யசோதரனுக்கு மனைவியாகிய அமுதமதியின் விருப்பத்தை, சொன்னாள்-சிலவாய சொற்களால் குணவதி மெல்லச் சொன்னாள் எ-று.
மேனி முழுதும் புண்ணுற்றுத் தீநாற்றம் நாறக் கிடத்தலின், "முடைப்படு நாற்ற மேனி முழுதும்" என்றார். "மெய்யிற் புண்களும் கண்கள் கொள்ளா" (106) என்று குணவதியும், "புண் பெற்ற மெய்யன்" (113) என்று அவனேயும் கூறுதல் காண்க. முடைப்படு நாற்றம், முடையுண்டாகும் நாற்றம், சீவடிதலின் ஈ முதலியன மொய்க்காவண்ணம் போர்த்துக் கிடந்தான் என்பார் "மேனி முழுதும் அழுக்காடை போர்த்து" என்றார். யானை தின்று கழிந்த புற்றுகளும் வைத்துகளும் அதன் சிறுநீரால் நனைந்து அதன் மலம் அளைந்து புலர்ந்து கிடத்தலின் "கடைப்படுதுக" ளென்றார். காண்டற்குத் துணிந்து போந்தாளாயினும், அவனது மேனியும், ஆடைப் போர்வையும் இடத்தின் இழிவும் காணக்காண அவட்கு அருவருப்பு நெஞ்சி லெழுந்தமையின் "புழுங்கிய மனத்தோடு" அணுகினாள். பகைவரால் வேறுபடுத்தற்கரிய தானையாதலின், விடைப்பருந் தானையாயிற்று. "விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி"1 என்று தேவரும் கூறுதல் காண்க. சிலவாய சொற்களால் தம் கருத்தை மெல்லச் சொல்லுதல் இளைய மகளிர்க்கு இயல்பாதலின், அதனை எடுத்தோதாது "விழைவு சொன்னாள்." என்றொழிந்தார். அன்றி, எடுத்தோதற்கு நாணியது தோன்ற உய்த்துணர வைத்தாரெனினுமாம். வேறுபடுத்தற்கரிய தானை கொண்டு நாட்டுக்கு வேண்டும் காவலை நன்கு செய்யும் வேந்தனாயினும், அவன் தேவிக்கு அக்காவல் பயன்படாதாயிற்றென்பார், "விடைப்பருந்தானை வேந்தன் தேவி" என்றார்.
அட்டபங்கன் உடன்படாது வெகுளுதல்
உரை:- கேட்டலும்-குணவதி சொல்லியது கேட்டமாத்திரையே, அஞ்சும் நெஞ்சன்-அஞ்சுகின்ற மனமுடையவனான அட்டபங்கன், எனக்குக் கேடு எய்திற்று என்று- எனக்கு நாசகாலம் வந்தது என்று நினைத்து, வாட்டமும் நடுக்கும் உற்று- மனவாட்டமும் நடுக்கமுமடைந்து, மாண்பு இல மொழிந்தாய்-தேவியின் பெருமைக்குத் தகாதவற்றைச் சொல்கின்றாய், மன்னன் வீட்டிடும்-இதனை யறிந்தால் வேந்தன் கொன்றுவிடுவான், செல்க-நீ இப்போதே இவ்விடத்தினின்றும் போய்விடுக, என்று ஏவ-என்று சினந்த கூற, வேய்புரை தோளி தோழி-மூங்கில்போலும் தோள்களையுடைய அமுதமதியின் தோழியாகிய குணவதி, காட்டுவ காட்டி-அவன் ஐயுறாது ஏற்கத்தக்க சான்றுகளை எடுத்துக் கூறிக்காட்டி, அன்னான் கருத்தையும் கலைத்திட்டாள்-அவனுடைய மனக்கருத்தைக் கலைத்துத் தேவியின் விருப்பத்துக்கு இசைவித்துக்கொண்டாள் எ-று.
இயல்பாகவே அச்சமுடையனாதலின், குணவதி கூறியதனால் அது மிகுந்து வருத்துவதுபற்றி "அஞ்சும் நெஞ்சன்" என்றார். "அச்சமே கீழ்களது ஆசாரம்"1 என்பதனால், அச்சம் அட்டபங்கற்கு இயல்பாதலறிக. அரசன் கோயிலிற் பணிபுரிவோர் அடங்கிய மனமிலராயின், கேடெய்தல் ஒரு தலையாதலின், "கேடெனக் கெய்துமென்று வாட்டமம் நடுக்கமும்" கொண்டான். "மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே"2 என்று திருத்தக்க தேவர் கூறுதல் காண்க. தேவிக்குத் தோழியாவாள் அவள் மாண்பிற்கு இழுக்குத் தருவதனைச் சொல்வது தீதாதலின் "மாண் பில மொழிந்தாய்" என்றும், அவளை அச்சுறுத்திப் போக்கும் கருத்தால் "மன்னன் வீட்டிடும் செல்க" என்றும், என்றதனோடமையாது, அவன் சொல்லக்கேட்டும் குணவதி புடைபெயராமையின், அவனே அவளைப் போக்கக் கருதினானென்பார் "ஏவ" என்றும் கூறினார். வேய்புரை தோளி தோழி யென்றது, தான் கருதியது முடித்துக்கொண்டல்லது ஏகாத இயல்பினளாதலை யுணர்த்திற்று. இவ்வாறு அவன் மனந்திறம்பானாதலைக் கண்ட குணவதி அவன் ஏற்கத்தக்க சொற்களையும் அவற்றிற்குச் சான்றாகக் காட்டத் தகுவனவும் வழங்கி, அவனை மதியுடம்படுத்தாள் என்பார், "காட்டுவ காட்டி யன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே" என்றார். பேதையாதலின், பிறனில் விழையும் இத் தீவினைக்கு அவனும் இசைந்தானென வறிக.
அட்டபங்கன் மனங்கலைந்து மகிழ்ந்துரைத்தல்
உரை:- பண் பெற்ற மொழியாய்-பண்ணிசைபோலும் சொற்களையுடையவளே, பண்பெற்ற பயன்-பண்பாடும் அறிவு பெற்றதனாலடையும் பயனை, யானும்-பெறற்காகாத யானும், பெற்றேன்-இன்று பெற்றேன், (எவ்வாறெனில்) புண்பெற்ற மெய்யன்- புண்கள் நிறைந்த உடம்பினையுடையேன், பொல்லாப் புழுதியில்-நல்லதல்லாத புழுதியிலே, துளையும்கையன்- புரண்டுகிடக்கும் சிறுமையுமுடையேன், மண்பெற்ற இறைவன் தேவி-மண்ணுலகத்தையாளும் அரசனுக்கு மனைவியினுடைய, மனம் பெற்று மகிழ்வேன்-காதலன்பு பெற்று மகிழ்கின்றேனாதலால், எண்பெற்ற தவம்-யாவரும் எண்ணி விரும்பத்தக்க தவப் பயனை, என்னின்-என்னைப்போல, யார் பெற்றார்-யாவர் பெற்றார். இது யான் பெற்ற பேறு-இது யான் அரிதாகப் பெற்ற பேறாகும், என்றான்-என்று அட்டபங்கன் குணவதிக்குக் கூறினான். எ-று.
உம்மை, சிறப்பு. "புண்பெற்ற மெய்யன்", "புழுதியிற்றுளையுங் கையன்", எனத் தன் நிலைமையை யுணர்ந்திருத்தலின், "யானும் பேற்றேன்" என்றும், தொடக்கத்தே பண்பிலவாய்த் தோன்றிய மொழிகள் இறுதியில் இன்பப் பயன் தந்தமையின், "பண்பெற்ற மொழியாய்" என்றும் கூறினான். தன் நிலைமையை நோக்க அரசமாதேவியின் இன்பப்பேறு தனக்கு வாய்த்ததற்குத் தன் தவமேயன்றிப் பிறிதொரு காரணமும் காணமாட்டாமையின், "என்னின் எண் பெற்ற தவமியார் பெற்றார்" என்றான். அரிதிற் பெற்ற பேறு என வியந்துரைத்தலின் "யான் பெற்ற பேறிது" என விதந்தோதப்பட்டது.
----------
குணவதி போந்து அரசியைக் காண்டல்
உரை:- இவ்வகை மொழிவோன் தன்னை- இவ்வாறு சொல்லி மகிழும் அட்டபங்கற்கு, இறையவன் தேவி- அரசன் மனைவியாகிய அமுதமதி, மேவும் செவ்வியும் குறியும் செப்பி-வரக்கூடிய காலமும் இடமும் உரைத்துவிட்டு, சென்றவள்-தேவிபாற் சென்ற குணவதி, எய்தலோடும்- அமுதமதியை நோக்கி யணுகவருதலும், கவ்விய காமத் தீயால்-பற்றி வருத்தும் காமத்தீயினால்.கயங்கிய மாலை ஒப்பாள்-சாம்பிய பூமாலையை யொப்பவளான அமிர்தமதி, நவ்விநேர் விழியாய்-மான்போலும் கண்களையுடையாய், நின் கருமம்-நீ மேற்கொண்டு சென்ற காரியம், நன்றோ-நலந் தந்ததோ, நவில்க-சொல்லுக, என்றாள்-என்று கேட்டாள் எ-று.
செவ்வி, காலம். குறி,குறிக்கும் இடம். "செப்பி" யென்றதனால், அவற்றை யவன் வினவினமை பெற்றாம். யானைக் கூடத்தின் நீங்கி அமிர்தமதி யிருந்த அந்தப்புரத்தை யடைந்தாளென்றற்கு, "சென்றவள் எய்தலோடும்" என்றும், குணவதி மேற்கொண்டு சென்ற காரியம் முடியுமோ முடியாதோ என்ற ஐயம் ஒரு புடை யலைப்ப, அவன்பாற் சென்ற காமவேட்கை ஒருபுடை யலைப்ப உணர்வும் உடம்பும் வாடியிருத்தலின், "கவ்விய காமத் தீயால் கயங்கிய மாலை யொப்பாள்" என்றார். தீதோ என்னாமை, அதனையவள் விரும்பாமையாலாம்.
------------
குணவதி நிகழ்ந்தது கூறக்கேட்டு மகிழ்தல்
உரை:- நலம்பட்டது என்பாள்-நலமாகவே முடிந்தது என்று சொல்லித் தொடங்கிய தோழி, பாகனைக் கண்டவாறும்-தான் சென்று அவ்யானைப்பாகனைக் கண்டதும், அட்டபங்கன் சீறி அழன்றிட்டவாறும்-அட்டபங்கனென்னும் பெயரினனாகிய அவன் சீறிச் சினந்ததும், தேவி இட்டத்திற்கு-அரசமாதேவியாகிய அமிர்தமதியின் விருப்பத்துக்கு, அவனை இயைவித்தவாறும்-அவனை யுடன்படுவித்ததும், கூடற்கு ஒட்டிய குறியும்-அவனைச் சென்று கூடுதற்கு நியமித்த காலமும் இடமும், சொன்னாள்-குணவதி கூறினாள், ஒள்ளிழை-ஒள்ளிய இழையணிந்த அமுதமதி, உவப்புற்றாள்-மகிழ்ச்சி மிகுந்தாள். எ-று.
"நன்றோ நவில்க நின்கருமம்" என்று வினவினாட்கு நீட்டியாது விடையிருப்பாள் "பட்டது நலம்" என்றாள்; காண், அசை நிலை. மா, அசை. அழலுதல், வெகுளுதல்; இட்டம், வடசொற்றிரிபு. ஆங்கு என்பது உரையசை. குறியினைத் தானே குறித்தாளாதலின், அட்டபங்கற்கேயன்றி அமிர்தமதிக்கும் தோழி கூறினாள். உற்றாள், உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த முற்றுவினை.
----------
அமிர்தமதி அரசன்பால் முனிவு கொண்டொழுகுதல்
உரை:- கனிபுரை கிளவி-கனிபோலும் சொற்களையுடைய அமுதமதி, இகுளை-தோழியாகிய குணவதிபால், தரப்படு யானைச்சாரனோடு-கூட்டப்பட்ட யானைப்பாகனாகிய அட்டபங்கனுடன், தனிவயின்-தனியான ஓரிடத்தே, காமங்கனிந்து-காமவேட்கை சிறந்து, கலந்தனள் சென்றாள்-புணர்ந்துடனொழுகிவருபவள், மன்னன்தன்மேல்- மன்னனாகிய யசோதரன்பால், முனிவினை முறுகினள் ஒழுகும்-வெறுப்புமிகக் கொண்டொழுகலுற்றாளாக, முன் போல் இனியவள் அல்லள் என்கொல் என-முன்போல் இவள் நம்பால் இன்புறுகின்றாளில்லை இதற்குக் காரணம் யாதாகும் என்று, மனத்து எண்ணினான்-யசோதரன் தன் மனத்துக்குள்ளே சிந்திக்கலானான் எ-று.
தனிவயின், தோழி குறித்த குறியிடம். இகுளைதரப்படு யானைச் சாரனோடு தனிவயின் காமங் கனிந்து கலந்தனள் சென்றாள் என இயைத்துக்கொள்க. காமங்கலந்தனள் கனிந்துசென்றாள் என்றே கொண்டு காமப்புணர்ச்சி பெற்று அதன்கட்கன்றி யொழுகுபவள் என்றுரைப்பினுமாம். சாரன்பால் மனத்தெழுந்த அன்பு சென்றமையின், அரசன்பால் வெறுப்பு மிகுவாளாயினாளென வறிக. அம்மிகுதி அரசனுளத்தே ஐயத்தை யெழுப்பினமையின் "முன்போலன்பில ளென்கொல்" என்றான், இதனைப் பிறர்பால் கூறி யாராயாது தன்மனத்தகத்தே யெண்ணி ஆராயத் தொடங்கினா னென்பார் "மனத்தெண்ணினான்" என்றார்.
----------
மன்னன் பொய்யுறக்கம்கொண்டு அமுதமதியின் களவொழுக்கினைக் காண்டல்
உரை:- அவை அரசு விடுத்து- அரசவைக்கண் வந்திருந்த அரசர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லவிடுத்து, மெய்யால் அறுசினன் ஒப்ப-புறத்தே மனத்துட் சிறிதும் சினம் இல்லான்போலக் காட்டி, உரையலன்-யாவரோடும் ஏதும் சொல்லாடலின்றி, அமளிதன்மேல்-தன்னுடைய படுக்கையின்மேல் கிடந்து, மன்னன் உறங்குதல் புரிந்த போழ்து- மன்னனாகிய யசோதரன் பொய்யுறக்கங் கொண்டிருக்கையில், விரைகமழ் குழலி-மனம் கமழும் கூந்தலையுடைய அமிர்தமதி, மேவி-அவனருகேபோந்து, மெய்த்துயில் என்று-மெய்யாகவே உறங்குகின்றான் என்று கருதிக் கொண்டு, காமத்துறையினள்-காமவின்பந்துய்க்கும் களவு நெறியினளாய், பெயர்ந்து-பள்ளியறையினின்றும் நீங்கி, தோழி குறிஇடம் துன்னினாள்-தோழிகுறித்த குறியிடத்தை யடைந்தாள் எ-று.
அமிர்தமதியின் ஒழுகலாற்றிற் பிறந்த ஐயம் நாளுக்குநாள் மிகுந்து யசோதரன் நெஞ்சை யலைத்தமையின், அரசவைக்கண் இருந்து செய்யும் முறைமைக்கண் கருத்துச் செல்லாமையின், "அரசவை விடுத்து" என்றும், விட்டானாயினும், பிறர் அயிராமைப் பொருட்டு, வெகுளியைப் புறத்தே காட்டாதொழுகின னென்றற்கு, "மெய்யாலறு சினனொப்ப" என்றும் கூறினார். அறுசினன் என்பது, "அருங்கேடன்"1 என்றாற் போல்வது. பொய்யுறக்கங்கொண்டா னென்பார். உறங்கினானென்னாது, "உறங்குதல் புரிந்த போழ்து" என்றார்; "புரிந்த" என்றதனால், காண்பவர் மெய்யாகவே உறங்கு கின்றானென உணரத் தோற்றினா னென்பது பெற்றாம். மணங் கமழும் குழலியாதலின், அமிர்தமதி வந்து தான் உறங்குதலைக் கண்டேகுவதைக் கண்ணாலன்றி மனத்தா லறிந்துகொண்டமை தோன்ற, "விரைகமழ் குழலி" யென்றார். களவுக் காமத்துறையில் ஒழுகுகின்றாளாதலின், உடனே அவ்விடத்தினின்றும் நீங்குவது தோன்ற, "பெயர்ந்து" என்றும், "குறியிடம் துன்னினா"ளென்றும் கூறினார்.
யசோதரன் அவளைப் பின்தொடர்ந்து சென்று அக்குறியிடத்தே மறைந்து நிற்றல்
உரை:- மன்னன்-அமிர்தமதி செல்லக்கண்ட யசோதரன், துயிலினை யொருவி-தான்கொண்டிருந்த பொய்யுறக்கத்தை விடுத்து, சுடர்க்கதிர்வாள்-சுடருகின்ற ஒளிக்கதிர்களை வீசும் வாட்படையை, கையேந்தி-கையில் ஏந்திக் கொண்டு, மயல் உழைவழி-மயங்கியோடுகின்ற மானொன்றைப் பின்பற்றி, செல்கின்ற வாள் அரிஏறு போல-செல்லுமொரு சிங்கவேறு போல, கயல்விழியவள்தன் பின்னே- கயல்மீன் போலும் கண்களையுடைய அமிர்தமதியின் பின்னே,கரந்தனன் ஒதுங்கி-மறைந்து சென்று.ஆங்கண்- அக்குறியிடத்தே, செயலினையறிதும் என்று-நிகழும் நிகழ்ச்சியைக்காண்பாம் என்று நினைத்துக்கொண்டு, செறிந்தனன் மறைந்து நின்றான்-யாரும் அறியாவகையில் ஒடுங்கி மறைந்து நின்று நோக்கினான் எ-று.
நிகழ்ச்சியினைக் காண்டல் வேண்டு மென்றே பொய்யுறக்கங் கொண்டானாதலின், அமுதமதி செல்லக்கண்டதும் அதனை யொருவினான் எனவறிக. உழை, மான், காமத்துறையினளென்றாராகலின், அதற்கேற்ப, அவட்கு மயங்கிய மானை உவமம் கூறினார். வாள் அரியேறுபோல என்ற உவமையாற்றலால், யசோதரன் மிக்க சினத்துடன் செல்கின்றமை பெற்றாம். பிறர் காண்பரென்ற அச்சத்தால் அடிக்கடி சுற்றுமுற்றும் பரக்க விழித்துப் பார்த்துக்கொண்டே சென்றாளென்றற்கு, அமிர்தமதியைக் "கயல் விழியவள்" என்றார். தன்னிருப்புப் பிறர்க்குத் தெரியாமல், பிறர் மெல்லப் பேசுவதும் தான் நன்கு கேட்கக்கூடியதாயுள்ள இடத்தையடைந்து மறைந்திருந்தானாகலின், "செறிந்தனன்" என்றார்.
----------
அமிர்தமதி தாழ்ந்துவரக்கண்ட அட்டபங்கன் அவளைத் துன்புறுத்தல்
உரை:- கடையன் - கீழ்மகனாகிய அட்டபங்கன் எதிர் நோக்கிவந்து, அக்கமலப்பாவை - திருமகளைப்போல்வாளாகிய அவ்வமிர்தமதியின், கருங்குழல் கையால் பற்றி - கரிய கூந்தலைத் தன்கையால் பற்றி, இடைநிலம் செல்ல ஈர்த்திட்டு, அவ்விடத்திற்கும் குறியிடத்திற்கும் இடைக்கிடந்த நிலத்தில் அவளை இழுத்துக்கொண்டு சென்று, துடியிடை துவள நிலத்திடை வீழ்த்து - உடுக்கைபோலும் இடையினையுடைய அவளை நிலத்தில் தள்ளிக்கிடத்தி, இருகையினாலும் ஓச்சி - இருகைகளாலும் ஓங்கி, புடை - வலமிடமாகிய இருகன்னத்திலும், பல புடைத்து - பலமுறையும் அடித்து, தாழ்த்த பொருளிது புகல்க - காலந்தாழ்ந்துவந்த காரணத்தைச் சொல்லுக, என்னா - என்று, துகைத்திட்டான் - உதைத்து வருத்தினான் எ-று.
"கமலப்பாவை" யைக் காண்பவன், அன்புடன் வழிபட்டு அவளருளைப்பெறாது அவளருமையு முணராது வருத்துதல் பற்றி, அட்டபங்கனைக் "கடையன்" என்றும், கமலப்பாவையாயினும் கடையனைச் சார்வாளேல், இத்துன்பத்தையே யடையற்பாலள் என்றற்கு, "கமலப்பாவை" என்றும் கூறினார். குறித்த காலத்து வாராது தாழ்த்தமையின், குறியிடத்தினீங்கி வெளியே போந்து அவளது வருகை நோக்கிச் சினந்திருந்தவன், கண்டமாத்திரத்தே சீறிப்பாய்ந்து அவள் கூந்தலைப்பற்றி ஈர்த்துக்கொண்டு அக்குறியிடத்துக்குச் சென்று, நிலத்திற் றள்ளிப் புடைத்து உதைத்து வருத்தினானென்பதாம். துடியிடை, சுட்டுமாத்திரையாய் நின்றது. இதுபோலும் வருத்தம் எவராலும் எப்போதும் அவ்வமிர்தமதிக்கு நிகழ்ந்த தின்மையின், "துவளத் துகைத்திட்டானே" என ஆசிரியர் வருந்திக் கூறுகின்றார். புடை, கன்னம், பொருள், காரணம்.
---------
அமிர்தமதி ஆற்றாது அயர்தல்
உரை:- இருளினால் அடர்க்கப்பட்ட-இருட்கூட்டத்தால் நெருக்கப்பட்ட, எழில்மதிக் கடவுள்போல-அழகிய முழுமதியம் போல, தேவி-அரசமாதேவியாகிய அமிர்தமதி, வெருளியால் மிதிப்புண்டு-அட்டபங்கன்பாற்சென்ற கழி காதலால் நெஞ்சடைப்புண்டு, ஐது விம்மிய மிடற்றளாகி- மெல்லிதாக வீங்கிய கழுத்தினையுடையளாய், தெருள்கலாள்-தன் தீயொழுக்கத்தின் தீமையை யுணராளாய், உரையுமாடாள்-ஒருசொல்லும் சொல்லாது, சிறிது போது அசைய-சிறிது நேரம் அயர்ந் திருந்தாளாக, கண்ட- பார்த்த, மருளியான் - மனமருட்கையுடையனான அட்டபங்கன், மயங்கி-தான் ஆராயாது வருத்தியதற்கு மனம் வருந்தி, மாதர் மலரடி-அமிர்தமதியின் தாமரைப்பூப் போன்ற பாதத்தை, சென்னிவைத்தான் - தலையில் வைத்து வணங்கினான் எ-று.
“இருளினால் அடர்க்கப்பட்ட எழின்மதிக் கடவுள் போல” என்ற உவமம், வெருளியால் மீதூரப்பட்ட அமிர்தமதியைச் சுட்டி நின்றதென வறிக. வெருளி-கழிகாமத்தால் பிறக்கும் மனமயக்கம். மனத்தே அவன்கட் சென்ற கழிகாமத்தால் வேறுபடாளாயினும், அவன்தன் குழல்பற்றி யீர்த்துப் புடைத்து வீழ்த்தித் துன்புறுத்திய தாற்பிறந்த ஆற்றாமையால் மிடறுவிம்மி அசைவு கொண்டாள் என்க. ஐது, சிறிது. ஆற்றாது பெருவருத்தமும் நோயுமெய்தற்பாலாள், வெருளி மீதூர்ந்தமையின், சிறிதே விம்மினாள் என்பார்,”ஐதே விம்மிய மிடற்றளாகி” என்றும், இத்துணைத்துன்பமெய்தியும் தன் தவற்றினை யவள் உணர்ந்தில ளென்பார், “தெருள்கலாள்” என்றும், தன் வருத்தத்தைப் புலப்படுத்தியோ, அவனோடு காதலன்பால் புலந்தோ ஏதேனு மொன்றுகூறின், அவன் வேறுபட்டு நீங்குவனென்ற அச்சத்தால் வாளாவிருந்தா ளென்றற்கு, “உரையுமாடாள்” என்றும், அவனை வணக்கும் வாயிலாதலின் “சிறிது போதசைய” என்றும் கூறினார். நெடிதசைந்திருப்பின், அட்டபங்கன் அஞ்சி அவ்விடத்தினின்றும் ஓடிவிடுவனாதலின், "சிறிது போது" என்றார். தான் செய்த துன்பத்தையும், அதனால் அமிர்தமதி ஆற்றாது அசை வுற்றதும் நினைந்து கண்டு, மனம் மருண்டு, தெளிந்த அறிவின்மையின் அவள் காலில் வீழ்ந்து வணங்கினான் என்றுணர்க. வணங்கக் கண்டதும் அவள் அசைவு நீங்கி அவன்பால் ஆராக்காதல் கொண்டாளென்பார், "மாதர்" என்றார். சென்னிவைத்தவன், வணங்கினான்.
---------
அமிர்தமதி தான் வாழ்த்து வந்தமைக்குக் காரணம் கூறுதல்
உரை:- தையலாள்-புணர்ச்சி வேட்கையளாகிய அமிர்தமதி, தேறி-அசைவுநீங்கி, மகிழ்ந்து-அட்டபங்கன் செயல் கண்டு மனம் மகிழ்ந்து, மெல்லநோக்கி-தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்து, ஐய-ஐயனே, வெய்ய நீ- என்னால் விரும்பப்பட்ட நீ, முனிவு செல்லல்-யான் காலம் தாழ்த்து வந்தது குறித்து வெறாதேகொள், மேதினிக்கு இறைவன் தன்னோடு-மண்ணரசனான யசோதரனுடன், அரசவை-அரசர் வந்திருக்கும் அவைக்கண், ஆசனத்தின் உம்பர்-அரசுகட்டிலின் மேல், இருந்து- திருவோலக்கமிருந்து, வெய்ய பாவங்கள் செய்தேன்-நீ வெம்மை கொள்ளத்தக்க குற்றங்களைச் செய்துவிட்டேன், விளைந்தது-நிகழ்ந்தது இதுவே, விளம்பலன்-இதனை முன்னரே தோழிவாயிலாகத் தெரிவியா தொழிந்தேன், என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன், என்றாள்-என்று சொன்னாள் எ-று.
தையலென்னுஞ்சொல் புணர்த்தலென்னும் பொருட்டு மாதலின், புணர்ச்சி வேட்கையுடையாளென்றுரைக்கப்பட்டது. "மெல்ல நோக்கினாள்," தான் மெய்யே அசைவுற்றுத் தெளிவுறுவதுபோல அட்டபங்கன் காணும்பொருட்டு. அட்டபங்கனால் அமிர்தமதியுற்ற வருத்தம் திருட வந்தோனைத் தேள்கொட்டியது போல்வதாகலின், மெய்யே யசைவுற்றாள் என்று கோடல் அவட்குப் பொருந்தாமை காண்க. தான் இழைத்த துன்பத்தால் தன்பால் முனிவுற்றுத் தன்னை வெறுத்து ஒறுப்பாளோ என அஞ்சி யலமந்து நோக்கும் அட்டபங்கற்கு அவ்வச்சத்தைப் போக்குங் கருத்தினளாதலின், "மகிழ்ந்து" நோக்கினா ளென்றார். வெய்ய நீ என்புழி, வெய்ய வென்பது வேண்டற்பொருட்டாய வெம்மை யென்னும் உரிச்சொல்லடியாகப்பிறந்த பெயரெச்சம். "தாழ்த்த பொருளிது புகல்க" (119) என்று வெகுண்டு புடைத்தானாதலின், அவ்வெகுளி நீங்க, "முனிவு செல்லல்" என்றாள். தன்னை வெறுத்தஞ்சி நீங்காமற் பொருட்டு இது கூறினா ளென்றுமாம். "மேதினிக்கு இறைவன்" என்றாள், தனக்கு அவன் அன்னனல்ல னென்பது தோன்ற. அட்ட பங்கன் அரசவைக்கண் அரசரிருக்கும் திருவோலக்கக் காட்சியினைக் கண்டறியாதவனாதலின், அவற்கு அது விளங்க, "ஆசனத்தின் உம்பர் அரசவை யிருந்து" என்றாள். கண்டாய், முன்னிலையசை. அவன் தன்னைத் துன்புறுத்தியது நினைந்து வருந்தாமைப்பொருட்டு, "யான் செய்தன பெருங் குற்றங்கள், அவற்றிற்குத் தகவே நீ ஒறுத் தனை" யென்பாள், "வெய்ய பாவங்கள் செய்தேன்" என்றாள்; அட்டபங்கனுடன் கூடி அவனிருக்குமிடத்தில் இருக்கும் இருப்புத் தனக்குப் புண்ணியப் பயனாகக் கருதுவது தோன்ற இது கூறினா ளென்றுமாம். விளைந்தது இதுவாயினும் இதனை முன்னறிந்து தோழிவாயிலாகத் தெரிவிக்கவேண்டுவது நெறியாகவும், அது செய்யாது குற்றப்பட்டேனென்பாள், "விளம்பலன்" என்று கூறினாள். இதனைக் குணவதிக்கும் உரைத்திலள், உரைத்திருப்பின் அவளாயினும்போந்து விளம்பியிருப்பாளென்றற்கு இது கூறினாளென்றுமாம்.
--------
அமிர்தமதி தன் அயராக்காதலை உரைத்தல்
உரை:- பொற்பகம் கழுமி-தேவர்வாழும் அழகுமிக்க பொன்னுலகத்தே பொருந்தியிருந்து,யாவும் புரந்து-பல் வகையுயிர்களையும் காத்து, அரந்தை இனிது தீர்க்கும் கற்பகம்-அவற்றிற்குண்டாகும் துன்பத்தைத் தீர்த்து இன்பம் நிறைவிக்கும் கற்பகமரத்தை, கரந்து கண்டார்-மறைந்து சென்று கண்ணிற்கண்டு கையுறப்பெற்றவர், கையகன்றிடுதலுண்டோ-அதனைக் கைவிட்டு விடுவரோ? விடாரன்றே. எற்பகம் காதல்கொண்ட எனக்கு-உடல் முழுதும் நின்பாலெழுந்த காதலே நிரம்பியுள்ள எனக்கு, காளை-காளை போல்வாய், இனி-இப்பொழுது, இவ்வணம்-இவ்வுலகத்தே, நின்னின்-கற்பகம் போல் கிடைத்துள்ள நின்னைக்காட்டிலும், வேறு ஓர் துணைவரும் உண்டோ-வேறே சிறந்த காதலர்தாமும் உண்டோ. சொற்பகர்ந்தருளு- நீயே நினைந்து ஒருசொல் சொல்லியருள்வாயாக எ-று.
கற்பகமரம் தேவருலகத்திருப்பதாகலின், பொற்பகம், தேவர் வாழும் பொன்னுலகமாயிற்று. அரந்தை, துன்பம். அதனை இனிது தீர்த்தலாவது, அதனை அறப்போக்கி, அதற்கு மாறான இன்பத்தை நிறைவித்தல். பெறற்கரிதாதல் பற்றி "கரந்து கண்டார்" என்றும், அதனைக் கைப்பற்றித் தமக்கே உரிமை செய்துகொள்வதன்றி இழந்துவிடுதற்கு எவரும் விரும்பாரென்றற்கு, "கையகன்றிடுதலுண்டோ" என்றும் கூறினாள். எனவே, தானும் அவனைக் கைவிடாமையினை அமிர்தமதி வற்புறுத்தியவாறும், அதற்கு ஏதுவாக, அட்டபங்கன் தான் துன்புறுத்தியதுகொண்டு அவள் தன்னைக் கையகன்றிடுவாளென அஞ்சியவாறும், அதனை இவ்வமுதமதி யுணர்ந்து கொண்டவாறும் பெற்றாம். என்பு, ஆகுபெயர். காதல், காமவேட்கை. "காதல்மிக்குழிக் கற்றவும் கைகொடாவாதல்"1 என்புழிப்போல. காளை, அண்மைவிளி. இவண் என்பது அம் முப்பெற்றது. "சொற்பகர்ந்தருளு" எனக் குறையிரந்து நின்றாள். அவனது காதலுரையினைக் கேட்டற்கெழுந்த காமவெறியால். வேறு என்பதனைத் துணைவர்மேலேற்றி, ஓர் என்பதனைச் சொன் மேலேற்றலுமொன்று. ஓகாரம், வினா,.
இனி, வெற்பகங்கொண்ட காதலெனக்கு என்று கொண்டு, மலைபோலெழுந்த காதலையுடைய வெனக்கு என்றுரைப்பினுமமையும். கண்ட வேந்தன் உள்ளத்தே இருவரையும் கோறற்கு உணர்வெழுந்து அடங்குதல்
உரை:- என்றலும்-என்று அமிர்தமதி அட்டபங்கற்கு உரைத்ததும், மேயமன்னன்-ஆங்குப் போந்துநின்று கேட்ட மன்னன், சீறி-வெகுண்டு, எரிஎழ விழித்து-கண்ணில் தீப்பொறி பறக்க நோக்கி, இவர்தம்மை-இவ்விருவரையும் வாள்வாய் கொன்று-வாட்படையால் கொலைசெய்து, கூற்றுண இடுவல்-யமனுக்கு இவர் உயிரை உணவாக்குவேன், என்று ஒன்றினன்-என்று கொல்லற்கும் ஒருப்பட்டானாக, கரத்துவாாளும்-கையிற்பற்றியிருந்த வாட்படையும், உள்ளத்து உணர்ந்தது-அவன் உள்ளக் கருத்தை, உணர்ந்தது-உணர்ந்து கொல்லுதற்கு மேலெழுந்தது, இடைசென்று விலக்கி-இடைப்புகுந்து அதனை மறித்து, நின்று-கீழே விழாது நிற்குமாறு, ஓர் தெளிந்துணர்வு-ஒருதெளிந்த வுணர்வு, எழுந்தது-பிறந்து அக்கொலைவினையைத் தவிர்த்தது எ-று.
காரியம், காரணமாக உபசரிக்கப்பட்டது. தொடக்கத்தே இருவரையும் கொல்லற்கெழுந்த சினத்தோடு கூடிய உணர்வினால் வாளை உறையினின்றும் கழித்து ஓச்சினான். இடையிலெழுந்த நல்லுணர்வால் தடைப்பட்டு அவ்வாளை உறையிடைச் செருகிக் கொண்டானென்பதாம். உள்ளத்துணர்ந்தது உணர்ந்தது என்புழி, ஒன்று பெயர், ஒன்று வினைமுற்று. தெளிந்த உணர்வு என்புழிப், பெயரெச்சத்தகரம் விகாரத்தால் தொக்கது. நிற்ப, நின்றெனத் திரிந்து நின்றது.
----------
தெளிந்துணர்வின் திறம்
உரை:- மாதரார் எனையரேனும்-மகளிர் எத்துணைக் கொடிய குற்றம் புரிந்தாராயினும், வதையினுக்கு உரியர் அல்லர் - கொல்லுதற்கு உரியவராகார், பேதை இவனும் - பேதையாகிய இவ்யானைப்பாகனும், பெண்ணின் அனையன்- ஆண்மகனாயினும் பெண்மகளையே யொப்பன், பிறிதும் ஒன்று உண்டு - வேறொன்றும் உண்டு, ஏதிலார் மன்னர் - பகைவராய்வந்த வேந்தருடைய, சென்னி இடுதலுக்கு உரியவாளின் - முடியைத் துணித்தற்குரிய வாளினால், தீதுசெய் சிறுபுன்சாதி - குற்றமே செய்கின்ற அறிவின்மையையுடைய அற்பவினத்தாரை, சிதைத்தலும் திறமன்று - கொல்வது மறவேந்தர்க்குத் தகுதியன்று, என்றான் - என்று நினைத்தான் எ-று.
மிக *அத்துணைத் கொடிய குற்றம் புரிந்து அதனால் உயிர் இழத்தற்குரிய தீமையுடையராயினும் என்பான், "ஏனையரேனும்" என்றான். வதை, கொல்லுதல். பிறர்க்குப் பொருளாயினாளைக் காதலித் தொழுகுதலின், அட்டபங்கனைப் "பேதைதான் இவனும்" என்றும், பிறன்மனை நயவாமை ஆண்மையாதலின், நயக்கு மிவன்பால் ஆண்மையில்லை யென்றதற்கு "பெண்ணின் அனையனே" என்றும் தனக்குள் கூறிக்கொண்டான். பகைவேந்தர், ஏதிலாராயினரேயன்றி, ஆண்மையிலும் மறத்திலும் குறைந்திலராலின், அவரைத் தீண்டற்குரிய இவ்வாள், சிறுமையும் புன்மையும் சேரக்கொண்டுள்ள இவரைத் தீண்டிக் கொல்லுதல் அதற்குத் தீதாம் என்பான், "சிதைத்தலும் திறமன்று" என்றான். சிறுமை, அறிவின்மை. புன்மை, ஈண்டுக் கீழ்மை மேற்று..
---------
வேந்தன் மகளிர் போகத்தை வெறுத்துச் சென்று தனித்திருந்து நினைத்தல்
உரை:-கனவரை யனைய மார்பன் - பெரிய மலைபோன்ற மார்பையுடைய வேந்தனான யசோதரன், இனையனபலவும் சிந்தித்து - இவை போல்வன பலவும் எண்ணி, இழிப்பொடு பழித்தும் - இருவரையும் இகழ்ந்தும் பழித்தும் அமையாது, வளைபுனையவர்கள் போகம் - வளையணியும் மகளிரது இன்பத்தை, நெஞ்சில் புறக்கணித்து - மனத்தால் அருவருத்து வெறுத்து, மீண்டு - திரும்பத் தன் பள்ளியறைக்குப் போந்து, கடிகமழ் அமளி ஏறி - மணங்கமழும் அணைமீது கிடந்து, தனி முனி களிறு போல - தனித்துச் சினங்கொண்டிருக்கும் யானைபோல, தான் நினைவெய்துகின்றான் - தானே தனக்குள் எண்ணமிடலானான். எ-று.
முன்பாட்டிற் கூறிய கருத்துப்போல்வன பலவற்றை ஒன்றன் மேலொன்றாக நினைந்தமையின், அவன் உள்ளம் கொலைவினைமேற் செல்லாதாயிற்று. அந்நினைவுகட்கிடையே அமிர்தமதியின் செய்கையை இழித்தும், அவளது மனப்புன்மை காணாது அன்புற்றொழுகிய தன்னைப் பழித்தும் தனக்குள்ளே நொந்துகொண்டானென்பார், "இழிப்பொடு பழித்தும்" என்றும், அதுவே யேதுவாக ஏனையெல்லா மகளிரது இன்பத்தையும் நெஞ்சில் வெறுத்தான் என்பார், "புனைவளையவர்கள் போகம் நெஞ்சிற் புறக்ககணித்திட்டு" என்றும், கூறினார். "புனைவளையவர்கள்" என ஏனையெல்லா மகளிரையும் புறக்கணித்து, அமிர்தமதியை விலக்கி வேறு மகளிரை மணத்தற்கென ஓர் எண்ணம் எழுந்தமை தோன்ற நின்றது. புனைவளையவர் என்பதனை வளைபுனையவர்கள் எனமாறுக. இதனாற்பயன், வளை முதலியன புனைதலால் பிறக்கும் அழகேயன்றி மனத்தூய்மையாகிய அழகிலர் என்பது. தனியென்னும் வினை முதனிலை யெச்சப் பொருட்டு; "வரிப்புனை பந்து" என்புழிப்போல.
-----------
காமத்தால் விளையுங்கேட்டினை நினைத்தல்
உரை:-இக்கடைப்படுகாமம் - இந்த இழிவான காம வேட்கையானது, எண்ணமது அலாமை பண்ணும் - நெஞ்சில் நிகழும் எண்ணங்களை நல்லவையாகாவாறு செய்யும், இற்பிறப்பு இடிய நூறும் - குடிப்பிறப்பென்னும் குன்றம் இடிந்து துகளாமாறு செய்யும், மண்ணியல் புகழை மாய்த்து - மண்ணுலகத்தே நிற்கும் புகழைக் கெடுத்து, வருபழி வளர்க்கும்- அது நின்றவிடத்தே வந்தடையும் பழியை மிகுவிக்கும், மானத்திண்மையையுடைக்கும் - மானமாகிய திண்மை நிலையைத் தகர்த்தெறியும், ஆண்மை திருவொடு சிதைக்கும்- ஆண்மையினையும் செல்வத்தினையும் அழித்து விடும், சிந்தை கண்ணொடு கலக்கும் - மனத்தையும் கண் முதலிய பொறிகளையும் நிலைகலங்கச் செய்யும், என்றான்.- என்று எண்ணினான் எ-று.
ஒருவர்க்குளதாகும் கேட்டுக்கு முதற்காரணம் அவர் நெஞ்சினிகழும் எண்ணமே யாதலின், அதனையே முதற்கண்ணெடுத்து, இக்காமம் அவ்வெண்ணம் நல்லெண்ணமாகாவாறு செய்யும் என்பார், "எண்ணமதலாமை பண்ணும்" என்றார்; "நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்"1 என்றும், "மறந்தும் பிறன்கேடு சூழற்க"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. "இடிய நூறும்" என்றதனால், இற்பிறப்பாகிய குன்றம் என்று கொள்க. நூறுதல், பொடியாகச் செய்தல். ஒருவர் செய்யும் புகழுக்கு அவரன்றி அவர் வாழிடமாகிய மண்ணுலகு ஆதாரமாதலின், "மண்ணியல் புகழ்" என்றும், பழி பாவம் வந்தாலன்றி, அப்புகழ் மாயாதாகலின், "அப்புகழ் நின்ற விடத்தே வந்து நிற்கும் பழி" யென்றார். ஒடுவினை ஆண்மைக்கும் கூட்டுக. காமம் கதுவிய மனத்தார்க்கு அதனால் நுகரப்படும் இன்ப நினைவும் அதற்கு அரணும் ஆக்கமாவனவுமன்றிப் பிற நலந் தீங்கு காணும் நல்லாரய்ச்சி நிகழாமையின், "சிந்தை கலக்கு" மென்றும், பொருள்களின் உண்மை நிலையைக் காணும் கண்ணறிவும் சொல்வார் சொல்லின் தூய்மையும் நலமும் கேட்கும் செவியறிவும் பிறவும் நிகழாமையின், "கண்ணொடு கலக்கும்" ‡என்றும் கூறினான். ஒடு, எண்ணொடு. அமிர்தமதிக்கும் அட்டபங்கற்கும் நிகழும் காமக் கூட்டம் இக்குற்றமனைத்தையும் விளைவிக்குமாறு காண்க.
காமத்தைத் துறக்கத் துணிதல்
உரை:- உருவினொடு அழகுதானும் - நிறமும் அழகும், ஒளியமை குலனும் - புகழ்பொருந்திய குடிப்பிறப்பும், பேசின் - ஆராயுமிடத்து, திருமகளனைய மாதர் இவளையும் - திருமகளையொப்பவளாகிய இவளையும், சிதைய - தன்மனம் கெடும்படிச்செய்து, சீர் இல் கருமலி கிருமியன்ன - சிறப்பில்லாத பலபிறப்புக்கட்குரித்தாகிய புழுவையொத்த, கடை மகற்கு அடிமைசெய்யும் - கீழ்மகனொருவனுக்கு அடிமைப்பணி செய்யப்பண்னும், துருமதி மதனன் செய்கை - தீய புத்தியையுடைய காமன் சேட்டையை, துறப்பதே - துறந்து நீங்குவதே, சிறப்பது - மேன்மை, என்றான் - என்று நினைத்தான் - எ-று.
உரு, நிறம். ஈண்டு மந்தளிர்போலும் நிறமென வுணர்க. உரு முதலியவற்றால் அமிர்தமதி திருமகளை யொப்பாள் என்பது. சிதைத்தென்பது சிதைய வெனத் திரிந்து நின்றது. பல்வகைப் பாவங்களை யுடைமைக்கு அட்டபங்கனுற்ற குட்டநோய் அறிகுறியாதலின், அவன் பல பிறப்புக்கட்குரியனாதல் பெறப்படுதலின், "சீரில் கருமலி கிருமியன்ன கடைமகன்" என்றான். இழிவு கருதிக் "கிருமி" யென்றான். செய்யும், பிறவினைப்பொருட்டு. துருமதி, வடசொற்றிரிபு; இது துன்மதி யென்றும் வழங்கும். பெண் மக்களில் மிகச் சிறந்தாளொருத்தியை ஆண்மக்களுள் இறப்பவும் கடைப்பட்டானொருவனை விரும்பி யவற்கு அடிமையாக்கலின், காமனை, "துருமதி மதனன்" என்று இகழ்ந்தான். ஏகாரம், தேற்றம்.
--------------
அரசபோகத்தை வெறுத்தல்.
உரை:- மண்ணியல் மடந்தைதானும் - மண்ணாகிய அழகிய நிலமகளும். மருவினர்க்கு உரியளல்லள் - தன்னைச்சேர்ந்தவர்க்கே உரியவளல்லள், புண்ணியமுடைய நீரார் புணர்ந்திட - புண்ணியமுடையோர் போந்தவழி, புணர்ந்து - அவரையடைந்திருந்து, நீங்கும் - பின்பு அவர் மாட்டும் தங்காது நீங்குவாள், பெண் இயல் - பெண்களின் இயற்கையும், அனையதன்றோ - அத்தன்மைத்தேயாகும். இவர்கள் பெயர்கள் மற்று - இவர்கட்குப் பெயர்வகைதான் வேறு, கண்ணிய இவர்கள் தம்மை - இயல்பால் ஒருதன்மையராகக்கருதப்படும் இவர்களை, யாமும் கடப்பதே - நாமும் துறந்து போவதே, கருமம் - செயற்பாலது, என்றான் - என்று தனக்குள்ளே முடிவுகொண்டான். எ-று.
தேற்றேகாராம் விகாரத்தால் தொக்கது. தானும்; உம்மை, சிறப்பு; எச்சமெனினுமாம். உரிமை, உடையானோடு உடனிருந்து உடனழிதல், புண்ணியமுடையாரைப் பொருந்தி அவர்பால் அப் புண்ணிய மிருக்குந்துணையும் இருந்து, அது புலர்ந்தபின் அவரை விட்டு நீங்குதலின், "புண்ணியமுடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்" என்றான்; "வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மோடும், உற்றதோ ருரிமைய ளல்லள் யாரோடும், பற்றிலள் பற்றினர் பாலள் அன்னதால், முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் ணீர்மையே"1 என்று பிறரும் கூறினர். "பெண்ணிய லனையதன்றோ" என்றான், அமிர்தமதியின் செயலில்வைத்துக் காட்சியளவையிற் கண்டானாகலின். "பள்ளமுதுநீர்ப் பழகினும் மீனினம், வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம், கள்ளவிழ் கோதையர் காமனோடாயினும், உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ" என்றார் வளையாபதியுடையாரும் என வறிக. நிலமகள், பெண்மகள் எனப்பெயரால் வேறுபாடுண்டேயன்றி, இயல்பு ஒத்திருத்தலின், "பெயர்கள் மற்றிவர்கள்" என்றான். கடத்தல், துறத்தல்.
மறுநாள் யசோதரன் அமிர்தமதியுடன் திருவோலக்க மிருத்தல்
உரை;- மற்றைநாள் - மறுநாள், மறைபுலப்படாமை - முன்னாளிரவிற்போந்து மறைந்திருந்து கண்டதும் பின்பு மனத்தே துறவு கொள்ளக்கருதியதும் பிறரறியாவகை மறைத்துக்கொண்டு, முன்போல் - வழக்கம்போல, இன்பச் சுற்றமாயவர்கள்சூழ - இன்பந்தரும் உரிமை மகளிரும் ஏனை மகளிரும் சூழ்ந்துவர வந்து, துணிவிடன் - அரசவையின்கண், இருந்த எல்லை - அரசுகட்டிலில் வீற்றிருந்தபோது, மா மன்னன்தேவி - பேரரசனாகிய அவனுடைய தேவியான, கற்றைவார் குழலி - கற்றையாய்த் திரண்டு நீண்ட கூந்தலையுடைய அமிர்தமதி, வருமுறை மரபின் - ஓர் அரசியாவாள் வருதற்குரிய முறைப்படியே, மெல்ல வந்து - மெத்தென வந்து, காவலன்பால் இருந்தாள் - அரசன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் எ - று.
முன்நாளிரவில் அமிர்தமதியின் தீச்செய்கையைக் கண்டு மனத்தே மிக்க அருவருப்பை யெய்தினானாயினும், அது வாயிலாக உலகவின்பத்தில் உவர்ப்புக் கொண்டானாயினும், அவற்றை வெளியிடற்குரிய செவ்வி வாயாமையின், “மறை புலப்படாமை” ஒழுகினான் என்றார்; “இகல்வெல்லல் வேந்தற்கு வேண்டும் பொழுது”1 என்பது அரசுமுறை. முன்னாளிருந்த முகமலர்ச்சியும் செவ்வி யெளிமையுமுடையனாயிருந்தானென்றற்கு “முன்போல்” என்றார். முன்போலென வேண்டாது கூறியதன்பயன், அகத்தின்கண் நிகழும் உவப்புக் காய்ப்புக்களை முன்னறிந்து காட்டிவிடும் முதுக் குறைவுடைய முகமும் அது செய்யாதிருந்த செம்மையினை வற்புறுத்தலாம். இயல்பாகவே இன்பத்துறையில் எளியனா யொழுகினானாதலின்,அவ்வின்பச் சுற்றத்தை இப்போது விலக்குவதால் மறை புலப்படுதற் கேதுவாமென்று கருதி, “இன்பச் சுற்றமாயவர்கள் சூழ” வந்தானென்றார். முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவார்க்கு நன்றும் தீதும் ஆய்ந்து நலந்துணிந்து முறை செய்யுமிடமாதலின், அரசவையை, “துணிவிட” னென்றார். அமிர்தமதி பட்டத்தரசியாதல் தோன்ற, “மாமன்னன் தேவி வருமுறை மரபின் வந்து” என்றார். மெல்ல வந்தது, தன்பால் குற்றமுண்மையினைத் தானறிந்து அஞ்சுதலின்; அச்சமுடையார்க்கு விரைந்த நடையில்லை யாதலின். கற்றைவார் குழலி யென்று விசேடித்தார், அவள் தன் முகத்தைப் பலருங் காணக் காட்டாமைபற்றி; இது வெரூஉதல். மெல்ல வென்பதனை இருந்தாளென்பதனோ டியைத்து, முள்மே லமர்வாரைப்போல அச்சமிகுதியால் மெல்ல விருந்தாளென்றலு மொன்று.
அரசன் விளையாட்டயர்தல்
உரை : நரபதி-மக்கட்கு அரசனாகிய யசோதரன், நகை விளையாடல் மேவி - இன்ப விளையாட்டை விரும்பி, விரலினின்று மிகை விளைகின்ற - கைவிரலினின்று மேலெழுந்து துவண்டு வீழ்கின்ற, நீலமலரினின் - நீலமலரால், வீசலோடும் - அமிர்தமதியின்மேல் மெல்ல எறிந்ததும், புகைகமழ் குழலி - நறும்புகையூட்டப்பட்ட கூந்தலையுடைய அவ்வமிர்தமதி, சோர்ந்து - ஆற்றாது அறிவு சோர்ந்தாள் போல, பொய்யினால் - பொய்யாக, மெய்யை வீழ்த்தாள் - இருக்கையிலே சாய்ந்தாளாக, திகைகமழ் நீரின் - நாற்றிசையும் மணம் கமழும் பனிநீர் கொண்டு, தேற்ற - உழையிருந்தார் தெளிவிக்க- மெல்லியல் - மெல்லிய இயல்பினளாகிய அவள், தேறினாள்- அறிவு தெளிந்தாள். எ-று.
நரபதி, நரர்க்குப்பதி; அதுவென்னுருபு கெடக் குகரம் விரிந்தது. அரசவைக்கண்ணிருக்கும் வேந்தர் தம் கையில் தாமரை, குவளை முதலிய பூக்கள் வைத்திருத்தல் மரபாதல்பற்றி, யசோதரன் கையில் நீலப்பூ விருந்தமை கூறினார். மிகை, மெல், நீல மலரினின் றெறிதலோடுமென்னாது "வீசலோடும்" என்றார். மெல்லிதாக எறிந்தமை யுணர்த்தற்கு. துவண்ட பூவினிடத்து மென்மைமிக்கு எறிந்தவழிப் புதுப்பூவின் வன்மையுமின்றி மெத்தென்றிருக்குமாதலின், அதனா லொருவர் எத்துணை மெல்லியராயினும் வருத்தமுறுவரால்லராதலின், "சோர்ந்து" என்றும் "பொய்யினால் மெய்யை வீழ்த்தாள்" என்றும் கூறினார். மெய்யை வீழ்த்தாள் என அவளின் மெய்யினைப் பிரித்தோதியதனால், அதனை யவள் வேண்டுமென்றே செய்தமை வற்புறுத்தினாராம். திகைகமழ் நீர், பலவேறு திசையினின்றும் கொணர்ந்த நன்னீர் என்றுமாம். மெல்லியல், சுட்டுமாத்திரையாய் இழித்தற்கண் வந்தது.
------------
அரசன் அவளோடு அசதியாடல்
உரை:-- புரைபுரை தோறும் - வேர் முதல் நுனிவரையெங்கனும், நீர் சோர்பொள்ளல் - நீர் சுவர்கின்ற துவாரங்களோடு கூடிய, இவ்வுருவிற்றாய - இந்தப் புல்லிய வுருவத்தையுடைத்தான, இருநிறமலரினால் - கரிய நிறமுடைய நீலப்பூவினால், இவள் உயிர் இன்று ஏகலுற்றது. இவ்வமிர்தமதியின் உயிர் இப்போது நீங்கும் நிலையையடைந்தது, அரிதினில் வந்தது - மிகவரிதாக மீண்டுவந்தது, என்று என்று - என்று பலமுறையுஞ்சொல்லி, அவளுடன் அசதியாடி - அமிர்தமதியுடன் விளையாட்டாகப் பேசியிருந்து, விரகினில் - தந்திரமாக, விடுத்து - அரசவையினைக் கலைத்துவிட்டு, மன்னன் - வேந்தனாகிய யசோதரன், வெய்துயிர்த்தனன் இருந்தான் - தனித்ததோரிடத்தே பெருமூச்செறிந் திருந்தான் எ-று.
நீலமலர் நீர்ப்பூவாதலின் அதன் வேர், தண்டு, இலை, காம்பு முதலிய உறுப்பெல்லாம் உள்ளிற் புழையுடைமைகண்டு, "புரை புரைதோறும் நீர் சோர்பொள்ளல் இவ்வுருவிற்றாகிய இருநிறமலர்" என்று விதந்து கூறினான்; இதனால், நீர்வற்றியவழி இதன்பால் வன்மை சிறிது மின்றாகவும், இதனைத் தன்மேல் வீசியது இவட்கு உயிரைப் போக்குவதாயிற்று; இவ்வாறு இவள் உயிர் நீங்கும் நிலை யெய்தியது மெய்யன்று, பொய்ந்நடிப்பு என்று குறித்தானாதலின், "இன்று இவளுயிர் ஏகலுற்றது அரிதினில் வந்தது" என்று அசதி யாடுவானாயினான். என்றென்று என்ற வடுக்குப் பன்மை குறித்து நின்றது. அரசவைக்கண் அசதியாடி யின்புறும் வேந்தன், விரைவில் அதனின் நீங்குவது கூடாமையின், "விரகினில் விடுத்து" என்றும், அவன் செய்கையால் அவட்குத் தன்பால் அன்பின்மையினை விளங்கக் காட்டினமையின், வேந்தன் தனித்தோரிடத்தே, "வெய்துயிர்த்தன னிருந்தா" னென்றும் கூறினார். இது சூழ்ச்சி. வெய்துயிர்த்தான் என்றதனால், யசோதரன் மனத்தே மிக்க வருத்தம் நிகழ்வது காணப்படுகிறது. இருந்தானென்பதற்கு, அரசியையும் ஏனை அமைச்சர் முதலியோரையும் போக்கிவிட்டு அரசன் மட்டில் தனித்திருந்து எண்ணமிடலானான் என்றுரைத்தலு மொன்று.
-----------
யசோதரன் சந்திரமதியிடம் சேறல்
உரை:- ஆயிடை-அவ்வாறு தனித்து வெய்துயிர்த் திருந்தபோது, அரசன்-வேந்தனான யசோதரன், அரசினை விடுப்ப உள்ளத்து எண்ணி-அரசியலைத் துறந்து செல்ல மனத்தேயெண்ணி, தாய் அமர்கோயில் எய்தி-தன் தாயாகிய சந்திரமதி யிருந்த அரண்மனையை யடைந்து, சந்திரமதி தன் முன்னர்-அவள் முன் சென்று, சேயிடை இறைஞ்ச- சேய்மைக் கண்ணே வணங்கி நிற்க, இத்திரை செய்நீர் உலகமெல்லாம்-இந்த அலைபுரளும் கடல் சூழ்ந்த உலகமுழுதும், உயர்குடையின்வைகி-நீயுயர்த்திய வெண்கொற்றக் குடை நிழலில் தங்கச்செய்து, உடன்-அவற்றோடு, நீ நெடிது வாழ்க--நீ நீண்டநாள் வாழ்வாயாக, என்றாள்-என்று அச் சந்திரமதி வாழ்த்தினாள் எ-று.
அரசன் தனித்திருந்தபோது அரசியலைத் துறப்பது தக்கதே என்ற எண்ணம் மறுபடியும் எழுந்தமையின், "ஆயிடை அரசினை விடுப்ப வெண்ணி" என்றார். இக்கருத்தினைத் தன் தாய்பால் உரைத்து அவள் கருத்தை யாராயக்கருதி அவளிருக்கும் அரண் மனையை யடைந்து, அவள் திருமுன்னர்ச் சென்றான் என்க., முன்னர்; அர், பகுதிப் பொருள் விகுதி. துறவுள்ளத்தனாதலின், தேவியின் அருகு செல்லாது சேய்மைக்கண்ணின்று வணங்கினான். சேய்மை, ஐந்துவிற்கிடையில் நின்று வணங்குதல். "ஐவினிலகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு"1 என்று பிறருங் கூறுதல் காண்க. வைகி, பிறவினைப்பொருட்டு, வைக வென்பதன் திரிபாகக் கோடலு மொன்று. துறக்கக்கருதிப் போந்தாற்கு சந்திரமதி வாழ்த்துந் திறங் காண்க. வருஞ் செய்யுள் கூறும் மெய் வேறுபாட்டிற்கு இதுவுமோ ரேதுவாதல் உணர்க.
யசோதரனுடைய முகவேறுபாடு கண்டு சந்திரமதி உற்றது வினாதல்
உரை:- அணிமுடி யரசர் ஏறே-அழகிய முடியணிந்த வேந்தர்கட்குச் சிங்கம் போல்பவனே, மணிமருளுருவம் வாடி-மாணிக்கமணிபோற் சிவந்த நின் நிறம் வாட்ட மடைந்து, பங்கயவதனமும் மாறா-தாமரைபோோலும் முகமும் வேறுபட்டு, அழகு அழிந்து உளது-அழகு மழுங்கியிருக்கின்றது. இது என் கொல்-இதற்குக் காரண மென்னை. ஐயா- ஐயனே, பிணி எனை-நினக்கு உண்டாகிய நோய் யாது, பெருநவை உறுக்கும்-இஃது எனக்கு மிக்க வருத்தத்தை யுண்டாக்குகிறது, துணியலென்-யானும் இன்னதென அறியகில்லேன், தோன்றல்-குலத்தின்வழி எஞ்சாதபடி பிறந்தோய், உணர நீ சொல்லாய்-யான் தெளிய வுணருமாறு சொல்வாயாக எ-று.
ஏறு, ஐயா, தோன்றல் என்பன ஆர்வமொழி. உறுவென்றும் மணியென்றும் கூறினமையின், மாணிக்கமணியாதல் பெற்றாம். உருவமும் வதனபங்கமும் அழகிற்கு ஆக்கமாதலின், வாடி, மாறா என்ற எச்சவினைகள் அழிந்தென்பதனோடு முடிந்தன. மணி மருளுருவம் என்றதற் கேற்ப, பங்கயவதனமும் என மாறுக. உம்மை, எச்சப்பொருட்டு. கொல், ஐயம். ஐயத்தால் அலைப்புண்டலின், விளங்க வுரைத்தல் வேண்டுமென்பாள் "துணியலென் உணரச் சொல்லாய்" என்றாள். குலத்தின்வழி இடையறாது தொடர்தற்குத் தோன்றுதலின், மகனைத் தோன்றல் என்ப. கான்முளை யென்பது போல; இனிப் புகழ்க்குரிய குணங்களுடன் தோன்றியோய் என்றுமாம். சொல்லுதல், ஈண்டு வினாதன்மேற்று.
--------
கனவின்மேல்வைத்து யசோதரன் உற்றதுரைத்தல்
உரை:- இறைவி-அரசமாதேவி, விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர்-வானத்தில் விளங்குகின்ற ஒளிமிக்க ஞாயிற்றினை, மதியம் தீர்ந்து-கூடியிருந்த முழுமதியமானது அதனின் நீங்கி, மழுங்க-தன்னொளியும் அந்த ஞாயிற்றினொளியும் கெட, மண்ணிடைச் சென்று-மண்ணுலகை யடைந்து, ஓர் மறையிருள்பருதி சேர-ஒருமறை விடத்தே கிடந்த இருள்வட்டமொன்றைக்கூட,கங்குல் கனவினில்- இரவிற்கண்ட கனவிலே, கண்ணிடைக்கண்டதுண்டு-கண்ணால் பார்த்தேன், எண்ணுடை உள்ளம் தன்னுள்-பலஎண்ணங்கட்கு இடமாகிய மனத்திலேயிருந்து, அஃது-அக்கனவானது, ஈர்ந்திடுகின்றது-என் நெஞ்சினை யறுக்கின்றது, இதற்கு யான் என்செய்வேன், என்றான்-என்று யசோதரன் உரைத்தான் எ-று.
அரசினைத் துறந்த உள்ளத்தாற் பேசுதலின், சந்திரமதியை, "இறைவி" என்றான். காந்திமிகுகதிர், ஞாயிறு. காந்தி,ஒளி. ஞாயற்றோடு கூடி விண்ணிடை இயங்குவதாகலின், விண்ணின் நீங்குதல், ஞாயிற்றின் நீங்குதலெனக்கூறப்பட்டது. பகலில் ஞாயிறும், இரவில் திங்களும் விண்ணிடத்தே யிருந்து ஒளி செய்தலின், இரண்டும் கூடி இத்தொழிலைச் செய்வதாகக் கூறினார். ஞாயிற்றை யசோதரனாகவும், திங்களை அமிர்தமதியாகவும், இருட்பகுதியை அட்டபங்கனாகவும் கொள்க. நனவுபோலக் கனவிற் கண்டேனென்பான் "கண்ணிடைக்கங்குற் கனவினாற் கண்டதுண்டு" என்றான். செய்வகை துணியமாட்டாது தடுமாறி நிற்றல் தோன்ற, "எண்ணுடையுள்ளம்" என்றும், மானத்தால் வருத்தமிகுதலின் "ஈர்ந் திடுகின்ற" தென்றும் கூறினான்.
---------
இது சண்டமாரி வழிபாட்டால் தீரத்தக்க தீமையெனச் சந்திரமதி சொல்லுதல்
உரை:- நிற்கு இறைவி தேவி-நினக்குக் குலதெய்வமாகிய சண்டமாரிதேவி, கரவினில்-மறைமுகமாக, தீமை கட்டுரைத்திட்டது-எதிர்வில் வரவிருக்குந் தீங்கொன்றினைத் தெரிவித்திருக்கின்றாள், என்னா-என்றுசொல்லி மேலுஞ் சொல்லுவாளாய். இரவினிற் கனவு-நீ இரவில் கண்ட கனவானது, தீமைக்கு ஏது-தீங்குவரவுக்குக் காரணமாம், என்று-என்று நினைத்து, மைந்த-மகனே, அஞ்சல்-நீ அஞ்சாதொழிக, தேவி-அத்தேவியை, பரவிப்பணிந்தனை சிறப்புச்செய்தால்-பரவிப்பணிந்து விழாக் கொண்டாடினால், அத்தீமையெல்லாம்-அத்தீங்ககு முழுதும், விரவிமிக் கிடுதலின்றி-பலவாய்க் கலந்து மிகாமல், விளியும்-முற்றவும் கெடுங்காண் எ-று.
சண்டமாரிக்கும் யசோதரனுக்கும் தொடர்பு காட்டற்கு "நிற்கு இறைவிதேவி" யென்றும். கனவு நிகழ்ச்சிக்கே ஏது அத்தேவிதான் என்பாள், "கரவினில்தேவி தீமை கட்டுரைத்திட்டது" என்றும் கூறினாள். "காலமுலகம்"1 என்ற சூத்திரத்து "பால் பரிந்திசை யாவுயர்திணைமேன" என்றதனால், தேவி கட்டுரைத்திட்ட தென அஃறிணை முடிவுகொண்டது. சிறப்பு, திருவிழா. இதற்கு முன்னும் பின்னும் வழிபாடுண்மையின், "பரவிப்பணிந்தனை சிறப்புச் செய்தால்" என்றார். துன்பம் ஒன்றாயும் தனித்துவாராது பலவாய்த் தொடர்ந்து வரும் பான்மைத்தாதலின், "விரவி மிக்கிடுதலின்றி" யென்றாள். எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டு. மீட்டும் கிளைக்காமைதோன்ற "விளியு" மென்றாள். தெய்வம் நேரே போந்து தனக்கு வழிபாடு வேண்டு மெனக் கூறாதென்பாள் "கரவினில் கட்டுரைத்திட்டது" என்பது ஐதிகம்.
தேவிக்குச் சிறப்பெடுத்தற்குரிய காலமும் இயல்பும் தெரிவித்தல்
உரை:- ஐப்பசி மதியமுன்னர்-ஐப்பசி மாதத்துப் பூர்ணிமைக்கு முன்னதாகிய, பக்கம் அட்டமி பின்னர்-பக்கத்தில் எட்டாநாட்குப் பின்வரும் நாட்களுள், மைப்படல் இன்றி நின்ற-குற்றமில்லாது நிலவும், மங்கலக்கிழமை தன்னில்-செவ்வாய்க்கிழமையில், கைப்பலிகொடுத்து- சிறியதோர் உயிர்ப்பலியிட்டு, தேவி கழலடி பணியின்- தேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங் குவாயாயின், காளாய்-காளைபோல்பவனே, மெய்ப்பலி கொண்டு-தனக்குப்பொருளாகிய அப்பலியினை அவள் ஏற்றுக்கொண்டு, நெஞ்சின் விரும்பினள்-மனத்தே நின்பால் விருப்பமுற்று, உவக்கும்-தீங்குவாராமைக் காத்து மகிழ்விப்பள் எ-று.
"ஐப்பசி மாதத்துச் சுக்லபட்சத்தட்டமிக்குப் பின்வரும் மங்கல வாரத்தில் தேவிக்குப் பலியிட்டுப் பூசை செய்தனர்" என்ற கருத்தமைந்த வடமொழிச் சுலோகமொன்று கூறப்படுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. கை, சிறுமை; ஈண்டு சிற்றுயிர் மேற்று. ஏதேனுமொரு சிறுபொருளைப் பலியாக வைத்துப பரவி யென்றுமாம். பலியாக இடுவது எத்துணைச் சிறிதாயினும், பெரிதாகவே கருதி மகிழ்ந்து வேண்டுமருளைச் செய்யும் மிக்க அருளுடையவள் தேவி யென்பாள், "மெய்ப்பலி கொண்டு" என்றும், "நெஞ்சின் விரும்பினளுவக்கு" மென்றும் கூறினாள். காளை யென்பது, "ஐயா யாகும்"1 என்பதனால், காளாய் என வந்தது. காளை யென்பது பாடமாயின், அண்மை விளியாகக் கொள்க. வெற்றிக்கடவுளாதலின், தேவி திருவடியை, "கழலடி" யென்றாள்.
நீயே அப்பலியை அவட்குக்கொடுக்க என்று சந்திரமதி கூறுதல்
உரை:- மண்டு அமர்தொலைத்த வேலோய்-வீரர் நெருங்கிச்செய்கின்ற போரைவென்றொழித்த வேலையுடையோனே, இது மனத்து மதித்துக்கொண்டு-யான் கூறுமிதனை நின் மனதில் பதித்துக்கொண்டு சென்று, குறுமறி ஒன்று-சிறிய தொருமறியாட்டினை, நின் கொற்றவாளில் நீயே கொன்று- நினது வெற்றியினையுடைய வாளால் பிறரையேவாது நீயே கொன்று, சண்டிகை மனம் தளிர்ப்ப-சண்டமாரியின் மனம் மகிழுமாறு, தகுபலி கொடுப்ப-அவட்குத் தக்க உயிர்ப்பலியைக் கொடுத்தால், அத்தையல்-அச் சண்டமாரிதேவி, கண்ட-நீ கண்டு வருந்துகின்ற, நின்கனவின் திட்பம்- உனது கனவுகாட்டிய தீமையின் வலியினை, தடுத்தனள் காக்கும்- தடுத்து உன்னையும் காப்பள், என்றாள்-என்று அச் சந்திரமதி சொன்னாள். எ-று.
பல்வகைத் தானையும் வீரரும் வேந்தரும் நெருங்கிச் செய்தலின் "மண்டமர்" என்றும், பகைத்து எதிர்ப்போரை அறக்கெடுத்து வென்றவழிப் போர் இல்லையாதலின், "தொலைத்த" வென்றும், வேல் வேறற்குத் கருவியாய்ச் சிறத்தலின், "வேலோய்" என்றும் மகனது வீரத்தை வியந்தோதினாள். "மனத்திது மதித்து" என்றலின், அவன் கூறுமாறு பலியிடுதற்கு ஒருப்படாவுள்ள முடையனாதலை அவன் முகம்காட்ட அவள் காணுமாறு பெற்றாம். அதனால், அவள் அவனே அவ்வுயிர்க் கொலையினைச் செய்தல் வேண்டுமென்பாள் "நீயே நின்கொற்றவாளிற் கொன்று" என்றும், கொன்றாலெய்தும் பயன் இதுவென்பாள் "சண்டிகை மனம் தளிர்ப்ப"வென்றும், "கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும்" எனறும், இது தவிர வேறு செயற்குரியதில்லை யென்பாள் "தகுபலி யென்றும் கூறினாள் எனவுணர்க.
-------
உயிர்க்கொலை கேட்டு யசோதரன் வருந்திக் கூறல்
உரை:- அவண்-அவ்வாறு, ஆங்கு-அவ்விடத்தே, அவள்-சந்திரமதி, அருள் ஒன்று இன்றி-அருள் சிறிதுமின்றி, மொழிந்திடுதலோடும்-சொல்லுதலும், அரசன்- வேந்தனாகிய யசோதரன், தேங்கலன் - பொறானாய், செங்கை செவிமுதல் செறியச்சேர்த்தி - தன் சிவந்த கைகளால் இரு காதுளையும் இறுகப் பொத்திக்கொண்டு, ஈங்கு-இவ்வாறு, அருள்செய்தது என் - உரைத்தருளியது என்னை, இதுபுதிது- இது புதுமையாக வுளது, என்று - என்று வாய்விட்டுச் சொல்லி. நெஞ்சில் தாங்கலன் - மனதில் துயர்மிகுந்து, உருகி - உருக்கத்துடன், தகுவன - அருளுரைபல, தாய்முன்- தன் தாய்க்கு, சாற்றுகின்றான் - சொல்லலுறுகின்றான் எ-று.
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மொழிந்திடுதலோடும் என்புழி உம்மை, இசைநிறை, தேங்குதல், பொறுத்தல்;மகிழ்தலுமாம். தீமொழி சேட்கவிடாது செவியைச் செறிதலின், "செங்கை" யென்றார். உயர்ந்தாரொடு உரையாடும் மரபு பற்றி, "அருள் செய்தது என்கொல்" என்றான். கொல், அசைநிலை. அருளின்றி யுரைப்பது என்னென்பான், வழிபாடு மறாது குறிப்பு மொழியால் "அருள் செய்தது" என்றானென்றுமாம்; "எழுத் தொடும் பொருளொடும் புணராதாகி, பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியென்ப"1 என்பது இலக்கணம். அருள்பெருகு நெஞ்சினால் தன் அன்னையொடு உரையாடுகின்றானாதலின், இச்சொற்களோடமையாது மேலும் கூறுகின்றமை தோன்றத், "தாங்கலன்" என்றும், தக்கார்க்குரிய அருளுரையைத் தான் வழுங்குதல் பற்றித் "தகுவன சாற்றுகின்றான்" என்றும் கூறினார் "தகுபலி"(137) என்று தாய் கூறியதை மறுத்துத் தகுவது ஈது என்பான் தகுவன சாற்று கின்றான் என்றாரென்றுமாம்.
உயிர்க்கொலை அரசர் அறத்திற்கு மாறாமெனல்
உரை:-இறைவி - அரசமாதேவியே, என் உயிர் நீத்தவேனும் - என்னுயிரைப் போக்கக்கூடிய தீங்குகளைச் செய்தன வென்றாலும், யான் - அரசனாகியயான், உயிர்க்கு - அவ்வுயிர்கட்கு, உறுதிசூழாது-உறுதியானவனவற்றை யாராய்ந்து செய்யாது, என் உயிர்க்கு அரணம் நாடி - என் ஒருவன் உயிர்க்குப் பாதுகாப்பனவற்றையே நினைந்து, உயிர்க்கு - என்னால் காக்கப்படும் அவ்வுயிர்கட்கு, யான் இறுதிசெய்யின் - யான் கொலைசெய்வேனாயின், எனக்கு - கொலைப் பாவியாகிய எனக்கு, இவ்வுலகு காவல் - இவ்வுலகைக் காக்குந்தொழில், என்னை - என்னை பயனைச்செய்யும், மன் உயிர்க்கு - மிகுதியான உயிர்கட்கு, மண்மேல் - நிலவுலகில், அரணம் - பாதுகாப்பாவார், மன்னவர் அல்லரோ - அரசரன்றோ, இனி கூறாய் - இப்பொழுது நீயே கூறுவாயாக எ-று.
முறை செய்து உயிர்களைக் காத்தவேந்தன் தேவியாதலின், வேந்தருடைய அறம்பல அறிந்திருப்பாளெளன்ற அமைதி குறித்து, "இறைவி" என்றும், "கூறாய்" என்றும் இயம்பினான். "மண்ணியல் மன்னர்க்குக் கண்ணெனவகுத்த, நீதி நன்னூலோதிய நாவினள்"1 என்று பிறருங் கூறுதல் காண்க. "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது, இன்னுயிர் நீக்கும் வினை"2 என்பவாகலின் "என்னுயிர் நீத்தவேனும்" என்றும், "யான் உயிர்க்கிறுதி செய்யின்" என்றும் கூறினான். "இன்னா செய்தார்க்கும் இனியவே" செய்தல் வேண்டுமென்பதுபற்றி, யான் உயிர்க்கு உறுதி சூழா தென்னுயிர்க் காரணம் நாடி" யென்றும் எடுத்துக் காட்டினான். தன்னுயிரினும் தன்னாற்காக்கப்படும் உயிர்கட்கு உறுதியை நாடிச் செய்வதே அரசர்க்கு அறமாதலினுலும், அதனினும் ஆக்கம் உயிர்க்கு வேறின்மையாலும், "என்னையிவ்வுலகு காவல் எனக்கு" என்றான். மன்னுயிர்க்கு அரண்செய்வதே வேந்தர்கடன் என யாப்புறுத்தவே, "மன்னுயிர்கரண மண்மேல் மன்னவரல்லரோ" என்றான்.
உயிர்க்கொலையால் மேலுலக வின்பமில்லை யெனல்
உரை:- யான் உயிர்வாழ்தல் எண்ணி-யான் உயிரோடிருப்பதொன்றையே கருதி, எளியவர் தம்மைக் கொல்லின்-எளியோர்களைக் கொல்வேனாயின், மேல்-மறுமைக் கண், வான் உயர் இன்பம்-தேவருலகில் பெறும் உயர்ந்த இன்பம், வரும் நெறி திரியும்-என்னை வந்தடைதற் குரிய நெறிமாறி நீங்கிவிடும், அன்றி-அன்றியும், ஊன்உயிர் இன்பம் எண்ணி-உடம்பொடுகூடிய உயிர்க்கு வரும் இன்ப மொன்றையே கருதி, எண்ணம் ஒன்றும் இன்றி-ஏனை யுயிர்கட் குண்டாகும் துன்பத்தைச் சிறிதும் நினையாது, மண்ணில்- மண்ணுலகத்தே, மானுயர் வாழ்வு-மக்கள்வாழும் வாழ்வு, மரித்திடும் இயல்பிற்றன்றே-அழிந்து போகும் இயல்பினதாகும் எ-று.
"தான் வாழ ஏனோர் தனக்கடிமையாக எனும், ஊன அறிவினர்க்கு" விண்ணின்பம் ஒருகாலும் எய்தா தென்னும் அறவுணர்வால் "யானுயிர்வாழ்த லெண்ணி எளியவர் தம்மைக் கொல்லின், வானுய ரின்பமேலால் வருநெறி திரியும்" என்றான். மறுமைக்கண் இன்பமின்றாயினும் இம்மைக்கண்ணாயினும் இனிதிருக்கலா மெனத் தருக்கு வார்க்கு, இம்மையின்பமும் நிலையின்றிக் கெடுமென்பான், "மானுயர்வாழ்வு மண்ணின் மரித்திடும் இநயல்வற் றன்றே" என்றான்,. எளியவர் என உயர்;திணைமேல் வைத்துக் கூறினானாயினும், அஃறிணையும் கொள்ளப்படும். "கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை"1 என்புழிப்போல. கழிந்த நாட்களைப் போல மரிக்கும் நாள் இஃது என உணரற்காகாமையின், காலங் குறியாது வாளா "மரித்திடும் இயல்பிற்றன்றே" என்றான். "சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம், நின்றநாள் யார்க்கும் உணர்வரிது"2 என்று பிறருங் கூறுதல் காண்க. அன்றே என்புழி எதிர்மறை முற்றும் எதிர்மறை யேகாரம் கூடி ஆமென்னும் உடன்பாட்டுப் பொருள்தந்து நின்றன. வானுயர் இன்பம், தேவருலகத்தின் மேற்பட்டதாகிய முத்தியின்பமுமாம்; "மூவுலகுச்சி யின்பம்"3 என்று தேவர் கூறுதல் காண்க. வானுயரின்பம் எய்தாதென்ற கருத்தால், "வரும் நெறிதிரியும்" என்றான். ஆல், அசை.
உயிர்க்கொலையால் பாவம் மிகுமெனல்
உரை:- அன்றியும்-அல்லதூஉம், அன்னை-தாயே, முன்னர்-முற்காகலத்தும், நின்குலத்துள்ளோர்கள்-நின்குலத்திற் பிறந்த முன்னோர் எவரும், உயிர்கொன்று கன்றும்- உயிர்களைக் கொன்றுகொன்று அடிப்பட்ட, உள்ளக்கொடுமை -மனக்கோட்டத்தால், செய்தொழிலர்-அக்கொலை வினையைச் செய்யும் செய்கை உடையவர், அல்லர்-இலர். இன்று என்-இப்போது நினக்கு மட்டில் அஃது உண்டாவது என்னை, இன்று-இப்போது. உயிர்கொன்ற பாவத்து- உயிரைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தால், மேல்-மறுமையில், இடர்பலவிளையும்-பல துன்பங்களுண்டாகுமாதலால்., நீ அருளிற்றெல்லாம்-நீ சொன்னது முழுதும் நமக்கும்-மன்னுயிர்க்கேயன்றி நினக்கும் எனக்கும், நன்றி யொன்றன்று-நலம் சிறிது மின்றாம் எ-று.
தன் தாய் மனத்தில் கொலையுணர்வு பிறத்தற்குக் காரணங் காணலுற்ற யசோதரன், அவள் முன்னோர் இயல்பை மனத்தாலாராய்ந்து ஒருவர்பாலும் அஃதில்லாமை யோர்ந்து, வருந்திக் கூறுவான், "நின்குலத்துள்ளோர்கள், கொடுமை செய் தொழிலரல்லர்" என்றும், அவள்பால் அஃதிருத்தற்கு ஏது பெறப்படாமையின்; "இன்று என்" என்றும் கூறினான். "நலத்தின்கண் நாரின்மை தோன்றினவனைக் குலத்தின்கண் ஐயப்"1 படுவது இயல்பாதல்பற்றி, இவ் வாராய்ச்சியுண்டாயிற்றெனவறிக. "இன்று" எனவே, தன் தந்தை அசோகன் காலத்தும் இச்செயல் நிகழாமை துணியப்படும். உயிர்க்கொலையே புரிந்து அதன்கட் கன்றிய மனமுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அச்செயலுண்டாகாதென்றற்கு "கொன்றுயிர் கன்றும் உள்ளக் கொடுமை செய்தொழில்" என்றார். கன்றுதல், செய்துசெய்து பயிற்சி கைவரப் பெறுதல்; தீமைசெய்து பயிறற்கே இக்கன்றுதல் வினை யுரித்து; சூதின்கட் கன்றினான், கொலையின்கட் கன்றினான், காமத்தின்கட் கன்றினான் எனவரும் வழக்காறுகளைக் காண்க. கொடுமை, கோட்டம்; நடுவுநிலை யின்மை. தன்னுயிர்போல் ஏனையுயிரை நினையாமையின், கொடுமை யாயிற்று. உயிர்க்கொலையால் உண்டாகும் பாவம் விடாது தொடர்ந்து வந்து பல பிறப்புக்களிலும் துன்புறுத்தும் என்பான், "இடர்பல விளைக்கும் மேலால்" என்றான்.
ஆல், அசை. "தீமையெல்லாம்"(135) என்புழிப்போல, எல்லா மென்பது எஞ்சாப்பொருட்டு. நன்றியொன்றன்று என்புழிச் சிறப்பும்மை தொக்கது. நன்றியன்று, ஒன்றன்று என்றியைத்து அறமுமன்று, ஒருபொருளுமன்று, இன்பந்தருவது மன்று என்றுரைப்பினுமாம். "இன்னுயிர் கொன்ற பாவத்து" என்புழி, இன்றென்பது இம்மைப்பிறப்புக்கும் உரித்து, மேலென்றது மறுமை சுட்டி நிற்றலின், நமக்கும் என்புழி உம்மை எச்சப்பொருட்டு; நம்மிருவர்க்கும் என்றுமாம்.
------
இவை நான்கு பாட்டாலும் உயிர்க்கொலையால் விளையுந் தீங்கு பலவகையாலும் வகுத்துரைக்கப்பட்டது காண்க.
இதுகேட்டு வெகுண்ட சந்திரமதி மாவாற் கோழியொன்று செய்து பலியிடுக என்றல்.
உரை:- என்றலும் - என்றிவ்வாறு யசோதரன் கூறியதும், முனிவுச் சிந்தைத் திருவிலி - வெகுளிபொருந்திய மனத்துடன் அறவுணர்வில்லாத சந்திரமதி, எனது சொல்லை இறந்தனை - என் சொல்வரம்பு கடந்து பேசுகின்றாய், கொடியை - நீ கொடியவன், என்று பிறிது கூறும் - என்று சினந்து பின் மேலுங் கூறுவாளாய், உயிர் கொன்று - ஓர் உயிரைக் கொன்று, களைதல் அஞ்சின் - உன் துன்பத்தைப் போக்கிக் கொள்ள நீ அஞ்சினாயாயின், கோழியை மாவின்செய்து - கோழியினது வடிவமொன்றை மாவாற் செய்து, சென்றனை - தேவிகோயிற்குத் சென்று, பலிகொடுத்து - பலியிட்டு, தேவியை மகிழ்வி - அச்சண்டமாரி தேவியை மகிழ்விப்பாயாக, என்றாள் - என்று சொன்னாள். எ-று.
எளிதில் சினக்கும் இயல்பின ளென்றற்கு "முனிவுச் சிந்தை" யென்றும், அவ்வியல்பினர்பால் அறம் பற்றுக்கோடாக நிற்கும் திரு நில்லாமையின், "திருவிலி" என்றும் கூறினார். அறத்தின்வழி நிற்றல்பற்றி அதனைத் திரு வென்றார். "சிறபபுடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப்படூஉம்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. திருவிலி, அமங்கலையுமாம். தான் கொண்டது விடாப் பேதை யாதலின், பிறிது கூறுகின்றாளெனவுணர்க. "கொன்றுயிர் களைதலஞ்சின்" என்றது, யசோதரனுள்ளத்தை யெழுப்பி உயிர்க் கொலைக்கண் ஊக்குங் குறிப்பிற்றாதலை யுணர்க. "மாவாலாவது மாவினாலாம்" என்னும் உலகுரை பற்றி, "கோழியை மாவிற் என்றும், "பலிகொடுத்" தென்றும், "தேவியை மகிழ்வி" யென்றும் கூறினாள்.
யசோதரன் இது வினைவிளை வென்று நினைதல்
உரை:- மனம் விரி அல்குல்-ஆடவர் ஆசைபோல் அகன்ற அல்குலை யுடைய அமிர்தமதியின், மாயமனத்தவை- கள்ள நினைவும் செயலும் கொண்டொழுகுந் திறங்களை, வகுத்த-குறிப்பா யுணருமாறு யான் தேவிக்கு வகுத்துரைத்த, மாயக்கனவுரை-பொய்க்கனவுக் கூற்று, பிறிது-வேறாக, தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று-அரசமா தேவியாகிய சந்திரமதியின் உரை வேறொன்றாயிற்று, எனைவினையுதயம் செய்ய-என்பால் வினைதோன்றி வி்டதனால், இடர்பல என் பால் விளைந்த-துன்பங்கள் பல எனக்கு உண்டாயின, வினைகளின் விளைவை-வினைகளால் உண்டாகும் பயனை, விலக்கு நர் யாவர்-விலக்கும் வன்மையுடையார் யாவருளர், என்று- என்று நினைந்து, நின்றான்-சந்திரமதி கூறிய செய்கைக்கண் நிற்கலானான் எ-று.
எல்லையின்றிப் பரந்த அல்குலென்றற்கு "மனம் விரி யல்குல்" என்றான். "அவாப்போ லகன்ற தன் அல்குல்"2 என்று பிறரும் கூறுப.மனம் கணந்தோறும் பொருள்கண்மேல் அவாக்கொண்டு விரிதல் போல, அல்குலும் புணர்வார்க்குப் புணருந்தோறும் புத்தின்பம் பெருகி விரிதலின், அல்குற்கு அவாவினை உவமம் கூறினர்.
மாயம், கள்ளம், பொய் முதலியன ஒரு பொருளன. மானத்தால் வெளிப்படக் கூறாது குறிப்பால் கனவுமேல் வைத்துக் கூறினமையின், "வகுத்த மாயக் கனவுரை" யென்றான். செயவெனெச்சம் காரணப் பொருட்டு, "எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின் சென்றடும்"1 என்பது பற்றி, "வினைகளின் விளைவை யாவர் விலக்குநர்" என்றான்; பிறாண்டும், "வெல்வதற்கரிதால் வினையின் பயன்"(170) என்பது காண்க.
அல்குல் மாயமனத்தவை என்பதற்கு அல்குலையும் மனத்தையுமுடைய தாயாகிய சந்திரமதியென்று உரைப்பது பொருள் சிறவாமையறிக. அவை - அவ்வை, தாய்.
சந்திரமதி யுரைத்தவாறு செய்தற் கொருப்பட் டுரைத்தல்.
உரை:-உயிர்ப்பொருள் வடிவு கோறல் - உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைக் கொல்வதும், உயிர்க்கொலை - உயிர்க்கொலையேயாம், என்னும் பயிர்ப்பு - என்னும் ஓர் அருவருப்பு, உளம் உடையனேனும் - மனத்தே கொண்டிருந்தானாயினும், பற்று அறத் துணிவுஇல் மன்னன் - பசையற ஒருதலையாகத் துணியும் மனவன்மை யில்லாத வேந்தனாதலின், செயிர்த்தவள் - தன்னை வெகுண்ட தாயாகிய சந்திரமதி, உரைத்த செய்கை - சொல்லிய செயலை, செய்வதற்கு இசைந்தது - செய்தற்கு என் நெஞ்சு இசைந்து விட்டது, என்றான் - என்று யசோதரன் சந்திரமதிக்குக் கூறினான். அயிர்ப்பது என் - அவன்பால் நாம் ஐயுறுவதாற் பயினில்லை, அறத்தின் திண்மை யறிவதற்கு - அறத்தின் வலியினையுள்ளவா- றறிதற்கேற்ற, அமைவிலாதான் - மனத்திட்பமுடைய னல்லனாதலால் எ-று.
உயிர், உயிரில்லது, நல்வினை, தீவினை, ஊற்று, சம்வரம், நிர்ச்சரை, கட்டு, வீடு என்ற ஒன்பதனையும் பொருளென்றால் சமண்சமயக் கொள்கையாதலின், "உயிர்ப்பொருள்" என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. போலும். உரையசை; இதனை வாக்கியாலங்காரம் என்ப. பயிர்ப்பு, அருவருப்பு. துணிவுடையனாயின், தன்னறிவின்கண் அறிந்து கூறிய அறங்களை விடாது மேற்கொண்டு சந்திரமதியின் கூற்றை மனங்கொள்ளாது தள்ளியிருப்ப னென்றற்கு, "பற்றறத் துணிவில் மன்னன்" என்றார். அவனை யிசைவித்தது அச்சந்திரமதியின் வெகுளியே யென்றற்கு "செயிர்த்தவள்" என்றும், அதற்கு அஞ்சினானென்பார் "செய்வதற்கிசைந்த தென்றான்" என்றும் கூறினார். கொலைப்பாவமும் வினையியல்பும் பிறவும் யசோதரன் எடுத்தோதக் கண்டார், அவன் அக்கொலைவினையைச் செய்தற் கிசைந்தானெனின், கொள்ளாராதலின் "அயிர்ப்பதென்" என்றும் அதற்கு ஏது இஃதென்பார், "அறத்தின் திண்மை யறிவதற் கமைவிலாதான்" என்றும் கூறினார். எனவே, "ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்கா"ப்பெரும் பேதை இவ் யசோதரனென்றாராயிற்று.
--------
மாக்கோழியைப் பலியிடுவான் அநறுத்தல்
உரை:- அவ்வையாய பாவிதன்னோடு-தாயாகிய பாவியுடன், மன்னன்-வேந்தனாகிய யசோதரன், படுகொலைக்கு இடமதாய தேவி தன் இடை-மிக்க உயிர்க்கொலைக்கு இட மாகிய சண்டமாரி கோயிற்கு, மாவினின் வனைந்த கோழி வடிவுகொண்டு-அரிசிமாவாற் செய்யப்பட்ட கோழி வடி வத்தை எடுத்துக்கொண்டு, சென்றெய்தி-சென்றடைந்து, சிறப்பொடு வணக்கம் செய்து-திருவிழாவும் வழிபாடும் ஆற்றி, ஆவயின்-அவ்விடத்தே, தன்கைவாளால்-தன்கையில் வாளால், அரிந்து-அக்கோழியின் தலையைக் கொன்றெறிந்து, இது கொண்டருள்-தேவி, இப்பலியை ஏற்றருள் வாயாக, என்றான்-என்று வேண்டினான் எ-று.
"சாலியின் இடியின் கோழி" (146) என்றலின், மா, அரிசிமா வாயிற்று. யசோதரன் மனத்தே அறவுணர்வு அரும்பக் கண்டதும் அதனை வளர்க்காது, மாறாயபாவமே வலியுறச் செய்தாளாதலின், "அவ்வையாய பாவிதன்னோடு" என்றும், இக்கொலைக்கு அவளே முதலாதல்பற்றி, "பாவிதன்னோடு" என்றும், உயிர்க்கொலை நிகழ்தற்கு அத்தேவி கோயில் இடமாதலின், "படுகொலைக்கிடமதாய தேவி தன்னிடை" என்றும் கூறினார். வணக்கம், நாளும் நடைபெறுவது; சிறப்பு, நாள் வழிபாட்டிற்றாழ்வு தீரச் செய்யப்படுவது; "சிறப்பொடு பூசனை செல்லாது"1 என்றார் பிற சான்றோரும். சுட்டு நீண்டது.
மாக்கோழி கூவிக்கொண்டு மன்னன் முன் வீழ்தல்
உரை:- மேல் இயல் தெய்வம் கண்டு - மக்கட்கு மேலாக வழிபடப்படுகின்ற சண்டமாரியாகிய தெய்வத்தைப்பரவி, விரும்பினது - அது விரும்பிய பலியாக, அடையப்பட்ட - படைக்கப்பட்ட, சாலியின் இடியின்கோழி - சாலி நெல்லரி சியை யிடித்துப்பெற்ற மாவாலாகிய கோழியானது, தலை யறிந்திட்டது - தலையறுக்கப்பட்டது, ஓடி - துள்ளியோடி, கோல் இயல் அரசன் முன்னர் - நீதி முறையில் ஒழுகும் இயல்பிற்றாகிய அரசினையுடைய யசோதரன்முன்னே, கூவுபு குலுங்கிவீழ - கூவித் துடித்து வீழ, மால் இயல் அரசன் - மயங்கும் இயல்பினையுடைய அவ்வரசன், தன் கை வாள் விடுத்து - தன் கையினின்றும் வாள் நெகிழ்ந்து வீழ விட்டு, உருகினான் - மனமுருகினான் எ-று.
மக்கட்குரிய வினைப்பயனை வரைந்து தரும் இயல் பிற்றென்று தெய்வத்தைக் கருதுபவாதலின், "மேலியல் தெய்வம்" என்றார். சிறப்பயர்ந்து வழிபட்டுக் கண்ணாரக் காணும் செய்கை தோன்ற, "கண்டு" என்றார். விரும்பினது, சண்டமாரி விரும்பும்பலி. அடையப்படுதல், நிவேதிக்கப்படுதல். தலையரியப்படும் கோழி துள்ளி வீழ்தல் இயல்பாயினும், இம்மாக்கோழி உயிரில்லதாகவும் கூவித் துள்ளி வீழ்ந்த தென்பதாம். கோல், அரசநீதி; அது கோல் போறலின், கோலெனப் பட்டது. கோலியல் என்னு மடை, அரசுக் குரித்து, அதனையுடைய னாதலின், அவன் முன்னர் வீழ்ந்த தென் பார், "கோலியலரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ" என்றார். கூவுபு, செய்பென்னும் எச்சம். குலுங்குதல், துள்ளுதல். கோலியலரசினையுடைய னாயினும், யசோதரன் அதனை யுணராது மயங்கும் அரசன் என்றற்கு, "மாலியல் அரசன்" என விதந்தார். மாலியலரசற்கு வாட்படை யொருபயனும் செய்யாதாகலின், "தன் கைவாள் விடுத்து உருகினான்" என்பாராயிற்று.
--------
மனமுருகிய வேந்தன் வருந்துதல்
உரை:-மாவின் செய்கை - மாவினால் செய்யப்பட்டதாகிய இக்கோழி வடிவமானது, இவ் - இவ்வாறு, உயிர் பெற்ற பெற்றி - உயிர்பெற்ற தன்மை, என்கொல் - என்னோ, வாள் - என் கைவாள், சென்னி எறிய - தலையை யரிய, ஓடிச் சிலம்பிய குரல் இது - துள்ளியோடிக் கூவிய இக்குரல், என் கொல் - என்னோ, பின்னிய பிறவிமாலை - ஒன்றினொன்று பின்னப்பட்டது போன்றுள்ள பிறவித்தொடர்பானது, பெருநவைதருதற்கு - எனக்கு மிக்க துன்பத்தைத் தருதற்கு, ஒத்த - ஏதுவா யமைந்த, கொன் இயல் பாவம் - அச்சத்தைச் செய்கின்ற பாவந்தான், என்னைக் கூவுகின்றது போன்ம் - என்னைக் கூவியழைப்பது போலும், என்றான் - என்று சொல்லி வருந்தினான். எ-று.
"மாலியலரசன்" என்று பொதுப்படக் கூறினாராதலின், அதனை விளக்கு முகத்தால் அவன் மனமருட்சியைப் படிப்படியாகக் காட்டலுற்று முதற்கண், மாக்கோழி உயிர்பெற்றுத் துள்ளியோடியதை வியந்து, "மாவின் செய்கை இவ்வுயிர் பெற்ற பெற்றி என்னை கொல்" என்றான். இவ்வென்னும் சுட்டுப்பெயர், உயிர் பெற்ற திறத்தைச் சுட்டிநின்றது. துள்ளியதோ டமையாது கூவியது உயிர் பெற்றதன் பெற்றியை வற்புறுத்தி அவன் மனத்தே சூழ்ச்சி பிறப்பித்தமையின், அதனால், அக்குரலைப் பாவத்தின் குரலாகப் பொருள் செய்துகொண்டு, "பாவ மென்னைக் கூவுகின்றது போன்" மென்றான். போலும் என்பதன் ஈற்றுமிசையிகரம் மெய்நிற்பக் கெட்டது. கொன், அச்சப்பொருட்டாய இடைச்சொல். காரணகாரியத் தொடர்ச்சியாய்த் துன்பம் பயக்கும் இயல்பிற்றாதலின், "பின்னிய பிறவி மாலை" யென்றும், "பெருநவை தருதற்கு" என்றும் கூறினான். நவை, துன்பம், நுகர்ந்தன்றிக் கழியாத பெருமை யுடைமையின், "பெருநவை" யெனப்பட்டது. ஒத்தல், "உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்"1 என்புழிப்போல.
உரை:-அறிவிலேன் - நல்லறிவில்லாத யான், அன்னை சொல்லால் - தாயாகிய சந்திரமதியின் சொற்கிசைந்து, அருளில் செய்கை - இரக்கமில்லதாகிய உயிர்க்கொலை செய்தது, ஆ - மிகவும், தகாது - தகுதியற்றதாகும், அழிந்தபுள்வாய் - பலியாய்த் தலையறுப்புண்டகோழியின் வாயிலிருந் தெழுந்த, அரிகுரல் - அரித்த குரலோசை, நெஞ்சை அரியும் - என் நெஞ்சினை யறுக்கின்றது, ஆதகாது - ஆ, இதுவும் தகுதியற்ற கொடுஞ்செயலாகும், அமிர்தமுன்னா மதியவள் களவு - அமிர்தம் என்னும் பெயர்முன் மதியென்னும் சொல் புணரவரும் அமிர்தவதியென்னும் பெயரினையுடையாளது கள்ளச் செயலும், கொல்லும் - என்னுயிரைக் கொல்லநிற்கும், ஆ தகாது - ஆ இதுவும் தகுதியற்றதாம், வினைகள் - தீவினைகள், என்னையடர்த்து நின்று - என்னை நெருக்கி நின்று, அடுங் கொல் - கொல்லும் போலும், ஆ - ஐயோ, தகா - இவையாவும் எனக்குத் தகுதியல்ல எ-று.
இயற்கை யறிவால் சந்திரமதி கூறிய செயல் தக்கதன்றென் றுணர்ந்தும், திட்பமின்மையின், அயர்ந்து அவள் சொற்கே இசைந்து கெட்ட தன்சிறுமை நினைந்து அவன் தான் வருந்துகின்றமை தோன்ற, "ஆ தகாது" என்றான். ஆ என்னும் இரக்கக் குறிப்பிற்றாய இடைச் சொல், ஈண்டுக் கழிந்ததற் கிரங்கும் இரக்கமிகுதி சுட்டி நின்றது ஏவியது அன்னை செய்கையாகவும், இயற்றியது தன்செய்கையாதலையும்,அதற்கேது தன் அறிவின்மை யெனபதையும், அச்செயகைக் கண்ணுள்ள குற்றம் அருளின்மை யென்பதையும் தெரிந்துணர்ந்து வருந்துமாறு விளங்க, "அன்னைசொல்லால் அறிவிலேன் அருளில் செய்கை" என்றான். மாக்கோழியின் செய்தியால் அதனை யுயிரென்றே கருதினானாதலின், "அழிந்த புள்" என்றான். அரிக்குரல், அரிகுர லெனவும் வரும். "அரிகுரற் கோழி"1 என்றார் பிறரும். களவு, கள்ளக்காம வொழுக்கும். இத்தீவினை காரணமாகப் பிறவியும், வினையும் பெருகுதலின், "வினைகள்" என்றும், அவை தன்னை யடர்த்து வருத்துவது ஒருதலை யென்னு முணர்வால், "அடர்த்து நின்று அடங்கொல்" என்றும் கூறினான். தனக்குத் தகுதி வினையின் நீங்கி விளங்கிய அறிவினைப் பெற்றுச் சிவகதி பெறுவதேயாக, இக் கூறியவாற்றால் வினைகளை யீட்டித் துன்புறுவ தன்மையின், "ஆ தகா" என்றான்; இனி, தகா வென்பதனை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்கி வினையொடு முடிப்பினுமாம். இக்கூற்று, "காவலற் கூற்றும் கொல்லும், வளைகயமடந்தை கொல்லும் தான்செய்த பிழைப்புக் கொல்லும், அளவறு நிதியங் கொல்லும் அருள் கொல்லும்"2 என்பதனோடு கருத்தால் ஒத்து நிற்றல் காண்க.
தன்மகன் யசோமதிபால் அரசினை வைத்து யசோதரன் தவவனம் படர்தற்கமைதல்
உரை:-யசோதரன்-வேந்தனான யசோதரன், இனையன நினைவு தம்மால் - இத்தன்மையான பல நினைவுகளுடன், நகரம் எய்தி - அகநகர்க்கண்ணுள்ள தன்னரண்மனையை யடைந்து, தனையனில் அரசுவைத்து - தன் மகன் யசோமதி பால் அரசபாரத்தை ஒப்பித்து, தவவனம் படர்தல் உற்றான்- தான் தவம்பூண்டு வனத்துக்குச் செல்லக்கருதினான், தேவி- அவன் மனைவியாகிய அமிர்தமதி, அனையதை யறிந்தும்- அதனை விளங்க அறிந்து வைத்தும், எனை அவமதித்து-என்னை யிகழ்ந்து, விட்டான்-இவ்வரசன் துறந்துவிட்டான், என நினைந்து-என்று தனக்குள்ளே நினைந்து, எரி நரகத்து வீழ்வாள்-நெருப்பெரியும் நரகத்தில் வீழபவளாகிய அவ்வமிர் தமதி, ஏது செய்தாள்-யாது செய்தாளென்றால் எ-று.
ஆலுருபு ஒடுவின் பொருட்கண் வந்தது. சண்டமாரியின் கோயில் நகர்க்குப் புறத்தே யுண்மை தோன்ற, "நகரமெய்தி" என்றார். தவவனம், தவம் செய்தற்குரிய காடு. படர்தல், செல்லுதல். உற்றான், நினைத்து அதற்கு முன்னணியாகச் செய்தற்குரியவற்றைச் செய்யலுற்றான் என்பதுபட நின்றது. அறிந்தும் என்புழி உம்மை, சிறப்பு. தேவி, மனைவியாகிய அமிர்தமதி. யசோதரன் துறவு மேற்கொண்டது, தன்பால் பெறலாகும் காமவின்பத்தைப் புறக்கணித்ததாகக் கருதி வெகுள்கின்றாளாகலின் "அவமதித்தெனை விடுத்தான்" என நினைந்தா ளென்றார். அவ்வெகுளி மிக்கதனால், துறவுபூண்டு நலமெய்தக் கருதும் அவ்யசோதரன் உயிர்க்குக் கேடுசூழ்கின்றாளென்பார் "யாது செய்தாள்" என்றும், அச்சூழ் வினையாலவளெய்தும் பயன் இஃதென்பார், "எரிநரகத்து வீழ்வாள்" என்றும் கூறினார். ஆசிரியர் அவளை இகழ்ந்து கூறியதூஉமாம்.
----
அமிர்தமதி வஞ்சனையாக யசோதரனை விருந்துண்ண அழைத்தல்
உரை:- விரைசெய்தார் இறைவ-மணம் கமழும் மாலையணிந்த அரசனே, நீ அரசு துறத்தியாயின்-நீ அரச போகத்தைத்துறந்து செல்கின்றாயாயின், அமைக-அவ்வண்ணமே செய்க, எனக்கும் அஃதே-எனக்கும் அதுவே இனி அமைதியாகும். என் வியன்மனை-என்னுடைய அகன்ற மனைக் கண்ணே, இன்று-இற்றைநாளில், மைந்தனோடு-அரசனாகப்போகும் நின் மைந்தனுடன் போந்து, இரசநீர் அமிர்து- யான் நல்கும் சுவைபொருந்திய உணவினை, கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்- ஏற்றுண்பதற்கு மனமிசைய வேண்டும், அரசு-இவ்வரசபோகம், அவனதாக-மகற் குரித்தாய்விடின், அடிகள்-ஐயனே, நாம் அவிதும்-பின்பு நாம் இவற்றின்மேல் செல்லும் வேட்கையவிந்தொழிவோ மாதலின் எ-று.
யசோதரன் துறவு பூண்பதில் தனக்கு விருப்பமின்மை யுணர்த்துவாள், "அரசு நீ துறத்தியாயின்" என்றும், தனக்குத் துறவுக் கண் விருப்பமின்றாயினும், யசோதரன் தன் வேண்டுகோட்கு இசையும் பொருட்டு "எனக்கும் அஃதே" என்றும் கூறினாள். "இரச நீர் அமிர்து" என்றாள், தான் நல்க விரும்பும் உணவின் ஏற்ற முணர்த்தற்கு, உள்ளத்தே துறவு நிகழ்ந்தவழி, தன் சொல்லையும் பிறநலங்களையும் விழையான் என்ற கருத்தால், அமிர்தமதி யசோதரனை, "மைந்தனோடு கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்" என்றும், இனி, இத்தகைய வுணவினைத் தானும் அவனும் கோடற்கா காமையால் "இன்று" என்றும், அதன்பால் வேட்கை யெழினும், அதனை யவித்தொழுக வேண்டுமென்பாள், "அவிதும் நாம்" என்றும் கூறினாள். அடிகள், மகளிர் தம் கணவனை இவ்வாறு அழைப்பது மரபு. "அமுதமுண்க வடிகள் ஈங்கென"1 எனக் கண்ணகியார் கூறுமாறு காண்க.
துறவு மேற்கொள்வாரை விலக்குதல் அறமன்றாதலின், அமிர்தமதி இவ்வண்ணம் கூறினாள் என வுணர்க.
யசோதரன் சந்திரமதியுடன் விருந்துண்ண வருதல்.
உரை:- ஆங்கு-அவ்விடத்தே, அரசன்-அரசனான யசோதரன், அவள் அகத்துமாட்சி அறிந்தனனேனும்- அமிர்தமதியின் மனமாண்புகளை அறிந்திருந்தானாயினும், வீங்கிய முலையினாய்-பெருத்த முலைகளையுடையாய், நீ வேண்டியது அமைக-நீ விரும்பியதனையே செய்வாயாக, என்று-என்று சொல்லி, தாங்கலன்-நீட்டியாது சென்று, அவ்வை தன்னோடு-தாயாகிய சந்திரமதியுடன், அவள் மனை- அவ்வமிர்தமதியின் அரண்மனையை யடைந்து, அமர்ந்தான்- உணவுகொள்ள விரும்பியிருந்தான், தீங்கது குறுகின்-கேடு வருமாயின், தீய நயமும்-தீதுபயக்கும் உரையும், நல்நயம தாம்-முழுதும் நலம் பயப்பதாகவே தோன்றும் எ-று.
அமிர்தமதி அகத்தே கணவன்பால் வெறுப்பும் செயலில் கொடுமையும் கொண்டிருத்தலை நன்கறிந்திருப்பது தோன்ற "அவளகத்து மாட்சி யறிந்தனன் அரசனேனும்” என்றார். “இரசநீர் அமிர்து கைக்கொண் டருளுதற் கிசைதல் செய்வாய்" (150) என்று அமிர்தமதி வேண்டிக்கொண்டதற்கு அவன் இசைந்ததனை "நீ வேண்டிய தமைக" என்றான் என்றார். தங்கலன் என்பது எதுகையின்பங் குறித்துத் தாங்கல னென நீண்டது. அவ்வை, தாய்,.
உணவு கோடற்கு இசைந்தவன் தன் தாய் மனையை யடைந்து அவளையும் உடனழைத்துக்கொண்டு போந்து இனிதிருந்தான் என்பார், "அமர்ந்தான்" என்றும், அக்காலை, அவன் அமிர்தமதி கருதிக் கொண்டிருக்கும் தீமையை நினையாது அவள் வழங்கிய உரையினைக் கேட்டு உண்மை யென்றே கருதி யொழிந்தா னென்றும், அவ்வுரை கேட்டற்கு இனியவா யிருந்தனவே யன்றி, உண்மை யன்பாகிய உள்ளீடு இல்லாதன வென்றற்குத் "தீயநயம்" என்றும் கூறினார்.
சொல் தன் இனிமைத் தோற்றத்தால் கேட்டார் மனத்தே சொல் வார்பால் அன்பம் உண்மையுறவும் கொள்ளச் செய்தலின் "நயம்" எனப்பட்டது. கேடெய்தும் ஊழுடையார்க்கு, அக்கேட்டினைப் பயக்கும் சொல்லும் செய்கையும் நலம் பயப்பனவாய்த் தோன்றி அவரை அவற்றையே விரும்பப்பண்ணுதல் பற்றி, "தீங்கது குறுகின் தீயநயமும் நன்னயமதாமே" என்றார்.
-----------
அமிர்தமதி உணவில் நஞ்சுகலந் தளித்தல்
உரை:- நஞ்சொடு கலந்த-விடம் கலந்துள்ள, தேனின்
நறுஞ்சுவை-தேனைக் கலந்ததனாலுண்டாகிய நறியசுவை,
பெரியவாக-மிகுதியாகவுடைய, எஞ்சல் இல் அட்டுகங்கள்-
வேறு சுவையிலும் குறைபாடில்லாத பண்ணியங்களை, இருவிரும் அருந்துக என்று-இருவீரும் உண்பீர்களாக என்று,
வஞ்சனை வலித்து-வஞ்சனையான சொற்களால் வற்புறுத்தி,
மாமிதன்னுடன் வரனுக்கு-மாமியாகிய சந்திரமதியடன்
கணவனாகிய யசோதரனுக்கும், ஈந்தாள்-அளித்து உண்பித்தாள். தான் மகனொடு-தான் தன்மகன் தன்னோடு உடனிருக்க இருந்து, நஞ்சொடுபடாத-நஞ்சு கலவாத பண்ணியங்களை, நயந்துகொண்டாள்-விரும்பியுண்டாள் எ-று.
நஞ்சினைத் தேனிற் கலந்து அதனைப் பண்ணிகாரத் தோடு சேர்த்து, நஞ்சின் சுவை சிறிதும் தெரியாவகையிற் சமைத்தமை தோன்ற, "நஞ்சொடு கலந்த தேனின்; நறுஞ்சுவை பெரியவாக" என்றும், இந்நஞ்சு கலப்பால் உண்டாகிய குறைபாடொழிய, வேறு வகையால் எவ்வகைச் சுவைத்திறத்தும் குறைவின்மை விளங்க,
"எஞ்சலில் அட்டுகங்கள்" என்றும் கூறினார். அட்டுகம், இனிப்புப் பண்டம்; பண்ணிகாரம் என்றலும் இதுவே, சுவைமிகுதியால் படைத்த அட்டுகங்கள் தெவிட்டியபோதும், பல்வகை நயவுரைகளால் இருவரையும் வற்புறுத்தி உண்பித்தமை தோன்ற "வஞ்சனை வலித்து" என்றும், நஞ்சுடையவற்றையே நாடி யுண்பித்தமையின் "வஞ்சனை"யென்றும், தன் மகனைக் கோறல் கருத்தன்மையின், அவன், தன்னொடு இருந்து நஞ்சிலாதவற்றை யுண்ணுமாறு செய்தமையின்,
"நஞ்சொடு படாத தானும் மகனொடு நயந்தது கொண்டாள்" என்றும் கூறினார். இனி லட்டுகம் என்றே கொள்ளினுமாம்.
சந்திரமதி தன் மகனோடிருந்து உண்பது குறித்துத் தான் தன் மகனொடு இருந்து உண்பது காட்டுவாளாய், அமிர்தமதி தன் கருத்தை முடித்துக்கொள்ளும் திறம் குறிக்கற்பாற்று. நஞ்சில்லாதவற்றை யுண்டலில் வெறுப்புப் பிறவாமையின் "நயந்து கொண் டாள்" என வுணர்க.
---------
யசோதரனும் சந்திரமதியும் நஞ்சுண்டதனால் இறந்து விலங்குகதியுட் பிறத்தல்
உரை:- நஞ்சு பரந்த போழ்தின்-விடமானது உடற்குள் பரவிய காலத்தில், நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்-உடல்
நடுங்கி அறிவு கலங்கித் தளர்ந்து நிலத்தில் வீழ்ந்து, மரணம்
அஞ்சினர்-தம்முயிர்க்குக் கேடுவருவதுணர்ந்து அஞ்சினாராக, சிந்தையடைந்தது முதல-பிறந்து நன்று தீது காணும்
சிந்தனையுண்டாகிய நாள்முதலாக, தங்கண்புஞ்சிய தீயவினைகள்-தம்மிடத்தே மிக்குற்ற தீவினைகள், புகுந்தன-தம்பயனாகிய துன்பத்தைச் செய்யலுற்றன, பொறிகள் பொன்றித் துஞ்சினர்-பொறியைந்தும் புலங்கலங்கித் தடுமாறிக் கெட்டு
உயிர்துறந்தனர், துயரம் துஞ்சா விலங்கிடை-துன்பம் குறைதலில்லாத விலங்குகதியுட் பிறப்பாராயினார் எ-று.
நஞ்சு உடலிற் பரவியதும் குருதியின் தூய்மையைக் கெடுத்து அதனைக் குளிர்வித்தலின், நடுக்கமும் மயக்கமும் அடைய வெய்தியது தோன்ற. "நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்" என்றார். நலந்தீங்கினைப் பகுத்துணரும் நல்லுணனர்வு பிறந்தபின்பே வினைகள் தொடர்தலின் "சிந்தை யடைந்தது முதல தங்கண் புஞ்சிய வினைகள்" என்றார். உயிர் நீங்குகாலத்து அதற்கு முன்னாகப் பொறிகள் புலனுணர்வு கெடுதலின் "பொறிகள் பொன்றித் துஞ்சினர்" என்றார். நால்வகைக்கதியும் துன்பத்துக் கிடமாயினும், மக்கட்கதியை
நோக்க, விலங்குகதி துன்பம் பெரிதுடைத்தாகலின் "துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னினார்" என்றார்; பிறாண்டும், யசோதரனும் சந்திரமதியும் விலங்குகதியுள் துன்புற்றது கூறுவார், "ஒல்வதற்கரு மாதுயருற்றனர்"(170) என்று ஓதுதல் காண்க.
--------
அமிர்தமதியை யிகழ்ந்து உழையர் தம்முட் கூறிக்கொள்ளல்
உரை:- இறைவியாம் இவள் தன் செய்கை-அரசியாகிய
இவ்வமிர்தமதியின் நினைவும் சொல்லும் செய்கையும், எண்களுக்கு இசைவு இலாத - எண்ணுதற்குச் சிறிதும் பொருந்தாதவையாகும், கண்களுக்கு இசைவிலாத கடையனை - பார்த்தற்காகாத கீழ்மகனான அட்டபங்கனை, நெஞ்சின் கருதி - கள்ளமனத்தால் காதலுற்று, மண்களுக்கு இறைவனாய வரனுக்கு - மண்ணுலகமக்கட்கு வேந்தனும் தனக்குக் கணவனுமாகிய யசோதரனுக்கு, மரணம் செய்தாள்-உயிர்க்கேட்டினைச் செய்தாள், பெண்களின் கோதனாள் - பெண் பிறப்பின் குற்றமெல்லாம் திரண்டு ஓர் உருக்கொண்டாற் போல்பவளான இவ்வமிர்தமதி, பெரிய பாவத்தாள் - பெரிய பாவியாவாள், என்றார் - என்று உழையர் தம்முட் கூறிக் கொள்வாராயினர் எ-று.
செய்கை யெனப் பொதுப்படக் கூறிமையின், நினைவும் சொல்லும் கொள்ளப்பட்டன. எண்ணுந்திறம் பலவாதலின், "எண்களுக் கிசைவிலாத" என்றார். பார்த்தற்கு மனம்பொறாமையின், கண்மே லேற்றிக் கூறினார். தனக்கு அக்கடையன்பா லுண்டாகிய காதலும் கள்ளக்கூட்டமும் புறத்தே தோன்றாவகையிற் கரந்தொழுகுதல் பற்றி, "நெஞ்சின் கருதி" என இகழ்ந்தனர். யசோதரன் மரணத்தால் இவ்வமிர்தமதி கணவனை யிழந்ததே யன்றி நாட்டு மக்கள் வேந்தனை யிழந்தனர் என்றற்கு, "மண்களுக் கிறைவனாய வரனுக்கு மரணம் செய்தாள்" என்பாராயினர். தான் கருதிய தீய காமவின்பம் குறித்துத் தன் கணவனைக் கொன்று நாட்டு மக்கட்கும் அரசனில்லாப் பெருந்துன்பத்தைச் செய்தமை கண்டு மிக்க அருவருப்புற்று இகழ்ந்து பழிக்கின்றார்களாதலின், "கோதனாள்" என்றும் "பெரிய பாவத்தள்" என்றும் பழிப்பாராயினர். கோது, குற்றம்.
---------
பெரியோர் சிலர் தம்முட் கூறிக் கொள்ளுதல்
உரை:-தீது அகல் கடவுளாக - குற்றத்தைக்கெடுக்கும்
கடவுளாகக் காண்போர் கருதுமாறு, செய்தது ஓர் படிமையின்கண் - செய்யப்பட்டதாகிய ஒரு பதுமையினிடத்தே, காதரம் - உண்டாகிய வெறுப்பும், உலகு இதன்கண் - இவ்வுலகத்தில், கருதிய முடித்தல் கண்டும் - ஒருவர்க்குத் தாம் கருதிய கருமங்களை முடித்துத் தருவதைக்கண்டு வைத்தும், தேவிக்கு - தேவிவடிவாகச் செய்யப்பட்ட அசேதனமாகிய பாவைக்கு, சேதனவடிவு எறிந்தனன் - சேதனமாகிய கோழியின் வடிவம்செய்து அதனைப் பலியிட்டான், தெரிவு ஒன்றில்லான் - ஆராய்ச்சியில்லாத இவ்வேந்தன், ஆதலால் - ஆகையினால்தான், இன்று - இப்போது, வந்தது - இக்கேடு எய்துவதாயிற்று, என்று சிலர்கள் எல்லாம் அழுங்கினர் - என்றுசொல்லிச் சில அறிந்தோர் வருந்தினார்கள் எ-று.
தம்மை வருத்தும் துன்பம் அகற்றுமென்ற கருத்தால் மக்கள் தெய்வ வடிவு சமைத்து வழிபடுகின்றன ரென்றதற்கு, " தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை" என்றும், அதன்பால் ஒருவர் செய்யும் குற்றமும் குணமாய் அவர் கருதிய கருமத்தை முடித்துத் தருவது உண்மையின், ”காதரம் கருதிய முடித்தல் கண்டும்" என்றும் கூறினர். மாக்கோழியைக் கொன்ற குற்றமே இன்று யசோதரற்குண்டாய கேட்டிற்குக் காரணம் என்று நினைந்து கூறுதலின்,
அக்கோழிப் பலி கொடாதிருப்பின் கேடொன்றும் நிகழ்ந்திராதென்ற கருத்தால், "சேதன வடிவு தேவிக் கெறிந்தனன்" என்றும்,
தேவிவடிவும் அசேதன மாதலைத் தெரிந்தில னென்றதற்குத் "தெரிவொன்றில்லான்" என்றும் கூறினர். அசேதனப்பொருளாயினும், சேதனமாகக் கருதிப் பலியிட்டமையின், "சேதனவடிவு" என்றார் எனவறிக. இவ்வாராய்ச்சியினைச் செய்வோர் சிலராதலினாலும், அவரனைவரும் ஒப்பக் கருதுதலாலும், "சிலர்களெல்லாம்" என்றார்கள், விகுதிமேல் விகுதி.
-------
நகரமாந்தர் தம்முட் கூறிக்கொள்ளுதல்
உரை:-அறப்பொருள் நுகர்தல் செல்லான் - இவ்வேந்தன் அறத்தால் பொருளீட்டி நுகர்வன நுகர்வதை ஒழித்தான். அருந்தவர்க்கு எளியன் அல்லன் - அரிய தவத்தையுடைய பெரியோரைப் பார்க்க விரும்பிற்றிலன், மறப்பொருள் மயங்கி - மறத்தால் பொருள்செய்து அறிவு மயங்கி, வையத்து அரசு இயல் மகிழ்ந்து - மண்ணுலகத்தே தன்னரசியலில் வரும் போகத்தால் மதங்கொண்டு, சென்றான் - ஒழுகியதுடன், இளையர் போகத்து இறப்பவும் இவறினன் - மகளிர் போகத்தில் அளவுகடந்த பற்றுள்ளம்கொண்டான், இறுதியின்கண் - முடிவிலும், சிறப்புடை மரணம் இல்லை - சான்றோர் புகழும் சிறப்புடைய சாவும் பெறானாயினன், செல்கதி என்கொல் - இவன் சென்ற கதிதான் யாதோ, என்றனர் - என்று தம்முட் பேசிக்கொள்வாராயினர் எ-று.
"சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம்"1 என்பவாகலின், அறமே பொருளீட்டற்கு நெறியாதல் பெற்றாம். அறத்தற் பொருளீட்டக் கருதாமையின், "அறப்பொருள் நுகர்தல் செல்லான்" என்றார். மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. அரிய தவத்தை யுடையவர், காட்சிக் கெளியனாய வழிப்போந்து அல்லன கடிந்து அறமாவன வுணர்த்தி நன்னெறிக்கண் உய்ப்பராதலின் அவரை ஏலாமை இவற்குக் கேடாயிற்று. மறவினை புரிந்து மக்கள் மனம் வருந்தக்கண்டு அருளாது அவர் பொருளை வவ்விப் பெறும் இன்பமே இன்பமாகக் கருதி யொழுகினமையின், "மறப்பொருள் மயங்கி" என்றும், இவ்வாறு நடாத்தும் அரசியற் போகத்தால் செருக்கி, தனக்கு உறுதி நாடாது கெட்டானென்பார், "அரசியல் மகிழ்ந்து" என்றும், கழிகாமம் "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது"2 என்பதனை யுணரானாயினா னென்றற்கு, "இறப்பவும் இளையர் போகத்து இவறினன்" என்றும், போர்ப் புறத்தே பகைவர் வாள்வாய்ப்படாது நஞ்சூட்டப் பட்டு இறந்தமையின், "சிறப்புடை மரண மில்லை" யென்றும், இவ்வியல்பினையுடையோன் இறந்தால் விண்புகான் என்று நூன்முகத்தால் அறிந்திருத்தலின், "செல்கதி யென்கொல்" என்றும் கூறி வருந்தினர்; "நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்"3 என்று சான்றோர் கூறுதல் காண்க.
அமிர்தமதி மிக்க துயருற்றாள்போல நடித்தொழுகுதல்.
உரை:- உழையர்தாமும்- அரசியற்சுற்றத்தாரும், எழில் நகரத்துளாரும் - அழகிய நகரத்துள்ள சான்றோர்களும்,
இனையன நினைவன - இவைபோல்வன பலவற்றை, நெஞ்சில் நினைந்து - மனத்தில் எண்ணி, நெகிழ்ந்தனர் புலம்பி வாட- உருகிப் புலம்பி வாட்ட மெய்தினாராக, கனைகழல் அரசன் தேவி - ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனுக்கு மனைவியாகிய அமிர்தமதி, கருதிய அது முடித்தாள் - தான் கருதிய கருத்தினை இனிது நிறைவேற்றிக்கொண்டாளாயினும், வலிதின் - வலிய, மனம் நனிமாழ்கி- மனம் மிக வருந்தினாள் போல் நடித்து, மைந்தனை வருக என்றாள். - மகனான யசோமதியை வருமாறு பணித்தாள். எ-று.
உழையோர், அரண்மனைக்கண் இருந்து, அரசப் பெருமக்கட்குக் குற்றேவல் புரியும் பணியாளர்; அரசர்க்கு ஆவன அறிந்து அந்தப்புரம் போந்து அறிவித்தொழுகும் அரசியற் சுற்றத்தார் முதலாயினார். இவர்கள் அரசர்களின் நெஞ்சறிந்தொழுகுபவ ராதலின், முதற்கண் கூறினார். நகரதுளாரெனப் பொதுப்படக் கூறினாரேனும் சிறப்புடைய சான்றோரே அரசனால் மதிக்கப் பெறுதலின், ஈண்டு அவரே கொள்ளப்பட்டனர். யசோதரனைக் "கனைகழ லரசன்" என்றார், அக்கழல்யாப்பு அவற்குச் சிறப்புடை மரணம் தாராது ஒழிந்தமை வற்புறுத்தற்கு. அது கருத்து; அஃதாவது, அரசனைக் கொன்று தான் விரும்பிய அட்டபங்கனோடு கள்ளக்க்காம வின்பம் துய்த்தல், யசோதரனாகிய கணவனும், மாமியாகிய சந்திரமதியும் இறப்பக்கண்டும் மனம் வருத்தமுறாமையின், உலகோர் இகழ்ச்சி யெண்ணி, ஆற் றாது புலம்புவாள் போல் வலிய நடிக்கின்றா ளென்றற்கு, "மனம்நனி வலிதின் மாழ்கி" யென்றார்.
--------
மகனை அரசனாகுக எனப் பணித்தல்
உரை:- நீ தனியையாகி இனையல் - மகனே, நீ தனித்தமையால் வருந்துதல் ஒழிக, இறைவனிற் பிரிந்தது - அரசனை விட்டு யாம் பிரிந்தது, என்கண் வினையினால் விளைவு - என்னிடத்துண்டாகிய தீவினையின் பயனாகும். மனத்து வெந்நோய் விடுத்திடு - நின் மனத்தில் உண்டாகிய மிக்க வருத்தத்தை விடுவாயாக, புனைமுடி கவித்து - பொன்னும் மணியும் கொண்டு புனைந்த முடியினை சூடிக்கொண்டு, பூமி பொதுக் கடிந்து - மண்ணுலகு நினக்கே யுரித்தாமாறு, ஆள்க - ஆட்சி புரிவாயாக, என்று - என்று சொல்லி விடுத்து, மறைபதிக்கு அமுதமாவாள் - இறந்த வேந்தனான யசோதரனுக்கு அமுதம்போல் இன்பந் தந்தவளான அமிர்தமதி, மனம் நனி மகிழ்ந்திருந்தாள்- தன் மனத்தே மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வரலானாள். எ -று.
தந்தை இறந்ததற்குரிய காரணத்தை யறியாது, பிரிவு நினைந்து தாய்முன் போந்த மகனுக்குத் தேறுதல் கூறலுற்றவள், "நீ தனியையாகி இனையல்" என்றாள். நீ இவ்விளமைப் போதில் நின் தந்தையை இழந்து தனித்தற்கு ஏதுவாகிய வினை என்பால் உண்டாகியது எனத் தான் செய்த தீவினையை ஒளியா துரைப்பாள், இறைவனிற் பிரிந்தது என்கண் வினையினால் விளைவு கண்டாய்" என்றாள், அதனை யுண்மை யுரையாகக் கொள்ளாது* துன்ப மிகுதியால் ஆற்றாதுரைக்கும் சொல்லென யசோமதியும் பிறரும் கொள்வரென அவள் நன்கறிவாளாதலின், கண்டாய், அசைநிலை. வலியார் மெலியார் அனைவர்க்கும் நிலம் பொது என்பதை விலக்கி, வலியுடையார்க்கே யுரித்தெனத் தனக்கே யுரித்தாமாறு ஆட்சி புரிதல் வேண்டு மென்றற்கு," பூமி பொதுக்கடிந் தாள்க" என்றாள். மறைபதி, யசோதரன்; கள்ளக்காதலனான அட்டபங்கனுக்கும் இயையும்.
------------
யசோமதி அரசாளுதல்
உரை:-வார் அணி முரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த முரசு முழங்க, மணிபுனை மகுடம் சூடி - மணிகளால் புனையப் பட்ட முடி யணிந்து, ஏர் அணி ஆரமார்பன் இசோமதி - அழகிய பூணார மணிந்த மார்பினை யுடையனாகிய யசோமதி, இறைமை எய்தி - அரசு முறை எய்தியும், சீரணி அடிகள் - சிறப்புப் பொருந்திய அடிகளாகிய அருகபரமேட்டி யுரைத் தருளிய, செல்வத் திருவறம் - துறக்க வின்பமும் வீடுபேறும் தரவல்ல அறத்தை, அருளல் செல்லான் - மேற்கொண்டு உயிர்க்கு அருளறத்தைச் செய்யாமல், மாதர் அணியாக - மகளிர் கூட்டமே தனக்கு அணியாகக் கொண்டு, உவகையங் கடலுள் ஆழ்ந்தான் - காமக்களிப்பாகிய கடற்குள் மூழ்கிக் கரையேற மாட்டாது அதனுள் அழுந்தினான். எ-று.
-----------
*உண்மையுரையாகக் கொள்வானால், " இறைவன் நிற்பிரிந்தது என் (நஞ்சூட்டிய) வினையினால் விளைவு" என்று கொள்ளற்பாலன்.
மணிக்குயிற்றிச் செய்த செம்பொன் முடியாதலின், "மணிபுனை மகுடம்" என்றார். ஏர், அழகு. அரசெய்திய பயன், அடிகள் உரைத்த அருளறம் மேற்கொண் டொழுகதலேயாக; யசோமதி அதனைச் செய்யாமையின், "திருவறம் அருளல் செல்லான்" என்றார். மெய்ம்மை சேர்ந்த புகழாதல் தோன்ற, "சீரணி அடிகள்" என்றும், அவர் அருளிய அறம், மறுமையில் துறக்கவின்பமும் அதன் முடிவில் வீடுபேறும் பயக்கும் சிறப்புடைத் தென்பார், "செல்வத் திருவறம்" என்றும் கூறினார். "சீரணி யடிகள்" என்று சிறப்பித்த வதனால், திருவறம் பூண்டார் இம்மையில் புகழ் பெறுதலும் உரைத்தவாறாம். அறத்தைச் "செய்த" லென்னாது, "அருளல்" என்றார், செய்கை உயிர்கட்குச் செய்யும் அருளே என்றற்கு. உயிர்க்கு அருள் செய்தலை அணியாகக் கொள்ளாது, மகளிர் கூட்டமே அணியாகக் கருதினா னென்பார், "மாதர் அணியாக" என்றார். ஓர், அசை. இனி, ஓரணியாக என்றே கொண்டு, ஒருதலையாக என்றுமாம். மாதர் தரும் காமவின்பத்திற்கு அடிமையாகி, அதனின்றும் தன்னை மீட்டுக் கொள்ளும் மதுகையின்றி மெலிந்தான் என்பார், "உவகையங்கடலுள் ஆழ்ந்தான்" என்றார்.
அபயருசி மாரிதத்தனுக்குக் கூறல்
உரை:- வனைமலர் மகுட மாரிதத்தனே - தொடுக்கப் பட்ட மலர்மாலையும் மணிமுடியு முடைய மாரிதத்தனே, ஆயின் - ஆராயுமிடத்து, வினையினாகும் இயல்பு - செய்யும் வினைகளினா லுண்டாகும் பயன், இனையன - இத்தன்மையனவாகும், இது தெரிதி - இதனை யறிவாயாக, துணைவராகும் இளையரின் விளையும் இன்பம் - மனைவி யென்றும் தாயென்றும் துணைசெய்பவராகிய மகளிரால் உண்டாகும் இன்பமும், இனையன - இக்கூறிய இயல்பினவாகும், தெளிவிலாதார் - தெளிந்த அறிவில்லாதார், அரசு செய்கை - அரசு புரியும்திறமும், இனையது - இத்தன்மைத்தாகும், இதுமதி - இதனை மனத்தே எண்ணுவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
ஒருவர் செய்யும் வினையியல்பு, அது விளைக்கும் பயனால் விளங்குதலின், "வினையினாகும் இயல்பு" என்றும், இதனைத் தெரிந்து உணராதவழி வினைகள் பெருகித் துன்பம் பயப்பித்தலின், "இது தெரிதி" என்றும், மனைவியாகிய அமிர்தமதியால் சிறப்பில் இறப்பும், தாயாகிய சந்திரமதியால் கொலைவினையும் எய்தக் காட்டியதனால், "துணைவராகும் இளையரின் விளையும் இன்பம்" என்றும், யசோமதி தெளிந்த அறிவிலனாதலின், மகளிராற் பெறும் காமவின்பமே பெரிதெனக் கருதி மயங்குதலைக் காட்டுதலின், "தெளிவிலார் இருநிலவரசு செய்கை இனையது" என்றும் கூறினான். "மதியிது" என்று மாரிதத்தற்குக் கூறியது, அவனை நன்னெறிக்கட் செலுத்தும் குறிப்பின னாதலை வற்புறுத்திற்று.
இரண்டாவது சருக்கம் முற்றிற்று.
---------------
-
யசோதர காவியம் உரையுடன்
ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்றாய யசோதர காவியம் மூலமும்
*
அண்ணமாலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் புலவர்
வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்
*
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை
தாரண - வைகாசி பதிப்புரிமை] [விலை ரூ. 3-0
கழக வெளியீடு-368.
[Copy-Right]
Tirunelveli & Madras, June 1944
Printed at The Model Press, Godown Street, G.T., Madras.
---------------
பதிப்புரை
யசோதரகாவியம் சமணசமய நூல். யசோதரன் என்னும் அவந்திநாட்டு மன்னன் வரலாறு கூறுவது. இந்நூல் முதன் முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு இத தமிழ் மொழியிற் சிறுகாப்பியமாக இயற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் இன்னார் என்பது புலப்படவில்லை. நூல் ஐந்து சருக்கங்களாக வகுக்கப்பட்டு 330-செய்யுட்களைப் பெற்றுள்ளது. செய்யுட்கள் எளிய நடையில் அமைந்துள்ளன.
நல்வினை தீவினைகளால் விளையும் விளைவுகளை இந்நூல் நன்கெடுத்துக் காட்டுகின்றது. இவ்வுண்மை புலப்படுத்துதல் நோக்கமாகவே யசோதரகாவியம் இயற்றப்பட்டுள்ளது. இது, வாழ்க்கையில் அறிந்தொழுகுதற்குரிய உண்மையே யாதலின், பயில்வார்க்கு இந்நூல் தக்க ஒழுக்கங்களைப் பயந்து நன்மையே விளைப்பதாகும்.
இதற்குமுன் யசோதரகாவியம் மூலமட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. உரை இல்லை. இப்போது புதிதாக இதற்கு உரையும் எழுதி, மூலமும் உரையுமாகக் கழகப் பதிப்பாக வெளிவருகின்றது. தமிழ்த்தாய்க்கு இஃதொரு புதிய அணிகலனாகும். இதுகாறும் உரையில்லாத தமிழ் நூல்கட்கெல்லாம் இங்ஙனமே புதிய உரைகள் கண்டு வெளியிட்டுத் தமிழ்மக்கட்கு அவற்றை நன்கு பயன்படச் செய்ய வேண்டுமென்பது கழகத்தின் பேரார்வம். தமிழ்த்தாய் விளங்கத், தமிழ்மக்களும் விளங்குவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னணித் தமிழாசிரியரும், சிலப்பதிகார முதலிய பெருங்காப்பியங்களின் சுருக்கங்களும் ஆராய்ச்சிகளும் முன்னர் வகுத்துதவியவருமாகிய திருவாளர் வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இந்நூலின் உரையாசிரியராவர். யசோதர காவியத்தின் பலபடிகளை ஒப்புநோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரையும் அவர் வகுத்துள்ளார். உரை தெளிவான பதவுரையோடும், விளக்கவுரையோடும் இயன்றுள்ளது. உரிய பாடவேறுபாடுகளும், மேற்கோட் குறிப்புக்கள் முதலியனவும் அவ்வப்பக்கங்களில் அடிக்குறிப்புகளாகக் காட்டப்பெற் றுள்ளன. இறுதியிற் பாட்டு முதற்குறிப் பகராதியும் இணைக்கப்பெற்றிருக்கின்றது. நூலின் முகப்பில், உரையாசிரியர், விளக்கமான ஆராய்ச்சி முன்னுரையொன்று தந்துள்ளார். நூல் கற்பார்க்கு இவையெல்லாம் பெரிதும் உதவும். இத்தனை நலங்கெழும இந்நூல் வெளிவருதற்கு உதவிபுரிந்த உரையாசிரியர் பிள்ளையவர்கட்குக் கழகத்தார் தமது நன்றியறிவினைப் புலப்படுத்திக்கொள்கின்றனர்.
தமிழ்த்தாய்க்குப் புதிய புதிய அணிகலன்களை இங்ஙன மெல்லாம் அணிந்துவருமாறு, தோன்றாத் துணையாயிருந்து கழகத்துக்கு அருள்புரிந்துவரும் முழுமுதற் செம்பொருளுக்குக் கழகத்தின் நெஞ்சங்கனிந்த வணக்கம் உரித்தாகின்றது. தமிழ்மக்கட்கு இந்நூலுரை நன்கு பயன்படுமென்று நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
------------
செய்யுள் | |
முன்னுரை, காப்பு | 1 - 4 |
முதலாவது சருக்கம் | 5-73 |
இரண்டாவது சருக்கம் | 74-160 |
மூன்றாவது சருக்கம் | 161-226 | நான்காவது சருக்கம் | 227-261 |
ஐந்தாவது சருக்கம் | 262-330 |
செய்யுள் முதற்குறிப்பு அகராதி | 324 |
யசோதரகாவியம்
முன்னுரை
தமிழ் இலக்கியத்துறையில் வியந்து பேசப்படும் காவியங்கள் பெருங்காப்பியம், சிறுகாப்பியமென இருவகைப்பட்டு ஒவ்வொன்றும் ஐயைந்தாக விரித்துரைக்கப்படும். அவற்றுள் சிறுகாப்பியங்கள் இவ் யசோதரகாவிய முதலாக ஐந்தாகும். அவை, யசோதர காவியம், சூளாமணி, உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், நீலகேசியென விரியும். இவற்றுள் நாககுமாரகாவிய மொழிய ஏனை நான்கும் வெளியாகியுள்ளன.
யசோதரகாவியம் சிறுகாப்பிய வகையுள் முதற்கண் வைத்து மொழியப்படுவது. எனினும், இவ்வகையுள் வைத்துக் கூறப்படும் சூளாமணி, நீலகேசி என்ற இரண்டையும் நோக்க, இஃது அத் துணை இலக்கிய நலம் உடையதாக இல்லை. ஆயினும் உதயண குமாரகாவியத்தினும் செய்யுட்பொலிவும் பொருணலமும் மிகவுடையதென்பது ஒருதலை.
இவ் யசோதரகாவியத்தின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இதன்கண் அடங்கிய யசோதரன் முதலாயினார் வரலாறு தமிழில் வேறு எந்நூலினும் காணப்படவில்லை. வடமொழிக்கண் இவ் வரலாறு பல ஆசிரியர்களால் எடுத்துக்கூறப்படுகிறது.
வடநூல்களை நோக்கின், தமிழ்மொழியினும் வடமொழிக்குச் சமண் சான்றோர் செய்துள்ள தொண்டுகள் மிகப் பலவாகும். அவற்றை ஆராய்ச்சியாளர் நான்கு வகைப்படுத்து முறையே பிரத மானுயோகம், கரணானுயோகம், திரவியானுயோகம், சரணானு யோகம் என்று கூறுவர். பிரதமானு யோகத்தில் பல்வகைப் புராணங்களும் அடங்குகின்றன. அவற்றுள், பத்மபுராணம், அரிவம்ச புராணம், மகாபுராணம், உத்தரபுராணம் முதலாயின சிறப் புடையனவாகும்.
மகாபுராணமென்பது சமண் சமயத்து அறுபத்து மூன்று பெருமக்களைப்பற்றிக் கூறுவதாகும். இந்த *அறுபத்து மூவரையும் தீர்த்தகரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர். பிரதி வாசுதேவர் ஒன்பதின்மர் என வகுத்துரைப்பர். இவ்வாறு தொகை வகை விரியால் அறுபத்து மூவராயினும் ஆள் வகையில் அறுபதின்மரே யாகின்றனர்.
இவர்கள் வரலாறுகள் சுவேதாம்பரிகளால் சாரித்திரம் என்று கூறப்படுமாயினும், திகம்பரிகளால் புராணமென்றே வழங்கப்படு கின்றன.
மகாபுராணம் ஆருகதமாபுராணமென்றும் ஆதிபுராணமென் றும் வழங்குவதுண்டு. இதன்கண் நாற்பத்தேழு புராணங்கள் உள்ளன. இவற்றுள் முதல் நாற்பத்திரண்டினை ஜினசேனரும், ஏனை ஐந்தினை அவர் மாணவர் குணபத்திரரும் எழுதினர். இவர் கள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டென்பர். இனி, பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்த ரென்பவரால் ஒரு மகாபுராணமும், பதினோராம் நூற்றாண்டில் மல்லிசேன ரென்பவரால் ஒரு மகாபுராணமும் எழுதப் பட்டிருக்கின்றன. இவருள் ஒருவரான ஜினசேனர் வேறு என்றும், அரிவம்சபுராணம் பாடிய ஜினசேனர் வேறு என்றும் † ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.
இனி, மகாபுராணத்தை யடுத்து நிற்கும் உத்தர புராணத்தை ஜினசேனர்க்கு மாணவராகிய குணபத்திரர் ஒருவரே எழுதினார். இவரைக் குணபத்திர முனிவரென்றும் குணபர முனிவர் என்றும் கூறுப. இப் புராணத்தின் முதற்கண் இவ் யசோதரகாவிய நிகழ்ச்சி கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வடநூற்கண் கூறப்பட்ட முறையே தமிழில் கூறப்படவில்லை. கூறப்பட்டிருப்பின், இந் நிகழ்ச்சி கற்றோர் நினைவில் சிறந்த இடம் பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் வரலாறுகள் மகாபுராண மெனப்படு வது நோக்கியும், தமிழில் திருத்தொண்டர்புராணம் பெரியபுராண மெனப்படுவது பற்றியும் இவர்களுடன் அறுபான்மும்மை நாயன் மார்களை ஒப்புநோக்கி மயங்குதல் நேரிதன்று.
- ---------
† Hirlal Catalogue pp. xxiii. 644, 651.
சமண்சான்றோருள் மிகப்பலர் இந்நிகழ்ச்சியில் பேரீடுபாடு உடையராய் இருக்கின்றனர். உத்தரபுராணத்திற் காணப்படும் இக்கதை பல சான்றோர்களால் தனித்தனி நூலாக உரைக்கப்பட்டிருக்கிறது. சோமதேவசூரி யென்பவரால் யசஸ்திலகம் என்ற பெயரால் சம்புடையிலும், வாதிராசசூரி யென்பவரால் யசோதர சரிதம் என்ற பெயராலும், ஹரிபத்திர ரென்பவராலும், புட்பதந்த ரென்பவ ராலும் இவ் யசோதரகாவியம் வடமொழியில் அழகுறக் கூறப்பட்டுள்ளது. இவையாவும் எழுந்த காலம் பத்தாம் நூற்றாண்டாகும்.
இவ் வடநூல்களுட் காணப்படும் யசோதரகாவிய *நிகழ்ச்சிச்கும் தமிழிற் காணப்படும் காவிய நிகழ்ச்சிக்கும் வேறுபாடு பெரிதாக இருக்கின்றது. இதன்கண்வரும் மாரிதத்தன் வரலாற்றை யசஸ் திலகம் என்ற நூலின்கண் சோமதேவசூரி கூறும் முறையே வடித்துத் தருகின்றோம்.
மாரிதத்தன் என்பவன் இளமையிலே அரசு மேற்கொண்டு இன்பத்துறையில் இறப்பவும் எளியனாகின்றான். ஒருநாள் புரோகிதனுரைத்த உரையை மேற்கொண்டு சண்டமாரி யென்னும் குல தேவதைக்கு இரட்டையிரட்டையாக உயிர்ப்பலியிடத் தொடங்குகின்றான். தான் இரட்டை நரபலியிட நினைந்து, வீரரைச் செலுத்தி மக்களுள் இரட்டையராவார் இருவரைக் கொணருமாறு பணிக்க, அங்ஙனமே அவர் சென்று சிறுவனும் சிறுமியுமாகிய இரட்டையர் இருவரைக் கொணர்கின்றனர். அவ்விருவரும் மாரிதத்த னுடைய தங்கையின் மக்களாய்ப் பிறந்து இளமையிலே துறவு பூண்டவர். இச்செய்தியை மாரிதத்தன் கேள்வியுற்றிருந்தானே யன்றி நேரிற் கண்டதிலன். இப்போது நேரிற் கண்டதும் ஒரு கால் இவ்விரட்டையர் தன் தங்கையின் மக்களோ என்றெண்ணி அவர்தம் வரலாற்றினை மாரிதத்தன் கேட்கின்றான். அவர்கள் தம் முடைய பண்டைப் பிறவிகளின் வகையும் அவ்வவற்றின் காரணங் களையும் இடையிடையே சைன வறங்களையும் எடுத்துக் கூறுமுகத் தால் தாம் அவன் உடன்பிறந்தாள் மக்களே என்பது விளங்கக் கூறுகின்றனர். மாரிதத்தன் அதுகேட்டு மனம் திருந்தித் துறவு மேற்கொண்டொழிகின்றான்.
இம் மாரிதத்தன் ஓதயநாட் டரச னென்றும், சண்டமாரி தேவதைக்குச் செய்யவேண்டிய பலியூட்டினை நகரத்தவர் கூறக் கேட்டுச் செய்யலுற்றா னென்றும் இத் தமிழ்நூல் கூறுகின்றதேயன்றி,அபயருசியும் அபயமதியுமாகிய இரட்டையர் அவன் உடன் பிறந்தாள் மக்களே என்று கூறுகின்றிலது.
இனி,மேலே கூறிய உத்ரபுராணத்தை முதலாகக்கொண் டும், ஹரிபத்திரர் எழுதிய வரலாற்றைப் பின்பற்றியும் வாதிராசர் என்பார் யசோதர சரிதத்தை மிக அழகு திகழக் கூறியுள்ளார். முதனூலாகிய உத்தரபுராணத்துக்கும், பின்னூலாகிய யசோதர சரித காவியங்கட்கும் விளக்கமும் வழிமுறையும் நிகழ்ச்சிநிரலும் வகுத்தும் தொகுத்தும் கூறிய பெருமை ஹரிபத்திரருக் குண்டு. அவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லிருந்தவராவர். அவர் கூறும் யசோதர வரலாற்றை ஈண்டு வடித்துத் தருகின்றாம்.
யசோதர வேந்தன் ஒருநாள் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்ணாடியிற் கண்டு துறவு பூணத் துணிகின் றான். ஒருநாள் இரவு தன் மனைவி கூனிய முதுகுடைய காவற் காரனொருவனுடன் தீநட்புக் கொண்டு கள்ளக்காமக் களியாட் டில் மயங்கி யொழுகுவதோடு அவனால் அலக்கழிக்கப்படவும் காண் கின்றான். அவனெஞ்சிற் பிறந்த துறவுணர்வு திண்ணிதாகிறது. தன் துறவுக் குரிய காரணத்தைத் தன் தாயிடம் வெளிப்படக் கூற நாணித் தீக்கனாவொன்றின்மேல்வைத் துரைக்கின்றான். அதன் உண்மைக் குறிப்புணரமாட்டாத அவன் தாய், தீக்கனாவின் விளைவைத் தவிர்த்தற்குத் துறவிவேடம் தாங்கிக் குலதேவதைக்கு உயிர்ப்பலியிட்டு வணங்குமாறு வற்புறுத்துகின்றாள். அதனைச் செய் தற்கு அவன் விரும்புகின்றிலனாயினும், வேறு செய்வகை யறியாது திகைத்தவன், ஒருவாறு தெளிந்து, மாவினாற் கோழியொன்று செய்து பலியிட்டு அம் மாவினை யுண்டொழிகின்றான். அவ்வினையின் பயனாக அவனும் அவன் தாயும் இறந்து, மயில், மீன், ஆடு, கோழி முதலிய பிறப்புக்கள் பிறந்து துன்புறுகின்றனர். இறுதியில் கோழிப்பிறப்பில் முனிவர் ஒருவர் உரைத்த சைனவறங் கேட்டு அரசனொருவனுக்கு ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மக்களாகப் பிறக்கின்றனர். இவர்களாலே மாரிதத்தன் சைனதருமநெறிபற்றி உய்திபெறுகின்றான்.
இத் தமிழ்நூல் யசோதரற்குத் தந்தை அசோக னென்றும் அவன்தான் தன்தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்டு துறவு பூண்டானென்றும் யசோதரன் தாய் பெயர் சந்திரமதி யென்றும் மனைவி அமிழ்தமதியென்றும் அமிழ்தமதி கள்ள நட்புற்றுக் காமக் களிப்பில் நெறிதிறம்பி வழுவுற்றது யானைப்பாகனொருவனுட னென்றும் இறுதியில் யசோதரனும் சந்திரமதியும் அபயருசியும் அபய மதியு மென்ற இரட்டையராய்ப் பிறந்தது யசோதரன் மகனான யசோமதி யென்பான் மனைவி வயிற்றி லென்றும் கூறுகின்றது.
இனி, இத் தமிழ்நூலில் வடநூலுட் காணப்படும் வேறு நிகழ்ச்சிகள் காணப்படவில்லை. அவற்றைப் படிப்பவர் தெரிந்து கோடற்பொருட்டு ஈண்டுக் குறிக்கின்றாம்.
1. விலாசவதி யென்பாளொருத்தி சனற்குமாரனென்றொரு காளைபால் உழுவலன்புகொண்டு காதற்காமவின்பந் துய்த்து மகிழ்ச்சி யெய்த, தன்பால் உண்மை யன்பு செலுத்திய தாரணன் என்பானை வஞ்சித்து, ஆறலைப்போன் ஒருவன்பால் அழிகாமங்கொண்டு, இலக் குமி யென்பவள் அலைந்து துன்புற்ற செய்தி ஒன்று.
2. தான் செய்த கொலைவினைக் கீடாகத் தன் மனையிலே பன்றியாகப் பிறந்து தன் சிரார்த்தத்துக்கே தன் வீட்டுச் சமையற் காரனால் கொலை செய்யப்பட்ட வணிகனொருவன், பின் நாயாய்ப் பிறந்து, பன்றியாயிருந்தபோது தன்னைக் கொன்ற மடையனைக் கடிக்காதுவிட்ட நல்வினைப்பயனால் தன் மகற்கு மகனாய்த் தோன்றி, தன்மகனையும் மருகியையும் இன்ன முறைச்சொல்லால் அழைப்ப தென்றறியாது மூங்கையாய்க்கிடந்து, சைனமுனிவரால் அறங் கூறப்பட்ட செய்தி ஒன்று.
3. முன்னைப்பிறப்பில் தன் தோழிக்குக் காமக்கள்ளருத் திய குற்றத்திற் கீடாய் யானை, குரங்கு, பூனை முதலிய பல பிறவி யெடுத்து முடிவில் ஒரு சண்டாளப் பெண்ணாய்ப் பிறந்து உறவின ரால் கைவிடப்பட்டுக் காட்டில்அலைந்து சைனமுனிவர் அறங் கூறக்கேட்டு மறுபிறப்பில் வேந்தனொருவன் மனையிற் பிறந்து கோசலநாட்டு வேந்தனுக்கு மனையாட்டியாகிய சுசங்கதை யென் பவள், பெண்பேயொன்றின் சூழ்ச்சியால் அவனால் துறக்கப்பட்டுக் காடொன்றை யடைந்து முனிவர்பால் சைனவறங்கேட்டிருப்ப, கோசல வேந்தன் சின்னாட்குப் பின்பு உண்மையுணர்ந்து அவளைத் தேடிக்கண்டு, தானும் அறங்கேட்டு உய்திபெற்ற செய்தி ஒன்று.
இத் தமிழ்நூலாசிரியர் இந்நிகழ்ச்சிகளை இக் காவியத்தின்கண் குறிக்கா தொழிந்ததற்குக் காரணம் புலப்படவில்லை.
புட்பதந்த ரெழுதிய யசோதர சரிதத்தின்கண் கூறும் நிகழ்ச்சியைப் பின்பற்றியே இத்தமிழ் நூல் எழுதப்பட்டிருக்கு மென்று சில அறிஞர் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக,
- --------
*"புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத் திட்பமாய்ச் செந்தமிழிற் செப்பினாள்-நட்புடையார் நண்ணா ரிவரென்ன நாடாக் கொடைக்கையார் வெண்ணாவ லூருடையார் வேள்"
என வரும் இவ்வெண்பாவைக் காட்டுவர்.
புட்பதந்தர் என்பவர் கி.பி.965-ல் மகாபுராணம் எழுதியவர். இதன்கண் ஆதிபுராணம் முப்பத்தேழு பகுதிகளாகவும் உத்தர புராணம் அறுபத்தைந்து பகுதிகளாகவும் உள்ளனவென்றும் இவரே நாககுமார சரிதத்தையும் யசோதர சரிதத்தையும் வட மொழியில் எழுதினாரென்றும் கூறுப. இவ்வெண்பாவில் கூறப் படும் "பொருள்சேர் கதை" நாககுமார காவிய மென்றாதல் யசோதரகாவிய மென்றாதல் துணியாவாறு நிற்கிறது. கேள்விவழி யசோதர காவியத்தைச் சுட்டிநிற்பது கொண்டு "வெண்ணாவ லூருடையார் வேள்" என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டதென்று ஒருவாறு கொள்ளலாம். இவருடைய இயற்பெயரும் பிறவும் தெரிய வில்லை. சமண் சமயச் சான்றோர் சிலரை உசாவியதில் கன்னட நாட்டில்தான் இவ்விருநூல்களும் சிறப்பாகப் பரவியிருந்தன என் கின்றனர்.
இனி, இந் நூலாசிரியரைப்பற்றி வேறொன்றும் தெரிதற்கு வழி இன்றுகாறும் ஒன்றும் பிறந்திலதாயினும் இந் நூற் புணர்ப்புக் கண் இவரது அறிவு நுழைந்து செய்திருக்கும் வேலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
முதற்கண்,வேந்தனான மாரிதத்தன் சண்டமாரி தேவதைக் குப் பலியிடக்கருதும் கருத்தினை மேற்கொள்வதற்கு வசந்தகாலத் தையும் மக்கள் மனப்பான்மையையும் வாயிலாகப் புணர்க்கின்றார். சண்டமருகன் இரட்டையரைக் கொணர்கையில், அவர்கள் நினைவு கருவியாக நால்வகைக்கதியினும் உயிர்கள் பிறந்து வளர்ந்து துன் புறும் திறத்தை வெளிப்படுக்கின்றார். வேந்தன் இரட்டையரைக் கொல்லாது விடுத்து அவர்கள் வரலாற்றைக் கேட்ட விழைவு கொள் ளற்கும் கேட்டற்கும் ஏதுவாக, அவர்களை அரசனை வாழ்த்துக என வற்புறுப்பதும், அவர்கள் புன்முறுவல் பூத்தலும் விதந்து கூறப்படுகின்றன.
--------
*1930 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் 17 திரு. கா. நமச்சிவாய முதலியார் காவிரிப்பாக்கம் திரு. வச்சிரவேல் முதலியார் பெரு மனையில் தங்கியிருந்தபோது இதைச் சொன்னார்கள். வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் பிரதியிலும் இது காணப்படுகிறது.
இவ்வாறே, யசோதரன் வரலாற்றிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக் கும் தக்க காரணத்தை முன்னிறுத்தி யுரைக்கும் திறம் மிக்க இன்பமாக வுளது. வடநூல்களில் யசோதரன் துறவுமேற்கோடற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அவன் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் காண்பது; இரண்டாவது அவன் மனைவி வேறொருவன்பால் கள்ளக்காம நட்புற்றிருத்தலை யறி வது. ஆனால் இத்தமிழ்க்காவியமுடையார் மயிர்நரைப்புக் கண்டு துறவுமேற்கொள்ளும் செய்தியை யசோதரன் தந்தையான அசோ கன் துறவுக்குக் காரணமாகப் புணர்த்துவது மிக்க நயமாகவுளது. ஒருவன் துறவு பூண்பதற்குரிய காரணங்களுள் தன் மனைவியின் தீ யொழுக்கமே போதிய காரணமாதலின் அதற்குமேலும் ஒருகார ணம் மிகையாகும். அசோகன் துறவு பூண்பதற்கு வேறுதக்க காரணம் கிடையாமையின் அதனை அவன்மே லேற்றியது மிகவும் பொருத்தமாகவே யுளது.
இனி, யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் இழிந்தானொருவனுடன் கள்ளக்காம நட்புற்றதற்குக் காரணம் காட்டவேண்டி இசையினைப் பயன் கொள்கின்றார். சமண் சமயத் தவர் இசையும் நாடகமும் காமத்தை விளைவிப்பன என்னும் கருத் துடையரென்றும் அதனால் அவர் அவற்றை யூக்காது புறக்கணித் தனரென்றும் அறிஞர் கூறுப. அதற்குச் சான்றுண்டோ எனச் சமண் சமய முனிவர்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுள் சீவக சிந்தாமணி இசையும் நாடகமும் காமப்பைங்கூழை வளர்க்கும் துணைகள் என்ற கருத்துப்பட "கிளைநரம் பிசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன்" (இலக்கணை, 221) என்று கூறுவதைக் காண்கின்றோம், இவ்வாறே அவர்கள் செய் துள்ள ஏனை நூல்களிலும் காமக்களிப்பு நிகழுமிடங்கடோறும் இசை நாடகங்கள் மிகவும் தொடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாற் றால், இந்நூலாசிரியரும், தன் கணவனுடன் கூடி இன்புற்றிருந்த அமிழ்தமதி அக்கூட்டத்தின் பயனாய் மகனொருவனைப் பெற்றாளா யினும், அமையாது தன்னின் மிகமிக இழிந்தானொருவனைக் கூடிக் கள்ளத் தீ யொழுக்கம் மேற்கோடற்குக் காரணமாக இசையினைக் கொணர்ந்து நிறுத்துகின்றார். அக் கீழ்மகன் அட்டபங்கன் என்னும் யானைப்பாகனாவான். அவன் இசைத்துறையில் மிக்க வன்மை யுடையனென்றற்குப் போதிய ஆதரவில்லை. ஆயினும் அவன் பாடிய மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை அமிழ்தமதியின் நெஞ்சையுருக்கி நெறியல்லா நெறியில் செலுத்தி விடுவதாக இந்நூலாசிரியர் அறிவிக் கின்றார். அத் தீயொழுக்கத்தின் விளைவாக அவள் தன் கணவனை யும் மாமியான சந்திரமதியையும் நஞ்சூட்டிக் கொலைபுரிந்துவிடுகின் றாள். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க காரணங்களை முன் னிறுத்தி இந்நூலை யமைத்திருப்பது நூற்புணர்ப்பு நெறிக்கு ஏற்ற சிறப்பை நல்குகிறது.
இனி, இந்நூலின் செய்யுணடையை நோக்கின், இஃது ஏனைச் சிந்தாமணி சூளாமணி முதலியவற்றைப் போல அத்துணை நலமமைந்தில்லை யென்பதை முன்பே கூறினாம். ஆயினும், இந் நூற்செய்யுட்களில் சீவகசிந்தாமணியிலும் மேருமந்தரபுராணத்தி லும் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களுமே பெரிதும் பயில வழங்குகின்றன. அவை அவ்வவற்றிற்குரிய உரை விளக்கத்தே காட்டப்பட்டுள்ளன; இதனால், இந்நூலாசிரியர் இவ்விருநூல்களை யும் நன்குபடித்து, உயர்நிலை யின்றெனினும் நடுநிலையான தமி ழறிவு பெற்றவரென்று அறிகின்றாம்.
இனி, இந்நூலாசிரியர் இந்நூலைத் தாம் பாடுதற்குக்கொண்ட நோக்கத்தை நன்கு விளங்கவுரைப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். அறிவுடையனெவனும் எதைச்செய்யினும் அதனைச் செய்தற்குச் சிறப்பாகவுரிய நோக்கமொன் றுடையனாவனென்பது உண்மை. அதனை விளங்க வுரைப்பது அறிவுடைமையின் பயனாகும்.
இந்நெறியினைப் பல நூற்றாண்டுகட்குமுன் எடுத்தோதித் தெருட் டிய பெருந்தகை ஆசிரியர் இளங்கோவடிகளாவர். அவர்க்குப்பின் மிகச்சிலரே இதனைப் பின்பற்றியவர். அவருள் இந்நூலாசிரியரும் ஒருவர் என்னலாம். புண்ணியம் போகம் விளைக்கும் என்றும், கொலைவினையாகிய பாவம் துன்பம் எய்துவிக்கும் என்றும் விளக்கு வது தமது நோக்கமென்பார் "மருவு வெவ்வினை வாயின் மறுத் துடன், பொருவில் புண்ணியம் போகப் புணர்ப்பதும், வெருவு செய் யும் வினைப்பயன் இற்றெனத் தெரிவு றுப்பதும் செப்புதலுற்றதே" (4) என்று கூறுகின்றார்.
இனி, இந்நூலாசிரியரால் பழிதூற்றப்பட்ட இசையினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற்பாலதொன்று. இசை யென்பது வழுத்த வாயும் கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப்பொருளாகும். உடலுட்சென்றியங்கும் காற்று மிடற்றுவழியாக வெளிப்படுக்கப்படுங்கால் உண்டாகும் ஓசையே இதற்கு அடிப்படை. ஓசை கொண்டும் கொள்ளாமலும் வெளிப்படுவது காற்றுக்கு இயல்பாயினும் ஓசைகொண்டு இனிமை தழுவி நீண்டெழுப்பப்படுகிறபோதுதான் இசையுண்டாகிறது. இவ் வாறு உண்டாகும் இசை உயிர்கட்கு இன்றியமையாதது என்பர் அறி ஞர். நிலவுலக வாழ்விற்கு நான்கு பொருள்கள் இன்றியமையாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை யென் பனவாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர் 1 கூறுகின் றார். புலவர் மனமுவந்து இனிமை யமைந்த சொல்லோசை யமை யத் தொடுத்துப் பாடப்படும் பான்மையுடைமைபற்றியன்றோ ஒரு வனது புகழ்க்கும் இசையென்பது பெயராகப் பண்டைப் பெருமக்க ளால் வகுக்கப்படுவதாயிற்று. புகழ் விரும்பாதவர் இவ்வுலகத்தில் எக்காலத்தும் இருந்ததில்லையெனின், இசையை விரும்பாதவர் எவரும் இரார். அவ்வாறும் ஒருவர் இருப்பின் அவரை எவரும் விரும்பலாகாது என மேனாட்டுச் செகப்பிரியர் கூறுவது மிகவும் பொருத்தமாகவேயுளது.
இவ்விசை உடலோடு கூடிவாழும் மக்கட்கு மிக இன்றியமை யாததென்பது மேற்கூறியவற்றால் தெளியப்படும். இதற்கு வேறும் ஒருகாரணம் உண்டு. நாடோறும் ஓய்வின்றி யுழைக்கும் எந்திர மொன்று உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல, உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சியும் தூய்மை யில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக் ககற்றப்படுவது போன மனமும் நாடோறும் தூய்மைசெய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற் படியும் தீயவுணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை எழுப்புவதாகும். "ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை" என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந்தருளினர். சென்ற நூற்றாண்டில் சருமனி யில் வாழ்ந்த ஆவர்பாச் (Auerbach) என்பவர் மனத்திற் படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை 2 யென்று கூறினர். இவ்வாறே அறிஞர் பலரும் சொல்லியிருக்க இதனைக் காமம் வளர்க்கும் தூய்மையில் பொருளாகக் கருதிக் கூறுவது குற்ற மென்பது ஒருதலை. மக்களுயிர்க்குச் சீரிய துணையாமெனக் கருதிப் பேணப்பெற்ற விஞ்ஞானவுணர்வு இந்நாளில் அம் மக்களுயிர்க்கே இறுதிவிளைக்கும் கூற்றாயிற்றென்று மெய்யாக அறிகின்றோம். அதனால், அதனை அறவே விலக்குவது அறமாகாதவாறுபோல இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து அதனை விலக்குவது அறமன்று
- ----
(1) Music is the fourth great material want of our nature,-first food, then Raiment, then shelter, then Music"-N.Bovee.
(2) Music washes away from the soul the dust of every day life-Auerbach.
இவ்விசையின்பத்தில் ஈடுபட்டு இன்புறும் உள்ளம் எப்போதும் உணர்வுத் தொழிலைச் செய்வது பற்றியும், இசையானது உள்ளத் தைத் தூய்மைசெய்து அமைதிநிலவச் செய்வது பற்றியும் பண்டை நாளை அறிஞர் கடவுளுணர்வை இசைவாயிலாகப் புணர்த்துவது சிறப்பெனக் கருதுவாராயினர். இசைப்பாட்டுக்கள் பலவும் கடவு ளுணர்வு கொளுத்தும் மொழிகளாகவே இருக்கத் தலைப்பட்டன. இவ்வுணர்வு தலைசிறந்தகாலம் தமிழ் நாட்டில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளாகும். சைவ வைணவப் பெரியார் பலரும் இசைகலந்த இயற்பாட்டுக்கள் பல யாத்து இசைக்கத் தொடங்கினர். இதனால் நாட்டில் சமயக்கொள்கைகள் மிக விரைவாகப் பரவி வேரூன்றி விட்டன. இற்றை நாளிலும் வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த அரசிலுணர்ச்சிகளும் அரசியற் கட்சிக் கொள்கைகளும் இனிய இசைப்பாட்டுக்கள் வாயிலாக நாட்டில் நன்கு பரவி நிற்பதைக் காண்கின்றோ மன்றோ? இசையின்பால் இத்தகைய இயல்பு இருத்தல்பற்றியே மேனாட்டவரும் கடவுட் கொள்கை பரவி நிலைபெறுதற்கு இசையே கருவியெனக் கருதி அத னைப் போற்றிப் பெருமை செய்வாராயினர். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்டின் லூதர் என்பவர், சமய வுணர்வு களுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத்தகுவது இசையே யென்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள் தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற்கருஞ் செயல்களைச் செய்தனர்* என்றும் கூறுவாராயினர்.
----
*"Next to theology I give to music the highest place and honour. And we see low David and all the saints have wrought their godly thoughts into verse, rhyme and song"- M.Luther.
இவ்வகையால் ஞானசம்பந்தர் முதலாயினாரும் "கோழை மிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால், எழை யடியா ரவர்கள் யாவை சொன சொல் மகிழு மீசனிடமாம்" என்றும் "செந்தமிழ்க்கீதமும் சீரினால் இசைதர" என்றும் இசை கலந்த தமிழ்ப்பாட்டுக்களால், கடவுளுணர்வு ஒழுக்கங்களை நாட்டில் பரப் பினாராக, அது சமண் சமய முனிவர்கள் மேற்கொண்டிருந்த சமயத் தொண்டிற்கு இடையூறாய் இருந்ததுபற்றி இசையினை இவ்வாறு புறக்கணித் துரைத்தனரோ என எண்ணுதற்கிட முண்டாகிறது. மேலும், இம்முனிவர்கள் கருதுமாறு இசை மக்களைக் காமத்துறை யில் எளியராமாறு செய்திருக்குமாயின் பண்டைத் தமிழ்மக்கள் புலவரைப்பேணித் தமிழ் இயலையும், பாணரைப் பேணித் தமிசையை யும், கூத்தரைப் பேணித் தமிழ் நாடகத்தையும் போற்றிப் புரந் திருக்கமாட்டாரன்றோ?
இனி, இவ்விசையில் மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை வாயி லாக யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் அட்டபங் கன் என்னும் கயவன்பால் கழிகாமம் கொள்கின்றாள் என்று இந் நூலாசிரியர் கூறுகின்றார். இப் பண், கான்பாஸ்கரம் என்ற நூலி லும், சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூலிலும் காணப்படு கிறது. இவை கருநாடக சங்கீத நூல்களாதலால் இப்பண்ணும் கருநாடக சங்கீதத்தைச் சார்ந்தது என்பது விளங்கும். மேலும், சம்பிரதாய பிரதர்சனி யெழுதிய சுப்பராம தீக்ஷிதர் அவர்கள் இது வேங்கடமதி யென்பார் எழுதிய சதுர்த்தண்டி பிரகாசிகை யில் உள்ளது என்று கூறுகின்றனர். இதன் பிறப்பு மாயா மாளவ கௌளம் என்றும் "சாடவசம்பூர்ண ராகம்" என்றும் இதன் ஆரோசை சுரம் ச, ரி, க, ம, ப, நி, ச (பண்ணியல்) என்றும், அமரோசை ச, நி, த, ப, ம, க, ரி, ச (பண்) என்றும் பதினைந்தாவது மேளகர்த்தாவென்றும் கானபாஸ்கரம் என்ற நூல் கூறுகின்றது. இதற்கு இசை நிரவல் நெறி (இராக சஞ்சாரி) சுப்பராம தீக்ஷிதராலும் "வாசுதேவ" என்று தொடங்கும் கீர்த்தனை யொன்று முத்துசாமி தீக்ஷிதராலும் செய்யப்பட்டுள் ளன. இத்துணையும் கூறியவாற்றால் இம் மாளவபஞ்சமம் என்னும் பண், கருநாடக சங்கீதத்துள் அடங்;கியுள்ளதென்பது தெளிவா கிறது.
இனி, கருநாடக சங்கீத நூல்களுள் சதுர்த்தண்டி பிரகாசி கைக்கு முற்பட்ட சங்கீத சூரியோதயம், சாரங்கதரபத்ததி முதலிய நூல்களில் இப் பண் காணப்படாமையால் இந்நூலாசிரியர் காலம் முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பது துணிவாகிறது
"இனி, இக் கருநாடக சங்கீதத்தைப்பற்றி ஒன்று ஈண்டுக் கூறுவது மிகையாகாது. இந்நாளில் இசை வரலாறு காணாத சிலர் கருநாடக சங்கீதமென்பது தமிழ் நாட்டுத் தண்டமிழ்க்குரிய தல்லா தது போலப் பிறழவுணர்ந்து தவறான கருத்துக்களைப் பிதற்றித் திரி கின்றனர். புதினமுடையோமெனத் தருக்கிப் பொய் புனைந்தும், பதவி செல்வாக்கினைப் பயன்படுத்தியும் தமிழ் வளர்ச்சியில் அழுக் காறுற்றும் அவர் கூறுவன அத்தனையும் பொருளில் வறுங்கூற்று என்பதைச் சிறிது காட்டுதும்.
கருநாடக சங்கீதத்துக்கு ஆதரவாகக் கூறப்படும் வடமொழி முதலிய தமிழல்லாத பிறமொழிகளில் காணப்படும் சங்கீத நூல் களுடைய வரலாறு காணின், அவற்றுள் மிகப் பழமையானது கி.பி. நான்காம் நூற்றாண்டிலெழுந்த பரத நூலாகும். அதற்கு அடுத்த நிலையில் காணப்படுவன சங்கீத மகரந்தம், நாரதசிக்ஷை முதலி யனவாகும். இவற்றிற்குப் பின்பே, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பார்சுவ தேவர் என்பவரால் சங்கீத சமயாசார மென்ற நூலும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னரே பிற நூல்களும் பிறந்துள்ளன. இவற்றால் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்பெல்லாம் "அரு மறைத் துழனி" தவிரத் திருந்திய இசை (சங்கீதம்) தமிழ் நாட் டிற்கு வடக்கிலுள்ளார்க்கு இல்லை யென்பது இனிது விளங்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் இசைநூல்களும் இசை வகைகளும் இருந்தன என்பதற்குச் சிலப் பதிகாரம் நல்ல சான்றுபகருகிறது. சாரங்க தேவர் எழுதிய சங் கீதரத்னாகரம் ஒன்றே தமிழிசையின் மாண்பை வடநாட்டவர் அறிந்து வியந்து போற்றி மேற்கொண்டதற்கு ஆதரவு நல்குகிறது. வடநாட்டவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாடு போந்து இசைபயின்ற செய்திக்குக் குடுமியான்மலைக் கல்வெட்டும், அக் காலத்தே விளங்கிய ஞானசம்பந்தர், திருமறைக் காட்டுத் திருப்பதி கத்தே, 'ஊறுபொரு ளின்தமி ழியற்கிளவி தேருமட மாதருடனா, வேறுதிசை யாடவர்கள் கூடியிசை தேறுமெழில் வேதவனமே" என்று கூறியருளுவதும் அசைக்கமாட்டாத சான்றுகளாகும். இக் காலத்துக்குப் பின்னே, தமிழ் மக்கள் பிறமொழி வேட்கையும், தமிழ்த்திறத்தைப் புறக்கணித்தலும் மேற்கொண்டதன் பயனாய், தமிழ்இசை ஒளிகுன்ற, வடவர் அதனைத் தாம் விரும்பியவாறு திரித்து அமைத்து வளர்க்கலுற்றனர். அவ் வளர்ச்சியின் விளைவே இப்போதைய கருநாடக சங்கீதமாகும்.
வடவர் கருநாடக சங்கீதத்தைத் தமிழினின்றும் திரித்துக் கொண்டது இருவகைப்படுகுறது. ஒன்று, தமிழ்ப்பண்ணின் மேல் நிலைக்குரிய சுரத்தை இலதாக்கி, ஆளத்திக்கு (ஆலபனைக்கு இடமில்லையாகச் செய்துவிடுவது;* இரண்டாவது, பண்களை (இர கங்களை) வக்கிரமாகப் பாடுவது; அஃதாவது பாஷாங்கம் எனப்படும் கலப்புச் சுருதிகளையுடையதாகப் பாடுவது. தமிழ்ப்பண்களுக்கு வக்கிரமில்லாத நிலைமையே உரித்தாகும். சுருங்கச்சொன்னால் "வர்ஜியராகங்" களெல்லாம் தொன்றுதொட்டு வந்த தமிழ்ப்பண்கள் என்று இசைப்புலவர் பலரும் கூறுப. இதனால், கருநாடக சங்கீதத் துள் நிலவும் "வர்ஜியராகம்" பலவும் தமிழ்ப்பண்கள் என்றும் "வக்கிரராகம்" பலவும் வடவர் புணர்ப்பென்றும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மாளவபஞ்சமம் என்பதை இந்நூல் பண் ணென்று கூற, ஏனை வட நூல்கள் இராகம் என்று கூறுவது காண்மின்.
தமிழ் நிலத்துத் தமிழ் மக்கள் உள்ளத்தே பிறந்து அவர் வழங்கும் தமிழ் மொழியிலே வளர்ந்து தமிழின்பம் பயந்து சிறந்த தமிழ்ப்பண்களின் சுருதிகளைக் குறைத்தும் திரித்தும் வேறுபடுத் திக்கொண்டதோடு நில்லாது, அதற்குரிய தாய்மொழியாகிய தமி ழும் அவ்விசைக்குப் பொருந்தாது; தமிழ்மொழியில் அதனைப் பாடச்செய்வது சங்கீத வளர்ச்சிக்குக் கேடுதரும் என்று தகவில்லாத பொய்மொழி கூறுவோரும், அவர்வழி நிற்போரும் பெருங்குற்றத் தினைச் செய்தொழுகுகின்றனர். பொய், மெய்யை ஒருகாலும் வெல்லாது.
இது நிற்க. இங்கே காட்டிய மாளவபஞ்சமம் என்ற பண், கரு நாடக சங்கீதத்துட் காணப்படினும் "வர்ஜியராக" மாதலால் தமிழ்ப் பண்ணென்றே தெளியவேண்டும். இதனைப் பாடுதற்குரிய காலம் விடியற்காலமாகும். அமிழ்தமதி இதனை அட்டபங்கன் பாடக்கேட்ட காலமும் அதுவேயாகும். சுப்பராம தீக்ஷிதர் "கால நிர்ணயமில்லை" யென்று கூறுவர். தமிழிசைப்புலவர் வழக்காறு கொண்டு நோக்கின் இது ஆறாவது மேளகருத்தாவாகும்; வடவர் முறைப்படி பதினைந்தாவது மேளகருத்தா என்பர்.
-------
* குறிஞ்சி, புன்னாகவராளி, நாதநாமக்கிரியை முதலிய தமிழ்ப் பண்க (இராகங்க)ளின் ஆரோசை அமரோசைகளை முடிவுறக்காட் டாமல் ஒரு தானத்துக்குரிய முழுப்பகுதியையும் புலப்படாமல் மறைத்து விடுவது என்று இசைவாணர் கூறுவது உலகறிந்த செய்தி.
இவ்விசை நெறியின் வரலாறும் வகையும் பிற இயல்புகளும் ஆராய்ந்து காண்பதற்கு இப்போது பேரறிஞர் முன்வந்து விட்டனர். உயர்திரு சுவாமி விபுலானந்தர் முதலாயினாரும், திரு. பொன் னையாப் பிள்ளை முதலாயினாரும் செய்த ஆராய்ச்சிகள் உருவாகி வருகின்றன. தமிழ் மக்களுக்கும் தங்கள் தமிழ் வாயிலாக இசை யமுது பெறுதற்கு ஆர்வம் பொங்கியெழத் தொடங்கிவிட்டது. செட்டிநாட் டரசர்பெருமான் ராஜா-சர். அண்ணாமலை செட்டியார் அவர்களும் "மலையே வந்து விழினும் மனிதர்காள், நிலையில் நின் றீர்" கலங்காதீர் என்று நாவரசர் மொழிந்த நல்லுரையை நயந்து மொழிந்து நல்லாதரவு புரிகின்றார். இனி, தமிழ்க்கும் தமிழிசைக் கும் நல்ல காலமேயாம். ஆகவே தமிழ் வாழ்க, தமிழிசை வாழ்க என வாழ்த்தி மேற்செல்கின்றாம்.
இனி, இந்நூல் முதன்முதலாக 1887-ஆம் ஆண்டில் காஞ்சி புரம் பாகுபலி நயினார் என்பவரால் அச்சிடப்பட்டதென்று சி.வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பின் தில்லையம்பூர் வேங்கடராம அய்யங்காரவர்களால் 1908-ஆம் ஆண்டில் இஃது அச்சிடப்பட்டது. திரு. அய்யங்காரவர்கள் அச் சிட்டு வெளியிட்ட காலத்தே இந்நூல் அச்சாகியிருப்பவும், எக் காரணம் பற்றி, அதனை அவர் தமது முன்னுரையிற் குறியா தொழிந்தனரென அறிய முடியவில்லை. இந்நூலை ஆராய்தற்குச் சென்னை, வித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் பிரதி யொன் றும், விழுக்கம் குப்புசாமி நயினார் அவர்கள் பிரதி யொன்றும் திருநெல்வேலிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் பிரதி யொன்றும் துணை செய்தன. இப் பிரதிகளால் பல திருந்திய பாடங்களும் அச்சுப் பிரதியிற் காணப்படாத சில செய்யுட்களும் கிடைத்தன. இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பு நோக்கிக் கோடற்குத் துணை புரிந்த என் நண்பர் திரு.C.அரங்கநாதன், M.A. அவர்கட்கு இந்நிலையில் என் அன்பார்ந்த நன்றி யுரியதாகின்றது. சீர் குலைந் திருந்த கைப்பிரதியிலிருந்து படியெடுத்துத் தந்தவர் வேலூர் மகந்து உயர் கலாசாலையில் தமிழாசிரியராய் இருக்கும் வித்துவான் கதிர்வேலருடைய இளவலாவார்.
இவ்வாறு இந்நூலை யான் செப்பம் செய்த உரையும் வகுத் திருந்த செய்தியையறிந்து இதனை விரைய அச்சிடுவது நலமென்று நண்பர் திரு. திருவரங்கம் பிள்ளை யவர்கள் தம்பால் இருந்த பிரதி யொன்றினை உதவி யூக்கியது இப்போது இவ்வெளியீட் டிற்குச் சிறந்த காரணமாகும். நல்ல, இனிய தமிழ்நூல்களை மிகச் செவ்விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு வழங்கும் தென்னிந் திய சைவசத்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சரும் தமிழ்ப் புலவர் பால் மெய்யன்பு பூண்டு, அவர்கட்கு வேண்டுவனவற்றைச் சலிப்பின் றிப் புரியும் தக்கோரும், தனித்தமிழ் வளர்ச்சியும் சித்தாந்த சைவச் சிறப்பும் ஆகிய இரண்டையும் தம் இருகண்ணெனப் பேணிப்புரந்த பேரறிஞருமாகிய அவர்கள் இவ் வெளியீட்டின் தொடக்கமுதலே பேரூக்கங்கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்போது இந்நூல் முழு தும் செவ்வே அச்சாகிக் கண்கவர்வனப்புடன் கட்டுற்றுக் காட்சி வழங்குவதைக் காணாது இறைவன் தாணிழலெய்தியது என்நெஞ்சில் பெருவருத்தத்தை விளைவிக்கின்றது.
இந்நூலை ஆராய்ந்து உரைகாணும் முயற்சி முடிந்து ஓராண் டாகிக், காகிதம் முதலியன கிடைக்கும் அருமைப்பாடும் நினையாது அழகு திகழ அச்சிட்டு வெளியிட்டு வழக்கம்போல் என்னை யூக்குவிக் கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னோடு உடன் இருந்து அச்சுப்பிழை பார்த்தல், உரைத்திட்பம் காண்டல் முதலிய பணிகளில் சிறந்த துணைபுரிந்த என் நண்பர் திரு. வித்து வான், வெள்ளைவாரணர் அவர்களின் உதவி என் நெஞ்சில் என் றும் நிலைபெறும் பான்மைத்தாகும்.
தமிழறிவிலும் பிற செல்வாக்கு வகைகளிலும் மிக்க குறைபா டடுடைய அடியேனையும் பொருளாக்கி, தமிழன்னைக்குச் செய்தற் குரிய இப் பணியினைப் புரிவிக்கும் அம்மையப்பனாய் ஆரருள் புரியும் ஆடலரசின் திருவடிகளை மன மொழி மெய்களால் முறையே நினைந்தும் வழுத்தியும் வணங்கியும் அமைகின்றேன்.
"தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே"
அண்ணாமலைநகர், ஔவை சு. துரைசாமி. 5-1944.
-----
உரிமையுரை
திருநெறித் தொண்டர் திருத்தொகை வழங்கிய அருந்தமிழ் நாவ லாரூரர் திருநாள் ஆண்டுதோ றாற்றும் அமைவும் தண்டமிழ்ப் புலவரை யோம்பும் புலமையும் திருவும் என்நலம் பேணும் இனிமையும் பொருந்தியோன் பாலியாற் றடைகரைப் பல்பொழி னடுவண் மாடமலி மறுகி னார்க்காட் டண்ணல் அறுவை வாணிகன் அருந்தமி ழன்பன் சச்சிதா னந்தச் சான்றோற் கினியன் பொன்னும் பொருளும் பூந்துகில் வகையும் மன்னும் புலவர்க்கு மாண வழங்குவோன் வரத ராசனென வருபெருஞ் செல்வன் செய்த வண்மைச் சிறப்பினால் இத்தமிழ்க் காவிய முரையுடன் காண்டலின் தாவில் சீர்மிகு மவன்றன் செழுங்குடி விளங்கப் புரிமனம் உவப்ப வவற்கே உரிமை செய்தனன் இவ் வொண்டமி ழுரையே.
ஔவை சு. துரைசாமி.
---------------------
கடவுள் துணை.
யசோதர காவியம் : மூலமும் உரையும்
உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்
தலகி லாத அனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். 1
உரை:- உலக மூன்றும்-மூன்று உலகங்களிலும் நிகழும் நிழ்ச்சி முற்றும், ஒருங்கு உணர்-ஒருங்கே யுணர்ந்து கொள்ளுதற் கேதுவாகிய கேவலத்து-கேவல ஞானத்தை யுடைய, அலகு இலாத-அளவில்லாத; அனந்த குணக்கடல்- கடையிலாஞானம் முதலாகக் கூறப்படும் குணங்கள் நிரம்பிய கடலாகிய அருகபரமேட்டியின், இலகு மாமலர்ச் சேவடி - விளங்குகின்ற அழகிய பூப்போலும் திருவடியை, வெவ்வினை விலகி-கொடிய வினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு-வீடு பேற்றினை எய்துவித்துக் கோடற்கு, ஏத்துவாம்-பரவிப் பணிவோம் என்றவாறு.
குணக்கடல், அன்மொழித்தொகை. கேவலத்து என்பது தொகையாற்பெறப்படும் அருகபரமேட்டியை விசேடித்து நின்றது. மூன்றுலகினும் நிகழ்வனவற்றை முற்றவும் ஒருங்கேயுணரும் ஞானக் காட்சி நல்குவதெனக் கேவலத்தின் தன்மை தோன்ற "உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து" என்றார். "எல்லாம் உணர்ந் தான் அவனே இறையாக ஏத்தி"1 என்ற நீலகேசிச்செய்யுட்கு, "தானும் பிறிதுமாகிய திரவிய குண பரியாயங்களைப் பிரத்தியட்ச மாக உணர்ந்த கேவலஞானமும், அதனோடு அவினாபாவிய *ரகி கேவலதரிசன கேவலவீரிய கீவலசுகமு முடையானவனே சுவாமி யாகத் துதித்து" எனவரும் உரை காண்க.
- -------
1. நீலகேசி, செய்யுள். 1
"பன்மாண் குணங்கட்கு இடனாய்"1 எனத் திருத்தக்கதேவர் கூறினாராக, இந்நூலாசிரியர் அக்குணங்களின் பன்மையை "அல கிலாத" என்றும் முடிவின்மையை "அனந்த" என்றும் விசேடித்து "அலகிலாத அனந்த குணக்கடல்" என்றார்.
குணக்கடல் சேவடி, வீடு விளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க. வெவ்வினையின் விலகி யென மாறி இன்னுருபு விரித்துக் கொள்க.
ஒருங்குணர் கேவலத்து என்றது நன்ஞானம்; அலகிலாத அனந்த குணக்கடல் என்று தெளிந்தது நற்காட்சி; அக்குணக்கடல் சேவடி யேத்துதல் நற்சீலம். இம்மூன்றன் பயன் வினையை வீட்டி வீடுபேறாகிய கடையிலாஅறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கும் எய்துவது. "கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல் நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு ஆடெழில் தோளினாய் அநந்த நான்மையே"2 எனத் தேவரும் கூறுவர்.
இனி, வெவ்வினை விலகி வீடு விளைப்பதற்கு என்பதற்கு வெவ்வினைகள் தாம் பற்றிநிற்கும் உயிர்களைவிட்டு நீங்குவதாகிய செம்மைநிலை உண்டாதற்கு என்று உரைப்பினுமாம்.
-------
பாயிரம்
நாதன் நம்முனி சுவ்வதன் நல்கிய
தீதுதீர் திகழ்தீர்த் தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதரன் எய்திய
தோத உள்ளம் ஒருப்படு கின்றதே. 2
உரை:- நம் நாதன்-நமக்குத்தலைவனாகிய; முனி சுவ் வதன்-முனி சுவ்விரத தீர்த்தங்கரர்; நல்கிய-அருளிய; தீதுதீர்திகழ்-குற்றமின்றி விளங்கும்; தீர்த்தம் செல்கின்ற நாள்-ஆகமோபதேசம் நடைபெறுங்காலத்தில்; யசோ தரன்-யசோதரன் என்பவன்; ஏதம் அஃகி-வினைச்சார்பு அற்றுக் கெடுதலால்; எய்தியது-வீடுபேறு எய்திய நிகழ்ச்சியை, ஓத-உரைப்பதற்கு, உள்ளம் ஒருப்படுகின்றது- நெஞ்சமானது விரும்பிச் செயற்கண் ஒன்றி நிற்கிறது எ-று
- ------------
1. சீவக. 3 2. சீவக. 2846.
நாதன், தலைவன். ஞானச் செல்வ முடையவ னென்றுமாம். தீர்த்தங்கரர் என்போரும் இந்நாதர்களே. இவர் இடப தீர்த்தங்கரர் முதல் ஸ்ரீவர்த்தமானர் ஈறாக இருபத்து நால்வராவர். இவருள் முனி சுவ்விரதர் இருபதாம் தீர்த்தங்கரர். தீர்த்தங்கரர், தீர்த்தகரர் எனவும் வழங்கும். தீர்த்தங்கரர்களின் இயல்பு கூறுமிடத்து, "ஆப்தனும், உபாசக ஜனங்கட்கு, ஜபம், தியானம், அருச்சனை முதலிய பிரகாரங்களால் சுவர்க்க அபவர்க்க பலப்பிரதனாவன்; இவ்வண்ணம் நிக்கிரக அனுக்கிரகங்கள் இன்றிப் பரமஉபேக்ஷா சாத னனாகிய பகவான் உபாசக ஜனங்கட்குச் சுகத்தினையும் பிரத்வேஷி ஜனங்கட்குத் துக்கத்தினையும் ஆக்குவனாகு மென்றறிக"1 என்று அஷ்ட பதார்த்த சாரம் என்னும் நூல் கூறுகின்றது.
முனி சுவ்விரத தீர்த்தகரருடைய காலத்தில், தன்னை வழி படுவோர்க்குத் சுகத்தை நல்கி ஒழுகுதலால், அவர் கால இயல்பை, "முனி சுவ்வதன் நல்கிய தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்றநாள்" என்றார். திகழ்தல், விளங்குதல். தீர்த்தகரருடைய காலத்தைத் தீர்த்தம் என்றார். அஃகுதல், சுருங்கிக்கெடுதல்.
---------
அவையடக்கம்
உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை;
உள்ளு கின்ற பொருள்திறம் ஓர்பவர்
கொள்வர் எம்உரை கூறுதற் பாலதே. 3
உரை:- உள் விரிந்த புகைக்கொடி உண்டு என- அனலுக்குள்ளே தொக்குநின்று மேலே விரிவதாகிய புகை யொழுங்கு விளக்கிடத்தே உளது என்ற காரணத்தால், விளக்கினை-அவ்விளக்கை, எள்ளுகின்றனர் இல்லை-இகழ் பவர் யாவரும் இல்லை. உள்ளுகின்ற பொருள்திறம்- உள்ளுறுத்து உரைக்கப்படுகின்ற பொருட் கூறுபாட்டினை, ஓர்பவர்-ஆராய்ந்து மேற்கொள்ளும் அறிஞர், கொள்வர்- ஈண்டுக்கூறப்படும் இதனையும் ஏற்றுக்கொள்வர்; (ஆதலால் எம் உரை-எமது இந்நூலும், கூறுதற் பாலதே-கூறப் படும் பான்மையுடைத்தே எ-று.
- ---------
1. அஷ்ட பதார்த்தசாரம், பக். 3.
கூறுவோர் தகுதி நோக்காது, கூறப்படும் பொருளினது தகுதி நோக்கிக் கொள்ளுவதும் தள்ளுவதும் அறிஞர் செயலாதலின் "உள்ளுகின்ற பொருள்திற மோர்பவர் கொள்வர்" என்றார். பொருளும் அறிஞர் ஏற்கும் தகுதி வாய்ந்ததென்பார் "எம்முரை கூறுதற்பாலதே" என்றார். இனி, பொருள்திற மோர்பவர், எம் முரை கூறுதற்பாலதே என்றுகொண்டு மேற்கொள்வர் என்றார் என்றுமாம்.
-------
நூற்பொருள்
மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணியம் போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பயன் இற்றெனத்
தெரிவு றுப்பதும் செப்புத லுற்றதே. 4
உரை:- வெவ்வினை மருவு வாயில் மறுத்து-கொடிய வினையானது வந்து பொருந்தும் வாயிலை அடைத்து, பொரு வில் புண்ணியம் போகம் உடன் புணர்ப்பதும்-ஒப்பில்லாத அருளறத்தைச் செய்தல் வீட்டின்பத்தை உடனே யெய்து விக்கும் என்பதையும், வெருவு செய்யும் வினைப்பயன் இற்று எனத் தெரிவுறுப்பதும்-உயிர்கட்கு அச்சத்தைச் செய்யும் தீவினையின் பயன் இத்தன்மைத்து என்று தெரிவிப்பதையும், செப்புதல்-இந்நூலின்கண் உரைப்பது, உற்றது-யாம் கருதியதாகும் எ-று.
செயப்படும் வினையானது செய்பவனைச் சென்று சாரும் இயல் பிற்றாதலின், அதனை மறுப்பது அதன் சார்பினைக் கெடுப்பதாம் என்க. அஃதாவது "அருள்புரி மனத்தராகி ஆருயிர்க் கபயம் நல்கிப், பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு, இருள்புரி வினைகள் சேராது இறைவனது அறத்தை"1 எய்துவ தாகும். எய்தினார்க்கு வீட்டின்பம் இடையீடின்றி எய்துதலின் "உடன் புணர்ப்பது" என்றார். பொருவில் புண்ணியம் போகம் புணர்க்கு மெனவே வீட்டின்பமாயிற்று. வெருவு செய்யும் வினை, உயிர்க்கொலை;
- -------
1. யசோதர.309.
அதன் பயன் உயிரின்கட் கிடந்து அது புக்குழிப்புக்கு வருத்தும் என்பது "உயிர்க்கொலையினில் அருவினை நரகத் தாழ்ந்து, எய்தும் வெந்துயர் எனைப்பல கோடி கோடி"1 எனப் பிறாண்டும் கூறுப. இக் கருத்தே இந்நூல் முடிவிலும், "வெருவுறு வினைவலி விலக்குகிற்பது, தருவது சுரகதி தந்து பின்ன ரும், பொருவரு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே"2 என்று கூறப்படுவது காண்க. இக்காவியத்தின் வாயிலாக இந்நூலாசிரியர் தாம் மக்கட்கு உணர்த்தக் கருதுவது இஃது என இதனால் தெரித்துரைத்தாராயிற்று.
நூல் - முதலாவது சருக்கம்
- ------
1. யசோதர. 322. 2. யசோதர. 329.
ஓதய நாட்டுச் சிறப்பு
பைம்பொன் நாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
திம்பர் ஈடில தோதிய* மென்பதே. 5
உரை:- பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை- பசிய பொன்னை விளைவிக்கும் நாவலந் தீவில் உள்ளதாகிய பரதகண்டத்தில், ஓதயம் என்பது-ஓதயமென்று உயர்ந் தோரால் சிறப்பித்துக் கூறப்படுவதாகிய; நம்பும் நீரணி நாடு-எவ்வுயிரும் விரும்பும் நீர்வளம் சான்ற நாடு ஒன்று, உளது-உண்டு, வம்பு வார்பொழில்-மணம்கமழும் நீண்ட சோலையானது, ஊடுபோய் மாமுகில் சூடுவது- நிலத்தின்மேல் உள்ள காற்றுமண்டலத்தின் உள்ளுருவி உயர்ந்து மேகமண்டலத்தை யடைந்து பெரிய மேகங்கள் தன்பால் தவழவிளங்குவது, இம்பர் ஈடு இலது-இம்மண் ணுலகத்தே ஒப்பில்லாததாகும் எ-று.
- -----------
(பாடம்)* தௌதயம்.
மேருமலையின் தெற்கிலே நாவல்மரம் செறிந்த சோலைகளை யுடையது இந்நாவலந்தீவு என்றும், "இந் நாவல் பழத்தின் சாறொ ழுகி ஆறாய்ப்பரந்து அந்நிலத்தையும் பொன்மயமாக்கி மேருவின் மூலத்தையுடையு மென்றும், அச்சா றூறிய பயனே பொன்விளை" வென்றும் "நாவலோங்கிய மாபெருந் தீவு" என்றும் கூறுவர். "நாவலந் தீவு தன்னுள் பரதத்து நடுவண்"1 என மேருமந்தர புராணம் கூறும். நம்பும் நீர்அணி நாடு என்பதற்கு நாடாவளமுடைமையால் எவ்வுயிரும் தன்கண் வாழ்தற்கே விரும்பும் தன்மையினையுடைய நாடு என்றலுமாம். இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண் டல முண்டென்பது சமண்சமயக் கொள்கை. அம்மண்டலத்தின் மேல் உளது மேகமண்டலம். மேகமண்டலத்தை யளாவி நிற்கும் பொழில் காற்றூடு உயர்தல் வேண்டுதலின், "ஊடுபோய் முகில் சூடு வது" என்றார். ஓதயநாடு, யௌதயநாடு என்பதன் சிதைவு. ஔதய நாடு என்றும் பாடம். இதனைச் தசார்ணம் என்றும், உசீ நரன் மகனான நிருகன் வழியினோராண்ட நாடென்றும் கூறுப.
பரதத்திடை ஓதயமென்பது, நீரணி நாடு, உளது; பொழில், போய், முகில் சூடுவது, ஈடிலது என இயைக்க.
- ---------
1.மேருமந்தர. 571.
இராசபுரச் சிறப்பு
திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்*
வசையி லாநகர் வானவர் போகமல்†
கசைவி லாஅள காபுரி தானலால்
இசைவி லாத இராச புரமதே. 6
-----
(பாடம்)* திருவுன்னிலாய். † போகமஃது.
உரை:- திசையுலாம் இசையும் திருவும் நிலாய்-நாற்றி சையும் பரந்த புகழும் செல்வமும் பொருந்துதலால், வசை யிலா நகர்- குற்ற மில்லாத நகரம், வானவர் போகம் மல்கு-தேவருலகத்து நுகர்ச்சி முற்றும் நிரம்பிய, அசைவு இலா அளகாபுரி அலால் இசைவு இலாத-குறைவொன்றும் இல்லாத அளகாபுரியையன்றி ஒப்புக்கூறற்கில்லாத, இராச புரம்-இராசபுரமாகும் எ-று.
நிலாய், வினையெச்சம் காரணப் பொருட்டு. திசையுலாம் இசை என்பது "ஏமாங்கத மென்று இசையால் திசை போயதுண்டே"2 என்றாற்போல்வது. வசை, குற்றம்; "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"3 என்ப வற்றிற்கு மறுதலையாய ஐந்து. அளகாபுரி, இந்திரன் நகர்; குபேரன் நகரம் என்றும் கூறுதலுண்டு.
- -----
2. சீவக. 31. 3. குறள், 738.
அசைவு, குறைவு; "அசைவிலாப் புரவி வெள்ளத் தரிஞ்சயன்"1 என வருதல் காண்க. இசைவு-உவ மித்தல். தான், அசை. இராசபுரமது என்றவிடத்து அது பகுதிப் பொருட்டு. வசையிலா நகர் இராசபுரம் என்க. ஓதயமென்னும் நாட் டிற்கு இராசபுரம் என்பது தலைநகர் என்றவாறாம். இதனைப் பின்பு மன்னகர் என்றே மொழி பெயர்ப்ப. உலாம் என்புழி, செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது.
---------
இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே. 7
உரை:- இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது-நகரத்தின் மதிலானது மேகமண்டலத்தை யடைந்து அதன் மேலும் உயர்ந்தது, மஞ்சு உலாம் மாளிகை மதிசூடின-மேகங்கள் உலவும் மாளிகைகள் மதிமண்டலத்தை அளாவித் திங்கள் தவழ நின்றன, அஞ்சொலாரவர் பாடலொடு ஆடலால்- அழகிய சொற்களையுடையரான மகளிருடைய பாடல் ஆடல் என்பவற்றால், விஞ்சையர் உலகத்தினை வெல்லும்-(இந் நகரமானது) வித்தியாதரர் உலகத்தினும் மேம்படுவதா யிற்று எ-று.
மஞ்சுலாம் மாளிகை மதிசூடின என்று இயையும். மஞ்சு, ஆகுபெயர். நகரமதிலினும் நகரத்து மாளிகைகள் உயர்ந்திருந்தன என்பர், "இஞ்சிமஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சுலாமதி சூடின மாளிகை" என்றார். மகளிர் அனைவரும் இசையும் கூத்தும் பயின்று தாம் இன்புற்றும் பிறர்க்கு இன்புறுத்தியும் இனிதொழுகினர் என் பதாயிற்று. "ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக், கேடில் புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டும், ஊடலொடு கூடலுணர் வார் கள்புணர் வாராய்ச், சேடரொடு சேடியரும்"2 என்று பிறரும் கூறுதல் காண்க. ஆடல், விளையாட்டுமாம். அஞ்சொலாரவர் என் றது, சாத்தனவன் என்றாற் போல நின்றது. வெல்லுதல்-மேம் படுதல்.
- ----------
1. சீவக. 201. 2. நீல. 17.
---------
வேந்தன் மாரிதத்தன் சிறப்பு
பாரி தத்தினைப் பண்டையின் மும்மடிப்
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்காரன்
மாரி தத்தனென் பானுளன் மன்னவன். 8
உரை:- பா இதத்தினை-நிலத்து மக்கட்கு நலத்தினை; பண்டையின் மும்மடி பூரிதத்து-முன்னையினும் மும்மடங்கு மிகும்படி செய்து; ஒளிர்-விளங்குகின்ற; மாலை வெண் பொற்குடை-பொன்னாரமும் வெண்கொற்றக் குடையும் பொற்குடையும் கொண்டு; வாரிதத்தின்- மேகத்தைப் போல; மலர்ந்த கொடைக்கரன்-விரிந்த கொடையினைச் செய்யும் கையை யுடையவனான; மார்தத்தன் என்பான்- மாரிதத்தன் என்று பெயர் கூறப்படுவான்; மன்னவன் உளன்-ஒரு வேந்தன் உளனானான். எ-று.
தன் குலத்து முன்னோரினும் மூன்று மடங்கு சிறப்புண்டாக ஆண்டானென்பது அவனது ஆட்சிநலம் குறித்து நின்றது. மும்மடி- மும்மடங்கு. பிறாண்டும் "முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்"1 என்று கூறுப. பூரிதம்-நிறைதல்; மாலையும் குடையும் கொடைக்கரனும் உடைய மாரிதத்தன் என்பான் மன்ன வன் உளன் என இயைக்க. வெண்குடை அரசு கட்டிற்கு நிழலாகி வேந்தனது கொற்றமும் தண்ணளியும் சுட்டிநிற்பது. பொற்குடை, உலாவருங்கால் வருங்குடை. "பொன்னாங்குடை நிழற்ற"2 என்றதற்கு "இது பவனிக்குடை யாதலின் பொற்குடையாயிற்று" என நச்சினார்க்கினியர் உரைத்தல் காண்க. வாரிதம்-மேகம். மலர்தல்-விரிதல். "கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்"3 என்றாற்போல.
- ---------
1. யசோதர. 82. 2. சீவக. 2369. 3. புறம். 103 (பாடம்) -*மன்னகர்.
செல்வச் சிறப்பு
அரசன் மற்றவன் தன்னொடும் அந்நகர்*
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். 9
உரை:- அரசன் அவன் தன்னொடும்-அரசனாகிய அம்மாரி தத்தனுடன், அந் நகர் மருவும் மானுயர்-அவ்விராசபுர நகரத்தே வாழும் மக்கள், செல்வ மயக்கினால்-குறை வின்றி நிறைந்த செல்வக்களிப்பினால், வானவர் போகமும்- தேவருலகத்திலே பெறக்கூடிய இன்பமும், பொருவில் வீடு புணர் திறமும்-ஒப்பில்லாத வீடு பேற்றை யடையும் நெறிகளும், இவை-ஆகிய இவற்றை, தெரிவது ஒன்று இலர்-ஆராய்வது ஒன்றும் இலராயினர் எ-று.
மற்று, அசை. அரசனவன் என்பது சாத்தனவன் என்றாற் போல நின்றது. உம்மை, இசைநிறை. ஒடு, உயர்பின்மேற்றாகிய ஒரு வினை யொடு. அரசனெவ்வழி அவ்வழியினர் குடிகளாதலின், அவன் உயர்நெறி நின்று மக்களைச் செந்நெறிக்கட் செலுத்தற்பாலன் என் பதுபட நின்றது. மானுயர்-மக்கள்; வடசொற் சிதைவு. "சிறு முனுயர்"1 என நீலகேசியும் கூறுதல் காண்க. வானவர் போகத்தைத் தோலாமொழித்தேவர் "இன்பமே பெரிதாகி இடை யறலின் றிமைப்பளவும், துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ் செல்வம்"2 என்று கூறுதல் காண்க. வீடு புணர்திறம் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மூன்றும் ஒருங்கு நிகழ்வது; நற்காட்சி முதலியன தனித்தனியே வீடுபெறு நெறியாகா என்பர் நீலகேசி உரைகாரர். போகமும் வீடுபேறும் என்ற இவையிரண்டுமே மக்கள் பெறற் குரியன வாதலின் "இவை" யெனத் தொகுத்தோதினார். "மானுய ரென்னப் படுவார் தாம் மா விதையமென்னும், கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த், தானுய ரின்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார்"3 என்பதும் அதன் உரையும் காண்க. செல்வச் செருக்கி னால் அறிவுக்கண் மூடப்பட்டமையின் மறுமை வீடு என்ற ஆராய்ச்சி யுணர்வே இலராயினர் என்பதாம். ஒன்றும் என்புழிச் சிறப்பும்மை தொக்கது எ-று.
- --------
1. நீல.171. 2. சூளா.துறவு. 221. 3. நீல. 86. (பாடம்) *விரிந்த.
வேனில் வரவு
நெரிந்த நுண்குழல் நேரிழை யாருழை
சரிந்த காதல் தடையீல தாகவே
வரிந்த* வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்த தின்னிள வேனிற் பருவமே. 10
உரை:- நெரிந்த நுண்குழல் நேரிழையார் உழை- நெறித்த நுண்ணிய கூந்தலையும் உயரிய அணிகலன்களையு முடைய மகளிர்பால்; சரிந்த காதல் தடையிலதாக-உண் டாகிய காதலின்பம் இடையீடின்றிப் பருகிவராநிற்ப; வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்து கட்டப் பட்ட வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன் இன்பத்திலே மூழ்கிக் கிடக்கும் நாளில்; இன் இளவேனில் பருவம் விரிந்தது.- இன்பத்தைத் தரும் இளவேனிற் பருவம் வந்தது எ-று.
மன்னவன் , இழையாருழை, காதல் தடையிலதாக வைகும் நாள் இளவேனிற் பருவம் விரிந்தது என இயையும். நெறிந்த எனற்பாலது நெரிந்த என வந்தது. "நெறிதாழ் இருங் கூந்தல்", "நெறிகூந்தல்"1 என வருதல் காண்க. நுண்குழல் நுண்மை மயிர்க்கேற்றுக. சரிதல்-உண்டாதல். தடை-துனி. புலவியும் ஊடலும் காம வின்பத்துக்குச் சிறந்தனவாதலின், துனியே பொருளாமாறு காண்க. "உப்பமைந்தற்றால் புலவி" என்றும் "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம், கூடியார் பெற்ற பயன்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. நாடு முற்றும் ஒரு காலத்தே விளங்கித் தோன்றுதலின் "விரிந்தது" என்றார்.
-------------
சோலை நலம்
கோங்கு பொற்குடை கொண்டுக வித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை*
கூங்கு யிற்குலம் இன்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம். 11
உரை:- கோங்கு பொற்குடைகொண்டு கவித்தன- கோங்கமரங்கள் பொன்னாற்செய்த குடைபோலப் பூத்துத் தொங்கின; வாங்கு வாகை சாமரை வளைத்தன-வளைந்த வாகை மரங்கள் சாமரைபோலப் பூத்துச் சாய்ந்து கிடந் தன. கூம்குயிற் குலம்-கூவுகின்ற குயிற்கூட்டம். இன் இயம் கொண்டு ஒலிபாங்கு-இனிய முழவுபோல இசைக்கும் இடங்களில், வண்டொடு தேனினம் பாடின-வண்டின மும் தேனினமும் பண் பாடின எ-று.
- -----------
1. கலி. 97, 33. 2.குறள். 1302,1109 (பாடம்) *சாய்மரை.
கோங்கம்பூவினைக் குடையோடு உவமித்தலின், அதற்கேற்பக் "கலித்தன" என்றார். வாங்குதல்-வளைதல். சாமரைபோல் வதனைச் சாமரை என்றார். கொண்டு, உவமப்பொருட்டு; "யாழ் கொண்ட இமிழிசை"1 என்றாற்போல. கோங்கு குடைபோல் மலர்தலை "குடையவிழ்வன கொழுமலரின குளிர்களியன கோங் கம்"2 என்றும், வாகைப்பூ சாமரை போறலை "ஓகைச் சாமரை யூழ்த்தன வாகை"3 என்றும் சான்றோர் கூறுப. குயிலோசை முழவு போல்வதனை "களிவாய்க் குயில்கள் முழவாக"4 என்ப. வண்டு, தேன் என்பன வேறுவேறுவகை. கோங்கு குடைகவிப்ப, வாகை சாமரைவீச, குயில் முழவு முழக்க, வண்டும் தேனும் பண் மிழற்ற, இளவேனில் விரிந்தது என்று கொள்க. பாங்கு-பக்கம்.
----------
மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர்
தலந்த லந்தொறும் ஆடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த* வண்தளிர் மாவின மேயெலாம். 12
உரை:- வார்கொடி பூஞ்சிகை மலர்ந்த-நீண்டகொடிகள் அழகிய தலையிலே பூக்களைப் பூத்தன, தலம் தலந்தொறும் மங்கையர் ஆடினர் தாழ்ந்தனர்-இடந்தோறும் மகளிர் விளை யாடி யமர்ந்தனர்,கலந்த காதன்மை காட்டுநர்போல-மனக் கினிய காதலரைக் கூடிய நலமுடைமையைக் காட்டுபவரைப் போல, மாவினம் எல்லாம் வண்தளிர் வலந்த-மாமரங்க ளெல்லாம் வளவிய தளிர்களை ஈன்றன எ-று.
கொடிகள் இடையிடையேயன்றித் தலையிலே பூத்து விளங்குத லின் "பூஞ்சிகை வார்கொடி" என்றார்.. "பூத்தலைப் பூங்கொடி" என்பர் கபிலர். பூவும் புதுத்தளிரும் செறிய இனிய நிழல் பயந்து வெண்மணல் பரந்து இனிது தோன்றும் இடங்கள் என்றற்கு, "தலந் தலந் தொறும்" எனப் பொதுப்படக் கூறினார். காத லரைக்கூடி மகிழும் மகளிர், மேனி மாமை நிறமுற்றுத் திகழ்பவாதலின், "கலந்த காதன்மை காட்டுநர் போலவே, வலந்த வண்டளிர் மாவினமே யெலாம்" என்றார்.
- --------------------
1.கலி.29 2.சூளா. தூது. 5.
3. வீர.திருக்கலம். 15 4. சீவக. 2691 (பாடம்) *யலர்ந்த
மாவினமே என்புழி ஏகாரம் இசை நிறை, தேமாவும் புளிமாவும் என இனமுண்மையின் "மாவினம்" எனப்பட்டது. எல்லாம், எஞ்சாமைப்பொருட்டு; இளவேனிலில் இவையாவும் ஒழியாது தளிரீனுமாகலின். இனி, கொடிபோலும் மங்கையர் ஆடினராய்த் தாழ்ந்தனராய்க் காட்டுநர்போல மாவின மெல்லாம் தளிரீன்றன என்றுமாம். வலத்தல்-சூழ்தல்.
-----------
வேனில் விழா
உயர்ந்த சோலைகள் ஊழெதிர்* கொண்டிட
வயந்த மன்னவன் வந்தெனத் தென்றலின்†
நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும்
வயந்த மாடுவ கையின ராயினார். 13
----------
(பாடம்) *ஊடெதிர். † வந்தனனென்றலும்.
உரை:- உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர்கொண்டிட- உயர்ந்த மரம் செறிந்த சோலைகள் தளிரும் பூந்துணரும் ஈன்று கொள்ளுமாறு, வயந்த மன்னவன் தென்றலின் வந் தென-வசந்த காலமாகிய வேந்தன் தென்றலுடன் வந் தானாக, நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும்-வரவேற்று விரும்பிய வேந்தர்களும் அவ்விராசபுரத்துமக்களும், வயந்த மாடு வகையினர் ஆயினர்-வசந்த விழாக் கொண்டாடும் கூறுபாடுடையராயினர் எ-று.
வேனில் வரக்கண்ட பல்வகை மரம் செடி கொடிகள் புதுத் தளிரீன்று புதுமலர் பூத்து நறுமணம் கமழ, மன்றல் நாறும் தென்றல் தவழ, வண்டு தேனுண்டு பாட இனிய காட்சி வழங்குவது அதனை வரவேற்பது போறலின், "உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர் கொண்டிட" என்றார். "உயர்ந்த சோலை" என்றும், "எதிர் கொண்டிட" என்றும் "மன்னவன்" என்றும் நின்ற சொற்கள், மன்னன் தம் நகர் நோக்கி வந்தவிடத்து, நகரத்து உயர்ந்தோர் பூச்சொரிந்து எதிர்கொள்ளும் இயைபினைக் குறிப்பித்தல் காண்க.
தென்றலின்நயந்த என்றற்குத் தென்றலால் அறிந்து மகிழ்ந்த என்று உரைத்தலுமொன்று. வேனில் வரவினைத்தென்றல் போந்து அறி வித்தலை "இன்னிள வேனில் வந்தனன் இவணென, வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த, இளங்கால் தூதன் இசைத்தனன்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. வயந்தம்-வேனில் விழா; "குழவி வேனில் விழவுஎதிர் கொள்ளும், சீரார் செவ்வி"2 என வருதல் காண்க. வயந்த மாடு உவகையராயினார் என்று கொள்ளி னுமாம். "வேனிலாடல் விரும்பிய போழ்தினில்"3 எனப் பிறாண்டும் கூறுப. மன்னர் என்று பன்மையாற் கூறினார், மாரிதத்தனும் அவன்கீழ் அரசுபுரியும் சிற்றரசரும், துணைபெற்று வாழும் ஏனையரசரும் அகப்பட.
- --------
1.சிலப். 8:7-9. 2.கலி. 36. 3. யசோ. 14
நகரமாந்தர் வேந்தற் குரைத்தல்
கானு லாவியும்* காவும் அடுத்துடன்
வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் தன்னுழை
ஏனை மாந்தர் இறைஞ்சுபு கூறினார். 14
-----
(பாடம்)* கானும் வாவியும்.
உரை;- மான யானைய மன்னவன்-பெருமை பொருந் திய யானைகளையுடைய மன்னவனான மாரிதத்தன், கான் உலாவியும்-காடுகளில் உலாவியும், கா உடன் அடுத்தும்- சோலைகளில் உடன் சென்று தங்கியும், வானிலாடல் விரும் பிய போழ்தினில்-வேனில் விளையாட்டை விரும்பிச் சென் றிருந்தபோது, தன் உழை-அவன்பால், ஏனைமாந்தர்- ஏனை நகரமக்கள் சென்று, இறைஞ்சுபு கூறினார்- வணங்கி நின்று பின் வருமாறு கூறலயினர் எ-று.
மரம் செறிந்து குளிர்ந்த நிழல் பரந்து உலாவுவார்க்குத் தட்பம் பயந்து மாவும் புள்ளும் இனிய காட்சியும் இசையும் வழங்க இன் புறுத்தலின். "கான் உலாவியும்" என்றும், தங்குதற்குரிய தூமண லும் பசும் புல்லும் அமைந்த நறுமலரால் மணம் கமழ்ந்து அமர் வார்க்கு இன்பம் நல்குதலின், "காவுடன் அடுத்தும்" என்றும் கூறி னார். எண்ணும்மை பிரித்துக்கூட்டப்பட்டது. கானும் காவும் கூறவே, ஏனை யாறும் குளமும் படிந்து நீர்விளையாட் டயர்தலும் கொள்க. இனி, வேனிலாடல் என்பதை வேனிலும் ஆடலுமாகப் பிரித்து வேனில் விழவும் நீர் விளையாடலுமாகக் கொள்ளலுமாம். யானைய, குறிப்புப்பெயரெச்சம்.
------------
சண்டமாரிக்கு வழிபாடாற்ற வேண்டுமெனல்
என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா†
நன்ற லாதன நங்களை வந்துறும். 15
---------
(பாடம்) † வொன்றலா.
உரை:- என்றும்-ஆண்டு தோறும், இப்பருவத்தினோடு- இவ்வேனிற் பருவத்து வேனிற்காலத்தும், ஐப்பசி-ஐப் பசித்திங்களிலும், சென்று-போய், தேவி சிறப்பது செய் தும்-காளி தேவிக்குச் சிறப்புச்செய்து வருவேம், அஃது ஒன்றும் ஓரலமாயினம்-இப்போது வேனில் விழா வயர்கின் றோமே யன்றித் தேவிக்குச் சிறப்புச் செய்வதாகிய அஃது ஒன்றுமட்டில் நினையேமாயினேம், ஒன்றலா-(அதனால்) ஒன்றல்லாத பல, நன்றலாதன-தீங்குகள், நங்களை வந்து றும்-நம்மை வந்தடைந்து வருத்தும் என்று அஞ்சுகின்றேம் எ-று.
ஒடு, எண்ணொடு. ஐப்பசி கார்ப்பருவத்ததாகலின் அக் காலத்தே புதுநீர் விழவயர்த லுண்மையின், வேனில் விழாவும் புது நீர்விழாவும் நகரமாந்தர் கொண்டாடுமிடத்துத் தேவிக்குச் சிறப்புச் செய்வர் என்பது எய்துதலின், "செய்தும்" என்கின்றனர். ஐப்பசித் திங்களில் இவ்வாழா நிகழும்காலத்தை, பிறாண்டு, "ஐப்பசி மதிய முன்னர் அட்டமி பக்கந் தன்னில், மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னில், கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியின் காளை, மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென் றாள்"1 என்று கூறுதல் காண்க. வேனில் விழாவிற்சென்று இது கூறுதலின், அஃது என்பது தேவிக்குரிய சிறப்பாயிற்று. ஒன்றலா என்பது தீமையின் பல்வேறு வகைமை குறித்து நின்றது. அஞ்சுகின்றேம் என்பது கூற்றெச்சம்.
- -----------
1. யசோ. 130.
வழிபாடு தவறின் தீங்குண்டாமென நகரவர் கூறல்
நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைத்தனள் சீறுமேல்
காவன் மன்ன! கடிதெழு கென்றனர். 16
உரை:- காவல் மன்ன-எங்களைக் காத்தலில் வல்லுந னான அரசே; தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்-தேவி யானவள் மனம் திரிந்து வெகுளுவாளாயின்; நோவு செய்தி டும் நோய் பல ஆக்கிடும்-துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டு பண்ணுவாள்; ஆவி கொள்ளும் அலாதனவும் செய்யும்-(நோய் பலவற்றால் நம்மை மெலி வித்தலே யன்றி) உயிரைக்கொள்ளுதற்குரிய தீங்குகள் பல வற்றையும் செய்வாள்; கடிது எழுக-(ஆதலால்) விரைய எழுவாயாக, என்றனர்-என்று வேண்டினர் எ-று.
மன்ன, சீறுமேல், ஆக்கிடும், செய்யும்; அதனால் எழுக என்ற னர் நகரமாந்தர் என இயையும். தேவி சினத்தால் நோயும் சாக் காடும் எய்தும் என்பார், "நோவு செய்திடு நோய்பலஆக்கிடும், ஆவி கொள்ளு மலாதன வும்செயும்" என்றார். நோவு செய்திடும், ஆவி கொள்ளும் என்பன முறையே நோயையும் அலாதனவற்றையும் விசேடித்து நிற்கின்றன. நோவு-வருத்தம். அலாதன: மழை யின்மை, பெருங்காற்று, இடி, தீ முதலியவற்றால் உண்டாவன. உம்மை, எச்சவும்மை. சிந்தை திரிதலாவது, அருள் இலளாதல். நாடு காக்குந் தொழிலில் எத்துணை வலியனாயினும் அவள் செய்வன வற்றைத் தடுக்கமுடியா தென்றற்கு "காவல் மன்ன" என்றார். அவர் கூறுவனவற்றைக்கேட்கும் அரசன் உள்ளத்தில் அச்சம் பிறத் தலின், "கடிதெழுக" என அவர்தாமே அரசற்குக் கூறலாயினர்.
-----------
மாரிதத்தன் தேவிக்குச் சிறப்புச் செய்யப்போதல்
என்று கூறலும் ஏதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றனன் நன்னக ரப்புறத்
தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன். 17
உரை:- என்று கூறலும்-என்று நகரமாந்தர் கூறியதும்; நல் அறத்திற் சென்று தெளிவின்மையால்-அருளறமாகிய நன்னெறிக்கண்சென்று அறிவு தெளியாதவனாதலால்; இது ஏதம் என்றிலன்-இச்செயல் தீதுஎன்று கூறிற்றிலன்; இது நன்று என்றனன்-இது நல்லதே என்று நகரமாந்தர்க்குச் சொல்லி; நல் நகரப்புறம் தென் திசைக்கண்-நல்ல நகரத் தின் புறத்தே தெற்கின்கண்ணே யுள்ள தேவி கோயிலுக்கு சிறப்பொடு சென்றனன்-தனக்குரிய சிறப்புடன் சென் றான் எ-று.
கூறலும், வினையெச்சம் விரைவுப்பொருட்டு; அக்கூற்று செவி யிற் புகுதலும் அறவுணர்வுடையார் அஞ்சித் தம் செவியிற் பொத்திக் கொள்ளு வாராக, இவன் அவ்வாறன்றிச் செவிநிரம்பக் கேட்டு, மனத்திற்கொண்டு, நன்றென்று தெளிந்து வாயாலும் கூறுகின்றா னாதலின், "ஏதம் இது என்றிலன், சென்று நல்லறத்தில் தெளி வின்மையால்" என்றும், "நன்றிது என்றனன்" என்றும் கூறி னார். இது என ஒருமுறைக்கு இருமுறை ஆசிரியர் கூறியது, அச் சிறப்பின்கண் தமது அருவருப்புத்தோன்ற. சென்றென்னும் வினை யெச்சம், தெளிவென்னும் வினைப்பெயர்க்கண் வினைகொண்டது. நல்லறத்திற் சேறலாவது, அருளறம் உணர்த்தும் நூல்களைத் துறை போகக் கற்றுத் தெளிதல்; தெளிவுடையார்க்கன்றிக் கற்கும் நூற் பொருளும் செயல் வகையிற் பயன்படா தாகலின், "தெளிவின்மை யால்" என்றார். சண்டமாரியென்னும் தேவி கோயில் நகர்க்குத் தெற்கில் புறத்தே இருக்கிறதென்றற்கு "நகர்ப்புறத்தென்றிசைக் கண் சென்றனன்" என்றாராயிற்று. ஏனைமாந்தரினும் தான் சிறப்பு வேறுடையனாதல் வேண்டுமென்பது மாரிதத்தனுடைய உட் கோளாதலின், அவன் செலவை "சிறப்பொடு சென்றனன்" என விதந்தோதினார். உயிர்ப்பலி கொடுக்கும் கால;த்தில், ஏனை மாந்த ரைப்போலாது தான் வேறு சிறப்புடையபலியே கொடுக்கக் கருதுவ தொன்றே (21) இவன் மனப்பான்மை இஃதெனத் தோற்றுவித்து நிற்கிறது.
--------------
சண்டமாரியின் இயல்பு கூறல்
சண்ட கோபி தகவிளல்* தத்துவம்
கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
சண்ட மாரி தனதிட மெய்தினான். 18
--------
(பாடம்) * தகவில, தகவிலர்.
உரை:- சண்டகோபி-மிகுந்த கோபமுடையவளும், தகவிலள்-நடுவு நிலைமையில்லாதவளும், தத்துவம் கொண்ட கேள்வியும்-மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வி யறிவும், கூர் அறிவும்-நுண்ணிய நூல்களைக்கற்ற கல்வி யறிவும், இலா-இல்லாத, தொண்டர் தொழும் துருத் தேவதை-கீழ்மக்கள் மேற்கொண்டு வழிபடும் கொடிய தேவதையாவாளும், சண்டமாரி தனது-சண்டமாரி என்று பெயர் கூறப்படுபவளுமாகிய தேவியினுடைய, இடம்- கோயில் எல்லையை, எய்தினான்-(சிறப்பொடுசென்ற மாரி தத்தன்) அடைந்தான் எ-று.
உயிர்ப்பலி கொடாவிடின் "சிந்தை சிதைந்து சீறு" தலின் "சண்டகோபி" என்றும், ஓருயிரைத்தின்று பிறிதோருயிர்க்கு நலம் செய்தலின், "தகவிலள்" என்றும், கீழ்மக்களால் ஊனும் உயிரும் படைக்கப்படுதலின் "துருத்தேவதை" யென்றும் பழித்தார். தகவு, நடுவு நிலைமை; தக்கார் தகவிலர் என்பது"1 என்பதன் உரைகாண்க. தத்துவம், மெய்ம்மை. "கற்றலின் கேட்டலே நன்று"2 என்பவாகலின் கேள்வியை முற் கூறினார். கல்வி கேள்வி யிலாத்தொண்டர் எனவே பிறர்க்குத் தொண்டுபட்டுக் குற்றேவல் செய்தொழுகும் கீழ்மக்களையே ஈண்டுத் "தொண்டர்" என்றா ராயிற்று. துருத்தேவதை, வடசொற் சிதைவு. இடம், கோயில் எல்லை.
- ------------------
1. குறள். 114. 2.பழ. 5.
வேந்தன் தேவியை வணங்குதல்
பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாடம் அடைந்து செறிகழல்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக என்றரோ. 19
உரை:- பாவமூர்த்தி படிவம் இருந்த-பாவத்தின் வடிவ மாகிய சண்டமாரியின் உருவச்சிலை இருந்த, அத்தேவி மாடம் அடைந்து-அவள் கோயிலை யடைந்து, செறிகழல் மாவலோன்-செறிந்த கழலையணிந்த குதிரை செலுத்து வதில் வல்லவனாகிய மாரிதத்தன், வலம் கொண்டு-வலம் வந்து, தேவி எம் இடர் சிந்துக என்று-தேவியே எமது இடர்களைக் களைவாய் என்று சொல்லித் துதித்து, வணங் கினான்-வணங்கி நின்றான் எ-று.
தேவி, இரண்டனுள் ஒன்று சுட்டுமாத்திரையாயும், மற்றொன்று விளியாயும் நின்றன. மாவலோன் மாடம் அடைந்து, வலம்கொண்டு, சிந்துக என்று வணங்கினான் என இயையும். மாடம், திருக்கோயில். மாவலோன் என்றதனால் தேவி கோயிற்கு அரசன் குதிரைமேல் வந்தான்போலும். பிறாண்டும் (307) இவ்வாறே உரைத்துக்கொள்க.
-----------
தேவிக்குப் பலியீடு குறித்து வந்துள்ள உயிர்த்திரள்
மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகரம் ஆடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன். 20
உரை:- மன்னன் -அரசனான மாரிதத்தன்; ஆணையின்- தான் இட்ட கட்டளைப்படி; மாமயில் தொகை-அழகிய மயிற்கூட்டமும்; வாரணம் தொகை-கோழிகளிின் கூட்ட மும்; துன்னு சூகரத்தொகை-நெருங்கிய பன்றிகளின் திரளும், ஆடு எருமைத்தொகை-ஆடு எருமை முதலியவற் றின் திரளும் என்ற; இன்னசாதி விலங்கில்-இந்த இனத்து விலங்குகளில்; இரட்டைகள் பின்னி வந்து பிறங்கின- இரண்டிரண்டாகப் பிணிக்கப்பட்டுவந்து மிகுந்து நின்ற வற்றை; கண்டனன்-கண்ணாரக்கண்டான் எ-று.
தொகை யென்பதனை மயில் முதலிய ஏனையவற்றிற்கும் கூட்டுக. புள், விலங்கு என்ற இவற்றை ஆணும் பெண்ணுமாக இரண்டிரண் டாய்க் கொணர்ந்து நிறுத்தினமை தோன்ற "இரட்டைகள்" என் றார்; பின்னர் ஆணும்பெண்ணுமாகிய மக்களிரட்டையைக் கொணர் தலின், இவ்விரட்டை ஆணும் பெண்ணுமாதல் பெற்றாம். இவற்றைத் தனித்தனியின்றி இரட்டையாய்ப் பிணித்து வந்தனரென்றற்கு, "பின்னிவந்து" என்றார். பிறங்குதல், மிக்குத்தோன்றுதல். "கண்டனன்" என்றார்,அவன்கருத்தில் அப்பெருந்தொகையான உயிர்களைக் கண்டும் இவையனைத்தும் வறிதே கொலையுண்கின்றனவே என்ற அருட்கருத்துச் சிறிதும் பிறந்திலது என்பதை வற்புறுத்தற்கு.
--------------
மாரிதத்தன், தான் நரபலியிடுவது தக்கதெனக் கருதுதல்
யானிவ் வாளினின் மக்களி ரட்டையை
ஈன மில்பலி யாக இயற்றினால்
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா. * 21
----------
(பாடம்)* ஆற்றென.
உரை:- இவ்வாளினின்-இந்த வாட்படையால், மக்கள் இரட்டையை-ஆணும் பெண்ணுமாகிய மக்களுள் இரட்டை யரை, ஈனமில் பலியாக-தாழ்வில்லாத பலியாக, யான் இயற்றினால்-யான் வெட்டித்தருவேனாயின், ஏனை மானுயர் தாம்-ஏனைய மாந்தரெல்லாரும், இவ்விலங்கினில் ஆன பூசனை-இவ்விலங்குகளைக்கொன்று செய்வதாகிய பலி யீட் டினை, ஆற்றுதல் ஆறு எனா-செய்தல் முறையாம் என்று கருதி எ-று.
தலைவனாகிய தான் தேவிக்குப் பலிகொடுத்த பின்பே, ஏனை மக்கள் தாம் கொணர்ந்த உயிர்களைப் பலியிடுதல் முறையென்று வரிசை வகுக்கின்றான் என்பார், இவ்வாறு கூறினார். தானும் விலங் கிரட்டையைப் பலிதரின், தன் தலைமைக்கு அமையாது என்ற கருத்தால், "மக்களிரட்டையை ஈனமில் பலியாக இயற்றினால்" என்றான். "ஈனமில் பலி" என்றும், "விலங்கினில் ஆனபூசனை" என்றும் கூறியன, விலங்கு முதலியவற்றைப் பலியிடல் தனக்குத் தாழ்வு என்றும், உயிர்களைக்கொன்று பலியிடுவதுதான் தேவிக்குச் செய்தற்குரிய வழிபாடு என்பது அவன் கருத்தென்றும் உணர்த்தி நிற்கின்றன. இனி, "ஈனமில்பலி" என்பதனை"ஈனமில் மக்க ளிரட்டையைப் பலியாக" எனப் பிரித்துக்கூட்டி, "உடற்குற்றம் சிறிது மில்லாத மக்களுள் இரட்டையரை" என்று கோடலும் அரசன் கருத்தாகும். அதனை வருஞ்செய்யுளுட் காண்க.
--------------
நரபலிக்கு இரட்டைப் பிள்ளைகளை நாடிக்கொணர்க என வேந்தன் சண்டகருமனைப் பணித்தல்
வாட லொன்றிலர்* மக்களி ரட்டையர்
ஈடி லாத இயல்பின ரிவ்வழி
ஏட சண்ட கரும! தந் தீகென
நாட ஓடினன் நன்னகர் தன்னுளே. 22
--------
(பாடம்)* ஒன்றிலன், ஒன்றில.
உரை:- ஏட சண்ட கரும-ஏ, சண்ட கருமனே, வாடல் ஒன்று இலர்-மேனியில் குறை சிறிதும் இல்லாதவரும், மக் கள் இரட்டையர்-மக்களுள் இரட்டையரும், ஈடிலாத இயல்பினர்-நிகரில்லாத குணஞ்செயல்களை யுடையவரும் ஆகிய இருவரை, இவ்வழி தந்தீக என-இவ்வி டத்தே சென்று தேடிக்கொணர்க என்று ஏவ, நல்நகர் தன்னுள்-அந்த நல்ல நகருக்குள்ளே, நாட-தேடிக் கொணர்வதற்காக, ஓடினன்-விரையத் திரும்பி வருவது குறித்து அச் சண்டகருமன் ஓடினான் எ-று.
தான் "ஈனமில் பலி" யிட விரும்பினானாதலின், அவ்வீன மின்மை விளக்குவான், ஆண் பெண் என்ற இருபாலினும் முறையே உறுப்புக்குறைவின்மையும், இரட்டைப் பிறப்புடைமையும் ஈடிலாத இயல்புடைமையும் எடுத்தோதினான்.ஈடின்மை, உருவாதலும் குணத் தாலும் செயலாலும் ஒப்பில்லாமை. தந்தீக, வினைத்திரிசொல். நன்னகரென்றார், ஆங்குக் காணப்படும் இரட்டையரால் இப்பலியாகிய தீவினை கடிந்து அரசன் அருளும் அறமும் கொண்டு ஓங்குகின்றானா தலின். அரசன் குறித்த இலக்கணமுடைய இரட்டையர் கிடைப் பதன் அருமை நினைந்து "நாட" என்றும் "ஏட" என்று அது நினையாது விளித்த அரசன், தாழ்ப்பின் கண்ணோடாது ஒறுப்ப னென்ற அச்சமுடைமை தோன்ற, "ஓடின" னென்றும் கூறினார்.
--------------
சுதத்த முனிகள் உபாசகர் குழுவுடன் வருதல்
ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்
தூயமா தவத்தின் மிக்க உபாசகர் தொகையுஞ் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன்றன்ன* மாதவர்க் கிறைவன் வந்தான். 23
---------
(பாடம்) * குணக்குன்றென்ன.
உரை:- ஆயிடை-அந்நகர்க்கு அப்போது, சுதத்தன்- சுதத்தன் என்னும் முனிவன், ஐஞ்ஞூற்றுவர் அருந்தவர்கள் தொகையோடு-அரிய தவத்தை யுடையவர் ஐந்நூறு பேர்களும், தூய மாதவத்தின் மிக்க-தூய்தான பெரிய தவத் தால் மேம்பட்ட, உபாசகர் தொகையும்-உபாசகர் கூட்ட மும், சூழ-சூழ்ந்துவர, சேயிடைச்சென்று-சேய்மைக் கண் சென்று, ஓர் தீர்த்த வந்தனை செய்ய-ஆங்குள்ள ஒரு சைத்தியத்தில் எழுந்தருளிய அருகபரமேட்டியைக் கண்டு வழிபடுவதற்காக, செல்வோன்-செல்வானாய், மாயம் இல்-குற்றமில்லாத, குணக் குன்றன்ன மாதவர்க்கு- குணங்களையும் மலைபோன்ற பெரிய தவத்தையு முடைய முனிவர்க்கு, இறைவன்-இறைவனாகிய அவன். வந்தான்- வந்துகொண்டிருந்தான் எ-று.
தவமாவது, "வென்றவர் படிமம் தாங்கி, சித்தமெய் மொழிகள் மூன்றில் இருதொடர்ப் பாட்டி னீங்கி, பத்தறம் பன்னி ரண்டாம் தவத்தொடு பயின்று தன்கண், உத்தமக்காட்சி ஞானவொழுக்கத்தை யழுத்தல்"1 என்று மேருமந்தர புராணம் கூறுவது காண்க. இத்த வத்தின் அருமையும் உடையோரது பெருமையும் தோன்ற "அருந் தவர்" என்றும் "மாமயில் குணக்குன் றன்ன மாதவர்" என்றும் கூறினார். இவர்தாம் மாதவர், ஓசனர், மோனதரர், உக்கதவர், தித் ததவர், தத்ததவர், கோரதவர் எனப் பலராவர்; இவர் இயல்பினை மேருமந்தர புராணத்துட் காண்க. உபாசகராவார், உபவாசிகள். "அட்டமி பருவங்களில் தமது சக்திக்கு அனுகூலமாகத் தருமகதா சிரவணமும் பஞ்ச நமஸ்கார ரூபாதிகளோடு கூடிக் கிருஷியாதிகளை நிவர்த்தித்து உபவசித்தலும் ஏகபுத்தி பண்ணுதலுமாகிய"2 இவற்றை யுடையவர் உபாசகர். வாமனமுனிவரும் "பக்க இவர்களை, முதல் நோன்புடைய பரமதவர்"3 என்று உரைப்பர். தொகை யென்பதை அருந்தவர்க்கும் கூட்டுக. ஒடு, ஒருவினை யொடு. உபாசகரும் "பரமதவ" ராதலின், "தூயமா தவத்தின்மிக்க உபாசகர்" எனச் சிறப் பித்தார். அருகபரனமேட்டியைத் "தீர்த்தன்" என்பது வழக்கா தலின், அவனை வழிபடுஞ் செய்கை "தீர்த்தவந்தனை" எனப்பட் டது. "செய்தவப் பாவமெல்லாம் தீர்த்திடும் தீர்த்தன்"4 எனத்தேவரும், "தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"5 எனச் சமயதிவாகரரும் வழங்குதல் காண்க. மாயமில் குண மெனவும், குன்றன்னமாதவமெனவும் வகுத்துக்கொள்க. "மலைய னைய நிலையுடைய மாதவர்க ளொருபால்"6 என வருதல் காண்க. "குணமென்னும் குன்றேறி நின்றார்"7 என்றாற்போலக் கொள்ளினுமாம். இறைவன், சுட்டுமாத்திரையாய் நின்றது. வந்து நகர்ப்புறத்தே ஒரு பொழிலுள் தங்குகின்றானென வருஞ்செய்யுளுட் கூறுதலின், வந்தான் என்பதற்கு வந்துகொண்டிருந்தான் எனல் வேண்டிற்று.
- -----------
1. மேரு.411. 2.அஷ்ட பதார்த்தசாரம் 3. மேரு. 1097 4. சீவக. 821 5. நீல. 661
6. மேரு. 1096 7. குறள். 29
------------------
சுதத்தன் அனசனத் தவமமர்தல்
வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்
சிந்தையால் நெறிக்கண் தீமை தீர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனங்கொண் டண்ண லனசனத் தவம மர்ந்தான்
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடும் மாதோ. 24
உரை:- முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் வந்து-சுதத்தன் மேலேகூறிய அருந்தவரும் உபாசகரும் உடன்வர வந்து, மாநகர்ப்புறத்து ஓர் வளமலர் பொழி லுள்-அழகிய இராசபுரத்துக்கு வெளியேயுள்ள வளவிய மலர் நிறைந்த ஒரு சோலையில், விட்டு-தங்கி, நெறிக்கண் தீமைதீர்த்திடும் நியமம்-தான்வந்த நெறியின்கண் தன்னை யறியாது நிகழ்ந்த பாவத்தைப் போக்குதற்குரிய நியமத்தை, சிந்தையால் முற்றி-மனத்தால் மந்திர தியானத்தால் போக் கிக்கொண்டு, ஆசனம் கொண்டு-ஓரிடத்தே இருந்து, அனசனத்தவம் அமர்ந்தான்-தவரும் உபாசகரும் உள்ளிட்ட அனைவருடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தான் எ-று.
சுற்றம் முழுவதினோடும் வந்து , விட்டு, நியமமுற்றித் தவம் அமர்ந்தான் என இயைக்க.
நெறியின்கண் தாம் வருங்கால் உடலாலும் சொல்லாலும் உள் ளத்தாலும் தம்மையறியாது நிகழ்ந்த குற்றத்தைப் போக்குதற் காகப் பஞ்சநமஸ்கார மந்திரத்தையுரைப்பது அப்பியந்தர தவம் எனப்படுகிறது. "செய்கை சொல் மனங்களால், மரிய மாசினைக் கெடுக்கும் அத்திவாரமாகிய பெரியவர் மனங்கொளப்... பெருந்தவம்"1 என்று மேரு மந்தரபுராணம் கூறுதல் காண்க. அனசனத்தவம் -*உண்ணாநோன்பு; இதன் பயனை "வினைகளுக் குதிர்ச்சி வேட்கை நீக்கி மெய் வசம்வரல், புனைவரும் பொறிச் செறிப்புயிர்க்கழிவு போற்றுதல், நினைவின தொருக்கமும் நெறி விளக்கமும் செயும்"2 என்று அப்புராணம் கூறும். விடுதல், தங்குதல். கழுவாய் முறையாதலின் இத்தவத்தை "நியமம்" என்றார். "சிந்தையால்" என்றதனால், ஏனைச் சொல்லாலும் செயலாலுமென்பது கொள்ளப்படும்.
- --------------
*ந+அசனம்; அந்+அசனம்-அநசனம்; உணவு உண்ணாமை.
1. மேரு.429. 2. மேரு. 423.
அபயருசி அபயமதி யென்னும் இரட்டையர் உபாசகர்குழுவில் இருத்தல்
உளங்கொள* மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை†
இளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும் ‡
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார். 25
----------
(பாடம்)* உளமதில். †யபயமுன் ருசியுந்தங்கை. ‡ ளபயமுன் மதியென்பாளும்.
உரை:- உளங்கொள மலிந்த கொள்கை- மனதிலே நிரம் பக்கொண்ட விரத வொழுக்கங்களையுடைய, உபாசகர் குழுவி னுள்ளார்-உபாசகர் கூட்டத்தில் உள்ளவரும், அளந் தறிவரிய கேள்வி-அளந்து காண முடியாத கேள்வியை யுடையவருமான, அபயமுன் உருசி யென்பானும்-அபயம் என்ற பெயரின் முன் ருசியென்பது சோர்ந்த அபயருசி என்ற பெயர் சொல்லப்படுபவனும், தங்கை-அவன் தங்கையாகிய, இளம் பிறை யனைய நீராள்-இளம் பிறையை யொத்த இயல்பினையுடைய, அபயமாமதி யென்பாளும்- அபயமதி எனப்படுபவளும், துளங்கிய மெய்யர்-தளர்ந்த மேனியராய், உள்ளம் துளங்கலர்-தளராத உள்ளமுடைய ராய், தொழுது நின்றார்-சுதத்த முனிகளை வணங்கி நின்றார்கள் எ-று.
புரோடோப வாசிகட் குரிய விரதமும் ஞானமும் நிரம்பி யிருத் தல் பற்றி "உளங்கொள மலிந்த கொள்கை" என்றார். உளம் கொளமலிதலாவது ஐயந்திரிபற வுணர்ந்து செய்கையிற் கைவரப் பெறுதல்.அளக்கலாகாத கலைத்துறை பலவும் கற்று நிரம்பியிருப் பது பற்றி, அபயருசியை "அளந்தறிவரிய கேள்வி" யென்றார். இனி, இதற்கு அளவைகளைக் கொண்டு வாதம் புரிந்து வெல்லுதற் கரிய தருக்கநெறி முழுதும் நிரம்பக் கற்றும் கேட்டுஞ் சிறந்த அறிவு என்றுமாம். கலை நிரம்பியிருப்பது பற்றி அபயருசிக்குப் பிறாண்டும் முழுமதியை, உவமிப்பர். அபயமதி அத்துணையளவு அறிவு நிரம்பா மையின், "இளம்பிறையனைய நீராள்" என்றார். பசியால் மேனி வாடினாராயினும், "உளங்கொளமலிந்த கொள்கை" யில் வாட்ட முறாமையின், "துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர்" என்றார். அப யமாமதி என்புழி, மா, அசை; "அநங்கமாவீணை" என்றாற்போல.
-----------
இரட்டையர் சரிதை போதல்
அம்முனி யவர்கள் தம்மை அருளிய மனத்த னாகி*
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முடன் உண்டி மாற்றா தின்றுநீர் சரிதை போகி
நம்மிடை வருக என்ன நற்றவர்த் தொழுது சென்றார். 26
-----------
(பாடம்) *மனத்தராகி-நற்றவற்றொழுது $அஷ்டபதார்த்த சாரம்-சாரித்ரம்.
உரை:- அம்முனி-அச்சுதத்த முனிவன், அவர்கள் தம்மை-அபயருசி அபயமதியாகிய இருவரையும் பார்த்து, அருளிய மனத்தனாகி-அருள்மேவிய உள்ளத்தனாய், வம்மின்- வருக, நீர் பசியின் வாடி வருந்திய மெய்யரானீர்-நீவிர் பசியி னால் வாடி வதங்கிய மேனியுடையீராயினீர், இன்று-இந்நா ளில், எம்முடன் உண்டி மாற்றாது-எம்மோடு கூடி உணவு கொள்ளா தொழிவதை விட்டு, சரிதை போகி-பிச்சையேற் றுண்டு, நீர் நம்மிடை வருக-நீவிர் நம்பால் வருவீராக, என்ன-என்று பணித்தருள, நற்றவர்த் தொழுது சென் றார்-நல்ல தவத்தையுடைய முனிவர் கூட்டத்தை வணங்கி விட்டுச் சென்றனர் எ-று.
தொழுது நின்ற இருவர்தம் மேனியும் குறிப்பும் கண்டமாத்தி ரையே முனிவற்கு அருள் நிறைந்து பொழிவதாயிற் றென்பார், "அருளிய மனத்தனாகி" யென்றார். வம்மின், வருக என்னும் பொருளதாய முகமனுரை. இளையராதலின், அவர் மேனியில் வாட்டமும் மனத்தில் வருத்தமும் முனிவன் கண்ணைக் கவர்ந்தன என அறிக. உணவு மறுத்தலை உணவு மாற்றுத லென்றும், உண்டலை, உணவுமாற்றாமை யென்றும் கூறுபவாதலின், அவ்வியல்பு வழுவாது "உண்டிமாற்றாது" என்றார். தனக்குச் சீலமன்மையின், உண்டுவருக என்றிலன். சரிதை, செல்லுதல்; வடசொற்சிதைவு. சரிதை போதலாவது, "விசுந்தராகிய ஜைன ஜனங்களது கிருகம் புக்குப் பிக்ஷாவிருத்தி பண்ணிப் பின்பு ஏகக் கிருகத்துள் புக்கிருந்து பாணிபாத்ரத்தா:$ லுண்டல். விடை பெற்றுச்செல்வார் தலைமை வீற்றிருக்கும் சுதத்தனுடன், ஏனை முனிபுங்கவரையும் தொழுது விடை பெற்றமை தோன்ற "நற்ற வர்த்தொழுது சென்றார்" என்றார்.
நற்றவற்றொழுது-என்பது பாடமாயின், நற்றவனாகிய சுதத் தனைத் தொழுது என்று உரைக்க. அப்போது அது சுட்டுப் பொருட்டாமாறு காண்க.
முனிவன் இவ்விருவரையும் சரிதை போகுமாறு ஏவுதற்கு ஏது, மாரிதத்தனது நல்வினையென அறிக.
------------------
இரட்டையர் நகர்க்குட் சேறல்
வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையொன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருவப் புக்கார். 27
உரை:- வள்ளிய மலரும் சாந்தும் மணிபுனை கலனும் இன்றாய்- வளவிய பூமாலையும் சந்தனமும் மணி முதலிய வற்றாலாகிய அணிகலன்களும் இன்றி, வெள்ளியது உடை ஒன்றாகி-வெள்ளாடை யொன்றை யுடுத்துக்கொண்டு, வென்றவர் உருவம் ஏலார்-புலன்களைவென்ற முனிவருடைய கோலத்தை ஏலாராயினும், கொள் இயல் அமைந்த-காண் பார் தகும் எனக் கொள்ளத்தகுந்த இயல்பு அமைந்த, கோலக் குல்லகவேடம் கொண்ட-அழகிய இளமைப் பரு வத்துக்குரிய கோலம்கொண்ட, வள்ளலும் மடந்தை தானும்- வள்ளலாகிய அபயருசியும் அபயமதியும், வளநகர் மருள- வளவிய நகரத்தவர் கண்டு வியப்பெய்துமாறு, புக்கார் அந்நகர்க்குள்ளே சென்றார்கள் எ-று.
இன்றாய்,ஒன்றாகி, அமைந்த குல்லக வேடம் என இயைக்க, குல்லகம், இளமை; வடசொற் சிதைவு. கோலக் குல்லகம் என்கின்றாராதலின் அதற்கேற்ப, மலரும் சாந்தும் புனைகலனும் விதந்து விலக்கினார். வென்றவர் உருவத்துக்கு வெள்ளாடையும் வேண்டாமையின், அதனையுடையராய இவர்களை. "வென்றவ ருருவமேலார்" என்றார். கொள்ளியலமைந்த என்பதற்கு, கோலம் கோடற் கமைந்த என்றலுமொன்று. மேனியின் தோற்றமும் வனப் பும் இளமையுடைமையினை மெய்ப்படுத்திக் காட்ட, உள்ளத்தே நிறைந்த முதுக்குறைவு விளங்கினமையின், அவர் கொண்டிருந்த தோற்றத்தைக் "குல்லக வேடம்" என்றார். தன்னைக் கொல்ல லுற்ற மாரிதத்தனுக்கு உறுதி பயப்பன நல்குதலின், அபயருசியை ஈண்டு "வள்ளல்" என்றார். மடந்தை, பருவமன்று; பெண்பாற் பெயர்.
---------------
இருவரும் தெருவில் உண்டியேற்றல்.
வில்லின தெல்லை கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யிர்க்கண் ணகைமுத லாய நாணி
இல்லவர் எதிர்கொண் டீயின் எதிர்கொளுண் டியரு மாகி*
நல்லற அமிர்த முண்டார் நடந்தனர் வீதி யூடே. 28
-------
*(பாடம்) ஏற்றுணு முளத்தராகி.
உரை:- வில்லினது எல்லை கண்ணால் நோக்கி-செல்லும் போது எதிரே ஒரு விற்கிடைத் தூரம் கண்களால் கூர்ந்து நோக்கி, மெல்லடிகள் பாவி-அடிகளைமெல்ல வைத்து, உயிர்க்கண் நல்லருள் புரிந்து-ஓரறி வுயிர்முதல் அனைத் துயிர்க்கும் நல்ல அருளைச் செய்து, நகை முதலாய நாணி- நகை முதலிய குற்றம் தங்கண் நிகழாவாறு நீக்கி, இல்லவர் எதிர்கொண்டு ஈயின்-மனையவர் தம்முடைய வருகைகண்டு எதிர்கொண்டு மனமுவந்து ஈவாராயின், எதிர்கொள் உண் டியருமாகி-எதிரேற்றுண்ணும் உணவினையுடையராய், நல்லற அமிர்தம் உண்டார்-நல்லறமாகிய அமிர்தத்தை யுண்ட இருவரும், வீதியூடு நடந்தனர்-தெருவழியே செல் வாராயினர் எ-று.
வில்லினது எல்லை, நான்குமுழதூரம். நெடிது நோக்கின் இடையிலுள்ள சிற்றுயிர்கள் கட்புலனாகாமை குறித்து, ஒருவிற் கிடையே நோக்குதல் கூறினார். அடிவைத்தலாகிய தொழிலது தன்மையினை அடிமே லேற்றி "மெல்லடிகள் பாவி" என்றார்; அப்பண்பின் பயன் அத்தொழிலால் உறுதலின், பரவுதல், அடியிடு தல். நல்லருள் என்றார்., ஓரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமையின். இளமையின் பயனாதலின், நகையினை விதந்தோதினார்; 'எள்ளல் இளமை பேதைமை மடனென், றுள்ளப்பட்ட நகைநான்கென்ப'1 என ஆசிரியர் ஓதுதல் காண்க. நகை, குற்றமாதலின், அது நிகழுங்கால் உயர்ந்தோர் செய்வது இதுவாகலின் "நாணி" யென்றார். மனமுவந்தீயின் என்பார், "எதிர்கொண்டீயின்" என்றார்; உவப்பில்வழி எதிர்கோடல் இன்றாகலின். அதனை விரைந்தேற்றனர் என்றற்கு "எதிர்கொள் உண்டிய" ரென்றார்.
- ------
1. தொல். மெய்ப்.-4.
அறத்தை அமிர்தென்றல் சைன நூலில் பயில வழங்கும் வழக்கு; "ஊட்டரும் அறவமிர் துலக முண்டதே"1 எனத் திருத்தக்க தேவரும் "மாண்புடை யடிகள் தறவமிர் துண்ட வாற்றலான்"2 எனத் தோலாமொழித்தேவரும் "அறவியான்றானும் அறவமிர்தீந் தான்"3 என நீலகேசி யாசிரியரும் பிறரும் கூறுப.
--------------
மக்களுள் இரட்டையரை நாடுவான் போந்த சண்டகருமன்
இரட்டை யாகிய இவ்விருவரையும் காண்டல்
அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
கண்டனன் கண்ட* சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவிலா மதனும் போன்று
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான். 29
உரை:- கண்டால்-தம்மைக்காணின், அண்டலர் எனி னும்-பகைவரே யெனினும், அன்பு வைத்து-தம்மனத்துட் கொண்ட பகைமை நீங்கி அன்புகொண்டு, அஞ்சும்-தீங்கு செய்தற்கு அஞ்சத்தக்க, நீரார் கண்டனன். - தன்மையினை யுடைய இருவரையும் சண்டகருமன் பார்த்தான், கண்ட சண்டகருமன்-பார்த்த அவன்., மனம் கலங்கா-மனம் கலங்கி, புண்டரீகத்தின் கொம்பும்-தாமரைப்பூவிலிருக்கும் திருமகளையும்- பொருவிலா மதனும்-ஒப்பில்லாத மன்மதனை யும், போன்று- போல, இளம்பருவம்-இளமைப்பருவம், கொண்டு-பெண்ணுமாணுமாகிய இரண்டுருக் கொண்டு, இவண்-இந்நகருக்கு இப்போழ்தில், குழைந்து வந்தது- வாடியமேனியுடன் வந்தது, என் கொல்-என்னகாரணமோ, என்றான்-என்று தனக்குள்ளே நினைத்தான் எ-று,
இளமைச்செவ்வி யுடையோரைக் காணின் எத்துணைப் பகைமை யுடையோர்க்கும் நெஞ்சில் ஈரம் பிறக்குமாதலின் "அண்டலரெனி னும் கண்டால் அன்புவைத்து" என்றார்; "செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்"4 எனப் பண்டைச்சான்றோரும் கூறுதல் காண்க. அன்புவைப்பதன் பயன், அன்புற்ற பொருட்கு
ஏதம் வருமோஎன அஞ்சும் அச்சம் பயத்தலாகலின், "அஞ்சும் நீரார்" என்றார்.
- ------------
1. சீவக. 3060. 2. சூளா.சித்தி. 7
3. நீல. தரும. 118. (பாடம்) *கண்டு 4. அகம். 66.
அரசன் ஏவலை மேற்கொண்ட உள்ளத்தனாய் வரும் சண்டகருமன் உள்ளத்திலும், அவ்வேவலைத் தம் காட்சியால் மறப் பித்து அன்பாற் குழையப்பண்ணுதலின் "அன்புவைத்தஞ்சுநீரார்" என்றவர், சண்டகருமன் இவர்களைக் கண்டு மனம் கலங்கினான் என்றார். மேனிவனப்பால் அன்பும், விரதத்தால் அச்சமும் பயப்பிக் கும் நீர்மையுடையார் என்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கண்டமாத்திரையே சண்டகருமன் இவ்விருவருடைய வனப்பாலும் வாட்டத்தாலும் தன்னை மறந்து வியந்துநின்றமை தோன்றக் "கண்டனன் கண்ட சண்ட கருமனும்" என்றார். உம்மை, சிறப்பு. அபயமதியை முன்பும் அபயருசியைப் பின்பும் அவன் கண்டமை விளங்க "புண்டரீகத்தின் கொம்பும் பொருவிலா மதனும்" என்றார். அருவப்பொருளான இளமைச்செவ்வி உருவப்பொருளாய் ஆணும் பெண்ணுமாய் உருக்கொண்டு வந்ததென்னும் கருத்தின னாய்,உருக்கொண்டு என்பவன், உருவிலே தோய்ந்து நின்றமையின் கொண்டென்றே யொழிந்தான். இது பிறர்கட்டோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை. இவ்வாறு காண்போர்த் தடுக்கும் காட்சியுடைய இருவரும் பசியால் வாடியிருந்தமையின், அதனைத் தேறாது, "குழைந்திவண் வந்த தென்கொல்" என்று நினைக் கின்றான்.
சண்டகருமன் இருவரையும் உழையரால் கைப்பற்றிக்கொண்டு போதல்
எனமனத் தெண்ணி நெஞ்சத் திகலுடை* மன்ன னேவல்
தனைநினைந் தவர்கள் தம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான்
இனையது பட்ட தென்னென்++ றிளையரு மெண்ணி னாரே. 30
-----------
(பாடம்) *திரங்கிய. ‡தின்றென்.
உரை:- எனமனத்து எண்ணி-சண்டகருமன் இவ்வாறு தன்மனத்தே நினைத்து, நெஞ்சத்து இகல்உடை மன்னன் ஏவல்தனை நினைந்து- நெஞ்சிலே மாறுபாட்டையுடைய வேந் தனது கட்டளை நினைவுவரவெண்ணி, தன் உழையவரின்- தன்னொடுபோந்த வீரர்களைக்கொண்டு, அவர்கள் தம்மை வவ்வி-அவர்களை வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான் - சினம் மிகக்கொண்டுள்ள சண்டமாரியின் கோயிலுள்ள திக்கு நோக்கிச் செல்வானாயினான், இளையரும்-இளையோராகிய அபயருசியும் அபயமதியும், இனையது பட்டது என் என்று எண்ணினார்-இது நிகழ்வது என்னோ வென்று திகைப்பாரா யினர் எ-று.
"இளம்பருவம் என்கொக் குழைந்திவண்வந்தது" என நினைத்து இரக்கமுற்ற சண்டமருகன், அரசன் ஏவலை நினைந்து இரக்கமிழந்து அச்சம் மிகுந்து, தானே சென்று பற்றுதற்கு எண்ண மின்றி உழையவரால் பற்றிச்சென்றான் என்பார் "உழையவரின் வவ்வி" என்றும், அவரது மேனி யழகும் வாட்டமும் தன்நெஞ்சின் திண்மையைக் குலைக்குமென்ற கருத்தால் "தேவி கோயில் திசை முகம் அடுத்துச் சென்றான்" என்றும் கூறினார். அரசன் சினமே யன்றித் தேவியின் சினமும் அவன் நெஞ்சில் நின்று நிலவினமை தோன்ற "சினமலிதேவி" யென்றார்போலும். நல்விரதம் பூண் டிருப்பினும் இளமைச் செவ்வி குன்றாமையின், "இளையரும்" என்று இரங்கிக் கூறினார்.
அபயருசி தங்கையான அபயமதி நெஞ்சில் அஞ்சுதலை யறிதல்
வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னோ டொன்றி
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினால் ஐயன் தங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
தன்கையான் முன்கை பற்றித் தானவட் கினைய* சொல்வான். 31
------
*(பாடம்) கொண்டு, கொன்று, கின்ன.
உரை:- மதியம்-முழுத்திங்களானது, ஓர் மின்னோடு ஒன்றி-ஒருமின்னலுடன் கூடி, தன் பரிவேடம் தன்னுள்- தன்னுடைய பரிவட்டத்தின் நடுவே, வருவதுபோல்-செல் வதுபோல, வன்சொல்வாய் மறவர் சூழ-கடுஞ்சொற் களையே சொல்லும் வீரர் சூழ்ந்துவரச் செல்லும், ஐயன்- மூத்தோனான அபயருசி, தன் தங்கை நெஞ்சில் அஞ்சுதல்- தன் தங்கையாகிய அபயமதி தன் மனத்தே அஞ்சுவதை யுணர்ந்து, அஞ்சி-அவள்கொண்ட அவ்வச்சத்தாற் பிறக் கும் குற்றத்துக்கு அஞ்சி, அன்பினால்-அன்போடு, அவள் முன்கை-அவளுடைய முன்கையை, தன்கையால் பற்றி- தன்னுடைய கையால் பற்றிக்கொண்டு, அவட்குத்தான் இனைய சொல்வான்-அவளுக்கு இவற்றைச் சொல்லு வானாயினான் எ-று.
வன்சொல்லை யன்றிப்பிற நன்சொற்களைப் பயிலாதவரென் றற்கு "வன்சொல்வாய் மறவர்" என்றார். மறவரெனவே, அவ் வன்சொற் பிறத்தற் கேதுவாகிய நெஞ்சீரமின்மையும் கூறினாராம். கலை நிரம்பியிருத்தல்பற்றி அபயருசிக்கு மதியம் உவமமாயிற்று. மதி யம்-முழுத்திங்கள். அஞ்சுதல் தெளிவிலார் செயலாதலாலும், அது வெளிப்படின் மறவர் துன்புறுத்துவராதலாலும், அபயருசி தன் தங்கையின் அச்சமுணர்ந்து அஞ்சினானென்பார் "அஞ்சி" யென்றும், அச்சத்தைப்போக்கும் கருத்தினனாதலின் "தங்கை முன்கைபற்றித் தானவட்கினைய" சொல்வானானான் என வறிக.
உடம்பிற்கேயன்றி உயிர்க்கு ஏதமில்லையென அபயமதியை அவன் தேற்றல்
தங்கைநீ யஞ்சல் நெஞ்சில் நமக்கிவண் அழிவொன் றில்லை
இங்குநம் உடம்பிற் கேதம் எய்துவ திவரின் எய்தின்
அங்கதற் கழுங்கல் என்னை யதுநம தன்றென் றன்றோ
மங்கையாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்த தென்றான். 32
உரை:- நங்கை-நங்காய், நெஞ்சில் நீ அஞ்சல்-நின் நெஞ்சின்கண் நீ அஞ்சுவதொழிக. இவண்-இப்போது, நமக்கு அழிவு ஒன்றும் இல்லை-நமக்குத் தீங்கு சிறிதும் இல்லை, (எனினும்) இங்கு-இப்பிறப்பின்கண், நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது-நம் உயிர் நிற்றற்கு இடமாகிய உடம்பிற்கு உளதாகும் அழிவு என்றேனும் வரக்கடவதாகும். இவரின் எய்தின்-அஃது இவரால் எய்துமாயின், அதற்கு-அதன் பொருட்டு, அழுங்கல் என்னை-அஞ்சி வருந்துவது என்னை யோ, மங்கை-மங்கையே, அது-அவ்வுடம்பு, நமது அன்று என்று அன்றோ-நம் உயிரேபோல் நமக்கே உரிய தன்று என்று தெளிந்தன்றோ, யாம் அதனை முன்னே மனத் தினில் விடுத்தது-நாம் அவ்வுடம்பை சுதத்த முனிகளை யடைந்தபோது அவர் தெளிவிக்கக்கேட்டு மனத்தால்அதன் பால் பற்று வையாது விட்டோம், என்றான்-என்று உரைத் தான் எ-று.
நங்கை, மங்கை யென்பன அண்மைவிளி. மங்கை, பருவ மன்று; பெண்பாற்பெயர். முதற்கண் அச்சத்தைப் போக்கவேண்டுதலின், "அஞ்சல்" என்றும், அதற்கு ஏதுவாக "நமக்கு இவண் அழிவொன்றில்லை" என்றும் கூறினான். அழிவெய்து மெனக் கருதி அபயமதி யஞ்சுதலின், அவ்வழிவின் இயல்புணர்த்துவான், அஃது உயிரைப் பற்றாது உடலைப்பற்றி நிற்பது என்பான் "உடம்பிற் கேதம்" என்றும் உடலின் நிலையாமை சுட்டி "எய்துவது" என்றும், அது வருங்கால் யாதானு மொரு வாயில் வேண்டுதலின், இம்மறவரை வாயிலாகக் கொள்ளும் என்பான் "இவரினெய்தின்" என்றும் கூறினான். இவரின் எய்தின் என்றதனால், எய்தாமையினை அவட்குத் தெளிவித்தானாம். உடலழிவிற்கு அழுங்குதல் நன் றன் றென்பான், சுதத்த முனிகள்பால் கேட்டுத் தெளிந்த தெளிவினை நினைவுறுத்தி "அது நமதன்றென்றன்றோ அதனை முன்னே மனத் தினில் விடுத்தது" என்றான்.
அச்சத்தாற்பயன் துன்பமே என்று கூறல்
அஞ்சின மெனினும் மெய்யே யடைபவந் தடையு மானால்
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு* மன்றி
அஞ்சுதல் துன்பந் தானே யல்லதும் அதனிற் சூழ்ந்த
நஞ்சென வினைகள் நம்மை நாடொறு நலியு மென்றான். 33
---------
(பாடம்)*பயநமைக்கதுவும்.
உரை:- அஞ்சினம் எனினும்-"எய்துவது" எண்ணி அஞ்சினோமாயினும், அடைப-எய்தக்கடவனவாகிய துன் பம், மெய்யே வந்து அடையும்-ஒழியாது வந்து பற்றும், ஆனால், -ஆதலால்; அஞ்சுதலதனின்-அஞ்சுவதால், நமக்கு என்னை பயன்-நமக்கு யாதுபயன், அதுவுமன்றி-அதுவேயு மன்றி, அஞ்சுதல் துன்பம்-அச்சமும் துன்பத்தையே பயக்கும், அல்லதும்-அன்றியும், அதனின் சூழ்ந்த வினைகள்-அதன்பால் காரண காரியமாய்ச் சூழ்ந்திருக்கும் வினைகள், நம்மை நாடொறும் நஞ்சென நலியும்-நம்மை நாளும் விடம்போல வருத்தாநிற்கும் எ-று.
எய்தக்கடவது குறித்து நாம் கொள்ளும் அச்சம் அதனை ஒரு காலும் தடுக்கும் நலமுடைத்தன்றென்றற்கு *"அஞ்சினமெனினும் மெய்யே அடைபவந்தடையும்" என்றான். எய்தக்கடவது நாம் அஞ்சுவதால் சிறிதும் தன்னியல்பில் திரியாது என்பது "மெய்யே" என்பதால் வற்புறுத்தப்பட்டது. தடுக்கும் நலமின்றாதலே யன்றி வருவதன் இயல்பைத் திரித்தலும் கூடாமையின், அச்சம் சிறிதும் பயனுடைத்தன் றென்பது எய்துதலால் "அஞ்சுத லதனின் என்னை பயன் நமக்கு" என்றான். அது, சாத்தனவன் என்றாற் போலச் சுட்டுமாத்திரையாய் நின்றது. அஞ்சுவது பேதைமை யென் றற்கு "அஞ்சுதல் துன்பந்தானே" என்றான். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்"1 என்று சான்றோருன் கூறுப ஏகாரம் தேற்றம். நஞ்சு, தன்னை யுண்டானை நினைவு செயலிழப்பித்துத் துன்புறுத்துவது போல, அச்சமும் துன்புறுத்தலின் "நஞ்சென நலியும்" என்றான். எனவே அச்சத்தைத் தீதெனக் கருதி நீங்குக என்பது குறிப்பு.
விலங்குகதித் துன்பம்
அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னநேக வாரத்
தொல்வினை துரப்ப ஓடி விலங்கிடைச் சுழன்ற போது
நல்லுயிர் நமர்கள் தாமே நலிந்திட இறந்த தெல்லாம்
மல்லன்மா தவனின் யாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. 34
--------
(பாடம்)* பிறவிதோறும் பெற்றன
உரை:- அன்னை-அன்னாய், நின்னொடு யானும்-நீயும் யானும், முன்-முற்பிறப்புக்களில், அநேக வாரம்- அநேக காலம், தொல்வினை துரப்ப ஓடி-பழவினை செலுத்தச்சென்று, விலங்கிடைச் சுழன்றபோது-விலங்கு கதியுட்பிறந்து வருந்தியபோது, நல்லுயிர்-நல்ல உயிர் களாகிய அவ்விலங்குகளை, நமர்கள்தாமே நலிந்திட- நம் மவரே கொல்ல, இறந்தது எல்லாம் -இறந்தும் பின்னரும் பிறந்து கொலையுண் டிறந்தும் பட்ட துன்பமெல்லாம், மல்லல் மாதவனின்-வளவிய பெரிய தவத்தையுடைய சுதத்த முனிகளால், யாம்-நாம், மறித்தும் உணர்ந்தனம்- அப்பிறவிகளில் உற்றுணர்ந்ததே யன்றி மீட்டும் கேட்டறிந் தோம், அன்றோ-அல்லவோ, அதனை மறந்து அச்சம் கொள்வது என்னை எ-று.
இருவருயிரும் பிறப்புத்தோறும் இயைந்து உரும் உழுவலன் பால் பிணிப்புண்டு பிறந்திறந்து பிறந்துவருதல் தோன்ற, "நின் னோடியானும்" என்றான். வாரம், காலப் பாகுபாட்டில் ஒன்று; அவை: கணம், ஆவளி, உயிர்ப்ப, தோவம், இலவம், நாளி, மூழ்த்தம், நாள், வாரம், பக்கம், திங்கள், இருது, அயனம், ஆண்டு, பணை, யுகம், பூவம், பல்லம், பவ்வம், அனந்தம் என்பனவாகும்.
- --------------
1. குறள் 831
இவை யிற்றைப் பதார்த்தசாரம் முதலிய நூல்களுட் காண்க. பல்வகைப் பிறப்புக்கட்கும் ஏது, ஊழ்வினை யாதலின் "தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்றபோது" என்றான்; இவ்வாறே, "ஊழ்வினை துரப்பவோடி யொன்று மூழ்த்தத்தி னுள்ளே, சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து, வீழ்வன போ வீழ்ந்து"1 என்று தேவரும் கூறுதல் காண்க. விலங்கு கதியுட் பிறந்த உயிர்கள் படும் துன்பம் "வேள்விவாய்க் கண் படுத்தும் வெவ்வினைசெய் யாடவர்கள், வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல், கோளிமிழ்ப்பு நீள்வலைவாயக் கண்படுத் தும் இன்னணமே, நாளுலப்பித் திட்டார் நமரலா தாரெல்லாம்"2 எனச் சான்றோர் கூறுப. இவ்வாறே இந்நூலுள்ளும் பிறநூல்களிலும் விலங்குகட்கு மக்கள் செயயுந் தீங்குகள் விரியக் கூறப்படுகின்றன; அவற்றை யாங்காங்கே கண்டு கொள்க.
- ---------
1.சீவக. 2765 2.சீவக.2796
இறப்பெல்லாம் பிறப்பிற்கே எனல்
- கறங்கென வினையினோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள்* பேச லாகா
இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்†
பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ் வியல்பிற் றேயாம். 35
----
† தெய்திற் பின்னும்
உரை:- வினையின்-வினையினால், கதியொரு நான்கினுள் ளும், நால்வகைக் கதிகளிலும், கறங்கு என ஓடி-காற்றாடி போலச் சுழன்று, பிறந்த நாம்-பலபிறப்பும் பிறந்த நாம், பெற்ற பெற்ற பிறவிகள்-மிகப்பலவாகப் பெற்ற பிறப்புக்கள், பேசல் ஆகா-சொல்ல முடியாதனவாகும், இறந் தன இறந்து போக-கழிந்தவை கழிய, எய்துவது எய்தி- எய்தக்கடவன எய்தப்பெற்று, பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம்-பின்னும் பிறப்பதற்கே இறந்த இறப்பெல்லா மாயினமையின், இதுவும் அவ்வியல்பிற்றேயாம்-இப் போது இறக்கும் இறப்பும் அத்தன்மைத்தேயாகும் எ-று.
நால்வகைக்கதிகளாவன, நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு. பிறப்புக்கு வினை யேதுவாதலை, "அவாச்சார்ந்து பற்றாகும் பற்றினால் வினைமுதிர்வாம். தவாதவிவ் வினைமுதிர்வாற் பிறப்பாகும் பிறப்பினால், குவாவிய பிணிமூப்புச் சாக்காடின் கூட்ட மாம், உபாயவித் தடுமாற்ற மொழிவின்றி யுருளுமே"1 என்பதனால் அறிக. இப் பிறப்பிறப்புக்களும் கறங்கனெச் சுழலுதற்கு, "உபாயவித் தடுமாற்றம் ஒழிவின்றி யுருளுமே"1 என்பதே சான்று பகர்கிறது. அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. பிறவிகள் மிகப்பல வென்றற்குப் "பேசலாகா" என்றார்; பிறவிகளில் எய்தும் கன்மப் பயன் வகையாற் பலவாயினும், பயன் என்ற விடத்துத் தொகை யாய் ஒருமைப்படுதலின், "எய்துவ" தெனப்பட்டது. இறந்தது, தொழின்மாத்திரையாய் நின்றது. இப்போது எய்தும் இறப்பும் மீட்டும் பிறத்தற்கே என்பான் "அவ்வியல்பிற்றே" என்றான். ஏகாரம், தேற்றம். இதுவும் என்புழி உம்மை, இறந்தது தழீஇயற்று.
----------
1. நீல 575 மேற்கோள் (பாடம்)* செய்யத்தாமே
அறம்புணர்ந்தோர் உடம்புற்றுப் பெறவார் என்று கூறல்
பிறந்தநாம் பிறவி தோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்;
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யார் தாமே*
இறந்தன† ரிறந்த காலத் தெண்ணிறந் தனர்க ளெல்லாம். 36
------
(பாடம்)† இறந்தனம்
உரை:- தோகாய்-மயில்போலும் தங்கையே, பிறந்த நாம் பிறவிதோறும். மக்களிற் பிறந்த நாம் பிறப்புத்தோறும், பெறும் உடம்பவைகள்-பெறுகின்ற உடம்புகள். பேணாத் துறந்து-பற்றுவையாது துறந்து, அறம் புணரின்-பிறவா மைக்குரிய அறநெறியை மேற்கொள்வோமாயின், நம்மைத் தொடர்ந்தன வல்ல-நம்மைத்தொடராது ஒழியும், இது சிறந்ததை என்று எண்ணி-இந்நெறெயே சிறந்ததாம் என்று துணிந்து, செம்மை செய்யார்-அறத்தைச் செய்யாராய், இறந்த காலத்து-முற்காலத்தே, எண்ணிறந்தனர்கள்- எண்ணில்லாத மக்கள், எல்லாம்-அனைவரும், இறந்தனர்- பலகாலும் பிறந்திடற்கே இறந்தார்கள் காண் எ-று.
தோகை, மயில்; காதல்பற்றி உயர்திணைக்கண் வந்தது. இவ் வாறு பிறப்பது குறித்து முன்னைப்பிறவியில் இறந்தோம் என்பதை நினைப்பிக்கும் குறிப்பால் "பிறந்த நாம்" என்றான். உடம்பவை: அவை, சுட்டு. உடம்பை நமதென்னாது கழித்து அறம்புணர்தல் வேண்டுமென்றற்கு "பேணாத் துறந்து அறம்புணரின்" என்றான். பேணாமைக்கு ஏது துறவுள்ளமாதலின், பேணாமையும் துறவும் உடன் கூறினான். புணரின் எனவே, புணர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டதாம். அறம்புணர்ந்தார்க்குப் பிறவியில்லை யென் றற்கு உடம்பின்மேல் வைத்து, "உடம்பவைகள் அறம்புணரின் தொடர்ந்தனவல்ல" என்றான்.; பிறவியாவது உடம்பெடுத்தலாத லின். உடம்பின்மேல் பற்றுவையின், அதுகாரணமாக வினைபலவும் வந்து கூடுமேயன்றி, அறம் கைகூடாதென்பது கருத்து. அறத்தின் பயன் பிறவிகெடுதல்; இஃது உடனிகழ்ச்சியாதலின் "தொடர்ந்தன வல்ல" என இறந்த காலத்தாற் கூறினான். சிறந்ததை:ஐகாரம், சாரியை. பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. செம்மை, அறம். "செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்"1 என்புழிப்போல. தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. ஏகாரம், அசை; தேற்றமுமாம். உடம்பைத்துறந்து அறம்புணர்ந்தார் பெறும் நலன் கூறுவார், துற வாது அறம்புரியாதார் செயலால் விளக்கி "இறந்த காலத் தெண் ணிறந்தனர்களெல்லாம்" என்றார். இது "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று"2 என்ற திருவள்ளுவப் பயனை உட்கொண்டிருத்தல் காண்க.
- ------------
1. குறள், 61. 2. குறள். 22.
நரககதியிற் பெற்ற உடம்பின் பெருமையும் அழிவும் கூறல்
முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய உருவ மெல்லாம்
அழலினுண் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
உழைவிழி நம்மோ டொன்றி யொருவின உணர லாமோ. 37
உரை:- உழைவிழி-மான்போலும் கண்களையுடைய தங்கையே, முழம் ஒரு மூன்றில் தொட்டு-உடம்பின் உயரம் ஒரு மூன்று முழம் தொடங்கி, மூரிவெஞ்சிலைகள் ஐஞ்ஞூறு- வலிய வெவ்விய வில்லென்னும் அளவு ஐஞ்ஞூறு ஈறாக, எழு முறை-ஏழ்நரகத்தும் ஏழுமுறை. மேன்மேல்-ஒவ்வொரு நரகத்து ஒவ்வொரு புரையிலிருந்தும் மேன்மேலாக, பெருகி- ஒன்றினொன்று இரட்டித்துப் பெருகுவதால், எய்திய உருவ மெல்லாம்-உண்டாகிய உடம்புகளெல்லாம், அழலினுள் மூழ்கியன்ன- நெருப்பில் மூழ்கினாற்போன்ற, அருநவை நரகம் தம்முள்-பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும் நரகங்களில், நம்மோடு ஒன்றி-நம்முயிர் இருத்தற்கு இடனா யிருந்து, ஒருவின-ஒழிந்தன, உணரலாமோ-அவை இத் துணையவென்று உணர முடியுமோ, முடியாது எ-று.
நரவகை யேழ் என்றும், ஒவ்வொன்றிலும் முறையே பதின் மூன்றும், பதினொன்றும், ஒன்பதும், ஏழும், ஐந்தும், மூன்றும், ஒன்றுமாகப் புரைகள் உண்டென்றும், இவற்றுள் பதின்மூன்று புரையினையுடைத்தாகிய முதல் நரகம் எல்லாவற்றிற்கும் கீழாம் நரகமென்றும், அதன்மேல் ஏனைய படிப்படியாக வுளவென்றும் மேரு மந்தரம் முதலிய நூல்கள் கூறும். கீழாம் நரகத்துப் பதின்மூன்றாம் புரையிலுள்ளோர் மூன்று முழ வுயரமுள்ள வுடம்பினராய்த் தொடங்கி ஏழே முக்காலே வீசம் வில்லளவு உயர்ந்து, பின்பு அதற்குமேற்பட்ட புரையையடைந்து இரட்டித்த உயரம் பெற்று, இவ்வாறே புரை புரையாக ஏழு நரகத்தும் எழுமுறை , ஐஞ்ஞூறு வில்லுயரம் எய்துங் காறும் உழலுவரென்றும் கூறுப. "முழுமூன் றுயர்வாம் முதலாம் புரையின், முடிமூன்று வில்லேழ் விரலா றுளகீழ், எழுவாயி தைஞ் ஞூறு வில்லெய் தளவும், வழுவா திறுதொறு மிரட்டிய தாம்"1 என வருதல் காண்க. சிலையென்றதற் கேற்ப, "மூரிவெஞ் சிலை" என்றான்; "குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்" என்றாற்போல. பிறவருமிடத்தும் இவ்வாறே கூறிக்கொள்க. இந்நரகத்துள் பொறுத் தற்கரிய வெப்பமுண்மையின், "அழலினுள் மூழ்கியன்ன யருநவை நரகம்" என்றார். "மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே, நீரென வுருக்கும் சீத வெப்பங்கள் நின்ற"2 என்ப. இந்நரகத்துப் பட்டாரைத் தேவர்க்கும் மீட்டல் அரிதாதலின், அருநவை யென்றா ரென்றுமாம்; "வினையிலிரண் டாநரகில் வீழ்ந்த வுனை மீட்டல், முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்"3 என்றல் காண்க. பிறவிதோறும் எடுத்த வுடம்புகளும், அவற்றால் செய்துகொண்ட தீவினைகளும், அவற்றிற்காக நரகத்தில் வீழ்ந்து புரை புரைதோறும் எடுத்த வுடம்புகளும் எண்ணுக்கு அடங்கா மையின் "உணரலாமோ" என்றான்.
- ----------
1.மேரு. 939 2.மேரு. 945. 3. மேரு.958 (பாடம்)
அக்கதி நீங்கி விலங்குடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
அங்குலி யயங்கம் பாக மணு*முறை பெருகி மேன்மேல்
பொங்கிய வோரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன அனந்த மன்றோ. 38
---------
*அங்குலி யங்க மாதி யணு; அங்குலி யங்கம் பாக மணு.
உரை:- அணு-எண்ணிறந்தனவாகிய அணுக்கள், அங் குலி யயங்கம் பாகம்-ஓர் அங்குலத்தின் கணிக்கமுடியாத ஒருபாகமாக, முறை பெருகி-குணங்களால் கட்டுண்டல் மூவகையாற்றலொடு நீங்காமை முதலியவற்றால் பெருகி, மேன்மேல் பொங்கிய-படிப்படியாக உயர்ந்த, ஓர் ஐஞ் ஞூறு புகைபெறும்-ஓர் ஐஞ்ஞூறு யோசனை யளவினதாகிய, முடையுடம்பு-முடைநாறும் உடம்பு, வெங்கனல் வினையின்- வெவ்விய நெருப்புப்போல வெதுப்பும் வினையினால், மேல் நாள்-முற்பிறவிகளில், விலங்கிடைப் புக்கு வீழ்ந்து-விலங்கு கதிக்குட் சென்று பல்வகை விலங்குடம்பாய்த் தோன்றி, நங்களை வந்துகூடி-நம்மை வந்து கூடியிருந்து, நடந்தன அனந்தம் அன்றோ-அழிந்தவை அளவில்லாதனவாகும் எ-று.
அணுக்கள் அங்குலியயங்கம்பாகம் முறையே பெருகுந்திறத்தை, "அனந்தமா மணுக்கள் கூடி யங்குலி யயங்கம் பாகிற், குணங்களாற் செறியக் கட்டிக் குணங்களோ டாற்றல் மூன்றில்,"1 தணந்திடாது பெருகு மென்ப. புகை-யோசனை. ஏழாம் நரகத்திலுள்ள நாரகன், ஐஞ்ஞூறு புகை யுயரமுற்ற உடம்புபெற்று உலந்த பின் விலங்குகதியுட் பிறப்பனாதலின், "ஓரைஞ்ஞூறு புகைபெறும் உடம்பு" என்றார். "எழுதா நரகத்து இயல்பாய வைஞ்ஞூறு, ஒழி யாது விழுந்தெழு மோசனையே"2 என்றார் பிறரும் எனவறிக. வினைகனல்போல வெதுப்பு மென்பதைத் திருவள்ளுவரும் "தீயவை தீயினு மஞ்சப் படும்"3 என்றல் காண்க. இதனால் நரககதிக் கண் பிறந்துழன்ற காலத்து வந்த உடம்பனைத்தும் ஐஞ்ஞூறு யோசனை உயரமுடையவாகியும் முடிவில் அழிந்தன என்றும், அதன் பின் விலங்குகதியுட்டோன்றிய காலத்தெய்திய விலங்குடம் புகளும் அவ்வாறே அழிந்தன என்றும் கூறி உடம்பின் நிலையாமையை வற்புறுத்தி, அபயருசி அபயமதியைத் தேற்றுவானாயினன் என்க.
- -------------
1. மேரு. 101. 2.மேரு. 94. 3. குறள்.202.
மக்களுடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
ஓரினோர் முழங்கை தன்மே லோரொரு பதேச மேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற உற்ற
பாரின்மேன் மனித ரியாக்கை பண்டுநாங் கொண்டு விட்ட
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். 39
உரை:- ஓரின்-ஆராயுமிடத்து, ஓர் முழங்கை தன்மேல்- ஒரு முழங்கை உயரத்திலிருந்து மேல்நோக்கி, ஓரொரு பதேசம் ஏறி-ஒவ்வொரு பிரதேசமாக உயர்ந்து, மூரிவெஞ் சிலைகள் மூவீராயிரம் முற்ற உற்ற-பெரிய வெவ்விய வில்லென்னுமளவு ஆறாயிரங்காறும் உயர்ந்து சென்று பின் படிப்படியாகக் குறைந்து முழவுயரமே பொருந்திய, பாரின் மேல் மனிதர் யாக்கை-நிலத்தின்மேல் வாழும் மக்களு டைய உடம்புகளுள், பண்டு -முற்பிறவியில், நாம் கொண்டு விட்ட-நாம் எடுத்துக் கழித்த உடம்புகளின் அளவுக்கு, வாரிவாய் மணலும்-கடலிடத்து நுண் மணலின் தொகை யும், ஆற்றாவகையின் அல்லவோ-ஈடாகாவாம் எ-று.
உச்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் இருவகைக் காலத்தும் மக்களுடம்பு ஒரு முழ உயரத்திலிருந்து பெருகிப் பெருகி ஆறாயிரம் வில்லளவு உயர்ந்து பின்னர் அதனினின்றும் குறுகிக் குறுகி ஒருமுழ வுயரத்தை யடையு மென்று சைன நூல்கள் கூறும். முன்னைப்பிற வியில் எடுத்த உடம்புகட்கு வாரிவாய் மணலுமாற்றா என்றாற்போலத் திருத்தக்கதேவரும் "தொல்லைநம் பிறவி யெண்ணில் தொடுகடல் மணலு மாற்றா வெல்லைய"1 என்றார். பதேசம், பிரதே சம் என்பதன் திரிபு. "உயிர்ப்பதேசம்"2 என்புழிப்போல.
- ---------------------
1.சீவக.270. 2.மேரு.102
தேவருடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல்
இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி வருசிலை*
யிருபத் தைந்தின் வந்துறும் அங்க மெல்லாம்
திருமலி தவத்திற் சென்று தேவர்தம் உலகிற் பெற்ற
தொருவரால் உரைக்க லாமோ உலந்தன அனந்த மாலோ. 40
--------
(பாடம்) *வரிசிலை
உரை:- இருமுழமாதியாக-இரண்டு முழம் முதலாக, வகையின் ஓங்கி-மனிதர் பவணர் என்ற கூட்டத்துப் பல வேறு வகைகட் கேற்ப உயர்ந்து, வரு-வருகிற, சிலை இருபத்தைந்தின் வந்துறும்-இருபத்தைந்து வில்லளவாக உயர்ந்து வரும், அங்கமெல்லாம்-உடம்பெல்லாம், திருமலி தவத்தின் சென்று-செல்வமிக்க தவங்காரணமாக எடுத்து, தேவர்தம் உலகிற் பெற்றது-தேவருலகிற் சென்று பெற்ற தாகிய உடம்ப, ஒருவரால் உரைக்லாமோ-ஒருவரால் அளவிட்டுரைக்க முடியாது. உலந்தன அனந்தம்-அழிந்த தேவவுடம்புகளும் அளவில்லன வாகும் எ-று.
மனிதர், ஆரியர் மிலேச்சர் என்னும் இருவகையர், இவருள் ஆரியராகிய நன்மக்கள், உத்தமபூமி, மத்தியபூமி, சகன்னியபூமி யென்ற மூன்றிடத்தும் வாழ்பவராய், தீக்காலத்து இருமுழ வுடம்பு பெற்று உயர்வர். பவணராவார்: அசுரர், நாகர், பொன்னர், தீவர், திசையர், தீயர், உதகர், வாயுவர், மின்னவர், மேகர் எனப் பலராய் மேகரிற் றொடங்கி, அசுரரீறாக இருபத்தைந்து வில்லுயர்ந்த உடம்ப பெறுவர். இவற்றின் விரிவை மேருமந்தர புராணத்துட்1 காண்க. நன்மக்களாய்ப் பிறந்து பெற்ற உடம்புகளையே எடுத்தோது தலின், அவர்கட்குரிய "இருமுழமாதியாக" என்று கிளந்தோ தினான். இவ்வுயர்ச்சிக்கும் ஏது தவமாதலின், "திருமலி தவத்திற் சென்று" என்றான். இவ்வுடம்பெடுத்துக் கழித் துயர்ந்தவர் தேவரு டம்பு பெறுபவென்றற்கு, "தேவர்தம் உலகில் பெற்றது" என்றார். பெற்றது உரைக்கலாமோ என இயைக்க. ஓ, எதிர்மறை. உரைத் தற் காகாமைக் கேது, இஃதென்பான் "உலந்தன அனந்த" மென் றான். "திருமலி...அனந்தம்" என்பது, "பவங்க டோறும், மரு விநா மகிழ்ந்து சென்ற பிறப்பு மற்றதனுக் கப்பால், ஒருவரா லுரைக்கலாகா வுலந்தன பிறவி மேனாள்"1 என்ற மேருமந்தர புராணச் செய்யுளடியை நினைப்பித்தல் காண்க.
- ----------
1.மேரு. 1007
நரககதி முதல் தேவகதி யீறாகப் பெற்ற உடம்புகளின் அழிவைத் தொகுத்துக் கூறல்
துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுந் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை யவைகளும் அமரர் கற்பத்
தின்பகா ரணமி தென்றே யெம்முடன் இயல்க என்றே
அன்புசெய் தனகள் தாமும் அழியுநா ளழியு மன்றே. 41
உரை:- இது துன்பகாரணம் என்று-இவ்வுடம்பு துன் பத்துக்கு ஏதுவாம் என்று கருதி, துடக்கு அறுக எனவும் அதன் தொடர்ச்சி யில்லாதொழிக என்று முயற்சி செய் தொதுக்கப்படும், துஞ்சா-அழியாத, அன்புறா-எவராலும் விரும்பப்படாத, நரகர் யாக்கை அவைகளும்-நரகருடைய உடம்புகளும், அமரர் கற்பத்து-தேவருலகங்களில், இது இன்பகாரணம் என்று-இஃது இன்பத்துக்குக் காரணமா மென்றறிந்து, எம்முடன் இயல்க என்று-எம்மை விடாது தொடர்வனவாக என்று விரும்பி, அன்பு செய்தனகள் தாமும்- அன்பு செய்து ஈட்டப்படும் உடம்புகளும், அழியும் நாள்-தத்தம் எல்லை முடிவில், அழியும்-அழிந் தொழியும் எ-று.
எழுவகை நரகத்துப் பல்வகைப் புரைகளிலும் நரகர் எத் துணையோ துன்பத்துக்குட்பட்டு வருந்தியபோதும் இறத்தல் இல ராதலின் "துஞ்சா" என்றும், துஞ்சாதாயினும் துன்பத்துக் கேது வாமெனத் தெளிந்தமை தோன்ற, "அன்புறா நரகர் யாக்கை யவைகளும்" என்றும் கூறினான்; "எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. தேவர் பெறும் உடம்பு பேரழகும் பெருமணமும் பேரின்பமும் உடையவாகலின் அவற்றை யனைவரும் விரும்புதல் பற்றி "அன்புசெய்தனகள்தாமும்" என்றான். தேவ ராயவரும் முடிவில் இறந்துபடுத லுண்மையின் இதனைக் கூறினான் என்க.
- ----------
1. மேருமந். 942
இந்திரருடம்பும் அழிவதே யெனல்
வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுட கோடி
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற இமையவ ரிறைவ ரேனுந்
தந்திரு வுருவம் பொன்றித் தளர்ந்தன ரனந்த மன்றோ* 42
----
*(பாடம்) பொன்றித் தளர்ந்தன ரனந்த ரன்றோ
உரை:- உடன்வந்து வணங்கும் வானோர்-திரளாகக்கூடி வந்து வணங்கும் தேவர்களின், மணிபுனை-மணிகளால் இயன்ற, மகுட கோடி-முடிகளின் தொகை, தம்திருவடிகள் ஏந்தும்-தம் திருவடிகளைச் சுமக்கும், தமனிய பீடமாக- பொற் பீடமாக அமைய, இந்திரவிபவம் பெற்ற-இந்திர போகத்தைப் பெற்றுள்ள, இமையவர் இறைவரேனும்- தேவர்க்கிறைவராயினும், தம் திருவுருவம்-தங்களுடைய திருவும் உருவும், பொன்றித் தளர்ந்தனர்-தளர்ந்து அழிந் தவர், அனந்தம்-எண்ணில்லாதவராகும் எ-று.
வானோர், இந்திரகற்பத்து வாழும் தேவர்கள், தேவராகிய போதும் பிற தேவர்களால் ஒறுக்கப்படுதலும், பிறரை வணங்கலும் பிறர்க்குப் பணிசெய்தலும் அவர்கட்கு இயல்பாதலின் "வணங்கும் வானோர்" என்றும் "மகுட கோடி தமனிய பீடமாக" என்றும் கூறினார். "தேவரே தாமுமாகித் தேவரால் தெழிக்கப்பட்டும், ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டும் அணிகமாப் பணிகள் செய்தும், நோவது"1 என்று தேவரும் கூறினர். இந்திரவிபவம், இந்திர போகம், "இந்திர விபவ மேனும் நின்றதொன் றியார்க்கு மில்லை"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. திருவுருவம், உம்மைத் தொகை. திருவை உருவத்துக்கு அடையாக்கினுமமையும். "மகுடகோடி திருவடிகளேந்துந் தமனிய பீடமாக" என்றது, திருவடிவில் முடி வைத்து வணங்க என்றவாறு.
- -----------
1.சீவக. 2811. 2. மேருமந் 934
மண்ணாளும் வேந்தர் பெற்ற உடம்பும் அழிவதே எனல்
மக்களிற் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
திக்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்*
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே. 43
----
*"அன்று தொட்டின்றுகாறு மருளும்பிற் பெற்றுவந்த"- மேரு. 204.
உரை:- மக்களிற் பிறவியுள்ளும்-மக்களாய்ப் பிறந்தோ ருள்ளும், மன்னர்தம் மன்னராகி-அரசர்க்கரசராய், திக்கு எலாம் அடிப்படுத்தும்-எட்டுத் திக்கிலுமுள்ள வேந்தரை வென்று அடிபணியவைக்கும், திகிரியஞ் செல்வரேனும்- ஆணை செலுத்தும் திருவுடைய பேரரசராயினும், அக்குலத்து உடம்பு தோன்றி-அவ்வரசர் குலத்திற் பிறந்து, அன்று தொட்டு இன்றுகாறும்-அன்றுமுதல் இன்றுவரை, ஒக்க நின்றார்கள்-ஒருதன்மையாக அழிவின்றி இருந்தவர்கள். ஒரு வரும் இல்லை-ஒருவரேனும் இல்லையாயினர், காண் எ-று.
பிறவி, ஆகுபெயர். இன், அல்வழிக்கண் வந்த சாரியை. திகிரி, அரசியலாணை, "திகிரியஞ்செல்வரேனும்" என்றதனால், அத்தகைய செல்வராதல் மிகவரிதென்பது பெற்றாம். அக்குலத்து என்புழிச் சுட்டு அவ்வருமை குறித்து நின்றது. உடம்பு தோன்றி என்றது உடம்பொடு பிறந்து என்றவாறு. அரசர்க் குரிய உருவும் திருவுமமைந்த உடம்புபெறல் அரிது "உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலு மரிதே"1 என்றார் தேவரு மென வறிக. ஒக்கநின்றார், ஒருதன்மையாய் உடம்பழியாது நிலைத்து நின்றவர். ஒருவரும், உம்மை, முற்று. இச்செய்யுளை, "மலைமிசை மதியி னீழல் பருதிபோல் மத்தயானைத், தலைமிசைக் குடையி னீழல் தரணியை முழுது மாண்டோர், நிலமிசை யின்று *காறு நின்றவ ரில்லை"2 என்பதனோடு ஒப்புநோக்குக.
- ---------
1. சீவக. 2752. 2. மேரு. 918.
உடம் பெடுத்தலும் விடுத்தலும் இதுபோலும் எனல்
ஆடைமுன் னசைஇய* திட்டோ ரந்துகி லசைத்த லொன்றோ
மாடமுன் னதுவி டுத்தர் வளமனை புகுத லொன்றோ†
நாடிடுனவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக என்றான். 44
---------
(பாடம்) † னடிய, னொழிய. ‡ புதிதின்வாழ்க, வதித லொன்றோ.
உரை:- நங்கை-நங்கையே, முன் அசைஇயது ஆடை இட்டு-முன்னே உடுத்துப் பழையதாகிய ஆடையைக் கழித் துவிடு, ஓர் அம்துகில் அசைத்தல்-ஓர் அழகிய புத்தாடை யணிவதும், முன்னது மாடம்-முன்னே வாழ்ந்ததாகிய பெருமனை, விடுத்து- நெடிதுநாள் கழிந்தமையின் நிலை தளர்ந்ததென்று அதனின் நீங்கி, வளமனை புகுதல்-வளவிய புதுமனையொன்றின் கண்ணே சென்று வாழ்வதும், நாடின்- ஆராயுமிடத்து, நமது இறப்பொடு பிறப்பும்-நம்முடைய இறப்பும் பிறப்பும், எவ்வகையும்-எல்லாவற்றாலும் ஒத்தன வாம், அஃது இனி பாடுவதுஎன்-அதனை இனிப்பாட்டாற்பாடு வதால் உளதாகும் பயன் யாது? ஒன்றுமில்லை. பரிவு ஒழிந் திடுக-அவ்விறப்புக் குறித்து வருந்துதலை யொழிவாயாக, என்றான்-என்று அபயருசி கூறினான் எ-று.
முன்னுடுத்த ஆடைகழித்துப் புத்தாடை யுடுத்தலும், பழைய மனையின் நீங்கிப் புதிய வளமனை புகுதலும் இறந்து பிறப்பார். ஒரு கதிக்கண்ணே ஓருடம்பு நீங்கிப் பிறிதோர் உடம்பு பெறு தற்கும், ஒரு கதிக்குரிய உடம்பை விட்டுப் பிறிதோரு கதிக்குரிய உடம்பு பெறுதற்கும் முறையே உவமமாம். ஒன்றோ, எண்ணிடைச் சொல். ஒத்தன என்பது அவாய்நிலையான் வந்தது. அஃதே என்பதை இறப்புக்கும் பிறப்புக்கும் தனித்தனியே கூட்டி முடிப்பினு மமையும். ஆடையுவமத்தை இறப்புக்கும், மனையுவமை பிறப்புக்கும் கோடலுமொன்று.
-----------
அபயமதி தன்பால் அச்சமின்மை கூறல்
அண்ணனீ யருளிற் றெல்லாம் அருவருப் புடைய மெய்யின்
நண்ணிய நமதென் றுள்ளத் தவர்களுக் குறுதி நாடின்
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்து நின்ற
கண்ணனாய் நங்கட் கெல்லாங் கட்டுரை யென்னை யென்றாள். 45
உரை:- அண்ணல்-அண்ணலே, நீ அருளிற்று எல்லாம்- நீ உரைத்தவை யாவும், அருவருப்புடைய மெய்யின்-அரு வருப்பை உண்டுபண்ணுகின்ற தேகத்தை, நமது என்று- நமக்கே யுரிய பொருள் என்று கருதி, நண்ணிய உள்ளத் தவர்களுக்கு-அதன்மேல் மிக்க பற்றுவைத்திருக்கின்ற உ்ள்ளத்தை யுடையோர்க்கு, நாடின்-ஆராயின், உறுதி- உறுதிப்பொருளாகும், விண்ணின் மேல் இன்பம் அல்லால்- தேவருலகத்துக்கும் மேற்பட்ட உறச்சிக்கண்ணுள்ள கேவலப் பேரின்பமன்றி, விழை பயன்-இந்நிலவுலகத்தே புலன் களால் விரும்பப்படும் போகப்பொருள்களை, வெறுத்து நின்ற நங்கட்கெல்லாம்-வெறுத்துத் துறவு பூண்டிருக்கும் நமக்கெல்லாம், கண்ணனாய்-கண்போன்றவனே, கட்டுரை என்னை- வகுத்தும் விரித்தும் உரைப்பது ஏனோ, என்றாள்- என்று அபயமதி கூறினாள் எ-று.
என்பும் நரம்பும் குருதியும் தோலும் அழுக்கும் புழுக்களும் சேரவிருக்கும் யாக்கையின் இயல்பைப் புறமறியாப் பார்த்து வெறுத் தொதுக்கினமை தோன்ற, "அருவருப்புடைய மெய்யின்" என்றாள். பிறரும், "என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப், புன்புறந் தோலின் மூடி யழுக்கொடு புழுக்கள் சோரும், ஒன்பது வாயிற் றாய வூன்பயில் குரம்பை"1 என்றார். இதனை இவ்வாறு உணராதார் இவ்வுடம்பே தாமெனக் கருதி யுழல்வர் என்றற்கு, "நமதென்று நண்ணிய உள்ளத்தவர்கள்" என்றாள். இவ்வுள்ளம் அறிவின் சிறுமை காரணமாகப் பிறப்பதாகலின், அவ் வுள்ள முடையார்க்கு அபயருசியின் சொற்கள் மிக்க பயன் தருவன என்றதைத் தெளிந்து, "உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடின்" என்றாள். "ஊன்பயில் குரம்பை தன்மேல் அன்பறா மாந்தர் கண்டாய் அறிவினாற் சிறிய நீரார்"2 என்று சான்றோரும் கூறுதல் காண்க. மூவுலகத்துக்கும் மேற்பட்டதாகிய உச்சியிடத்தே இருந்து பேரின்பம் நுகர்தலை கேவல முத்தியின்பம் என்பது "முனிவரு முலக மூன்று மிறைஞ்சமூ வுலகி னுச்சி, கனைகழ லரச நிற்றல் கைவல மாகுங் கண்டாய்"3 என்பதனா லறிக. கட்டுரை, கட்டுரைத்தல்; அஃதாவது கேட்பார் மனங்கொள்ளுமாறு வகுத்தும் விரித்தும் தெளித்துரைத்தல். அபயருசி, "நங்கை நீயஞ்சல்" (32) என்பது முதல் "ஆடை முன் னசைஇயது" (44) என்னும் செய்யுள்வரைப் பல்வகைக் கதிர்களிலும் பிறந்திறந்து வந்த வரலாற்றை எடுத்தோதினமையின், "கட்டுரை யென்னை" யென்றாள்.
- -------------
1. மேரு. 116, 2. மேரு. 116. 3. மேருமந். 106
உடம்பை விடுதற்கண் தன்மனத்தே அச்சமின்மை கூறல்
அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறும்
திருவுடை யடிகள் தந்த திருவறப் பயனுந் தேறி
வெருவிதா* விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்டோ. 46
----------
(பாடம்)* வெருவிநாம்.
உரை:- அருவினை விளையுளாய - போக்குதற்கரிய வினை கள் தோன்றுதற் கிடமாகிய, அருந்துயர்ப் பிறவிதோறும் - பொறுத்தற் கரிய துனபத்தைத் தருகின்ற பிறப்புக்கள் தோறும், வெருவிய மனத்து நம்மை - அவற்றிற்கு அஞ்சி மனம் முதலியவற்றைக் காத்தொழுகிய நம்மை, வீடு இல விளைந்தவாறும் - விடாது தோன்றித் துன்புறுத்திய வகை யும், திருவுடையடிகள் தந்த - கேவல ஞானமாகிய செல் வத்தையுடைய சுதத்த முனிகள் நமக்கு உரைத்தருளிய, திருவறப்பயனும்-சினதருமப்பயன்களும், தேறி-தெளிய வுணர்ந்து, வெருவிதா-பயனற்றதாகக் கருதி, விடுத்த வாழ்க்கை-பற்றுவையாதுவிட்ட இவ்வுடம்பின, விடு வதற்கு- இப்போது விட்டுவிடுதற்கு, அஞ்சல் உண்டோ. அஞ்சுவது ஆகாது எ-று.
வினையானது தன்னைச் செய்த உயிரின்கட் கிடந்து அதுபுக் குழிப் புகுவதன்றி, உடம்பொடு நின்று, அஃதழியுங்கால் அழிவதன்றாகலின், "அருவினை" யென்றும், உயிர் உடம்பொடு கூடி யுலவுங் காலத்தே அவ்வினை யீட்டப்படுதலின், உடம்பை அதற்கு "விளையுள்" என்றும், அவ்வினைத் தொடர்பால் கதி தோறும் பெருந்துயர் எய்துதலின் "அருந்துயிர்ப்பிறவி" யென்றும் கூறினாள். "பிறந்துநாம் கதிகள் நான்கிற் பெருந்துய ருழக்கும் போதும் துறந்திடா வினைகள்"1 என்றும் "தீக்கதிநான்குற்சார்ந்து செல்வுழித் துணையுமில்லை"2 என்றும் பிறரும் கூறுதல் காண்க. வினைவிளைவுக் கஞ்சித் தம்மைக் காத்தொழுகிய போழ்தும் செய் தீட்டிய வினைப்பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின், பல பிறவி களும் விளைந்தன என்பாள் "வீடில விளந்தவாறும்" என்றாள். வீடு-விகாரம். ஸ்ரீசினதருமத்தை, திருவறம் என்ப; "அரியது திருவறமல்லதில்லை"3 என்றார் பிறரும். வெறுவிதா எனற்பாலது எதுகையின்பங்குறித்து "வெருவிதா" என வந்தது. மனத்தால் வெறுத்தொழித்த வொன்றினை மெய்யே விடுதற்கு அஞ்சுவதில்லை யாதலின், "விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சலுண்டோ" என்றாள். வாழ்க்கை, ஆகுபெயரால் உடம்பிற் காயிற்று. "வாழ்த லுயிர்கன்னள் ஆயிழை"4 எனவரும் திருவள்ளுவப் பயனும் இச்சொற்குறிப்பைத் தெளிவித்தல் காண்க. ஓகாரம், எதிர்மறை.
- ----------
1 மேருமந். 112. 2.மேரு. 469. 3.மேருமந். 118. 4.குறள். 1124.
அபயருசி கூறியதற்கு அபயமதி அமைதி காட்டல்
பெண்ணுயி ரளிய* தாமே பெருந்திற லறிவும் பேராத்
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற் காட்சி
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதாம். 47
------
(பாடம்)*ரெளிய.
உரை:- பெண்ணுயிர்-பெண்ணுடம்பெடுத்த உயிர்கள், அளிய-அளிக்கத்தக்கன, பெருந்திறல் அறிவும்-பெருமை சிறக்கும் நுண்ணறிவும், பேராச் சிந்தையின் திண்மையும் கலங்காத மன வன்மையும், உடைய வல்ல-உடையவை யல்ல, என்பது-என்று சான்றோர் கூறுவதை, எண்ணி- கருதிக்கொண்டு, நீ அருளிச்செய்தாய்-நீ இவற்றை உரைத்தாய்போலும், அன்றி-அல்லதூஉம், நல்லறத்தில்- சினேந்திரதருமத்தில், கண்ணிய மனத்தர்- கருத்தூன்றித் தெளிந்த மனமுடையவர்கள், இம்மை-இப்பிறவியின்கண், காதல் உடையரோ-விருப்பத்தைக் கொள்ளார் எ-று.
செய்த வினைக்கேற்ப உயிர்கள் ஆணாகப்பிறந்தன பெண்ணாகவும் பெண் ஆணாகவும் பிறக்குமாதலின், பெண்ணென்னாது வேற்றுமை நயந் தோன்ற "பெண்ணுயிர்" என்றாள். "வினையெனுங் குயவ னம்மை வேற்றுரு வியற்றல் கண்டாய், அனகனா முருவந் தன்னைப் பெண்ணுரு வாக்கி யாங்கே, மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி, நினைவினால் முடித்து நின்றார்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும் பேதமைத்தே"2 என்றதுகொண்டு, "பெருந்திறல் அறிவும்" என்றும், "பெண்ணெனப்படுவ கேண்மோ பீடில பிறப்புமன்னோ, உண்ணிறை யுடையவல்ல வொராயிர மனத்தவாகும்"3 என்றும், "மகளிர் மனம்போல வேறுபடும்"4 என்றும் சான்றோர் உரைப்பதால், "பேராத்திண்மையும் உடையவல்ல சிந்தையின் என்பது" என்றும் உரைத்தாள். மேலே, "கட்டுரையென்னை" (45) என்றவள், அக் கட்டுரைக்கு அமைதியும் உடன் கூறலுற்று, தன்னைப் பிறர்போல கூறும் குறிப்பில்வைத்துப் பெண்ணுயிரின் இயல்பை எடுத்துரைக் கின்றாள். மூன்றுலகத்தும் துன்புறும் உயிர்களை, "ஈன்றதாய் போல ஓம்பி இன்பத்துள் இருத்தி"5 அருகந்த பதவியையும் சித்த பதவியையும் கொடுத்து மகிழ்வித்தலின், இம்மைக்கண் காத லுண்டாகாமையின், "நல்லறத்திற் காட்சி கண்ணிய மனத்தர்; இம்மைக் காதலு முடைய ரோதாம்" என்றாள்.
- -----------------
1. மேருமந்.462. 2. இறை. அ. பொ. மேற். 3.சீவக. 1597.
4. குறள். 822. 5. மேரு. 117.
அபயருசி கூறியதைப் பாராட்டித் தான் தனக்கு அவனை இறைவனாகக் கொள்வதுரைத்தல்
இன்றிவண் ஐய என்கண் அருளிய பொருளி தெல்லாம்
நன்றென நயந்து கொண்டேன் நடுக்கமும் அடுத்த தில்லை
என்றனக் கிறைவன் நீயே யெனவிரு கையுங் கூப்பி
இன்றியா னியாது செய்வ தருளுக தெருள என்றாள். 48
உரை:- ஐய,-ஐயனே, இவண்-இவ்விடத்து, இன்று- இப்போது, என் கண் அருளிய பொருள் இது எல்லாம்-என் பால் உரைத்தருளிய உறுதியுரைகளெல்லாம், நன்று என நயந்துகொண்டேன்,-நன்றென்று விரும்பியேற்று மனத்துட் கொண்டேன்; நடுக்கமும் அடுத்தது இல்லை-அச்சத்தால் உளதாகும் மனநடுக்கமும் என்பால் இல்லாது கெட்டது, என்தனக்கு இறைவன் நீயே என-அடியேனுக்கு ஆசிரிய னும் நீயே யாவாய் என்று,இருகையும் கூப்பி-இருகையும் எடுத்துத் தொழுது, இன்று-இப்போது, யான்செய்வது யாது தெருள அருளுக-யான் செய்யக்கடவது யாதோ அதனைத் தெளிய உரைத்தருளுவாயாக, என்றாள்-என்று வேண்டினாள் எ-று.
பொருளிது எல்லாம், ஒருமை பன்மை மயக்கம். கொலைபுரி தற்குச் சண்டகருமன் இவர்கலளைக் கொண்டேகுவதை அறிந்திருத்த லின், அச்சமும் எய்திற்றில்லை யென்கின்றாள். அதற்கு ஏது, அச்சம் நிகழ்தற்குரிய மனத்தின்கண் அறப்பொருள் நிறைந்து தெளிவு செய்தலைக் குறிப்பிப்பாள் "அருளிய பொருளிதெல்லாம் நன்றென நயந்து கொண்டேன்" என்றாள். தெளிவின் பயன் தெளிவித்தாரை வியந்து வழிபடுவதாகலின், "இறைவன் நீயே" என்றும் "இருகையும் கூப்பி"யும், "யாது செய்வது அருளுக தெருள" என்றும் கூறினாள். தெருள என எடுத்தோதியது, கொலைவினை நிகழுமிடத்து மீட்டும் மருட்சி யெய்தினு மெய்து மென அஞ்சியெனின், திருவறப்பயனுக்கு முரணாதலின், அவ்வாறு கொள்ளாது, கேட்போர் தெருளுமா றுரைக்கும் அபயருசியின் சொல்வன்மையை வியந்து கூறியது என அறிக.
---------
பஞ்சபரமேட்டிகளை வணங்கித் தன் உடம்பை விடுவதென இருவரும் துணிதல்
ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரணம் மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையு நயந்து கொண்டாள். 49
உரை:- ஒன்றிய உடம்பின்-உயிரோடு ஒற்றுமை யுற்றிருக்கும் உடம்பிலிருந்து, வேறாம் உயிரினது-உண்மை யுணர்வால் நோக்குமிடத்து வேறுபட்டுத் தோன்றும் உயிரினுடைய, உருவம் உள்ளி-அருவமாகிய இயல்பை யெண்ணி, நங்கள் நல்லறப் பெருமை நாடி-நாம் மேற்கொண்டிருக்கும் சைனதருமத்தின் பெருமையைத் தெளிய உணர்ந்து, நன்று என நயந்து-ஏனைய அறம் பலவற்றினும் இதுவே நலந்தருவதென விரும்பி, வென்றவர்-காதிகன்மப் பகையை வென்றுயர்ந்தவரான பஞ்சபரமேட்டிகளின், சரணம் மூழ்கி-திருவடி நீழலில் எய்தும் இன்பம் நிறைந்து, நம் உடலம் விடுதும் என்றான்-நமது இவ்வுடம்பை விட்டொழிப் போம் என்று அபயருசி கூறினானாக, இது செய்கை நன்று என்று-இதனைச் செய்வது நல்லறமே என்று கருதி, நங்கையும்-நங்கையாகிய அபயமதியும், நயந்து-மனத் தால் விரும்பி, கொண்டாள்-அச்செய்கையை மேற்கொள் வாளாயினள் எ-று.
உண்மையுணர்வால் நோக்குமிடத்தென்பது இசையெச்சம் வினையாகிய பகையை வெல்லக் கருதுவார்க்குச் சைன தருமம் நெறியும், நற்காட்சி முதலியன படையுமாய்ப் பயன்படுதலின், "நல்லறப் பெருமை நாடி" என்றும், "நன்றென நயந்து" என்றும் கூறினான். உருவம் என்றவழி அதன் இன்மையும் அடங்குதலின், "உயிரினது உருவம் உள்ளி" எனல் வேண்டிற்று., "உண்மையு மின்மைதானு மொருபொருட் டன்மையாகும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. மூழ்கி யென்ற குறிப்பால், சரணமாகிய இன்பக்கடல் என்று கொள்க. "அறிவரன் சரணமூழ்கி"2 என்றும் "அருகன சரணமூழ்கி"3 என்றும் இந்நூலுள்ளும் பிறாண்டும் வருதல் காண்க. மனத்தால் நினைத்தலும் செய்தலோடொக்கு மென்பவாயினும், செயலும் உடன் நிகழ்தலின், நயந்தென் றொழியாது "கொண்டாள்" என்றார். இதனை, நன்றென்று தேறி யுடன்பட்ட சிறப்புக் குறித்து அபயமதியை "நங்கையும்" என்றார். உம்மை, சிறப்பு. இது வென்பதனைப் "பொருளொடு புணராச்சுட்டு" எனினுமாம்.
- ----------------
1.மேருமந். 709. 2.யசோ. 256. 3. மேரு. 739
சினேந்திர துதி
அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக்
குறுகிய தடற்றொள் வாள்போற் கொண்டிய லுடம்பின்*
வேறாய் இறுகிய வினையு மில்ல+ தெமதியல் பென்று நின்றார். 50
---------
(பாடம்) * டுயிருடம்பின்; டியலுயிரின். + மல்ல
உரை:- அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - ஞானமும் காட்சியும் உள்ளிட்ட, அனந்தமாம் இயல்பிற்றாகி - அள வில்லாத இயல்பினையுடையதாய், அறிதலுக் கரியதாகி - அறிவாராய்ச்சிக்கு அடங்காததாய்,அருவமாய் - உருவ மில்லாததாய், அமலாகி - தூயதாய், குறுகிய தடற்று - குறுகியதான உறையின்கண் அடங்கிய, ஒள்வாள்போல் - ஒளி பொருந்திய வாட்படைபோல, கொண்டு இயல் உடம் பின் வேறாய் - தனக்கு இடமாகக்கொண்டு இயங்கும் உடம் பிற்கு வேறுபட்டதாய், இறுகிய வினையும் - எப்போதும் விடாது பிணிக்கும் வினைத்தொடர்பும், இல்லது - இல்லாத உயிராகிய, எமது இயல்பு - எம்முடைய இயல்பு, என்று - என்று தெளியக்கொண்டு, நின்றார் - அருகபதத்தில் நிலை பெற்றிருக்கும் பரமேட்டிகளே நமக்குச் சரனாவார் எ-று.
இயல்பாகவுள்ள தூய வுயிர்கட்கு ஞானமும் தரிசனமும் இயற்கைக் குணமாதலின், "அறிவொடாலோகம் உள்ளிட்டு" என்றார். ஆலோகம் - ஒளி; ஈண்டுப் பொருள்களையுள்ளவாறு காணும் காட்சி. அளவின்றிப் பலவாய்ப் பல்வகை அணுக்களோடும் கூடி உலகம் முதலிய தத்துவங்களைச் செய்து தன்மா தன்மாத்திகளால் அளவுகடந்து அறிவாராய்ச்சிக்கும் எட்டாது போதலின், "அனந்த மாம் இயல்பிற்றாகி" யென்றும், "அறிவினுக் கரியதாகி" என்றும் கூறினார். "அளவின்றி யத்தியாய் அமூர்த்தியாய் ஆதியாய், உளவென்ற பொருள்" 1 "அளவில் ஆகாயத்தில் அணுக்களோடு உயிர் அளவளாவிப்" 2 பல்கு மென்றும், "உலகினோடு உலக லோக மாந் தத்துவந் தனைச்செய்து, தன்ம தன்மமா மத்திகள் செலவொடு நிலையிற் கேதுவாம்" 3 என்றும் கூறுப. உயிர் அருவ மென்பது சினேந்திர சமயக் கருத்துமாதலின், "அருவமாய்" என்றும், தன் நிலையில் தூய்தாதலின், "அமலமாய்" என்றும் கூறினார்; "அத்தியாய் அமூர்த்தியாய் அளவில் தேசியாய்" 4 என்று பிறரும் கூறுதல் காண்க. உயிர் உடலின்கண் நிறைந்து நிற்றற்குத் "தடற்று ஒள்வாள்போல்" என்று உவமித்தார்.
- -------------
1. மேரு.93. 2. மேருமந்.89. 3. மேரு.88. 4. மேரு.88.
உள்ளுறையும் வாள் ஒளியுடைத்தாதல்போல் உடம்பின்கண் உறையும் உயிரும் ஒளியுடைத்தாதல் பெற்றாம். இன்னும் அதனாலே, தடற்றின் அளவும் வாள் நிறைந்திருப்பதுபோல உயிரும் உடம்பளவும் நிறைந்து நிற்பது பெறப்படும். "குடங்கையின் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்"1 என்றார் பிறரும். இக்கருத்தே பற்றி இந் நூலாசிரியரும், "தடற்று ஒள்வாள்போற் கொண்டியல் உடம்பு" என்றார் என உணர்க. வாள் தடறாகாதவாறுபோல, உயிர் உடம்பாகாமையின், "உடம்பின் வேறாய்" என்றும், உயிரைப் பிணித்து நிற்கும் ஞானாவரணீயம் தரிசனாவரணீயம் முதலிய காதிகன்மங்கள் வீடுபெறுவதற்குச் சமைந்த உயிர்களை இறுகப் பிணித்து நிற்றல் இன்மையின், "இறுகிய வினையும் இல்லது" என்றும், இவ்வியல்புணர்ந்து பிற வுயிர்கட்கும் இதனைத் தெரிவித்தருளும் பரமேட்டியாதலின், "எமது இயல்பு" என்றும் உரைத்தார். நமக்குச் சரணாவார் என்றது எஞ்சிநின்றது. இதனை மேல் வருவனவற்றிற்கும் உரைத்துக்கொள்க.
- -----------
1. மேரு. 81
அருகபரமேட்டி வணக்கம்
உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருத லாறும்
அறிவினிற் றெரிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்
பெறுதலக் கரிய செல்வம் பெற்றனம் பெரிது மென்றார். 51
உரை:- உறுதியைப் பெரிதும் ஆக்கி - உயிர்கட்கு உறுதி யாவனவற்றை மிகுதியும் உண்டாக்கி, உலகினுக்கு இறைமை நல்கி - உலகிற்குத் தான் இறைவனாம் தன்மை யினைத் தெளிவித்து, பிறவி செற்று - பிறவி இனி வாரா வகைக் கெடுத்து, அரிய வீட்டின் பெருமையைத் தெரி விப்பனவாகிய அறுவகை நயங்களையும், அறிவினில் தெரிந்த மாட்சி - தூய அறிவினால் ஆராயப்படும் மாட்சியினையுடைத் தாகிய, அரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல் வம் - இரத்தினத்திரய மெனப்படும் பெறுதற் கரிய செல் வத்தையும், பெரிதும் பெற்றனம் - மிகுதியும் பெற்றேம், (இவற்றைப் பெறவளித்த அவரே நமக்குச் சரணாவார்) என்றார்-என்று தொழுதார்கள் எ-று.
உயிர்க்கு உறுதியல்லாத பொருள்கள்மேல் விரைந்து இனிது செல்லும் உள்ளத்தை, உறுதிப்பொருளின்பால் கலங்காது சென்று பொருந்துவித்தமையின் "உறுதியைப் பெருது மாக்கி" யென்றார். மூவுலகின் உச்சிக்கண் இருந்து உயிர் முதலிய பொருள் கட்கு எப்பொருளும் அருள் செய்தலின், "உலகினுக்கு இறைமை நல்கி" யென்றார். "இராகமின்றி யெழுந்தருளி வந்திருந் தெப்பொருளு மருளிய வெங்கள் இறைவன் நீயே"1 என்று சான்றோர் கூறுதல் காண்க. பிறவிக் கேதுவாகிய காதிகன்மங்களை வீட்டற்குரிய நெறியினை நல்குதலின் "பிறவிசெற்று": என்றும், பெறற்கரிய வீடுபேற்றுக்கு வாயிலாகிய அறுவகை நயங்களையும் அவற்றின்மேலும் வேண்டப்படும் "சப்தபங்கி நயங்களையும்" அருளிய சிறப்புக் குறித்து "வீட்டின் பெருமையைத் தருதலாறும்" என்றும் கூறினார்.; ஆறு நயங்களாவன நித்தியம், அநித்தியம், அவாச்சியம், பின்னம், அபின்னம், சூனியம் என்பனவாம். சப்த பங்கி ஏழாவன: இருப்பது, இராதது, இருப்பது மிராததும், சொல்லொணாதது, இருப்பதுஞ் சொல்லொணாததும், இல்லையாஞ் சொல்லொணாதது, உள்ளது மில்லாததுமாஞ் சொல்லொணாதது என்பன. இனி இவ்வேழனையுமே, அறிவினால் தெரிந்த மாட்சி யென்றாரென்றும், அறிவாராய்ச்சிக்கு மாட்சி தருதலின், இவற்றை மாட்சி யென்றா ரென்றும் கூறுப. இரத்தினத்திரயம் மூன்று மாவன: நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்பன. இம்மூன்றும் வீடுபேற்றுக்கு நெறியாதலின் "பெறுதலுக்கரிய செல்வ" மென்றார்.; "முத்தியிதற்குபாயம் இரத்தினத்திரயம்"2 என்றார் பிறரும்.
- ---------------
1.மேரு,1195. 2. மேருமந். 790
சித்தர்பரமேட்டி வணக்கம்
ஈங்குநம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார் நினைந்து மேலிவ்
வோங்கிய வுலகத் தும்பர் ஒளிசிகா மணியி னின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார். 52
உரை:- ஈங்கு-இவ்விடத்தே, நம் இடர்கள்-நமக்குற்ற துன்பத்தை, நினைந்து-தமக்குற்றவை போலக் கருதி, தீர்க் கும் இயல்பினார்-போக்கும் இயல்புடையவரும், மேல் மேலே, ஓங்கிய-உயர்ந்துள்ள, இவ்வுலகத்து உம்பர்- இவ் வுலகின் உச்சிக்கண்ணே, ஒளி சிகாமணியின் நின்றார்-ஒளி யினையுடைய முடிமணிபோல விளங்குகின்றவரும், வீங்கிய கருமக் கேட்டின்-மிக்க காதிகன்மங்களின் வீழ்ச்சிக் கண்ணே, விரிந்த எண்குணத்தராகி-பெருகிய எட்டுவகைக் குணங்களையு முடையராய், தீங்கெலாம் அகற்றிநின்ற - குற்ற மெல்லாம் போக்கி மேம்பட்டுநின்ற, சித்தர் - சித்தர்கள், செல்லல் தீர்ப்பார் - இப்போதும் நம் துன்பத்தைப் போக்கு வராதலின் அவர்களும் நமக்குச் சரணாவார் எ-று.
பிற உயிர்கட்குண்டாகும் துன்பத்தைத் தமக்கு நேர்ந்தன போலக் கருதி அதனை விரைந்து போக்கும் அருளறமே அவர்கட்கியல் பென்றற்கு "இடர்கள் தீர்க்கும் இயல்பினார்" என்றார். நம் என்றது எல்லா வுயிர்களையும் உளப்படுத்தி நின்றது. கேவல ஞானிகள் என்றற்குச் சித்தரை "ஓங்கிய வுலகத்தும்பர் ஒளி சிகாமணியின் நின்றார்" என்றார். காதி நான்கும் அகாதி நான்கும் ஆகிய வினைகள் எட்டாதலின், "வீங்கிய கருமம்" எனப்பட்டன.; அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம், வேதனீயம், நாமிகம், சோத்திரிகம், ஆயுட்கம் என்பன. அகாதிகன்மம் எண்பத்தைந்து. இக்கன்மங்கள் கெட்டவிடத்து எண் குணங்களும் பொருந்துமென்று கூறுப வாத லின் "கருமக்கேட்டின் விரிந்த வெண்குணத்தராகி" என்றார். "ஆயிடை யெண்பத் தஞ்சு வினைகெட்ட வக்கணத்தே, போயுல குச்சி புக்கான் பொருந்தியெண் குணங்க ளோடும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. வினையின் நீங்கிக் குணமெட்டும் நிறைந்தவழி, உலகுச்சியிற் பொன்போல் ஒளிர்பவாதலின் "ஒளிசிகா மணியின் நின்றார்" என்றார். "மாற்றற வோட்டி வைத்த செம்பொன்னொத் தொளிருமே"2 என்று கூறுப. இவ்வண்ணம் உச்சிக்கண் நின்றொளிருமிடத்துத் தேவர்பலரும் வந்து அடிவணங்கிப் பரவுப வாதலின், அப்பராவலால் உள்ளத்தே பெருமிதம், செருக்கு முதலிய தீக்குணம் சிறிதும் அணுகாமையின், "தீங்கெலா மகற்றி" என்றார். அகற்றி யெனப் பிறவினையாற் கூறியது, தாம் நீங்கினா ராயினும், நீங்காது தீதுற்று வருந்தும் பிற வுயிர்பால் அருள்கொண்டு நீக்குதல்பற்றி யென அறிக.
- -----------
1. மேருமந். 811. 2. மேருமந். 70.
தீர்த்தகர வணக்கம்
பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப் பெற்ற
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்ப ரேனும்
உரிமையி னுயிர்கட் கெல்லாம் ஒருதனி விளக்க மாகித்
திருமொழி யருளுந் தீர்த்த கரர்களே துயர்கள் தீர்ப்பார். 5 3
உரை:- பெருமலை யனைய-பெரிய மலையையொத்த, காதிப் பெரும்பகை பெயர்த்து-காதிகன்மங்களாகிய பெரிய பகையைக் கெடுத்து, பெற்ற - அப்பொழுதே பெற்றனவாகிய, திருமலி - ஞானநலம் மிகுந்த, கடையில் நான்மைத் திருவொடு - அனந்த சதுட்டயங்களைக்கொண்டு பெறக்கடவ கேவலஞான மென்னும் திருவுடன், திளைப்ப ரேனும் - மகிழ்வாராயினும், உரிமையின் -முறைப்படி, உயிர்கட்கெல்லாம் -எல்லாவுயிர்களுக்கும், ஒருதனி விளக்க மாகி-ஒப்பற்ற ஞானவிளக்கமாய், திருமொழி யருளும் - முத்திநெறியைத் தெரிவிக்கும், தீர்த்தகரர்கள் - தீர்த்தங்கர சுவாமிகளே, துயர்கள் தீர்ப்பார்-நம் துன்பத்தை நீக்கு வார்கள் எ-று.
எளிதில் பெயர்த்த லருமை குறித்து, காதிகன்மங்களைப் "பெருமலையனைய" என்றும், கேவல ஞானத்தை எய்தலுறுவார்க்கு மனத்தில் நிகழற்பாலதாகிய சுக்கில தியானத்துக்;கு ஆக்கமாகும் அனந்த சதுட்டயங்களை எய்தாவகைத் தகைத்து நிற்றலின், "பெரும்பகை" யென்றும் கூறினார். காதிகன்மக் கேட்டின்கண் அனந்த நான்மைகள் விளங்கித் தோன்றலின் "பெற்ற திருமலி கடையி னான்மைத் திரு" என்றார். நான்குமாவன: கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வின்பம், கடையிலா வீரம் என்பன. இந்நான்கும் நிறைந்தவழி எய்தக்கடவதாய் இருப்பது கேவலஞான மாதலின், அதனையே கடையிலா நான்மையொடு கூடிய திருவென்றார் என்று அறிக. திரு, திருமகள். "காதிகள் நான்கும் நீங்க மேலெலா முறங்கு நான்மை விழித்துல கனைத்துங் காண, மாலிலா மனத்துச் சிந்தை யருக்கன துதித்த தன்றே"1 என்றார் பிறரும். திருமொழி-பஞ்சநமஸ்காரமென்னும் மந்திரமொழி,. தீர்த்தங்கரர், தீர்த்தகரர் என வந்தது.; "சம்சாரமாகிய கடலைத் தாண்டியவர்" என்பது இச்சொற்குப் பொருள் என்ப. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர்; முதல்வர் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர்; இறுதியில் இருந்தவர் ஸ்ரீவர்த்தமான வீரர்.
- -----------
1. மேருமந். 1383.
ஆசிரியர் வணக்கம்
ஐவகை யொழுக்க மென்னும் அருங்கல மொருங்க ணந்தார்
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்
தவ்விய மகற்றுந் தொல்லா சிரியரெம் அல்லல் தீர்ப்பார். 54
உரை:-ஐவகை ஒழுக்க மென்னும் அருங்கலம் - ஐந்து வகையான விரதமெனப்படும் கிடைத்தற்கரிய அணிகலனை, ஒருங்கு அணிந்தார் - ஒவ்வொன்றாகவன்றி ஒருசேர அணிந் திருப்பவரும், மெய்வகை - தத்துவக் கூறுபாடுகளை, விளக்கம் சொல்லி - விளக்கமுண்டாகுமாறு சொல்லி, நல்லறம் மிக அளிப்பார் - வீடுபேற்றிற் கேதுவாகிய அறநெறிகளை மிகவும் எடுத்தோதி ஆதரிப்பவரும், பவ்வியர் தம்மை - பக்குவமுற்றவர்களை, தம்போல் - தம்மைப்போலவே, பஞ்ச நல்லொழுக்கம் பாரித்து, - ஐவகைப்பட்ட நல்லொழுக் கங்களை மேற்கொள்வித்து, அவ்வியம் அகற்றும் - குற்றத் தைப்போக்கும்,தொல்லாசிரியர் - பழைமையான ஆசிரியர் களுமாகிய பரமேட்டிகள், எம்' அல்லல் தீர்ப்பர் - நமது துன்பத்தைப் போக்குவார்கள் எ-று.
நன்மக்கட் குரிய ஒழுக்கத்தைச் சைனர் "சாரித்தரம்" என்ப வாகலின், அதற்குரிய விரதம் பன்னிரண்டனுள் சிறப்புடைய அணுவிரதமைந்தனையும் ஈண்டு "ஐவகையொழுக்க மென்னு மருங் கலம்" என்றார் எனவுணர்க; அவை: கொலை, பொய், களவு, பிறர்மனை விழைவு, பிறர்பொருள் வௌவல் என்பனவாம். மெய்வகைை - தத்து வங்கள். அவை: உயிர், உயிரல்லது, நல்வினை, தீவினை, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்ற ஒன்பதுமாம். கட்டுநீங்கி வீடு பெறுதற்குரிய நெறி நலம்பயக்கும் அறமாதலின், அதனை "நல்லறம்" என்றார். பவ்வியர், அறங்கேட்டு வீடுபெறுவதற்குச் சமைந்தவர். முற்கூறிய ஐவகையொழுக்கத்தை மீட்டுங் கூறியது, அவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்துதற்கு. ஆசிரியாராதலின், "அவ்விய மகற்றும் தொல்லாசிரியர்" என்றார்; பரமேட்டிகள் ஐவருள் ஒருவராய் வழிபடுதற்குரியராதல்பற்றி, "தொல்லாசிரியர்" எனச் சிறப்பித்தார்.
-----------
உபாத்தியாயர் வணக்கம்
அங்கநூ லாதி யாவும் அரில்தபத் தெரிந்து தீமைப்
பங்கமேழ் பங்க மாடிப் பரமனன் னிறிப யின்றிட்
டங்கபூ வாதி மெய்ந்து லமிழ்தகப் படுத்த டைந்த
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார். 55
உரை:- தீமைப்பங்கம் - துமன்பமாகிய சேறு நிறைந்த, ஏழ்பங்கம் ஆடி – ஏழ் நரகத்திலும் வீழ்ந்து மூழ்கிக் கரையேறி (நன்மக்கட் பிறப்பில்வந்து) அங்கநூல் ஆதியாவும் - பரமா கமங்கட்கு அங்கமாகிய ஆகமங்கள் பலவற்றையும் - அரில் தபத் தெரிந்து-குற்றமறத் தெளிந்து, பரமன் நன்னெறி பயின்றிட்டு,- அருகபரமேட்டி ஆதியில் காட்டியருளிய அறநெறியைப் பயின்று, அங்கபூவாதி - அங்காகமம் பன்னிரண்டும் பூர்வாகமம் பதினான்குமாகிய, மெயந்நூல் அமிழ்து - பரமாகமத்து மெய்ப்பொருளாகிய அமுதத்தை, அகப்படுத்து - உணர்ந்து உட்கொண்டு,அடைந்த - இப்பிறப்பில் தம்மை வந்தடைந்த, நங்களுக்கு - நமக்கும் நம்போலியர்க்கும், அளிக்கும் நீரார் - அருள்செய்யும் தன்மையுடைய சான்றோர், நம்வினை கழுவும் நீரார்-நம்முடைய வினையாகிய அழுக்கைக் கெடுக்கும் அருளாகிய தூய நீரையுடையோராவர் எ - று.
வீட்டு நெறியில் நில்லாத உயிர்கள் தாம் செய்யும் வினைகட் கேற்ப, தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்ற நான்கு கதியானும் பிறந் திறந்துழலுமாதலின், எல்லாக்கதியினும் கீழ்ப்பட்ட கதியாகிய நரக கதியை ஈண்டு எடுத்தோதுகிறார்,. அந்நரகம் எழுவகையாய் ஒவ்வொன்றும் பல்வகைப் புரைகளையுடையதாய் நினைத்தற்காகாத துன்ப நிலையமாயிருத்தல் பற்றி "தீமைப்பங்கமேழ்பங்கம்" என்றார். நற்காட்சி நல்லொழுக்கம் முதலியவற்றால் நரககதி, விலங்குகதி, இரண்டினின்றும் ஏறிவரும் உயிர்கள் வீடுபெறுவது குறித்துக் கற்பன இவையென்றற்கு "கணதராதி குருக்களால் செய்யப்பட்ட திரவியா கமங்களானவை" ஈண்டு "அங்கநூலாதியாவும்" என்று குறிக்கப் பட்டன. ஏனை அங்காகமமும் பூருவாகமமும் பரமாகமமாதலின் "அங்க பூவாதி மெய்ந்நூல்" எனப் பிரித்தோதப்பட்டன. இப்பரமாக மங்களைப்போல அவையும் பிரமாணநூல்களாதலின் "அரில்தபத் தெரிந்து" என்றும், அவற்றைத் தெரிந்து அறநெறிக்கட் பயின்று மனந் துயரானாலன்றி ஒருவர்க்கு நன்ஞானம் வாயாதென்றற்கு இவ்வாறு பிரித்தும் முறைசெய்தும் கூறினாரெனவுணர்க. இவற்றின் இயல்புகளை மேருமந்தர புராணத்தும் பதார்த்தசாரத்தும் கண்டு கொள்க.
---------
சாதுக்கள் வணக்கம்
பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு உருவுக் கேற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் அனைய ராகிச்
சேதியி னெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார். 56
உரை:- பேதுறு பிறவி போக்கும்-மயக்கத்தை யுண்டு பண்ணும் பிறப்பினைக் கெடுக்கும், பெருந்திரு உருவுக்கு- பெரிய அழகிய உருவத்துக்கு, ஏற்ற-ஏற்புடையனவாகிய, கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் - குற்றமில்லாத குணமாகிய அமிழ்தத்தைப் பெய்துவைத்த நன்கலத்தை, அனையராகி-போன்றவராய்,. சேதியின்-ஒருவர் தம்மை உறுப்புறுப்பாக அரிந்தாலும், எறியின்-வாளால் போழ்ந்தாலும், சிறந்தது-சிறந்ததாகிய அறமொன்றையன்றி, வேறு சிந்தை செய்யா-வேறே எவ்வகைத்தீநினைவும் கொண்டறியாத, சாதுவரன்றி-சாதுக்களையன்றி, நமக்கு உலகின்- நமக்கு இவ்வுலகத்தே, சரண் ஆவர் யார்-புகலளிப்பார் யாவர்? ஒருவரும் இல்லை எ-று.
காதிகன்மங்களால் மறைப்புண்டு துன்பத்துக்கேதுவான செய்தற்கே பெரிதும் இடமாகலின் "பேதுறுபிறவி" யென்றார். சாதுக்களின் திருவுருவமே பிறவியைப் போக்கவல்ல பெருமையும் ஒட்பமும் உடையதென்பர் "பிறவிபோக்கும் பெருந்திருவுரு" என்றார். குணங்களுள்ளும், கோதுறுகுணங்களுள, அவை நன்மக்களில் உயர்நிலைப் பிறப்புக்கும், தேவகதிக்கும் ஏதுவாய் மீட்டும் பிறப்பினைத்தந் தொழிதலின், அவற்றின் நீக்குதற்கு "கோதறுகுணங்கள்" என்று சிறப்பித்தார். உருவத்தைக் கொள்கல மென்றதுபோல, குணத்தை அமிழ் தென்னாமையின், இஃது ஏகதேசவுருவகம்,. "செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும்" நெஞ்சுநிறை யழிந்து வெகுளல் முதலியன சாதுக்கட்கு ஆகா என்பார் "சேதியின் எறியின் வேறு சிந்தைசெய்யாச் சாதுவர்" என்றார். வெகுளல் முதலியவற்றை நினைத்தலும் கூடாதென்பார் "வேறு சிந்தைசெய்யா" என்றொழிந்தார். சிறந்தது, இன்னாசெய்த அவர்க்கு இனியவே நினைத்துச்செய்தல், "சிதைந்தின்னாதன செய்தார்க்குமினியவே செய்து, சிந்தைக் கதங்கடிந்தொழுகல்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. ஏகாரம் இசைநிறைத்தற்கண் வந்தது.
- ----------
1. மேரு. 346
சண்டகருமன் இருவரையும் தேவிகோயிலில் அரசன்முன் நிறுத்தல்
இனையன நினைவின் ஏகும் இளைஞரை விரைவிற் கொண்டு
தனையர சருளும் பெற்றிச் சண்டன்அச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திடுவான் நிற்பக்
கனைகழ லரசன் ஓகை கைம்மிகக் கழறினானே. 57
உரை:- இனையன நினைவின்-இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நெஞ்சால் வழிபட்டுக்கொண்டு, ஏகும்-செல்லும், இளைஞரை-அபயருசி அபயமதி யென்ற இளையவர் இருவரையும், சண்டன்-சண்டகருமனான தளபதி, தனை அரசு அருளும் என்று-தன்னை மாரிதத்தனாகிய வேந்தன் பாராட்டி மகிழ்வன் என்றுநினைத்து, விரைவிற்கொண்டு-விரைவாக அழைத்துச்சென்று, அச்சண்டமாரி முனைமுக வாயிற்பீடம் முன்னர்-அந்தச் சண்டமாரிதேவியின் போர்முனை போலும் திருவாயிலில் உள்ள பலிபீடத்தின்முன்னே, உய்த்திடுவான் நிற்ப-உய்த்து நிறுத்துதற்கு அரசன் குறிப்பு நோக்கி நின்றானாக, கனிகழல் அரசன்-ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனாகிய மாரிதத்தன், ஓகை கைம்மிக்-மகிழ்ச்சி மிக்கெழவே, கழறினான்-சண்டமருகனை நோக்கிக் கூறுவானாயினன் எ-று.
"இனையன நினைவின் ஏகும்" எனவே, இருவரும் மனத்தே இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நினைந்து வழிபட்டுச் சென்றமை பெற்றாம்; "வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம்முடலம்" (49) என்று அபயருசி கூறியதும் அபயமதி "நன்றிது செய்கை" என்று மனங்கொண்டாள் ஆதலின், ஈண்டு "நினைவின் ஏகும்" என் பாராயிற்று. முதற்கண், அரசன் சண்டமருகனை நோக்கி மக்களுள் இரட்டையரைக் கொணர்க எனப் பணிப்பான், தான் கருதியவாறு பெறலருமை நினையாது "மக்களிரட்டையர், ஈடிலாத வியல்பினரிவ் வழி, ஏட சண்டகரும, தந்தீக"(22) என்று ஏவியது, இப்போது அவன் விரும்பியவாறே கொண்டுசெல்லின், அவன் மகிழ்ந்து தன்னை யருள்வன் என இச்சண்டமருகனை நினைப்பித்தது, அரசனது அருள் நோக்கிநிற்றலினாலும், தானே பலி பீடத்திற் கொண்டுய்ப்பின் அரசன் வெகுள்வானாதலினாலும் "பீடமுன்னர் உய்த்திடுவான்நிற்ப" என்றார். அப்பீடத்தே எண்ணிறந்த உயிர்கள் கொலை செய்யப் படுதலின், போர்முனையிடத்தை அதற்கு உவமித்தார். இளையர் இருவரைக் கண்டதும், தான் இடக்கருதிய நரபலி இனிது நடக்குமென்ற உணர்வுபிறத்தலின் "ஓகை கைம்மிக" லாயிற்று,
-------
மாரிதத்தன் இருவரையும் பலிபீடத்துய்க்க எனப் பணித்தல்
*முனைத்திற முருக்கு மாற்றல் மூரித்தேந் தாரி னாய்தின்
வினைத்திற நன்றி யாமே விழைநர பலியீ தற்கின்
றினையவர் தம்மைத் தேவியிரும்பலி யிடத்துய்க் கொன்றான்
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே. 58
---------------
*இப்பாட்டு அச்சுப்பிரதியில் இல்லை.
உரை:- முனைத்திறம் முருக்கும் ஆற்றல்-பகைவர் போர் முனையில் செய்யும் போர்வகைகளைக் கெடுத்தழிக்கும் வன்மையும், மூரித்தேன் தாரினாய்-பெரிய தேன் பொருந்திய மாலையுமுடையாய்; நின்வினைத்திறம் நன்று-நீ செய்தசெயல் நல்லது, யாம் விழை நரபலி-யாம் இடக்கருதும் நரபலியை, ஈதற்கு-தேவிக்கு ஈயும்பொருட்டு, இனையவர்தம்மை-இவ் விளையோர் இருவரையும், தேவியிரும் பலியிடத்து-அவளுடைய பெரிய பலிபீடத்திலே, உய்க்க என்றான்-கொண்டு நிறுத்துக என்று சொல்லி, கனைகழலரசன்-ஒலிக்கின்ற வீர கண்டையணிந்த அந்த மாரிதத்தன், கையில்-தன் கையினிடத்தே, வாள் உருவினான்-உடைவாளை உறையினின்றும் எடுத்து உருவினான் எ-று.
சண்டமருகன் தளபதியாதலால், அவன் மகிழுமாறு, அவனுடைய ஆற்றலை விதந்தோதினான். மூரி-பெருமை. தான்விரும் பியவாறே பலியிடுதற்கேற்ற இரட்டையரை விரைவிற்கொணர்ந்த மையின், "நின்வினைத்திறம் நன்று" என்றான்,. எனவே, தான் செய்யக்கருதும் வினைத்திறம் தீதென்பதை அவன் நினைத்திலன்
எனவறிக. நினையாமைக்கு ஏது இஃதென்பார் "விழைநரபலி" என்றார். நெஞ்சில் விழைவு நிலவுங்கால், நன்று தீது காணும் நல்லறிவு ஆங்குத் தொழிற்படாது. ஈதற்கு என வேண்டாது கூறினான், நெஞ்சில் ஆராய்ச்சியின்மையின் எனவுணர்க. இனையவர், இவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. எண்ணிறந்த உயிர்க் கொலை கண்டும் இருத்தல்பற்றி, பலிபீடத்தை "இரும்பலியிடம்" என்றார். என்றான், முற்றெச்சம், பெயர்ப்படுத்து, என்றவனாகிய அரசன் என இயைப்பினுமாம். வாளை மனக்கண்ணாற் கண்டு அஞ் சியும் இளையர்பால் அருள்மிகுந்தும், இனைகின்றாராதலின், ஆசிரியர் "ஐயோ" என்றார். இஃது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல், அன்னோ என்பதுபோல. இஃது பிற்கால வழக்கு; வீரர், வாளை உறையினின்று கழித்ததும் முதற்கண் அதனை உருவுதல் இயல்பு.
பின்னர், பலியீடு தவிர்ந்து போதலின், தனக்குரிய செயல் இல்லாதுபோம் வாள் என்னும் நயம், "கையில் வாள்" என்புழி அமைந்திருத்தல் காண்க.
----------
அருகிலுள்ளோர் அரசனை வாழ்த்துமின் என்றல்
கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் குணங்கள் தம்மால்
இலக்கண மமைந்த மெய்யர் இருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். 59
உரை:- இருவரும் கொலைக்களம் குறுகிநின்றும் - இளையர் இருவரும் பலிபீடத்தையடைந்து அதனிடத்தே நின்றாராயினும், குலுங்கலர் - மனநிலை குலையாராய், குணங்கள் தம்மால் - குணங்களாலும், இலக்கணம் - உடலழகாலும், அமைந்த மேனியர்-நிறைந்து பொருந்திய மேனியுடையாராய், இயைந்து நிற்ப - உயிர்கொடுத்தற்கு ஒருப்பட்டு நிற்க,. இறை மன்னன் - தங்கட்கு இறைவனாகிய வேந்தன், நிலத்து நெடிது வாழ்க என உரைமின் - நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று சொல்லுமின், என்றார் - என்று அருகே நின்ற தளபதி முதலாயினார் கூறினாராக, மலக்கிலா மனத்தர் - குற்றமில்லாத மனத்தினையுடையராகிய இளையரிருவரும், தம் வாய்-தமதுவாயிடத்தே, வறியதோர் முறுவல் செய்தார் - சிறியதொரு புன்னகை புரிந்தார்கள் எ-று.
எத்துணைத் திட்பமுடைய மனத்தாராயினும், உயிர்க்கொலை புரியும் இடத்தைக் காணில் அவர் உள்ளத்தே சிறிது அசைவுதோன்றி மெய்ப்பட்டுக் காட்டுமாயினும், இவர்பால் அதுதானும் இல்லையென்றற்கு, "கொலைக்களங் குறுகிநின்றும் குலுங்கலர்" என்றார். ஒருவரொருவர்க்குளதாகும் தீங்கு குறித்து, "தானாடாவிடினும் தன் தசையாடும்" என்பதுபற்றி நோக்கினும், சிறிதும் வேறுபடாராயின ரென்றற்கு, "இலக்கணமமைந்த மெய்யர்" என்றார். இயைதல், சாதற்கு உடன்படல், தன்கீழ் வாழ்வார்க்கு முறை செய்பவனாதலின், "இறை" என்றனர். நிலத்திறை மன்னன் என்றே கொண்டு நிலத்தவர்க்கு முறைசெய்தலால் இறைவனாகிய வேந்தன் என்றுரைப்பினுமாம். உயிர்ப்பலியாவார் தேவியால் நயக்கப்படுதலின், அவர் உரை பொய்யாவண்ணம் தேவியருள்புரிவள் என்ற கருத்தால், அருகுநின்றவர், "மன்னன் வாழ்க நெடிதெனவரைமின்" என்றார்கள். அரசன் செயல் அறமன்மையின் உவவாராயினும், அருகிருந்தவர் கூறும் மடமைமொழி நினைந்து முறுவலித்தனராதலின், "தம் வாயில் வறியதோர் முறுவல் செய்தார்" என்றார். "வாயில்" என்று விதந்ததனால், நகை முதலியன அவித்தொழுகும் அவ்விருவருடைய ஒழுக்கத்தின் விழுப்பம் பெறப்பட்டது; "உயிர்க்கண் நகை முதலாய நாணி" (28) என்று முன்பே கூறியிருத்தல் காண்க. மலக்கு - அழுக்கு.
----------
இருவரும் அரசனை வாழ்த்துதல்
மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று
நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார். 60
உரை:- வையத்து மறவியின் மயங்கி - தான் உலகுயிர்கட்கு உயிராவதை மயக்கத்தால் மறந்து, உயிர்களை வருத்தம் செய்யாது - அவ்வுயிர்களை வருத்தாமல், அறவியல் மனத்தையாகி - அருளறம் நிறைந்த மனமுடையனாய், உயிர்க்கு - எல்லா உயிர்களுக்கும், ஆர்அருள்பரப்பி - நிறைந்த அருளைச் செய்து, சிறையன பிறவி போக்கும் - உயிர்க்குச் சிறைக் கோட்டம் போல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும், திருவறம் மருவி - சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து, சென்று - ஒழுகி, புகழ்நிறை உலகம் காத்து - அழியாப் புகழை நிறுவி உலகத்தை இனிது காத்தளித்து, நீடுவாழ்க என்று-நெடிது வாழ்வாயாக என்றுசொல்லி, நின்றனர்- பலிபீடத்தில் உயிர்கொடுப்பான் நின்றனர் எ-று.
மறவிக்கு ஏது மயக்கமாதலின், மயக்கத்தால் மறந்து என மாறி இயைத்துரைத்தாம். வருத்தம் செய்யாது என்பது ஒரு சொல்லாய் உயிர்களை என்பதற்கு முடியாயிற்று. இரண்டாவதன்கண் நான்காவது மயங்கியதாகக் கொண்டு வருத்தத்தைச் செய்யாது என விரித் துரைப்பினுமமையும். "மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம், அதனால், யானுயிர் என்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக்கடனே"1 என்பவாகலின், அதனை மயக்கத்தால் மறந்து உலகுயிர்கட்குத் தீங்கு செய்தலாகாது என்றாராயிற்று. அரசன்பால் அறமும் அருளும் இல்லை யென்பது அவன் செய்யும் கொலைத்தொழிலால் விளங்குதலின், அவை யுண்டாதல் வேண்டுமென்னும் கருத்தால் "அற வியல் மனத்தையாகி" யென்றும் "ஆருயிர்க் கருள் பரப்பி" என்றும் கூறினார். ஆரருள் எனல் வேண்டிற்று, அறவியல் மன மில்லாதார்பால் இருத்தலின்மையின், "அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுள"2 என்பது பொதுமறை முடிபு. ஓரறிவுயிர் முதல் பல்வகையுயிரு மடங்குதற்கு "உயிர்கள்" எனப் பொதுப்படக் கூறினார். செய் தென்னாது, பரப்பி யென்றது உயிர்களின் பன்மை குறித்து நிற்றல் காண்க. உயிர்க்கு உடல் சிறை போறலின் "சிறையன பிறவி" யென்றார்,. சினேந்திர தருமம் பிறவிப்பிணி போக்குமென்பதை, "வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்குமெய்யே, நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின், கம்பமில் நிலைமை யாகித் திருவறங் கைக்கொளென்றேன்"3 என்று பிறரும் கூறுதல் காண்க. புகழ் நிறுத்தற்கு உலகம் இடமாதலின், "புகழ் நிறை உலகம்" எனல் வேண்டிற்று. நிறைபுகழ் என்றே கண்டு பெற்றென வொருசொல் வருவித்து முடிப்பினுமாம். இவ்வாறு தாம் கூறிய சொற்கள் அரசன் செவிக்குட் சென்று அவனது மனமயக்கத்தை மாற்றாநிற்க, இவர்கள் கொலைக்குடன் பட்டு நின்றமை தோன்ற "நின்றார்" என்றார்.
- ---------------
1. புறம். 186... 2. குறள். 241 3. மேரு. 968
இருவரையும்கண்ட வேந்தன் தன் மனத்துக்குள் வியத்தல்
நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர் நீதி* மன்னன்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணு ளார்கொல்
அன்றியிவ் வுருவ மண்மே லவர்களுக் கரிய தென்னா†
நின்றவர் ‡ நிலைமை தானும் நினைவினுக் கரிய தென்றான். 61
----------------
(பாடம்) *நிலைதளர்ந்திட்ட † தென்னான் ‡நின்றவர்
உரை:- நின்றவர் தம்மை நோக்கி-அவ்வாறு நின்ற இருவரையும் கண்ணாரக்கண்டு நிலைதளர்-நரபலியிடுவது குறித்த மனநிலை தளர்ந்த, நீதி மன்னன்-நீதியைச் செய்யும் வேந்தனாகிய மாரிதத்தன், மின்திகழ் மேனியார்-ஒளிவிளங்கும் மேனியையுடைய இவர்கள், விஞ்சையர்கொல்-வித்தி யாதரரோ, விண்ணுளார்கொல்-தேவருலகத்துத் தேவர்களோ, அன்றி-விஞ்சையரும் விண்ணவருமல்லர் மக்களே என்பதாயின், மண்மேல் அவர்களுக்கு-மண்ணின்மேல் வாழும் மக்களுக்கு, இவ்வுருவம்-இவ்வழகிய உருவம் அரியது-எய்துவது இல்லையாம், என்னா-என்றிவ்வாறு நினைந்து, நின்று-அசைவற நின்று, இவர் நிலைமைதானும்- இவரது தன்மையும், நினைவினுக்கு அரியது-நினைத்தற்கு அருமையாகவுளது, என்றான்-எனறு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் எ-று.
அபயருசியும் அபயமதியும் கொலைக்குடன்பட்டு நின்றநிலை அரசற்குச் சூழ்ச்சி பயப்பித்தமை தோன்ற "நின்றவர்" என்று மீட்டும் எடுத்தோதுவாராயினர்,. இளையோர் நிலைதளராராக, அவரைக் கண்ட மாரிதத்தனே நிலைதளர்ந்தான் என்பார், "நிலைதளர் நீதி மன்னன்" என்றார். இக்கணம்முதல் அவ்வேந்தன் நீதிமானாகும் செந்நெறித் தலைப்படலை ஊழ்கூட்டுதலின், அவ்வியைபு பற்றி, "நீதிமன்னன்" என்று சிறப்பித்தார். சம்மியஞான சம்மிய தரிசனங்களுடன் சம்மிய சாரித்திரமும் உடையராதலின், "மின் திகழ் மேனியார்" என்றார். விஞ்சையரும் விண்ணவருமல்லரெனவும், மக்களாம் எனவும் துணிந்தவழியும், மனநிலை தளர்ந்தொழிந்தானாதலின் மாரிதத்தன் "இவ்வுருவம் மண்மேலவர்களுக்கரியது" என்றும், மேலும் நினைவு செல்லாமையின், "நினைவினுக்கரியது" என்றும் தன்னுட் கூறிக்கொள்வானாயினன்.
---------
வேந்தன், இருவரும் நகைத்ததற்குக் காரணம் என்னென்ன அபயருசி காரணம் கூறல்
இடுக்கண்வந் துறவும் எண்ணா தெரிசுடர் விளக்கி னென்கொல்
நடுக்கமொன் றின்றி நம்பால் நகுபொருள் கூறு கென்ன
அடுக்குவ தடுக்கு மாயின் அஞ்சுதற் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்,* 62
-------
(பாடம்)* மிக்காம்.
உரை:-இடுக்கண் வந்துறவும் - உங்கள் உயிர்க்கே இறுதி வந்திருப்பவும், எண்ணாது - அதனை நினையாதது, என் கொல்- என்ன காரணம், எரிசுடர் விளக்கின் - சுடர் விட்டெரியும் விளக்குப்போல, நடுக்கம் ஒன்றும் இன்றி - நெஞ்சில் சிறிதும் துணுக்கமின்றி, நம்பால் நகுபொருள்-நம்மைப் பார்த்து நீவிர் நகுதற்குரிய காரணம், கூறுக-யாதோ அதனைக் கூறுக, என்ன - என்று மாரிதத்தன் கேட்க, அடுக்குவது-எம்மை வந்தடைய வேண்டுவது, அடுக்குமாயின் - வந்தடையுமானால், அஞ்சுதல் பயன் இன்று - அஞ்சுவதால் பயன் யாதும் இல்லை, என்றே - என்று நினைத்தே, நடுக்கமது இன்றி - மனத்தும் மெய்யிடத்தும் அசைவின்றி, நின்றாம் - நிற்பேமாயினேம், நல்லறத் தெளிவு சென்றாம் - சினேந்திரனுரைத்த நல்லறத்தைத் தெளிய அறிந்திருக்கின்றோ மாகலான் எ-று.
கொலைவினைக்கு வினைமுதலாகிய தானும், கருவியும், இடமும், காலமும் ஒருங்குதொக்கமையின், "இடக்கண் வந்துறவும்" என்றும், அதனை எண்ணியவழி எத்திறத்தார்க்கும் உடலில் நடுக்கந் தொன்றுமாதலின், "எண்ணாது" என்றும், இருவரது இளமைக்கும் செயற்கும் ஒவ்வாமையின் "என்கொல்" என்றும் கூறினான். எண்ணாதது எனற்பாலது "எண்ணாது" என நின்றது. காணும் போதே, அவர்தம் மேனியின் ஒளிகண்டு "மின்திகழ் மேனியர்" என்றவன், அஃது இப்போதும் ஒளி குன்றாது திகழ்தலின், “எரி சுடர் விளக்கின்” என்றான். “இடுக்கண்வந்துற்ற காலையெரி கின்ற விளக்குபோல, நடுக்கமொன்றானுமின்றி நடுக”1 என்றார் தேவரும்.
- -------
1.மேரு.81.
உயிரை ஒளியுடைப் பொருளோடு உவமித்தல் நூல்மரபு; "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன் உடம்பின தளவுமாம்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. அவரோடு சொல்லாடுங் கருத்தினனாதலின், அவர் தோற்றுவித்த வறிது நகைக்கு வெகுண்டான்போல் "நடுக்க மொன்றின்றி நம்பால் நகுபொருள் கூறுக" என்றான். அதனைப் பொருள் செய்யாமை தோன்ற, நடுக்கமின்மைக்குக் காரணங் கூறலுற்று "அடுக்குவதடுக்குமாயின் அஞ்சுதற் பயனின்றென்றே, நடுக்கமதின்றி நின்றாம்" என்றும், "நல்லறத் தெளிவு சென்றாம்" என்றும் கூறினர். நடுக்கமது என புழி, அது பகுதிப்பொருட்டாகாது சூட்டு மாத்திரையாய், நடுக்கத்தின் புன்மை தோற்றி நின்றது. இச்செய்யுளால் மாரிதத்தன் மிக்கெடுத்தோதிய இடுக்கண், நடுக்கம் என்ற இரண்டினையும், தாம் இருவரும், மதியாமையும் அதற்கேதுவாகிய நல்லறத்தின் பெருமையும் அபயருசி எடுத்துரைத்தானாயிற்று. வருஞ்செய்யுளால் நகுதற் கேதுவாயதனை உரைக்கின்றான்.
- -----------
1. சீவக. 571
இதுவுமது.
முன்னுயி ருருவிற் கேதம் முயன்றுசெய் பாவந் தன்னால்
இன்னபல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு மாற்றம்
என்னதாய் விளையு மென்றே நக்கனம் எம்மு ளென்றான். 63
உரை:- முன்-முன்னைப் பிறப்புக்களிலே உயிர் உருவிற்கு-உருவில்லாத உயிர்க்கு உருவுபோல் நிலவும் உடம்புகட்கு, ஏதம் முயன்று-தீங்கு நினைந்து, செய் பாவம் தன்னால்-செய்த கொலை முதலிய பாவத்தால், இன்ன பல் பிறவிதோறும்-இத்தன்மையாகப் பெற்ற பல பிறப்புக்களிலும், இடும்பைகள் தொடர்ந்த-துன்பங்கள் எம்மைத் தொடர்ந்து வந்தன, வந்தோம்-அதனால் இப்பிறப்பெடுத்து வருவோமாயினோம், மன்உயிர்க் கொலையினால்-மிக்க பல உயிர்க்கொலை புரியும் செயல் காரணமாக, இம் மன்னன் வாழ்க-இந்த மாரிதத்தனாகிய வேந்தன் நெடிது வாழ்க, என்னும் மாற்றம்-என்று சொல்லும் அறத்திற்கு மாறான சொல், என்னதாய் விளையும்-எத்தன்மைத்தான பாவத்தை விளைவிக்குமோ, என்றே-என்று நினைத்தே, எம்முள் நக்கனம்- எங்களுக்குள் யாங்களே நகுவேமாயினேம், என்றான்- என்று அபயருசி விடையிறுத்தான் எ-று.
உயிர் அருவப்பொருள் என்றும், அஃது எடுத்த உடம்புதோறும் அவ்வுடம்பளவிற் பரந்து நிறைந்து நிலவுமென்றும், அதன் உண்மைகாண்டற்கு உருவமாகிய உடல் கருவியென்றும் கூறுப. அருவப்பொருளாய உயிர்க்கு ஒருவரும் ஒரு தீங்கும் செய்தலாகாமையின், "உயிர்க்குத் தீங்கு செய்தா" னென்றவழி, உயிர் ஆகு பெயராய்த் தனக்கு இடமாயும் உருவமாயும் இருக்கும் உடம்பையே குறித்து நிற்பது குறித்து, "உயிர் உருவிற் கேதமுயன்று" என்றான். முன் உயிருருவில் கேதம் முயன்று என்று பிரித்து, முன்னைப் பிறவிகளில் எடுத்த உடம்பிலிருந்துகொண்டு, பிற வுயிர்கட்குத் தீங்கு செய்ய முயன்று என்று உரைத்தலுமொன்று. முன்னைப் பிறவியிற் செய்த பாவப்பயனே பின்னே பல துன்பமிக்க பிறவிகளை யெடுத்தற்குக் காரணமாயிற்று என்பான், "பல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த" என்றும், "வந்தோ" மின்றும், காரிய வாய்பாட்டாற் கூறினான். மன், பெருமை; ஈண்டு மிகுதி குறித்து நின்றது. மாற்றம்,சொல்; ஆற்றலால், அறத்திற்கு மாறான சொல்லெனப்பட்டது. முன்னைப்பிறவியிற் செய்த பாவம் காரணமாகப் பின்னே மிகப்பல பிறவி பிறந்து பெருந்துன்பமுற்று இப்பிறப்பில் இவ்வாறு வந்தோம்; இனி, இப்பாவம் மேலே எத்துணைப்பிறவி பயந்து துன்புறுத்துமோ என்று நினைந்து நகைத்தேம் என்றானாயிற்று. "எம்முள் நக்கனம்" என்றது, நீ அதனை நின்பால் செய்ததாகத் கருதுவது பேதைமை யென்றானு மாயிற்று.
-------------
இருவரையும் கேட்டோர் வியத்தல்
கண்ணினுக் கினிய மேனிக் காளைதன் கமல வாயிற்
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். 64
உரை:- கண்ணினுக்கு இனிய-காண்பதற்கு இனிமையா யிருக்கின்ற, காளைதன்-காளையாகிய அபயருசியினுடைய, கமலவாயின்-தாமரைப் பூவைப்போலும் வாயிலிருந்து வந்த, பண்ணினுக்கு இனிய சொல்லை-பண்ணிசையை யொத்த இனிமை வாய்ந்த சொற்களை, படியவர்-பலி பீடத்தின் கீழே நின்ற மக்களனைவரும், முடியக்கேட்டு- முற்றவும் கேட்டிருந்து, அண்ணலுக்கு-அண்ணலாகிய அபயருசிக்கு, ஆண்மை அழகிது-இத்திண்மை அழகியதேயாகும், அழகினுக்கு அமைந்ததேனும்-இவன் பெற்றுள்ள அழகுக்கும் இவ்வாண்மை நன்கு அமைந்திருக்கின்ற தென்றாலும், பெண்ணினுக்குஅரசி-மங்கையர்க்கு அரசி போல விளங்குகின்ற அபயமதியின், ஆண்மை-மனத்திட்பம், பேசுதற்கு அரியது-சொல்லும் தரத்தன்று, என்றார்- என்று தம்முள் பேசிக்கொள்வாராயினர் எ-று.
எனவே, ஈண்டு நாம் வேறு கூறுவது வேண்டாவென்பது குறிப்பெச்சம், "அண்டல ரெனினும் கண்டா லன்புவைத் தஞ்சும் நீரார்" (29) என்று இவர்தம் மேனியழகை முன்பே சுருக்கமாய்க் கூறினாராதலின்,அம்முறையே" கண்ணினுக்கினிய மேனிக்காளை" என்றார். பலிபீடத்தின் மேலேயிருந்து அபயருசிகூற, கீழே தரை மீது நின்றவர் அவன்கூறின முற்றும் செவியாரக் கேட்டமை தோன்ற "படியவர் முடியக் கேட்டே" என்றார். ஆண்மை- திண்மை, ஈண்டு அஞ்சாமையைச் சுட்டிநின்றது. சிறப்புடைய ஆண்மகனாதலின், அபயருசிபால் அழகும் ஆண்மையும் விளங்கித் தோன்றுவதில் வியப்பில்லை; மண்ணுலகத்து மகளிரனைவர்க்கும் கற்புப் பொற்பு முதலிய நற்பண்புகளெல்லாவற்றாலும் மேம்பட்டு நிற்கும் அபயமதியின் மென்மைத்தன்மையை நோக்கினார்க்கு அவளது மனத்திண்மை பெருவியப்பைப் பயந்தமையின் "பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற்கரிய" தென்றார்.
-----------
மாரிதத்தன் முன்னைப்பிறவி வரலாறு கூறுக எனக் கேட்டல்
மன்னனும் அதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்ததும் இயம்பு கென்றான். 65
உரை:- மன்னனும் -மாரிதத்தனாகிய வேந்தனும், அதனைக்கேட்டு-அபயருசி கூறியதைக்கேட்டு, மனம் மகிழ்ந்து-மனத்தில் களிப்புற்று, இனியனாகி-அன்புடையனாய், நும்-உங்களுடைய, முன்னர் பிறவி இறந்தன என்னை- முற்பிறப்புக்களுள் கழிந்தனயாவை, பிறந்து நின்ற- நீவிர் பிறந்திருக்கும், மன்னிய குலனும் என்னை-நிலைபெற்ற குலம் யாது, வளர் இளம்பருவம் தன்னில்-மேலும் வளர்தற்குரிய இளமைப்பருவத்தே, நீர் இனையராகி வந்ததும் என்னை-நீவிர் இத்தன்மையையுடையராய் வந்தது எதற்காக, இயம்புக-எனக்குச் சொல்வீராக, என்றான்-என்று அவ்விருவரையும் கேட்டான் எ-று.
தான் குறித்த பொருளை நன்கு வகுத்து ஒன்றும் விடாது விடையிறுத்த அபயருசியின் சொற்றிறங்கண்டு, தன் கருத்து மாறி அன்பு செய்யத் தொடங்கினானாதலின் "கேட்டு மனமகிழ்ந்தினிய,னாகி" என்றார். இனியனாதல், மனத்தன்பினை மலர்ந்த முகத்தால் இனிமையுறக் காட்டல். முன்னைப் பிறப்பும் இம்மையில் பிறந்த குலமும் இளமைக்கண் துறவுபூண்ட காரணமும் அறியும் வேட்கையனாதலின், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து வினவலுற்றான். இருவரது இளமைச் செவ்வியைக் காணுந்தோறும் அவன் கருத்து அன்பால் நெகிழ்தலினாலும், துறவுநிலை வியப்பை மிகுவித்து உண்மையறியக் கடவுதலினாலும் "வளரினம் பருவந் தன்னில் என்னை நீர் இனையராகி வந்தது" என்றான். இளமையினை "வளரிளம் பருவம்" என்றும், துறவுக்கோலத்தை "இனையராகி" என்றும் கூறினான். மேன்மேலும் வளர்ச்சிக்குரிய இளமைக்கண் துறவு பொருந்தா தென்பது தன் கருத்தாதல் தோன்ற.
----------
அருள் நிலவிய உள்ளத்துடன் கேட்க என அரசற்கு அபயருசி கூறல்
அருளுடை மனத்த ராகி யறம்பரிந் தவர்கட் கல்லால்
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற் சென்று
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்
அருளியல் செய்து* செல்க ஆகுவ தாக என்றான். 66
-------------
(பாடம்) *அருளில செய்து.
உரை:- புரவல-அரசே, அருளுடைமனத்தராகி-அருள் பொருந்திய மனமுடையவராய், அறம் புரிந்தவர்கட்கு அல்லால்-நல்லறத்தைச் செய்பவர்க்கன்றி, மருள் உடை மறவருக்கு-மயக்கம் பொருந்திய நெஞ்சினையுடையராய் உயிர்க்கொலை முதலிய பாவத்தைச் செய்பவர்க்கு, எம் வாய் மொழி-யாம் உரைக்கும் மெய்ம்மொழிகள், மனத்திற் சென்று-மனதிற்படிந்து, பொருள் இயல்பாகி நில்லா- அவர் விரும்பும் பொருளாய் நிலைபெறாவாதலால், கருதிற் றுண்டேல் - இவ்வறவுரையை நீ கேட்கக் கருதினையாயின், அருள் இயல் செய்து - நெஞ்சில் அருள் நிலவப்பண்ணிக் கொண்டு, செல்க - கேட்டு அறநெறியே ஒழுகுவாயாக, ஆகுவதாக - வரக்கடவது வருக எனக் குறித்து நீ கவலல் வேண்டா, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
அது குறித்து என்பது முதலாயின கூற்றெச்சம். புரிதல், எப்பொழுதும் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் செய்தல். அருளறம் பூண்டவர்க்கன்றி நின்போல் கொலை மேற்கொண்டொழுகுவோர்க்கு எம்முரை பொருளாகத்தோன்றா என்றதற்கு, "எம்வாய் மொழி மனத்திற்சென்று பொருளியல்பாகி நில்லா" என்றான். மருளுடை மறவர் எனப் பொதுப்படக் கூறினானாயினும், மாரிதத்தன் அதனை முன்னிலைப்புறமொழியாகக் கொள்வானாவது கருத்தென்க. மாரிதத்தன், தான் கூறலுறும் அறத்தைக் கேட்டற்கு வேட்கை யுடையனாதலை அவனுடைய குறிப்புக்களால் அறிந்தானாயினும், "மருளுடைமறவ" னாதல்பற்றி, "கருதிற்றுண்டேல்" என்றான். தான் கூறுதற்குமுன், பலியீடு குறித்து ஆங்கு நிறுத்தப் பெற்றிருக்கும் உயிர்களைக் கொல்வது தவிர்த்தல் வேண்டியும், தான் கூறவிருக்கும் அறத்தைக் கேட்டற்கு அவன் மனம் செம்மை யுடைத்தாதல் வேண்டியும், "அருளியல்செய்து செல்க" என்றும், பலியீடுநிற்பின் சண்டமாரியால் தீங்கு நிகழும் என்பது நினைந்து ஒருகால் அரசன் மயங்குவன் என்பதையுட்கொண்டு, வரக்கடவது வந்தேதீரும், அதனைத்தவிர்த்தல் தேவர்க்கும் ஆகாதென்பான், "ஆகுவதாக" என்றும் கூறினான்.
---------
மாரிதத்தன் அருள் நிலவும் மனத்துடன் பணிந்து கேட்டல்
அன்னணம் அண்ணல் கூற அருளுடை மனத்த னாகி
மன்னவன் தன்கை வாளும் மனத்தியை மறனும் மாற்றி
இன்னினி யிறைவன் நீயே யெனக்கென இறைஞ்சி நின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். 67
உரை:-- அன்னணம் அண்ணல் கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி கூறலும், மன்னவன் - அரசனாகிய மாரிதத்தன், தன் கைவாள் மாற்றி - தன்னுடைய கைவாளை உறையில் செருகிக்கொண்டு, மனத்திடை - மனத்தின் கண் நிலவி, மறனும் மாற்றி - பாவக்கருத்தையும் மாற்றி அருளுடைய மனத்தனாகி-அருள் நிலவும் மனமுடையனாய், இன்னினி-இப்பொழுது, எனக்கு இறைவன் நீயே- எனக்கு அறமுரைக்கும் ஆசிரியன் நீயே யாவாய்; என- என்றுரைத்து, இறைஞ்சி நின்று-அவனை வணங்கி நின்று, குமர-குமரனே, நுங்கள் பவத்தொடு பரிவும் பன்னுக- உங்களுடைய முன்னைப்பிறவி வரலாறும் அப்போது நீவிர் உற்ற துன்பமும் உரைப்பாயாக, என்றான்-என்று வேண்டினான் எ-று.
கைவாளை உறையில் மாற்றியது மனத்திடை மறத்தை மாற்றியதைத் தோற்றுவித்த தாயினும், அம்மறம் மீட்டும் தோன்றா வகை யவித்தற்கு "அருளுடை மனத்த" னானானென்றார். இவ்வண்ணம் அருள்மேற் கொண்டவன், அறங்கேட்டற்கு உள்ளம் சேறலின் "இன்னினி இறைவன் நீயே எனக்கு" என்றான்; இறைவன் நீயே என வாயாற் சொல்லியதைச் செயலிலும் மெய்ப் பிப்பான் "இறைஞ்சி" நின்றான் என்க. முன்னர், "மன்னுயிர்க் கொலையினாலிம்மன்னன் வாழ்கென்னுமாற்றம், என்னதாய் விளையு மென்றே நக்கனம்"(63) என்று அபயருசி கூறியசொல், நெஞ்சில் நின்று கொலைப்பாவத்தின் பயனறிதற்கண் வேந்தனை முடுகுதலின், "பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்" என்றார். இறைவவென்னாது, குமரவென்றான், இறைவனாகக் கருதும் கருத்தினும் குமரனாகக் கண்டுகொண்ட கருத்து ஊறியிருத்தலின், "இனியினி என்பது இன்னினி என மருவிற்று, "இன்னினி வாராமாறு கொல்"1 என்றாற்போல.
- --------------
1.ஐங். 222.
அபயருசி கூறத்தொடங்கல்
மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்க
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவ தேபோல்
அன்னமென் னடைய னாளின் அருகணைத் துருகும் வண்ணம்
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான். 68
உரை:- மேகம்-மேகமானது, மின்னொடு-மின்னொடு தொடர்ந்து- மின்னலுடன் கூடி, மேதினிக்கு ஏதம் நீங்க-நிலத்திலுள்ள உயிர்களின் துன்பம் நீங்குமாறு, பொன்வரை முன்னர் நின்று-பொன்மலையின் முன்பு நின்று, புயல் பொழிந்திடுவதுபோல்-மழையைப் பெய்வதுபோல், அன்னமெல் நடையனாளின்-அன்னம்போல மெத்தென்ற நடையினையுடைய அபயமதியின்;, அருகு அணைந்து-அருகிற்சென்று, உருகும் வண்ணம்-கேட்போர் நெஞ்ச நீராய் உருகுமாறு, மன்னவகுமரன்-அரசகுமரனாகிய அபயருசி, மன்னற்கு- மாரிதத்தனுக்கு, அறமழை-அறவுரையாகிய சொற்பொழிவை, பொழியலுற்றான்-நிகழ்த்தத்தொடங்கினான் எ-று.
அபயமதியையும் சேர வுவமம் செய்தலின், மின்னொடு "தொடர்ந்து" என்றார். "பொன்வரை முன்னர்" என்றது, மாரிதத் தன் முன்னர் நின்றதை யுட்கொண்டு, நடையனாள், நடையினாள்போல இன்பெறாது அன்பெற்று முடிந்தது. அருகணைந்து எனவே, இருவரும் இதுகாறும் தனித்தனி வேறு நிறுத்தப்பட்டிருந்தமை பெற்றாம். அபயருசி அரசகுமாரனே யாதலின், "மன்னவ குமரன்" என்றார். யசோமதி யரசனுக்கும் அவன் மனைவி புட்பாவலிக்கும் பிறந்த இரட்டைமக்களாதலை "அன்னவர் தம்முள் முன்னோ னபய முன்னுருசி தங்கை, யன்னமென்னடையி னாளு மபயமுன்மதியென் பாளாம்"1 என்பதனா லறிக. அறவுரையை மழை யென்றமையின், "பொழியலுற்றான்" என்றார்.
- ----------------
1.யசோ. 260.
அபயருசி நிரைசெய்து கூறுவல் என்றல்
அரைசநின் னகத்து மாட்சி யதுபெரி தழகி தாயிற்
றுரைசெய்தா லுறுதி யாய துணர்ந்துகொண் டுய்தி* போலும்
விரைசெய்தார் வரைசெய் மார்ப† வினவிய பொருளி தெல்லாம்
நிரைசெய்தே புகல்வன் யான்நீ நினைவொடு கேளி தென்றான்.‡ 69
------
(பாடம்)*டுயர்தி. † மார்பன் ‡கேட்டிதென்றான்.
உரை:- அரைச-அரசே, நின் அகத்து மாட்சியது- நின் மனத்தின் மாண்பானது, பெரிது அழகிதாயிற்று- மிகவும் அழகாகவுளது, உரைசெய்தால்-யாம் எம் முன்னைப் பிறவி வரலாற்றைச் சொல்லலுற்றால், உறுதியாயது- நினக்கு உறுதியாகும் பொருளினை, உணர்ந்து-தேர்ந்தறிந்து, கொண்டு-அதனையே மேற்கொண்டு, உய்திபோலும்- உய்திபெறுவாயாக, விரை செய்தார்-மணம்கமழும் மாலை யணிந்த; வரை செய் மார்ப - மலைபோலும் மார்பையுடையோய், வினவிய பொருள் இது எல்லாம் - நீ கேட்ட இப்பொருள் அனைத்தையும், யான் நிரைசெய்து புகல்வன் - யான் வரிசைப்படுத்தி முறையாகவுரைப்பேன், நினைவொடு - ஒரு முகமான கருத்துடன், இதுகேள் - இதனைக் கேட்பாயாக; என்றான் - என்று அபயருசி கூறினான் எ -று.
அரைச. மொழியிடைப்போலி. "இன்னினி இறைவன் நீயே எனக்கு" (67) என்று வாயாற் சொல்லி, மெய்யால் "இறைஞ்சி நின்று", முன்னைப் "பவத்தொடு பரிவும்" மொழிக என்று வேண்டியது கண்டு, அபயருசி மனம் கனிந்து அரசன் கேட்டது கூறலுறுகின்றானாக, அவ்வரசனது மனவேட்கையின் மிகுதி அவன் முகத்தே திகழக்கண்டு பாராட்டுவானாய், " நின் அகத்து மாட்சியது பெரிது அழகிதாயிற்று" என்றும், முன்னைப் பவமும் பரிவும் மொழிந்து செல்லுங்கால் இடையிடையே உறுதியாய பொருள்கள் விரவிவருமாதலின், அவற்றை அறிவால் தேர்ந்து மேற்கொண்டு உய்தல் வேண்டும் என்பான், " உறுதியாய துணர்ந்து கொண்டுய்தி" என்றும் கூறினான், போலும், உரையசை; இதனை வடநூலார் வாக்கி யாலங்காரம் என்ப. விரைசெய் தார் வரை செய் மார்ப, என்பது இணையெதுகை. தார் மார்ப, வரைசெய் மார்ப என இயையும். இதற்குப் பிறவாறும் கூறுப. நிரை செய்துரையாவழி, இடையிடையே விரவப்படும் உறுதிப்பொருள்கள் இனிது தேர்ந்து கொள்ளப்படாவாதலின், " நிரை செய்தே புகல்வன்" என்றான், ஏகாரம், தேற்றம். உறுதியாய கேள்வியால் தோட்ட செவியனல்லனாதல் தோன்ற, "நினைவொடு கேள்" என வற்புறுத்தினான்.
----------
கேள்வியாலாம் பயன் கூறல்
எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவுநீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை யெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. 70
உரை:-- வேந்தே - அரசே, இதனை எவ்வளவு கேட்பார் - யாம் கூறும் இவ்வழரவுரையை ஒருவர் எவ்வளவு கேட்கின்றாரோ, இருவினைக் கழுவும் நீரார் - அவர் இருவகை வினைகளாகிய அழுக்கினைக் கழுவிக்கொள்ளும் தன்மை யுடையராவர், அவ்வளவு-அவ்வளவும், அவருக்கு ஊற்று செறித்து-அவருக்கு உறுகின்றனவாகிய ஊற்றுகளையும் அடைத்து, உதிர்ப்பை உடன் ஆக்கும்-நன் ஞானத்தைப் பெறுவிக்கும், மெய்வகை தெரிந்து-உயிர் முதலிய தத்துவக் கூறுகளை யாராய்ந்து, மாற்றை வெருவினர் வீட்டை-உலக வாழ்க்கையை யஞ்சித் துறவுபூண்டோ ரெய்தும் வீடு பேற்றினை, எய்தும்-எய்தக்கூடிய, செவ்வியராகச் செய்து தகுதியுடையராக்கி, சிறப்பினை நிறுத்தும்-முத்திச்சீவனாகிய சிறப்பை நிலை பெறுவிக்கும் எ-று.
இச் செய்யுளால், இவ்வறங்கேட்டலால் வரும் பயன் கூறுகின்றானாதலின் "ஏனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்"1 என்ற கருத்தையுட்கொண்டு, முதற்கண் இக்கேள்வி இருவினைகளாகிய அழுக்கைக் கழுவித் தூய்மை செய்துகொள்ளும் தகுதியை யுண்டுபண்ணும் என்றற்கு, "கேட்பார் இருவினை கழுவும் நீரார்" என்றான். ஊற்று, இருவினையும் உயிரையுறுவது, உறுவது, ஊற்று; இரும்பைப் பழுக்கக் காய்ச்சிய விடத்து அதனிடத்தே உற்றுத்தோன்றும் நீர்போல உயிரிடத்தே இருவினையும் தோன்றுதலால் ஊற்றாயிற் றென்பர், "ஓதிய விரண்டும் (நல்வினை தீவினைகள்) உயிரினை யுறுதல், ஊற்றாம், தாதுறக்காய்ந்த போழ்தில் தானுறும் நீரை யொத்தே"2 என்று சான்றோர் கூறுதல் காண்க. இஃது ஈனம், அதிகம், ஈராபதம், சாம்பராயம், ஞானம், அஞ்ஞானம், புண்ணியம், பாவம், தவியம், பரிணாமம் எனப் பத்து வகையாகும்,. இவ்வூற்றுக்கள் தவத்தால் அடைக்கப்படுவனவாம்.; "ஊனந்தீர்தவத்தினூற்றுச் செறித்தமாதவனை யேத்தி"3 என வருதல் காண்க. அடைத்தலாவது குப்தி, சமிதி, தருமம், சிந்தை, அடக்கம், தாபனம் என்பனவற்றால் "பரிசை வெல்லும் தன்மை"4 என்பர். இவற்றுள் அடக்கம், தாபனம், பரிசைவெற்றி என்ற மூன்றும், நன்னினைவு, நல்லுணர்வு இரண்டும்கூடி முத்தி நிலையை யுண்டுபண்ணும் என்பவாகலின், "ஊற்றுச் செறித்துடன் உதிர்ப்பை யாக்கும்" என்றான்.
- ----------------
1. குறள். 146. 2. மேருமந். 97. 3. மேருமந். 775. 4. மேரு. 99.
அடைப்ப செறிப்பெனப் படுதலின் ஊற்றுச் செறிப்பு உதிர்ப்பை யாக்கும் என்றானாயிற்று "நின்ற வந்தத்தின் மூன்றும். (அடக்கம் முதலிய மூன்றும்) நினைப்பு உணர்வு உதிர்ப்பை யாக்கும்" என்று பிறரும்1 கூறுதல் காண்க. இவற்றின் விரிவெல்லாம் பதார்த்தசாரம் மேருமந்தரபுராணம் முதலிய நூல்களுட் கண்டு கொள்க. உலக வாழ்வின் பொய்ம்மையும் முத்தி வாழ்வின் மெய்ம்மையும் வேறுபடுத்து நோக்;குமிடத்து, உடலோடு கூடிச் செய்யும் உலக வாழ்வு துன்ப ஏதுவாவது தோன்றுதலின், அறிவுடையோர் முத்தி வாழ்வைத் தெரிந்துணர்ந்து, உலக வாழ்விற்கு அஞ்சித் துறவு பூண்டு வீட்டு வாழ்வை உரிமை செய்து கொள்வர் என்றற்கு "மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை" யென்றான். மெய்வகை தெரியாதார் உலக வாழ்வில் துன்பமும், தெரிந்தார் வீட்டு வாழ்வில் இன்பமும் நுகர்வர் என்றகருத்தேபட, "மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டுமாம், சென்ற தத்துவந் தெளியாமை தேறலால்"2 என்று வாமன முனிகளும் உரைத்தல் காண்க. மெய்-தத்துவம். வீட்டின்ப வாழ்வை நோக்க, உலக வாழ்வு துன்பமாய் மாறுபட்டிருத்தலின் "மாற்று" என்று சமண் சான்றோர் கூறுகின்றனர். வீட்டுயிரின் சிறப்பாவது, "வெவ்வினை யெண்மையின், கேட்டில் எண்குண மெய்தியோர் கேடிலா, மாட்சியால்"3 உலகந்தொழ விளங்குவது. கேட்பதனால் உளதாம் பயன் தெரியாவழிக் கேட்போர்க்குக் கேள்விக்கண் மனம் செல்லாது என்னும் கருத்துப்பற்றி இவ்வளவும் அபயருசி தொகுத்துக் கூறினா னென வுணர்க.
- -----------
1 மேரு. 100 2. மேரு. 639. 3 மேரு. 70.
இதுவுமது
மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்
புலமலி போகத் தின்கண் ணாசையைப் பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோலச்
சிலைமலி நுதலி னார்தங் காதலில் தீமை செய்யும். 71
உரை:-மலம் மலி குரம்பையின்கண்-(மேலேகூறிய கேள்வி)மலம் நிறைந்த உடம்பின்கண்ணதாகிய, மனத்து எழு விகற்பை மாற்றும்-மனத்தில் எழுகின்ற திரிபுணர்ச்சிகளைப் போக்கி உண்மையுணர்வுகளாக்கும், புலம் மலி போகத்தின்கண்-ஐம்புலன்களாலும் நுகரப்படும் நுகர்ச்சிக்கண் உண்டாகும், ஆசையைப் பொன்றுவிக்கும்- ஆசையைக் கெடுத்து வீட்டின்பத்தில் வேட்கை நிகழப் பண்ணும், கொலை மலி கொடுமைதன்னைக் குறைத்திடும்- கொலை முதலிய தீவினைக் கேதுவாகிய தீயவுணர்ச்சிகளைத் தழையாவாறு வெட்டி வீழ்த்தும், கோலச் சிலைமலிநுதலினார் தம் காதலின்-அழகிய வில்போலும் புருவத்தினையடைய மகளிர்பால் உண்டாகும் காமவிச்சைக்கு, மனத்தில் தீமை செய்யும்-மனத்திடத்தே கொடிய வெறுப்பினை யுண்டு பண்ணும் எ-று.
மலம்,அழுக்கு, குரம்பை, உடம்பு; "பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பைப்"1 என்று ஔவையாருங் கூறுதல் காண்க. இவ்வுடம்பை இடமாகக் கொண்ட மனம், பொருள், இடம், காலம், பாவம், பவம், உருவம், பெயர் என்ற இவற்றால் திரிபுணர்ச்சி கொள்வதாதலின், அவ்வுணர்ச்சி இவ்வற வுணர்வால் செம்மை யெய்தும் என்றற்கு "மனத்தெழு விகற்பை மாற்றும்" என்றான். போகத்தின்கட் பிறக்கும் ஆசை ஒன்று பலவாய்ப் பெருகிப் பிறவிக் கேதுவாதலின் "ஆசையைப் பொன்றுவிக்கும்" என்றான். விகற்ப வுணர்வும், போகத்தின்கண் ஆசையும் கொலை முதலிய பெருந் தீவினையாகிய மரத்தை வளர்த்து மேலும் பல வினைகளாகிய கனி வகைகளை விளைவித்தல் பற்றி "குறைத்திடும்" என்றான். மகளிர்பால் உண்டாகும் காம விச்சை மனத்தின்கண்ண தாகலின், அவ்விடத்தே எழாதவாறு கெடுத்தழிக்கும் என்றற்குத் "தீமை செய்யும்" என்றான். நுதல், ஆகுபெயர். நெற்றிக்கே யுரைப்பினுமாம்.
- ---------
1. நல்வழி, 7.
இதுவுமது
பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய ளடைவ ரல்லால்*
இறந்தனர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென்
றறைந்தன† ரறிவில் லாமை யதுவிடுத் தறநெ றிக்கண்
சிறந்தன முயலப் பண்ணும் செப்புமிப் பொருண்மை யென்றான். 72
------
(பாடம்)* னடைவதல்லால். † அறைந்தவ.
உரை:- பிறந்தவர்-மண்ணில் உடம்பொடு பிறந்தவர்கள், பெறுபயன்-பெறுதற்குரிய நலங்களை, முயற்சியால்- தத்தம் முயற்சியினால், அடைவர் என்று-பெறுவார்கள் என்றும், அல்லால்-அல்லாமலும், இறந்தனர் பிறந்ததில்லை என்று-இறந்தவர்கள் பிறந்தது கிடையாதென்றும், இருவினைதானும் இல் என்று-இருவினை என்பவைகளும் இல்லையென்றும், அறைந்தனர்-சொல்பவர்கள், அறிவில்லாமை அது விடுத்து-அவ்வாறு தாம் சொல்வதற் கேதுவாகிய அறியாமையைப் போக்கி, அறநெறிக்கண்- அறநெறியின் கண்ணே செலுத்தி, சிறந்தன-வீடுபேற்றுக் குரியவற்றைக் குறித்து, செப்பும் இப்பொருண்மை-யாம் இப்போது சொல்லுகின்றதாகிய இவ்வறப்பொருள், முயலப்பண்ணும்-முயற்சி செய்விக்கும் எ-று.
இப்பொருண்மை, அறிவில்லாமை விடுத்து, அறநெறிக்கண் செலுத்தி, சிறந்தன முயலப்பண்ணும் என்று முடிக்க. செலுத்தி யென்பது எஞ்சி நின்றது. இப்பொருளின் தன்மை இது வென்பான், பொருண்மையென் றொழிந்தான். அறைந்தவர் தாமே அறியாமை விடுத்து அறநெறிக்கண் நின்று சிறந்தன முயலுமாறு செய்யுமென்றுமாம். வினைத்தொடர்பென்ப தொன்று வேண்டா, பிறந்தவர் பெறும் பயனுக்கு அவர் முயற்சியே காரண மென்பார், "முயற்சியாலே பெறுபயனடைவ"ரென்கின்றனர். மறுபிறப்பில்லை, இருவினையில்லை என்பன முதலாயின பிறர் கூறுவதைக் கொண்டு கூறியனவாம். என்று என்பது எங்கும் கூட்டப்பட்டது, "வினை பகை யென்றிரண்டினெச்சம்"1 என்புழிப்போல.
- -----------
1. குறள், 674.
தாம் அறமுணர்ந்த வரலாறு கூறல்
அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட
திறப்பவு மதன்கண் தேற்றம் இனிதுவைத் திடுமி னென்றான்
உறப்பணித் தெவரு முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார். 73
உரை:- அறப்பொருள் விளைக்கும் காட்சி-யான் கூறும் அறமாகிய பொருள் விளைவிக்கும் பயனை, அருந்தவர் அருளிற்றன்றி-அரிய தவத்தையுடைய முனிவரர்கள் உரைத்தருளியதனாலு மன்றி, பிறப்புணர்ந்ததனின்-பழம் பிறப்பு வரலாறுகளை யறியு மறிவுடைமையால், யாமே- எம்மால், பெயர்த்தும் உணர்ந்திடப்பட்டது-மறுபடியும் உணரப்பட்டதாகும், அதன்கண்-அதனால் அவ்வறப் பொருளின்கண், தேற்றம் - கருத்தை,இறப்பவும் - மிகவும் தெளிவாக, இனிது வைத்திடுமின் - இனிது வைத்துக் கேட்பீராக, என்றான் - என்று அபயருசி கூறினானாக, எவரும் - ஆங்கிருந்த யாவரும், உறப்பணிந்து - மிகவும் பணிந்து, உவந்தனர் கேட்கலுற்றார் - விருப்பத்துடன் கேட்பாராயினர் எ-று.
அறமாகிய பொருளால் விளையும் பயன் கருவிகளால் காணப்படுதலின் காட்சி யெனப்பட்டது. கோழியாயிருந்த காலத்து அகம்பன முனிகளும், இரட்டையராய்ப் பிறந்தபின் சுதத்த முனிகளும் பழம்பிறப்பினை யுணர்த்தினமையின், "அருந்தவர்" என்றான். திருவறம் உணர்ந்து திருந்திய அறிவின ரானபோது தாமாகவும் உணர்ந்து கொண்டது என்பான், "பெயர்த் துணர்ந்திடவும் பட்டது" என்றான். உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது. இறப்பவும் இனிது என்பன வன்புறை குறித்து நின்றன. இவ்வாறு உபதேச முகத்தாலும் காட்சி வகையாலும் உணர்ந்தது எனவே, யாவர்க்கும் அப்பொருளைக் கேட்டற்கு நாட்ட முண்டாயிற்றென்பார், "உறப்பணிந்து எவரும் உள்ளத் துவந்தனர் கேட்கலுற்றார்" என்றார். உவந்தனர், முற்றெச்சம். அரசன் முதல் ஆங்கிருந்த மக்களனைவரும் என்றற்கு "எவரும்" என்றார்.
முதற் சருக்கம் முற்றிற்று.
---------------
இரண்டாவது சருக்கம்
-----------
அவந்திநாட்டு உஞ்சயினி நகரம்
வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபத மவந்தி யாமதின்
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. 74
உரை: வளவயல் வாரியின் - வளவிய வயல்களாகிய வருவாயால், மலிந்த - செல்வம்நிறைந்த, பல்பதி - பலநகரங்கட்கு இடமாகிய, அளவறு சன பதம் - அளவில்லாத மக்களையுடைய நாடு, அவந்தியாம் - அவந்திநாடாகும், அதின் விளைபயன் - அதன்கண் வாழ்வார்க் கெய்தும் போகம், அமரரும் விரும்பும் நீர்மையது - தேவரும் விரும்பத்தக்க தன்மைத்தாகும், ஒருநகர் உளது - அந்நாட்டிற்குத் தலையாய நகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று பெரியோர் கூறுவார்கள். எ - று.
வயல்வளத்தால் மிக்க விளைபொருளும், அதன் வாயிலாகப் பெருஞ்செல்வமும் பெருகுதலின், வளவயலை “வாரி” யென்றார். வாரி, வருவாய்; “புயலென்னும் வாரி” (14) என்ற திருக்குறட்குப் பரிமேலழகியார் கூறும் உரை காண்க. சனபதம், நாடு; உம்மை, சிறப்பு. அஃதென்னல் வேண்டும் ஆய்தம், விகாரத்தால்தொக்கது. உஞ்சயினி, வடசொற்சிதைவு. என்ப வென்றதனை அசையாக்கினுமமையும்.
----------
நாட்டரசன் அசோகன் எனல்
கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியென்னும் மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகைய னமர்ந்து வைகுநாள். 75
உரை: கந்துஅடு களிமத யானை - கட்டுத்தறியை அலைக்கும் மதக்களிப்பினையுடைய யானைகளையுடைய, மன்னவன். அரசனாவான், இந்திரன் எனும் திறல் - துறக்கவேந்தனான இந்திரனேயென்று சொல்லத்தக்க திறல்படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன் என்று பெயர் கூறப்படுவான் உளன், சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் - சந்திரமதியென்னும் மங்கைநல்லாளுடன்கூடி, அந்தம் இல் உவகையில்-முடிவில்லாத இன்பத்தையுடையனாய், அமர்ந்து வைகும்நாள் - அதனை விரும்பிவாழும் நாட்களில் எ-று.
வறிதேயுள்ள யானை கந்தினை அலைப்பதற்குக் காரணம் மதக்களிப்புடைமை யென்றற்கு, "கந்தடு களிமதயானை" என்றார். பொழிகின்ற மதமுடைமை தோன்றற்கு, "களிமதயானை" எனல் வேண்டிற்று. போகப்பேற்றாலேயன்றி வலியாலும் இந்திரனை யொப்பான் என்பார், "இந்திரனெனுந் திறல் அசோகன்" என்றார். மடந்தை, பருவத்தாலும் பொதுவியல்பாலும் கூறியது. சந்திரமதியின் கூட்டம் கூடுந்தோறும் புத்தின்பம் பயந்துவந்தமையின், "அந்தமில் உவகையன்" என்றார். அந்தமின்மை அமர்ந்து வைகற்கு ஏது.
-------------
யசோதரன் பிறப்பு
இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொரு தனயன் தந்தனள்
எந்துயர் களைபவ னிசோ தரன்னென
நந்திய புகழவன் நாம மோதினான். 76
உரை:-இந்து - மழுமதியானது, ஓர் இளம்பிறை பயந்த தென்ன - ஓர் பிறைச்சந்திரனைப் பெற்றாற்போல, சந்திரமதி - சந்திரமதியாகிய அரசி, ஒரு தனயன் தந்தனள் - ஒரு மகனைப் பெற்றாள், எம் துயர் களைபவன் - எங்கள் துன்பத்தைத் துடைப்பவனான அசோகமன்னன், நந்திய புகழ் அவன் - மிக்கபுகழையுடைய அந்த மகனுக்கு, இசோதரன் என - யசதோரன்னென்று, நாமம் ஓதினான் - பெயர் வழங்கினான் எ-று.
சந்திரமதி யசோதரனைப்பெற்றது, முழுமதி இளம்பிறையை ஈன்றதுபோல என்றார், சந்திரமதியின் அறிவே யசோதரன் மதியைத் தன்வழி யொழுகுவித்த தாதலின். முழுமதி இளமதியையீனல், இல்பொருளுவமை. எம்மைப்போல் பிறவித்துயர்களையும் நல்லொழுக்கமுடையனென்பான்,"எம்துயர் களைபவ" என்று அபயருசி கூறுகின்றான். எம் துயர் களைபவன் என்றதை யசோதரற்கே யேற்றி, துயர்களைபவனாதலால் யசோதரனெனப் பெயரிட்டான் என்றுமாம்.
--------------
யசோதரன் இளவரசனாய் அமிர்தமதியென்பாளை மணந்து மகிழ்தல்
இளங்களிற் றுழுவையி* னேத மின்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியான்
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான். 77
---------
(பாடம்)* இளங்களிறுழுவையின், இளங்களிற்றொருத்தலின்.
உரை:- இளங்களிற்று உழுவையின் ஆண்புலிக்குருளை போல. ஏதம் இன்றி - நலிவு சிறிதும் இன்றி, வளம்கெழு குமரனும் - வலிபொருந்திய யசோதரனும், வளர்ந்து - வளர்ச்சிபெற்று, மன்னனாய் - இளவரசனாகி, விளங்குஇழை அமிழ்தமுன்மதியை - விளங்குகின்ற அணிகலன்களையுடைய அமிர்தமதியென்பவளை, வேள்வியான் - திருமணத்தால், உளங்கொள - மனம் இன்பம்நிறைய, புணர்ந்து - கூடி, உடன் உவகை எய்தினான் - உடனெய்தும் இன்பத்தை நுகர்ந்து வரலானான் எ-று.
களிறு, விலங்கின் ஆண்பாற்பெயெர்; “ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்”1 என ஆசிரியர் கூறுதல் காண்க. இக் களிறென்னுஞ் சொல் வேழம், கேழல் என்ற இரண்டற்கும் சிறப்பவெய்துவிப்பவாயினும், ஈண்டு இது பொதுவிதியான் அமைந்ததெனவுணர்க. “இளங்களி றுழுவையின் ஏதமின்றியே”என்று பாடங் கொள்ளின், புலியால் தீங்கின்றி இளங்களிறு வளர்ந்தாற்போல என்று பொருள்கொள்க. அசோகனாட்சியிலாதல், யசோதரனாட்சி யிலாதல் உழுவை போலும் பகையுண்மை கூறப்படாமையின், அது பாடமன்மையறிக. வளம், ஈண்டு மெய்வன்மைமேற்று. “மன்னனாய்” என்று ஈண்டுக்கூறியது, பிறாண்டு, “யசோதரன்னெனுந் தனயனை நிலமகட்டலைவனாகென” (83) முடிசூட்டல் கூறப்படுதலின், இளவரசனாதலைக்குறித்து நிற்பதாயிற்று. புணர்ச்சி நிகழுமிடத்தே இன்பமும் உடன்நிகழ்தல்பற்றி, “உடன் உவகையெய்தினான்” என்றார். புணர்ச்சியின்பமே நெஞ்சில் எஞ்ஞான்றும் நிலவப் புணர்ந்தனரென்றற்கு, "உளங்கொளப் புணர்ந்து" எனச் சிறப்பித்தார்; இதனாற்பயன், நல்லறிவுகாட்டும் நன்னெறியைக் கடைபோகச் செல்லும் கடைப்பிடி அவன்பால் இன்மையுணர்த்துவது.
- --------
1.தொல்.பொ.557
யசோதரனுக்கு யசோமதியென்னும் மகன் பிறத்தல்
இளையவள் எழில்நலம் ஏந்து கொங்கையின்
விளைபய னிசோதரன் விழைந்து செல்லுநாள்*
கிளையவ ருவகையிற் கெழும ஈன்றனள்
வளையவ ளிசோமதி மைந்தன் தன்னையே. 78
--------
(பாடம்)*சென்றநாள்.
உரை: இசோதரன் - யசோதரனாகிய இளவரசன், இளையவள் - இளமையுடையவளான அமிழ்தமதியின், எழில் - அழகையும், நலம் - குணஞ்செய்கைகளின் நலத்தையும், ஏந்து கொங்கையின் விளைபயன் - உயர்ந்த முலையிடத்தே பெறும் இன்பத்தையும், விழைந்து - விரும்பி, செல்லும் நாள் - இனிதிருக்குங்காலத்தில், கிளையவர் - சுற்றத்தார், உவகையின் கெழும - மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, வளையவள் - வளையணிந்த அவ்வமிர்தமதி, இசோமதிமைந்தன் தன்னை - யசோமதியென்னும் மகனை, ஈன்றனள் - பெற்றாள், எ - று.
யசோதரன் அமிழ்தமதியின் இளமை, எழில், ஏந்து கொங்கை என்ற இவற்றின் நலத்தை விழைந்து இன்புற்றொழுகியதும், அவ்வொழுக்கத்தின் பயனாக, யசோமதியைப் பெற்றதும் இதன்கட் கூறினார். காமவின்பத்துக்குச் சிறப்புத்தருவது இளமையாதலின், "இளையவள்" என்றெடுத்து, அமிழ்தமதியின் பிற எழில் நலங்களையும் கொங்கைப்பயனையும் விதந்தோதினார். யசோமதியின் பிறப்பு அசோகனது வழியெஞ்சாமைக்கு ஆக்கமாதலின், "கிளையவர் உவகையிற் கெழும வீன்றனள்" என்றார். இவ்வாறு மனைக்கு விளக்காகிய அமிழ்தமதி தனக்கு விளக்கந் தரும் மகனைப் பெற்றாளென்றற்கு, "வளையவள் இசோமதிமைந்தன்தன்னை யீன்றனள்" என அவள்மேலேற்றினார். அவளுடைய எழில்நலச் சிறப்பை, யசோதரன்மேலும் மகற்பேற்றினை அவள்மேலும் கூறியது, பின்னர் அவள் தன் நலத்தைப் பொருந்தா வொழுக்கத்தில் ஈடுபடுத்திக் கெடுவதும், யசோமதி சிறப்புற்று மேம்படுவதும் குறிக்கொண்டு போலும். வளையவள், சுட்டு.
-----------
அசோகன் தனக்கு முதுமை வரவு காண்டல்
மற்றொர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழப்* படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
உற்றுறா வகையதை யுளைந்து கண்டனன். 79
உரை:- ஒருநாள் - இவ்வாறு செல்லுங்காலத்து ஒரு நாள், மன்னவன் - வேந்தனாகிய அசோகன், கண்ணடி பற்றுவான் - கண்ணாடி யேந்திக்காட்டுவோன், அடிதொழ - அடிபணிந்து அதனைக் காட்ட, படிவம் மகிழ்ந்து நோக்குவான் - தன் வடிவத்தைக் காணவிரும்பி அதிற் காண்பவன்- வார்குழல் ஒற்றைமயிர் - நீண்ட கடைகுழன்ற மயிரொன்று, உச்சி - நுனியில், வெண்மையை உற்று - வெள்ளை நிறத்தைப் பொருந்தி, உறாவகையதை - புறத்தே நன்கு தோன்றாவகை மறைந்திருப்பதை, உளைந்துகண்டனன் - மனம் வருந்திப் பார்த்தான் எ-று.
பண்டையரசர்பால் அடைப்பை தாங்குவோர், அடியீடேந்துவோர்,கண்ணடியேந்துவோர் எனக் குற்றவேல் செய்வார் பலர் இருந்தைமையின் ஈண்டுக் கண்ணடியேந்துவோனைக் குறிப்பித்தார். தன்னை நன்கு ஒப்பனை செய்துகொள்ளக் கருதிக் கண்ணாடி நோக்குங்கால்; மகிழ்ச்சி பிறத்தல் இயல்பாதல்பற்றி, "மகிழ்ந்து நோக்குவான்" என்றார். அவன் மகிழ்ச்சி முற்றும் வருத்தமாய் மாறிற்றென்பது, "உளைந்து கண்டனன்" என்பதனால் பெற்றாம். ஒரு மயிர் நுனியில் நரைத்துத் தன் நரைப்புத் தோன்றாவகை மறைந்திருப்பினும் அதனைக் கண்டு களைந்தவன், மனத்தே வருத்தமுற்றானென வறிக. அதற்குரிய காரணத்தை மேல்வரும் பாட்டுக்களால் உரைக்கின்றார்.
-----------
அசோகன் தன் மனத்தே பலபட நினைத்தல்
வண்டளிர் புரைதிரு மேனி மாதரார்
கண்டக லுறவரு கழிய மூப்பிது
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன். 80
---------
(பாடம்)* பற்றிவானடிதொழ.
உரை:- வண்தளிர்புரை - வளவிய மாந்தளிர்போலும், திருமேனி மாதரார் - அழகியமேனியுடையமகளிர், கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழிய மூப்பு - ஆண்டு மிகுதியையுடைய முதுமைப்பருவமானது, உண்டுஎனில் - உளதாயின் அது வரையிற்றான், உளைந்து- மனம் திரிந்து, இகல் - மாறு பாட்டினையுடைய, உருவ வில்லிதன் - அழகிய வில்லினையுடைய மன்மதனது, வண்டுஉள கணை - வண்டு மொய்க்கும் பூவாகிய அம்பு, மனிதர்க்குப் பயன் - மக்கட்குக் காம வேட்கையாகிய பயனை விளைவிக்கும், என்றனன் - என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எ-று.
தளிரனப் பொதுப்படக்கூறினமையின், சிறப்புடைய மாந் தளிர் கொள்ளப்பட்டது, "மாவின் அவிர்தளிர்போலும் மேனியர்"1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. கண்டார் மனம் கவரும் அழகு திகழும் மேனியைத் "திருமேனி" யென்றார். மிக்க காதலராயினும், மூப்பெய்தியவழி அக்காதலாற் பெறும் காமவின்பம்குன்றுதலின், அவர் காமக் காதலும் நீங்கும் என்பார், "கண்டு அகலுற" என்றும், யாண்டு மிகமிக மூப்புமிகுதலின், "கழிய மூப்பு" என்றும் கூறினார். எனில் - என்றால். காமவேட்கையுற்றார்க்கு மனத்துன்பம் இயல்பாதலின் "உளைந்து" என்றார். காமன் உருவிலியாயினும், அவன் வில் உருவுடைத்தாய், சான்றோர்க்கு அச்சம் தருவதாதலின், "உருவவில்லி" என்றார்.வண்டுள கணை, வண்டு தங்கியிருக்கும் பூங்கணை. மலர்க்கணை, காம வேட்கையைக் கிளரச் செய்வது, பயனாதலின், அதனை, "வண்டுளகணை பயன்" என்றான்.
- --------
1. முருகு. 143-4.
அசோகன் இளமையின் வளமையின்மையைத் தன்னுள் நினைத்தல்
இளமையி னியல்பிது வாகு மென்னினிவ்*
வளமையி லிளமையை மனத்து வைப்பதென்
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத்
தளைமையை விடுவதே தகுவ தாமினி. 81
------
(பாடம்)* வாயவென்னினி.
உரை:-இளமையின் இயல்பு இதுவாகும் என்னின் - இளமைப்பருவத்தின் இயல்பு இத்தன்மைத்தாகுமாயின். இவ்வளமையில் இளமையை - இவ்வளப்பமில்லாத இளமைப் பருவத்தை, மனத்துவைப்பது என் - மக்கள் தம் மனத்தே பொருளாக மதித்துக்கொள்வது எற்றுக்கு, கிளைமையும் அன்னதே - ஏனையோர் உறவுமுறைமையும் அத்தன்மைத்தேயாகும், இனி - இனிமேல், நம் உளம் கெழுமும் தளைமையை - நம்மனத்தே எழும் அன்பினை, விடுவது தகுவதாம் - பற்றற விட்டொழிப்பதே சால்பாகும் எ-று.
இளமைகுன்றாது இன்பத்திற் செம்மாந் திருக்கின்றேமெனத் தருக்கிய வுணர்வால் மகிழ்ச்சியுற்றுக் கண்ணாடி நோக்கிய வேந்தற்கு மயிரின் நரை தோன்றி அவ்விளமையின் கழிவினைக் காட்டக்கண்டு, அதன் நிலையாமையினையும் தேர்ந்து கூறுகின்றாதலின், "இளமை யினியல்பிதுவாகும் என்னின்" என்றான். இளமையே வளமை யென்றும், "இளமைற் சிறந்தவளமையுமில்லை”1 என்றும் கூறப்படுவன கொண்டு, அதனைப் பேணுதலும் உலகியலாதலின், அதனை முனிந்து, "இவ்வளமையில் இளமையை மனத்து வைப்பது என்" என்றான்; எனவே, இளமையின் வளமையாவது, நிலை பேறுடைத்தாய் இன்பநுகர்ச்சித்தாய் இருத்தலென்பதும், அதுகழிந்த வழிச் செல்வமும் இன்பந்தாரா தென்பதும் பெற்றாம்" இளமை கழிந்த பின்றை வளமை, காமம் தருதலுமின்றே2" என்று பிறரும் கூறுதல் காண்க. மனைவி மக்கள் அடியாகப் பிறக்கும் கிளைஞர் உறவும், அரசு, செல்வம் முதலிய பற்றுக்கோடாக, "உறின் நட்டு அறின்" ஒருவும் இயல்பிற்றாதலை யுணர்ந்து நிற்றலின், "கிளைமையும் அணையதே" என்றான். அன்பின்பயன் அதனைச்செய்வோரும் செய்யப்படுவோரும் பிணிப்புண்டுநிற்றலாதலின், அதனைத் "தளைமை" யென்றும், அதுகாரணமாக வேண்டுதல் வேண்டாமை தோன்றித் துன்பம் விளைத்தலின், "விடுவது தகுவதாம்" என்றும் கூறினான். ஏகாரம் இரண்டும் தேற்றம்.
- -------
1,2 நற். 126.
புண்ணியமே செயற்பாற்றென அசோகன் நினைந்து தெளிதல்
முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலைச்
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்
முந்தையின் மும்மடி முயலிற்* புண்ணியம்
இந்திர வுலகமும் மெய்த லாமெனா+ 82
--------
(பாடம்) *முயன்று. + மெய்தற்பாற்றெனா; மெய்தற்பாலதே
உரை:- முந்து செய் நல்வினை - முன்னைப் பிறவியிற் செய்த நல்வினையானது, இத் தலை முளைப்ப - இப்பிறவியில் தன் பயனைத் தோற்றுவிக்க, சிந்தைசெய் பொருளொடு - உயர்ந்தோர் மதிக்கத்தக்க நல்லறிவுடன்;செல்வம் எய்தினாம் -அரச போகத்தையும் அடைந்தள்ளோம், முந்தையின்- முன்னையினும், மும்மடி புண்ணியம் முயலின் - மூன்று மடங்கு மிகுதியாக நல்வினையைச் செய்யின், இந்திர வுலகமும் எய்தலாம்-தேவருலகத்துப் பெறும் போகத்தையும் பெறலாம், எனா-என்று எ-று.
ஒருவன் செய்யும் வினை அவன் உயிரின்கட்கிடந்து, அவன் புக்குழிப்பகும் இயல்பிற்றென்பவாதலின், "முந்துசெய்நல்வினை முளைப்ப வித்தலை" என்றார். "முளைப்ப" என்ற குறிப்பு, நல் வினையாகியவிதை உயிராகியநிலத்து விதைக்கப்பெறுதலை யுணர்த்தி நின்றது; "வெவ்வினை செய்யுமாந்தர் உயிரெனும் நிலத்துவித்தி அவ்வினைவிளையுளுண்ணும் அவ்விடத்து"1என்று பிறரும் கூறுதல் காண்க. ஒருவன் சிந்தைசெய்வன, இம்மைக்கண் புகழும் மறுமைக் கண் பண்ணியமும் வீடுபேறுமாதலின், அவற்றிற்கேதுவாய புகழும் உறுதிப்பொருளறிவும் கூறுவார், "சிந்தை செய் பொருளொடு செல்வம் எய்தினாம்" என்றார்.செல்வத்தினும் பொருள்சிறந்து நிற்றலின், "பொருளொடு" என்றார்.பிறந்த பிறப்பால், இறந்த பிறவியிற் செய்த வினையினைத் தெரிந்து கொண்டானாதலின், "சிந்தைசெய் பொருளொடு செல்வமெய்தினா" மென்றும், "முந்து செய்நல்வினை" யென்றும் கூறினானெனவுணர்க. மீட்டும் முன் செய்த அளவாதல், இருமடியாதல் நல்வினை செய்யின், மறுமையில் மண்ணுலகத்தே அரசர்போகமும், அவர் எல்லாருள்ளும் தலையாய போகமுமே எய்துமெனத் தெளிதலின், "மும்மடி புண்ணியம் முயலின்" என்றும், அதனாற்பயன் விண்ணுலத்துப்பெறும் இந்திரபோகம் எய்துமென்றுகண்டு, "இந்திரவுலகமும் எய்தலாம்" என்றும் தனக்குள் தெரிந்துரைப்பானாயினன். இவ்வாராய்ச்சி யுடையவன், நிலையில்போகமாகிய இந்திரவுலகத்தையும் பின்னர்த் துறந்து வீடுபேற்றிற்கே முயல்வான் என்றறிக.
- -------------
1.சீவக.2762.
அசோகன் துறவு
இனையன நினைவுறீஇ யசோத ரன்எனுந்
தனயனை நிலமகள் தலைவ னாகெனக்
கனமணி வனைமுடி கவித்துக் காவலன்
புனைவளை மதிமதி புலம்பப் போயினான். 83
உரை:- காவலன்-வேந்தனான அசோகன், இனையன நினிவுறீஇ-இத்தன்மையானவற்றை நினைந்து, யசோதரன் எனும் தனயனை-யசோதரன் எனப்படும் தன் மகனை, நில மகள் தலைவன் ஆக-நிலத்துக்கரசனாகுக, என-என்று சொல்லி, கனமணி வனைமுடி கவித்து-பெரிய மணிகளைக் கொண்டு செய்யப்பட்ட முடியைச் சூடி, புனைவளை மதிமதி புலம்ப-வளையணிந்த சந்திரமதியாகிய தன்தேவி தனித்து வருந்த, போயினான்-அரசியல் தொடர்பு துறந்து சென்றான் எ-று.
"முந்தையின் மும்முடி முயலிற் புண்ணியம், இந்திரவுலகமும் எய்தலாம்" (82) என்பதனோடு, இம்மை மறுமை வீடுபேறுகட்கு ஏதுவாகும் இயல்புடைய வினைத்திறமும், அவற்றின் கட்டும், அக் கட்டின் நீங்குந் திறமும், நீங்காவழிப் படும் துன்பமும் என்ற இவற்றையும் பல்வேறு நிலையாமைகளையும் பிறவற்றையும் நினைத் தமை தோன்ற, "இனையன நினைவுறீஇ" என்றார். நாட்டுவேந்தனை, நாடாகிய மகட்குக் கணவனென்பவாகலின், வேந்தனாவானை, "நில மகட்டலைவனாக" என்றான். சொல்லியதனோடு அமையாது, மந் திரிச்சுற்றத்தாரோடு கலந்து திருமுடியும் யசோதரர்க்குச்சூட்டினான் என்றார். பின்பு அசோகன், அரசியற்றொடர்பு நீங்கி, மனைவியாகிய சந்திரமதியையும் துறக்க வெண்ணியபோது, அவள் பிரிவாற்றாமை கூறி வருந்தவும் அவட்கு இணங்காது துறவேபூண்டு சென்றான் என்பார் "புனைவளைமதிமதி புலம்பப் போயினான்" என்றார். வளை புனைமதிமதியென்பது எதுகைநோக்கி, "புனைவளைமதிமதி" யென வந்தது, "புனைவளை" என வளையை விதந்தோதியது, அசோகனது துறவுமொழி செவியிற் பட்டமாத்திரையே அவள் முன்கையின் நில்லாது கழன்றோடி அவளது பிரிவாற்றாமையை மெய்ப்படுத்திக் காட்டிற்றாதலின். இஃது உடம்பு நனி சுருங்கல். மதிமதி-சந்திரமதி.
-----------
அசோகன் குணதர முனிகள்பால் அறங்கேட்டுத் தவம் செய்வான் வனத்துக்குச் செல்லுதல்
குரைகழ லசோகன்மெய்க் குணத ரற்பணிந்
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன்
உரைசெய அருந்தவத்* துறவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ. 84
---------------
(பாடம்)*லருந்தவத்.
உரை:- குரைகழல் அசோகன்-ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த வேந்தனான அசோகன், மெய்க்குணதரன் பணிந்து- மெய்யறிவினையுடைய குணதர முனிகளை வணங்கி அவர் உரைத்த அறங்களைக் கேட்டு, அரைசர்கள் ஐம்பதிற்றிருவர் தம்முடன் -துணையாய் வந்த அரசர் நூற்றுவருடன், உரை செய அருந்தவத்து-சொல்லுதற்கரிய தவக்கோலம் பூண்டு, வரையுடை வனமது-மலையையுடைய காடொன்றை, போய் மருவினான்-போய்ச் சேர்ந்தான் எ-று.
மெய்யறிவுபெற்றுத் தவவொழுக்கம் சிறந்துநிற்றலின், குணதர முனிகளை "மெய்க்குணதரன்" என்றார். இவர்பால் அசோகன் சைன தருமமும், சைனதீக்கையும் பெற்றான் என்றற்குப் "பணிந்து" என்றார்; தீக்கையும் அறமும் பெறுமுன்பும் பின்பும் பணிதல்வினை நிகழ்தலின் "பணிந்து" என உரைக்கப்பட்டன; இத்தருமமும் தீக்கையும் ஆசாராங்கமென்னும் நூலுட்கூறப்படுகின்றன; அவை பஞ்சபரமேட்டிகளின் பதமுபதேசித்தல், மயிர்பறித்தல் முதலாயின. பேரரசனாதலின், சிற்றரசர் நூற்றுவர் உடன்சென்றாரெனவறிக. தவத்துருவு, தவவேடம்; "உற்றநோய்நோன்றல் உயிர்க்குறு கண்செய்யாமை, அற்றே தவத்துக்குரு"1 என்றபடி, நோன்பையும் உறுகண்செய்யாமையையும் கொள்ளலுமொன்று. வரையுடை வனம், மலையைச்சார்ந்த காடு; மூங்கில்களையுடைய காடுமாம்.
- -----------
1. குறள். 261.
யசோதரன் நாடாட்சி மேற்கொள்ளல்
எரிமணி இமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்தாட்*
கொருமணித் திலகம் போலு முஞ்சயி னிக்கு நாதன்†
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
குருமணிக் குடையின் நீழற் குவலயங் காவல் கொண்டான். 85
---------
(பாடம்)* னிருநிலத்தார்க்கு, னிருநிலத்துக்கு, †வேந்தன்
உரை:- எரிமணி இமைக்கும் பூணான்-விளங்குகின்ற மணிகளாலாகிய ஒளிவீசும் அணிகலன்களையுடையனாகிய, இசோதரன்-யசோதரன், இருநிலத்தாட்கு-பெரிய நிலமாகிய மடந்தைக்கு, ஒரு மணித்திலகம் போலும்-ஒப்பற்ற அழகிய திலகம் போல்வதாகிய, உஞ்சயினிக்கு நாதன்- உச்சயினி நகரத்துக்கு அரசனாய், அருமணி முடிகொள் சென்னி அரசு-அரிய மணிகளால் இயன்ற முடியணிந்த தலையினையுடைய அரசர்களை, அடிப்படுத்து-தன்னடி வணங்கச் செய்து, உயர்ந்த-ஓங்கிய, குருமணிக் குடையின் நீழல்-நிறமுடைய மாணிக்கங்கள் வைத்திழைத்த கொற்றக் குடையின் நீழலிலே, குவலயம்-உலகம் தங்க, காவல் கொண்டான்-ஆட்சிபுரியத்தலைப்பட்டான் எ-று.
அசோகன் துறவுபூண நினைந்தவுடனே யசோதரனை முடி சூட்டி அரசனாக்கிவிட்டானாதலால், "உஞ்சயினிக்குநாதன்" என்றார். இருநிலத்தாள், நிலமகள்.பெரியநகரங்களை நிலமகட்கு" திலகமாகக் கூறுவது கவிமரபு; "நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ"1 என்று கம்பரும் கூறுதல் காண்க. நாடுகாக்கும் வேந்தர் ஏனையரசரைத் தன் அடிப்படுத்தி உயர்தலே தன் அரசியற்குச் சிறப் பென்றும், வலிக்கு மாண்பென்றும் கருதுபவாதலின், அதனைச் செய்தான் யசோதரன் என்றாராயிற்று. கொற்றக்குடை வெள்ளி தாயினும், மாணிக்கங்களும் இழைக்கப் பெறுதல்பற்றி, "குருமணிக்குடை" என்றார். குவலயம், நிலமாகிய வட்டம். பூணானாகிய இசோதரன் நாதனாய்க் காவல்பூண்டான் என்க. குவலயங்காவல், விகாரம்.
- ----------
1.கம்ப.பால.
யசோதரன் செல்வச் செருக்கால் அறத்திறம் நெகிழ்த்தல்
திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப் பட்டே
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகி
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய்ம் மொழியோ டொன்றி
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத்து றந்தான். 86
உரை:- திருத்தகு குமரன்-திருமகளின் விருப்பம் தக்கிருக்கின்ற அரசகுமரனான யசோதரன், செல்வச் செருக்கினால்-செல்வமிகுதியால் உளதாகும் மயக்கத்தால், நெருக்குப் பட்டு-அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின்-காற்றால் மோதப்பட்ட கடல் பொங்கி அலமருவதுபோல, பொங்கி மறுகிய மனத்தனாகி-அவாமுதலியவற்றால் பொங்கிக் கலங்கிய மனமுடையனாய், உருத்து எழு சினத்தின்-மிக்கு எழுகின்ற சினமுதலியவற்றின்கண், சென்ற-படர்கின்ற, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி-மனம், உடல், சொல் என்ற மூன்றும் ஒருப்பட்டு நிற்க, அருத்த காமத்து அருத்தி செய்து-பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு, அறத்திறம் அறத் துறந்தான்-அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான் எ-று
புண்ணியமுள்ளளவும் ஒருவனைப்பற்றி நின்று, அது நீங்கிய வழி நீங்கு மியல்புடைய திருமகள், புண்ணியமுடைமையால் அரச போகந்துய்க்கும் யசோதரன்பால் நீங்காதிருக்கின்றமை தோன்ற "திருத்தகு குமரன்;" என்றும், தான் பெற்ற செல்வத்திற்குத் தான் மேற்பட்ட தலைவனாதலை யுணராது, அதற்கு அடிமையாய்த் தன் இயற்கையறிவை யிழந்தானென்னற்குச் "செருக்கினால் நெருக்குப்பட்டு" என்றும் கூறினார். "புண்ணியமுலந்தபின் பொருளிலார்களைக், கண்ணிலர் துறந்திடுங் கணிகைமார்கள்போல் எண்ணிலள் இகழ்ந்திடும்"1 என்றும்; "பற்றினர் பாலள்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தன்னையுடையான் எளியனாயின், அவனை மயக்குவது செல்வத்தின் சிறப்பியல்பாதலின், "செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டா" னென்றுமாம்; "மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மையுறுக்கும் புரையில் அரும்பொருள்" என்று வளையாபதியும் கூறிற்று. "மருத்தெறிகடல்" என்ற உவமையால் அவா முதலியவற்றால் யசோதரன் அலைக்கப்பட்டமை பெறுதும். சினத்தை விதந்தோதியதனால், அதற்கேதுவாய காமமும், பயனாகிய மயக்கமும் கொள்க. காமவெகுளி மயக் கங்களே அதற்கு நெறியாயினமையின், அந்நெறிக்கண் அவனுடைய நினைவும் செயலும் சொல்லும் ஒருப்பட்டு நிலவின என்பார் "சினத் திற்சென்ற உள்ளமெய்ம்மொழியோடொன்றி" என்றார். இவ் வியல்புடையார்க்கு வேண்டப்படுவன காமவின்பமும், அதனை இனிது நுகரத் துணைசெய்யும் பொருளுமே யாதலின், அவற்றை, "அருத்தி செய்து" , "அறத்திறம் அறத்துறந்தான்" என்றார். அருத்தி, ஆர்வம்,
- -------------
1 சூளா. முத்தி. 15. 2 சூளா.முத்தி 21.
பொருளின்பங்களை அருத்திசெய்தொழுகும் திறம் கூறல்
அஞ்சுத லிலாது தெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
துஞ்சுத லிலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான். 87
உரை:- தெவ்வர் அவிய-தனக்கு அஞ்சிப் பணிந்தொழுகாத பகைவேந்தர் வலி கெடுமாறு, அஞ்சுதல் இலாது-அச்சம் சிறிதுமின்றி, மேல்சென்று-படையுடன் மிக்குச்சென்று பொருது, வஞ்சனை பலவும் நாடி-அவர் செய்யும் வஞ்சனை பலவும் ஆராய்ந்தறிந்து, வகுப்பன வகுத்து-அவரை வேறற் பொருட்டுத் தானும் வஞ்சனைகள் பலவற்றையும் நாடிச் செய்து, புஞ்சிய பொருளும்-அவருடைய மிக்கதாகிய பொருளும், நாடும்-அதற்கு வருவாயாகிய நாடும், புணர் திறம்-தான் கவர்ந்து கோடற்குரிய சூழ்ச்சித்திறங்களை, நெஞ்சில் புணர்ந்து-மனத்தே ஆராய்ந்து கொண்டு, துஞ்சுதல் இலாத கண்ணன்-நாளும் கண்ணுறக்கம் இல்லானாய், துணிவன துணிந்து-செய்யத்தகுவனவற்றைச் செய்து, நின்றான்-அத்துறையிலே தெளிவின்றி யொழுகுவா னாயினான் எ-று.
பகை வேந்தரை வென்று ஒடுக்கி நாட்டில் நலக்குறைவு நிகழா வகையிற் காத்தல் வேந்தர்க்கு இயல்பாயினும், அச்செயற்கண் அறமல்லது நிகழ்வது எண்ணி யஞ்சுவது நல்வேந்தர் மனப்பண்பாக, இவன், அதற்கு அஞ்சினானில்லை யென்றற்கு, "அஞ்சுதலிலாது" என்றும், அப்பகையரசர் வஞ்சனை செய்தாராயினும், அஃது அறமன்றென வொழியாது தானும் அவற்றைச் செய்தமை தோன்ற, "வகுப்பன வகுத்து" என்றும், அவர்க்குரிய பொருளும் நாடும் கவரும் திறமே நினைந்து, தன் பொருளும் நாடும் மிகுதற்கேற்பனவற்றை நினைந்தில னென்றற்கு, "புணர்திறம் நெஞ்சிற் புணர்ந்து" என்றும், நினைவொடு நில்லாது செயற்கண்ணும் செய்தொழுகினா னென்பார் "துணிவனதுணிந்து நின்றான்" என்றும் கூறினார். இதனால், "அறத்திறம் அறத்துறந்தான்" பொருள் செயல் கூறப்பட்டது.
-----------
தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத்த வின்பப்
பாடலொ டியைந்த பண்ணின் இசைச்சுவை பருகிப் பல்கால்
ஊடலங் கினிய மின்னின் ஒல்கிய மகளி ராடும்
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான். 88
உரை:-தோடு அலர் கோதைமாதர்-இதழ்களையுடைய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த கூந்தலையுடைய பாடல்மகளிர், துயரியின்தொடுத்த-யாழ்நரம்பினால் தொடுத்துப் பாடும், இன்பப்பாடலொடு இயைந்த பண்ணின்-இன்பத்ததைத்தரும் பாடலொடு இயைந்து நிற்கும் பண்ணிடத்து எழும், இசைச்சுவை பருகி-இசையமுதாகிய அமுதத்தைப் பருகி, பல்கால்-பன்முறையும், ஊடல் அங்கு இனிய-ஊடிய விடத்தும் புணர்ந்தாற்போலும் இன்பத்தைத் தருகின்ற, மின்னில் ஒல்கிய-மின்னலைப்போல அசைந்தாடும், மகளிர்- ஆடல்மகளிர், ஆடும் நாடகம் நயந்து கண்டும்-ஆடுகின்ற நாடகங்களை விரும்பிப்பார்த்து மகிழ்ந்தும், நாள்சில செல்ல- நாட்கள் சில கழிய, சென்றான்-ஒழுகிவரலானான் எ-று.
இதனால் இன்பத்தை அருத்திசெய்து ஒழுகும் திறம் கூறுகின்றார். தோடு-பூவிதழ்; துயரி-யாழ்நரம்பு; "தூமம் கமழும் கோதை தொடுத்ததுயரிமுலையாத், தேமென்கீதம் பாலாச் சுரந்து"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. "பண்ணென்னாம் பாடற் கியை பின்றேல்"2 என்பவாகலின் "பாடலொ டியைந்த பண்ணின்" என்றார். காமக்காதலுடைய மகளிர் ஊடுதலும் காமத்திற் கின்பமாதலின் "ஊடலங்கினியமகளிர்" என்றார். "ஊடினும் புணர்ந்த தொத்தினியவள்"3 என்று பிறரும் கூறுவர். பருகி யென்புழி எண்ணும்மை விகாரத்தால் தொக்கது.
- ---------------
1 சீவக. 921. 2.குறள். 573. 3.சீவக. 2004
யசோதரன் அமிர்தமதியொடு கூடி யின்புறும் சிறப்பு
மற்றொர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்து மாலைக்
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூட மொன்றிற்
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிற் சேக்கை துன்னிக்
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிது ருந்தான். 89
உரை:- மற்று ஓர் நாள்-வேறொருநாள், மன்னர் தம்மை-அரசவைக்கண் வந்திருந்த அரசர்களை, மனைபுக விடுத்து-தத்தம் மனைக்குச் செல்லவிடுத்து, மாலைகொற்றம்- மாலையும் வெற்றியுமுடைய, வேலவன்-வேலேந்திய வேந்தனாகிய யசோதரன், தன் கோயில்-தன் அந்தப்புரத்தேயுள்ள, குளிர்மணிக் கூடம் ஒன்றில்-குளிர்ந்த ஒளிவீசும் மணிகளால் இயன்ற ஒரு கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த, சுற்றுவார் திரையின்-சுற்றிலும் நீண்ட திரைகளையுடைய, தூமம் கமழ்-நறும்புகையின் மணம்கமழும், துயில்சேக்கை துன்னி-பள்ளியணையையடைந்து, கற்றைவார் கவரி வீச- கற்றையாகவுள்ள சாமரையை மகளிர் வீச, களிசிறந்து- காமக்களிப்பு மிகுந்து, இனிது இருந்தான்-அமிர்தமதியின் வரவுநோக்கி இனிதிருந்தான் எ-று.
"மன்னர்தம்மை மனைபுக விடுத்து" எனவே, இரவுப்போதின் வரவு குறித்தவாறு பெற்றாம்.பகற்போதில் மகளிர் தொடுத்த பாட்டும், ஆடிய நாடகமும் கண்டு காமம் சிறந்து அந்தப்புரத்தை யடைகின்றானாதலின், நேரே பள்ளியறையைத் துன்னினான் என்றார். "குளிர்மணிக்கூடம்" என்றார், காமவெப்பத்தால் வெதும்பிவருமாறு தோன்ற. களி-காமக்களிப்பு. மகளிர் கவரி வீசியது, காமவெப்பத்தைத் தணித்தற்கு. இனிதிருந்தான் என்றார், அமிர்தமதிபால் தான் நுகரவிருக்கும் காமவின்பமே நினைந்திருத்தலின்.
----------
சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
நலங்கலந் தினிய* காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கலங் குழல்பின் தாழ அமிழ்தமுன் மதிய ணைந்தாள். 90
---------
(பாடம்) *நலங்கவன்றினிய.
உரை:- தேனும்-தேனினமும், திருமணி வண்டும்- அழகிய நீலமணிபோலும் வண்டினமும், பாட-பாட்டிசைக்க, கலம் பல-அணிகலம் பலவற்றோடு, அல்குல் அணிந்த கலையொலி-அல்குலிடத்தே யணிந்த மேகலையின் ஒலியானது, சிலம்பொடு கலவி சிலம்பியார்ப்ப-சிலம்பொலியொடு கலந்து மிக்கொலிக்க, நலம் கலந்து-பெண்மைநலம் முதிர்ந்து, இனிய காமர் நறுமலர்த் தொடையல்போல்- இனிய அழகிய மணங்கமழும் பூமாலை வருதல்போல, அலங்கல்-பூமாலைசூடிய, அம் குழல் பின்தாழ-அழகிய கூந்தலானது முதுகிடத்தே தாழ்ந்தசைய, அமிழ்தமுன்மதி- அமுதமதி, அணைந்தாள்-யசோதரனிருந்த பள்ளியை யடைந்தாள் எ-று.
தேனும் வண்டும் பாட, கலையொலி, சிலம்பொடு கலவி, சிலம்பி யார்ப்ப, குழல் பின் தாழ, அணைந்தாள் என இயையும். இனிக் கிடந்தபடியே, தேனும் வண்டும் சிலம்பிப்பாட, கலையொலி ஏனைக் கலன்களுடன் கலவி யார்ப்ப, குழல் பின்தாழ அணைந்தாள் எனினுமாம். தேன், வண்டினத்துள் ஒன்று. "வண்டுகாள் மகிழ் தேனினங்காள்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. கலை, மேகலை. நறுமலர்த் தொடையல் அணைவதுபோல அணைந்தாள் என்க; "மருவளர்மாலையொர் வல்லியினொல்கி யனநடை வாய்ந், துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே"2 என்று திருக்கோவையாருள்ளும் வருதல் காண்க.
---------
ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசில் தந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்து விள்ளார். 91
உரை:- ஆங்கு-அவ்விடத்திற்கு, அவள் அணைந்தபோழ்தின்-அவள் வந்தடைந்தபோது, ஐங்கணைக் குரிசில்- ஐவகைப் பூக்களாலாகிய அம்புகளையுடைய மன்மதன், தந்த- விடுத்த, பூங்கணைமாரி-மலரம்பு மழைபோல் வந்து வீழ, வெள்ளம் பொருது வந்து அலைப்ப-காமவெள்ளமானது அறிவுமுதலிய கரைகளை அலைத்துக்கொண்டுவந்து அவர்தம் நெஞ்சை வருத்த, இருவரும் புல்லி- இருவரும் தம்மில் தழுவி, நீங்கலர்-நீங்காராய், ஒருவர் உள் ஒருவர் புக்கு-ஒருவர் உடற்குள் ஒருவர் புகுந்து, ஒருவராகி-இருவரும் ஒருவரேயாய், தேம்கமழ் அமளிதேம்ப-தேன்மணக்கும் படுக்கையசைந் தொலிக்க, செறிந்தனர்-புணர்ந்து, திளைத்து விள்ளார்-ஒருவரொருவரைப் பிணித்த கை நெகிழாது அணைமீதே கிடந்தனர் எ-று.
மலரம்புகளை மழைபோலச் சொரிந்ததனால், அதன் பயனாகிய காமவேட்கை வெள்ளமாய்ப் பெருகுதலின் "பூங்கணை மாரி வெள்ளம்" என்றார். காமம் கைம்மிக்கவழி அறிவும் நிறையும் பிறவும் நீங்குதலின், அவற்றைக் கரையாக்கி, "பொருதுவந்தலைப்ப" என்பாராயிற்று. ஒருவருள் ஒருவர் புக்குப் புணரும் புணர்ச்சியை நாகர் புணர்ச்சியென்பர். "நஞ்சுற்ற காமம் நனிநாகரிற்றுய்த்த வாறும்"3 என்றவிடத்து "நாகரோடுவமை ஓருடம்பாதலும் நீங்கல்வன்மையும்பற்றி" என வரும் அதன் உரை காண்க. விள்ளல், நீங்குதல்.
- --------------
1 சீவக 897. 2.கோவை 1. 3. சீவக. 11.
மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம்
அடங்கல னயர்ந்த தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
படங்கலந்* தகன்ற வல்குற் பாம்பணை† புணைய தாக
இடங்கழிந் தொழிவி லின்பக் கடலிடை மூழ்கி னானே. 92
--------------
(பாடம்) *படங்கடந். † பாவையே.
உரை:- மடம் கனிந்து-இளமை மிகுந்து, இனிய- இனியளாகிய, நல்லாள் வனமுலைப் போகமெல்லாம்-நல்ல அமுதமதியின் அழகிய முலையிடத்தே பெறும் இன்ப முழுதும், அடங்கலன் அயர்ந்து-அடங்காத ஆர்வத்தோடு நுகர்ந்து, தேன்வாய் அமிர்தமும் பருகி-எயிற்றிடத்தூறிய தேன்போலும் நீரைப்பருகி, அம்பொன் பாம்பு படம் கலந்து அழகிய பாம்பின் படத்தையொத்து, அகன்ற அல்குல்அணை- அகன்ற அல்குலாகிய படுக்கையையே, புணையதாக-தெப்பமாகக்கொண்டு, இடம் கழிந்து-நெஞ்சிடம் நிரம்பி வழிந்தும், ஒழிவில்-நீங்குதலில்லாத, இன்பக்கடலிடை-காமவின்பக் கடற்குள்ளே, மூழ்கினான்-வீழ்ந்து கரையேற மாட்டாது அதனுள்ளே மூழ்கிவிட்டான் எ-று.
மடம், இளமை; அழகுமாம். முன்னேகூடி, யசோமதி யென்னும் மகனைப் பெற்றுளனாயினும், யசோதரன் அவள்பால் வேட்கையடங்கானாயினானென்றற்கு "அடங்கலனயர்ந்து" என்றார். கழிகாமத்தனென்பது கருத்து. எயிறூறியநீர், "பாலொடு தேன்கலந்தற்று"1 எனச் சான்றோர் கூறுதலின், "தேன்வா யமிர்தம்" என்றார். பருகுதலை, அதரபானம் என்பர். பாம்பணை என்பது பிரித்துக்கூட்டப்பட்டது; அல்குலாகிய பாம்பணையென்று கோடலு மொன்று. பாம்பின் படமும் புணையும் முறையே உருவும் தொழிலும் பற்றி வந்தன. இடம்கழிதல்-நெஞ்சகம் நிரம்பித் துளும்புதல், "இடங்கழிகாமமொடடங்கானாகி"2 என்று பிறரும் கூறுப.
- ---------
1.குறள்.1121. 2. மணி. 18:119.
புணர்ச்சி யவசத்தால் இருவரும் கண்ணுறங்கல்
இன்னரிச் சிலம்புந் தேனும் எழில்வளை நிரையு மார்ப்பப்
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருது பொங்க
மன்னனும் மடந்தை தானும் மதனகோ பத்தின்* மாறாய்த்
தொன்னலந் தொலைய உண்டார் துயில்கொண்ட விழிக ளன்றே. 93
---------
(பாடம்) *மதனராகத்தின் † சிந்தையின்
உரை:- இன் அரிச் சிலம்பும்-இனிய ஓசைசெய்யும் பரல்களையுடைய காற்சிலம்பும், தேனும் -வண்டினமும், எழில்வளைநிரையும்-அழகிய வரிசையுற்ற வளையல்களும், ஆர்ப்ப-ஒலிக்க, பொன் அவிர் தாரோடு-யசோதரனணிந்த பொன்னாலியன்ற மாலையும், ஆரம்-அமுதமதி யணிந்த முத்துமாலையும், புணர்முலை பொருது பொங்க-புணர்ச்சி நிகழுமிடத்து , முலையால் தாக்குண்டு மேலெழ, மன்னனும் மடந்தைதானும்-யசோதரனும் அமுதமதியும், மதன கோபத்தின்-காமக் களிமயக்கினால், தொல்நலம் மாறாய்த் தொலைய-புணராதமுன்பிருந்த மேனிநலம் மாறுபட்டு மெலிய,உண்டார்-காமவின்பத்தைத் துய்த்து அயர்ந்தாராக விழிகள் துயில்கொண்ட- அவருடைய கண்கள் உறங்குவனவாயின எ-று.
தார், மார்பிலணியும் மாலை, இஃது ஆடவர்க்கு உரித்து, தார் எனப் பிரித்தமையின், ஆரம் அமிர்தமதி யணிந்த முத்துமாலைக்காயிற்று. "மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்;"1 என்புழித்தார். ஆடவர்க்குரித்தாகக் கூறப்படுதல் காண்க. காமவேட்கையால் நெஞ்சு கலங்குதல்பற்றி "மாறாய்" என்றாரென்றுமாம். "தொன்னலம் தொலையவுண்டார்"என்றார் மீட்டும் அவர் இவ்வின்பம் நுகராதொழிவது கருதி. உறக்கத்தை அவர் வினையாக்காது, விழிமேல் ஏற்றியதனால், உடல் அயர்ந்தனரேயன்றி, உள்ளத்தால் காமநுகர்ச்சிக்கண் அயர்வுற்றிலரென்று கொள்க.
- -----------
1. பரி. 20:20.
அட்டபங்கன் இசைத்த இசையால் அமிர்தமதி அறிவு திரிதல்
ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும்
வேயிடைத் தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்காத்
தீயிடை மெழுகி னைந்த சிந்தைய† ளுருகி னாளே. 94
உரை:- ஆயிடை--அப்போது, அத்திகூடத்து அயல் எழுந்து-யானை கட்டுமிடத்தின் புறத்தே எழுந்து, அமிர்தம் ஊற-கேட்போர் உளத்தே இன்பமுண்டாகுமாறு, சேயிடைச் சென்ற-நெடுந்தொலைவு படர்ந்து மக்கள் இசைக்கின்ற, ஓர் கீதம்-ஒரு பாட்டு, செவிபுக விடுத்தலோடும்-செவிக்குட்சென்று தன் இசையின்பத்தை யூட்டவே, வேயிடைத்தோளி-மூங்கில்போலும் தோளையுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள்-தன் கண்களை மெல்லத் திறந்து, வியந்து நோக்கா-அவ்விசையின்பத்தை வியப்போடு கேட்டு மருண்டு நாற்றிசையும் பார்த்து, தீயிடை மெழுகின்-நெருப்பிலிட்ட மெழுகுபோல, நைந்த சிந்தையள்-மெலிந்த மனத்தையுடையளாய், உருகினாள்- உருகலானாள் எ-று.
ஆயிடை, சுட்டு நீண்டு யகரம் பெற்றது. யானைக்கூடத்தின் கண் இருந்த அட்டபங்கன் எடுத்திசைத்த பாட்டு எங்கும் பரந்து, கேட்போர் செவிவழிச் சென்று இன்பத்தை யுண்டுபண்ணிற்று என்பதாம், சென்ற என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இன்னிசை சென்று அமிர்தமதியின் செவியிடை யிசைத்தலும் அவள் துயிலுணர்ந்தாளாகலின், "மெல்ல விழித்தனள்" என்றார். விழித்தாட்கு அவ்விசையின் இன்பம் நெஞ்சினை யுருக்கி மெலிவித்த தென்றற்கு, "தீயிடைமெழுகின்நைந்த சிந்தைய ளுருகினாளே" என்றார்.
-----------
அமிர்தமதி மதிமயங்குதல்
பண்ணினுக் கொழுகு நெஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்வாய்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க் குரிய போகம்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்லாள்
மண்ணினுக் கரசன் தேவி மதிமயக் குற்றி ருந்தாள். 95
உரை:- பண்ணினுக்கு-பாட்டின்பத்துக்கு, ஒழுகும் நெஞ்சின் பாவை-நீராய் உருகி யோடும் நெஞ்சினையுடைய பாவைபோன்ற அமுதமதி, இப்பண்கொள் செவ்வாய் அண்ணலுக்கு-இவ்விசையமுதத்தைச் சொரியும் சிவந்த வாயையுடைய பெரியவனிடத்தே, அரிவையர்க்கு உரிய- மகளிர் பெறுதற்குரித்தாயுள்ள, அமிர்தமாய போகம்- பேரின்பத்தைத் தரவல்ல காமபோகம், விண்ணினுக்கு உளது-விண்ணுலகத்தே பெறும் போகமாகும், என்று எண்ணி-என்று தனக்குள்ளே நினைத்து, வெய்துயிர்த்து- பெருமூச்செறிந்து, உய்தல் செல்லாள் - உய்வகையறிய மாட்டாளாய், மண்ணினுக்கு அரசன் தேவி - அவந்திநாட்டுக் கரசனாகிய யசோதரற்கு மனைவியாகிய இவள், மதிமயக்கு உற்று - அறிவு கலங்கி, இருந்தாள்- கையறவுபட்டிருந்தாள் எ-று.
ஒழுகுதல், நீரா யுருகி வழிதல்; "ஒழுகுநீர் ஆரல்பார்க்கும் குருகு"1 என்புழிப்போல, முன்னைச் செய்யுளில் "உருகினாள்" என்றாராதலின், ஈண்டு " ஒழுகும் நெஞ்சின்" என வாளாமொழிந்தார். நாண்வழி யொழுகும் பாவைபோல, பண்ணின் சுவைவழியோடும் நெஞ்சின ளாதல்பற்றி, " பாவை" யென்றார். இதனால், மனவுணர்வின்மையும் பெற வைத்தாராயிற்று. செவிச்சுவை யமுதமாகிய இசையினை வழங்கும் சிறப்பு நோக்கி, " செவ்வாயண்ணல்" என அட்டபங்களைக் கருதுகின்றாள். அண்ணலுக்கு, விண்ணினுக்கு என்புழி ஏழாவதன்கண் நான்காவது வந்து மயங்கிற்று. அமிர்த மாயபோகம், அரிவையர்க்குரிய போகம் என இயையும். உளது, உளதாகிய போகம். விண்ணினுக்குளதென்று எண்ணிய துணையே, பெறுதற்கரிதுபோலும் என்று உட்கொண்டு வருந்தலுற்றாள் என்பார், "வெய்துயிர்த் துய்தல் செல்வாள் " என்றார். மண்ணினுக்கரசன் தேவியாய் இன்பக்குறைபாடின்றியே இருந்தாளாயினும், அறிவறை போகி அட்டபங்கன்பால் பொல்லாக் காமவேட்கை கொண்டு மனம் புழுங்கும் புன்மைகண்டு இகழ்வார், "மண்ணினுக் கரசன் தேவி" என்று விதந்தோதினார்.
---------
பெண்மையின் புன்மை கூறல்
மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவும்*
துன்னிடு மினத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்†
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்ப் பெருமை பேணா
தென்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே. 96
-------------
(பாடம்) * விழைந்தவாறே, † மனத்தின்.
உரை:-- பெண் - பெண்கட்கு, உள்ளம் - மனமானது மின்னினும்நிலையின்று - மின்னலைக்காட்டிலும்நிலையில்லாதது, விழைவுறின் - எவற்றையேனும் விரும்புமாயின், விழைந்த - அவ்விரும்பியவற்றைப்பற்றிய, யாவும் துன்னிடும் - நினைவு செயல்களையே பொருந்தியிருக்கும், இனத்தின் தூய்மை - துணையாயினார் கூறும் தூய்மையும். சூழ்ச்சியும் - ஆராய்ச்சியுரையும், ஒழிய-கெட, நிற்கும்-தான் செல்லக்கருதிய நெறியிலேயே ஊன்றி நி்ற்கும், பின்னுறு பழியிற்கு அஞ்சா- பின்னே எய்துகின்ற பழிபாவங்கட்குச் சிறிதும் அஞ்சாது, உயிர்ப்பெருமை பேணாது-பெண்ணுயிராகிய தான் பிறந்த குடிப்பெருமையும் கருதாது, என்னும் இம்மொழிகட்கு- என்று அறிந்தோர் அறிந்துரைத்த இவ்விலக்கணங்கட்கு, இலக்கியமாயினாள்-சிறந்த எடுத்துக்காட்டாயினாள், அந்தோ-ஐயோ, இவ்வமுதமதியின் இயல்பு இருந்தவாறு என்னே எ-று.
"பெண்ணுயிர்...பேராத்திண்மையும் உடையவல்ல"1 (47) என முன்பே கூறினமையின், ஈண்டு வாளா உவமமுகத்தால், "மின்னினும் நிலையின்றுள்ளம்" என்றும், ஒரு பொருண்மேற் செல்லும் விழைவினை நீக்கிநிறுத்தும் மதுகையில்லை யென்பதையும் முன்னர் "பெருந்திறலறிவும் உடையவல்ல" (46) என்றதனை விளக்கி, "விழைவுறின் விழைந்தயாவும் துன்னிடும்" என்றும் கூறினார். விழைவு தோன்றியவிடத்து, அவ்விழைவினை நிறைவு செய்து கோடற்கேதுவாய நினைவுசெயலே அவர் உள்ளத்திற் பொருந்தி வேறு எவ்வகைச் செயற்கண்ணும் செல்லாதொழிதலின், விழைந்த யாவும் துன்னிடும்" என்றார். விழைந்த வென்னும் பெயரெச்சம் கருவியொடு முடிந்தது. துணையாய் ஒழுகும் குணவதி யென்பாளது தூய்மையும் அறிவுரையும் கெடச்செய்யும் இவளது செயல் மேல்வரும் நிகழ்ச்சிகளால் உணரப்படும். அஞ்சாதென்பது ஈறு கெட்டு நின்றது. உயிர்ப்பெருமை, ஈண்டுக் குடிப்பிறப்பின் மேற்று, இவ்வமுதமதியின் என்பது முதலாயின குறிப்பெச்சம்.
------------
குணவதி என்னும் தோழி உற்றது வினாதல்
துன்னிய இரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
இன்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த எல்லைத்
துன்னினள் தோழி துன்னித் துணைவரில் தமிய ரேபோன்
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள். 97
உரை:- துன்னிய இரவு நீங்க-பொருந்தியிருந்த இராப் போது கழிய, துணைமுலை தமியளாகி-இரண்டாகிய முலைகளையுடைய அமுதமதி ஓரிடத்தே தனித்திருந்து இன்னிசை யவனை-இனிய இசையையுடையனாகிய அட்ட பங்கனை, நெஞ்சத்து இருத்தினள்-மனத்தே காமக் காதலனாகக்கொண்டு, இருந்த எல்லை-வேறுசெயல்மறந்து இருந்தபோது, தோழி துன்னினள்-உயிர்த்தோழியாகிய குணவதி அவளையடைந்தாள், துன்னி-(அடைந்தவள்) அமுதமதியை நெருங்கி, இரைவி-அரசியே, துணைவரில் தமியர் போன்று-மனக்கினிய காதலர் உடனில்லாமையால் தனித்துப்புலம்பும் மகளிரைப்போல, இது-வேறுபட்டிருக்கும் இச்செயல், என் - என்னை, நீ உள்ளத்து நினைந்தது- நீ நின்மனத்தில் கருதியதனை, அருளுக-அடியேனுக்குத் தெரிவித்தருள்க, என்றாள்-என்று வேண்டினாள் எ-று.
“துன்னிய இரவு நீங்க” என விதந்தோதியது, அஃது அவட்கு ஓர் ஊழியாய்த்தோன்றி நெடிது கழிந்தமை யுணரநின்றது. யசோதரனோடு கூடியிருப்பவும், நெஞ்சிலே “இன்னிசையவளை” இருத்திக்கொண்டமையின், அவனையின்றி யிருக்குமது அவட்குத் தனிமையாயிற் றென்றற்குத் “தமியளாகி” என்றார். யசோதரனையும் ஏனைத்தோழிமார்களையும் நீங்கித் தனித்திருந்தமை தோன்ற “தமியளாகி” என்றாரென்றலுமாம். துன்னி யென்ற மிகையால், குனவதி போதரக்கண்டும் அவளை வரவேற்காது தான் வாடிய முகத்துடன் சாம்பியிருந்தமையும், அவள் திடுக்கிட்டு நின்று நோக்கி மெல்ல அருகணைந்தமையும், அமுதமதியின் மறுகிய நெஞ்சமும் மையல்நோக்கமும் மெய்ப்பட்டுத் தோன்றினமையும் பெற்றாம். இறைவனாகிய யசோதரனுடன் பிரிவின்றிக் கூடியிருத்தலின், “இறைவி” யென்றும், பிரிவால் மெலியும் மகளிர்க்குரிய மேனி வேறுபாடுகாண்டலின், “துணைவரில் தமியர் போன்று” என்றும், காரணம் காணமாட்டாமையின், “என்னிது” வென்றும் கூறினாள்.
----------
அமிர்தமதி உற்றது உரைத்தல்
தவளவாள் நகையாய்* தண்டார் மன்னவன் தகைமை யென்னுங்
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் லியானை
பவளவாய் மணிக்கை கொண்ட பண்ணியல் தோட்டி பற்றித்
துவளுமா றொருவன் எல்லித் துடக்கினான் றுயர+ என்றாள். 98
-----------
(பாடம்)* தவழுமாமதியாய், தவழுமாமதிசெய்.
+ துடங்கினானோவ; துடக்கினான்றுவள.
உரை:- தவளவாள் நகையாய் - வெள்ளிய ஒளி பொருந்திய பற்களை யுடையாய், தண்தார் மன்னவன் - குளிர்ந்த மாலையணிந்த வேந்தனாகிய யசோதரனுடைய, தகைமை யென்னும் - காதலன் பென்னும், கவளம் ஆர் - கவளத்தை யுண்கின்ற, அகத்து - இன்ப வொழுக்கத்தையுடைய, என் உள்ளம் - என்மனமாகிய, கருங்களி மதநல்யானை - கரிய மதக்களிப்பினையுடைய நல்லயானையை, ஒருவன் - எவனோ வொருவன், பவளவாய் மணிக்கை - பவளம்போலும் தன் வாயாகிய அழகிய கையிடத்தே, கொண்ட - வைத்துள்ள, பண்இயல் தோட்டி - இசையாகிய அங்குசத்தால், பற்றி- கைப்பற்றி, துவளுமாறு - மெலியுமாறு, எல்லி - நேற்றிரவு,துயரத்துடக்கினன் - வருந்த வணக்கிப் பிணித்துக் கொண்டான் எ-று.
சொல்லாடலின்றித் துயருற்றிருந்த அமிர்தமதி சிலசொல்லத் தொடங்கியதும் குணவதி முகமலர்ந்து முறுவலித்துக் காட்டினமையின், "தவளவாணகையாய்" என்றாள். இப்போது அமுதமதியின் உள்ளம் யசோதரனிற் பிரிந்து நீங்கினமையின், பிரியாமை முன்னிருந்த நிலைமையினை, "தண்டார் மன்னவன் தகைமை யென்னும் கவளம்" என்றாள். கவளம், யானையுண்னும் உணவு. ஆர்தல், உண்டல்; "ஆர்ந்தோர் வாயிற்றேனும் புளிக்கும்" (குறுந். 854) என்புழிப்போல. அகம், ஆகுபெயராய் இன்பவொழுக்கத்தைக் குறித்து நின்றது, இசையவன்பால் களவினால் காமவின்பம் துய்க்கக் கருதுகின்றாளாதலின், அவள் உள்ளத்தைக் "கருங்களி மதநல்யானை" யென்றார். யானையின் கருமையை உள்ளத்துக்கும் கொள்க, களவினால் தீய காமம் நுகரக் கருதுதலின்; "கள வென்னும் காரறிவான்மை"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. இசையவன் வாயை முன்பு, "பண்கொள் செவ்வாய்" (95) என்றாளாதலின், ஈண்டு "பவளவாய்" என்றாள். யானை நல்லிசைக்கு வணங்குதல் பற்றி, நெஞ்சினை யானையோடு உருவகம் செய்தார், உள்ளத்தை மதயானை யென்றும், அதனை இசையால் ஒருவன் வணக்கினன் என்று கூறியதனால், யசோதரனால் அதனை வணக்க மாட்டாமையும், "இன்னிசையவன்" வழியே செல்வதையும் குறித்தாளாயிற்று. இசையிசைத்தவன் அட்டபங்கன் என்பது அறியாமையால் "ஒருவன்" என்றாள். "துவளுமாறு" என்றும், "துயர" வென்றும் கூறியது, அவனது இன்றியமையாமையும் தனது ஆற்றாமையும் உணர்த்திநின்றது.
- ----------
1.குறள். 287.
கண்டது கனவெனக் குணவதி கழறல்
அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்ல ளேபோல்*
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி யுறழ்ந்து+ கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட
பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண் டினைய‡ லென்றாள். 99
---------
(பாடம்)* ளல்லவேபோல். + பிறிந்து. ‡டனையென்.
உரை:- அங்கு - அவ்விடத்து, அவள் அகத்துச்செய்கை - அமுதமதி தன்மனத்தே கருதியிருக்கும் செய்கையை, அறிந்தனள் - தெரிந்து கொண்டாலாயினும், அல்லள்போல - தெரியாதவள்போல, கொங்கு அவிழ் குழலி அக்குணவதி - தேன்பொருந்திய பூச்சூடிய கூந்தலையுடையளாகிய அக்குணவதி யென்னும் தோழி, உறழ்ந்து கூறும் - அவளோடு மாறு பட்டுக்கூறுவாளாயினள். நங்கை - நங்கையே, நின்பெருமை - நினக்குள்ளபெருமையோ, நன்று - பெரிதாகும், கனவினால் - கனவின்கண், நனவெனக் கண்டபங்கமது-நனவுபோலத் தோன்றக் கண்ட இழித்தக்க நிகழ்ச்சியை, உள்ளி-நினைந்து, உள்ளம் பரிவுகொண்டு-மனத்தில் வருத்தமுற்று, இனையல்- வருந்தாதே கொள்; என்றாள்-என்று உரைத்தாள் எ-று.
நினைவு வடிவாகவே நின்றொழியாது செய்கைக்கண்ணும் ஒன்றி நிற்றலின், எண்ணமென்னாது, "அவளகத்துச் செய்கை" யென்றார். அமுதமதியின் கருத்தறிந்தும் அதன் தீமைகருதி விலக்கும் கருத் தினளாதலின், "அறிந்தனளல்லளேபோல் உறழ்ந்து கூறும்" என்றார். "உயர்மொழிக் குரிய வுறழுங்கிளவி"1 என ஆசிரியர் தோழிக்கும் உரித்தென்றலின், தோழி ஈண்டு தேவியை உறழ்ந்து கூறுகின்றாள். நன்றே என்புழி ஏகாரம் எதிர்மறையாகக் கொண்டு, இது நின்பெருமைக்குத் தீது என்று உரைப்பினுமாம். பங்கம், இழிவு; ஈண்டு இழித்தக்க கனவின்மேற்று. இனைவது பேதையார் செயல் என்பாள், "இனையல்" என்றாள். மற்று, அசைநிலை.
- --------
1. தொல். பொருளியல் 44.
அமுதமதி சொற்கேட்டுக் குணவதி அஞ்சுதல்
என்மனத் திவரு மிந்நோய்* இவளறிந் திலள்கொ லென்றே
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற்+ றென்கொல்
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள். 100
-------------
(பாடம்)* மென்னோ. + நினைந்தருளிற்று.
உரை:- என்மனத்து-என்நெஞ்சில், இவரும்-மேன்மேன்மிகும், இந்நோய்-இக்காம நோயை, இவள் அறிந் திலள்-இவள் இன்னும் அறியவில்லை, என்று-என்று அமுதமதி நினைத்து, தன்மனத்தினை-தன் மனத்திருந்த எண்ணங்களை, அவட்கு-அக்குணவதிக்கு, தான்-தானே வாய்விட்டு, உரைத்திடுதலோடும்-உரைத்தலும், சில்மலர்க் குழலி-சிலவாகிய பூக்களை யணிந்த கூந்தலையுடையாய், நின்மனத்து இலாத-நின் நெஞ்சில் இல்லாத இச்சொற்களை, நீபுனைந்து-நீயே படைத்துக்கொண்டு, அருளிற்று-உரைத்தது, என்கொல்-என்னை, என்று-என்று சொல்லி, செவி புதைத்து- தன் இருகாதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டு, இனிது சொன்னாள-அறவுரையைக் குணவதி சொன்னாள் எ-று.
இவர்தல், மேலும் மிகுந்தேகுதல், "இவர்தந்தென் மேனி மேலுரும் பசப்பு"1 என்புழிப்போல. கொல்லிரண்டினுள் முன்னது ஐயம், பின்ன தசைநிலை. குலமகளிர்க் கொவ்வாத சொல்லை அமுதமதி கூறுதலின், "நின்மனத்து இலாத சொல்" என்றும், அது மெய்யன் றென்றற்கு "நீ புனைந்தருளிற்று" என்றும், அது நகையேயும் வேண்டற்பாற் றன்றாகலின், "என்கொல்" என்றும் கூறினாள். "புனைந்துரை யன்று; மெய்யே" என அமுதமதி வற்புறுத்தினமையின், குணவதி பொறாது அஞ்சினமை தோன்றச் "செவிபுதைத்து" என்றும், அறவுரை பகர்ந்தமை விளங்க, "இனிது சொன்னாள்" என்றும் கூறினார். அறவுரை இன்பம் பயப்பதாதலின், "இனி" தென்றார்; அவ்வுரை அங்கணத்துளுக்க வமிழ்துபோல் பயன்படா தொழிந்தமையின், இனிதென்றே யொழிந்தார்.
- ----------
1. குறள் 1182.
அமுதமதி தனது ஆற்றாமை கூறல்
மாளவப் பஞ்ச வப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
கேளல மாயி னாமுங் கேளல மாது மாவி
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளள வுண்கண்* மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.† 101
------
(பாடம்)*வொண்கண். † மொழியலென்றாள்.
உரை:- வாள் அளவு உண்கண் மாதே-ஒளி கலந்தமையுண்ட கண்களையுடைய அன்புள்ள தோழி, அவன் அமுதவாயில்-அந்த இன்னிசையோனுடைய அமுதம் பொருந்திய வாயால், மாளவப்பஞ்சவப்பண்-மாளவ பஞ்சமம் என்ற பண்ணின் இசையை, மகிழ்ந்து கேளலமாயின்- அவனைக் கூடி மகிழ்ந்து கேளாதொழிவோமாயின், நாமும் கேளலமாதும்-நாமும் தோழமையினின்றும் நீங்கிவிடுவோம், மறுத்து உரைமொழியின்-நீ என்விருப்பத்தை மறுத்து மாறு கூறுவாயாயின், நாள்-உயிரோடு கூடிவாழும் வாழ் நாளும், அவமாகி-பயனற்றதாகி, இன்னே ஆவிநடந்திடும்- இப்பொழுதே உயிர் நீங்கிவிடும், நடு ஒன்று இல்லை- இதற்கிடையே நம்மை வாழ்விப்பது வேறொன்றும் கிடையாது எ-று.
மறுத்துரை மொழியின், நாள் அவமாகி ஆவி இன்னே நடந்திடும் என இயைத் துரைத்துக் கொள்க. மாளவபஞ்சமம் என்பது ஒருவகைப் பண்; மாளவ கௌளம், கேதார கௌளம் என்பன போல்வது, இஃது அட்டபங்கன் பாடியது. கேளாவழிப்படும் பயன் இது வென்பாள் "நாமும் கேளலமாதும்" என்றும், மறுத்து மொழியின் வரும் பயனை "ஆவியின்னே நடந்திடும்" என்றும் கூறுகின்றாள். ஒன்று, நாள் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கன. வாள், ஒளி, அளவு-அளவுதல், கலத்தல். இவ்வாறு அறந்திறம்பிய நெறியொழுகுபவள் கேண்மையும் உயிர்வாழ்வும் பெறுதலினும் பெறாதொழிவது பெண்ணுலகிற்குச் சிறப்பாமென்று கருதி மறுப்பினும் மறுப்பளென்ற எண்ணத்தால், வரும் பாட்டில் குணவதியுடன் மிகநயமாக இவ்வமுதமதி பேசுதலைக் காண்மின்.
---------
அவ்விசையவன் யாவனென் றறியக் குணவதி துணிதல்
என்னுயிர்க் கரணம் நின்னோ டின்னிசை புணர்த்த* காளை
தன்னின்மற் றொருவ ரில்லைத் தக்கது துணிக தாழ்க்கின்†
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றாள்‡
துன்னும்வா யவளோ டெண்ணாத்§ தோழியு மெண்ணி ணாளே. 102
---------
(பாடம்)*யுணர்த்த. † வென்ன, தாழ்வின், ++மென்றா, மென்றே. $டெண்ணி.
உரை:- என் உயிர்க்கு அரணம்-என் உயிர்க்குப் பாது காப்பாவார், நின்னோடு-உன்னோடு, இன்னிசை புணர்த்த காளைதன்னின்-இனிய இசையைப்பாடிய அக்காளையேயன்றி, மற்று-வேறே, ஒருவர் இல்லை-ஒருவரும் இல்லை,. தக்கது துணிக-செய்யத்தகுவது யாதோ அதனைச் செய்க, தாழ்க்கின்-காலம் நீட்டிப்பின், என் உயிர்க்கு ஏதம்-என் உயிர்க்கு இறுதியுண்டாகும், எய்தின்-அவ்வாறஃது உண்டாயின், இது-இத்தாழ்க்கையினால், பழி பெருகும்- பெண்பழி தோன்றி நின்வழிவழிப் பெருகிநிற்கும், என்றாள்- என்று அமுதமதியுரைத்தாளாக, தோழியும்-தோழியாகிய குணவதியும், அவளோடு-அவ்வமுதமதியுடன், துன்னும் வாய்-அவ்விசையவனைத் தேடி யடைதற்குரிய நெறிகளை, எண்ணி-ஆராய்ந்தறிந்து, எண்ணினாள்-அவன் இருக்குமிடத்தைத் தேடிச் செல்லத் துணிந்தாள் எ-று.
"உயிர்க்கு அரணமாவார் அதற்குக் கேடு செய்யார்" என்பது பற்றி "என்னுயிர்க்கரணமாவார்" என்றெடுத்து "நின்னோடு" என்று உயர்பின்வழித்தாகிய ஒடுக்கொடுத்துச் சிறப்பித்தாள்; ஒடு ஓடென விகாரம். தோழிவாயிலாக இசையவனைப் பெறும் இயைபு பற்றி, அவட்கு உயர்பு தந்தாள் என வறிக. பலரறிய இசையவனைத் தேடிக் காண்டல் அமுதமதியின் கருத்து நிறைவேறற்காகாமையின் "தக்கது துணிக" என்றும், அதனையும் விரைந்து செயல்வேண்டுமென்றற்கு "தாழ்க்கின் ஏதம்" என்றும், "பழிபெருகும்" என்றும் கூறினாள். இரவுப்போதில் உறங்குங்காலத்தே அவ்வின்னிசையை அமுதமதி கேட்டாளாதலின், இசை வந்த பக்கம் இசையவனுறைவிடம், அதன் அணிமை சேய்மைநிலை, அவனைக் காணுந்திறம், அவனை யுடன்படுவித்தற்கு வேண்டும் சொற்பொருள்கள் என்று இன்னோரன்னவற்றைத் தோழி அமுதமதியோடு கலந்தே யாராயவேண்டியிருந்தமையின், "துன்னும் வாய் அவளோ டெண்ணா" என்றும், எண்ணியபின் எண்ணியாங்குச் செய்வன செய்யத் தொடஙகினாளென்றும் கூறினார். எண்ணுவதன் பயன் இயற்றலே யாதலின், "எண்ணினாள்" என்று உபசரித்தார். எண்ணா, செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
-----------
இசை பாடியவன் அட்டபங்கனென்று குணவதி மகிழ்ச்சியுடன் மீளுதல்
மழுகிரு ளிரவின் வைகி மாளவப் பஞ்ச வத்தேன்
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவ னியாவ னென்றே
கழுதுரு வவனை* நாடிக் கண்டனள் கண்டு காமத்
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்டாள். 103
------
(பாடம்) * வன்னை.
உரை:-- இருள் மழுகு இரவின் வைகி - நள்ளிருள் நெகிழும் கடையாமத்தில் தன் இருக்கையிலே இருந்து, மாளவப் பஞ்சவத்தேன் - மாளவபஞ்சமம் என்ற பண்ணாகிய தேனை, ஒழுகிய மிடற்று - சொரிந்த கண்டத்தையுடைய, காளையுள்ளவன் - காளைப்பருவத்தான், யாவன் என்று - யாவனோ என்று, நாடி - தேடிச் சென்று, கழுது உரு அவனை- பேயின் வடிவத்தையுடைய அவனை, கண்டனள் - குணவதி தன்கண்களால் பார்த்தாள், கண்டு - அவ்வாறு கண்டதனால்,தையற்கு - தையலாகிய அமுதமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கழிகாமத்துறையில் பெருகியோடும் மனமானது, ஒழியும் - இனி அதனின்றும் நீங்கும், என்று உவந்து - என்று நினைந்து மகிழ்ந்து, மீண்டாள் - அமுதமதிபால்வந்து சேர்ந்தாள் எ-று.
நடுவியாமத்தே செறிந்திருக்கும் திணியிருள், கடையாமத்தே கட்டுவிட்டு நெகிழ்ந்து மழுகியிருத்தலின், அதனை, " மழுகிருளிர வின்" என்றார். அவள் அச்சமின்றிச் சேறற்கும் அது நன்றாதலின், மழுகிருளை எடுத்தோதினார். பண்ணினஐத் தேனாக வுருவகஞ்செய் தமையின், அதற்கேற்பப் பாடுதலை ஒழுகுதலென்றார். ஓர், அசை. காளையுள்ளவன் யாவன் என்பதற்கு, காளைபோல்வானாய் உள்ளான் ஒருவன். அவன் யாவன் என்று கூறலு மொன்று. கழுது - பேய். யாவன் என்று நாடிக் கண்டனள் என இயைக்க. காணப்போந்த குணவதிக்கு அமுதமதியின் காமவொழுக்க்த்தின்கண் விருப்பமின்மையின், அட்டபங்கனது பேய்போலும் காட்சி அருவருப்பை விளைத்ததாயினும் ஒருபால் மிக்க மகிழ்ச்சியே விளைத்ததென்பார், அதற்கு ஏதுவின்மேல்வைத்து "காமத்தொழுகிய வுள்ளம் தையற் கொழியும் என்று உவந்து" என்றும் "மீண்டாள்" என்றும் கூறினார். "மீண்டாள்" என்றதனால், இனித் தனக்கு இத்தகைய வினை நிகழாது; இஃது இவ்வளவில் முடிந்தொழிந்தது என்ற கருத்துடையளாய்க் குணவதி திரும்பினமை பெற்றாம். எடுத்த வினை முற்றினல்லது மீளுதல் வினைசெய்வார் தொழிலன்றாதலின்.
---------
குணவதி தான் கண்டதனை அமுதமதிக்குக் கூறல்
மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த* கீதத்
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான்
தன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன்
என்னைநீ முனிவை யென்னா விசைக்கில† னவற்கீ தென்றாள். 104
------
(பாடம்)*வழங்கு. †யென்றிஃதிசைக்கலன்
உரை:- மன்னன்மாதேவி-அரசமாதேவி, நின்னை வருத்துவான்- நின் நெஞ்சு வருந்தும்படியாக, வகுத்த கீதத்து அன்னவன் - பாடிய இசையினையுடையவன், அத்திபாகன்- ஓர் யானைப்பாகனாவான், அட்டமாபங்கன் என்பான்- அட்டபங்கன் என்று பெயர் கூறப்படுவான், தன்னை-அவனை, மெய்தெரியக்கண்டு-உடல்முழுதும் நன்குகண்டு, தளர்ந்து- மனம் சோர்ந்து, கண்புதைத்து மீண்டேன்-கண்களை மூடிக்கொண்டு திரும்பினேன், என்னை நீ முனிவை என்னா- சென்ற கருமத்தை அவற்கு உரைப்பின் என்னை நீ வெகுள்வாய் என்று அஞ்சி, ஈது அவற்கு இசைக்கிலன்-இதனை அவனுக்கு யான் சொல்லவில்லை, என்றாள்-என்று குணவதிகூறினாள் எ-று.
மன்னன்பால் ஒன்றி அவற்கு உரிமைப்பட்டிருந்த மனம் நீங்கி, அயலான் ஒருவன்மேற் சென்றமையின், அமுதமதியை, அரசன்தேவி யென்னாது, "நங்கை" (99) என்றும் "சின்மலர்க்குழலி" (100) என்றும் கூறிப்போந்தவள், இனி அவ்வாறு செல்வதொழிந்து, அரசற்கே யுரித்தானமையின் "மன்னன் மாதேவி" என்றாள். அட்டபங்கன்பால் தனக்குண்டான அருவருப்பைக் குணவதி, அவனிசைத்த பண்மே லேற்றி "வருத்துவான் வகுத்த கீதம்" என்றாள். பலவேறுபண்களாக வகுக்கப்படுதலின், "வகுத்த கீதம்" என்றார். அத்தி, யானை. மா, அசை. அட்டபங்கன் வடிவு முழுதும் விளங்கக்கண்டமை தோன்ற, "மெய்தெரியக்கண்டு" என்றும், அவ்வடிவின் பொல்லாங்கினைத் "தளர்ந்து கண்புதைத்து" என்று குறித்தும், அதனைக் காணின் அமுதமதி அறவே அவனை வெறுப்பளென்னும் துணிவால், "என்னை நீ முனிவை யென்னா விசைக்கில னவற்கீ" தென்றும் கூறினாள். தளர்ச்சி அமுதமதியின்
பொருட்டு.
-----------
அட்டபங்கன் வடிவைக் குணவதி கூறல்
நரம்புகள் விசித்த மெய்யன் நடையினிற் கழுத ணைந்தோன்
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவன் சீறிற்*
குரங்கினை யனையன்+ கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் வென்றாள். 105
---------
(பாடம்) *சீறிற். +யனைய.
உரை:-நரம்புகள் விசித்தமெய்யன் - நரம்புகள் புறத்தே தோன்றுமாறு எழுந்த மெய்யினையுடையவன், நடையினில் கழுது அணைந்தோன் - நடையால் பேய்க் கோட்பட்டானை யொப்பன், திரங்கிய விரலன் கையன் - தோல்சுருங்கித் தேய்ந்த விரலையும் கையையுமுடையவன், சிறுமுகன் - சிறுத்த முகத்தையுடையவன், சினவன் - முன் கோபி, சீறின் குரங்கினையனையன் - சினந்தவழி முகம் குரங்கினை யொப்பன், கூனன் - கூனிய முதுகை யுடையவன், குழிந்துபுக்கு - குழிந்து உட்சென்று, அழிந்தகண்ணன் - இதழ் புண்ணுற்று அழுகிய கண்களையுடையவன், நெருங்கலும் நிரலும் இன்றி - நெருக்கமும் வரிசையுமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிலபல் நிமிர்ந்து - சிலபற்களே மிக நீண்டு, உள - அவன் வாயில் உள்ளன, என்றாள் - என்று எடுத்துரைத்தாள் எ-று.
நரம் பெழுந்து விசித்தது போலத் தோன்றலின், "விசித்த மெய்யன்" என்றாள். புழுதி யளைந்த மேனியும் மருண்டநோக்கமும் தள்ளாடுநடையும் உடைமையின், "நடையினிற் கழுதணைந்தோன்" என்றாள். திரங்கிய என்பதனைக் கையன் என்புழியும் கூட்டுக. தலைக்கும் உடற்கும் ஒவ்வாதுசிறுத்திருத்தலின், "சிறுமுகன்" என்றும், அச்சிறுமை விரைவில் வெகுளும் இயல்பினைக்காட்டலின் "சினவன்" என்றும். சினந்து சீறுங்கால் முகம் பெறும் வடிவினை "சீறிற் குரங்கினை யனையன்" என்றும் கூறினாள். குழிந்தெனவே யமையுமாயினும் "புக்கு" என்றது, நெடி தாழ்ந்து கிடைந்தமை தோன்ற. இதழ்புண்ணுற்று மயிருதிர்ந்து சீயும் பீளையும் நீரும் ஒழுகுதல் பற்றி, "அழிந்த கண்ணன் என்றாள், "சிலபல்" என்றும் "நிமிர்ந்துள" என்றும் கூறியதனால், இருகடைவாயிலும் முன்னும் மேலும் கீழும் இவ்விரண்டு பற்களுள வென்றும், முன்னுள்ளவை மிக நீண்டு புறத்தே வெளிப்பட்டுத் தோன்றின வென்றும் கொள்க.
--------
இன்ன இயல்பினனான இவனை நீ வேண்டற்கஎனக் குணவதி கூறல்
பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திடுக நெஞ்சின் நிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிதழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே. 106
உரை:- பூதி கந்தத்தின்-புழுதி நாற்றமும், மெய்யிற் புண்களும்-உடலிடத்தேயுள்ள புண்களும், கண்கள் கொள்ளா-கண்கள்தாமும் பார்த்தற்கு உடன்படா, சாதியும் தக்கதன்று-அவனுடைய குடிப்பிறப்பும் தகுதியுடையதன்று, அவன் வயின் தளரும் உள்ளம்-அவன் பொருட்டு வருந்திமெலியும் நின்மன விருப்பத்தை, நீ தவிர்ந்திடுக-நீ விட்டொழித்து, நெஞ்சின்-அவன்பாற்செல்லும் நின் நெஞ்சத்தை, நிறையினை-நினக்கு இயல்பாயுள்ள நிறையைக் கொண்டு, சிறைசெய்க-தடுத்து நிறுத்திக் கொள்க, என்றாள்-என்று பரிவோடு கூறினாள். கோது அவிழ்ந்திட்ட-குற்றம் இல்லாத, உள்ளக் குணவதி-மனத்தையுடைய குணவதி யென்னும், கொம்பன்னாள்-பூங்கொம்பு போலும் தோழி எ-று.
பூதி-புழுதி. கந்தம்-நாற்றம். காண்டற்கு நம் நெஞ்சு ஒருகால் விரும்பினும், கருவியாகிய கண்கள் அதற்கு உடன்படா எனப் பார்த்தற்கு மிக்க அருவருப்புடைய அவனது உடல் வடிவை யுணர்த்துவாள் "கண்கள் கொள்ளா" என்றாள். மெய்யிற் புண் கூறவே, அவ் வட்டபங்கன் குட்ட நோயால் வருந்துதல் பெற்றாம். சாதி, ஈண்டு இற்பிறப்பின் மேற்று. நெஞ்சின் என்புழி ஐயுருபு, சாரியை நிற்கத் தான்நிலையாதாயிற்று. நிறையினை யென் புழிக் கொண்டு என்று ஒருசொல் வருவிக்க. நிறையினை யென்புழி ஐயுருபைப் பிரித்து நெஞ்சோடு கூட்டி, நெஞ்சினை நிறையினால் சிறை செய்க என்றுரைப்பினுமாம். இனி, நெஞ்சு இல் நிறையினைச் சிறை செய்க என்று கொண்டு, நெஞ்சிடத்தே நில்லா தொழுகும் நின் நிறையினை நிறுத்துச் சிறை செய்கை எனினுமமையும். கோது, குற்றம். குணவதியைக் "கொம்பனாள்" என விசேடித்ததனால், அமுதமதியாகிய பூங்கொடிக்குக் கொழு கொம்பாய் நின்று, அக்கொடி படர விரும்பும் இடத்திற்குக் கொம்பு துணைசெய்து நிற்குமாறு போல, அமுதமதி விரும்பும் அட்ட பங்கனை அடைந்து மகிழ்தற்கு இக்குணவதி துணையாவது பெற்றாம்.
----------
குணவதி கூறியவற்றை அமுதமதி மேற்கொள்ளாது மறுத்தல்.
என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம்
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும்
ஒன்றிய அழகுங்* கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ. 107
------
(பாடம்) வடிவுங்.
உரை:- என்றலும்-என்று குணவதி கூறினதும், இறைவளை-இறைபொருந்திய வளையுடையாய், இவற்றினால் என்-நீ கூறிய இக்குறைபாடுகளால் வரும் கேடு என்னை, அவன்கண் ஆர்வம் சிறந்து முன்னே சென்றது-அவ்வட்ட பங்கன்பால் என் நெஞ்சம் காமக்காதல் மிகுந்து முன்னமே சென்றொடுங்கிவிட்டது. திருவொடுதிறலும்-செல்வத்தோடு கூடிய வலியும், தேசும்-புகழும், ஒன்றிய அழகும்- உடலோடு ஒன்றுபட்டுத் தோன்றும் வனப்பும், கல்வி-கல்வியறிவும், ஒளியமை குலத்தோடு-புகழ்நிறைந்த குடிபிறப்போடு, எல்லாம்-கூறப்படாத பிறவுமெல்லாம், நின்று- எஞ்சாமல் நின்று.செய்பயனும்-ஒருவர்க்குவிளைக்கக்கூடிய பயன்தானும். நல்லார் நெஞ்சமும்-அழகிய மகளிரின் மனமும் அதன் வாயிலாக எய்தும் அவரது போகமும், பெறுதல்-பெறுவதாம், என்று சொல்லி மேலும் கூறுகின்றாள் எ-று.
குணவதி கூறிய குற்றங்களைக் கேட்ட அமுதமதி, அவளை மறுக்குமாற்றால், குணமெனக் கருதப்படுவனவற்றுட் சிலவற்றைக் கூறலுற்று, திருவும், திறலும், தேசும், அழகும். கல்வியும், ஒளியும், குலனும், பிறவுமெல்லாம் ஒன்றி நின்று ஒருவர்க்குச் செய்யும் பயன் அழகிய மகளிர் நெஞ்சும் அவர் தரும் போகமும் பெறுதலேயாம்; பெறாவழி அவையும் குற்றமாம்; குற்றமென்று கூறப்பட்டனதாமும் அப்பயனை எய்துவிக்குமாயின், குணமாம் என்பது குறிப்பால் உரைத்தாளாயிற்று. எல்லாம் என்றது, கூறப்படாத குணமெல்லாம் எஞ்சாமல் தழுவி நின்றது. பயனும் என்புழி உம்மை சிறப்பு; நெஞ்சமும் என்புழி உம்மை, எச்சப் பொருட்டு. பிற எண்ணுப்பொருளில் வந்தன. அன்றோ, அசை.
-----------
காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
யாருழை யருளைச் செய்யு மவனமக் கைய னாக.*
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். 108
-----------
(பாடம்) *கனையனாக.
உரை:- நேரிழை-நேரிய இழையினையுடைய தோழி. காரியம் முடிந்த பின்னும்-ஒருவன் எடுத்த காரியம் முடிந்த பின்னரும், காரண முடிவு காணல்-அக்காரியம் தொடங்கு முன் காணவேண்டிய காரணமும் பயனும் ஆராய்தல், காரியமன்று என்று-செய்யத்தகுவதன்று என்றும், இது என்றும்-இதுவும் அதுபோல்வதே யென்றும். கருதிடு- உணர்வாயாக, கடவுள் காமன்-கடவுளாகிய காமதேவன், யாருழை அருளைச் செய்யும்-எவன்பால் தன் அருளைச் செய்கின்றானோ, அவன் நமக்கு ஐயன்-அவனே நமக்குக் காமக் கிழவனாவான், ஆக,-ஆதலால், நினைந்துபோகி- இதனை நினைத்துக்கொண்டு சென்ற, நீடலை-நீட்டியாது, இது முடி-இதனை முடித்துக்கொண்டு வருக, என்றாள்- என்று அமுதமதி சொன்னாள் எறு.
ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டின், தொடக்கத்தே அக்காரியத்துக்குரிய காரணங்களையும் அவற்றால் அது முடிவதையும், அதனாலாம் பயனையும் சீர்தூக்கிக் காண்டல் வேண்டு மென்றும், முடிந்தபின் காண்டலால் ஒரு பயனும் விளையாதென்றும் பொருள் நூல் கூறுதலின், "காரிய முடிந்த பின்னும் காரண முடிவு காணல், காரிய மன்று" என்றாள். என்று என்பதனை அன்றென்பதனோடும் கூட்டுக. இது வென்புழி எச்சவும்மையை விரித்து அன்னதே என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனி, தான் மேற்கொண்டிருக்கும் செயற்கு ஓர் அமைதி கூறுவாளாய், மகளிர் ஆடவர்பால் காமவின்பந் துய்த்தலே பொருளாகவுடைய ரென்றும், அக்காமவின்பத்தை நியமிக்கும் காமக் கடவுள் யாவர்பால் அதனைக் கூட்டுகின்றானோ, அவர்பால் அம் மகளிர் அதனைப் பெறற்பாலர் என்றும் சொல்வாள், "கடவுட் காமன் யாருழை அருளைச் செய்யும் அவன் நமக்கு ஐயன்" என்றாள். முன்பு வேறு நினைவொடு சென்றமையின் முடித்திலை; இப்போது இக்கருத்தை நினைந்து சென்று முடிக்க வென்பாள், "நினைந்து போகி" என்றும், விரைந்துசெய்தல் வேண்டுமென்றற்கு, "நீடலை" யென்றும், முடித்துக்கொண்டன்றி வறிது மீளலாகா தென்பாள் "முடி" யென்றும் விரைவுதோன்ற "யிது" என்றும் கூறினாள்.
-----------
குணவதி மனம் நடுங்கி நிற்றல்
தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனை யென்னா
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு வொடுங்கி நின்றாள். 109
உரை:- தேவி-அரசமாதேவி, நீ கமலையாவாய்- நீ தாமரைமேலிருக்கும் திருமகளை யொப்பாய், திருவுளத்து- நின் அழகிய மனத்தால், அருளப்பட்டான்-விரும்பப் பட்டவனோ, ஆவி செல்கின்ற-உயிர் போதற்கேதுவாகிய, வெந்நோய் அருநவை-கொடிய குட்டநோயால் உற்ற தாங்கமுடியாத துன்பத்தையுடைய, ஞமலியாகும்-நாயினை யொப்பான், பூவின்வார் கணையன்-பூவாகிய நீண்ட அம்பினையுடைய காமக்கடவுள், இதனைப் புணர்த்தவாறு- நின்னை அவனுக்கு நியமித்த வகைதான், என்னே-என்னென்பது, என்று நடுங்குபு-என்று மனங்கலங்கி, நாவினால் உளைந்து கூறி-நாவால் வருந்திச் சொல்லி, ஒடுங்கி நின்றாள்- உடல் சுருங்கி நின்றொழிந்தாள். எ-று.
கமலை, கமலத்தை இருக்கையாகவுடையவள்; கமலம்-தாமரை. புண்ணிய முடையாரை யருளுவதே திருமகளினன் உளப்பண்பு என்றதற்குத் "திருவுளம்" என்றும், நின் உளத்தால் விரும்பப் பட்டவன் அன்னனாகாது பெரும் பாவத்தின் பயனாக வெய்தும் குட்ட நோயும் கொடுந் துன்பமும் உடையானென்பாள், "அருளப் பட்டான் ஆவி செல்கின்ற வெந்நோய் அருநவை ஞமலியாகும்" என்றும் கூறினாள். அருவருப்பு மிகுதி தோன்றற்கு, "ஆவி செல்கின்ற வெந்நோய்" என்றாள். "பூவின்வார் கணையன் இதனைப் புணர்த்தவாறு என்னே" என்றது, திருமகளை ஒரு நாயிடத்தே காமவின்பந் துய்க்குமாறு நியமிக்கும் காமக்கடவுளை இகழ்ந்தவாறாம். இவ்வாறு காமக்கடவுளை இகழ்ந்தும், தேவியின் செய்கையை வெறுத்தும், தான் அவள் செய்கைக்குத் துணையாக நேர்ந்ததற்கு வருந்தியும் வெறுப்புத் தோன்றும் சொற்களை வழங்குதலின், "நாவினாலுளைந்து கூறி" யென்றும், பின்விளைவு நினைந்து அஞ்சி உளங்குலைவது தோன்ற, "நடுங்குபு வொடுங்கி நின்றான்" என்றும் கூறினார்.
---------
குணவதி அட்டபங்கனிடம் செல்லுதல்
ஆடவ ரன்றி மேலா ரருவருத்* தணங்க னாருங்†
கூடலர் துறந்தார்‡ நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப்
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென் றெண்ணித்§
தோடலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள். 110
-------
(பாடம்)* மேனாளருந்தவத். †தனங்கனாரை, தனங்கனாரும், தணங்கனாரும். ‡துறந்து, §றுள்ளே.
உரை:-அணங்கனாரும்-திருமகளை யொத்த மகளிர் தாமும், ஆடவரின்றி-தாம் விரும்பும் ஆண்மக்களை யன்றி மேலார்-மணந்து கூடுதற்கமைந்தவர் மிக்க மேலோராயினும், அருவருத்து-அவரை வெறுத்து, கூடலர்-கூடுவ தொழித்து, நோன்மைக் குணம் புரிந்து-தவமும் விரதமும் மேற்கொண்டு, உயர்தற்காக-தேவராய்த் தாம் விழைந்த போகத்தைத் துய்ப்பது குறித்து, துறந்தனர்-துறவு பூண்டனர், பீடுடை அயனார்-பெருமை பொருந்திய பிரமனால், தந்த-படைக்கப்பட்ட, பெருமகள் இவள்-பெருமையினை யுடையவள் இவ்வமுதவதி, ஆதலின் இவள் துறத்தலின் இறத்தலே தவறாது செய்வள், என்று எண்ணி - என்று தனக்குள்ளே ஆராய்ந்து, துணிந்தனள்-அட்டபங்கன்பாற் சென்று தேவி விரும்பிய காரியத்தை முடித்துத்தர மனம் துணிந்து, பெயர்த்து-மறுபடியும், தோடு அலர் குழலி தோழி-பூக்களையணிந்த கூந்தலையுடைய அமுதமதிக்குத் தோழியாகிய குணவதி, சென்றாள்-அட்டபங்கன் இருக்குமிடத்திற்குச் சென்றாள் எ-று.
ஆடவர், மெய்வன்மையும் இளமைச் செவ்வியும் உடைய ஆண் மக்கள். உம்மை, சிறப்பு. எத்துணை மேலோராயினும் தம் மனம் செல்லாவழி மகளிர் அருவருப்பரென்பது உலகறிந்த செயலாதலின், "அருவருத்து அணங்கனாரும் கூடலர்" என்றும், அவர் கருத்தறியாது அம்மேலோரைப் புணர்த்தவழி அம்மகளிர் செய்யும் செய்கை கூறுவாள் "துறந்தார் நோன்மைக்குணம் புரிந்துயர்தற்காக" என்றும், அழகும் திருவும் இளமையும் அடைய மிக்கிருத்தலின், பிரமன் சிறப்பாக முயன்று படைத்த பெருமையுடையவள் இவ்வமுதமதி யென்றற்கு "பீடுடையயனார் தந்த பெருமகள்" என்றும், கணவனோடு கூடியிருத்தலின், துறவு பூண்பதை விடுத்து இறத் தலையே செய்வள் என்பாள் "பெருமகள் இவள்" என்றும் குணவதி எண்ணினாளாயிற்று. "இறப்பள்" என்று கூறிற்றிலள், நெஞ்சினுள் அதனைத் தெளிய வுணர்ந்து கொண்டமையின். குணவதியும் அமுதமதியின் கருத்துக்கு நேர்ந்து உடம்பட்டமையின் "தோடலர் குழலி தோழி" என்றும், துணியாதிருந்தவள், இப்போது அட்டபங்கன்பால் செல்வது தக்கது என்று துணிந்தாளென்பார் "துணிந்தனள்" என்றும், இடையறவின்றி உடனே செல்லுதல் தோன்ற, "துணிந்தனள் சென்றாள்" என்றும், முன்னொருகாற் சென்றிருத்தலின், "பெயர்த்து" என்றும் கூறினார். நோன்மை, தவம். குணம், விரதம்,. தவமுடையார்க்கு விரதம் பண்பாதலின், அதனைக் "குணம்" என்றார். சீவகனை மணக்கக் கருதியிருந்த குணமாலைக்கு வேற்று வரைவு பேசப்பட்டபோது, "காளைக்கு எந்தையும் யாயும் நேராவிடின் இறத்தலொன்றோ, சிந்தனை பிறிதொன்றாகிச் செய் தவம் முயறலொன்றோ"1 எனக் கூறுதல் காண்க.
- -------
1.சீவக. 1057
சமண் சமயத்தவர், மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்பவாகலின், உயர்தல் என்பதற்குத் தேவராய் இன்புறுதல் என்று உரை கூறப்பட்டது. "விரதசீ லத்தராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து, அருகன சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து, கருது நற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தி னீங்கிக் கற்பத் துத்தம தேவ ராவார்" (739) என்றும் "மாதவந் தாங்கி வையத்தையராய் வந்து தோன்றி, ஏதமொன்றின்றி வீடு மெய்துவர்" (740) என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. தேவர் பெறும் இன்பத்தை,
”ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
ஏடார்ந்த தொங்கலராய் இன்பநீர்ப் பெருவெள்ளம்
நீடாரக் குளித்தாடும் நிலைமையரே யவரெல்லாம்" (துறவு 211)
எனத் தோலாமொழித் தேவர் கூறுவது காண்க.
----------
குணவதி அட்டபங்கன்பால் தேவியின் விழைவைத் தெரிவித்தல்
*
முடைப்படு நாற்ற மேனி முழுதழுக் காடை போர்த்துக்
கடைப்படு துகளு மண்ணுங் கஞலிய கூடத் தாங்கோர்
புடைக்கிடந் துறங்கு வானைப் புழுங்கிய மனத்தோ டண்மி
விடைப்பருந் தானை வேந்தன் றேவியின் விழைவு சொன்னாள். 111
*இதுமுதல் ஐந்து பாட்டுக்கள் அச்சுப்பிரதியில் இல்லை.
உரை:- முடைப்படு நாற்றம் மேனி-முடைநாற்றம் நாறுகின்ற வுடம்பு, முழுது-முழுதும், அழுக்காடை போர்த்து-அழுக்கேறிய ஆடையால் போர்த்துக்கொண்டு, கடைப்படுதுகளும்-தூய்மையற்றதாகக் கருதப்படும் கூளமும், மண்ணும்-மண்பொடியும், கஞலிய கூடத்து- நிறைந்த யானைக் கூடத்தில், ஓர் புடை-ஒரு புறத்தே, கிடந்து உறங்குவானை-படுத்துறங்கிய அட்டபங்கனை, புழுங்கிய மனத்தோடு அண்மி-அருவருத்த மனத்துடன் அருகே சென்று, விடைப்பு அருந் தானை வேந்தன் தேவியின் விழைவு-வேறுபடுத்தற்கரிய தானையினையுடைய வேந்தனான யசோதரனுக்கு மனைவியாகிய அமுதமதியின் விருப்பத்தை, சொன்னாள்-சிலவாய சொற்களால் குணவதி மெல்லச் சொன்னாள் எ-று.
மேனி முழுதும் புண்ணுற்றுத் தீநாற்றம் நாறக் கிடத்தலின், "முடைப்படு நாற்ற மேனி முழுதும்" என்றார். "மெய்யிற் புண்களும் கண்கள் கொள்ளா" (106) என்று குணவதியும், "புண் பெற்ற மெய்யன்" (113) என்று அவனேயும் கூறுதல் காண்க. முடைப்படு நாற்றம், முடையுண்டாகும் நாற்றம், சீவடிதலின் ஈ முதலியன மொய்க்காவண்ணம் போர்த்துக் கிடந்தான் என்பார் "மேனி முழுதும் அழுக்காடை போர்த்து" என்றார். யானை தின்று கழிந்த புற்றுகளும் வைத்துகளும் அதன் சிறுநீரால் நனைந்து அதன் மலம் அளைந்து புலர்ந்து கிடத்தலின் "கடைப்படுதுக" ளென்றார். காண்டற்குத் துணிந்து போந்தாளாயினும், அவனது மேனியும், ஆடைப் போர்வையும் இடத்தின் இழிவும் காணக்காண அவட்கு அருவருப்பு நெஞ்சி லெழுந்தமையின் "புழுங்கிய மனத்தோடு" அணுகினாள். பகைவரால் வேறுபடுத்தற்கரிய தானையாதலின், விடைப்பருந் தானையாயிற்று. "விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி"1 என்று தேவரும் கூறுதல் காண்க. சிலவாய சொற்களால் தம் கருத்தை மெல்லச் சொல்லுதல் இளைய மகளிர்க்கு இயல்பாதலின், அதனை எடுத்தோதாது "விழைவு சொன்னாள்." என்றொழிந்தார். அன்றி, எடுத்தோதற்கு நாணியது தோன்ற உய்த்துணர வைத்தாரெனினுமாம். வேறுபடுத்தற்கரிய தானை கொண்டு நாட்டுக்கு வேண்டும் காவலை நன்கு செய்யும் வேந்தனாயினும், அவன் தேவிக்கு அக்காவல் பயன்படாதாயிற்றென்பார், "விடைப்பருந்தானை வேந்தன் தேவி" என்றார்.
- -------------
1. சீவக. 557
அட்டபங்கன் உடன்படாது வெகுளுதல்
கேட்டலு மஞ்சு நெஞ்சன் கேடெனக் கெய்திற் றென்றே
வாட்டமும் நடுக்கு முற்றே மாண்பில மொழிந்தாய் மன்னன்
வீட்டிடுஞ் செல்கென் றேவ வேய்புரை தோளி தோழி
காட்டுவ காட்டி யன்னான் கருத்தையுங் கலைத்திட் டாளே. 112
உரை:- கேட்டலும்-குணவதி சொல்லியது கேட்டமாத்திரையே, அஞ்சும் நெஞ்சன்-அஞ்சுகின்ற மனமுடையவனான அட்டபங்கன், எனக்குக் கேடு எய்திற்று என்று- எனக்கு நாசகாலம் வந்தது என்று நினைத்து, வாட்டமும் நடுக்கும் உற்று- மனவாட்டமும் நடுக்கமுமடைந்து, மாண்பு இல மொழிந்தாய்-தேவியின் பெருமைக்குத் தகாதவற்றைச் சொல்கின்றாய், மன்னன் வீட்டிடும்-இதனை யறிந்தால் வேந்தன் கொன்றுவிடுவான், செல்க-நீ இப்போதே இவ்விடத்தினின்றும் போய்விடுக, என்று ஏவ-என்று சினந்த கூற, வேய்புரை தோளி தோழி-மூங்கில்போலும் தோள்களையுடைய அமுதமதியின் தோழியாகிய குணவதி, காட்டுவ காட்டி-அவன் ஐயுறாது ஏற்கத்தக்க சான்றுகளை எடுத்துக் கூறிக்காட்டி, அன்னான் கருத்தையும் கலைத்திட்டாள்-அவனுடைய மனக்கருத்தைக் கலைத்துத் தேவியின் விருப்பத்துக்கு இசைவித்துக்கொண்டாள் எ-று.
இயல்பாகவே அச்சமுடையனாதலின், குணவதி கூறியதனால் அது மிகுந்து வருத்துவதுபற்றி "அஞ்சும் நெஞ்சன்" என்றார். "அச்சமே கீழ்களது ஆசாரம்"1 என்பதனால், அச்சம் அட்டபங்கற்கு இயல்பாதலறிக. அரசன் கோயிலிற் பணிபுரிவோர் அடங்கிய மனமிலராயின், கேடெய்தல் ஒரு தலையாதலின், "கேடெனக் கெய்துமென்று வாட்டமம் நடுக்கமும்" கொண்டான். "மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே"2 என்று திருத்தக்க தேவர் கூறுதல் காண்க. தேவிக்குத் தோழியாவாள் அவள் மாண்பிற்கு இழுக்குத் தருவதனைச் சொல்வது தீதாதலின் "மாண் பில மொழிந்தாய்" என்றும், அவளை அச்சுறுத்திப் போக்கும் கருத்தால் "மன்னன் வீட்டிடும் செல்க" என்றும், என்றதனோடமையாது, அவன் சொல்லக்கேட்டும் குணவதி புடைபெயராமையின், அவனே அவளைப் போக்கக் கருதினானென்பார் "ஏவ" என்றும் கூறினார். வேய்புரை தோளி தோழி யென்றது, தான் கருதியது முடித்துக்கொண்டல்லது ஏகாத இயல்பினளாதலை யுணர்த்திற்று. இவ்வாறு அவன் மனந்திறம்பானாதலைக் கண்ட குணவதி அவன் ஏற்கத்தக்க சொற்களையும் அவற்றிற்குச் சான்றாகக் காட்டத் தகுவனவும் வழங்கி, அவனை மதியுடம்படுத்தாள் என்பார், "காட்டுவ காட்டி யன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே" என்றார். பேதையாதலின், பிறனில் விழையும் இத் தீவினைக்கு அவனும் இசைந்தானென வறிக.
- ----------
1.குறள்.77. 2. சீவக. 1676
அட்டபங்கன் மனங்கலைந்து மகிழ்ந்துரைத்தல்
பண்பெற்ற மொழியாய் யானும் பண்பெற்ற பயனும் பெற்றேன்
புண்பெற்ற மெய்யன் பொல்லாப் புழுதியிற் றுளையுங் கையன்
மண்பெற்ற இறைவன் தேவி மனம்பெற்று மகிழ்வே னென்னின்
எண்பெற்ற தவமியார் பெற்றா ரியான்பெற்ற பேறி தென்றான். 113
உரை:- பண் பெற்ற மொழியாய்-பண்ணிசைபோலும் சொற்களையுடையவளே, பண்பெற்ற பயன்-பண்பாடும் அறிவு பெற்றதனாலடையும் பயனை, யானும்-பெறற்காகாத யானும், பெற்றேன்-இன்று பெற்றேன், (எவ்வாறெனில்) புண்பெற்ற மெய்யன்- புண்கள் நிறைந்த உடம்பினையுடையேன், பொல்லாப் புழுதியில்-நல்லதல்லாத புழுதியிலே, துளையும்கையன்- புரண்டுகிடக்கும் சிறுமையுமுடையேன், மண்பெற்ற இறைவன் தேவி-மண்ணுலகத்தையாளும் அரசனுக்கு மனைவியினுடைய, மனம் பெற்று மகிழ்வேன்-காதலன்பு பெற்று மகிழ்கின்றேனாதலால், எண்பெற்ற தவம்-யாவரும் எண்ணி விரும்பத்தக்க தவப் பயனை, என்னின்-என்னைப்போல, யார் பெற்றார்-யாவர் பெற்றார். இது யான் பெற்ற பேறு-இது யான் அரிதாகப் பெற்ற பேறாகும், என்றான்-என்று அட்டபங்கன் குணவதிக்குக் கூறினான். எ-று.
உம்மை, சிறப்பு. "புண்பெற்ற மெய்யன்", "புழுதியிற்றுளையுங் கையன்", எனத் தன் நிலைமையை யுணர்ந்திருத்தலின், "யானும் பேற்றேன்" என்றும், தொடக்கத்தே பண்பிலவாய்த் தோன்றிய மொழிகள் இறுதியில் இன்பப் பயன் தந்தமையின், "பண்பெற்ற மொழியாய்" என்றும் கூறினான். தன் நிலைமையை நோக்க அரசமாதேவியின் இன்பப்பேறு தனக்கு வாய்த்ததற்குத் தன் தவமேயன்றிப் பிறிதொரு காரணமும் காணமாட்டாமையின், "என்னின் எண் பெற்ற தவமியார் பெற்றார்" என்றான். அரிதிற் பெற்ற பேறு என வியந்துரைத்தலின் "யான் பெற்ற பேறிது" என விதந்தோதப்பட்டது.
----------
குணவதி போந்து அரசியைக் காண்டல்
இவ்வகை மொழிவோன் றன்னை யிறையவன் தேவி மேவும்
செவ்வியுங் குறியுஞ் செப்பிச் சென்றவ ளெய்த லோடும்
கவ்விய காமத் தீயாற் கயங்கிய மாலை யொப்பாள்
நவ்விநேர் விழியாய் நன்றோ நவில்கநின் கரும மென்றாள். 114
உரை:- இவ்வகை மொழிவோன் தன்னை- இவ்வாறு சொல்லி மகிழும் அட்டபங்கற்கு, இறையவன் தேவி- அரசன் மனைவியாகிய அமுதமதி, மேவும் செவ்வியும் குறியும் செப்பி-வரக்கூடிய காலமும் இடமும் உரைத்துவிட்டு, சென்றவள்-தேவிபாற் சென்ற குணவதி, எய்தலோடும்- அமுதமதியை நோக்கி யணுகவருதலும், கவ்விய காமத் தீயால்-பற்றி வருத்தும் காமத்தீயினால்.கயங்கிய மாலை ஒப்பாள்-சாம்பிய பூமாலையை யொப்பவளான அமிர்தமதி, நவ்விநேர் விழியாய்-மான்போலும் கண்களையுடையாய், நின் கருமம்-நீ மேற்கொண்டு சென்ற காரியம், நன்றோ-நலந் தந்ததோ, நவில்க-சொல்லுக, என்றாள்-என்று கேட்டாள் எ-று.
செவ்வி, காலம். குறி,குறிக்கும் இடம். "செப்பி" யென்றதனால், அவற்றை யவன் வினவினமை பெற்றாம். யானைக் கூடத்தின் நீங்கி அமிர்தமதி யிருந்த அந்தப்புரத்தை யடைந்தாளென்றற்கு, "சென்றவள் எய்தலோடும்" என்றும், குணவதி மேற்கொண்டு சென்ற காரியம் முடியுமோ முடியாதோ என்ற ஐயம் ஒரு புடை யலைப்ப, அவன்பாற் சென்ற காமவேட்கை ஒருபுடை யலைப்ப உணர்வும் உடம்பும் வாடியிருத்தலின், "கவ்விய காமத் தீயால் கயங்கிய மாலை யொப்பாள்" என்றார். தீதோ என்னாமை, அதனையவள் விரும்பாமையாலாம்.
------------
குணவதி நிகழ்ந்தது கூறக்கேட்டு மகிழ்தல்
பட்டது நலங்கா ணென்பாள் பாகனைக் கண்ட வாறும
அட்டமா பங்கன் சீறி யழன்றிட்ட வாறுந் தேவி
இட்டத்திற் கவனை யாங்கே யியைவித்த வாறுங் கூடற்
கொட்டிய குறியுங் சொன்னா ளொள்ளிழை யுவப்புற் றாளே. 115
உரை:- நலம்பட்டது என்பாள்-நலமாகவே முடிந்தது என்று சொல்லித் தொடங்கிய தோழி, பாகனைக் கண்டவாறும்-தான் சென்று அவ்யானைப்பாகனைக் கண்டதும், அட்டபங்கன் சீறி அழன்றிட்டவாறும்-அட்டபங்கனென்னும் பெயரினனாகிய அவன் சீறிச் சினந்ததும், தேவி இட்டத்திற்கு-அரசமாதேவியாகிய அமிர்தமதியின் விருப்பத்துக்கு, அவனை இயைவித்தவாறும்-அவனை யுடன்படுவித்ததும், கூடற்கு ஒட்டிய குறியும்-அவனைச் சென்று கூடுதற்கு நியமித்த காலமும் இடமும், சொன்னாள்-குணவதி கூறினாள், ஒள்ளிழை-ஒள்ளிய இழையணிந்த அமுதமதி, உவப்புற்றாள்-மகிழ்ச்சி மிகுந்தாள். எ-று.
"நன்றோ நவில்க நின்கருமம்" என்று வினவினாட்கு நீட்டியாது விடையிருப்பாள் "பட்டது நலம்" என்றாள்; காண், அசை நிலை. மா, அசை. அழலுதல், வெகுளுதல்; இட்டம், வடசொற்றிரிபு. ஆங்கு என்பது உரையசை. குறியினைத் தானே குறித்தாளாதலின், அட்டபங்கற்கேயன்றி அமிர்தமதிக்கும் தோழி கூறினாள். உற்றாள், உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த முற்றுவினை.
----------
அமிர்தமதி அரசன்பால் முனிவு கொண்டொழுகுதல்
தனிவயி னிகுளை யானை தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து சென்றாள்
முனிவினை மன்னன் றன்மேன் முறுகின ளொழுகு முன்போல்
இனியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே. 116
உரை:- கனிபுரை கிளவி-கனிபோலும் சொற்களையுடைய அமுதமதி, இகுளை-தோழியாகிய குணவதிபால், தரப்படு யானைச்சாரனோடு-கூட்டப்பட்ட யானைப்பாகனாகிய அட்டபங்கனுடன், தனிவயின்-தனியான ஓரிடத்தே, காமங்கனிந்து-காமவேட்கை சிறந்து, கலந்தனள் சென்றாள்-புணர்ந்துடனொழுகிவருபவள், மன்னன்தன்மேல்- மன்னனாகிய யசோதரன்பால், முனிவினை முறுகினள் ஒழுகும்-வெறுப்புமிகக் கொண்டொழுகலுற்றாளாக, முன் போல் இனியவள் அல்லள் என்கொல் என-முன்போல் இவள் நம்பால் இன்புறுகின்றாளில்லை இதற்குக் காரணம் யாதாகும் என்று, மனத்து எண்ணினான்-யசோதரன் தன் மனத்துக்குள்ளே சிந்திக்கலானான் எ-று.
தனிவயின், தோழி குறித்த குறியிடம். இகுளைதரப்படு யானைச் சாரனோடு தனிவயின் காமங் கனிந்து கலந்தனள் சென்றாள் என இயைத்துக்கொள்க. காமங்கலந்தனள் கனிந்துசென்றாள் என்றே கொண்டு காமப்புணர்ச்சி பெற்று அதன்கட்கன்றி யொழுகுபவள் என்றுரைப்பினுமாம். சாரன்பால் மனத்தெழுந்த அன்பு சென்றமையின், அரசன்பால் வெறுப்பு மிகுவாளாயினாளென வறிக. அம்மிகுதி அரசனுளத்தே ஐயத்தை யெழுப்பினமையின் "முன்போலன்பில ளென்கொல்" என்றான், இதனைப் பிறர்பால் கூறி யாராயாது தன்மனத்தகத்தே யெண்ணி ஆராயத் தொடங்கினா னென்பார் "மனத்தெண்ணினான்" என்றார்.
----------
மன்னன் பொய்யுறக்கம்கொண்டு அமுதமதியின் களவொழுக்கினைக் காண்டல்
அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லென்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. 117
உரை:- அவை அரசு விடுத்து- அரசவைக்கண் வந்திருந்த அரசர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லவிடுத்து, மெய்யால் அறுசினன் ஒப்ப-புறத்தே மனத்துட் சிறிதும் சினம் இல்லான்போலக் காட்டி, உரையலன்-யாவரோடும் ஏதும் சொல்லாடலின்றி, அமளிதன்மேல்-தன்னுடைய படுக்கையின்மேல் கிடந்து, மன்னன் உறங்குதல் புரிந்த போழ்து- மன்னனாகிய யசோதரன் பொய்யுறக்கங் கொண்டிருக்கையில், விரைகமழ் குழலி-மனம் கமழும் கூந்தலையுடைய அமிர்தமதி, மேவி-அவனருகேபோந்து, மெய்த்துயில் என்று-மெய்யாகவே உறங்குகின்றான் என்று கருதிக் கொண்டு, காமத்துறையினள்-காமவின்பந்துய்க்கும் களவு நெறியினளாய், பெயர்ந்து-பள்ளியறையினின்றும் நீங்கி, தோழி குறிஇடம் துன்னினாள்-தோழிகுறித்த குறியிடத்தை யடைந்தாள் எ-று.
அமிர்தமதியின் ஒழுகலாற்றிற் பிறந்த ஐயம் நாளுக்குநாள் மிகுந்து யசோதரன் நெஞ்சை யலைத்தமையின், அரசவைக்கண் இருந்து செய்யும் முறைமைக்கண் கருத்துச் செல்லாமையின், "அரசவை விடுத்து" என்றும், விட்டானாயினும், பிறர் அயிராமைப் பொருட்டு, வெகுளியைப் புறத்தே காட்டாதொழுகின னென்றற்கு, "மெய்யாலறு சினனொப்ப" என்றும் கூறினார். அறுசினன் என்பது, "அருங்கேடன்"1 என்றாற் போல்வது. பொய்யுறக்கங்கொண்டா னென்பார். உறங்கினானென்னாது, "உறங்குதல் புரிந்த போழ்து" என்றார்; "புரிந்த" என்றதனால், காண்பவர் மெய்யாகவே உறங்கு கின்றானென உணரத் தோற்றினா னென்பது பெற்றாம். மணங் கமழும் குழலியாதலின், அமிர்தமதி வந்து தான் உறங்குதலைக் கண்டேகுவதைக் கண்ணாலன்றி மனத்தா லறிந்துகொண்டமை தோன்ற, "விரைகமழ் குழலி" யென்றார். களவுக் காமத்துறையில் ஒழுகுகின்றாளாதலின், உடனே அவ்விடத்தினின்றும் நீங்குவது தோன்ற, "பெயர்ந்து" என்றும், "குறியிடம் துன்னினா"ளென்றும் கூறினார்.
- -------
1. குறள். 210.
யசோதரன் அவளைப் பின்தொடர்ந்து சென்று அக்குறியிடத்தே மறைந்து நிற்றல்
துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி
மயலுழை* வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவள்தன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். 118
-------
*(பாடம்) மயிலுழை.
உரை:- மன்னன்-அமிர்தமதி செல்லக்கண்ட யசோதரன், துயிலினை யொருவி-தான்கொண்டிருந்த பொய்யுறக்கத்தை விடுத்து, சுடர்க்கதிர்வாள்-சுடருகின்ற ஒளிக்கதிர்களை வீசும் வாட்படையை, கையேந்தி-கையில் ஏந்திக் கொண்டு, மயல் உழைவழி-மயங்கியோடுகின்ற மானொன்றைப் பின்பற்றி, செல்கின்ற வாள் அரிஏறு போல-செல்லுமொரு சிங்கவேறு போல, கயல்விழியவள்தன் பின்னே- கயல்மீன் போலும் கண்களையுடைய அமிர்தமதியின் பின்னே,கரந்தனன் ஒதுங்கி-மறைந்து சென்று.ஆங்கண்- அக்குறியிடத்தே, செயலினையறிதும் என்று-நிகழும் நிகழ்ச்சியைக்காண்பாம் என்று நினைத்துக்கொண்டு, செறிந்தனன் மறைந்து நின்றான்-யாரும் அறியாவகையில் ஒடுங்கி மறைந்து நின்று நோக்கினான் எ-று.
நிகழ்ச்சியினைக் காண்டல் வேண்டு மென்றே பொய்யுறக்கங் கொண்டானாதலின், அமுதமதி செல்லக்கண்டதும் அதனை யொருவினான் எனவறிக. உழை, மான், காமத்துறையினளென்றாராகலின், அதற்கேற்ப, அவட்கு மயங்கிய மானை உவமம் கூறினார். வாள் அரியேறுபோல என்ற உவமையாற்றலால், யசோதரன் மிக்க சினத்துடன் செல்கின்றமை பெற்றாம். பிறர் காண்பரென்ற அச்சத்தால் அடிக்கடி சுற்றுமுற்றும் பரக்க விழித்துப் பார்த்துக்கொண்டே சென்றாளென்றற்கு, அமிர்தமதியைக் "கயல் விழியவள்" என்றார். தன்னிருப்புப் பிறர்க்குத் தெரியாமல், பிறர் மெல்லப் பேசுவதும் தான் நன்கு கேட்கக்கூடியதாயுள்ள இடத்தையடைந்து மறைந்திருந்தானாகலின், "செறிந்தனன்" என்றார்.
----------
அமிர்தமதி தாழ்ந்துவரக்கண்ட அட்டபங்கன் அவளைத் துன்புறுத்தல்
கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல ஈர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்
புடைபல புடைத்துத் தாழ்ந்த பொருளிது புகல்க என்னாத்
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட் டானே. 119
உரை:- கடையன் - கீழ்மகனாகிய அட்டபங்கன் எதிர் நோக்கிவந்து, அக்கமலப்பாவை - திருமகளைப்போல்வாளாகிய அவ்வமிர்தமதியின், கருங்குழல் கையால் பற்றி - கரிய கூந்தலைத் தன்கையால் பற்றி, இடைநிலம் செல்ல ஈர்த்திட்டு, அவ்விடத்திற்கும் குறியிடத்திற்கும் இடைக்கிடந்த நிலத்தில் அவளை இழுத்துக்கொண்டு சென்று, துடியிடை துவள நிலத்திடை வீழ்த்து - உடுக்கைபோலும் இடையினையுடைய அவளை நிலத்தில் தள்ளிக்கிடத்தி, இருகையினாலும் ஓச்சி - இருகைகளாலும் ஓங்கி, புடை - வலமிடமாகிய இருகன்னத்திலும், பல புடைத்து - பலமுறையும் அடித்து, தாழ்த்த பொருளிது புகல்க - காலந்தாழ்ந்துவந்த காரணத்தைச் சொல்லுக, என்னா - என்று, துகைத்திட்டான் - உதைத்து வருத்தினான் எ-று.
"கமலப்பாவை" யைக் காண்பவன், அன்புடன் வழிபட்டு அவளருளைப்பெறாது அவளருமையு முணராது வருத்துதல் பற்றி, அட்டபங்கனைக் "கடையன்" என்றும், கமலப்பாவையாயினும் கடையனைச் சார்வாளேல், இத்துன்பத்தையே யடையற்பாலள் என்றற்கு, "கமலப்பாவை" என்றும் கூறினார். குறித்த காலத்து வாராது தாழ்த்தமையின், குறியிடத்தினீங்கி வெளியே போந்து அவளது வருகை நோக்கிச் சினந்திருந்தவன், கண்டமாத்திரத்தே சீறிப்பாய்ந்து அவள் கூந்தலைப்பற்றி ஈர்த்துக்கொண்டு அக்குறியிடத்துக்குச் சென்று, நிலத்திற் றள்ளிப் புடைத்து உதைத்து வருத்தினானென்பதாம். துடியிடை, சுட்டுமாத்திரையாய் நின்றது. இதுபோலும் வருத்தம் எவராலும் எப்போதும் அவ்வமிர்தமதிக்கு நிகழ்ந்த தின்மையின், "துவளத் துகைத்திட்டானே" என ஆசிரியர் வருந்திக் கூறுகின்றார். புடை, கன்னம், பொருள், காரணம்.
---------
அமிர்தமதி ஆற்றாது அயர்தல்
இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல
வெருளியான் மிதிப்புண் டைதே* விம்மிய மிடற்ற ளாகித்
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்ட
மருளியான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். 120
--------
*(பாடம்) டைய, டையோ.
உரை:- இருளினால் அடர்க்கப்பட்ட-இருட்கூட்டத்தால் நெருக்கப்பட்ட, எழில்மதிக் கடவுள்போல-அழகிய முழுமதியம் போல, தேவி-அரசமாதேவியாகிய அமிர்தமதி, வெருளியால் மிதிப்புண்டு-அட்டபங்கன்பாற்சென்ற கழி காதலால் நெஞ்சடைப்புண்டு, ஐது விம்மிய மிடற்றளாகி- மெல்லிதாக வீங்கிய கழுத்தினையுடையளாய், தெருள்கலாள்-தன் தீயொழுக்கத்தின் தீமையை யுணராளாய், உரையுமாடாள்-ஒருசொல்லும் சொல்லாது, சிறிது போது அசைய-சிறிது நேரம் அயர்ந் திருந்தாளாக, கண்ட- பார்த்த, மருளியான் - மனமருட்கையுடையனான அட்டபங்கன், மயங்கி-தான் ஆராயாது வருத்தியதற்கு மனம் வருந்தி, மாதர் மலரடி-அமிர்தமதியின் தாமரைப்பூப் போன்ற பாதத்தை, சென்னிவைத்தான் - தலையில் வைத்து வணங்கினான் எ-று.
“இருளினால் அடர்க்கப்பட்ட எழின்மதிக் கடவுள் போல” என்ற உவமம், வெருளியால் மீதூரப்பட்ட அமிர்தமதியைச் சுட்டி நின்றதென வறிக. வெருளி-கழிகாமத்தால் பிறக்கும் மனமயக்கம். மனத்தே அவன்கட் சென்ற கழிகாமத்தால் வேறுபடாளாயினும், அவன்தன் குழல்பற்றி யீர்த்துப் புடைத்து வீழ்த்தித் துன்புறுத்திய தாற்பிறந்த ஆற்றாமையால் மிடறுவிம்மி அசைவு கொண்டாள் என்க. ஐது, சிறிது. ஆற்றாது பெருவருத்தமும் நோயுமெய்தற்பாலாள், வெருளி மீதூர்ந்தமையின், சிறிதே விம்மினாள் என்பார்,”ஐதே விம்மிய மிடற்றளாகி” என்றும், இத்துணைத்துன்பமெய்தியும் தன் தவற்றினை யவள் உணர்ந்தில ளென்பார், “தெருள்கலாள்” என்றும், தன் வருத்தத்தைப் புலப்படுத்தியோ, அவனோடு காதலன்பால் புலந்தோ ஏதேனு மொன்றுகூறின், அவன் வேறுபட்டு நீங்குவனென்ற அச்சத்தால் வாளாவிருந்தா ளென்றற்கு, “உரையுமாடாள்” என்றும், அவனை வணக்கும் வாயிலாதலின் “சிறிது போதசைய” என்றும் கூறினார். நெடிதசைந்திருப்பின், அட்டபங்கன் அஞ்சி அவ்விடத்தினின்றும் ஓடிவிடுவனாதலின், "சிறிது போது" என்றார். தான் செய்த துன்பத்தையும், அதனால் அமிர்தமதி ஆற்றாது அசை வுற்றதும் நினைந்து கண்டு, மனம் மருண்டு, தெளிந்த அறிவின்மையின் அவள் காலில் வீழ்ந்து வணங்கினான் என்றுணர்க. வணங்கக் கண்டதும் அவள் அசைவு நீங்கி அவன்பால் ஆராக்காதல் கொண்டாளென்பார், "மாதர்" என்றார். சென்னிவைத்தவன், வணங்கினான்.
---------
அமிர்தமதி தான் வாழ்த்து வந்தமைக்குக் காரணம் கூறுதல்
தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லன் மேதினிக் கிறைவன் றன்னோ
டையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய்
வெய்யபா வங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்த தென்றாள். 121
உரை:- தையலாள்-புணர்ச்சி வேட்கையளாகிய அமிர்தமதி, தேறி-அசைவுநீங்கி, மகிழ்ந்து-அட்டபங்கன் செயல் கண்டு மனம் மகிழ்ந்து, மெல்லநோக்கி-தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்து, ஐய-ஐயனே, வெய்ய நீ- என்னால் விரும்பப்பட்ட நீ, முனிவு செல்லல்-யான் காலம் தாழ்த்து வந்தது குறித்து வெறாதேகொள், மேதினிக்கு இறைவன் தன்னோடு-மண்ணரசனான யசோதரனுடன், அரசவை-அரசர் வந்திருக்கும் அவைக்கண், ஆசனத்தின் உம்பர்-அரசுகட்டிலின் மேல், இருந்து- திருவோலக்கமிருந்து, வெய்ய பாவங்கள் செய்தேன்-நீ வெம்மை கொள்ளத்தக்க குற்றங்களைச் செய்துவிட்டேன், விளைந்தது-நிகழ்ந்தது இதுவே, விளம்பலன்-இதனை முன்னரே தோழிவாயிலாகத் தெரிவியா தொழிந்தேன், என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன், என்றாள்-என்று சொன்னாள் எ-று.
தையலென்னுஞ்சொல் புணர்த்தலென்னும் பொருட்டு மாதலின், புணர்ச்சி வேட்கையுடையாளென்றுரைக்கப்பட்டது. "மெல்ல நோக்கினாள்," தான் மெய்யே அசைவுற்றுத் தெளிவுறுவதுபோல அட்டபங்கன் காணும்பொருட்டு. அட்டபங்கனால் அமிர்தமதியுற்ற வருத்தம் திருட வந்தோனைத் தேள்கொட்டியது போல்வதாகலின், மெய்யே யசைவுற்றாள் என்று கோடல் அவட்குப் பொருந்தாமை காண்க. தான் இழைத்த துன்பத்தால் தன்பால் முனிவுற்றுத் தன்னை வெறுத்து ஒறுப்பாளோ என அஞ்சி யலமந்து நோக்கும் அட்டபங்கற்கு அவ்வச்சத்தைப் போக்குங் கருத்தினளாதலின், "மகிழ்ந்து" நோக்கினா ளென்றார். வெய்ய நீ என்புழி, வெய்ய வென்பது வேண்டற்பொருட்டாய வெம்மை யென்னும் உரிச்சொல்லடியாகப்பிறந்த பெயரெச்சம். "தாழ்த்த பொருளிது புகல்க" (119) என்று வெகுண்டு புடைத்தானாதலின், அவ்வெகுளி நீங்க, "முனிவு செல்லல்" என்றாள். தன்னை வெறுத்தஞ்சி நீங்காமற் பொருட்டு இது கூறினா ளென்றுமாம். "மேதினிக்கு இறைவன்" என்றாள், தனக்கு அவன் அன்னனல்ல னென்பது தோன்ற. அட்ட பங்கன் அரசவைக்கண் அரசரிருக்கும் திருவோலக்கக் காட்சியினைக் கண்டறியாதவனாதலின், அவற்கு அது விளங்க, "ஆசனத்தின் உம்பர் அரசவை யிருந்து" என்றாள். கண்டாய், முன்னிலையசை. அவன் தன்னைத் துன்புறுத்தியது நினைந்து வருந்தாமைப்பொருட்டு, "யான் செய்தன பெருங் குற்றங்கள், அவற்றிற்குத் தகவே நீ ஒறுத் தனை" யென்பாள், "வெய்ய பாவங்கள் செய்தேன்" என்றாள்; அட்டபங்கனுடன் கூடி அவனிருக்குமிடத்தில் இருக்கும் இருப்புத் தனக்குப் புண்ணியப் பயனாகக் கருதுவது தோன்ற இது கூறினா ளென்றுமாம். விளைந்தது இதுவாயினும் இதனை முன்னறிந்து தோழிவாயிலாகத் தெரிவிக்கவேண்டுவது நெறியாகவும், அது செய்யாது குற்றப்பட்டேனென்பாள், "விளம்பலன்" என்று கூறினாள். இதனைக் குணவதிக்கும் உரைத்திலள், உரைத்திருப்பின் அவளாயினும்போந்து விளம்பியிருப்பாளென்றற்கு இது கூறினாளென்றுமாம்.
--------
அமிர்தமதி தன் அயராக்காதலை உரைத்தல்
பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரு மிவண முண்டோ* 122
----------------
(பாடம்)* பவருமுண்டோ.
உரை:- பொற்பகம் கழுமி-தேவர்வாழும் அழகுமிக்க பொன்னுலகத்தே பொருந்தியிருந்து,யாவும் புரந்து-பல் வகையுயிர்களையும் காத்து, அரந்தை இனிது தீர்க்கும் கற்பகம்-அவற்றிற்குண்டாகும் துன்பத்தைத் தீர்த்து இன்பம் நிறைவிக்கும் கற்பகமரத்தை, கரந்து கண்டார்-மறைந்து சென்று கண்ணிற்கண்டு கையுறப்பெற்றவர், கையகன்றிடுதலுண்டோ-அதனைக் கைவிட்டு விடுவரோ? விடாரன்றே. எற்பகம் காதல்கொண்ட எனக்கு-உடல் முழுதும் நின்பாலெழுந்த காதலே நிரம்பியுள்ள எனக்கு, காளை-காளை போல்வாய், இனி-இப்பொழுது, இவ்வணம்-இவ்வுலகத்தே, நின்னின்-கற்பகம் போல் கிடைத்துள்ள நின்னைக்காட்டிலும், வேறு ஓர் துணைவரும் உண்டோ-வேறே சிறந்த காதலர்தாமும் உண்டோ. சொற்பகர்ந்தருளு- நீயே நினைந்து ஒருசொல் சொல்லியருள்வாயாக எ-று.
கற்பகமரம் தேவருலகத்திருப்பதாகலின், பொற்பகம், தேவர் வாழும் பொன்னுலகமாயிற்று. அரந்தை, துன்பம். அதனை இனிது தீர்த்தலாவது, அதனை அறப்போக்கி, அதற்கு மாறான இன்பத்தை நிறைவித்தல். பெறற்கரிதாதல் பற்றி "கரந்து கண்டார்" என்றும், அதனைக் கைப்பற்றித் தமக்கே உரிமை செய்துகொள்வதன்றி இழந்துவிடுதற்கு எவரும் விரும்பாரென்றற்கு, "கையகன்றிடுதலுண்டோ" என்றும் கூறினாள். எனவே, தானும் அவனைக் கைவிடாமையினை அமிர்தமதி வற்புறுத்தியவாறும், அதற்கு ஏதுவாக, அட்டபங்கன் தான் துன்புறுத்தியதுகொண்டு அவள் தன்னைக் கையகன்றிடுவாளென அஞ்சியவாறும், அதனை இவ்வமுதமதி யுணர்ந்து கொண்டவாறும் பெற்றாம். என்பு, ஆகுபெயர். காதல், காமவேட்கை. "காதல்மிக்குழிக் கற்றவும் கைகொடாவாதல்"1 என்புழிப்போல. காளை, அண்மைவிளி. இவண் என்பது அம் முப்பெற்றது. "சொற்பகர்ந்தருளு" எனக் குறையிரந்து நின்றாள். அவனது காதலுரையினைக் கேட்டற்கெழுந்த காமவெறியால். வேறு என்பதனைத் துணைவர்மேலேற்றி, ஓர் என்பதனைச் சொன் மேலேற்றலுமொன்று. ஓகாரம், வினா,.
- -------------
1 சீவக. 1639.
இனி, வெற்பகங்கொண்ட காதலெனக்கு என்று கொண்டு, மலைபோலெழுந்த காதலையுடைய வெனக்கு என்றுரைப்பினுமமையும். கண்ட வேந்தன் உள்ளத்தே இருவரையும் கோறற்கு உணர்வெழுந்து அடங்குதல்
என்றலு மேய* மன்னன் எரியெழ விழித்துச் சீறிக்
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
ஒன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது† கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தெளிந்துணர் வெழுந்த தன்றே. 123
------
(பாடம்)*மேனை.
உரை:- என்றலும்-என்று அமிர்தமதி அட்டபங்கற்கு உரைத்ததும், மேயமன்னன்-ஆங்குப் போந்துநின்று கேட்ட மன்னன், சீறி-வெகுண்டு, எரிஎழ விழித்து-கண்ணில் தீப்பொறி பறக்க நோக்கி, இவர்தம்மை-இவ்விருவரையும் வாள்வாய் கொன்று-வாட்படையால் கொலைசெய்து, கூற்றுண இடுவல்-யமனுக்கு இவர் உயிரை உணவாக்குவேன், என்று ஒன்றினன்-என்று கொல்லற்கும் ஒருப்பட்டானாக, கரத்துவாாளும்-கையிற்பற்றியிருந்த வாட்படையும், உள்ளத்து உணர்ந்தது-அவன் உள்ளக் கருத்தை, உணர்ந்தது-உணர்ந்து கொல்லுதற்கு மேலெழுந்தது, இடைசென்று விலக்கி-இடைப்புகுந்து அதனை மறித்து, நின்று-கீழே விழாது நிற்குமாறு, ஓர் தெளிந்துணர்வு-ஒருதெளிந்த வுணர்வு, எழுந்தது-பிறந்து அக்கொலைவினையைத் தவிர்த்தது எ-று.
காரியம், காரணமாக உபசரிக்கப்பட்டது. தொடக்கத்தே இருவரையும் கொல்லற்கெழுந்த சினத்தோடு கூடிய உணர்வினால் வாளை உறையினின்றும் கழித்து ஓச்சினான். இடையிலெழுந்த நல்லுணர்வால் தடைப்பட்டு அவ்வாளை உறையிடைச் செருகிக் கொண்டானென்பதாம். உள்ளத்துணர்ந்தது உணர்ந்தது என்புழி, ஒன்று பெயர், ஒன்று வினைமுற்று. தெளிந்த உணர்வு என்புழிப், பெயரெச்சத்தகரம் விகாரத்தால் தொக்கது. நிற்ப, நின்றெனத் திரிந்து நின்றது.
----------
தெளிந்துணர்வின் திறம்
மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்றுண்
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளின்
தீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். 124
-------------
(பாடம்) † துணர்வது.
உரை:- மாதரார் எனையரேனும்-மகளிர் எத்துணைக் கொடிய குற்றம் புரிந்தாராயினும், வதையினுக்கு உரியர் அல்லர் - கொல்லுதற்கு உரியவராகார், பேதை இவனும் - பேதையாகிய இவ்யானைப்பாகனும், பெண்ணின் அனையன்- ஆண்மகனாயினும் பெண்மகளையே யொப்பன், பிறிதும் ஒன்று உண்டு - வேறொன்றும் உண்டு, ஏதிலார் மன்னர் - பகைவராய்வந்த வேந்தருடைய, சென்னி இடுதலுக்கு உரியவாளின் - முடியைத் துணித்தற்குரிய வாளினால், தீதுசெய் சிறுபுன்சாதி - குற்றமே செய்கின்ற அறிவின்மையையுடைய அற்பவினத்தாரை, சிதைத்தலும் திறமன்று - கொல்வது மறவேந்தர்க்குத் தகுதியன்று, என்றான் - என்று நினைத்தான் எ-று.
மிக *அத்துணைத் கொடிய குற்றம் புரிந்து அதனால் உயிர் இழத்தற்குரிய தீமையுடையராயினும் என்பான், "ஏனையரேனும்" என்றான். வதை, கொல்லுதல். பிறர்க்குப் பொருளாயினாளைக் காதலித் தொழுகுதலின், அட்டபங்கனைப் "பேதைதான் இவனும்" என்றும், பிறன்மனை நயவாமை ஆண்மையாதலின், நயக்கு மிவன்பால் ஆண்மையில்லை யென்றதற்கு "பெண்ணின் அனையனே" என்றும் தனக்குள் கூறிக்கொண்டான். பகைவேந்தர், ஏதிலாராயினரேயன்றி, ஆண்மையிலும் மறத்திலும் குறைந்திலராலின், அவரைத் தீண்டற்குரிய இவ்வாள், சிறுமையும் புன்மையும் சேரக்கொண்டுள்ள இவரைத் தீண்டிக் கொல்லுதல் அதற்குத் தீதாம் என்பான், "சிதைத்தலும் திறமன்று" என்றான். சிறுமை, அறிவின்மை. புன்மை, ஈண்டுக் கீழ்மை மேற்று..
---------
வேந்தன் மகளிர் போகத்தை வெறுத்துச் சென்று தனித்திருந்து நினைத்தல்
இனையன பலவுஞ் சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற்
புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே
கனவரை யனைய மார்பன் கடிகம ழமளி யேறித்
தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான். 125
உரை:-கனவரை யனைய மார்பன் - பெரிய மலைபோன்ற மார்பையுடைய வேந்தனான யசோதரன், இனையனபலவும் சிந்தித்து - இவை போல்வன பலவும் எண்ணி, இழிப்பொடு பழித்தும் - இருவரையும் இகழ்ந்தும் பழித்தும் அமையாது, வளைபுனையவர்கள் போகம் - வளையணியும் மகளிரது இன்பத்தை, நெஞ்சில் புறக்கணித்து - மனத்தால் அருவருத்து வெறுத்து, மீண்டு - திரும்பத் தன் பள்ளியறைக்குப் போந்து, கடிகமழ் அமளி ஏறி - மணங்கமழும் அணைமீது கிடந்து, தனி முனி களிறு போல - தனித்துச் சினங்கொண்டிருக்கும் யானைபோல, தான் நினைவெய்துகின்றான் - தானே தனக்குள் எண்ணமிடலானான். எ-று.
முன்பாட்டிற் கூறிய கருத்துப்போல்வன பலவற்றை ஒன்றன் மேலொன்றாக நினைந்தமையின், அவன் உள்ளம் கொலைவினைமேற் செல்லாதாயிற்று. அந்நினைவுகட்கிடையே அமிர்தமதியின் செய்கையை இழித்தும், அவளது மனப்புன்மை காணாது அன்புற்றொழுகிய தன்னைப் பழித்தும் தனக்குள்ளே நொந்துகொண்டானென்பார், "இழிப்பொடு பழித்தும்" என்றும், அதுவே யேதுவாக ஏனையெல்லா மகளிரது இன்பத்தையும் நெஞ்சில் வெறுத்தான் என்பார், "புனைவளையவர்கள் போகம் நெஞ்சிற் புறக்ககணித்திட்டு" என்றும், கூறினார். "புனைவளையவர்கள்" என ஏனையெல்லா மகளிரையும் புறக்கணித்து, அமிர்தமதியை விலக்கி வேறு மகளிரை மணத்தற்கென ஓர் எண்ணம் எழுந்தமை தோன்ற நின்றது. புனைவளையவர் என்பதனை வளைபுனையவர்கள் எனமாறுக. இதனாற்பயன், வளை முதலியன புனைதலால் பிறக்கும் அழகேயன்றி மனத்தூய்மையாகிய அழகிலர் என்பது. தனியென்னும் வினை முதனிலை யெச்சப் பொருட்டு; "வரிப்புனை பந்து" என்புழிப்போல.
-----------
காமத்தால் விளையுங்கேட்டினை நினைத்தல்
எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்
மண்ணியல் புகழை மாய்த்து* வருபழி வளர்க்கு மானத்
திண்மையை யுடைக்கு மாண்மை திருவொடு சிதைக்குஞ் சிந்தை
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படு காம மென்றான். 126
------
(பாடம்) * மண்ணிய புகழை மாய்க்கும்.
உரை:-இக்கடைப்படுகாமம் - இந்த இழிவான காம வேட்கையானது, எண்ணமது அலாமை பண்ணும் - நெஞ்சில் நிகழும் எண்ணங்களை நல்லவையாகாவாறு செய்யும், இற்பிறப்பு இடிய நூறும் - குடிப்பிறப்பென்னும் குன்றம் இடிந்து துகளாமாறு செய்யும், மண்ணியல் புகழை மாய்த்து - மண்ணுலகத்தே நிற்கும் புகழைக் கெடுத்து, வருபழி வளர்க்கும்- அது நின்றவிடத்தே வந்தடையும் பழியை மிகுவிக்கும், மானத்திண்மையையுடைக்கும் - மானமாகிய திண்மை நிலையைத் தகர்த்தெறியும், ஆண்மை திருவொடு சிதைக்கும்- ஆண்மையினையும் செல்வத்தினையும் அழித்து விடும், சிந்தை கண்ணொடு கலக்கும் - மனத்தையும் கண் முதலிய பொறிகளையும் நிலைகலங்கச் செய்யும், என்றான்.- என்று எண்ணினான் எ-று.
ஒருவர்க்குளதாகும் கேட்டுக்கு முதற்காரணம் அவர் நெஞ்சினிகழும் எண்ணமே யாதலின், அதனையே முதற்கண்ணெடுத்து, இக்காமம் அவ்வெண்ணம் நல்லெண்ணமாகாவாறு செய்யும் என்பார், "எண்ணமதலாமை பண்ணும்" என்றார்; "நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்"1 என்றும், "மறந்தும் பிறன்கேடு சூழற்க"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. "இடிய நூறும்" என்றதனால், இற்பிறப்பாகிய குன்றம் என்று கொள்க. நூறுதல், பொடியாகச் செய்தல். ஒருவர் செய்யும் புகழுக்கு அவரன்றி அவர் வாழிடமாகிய மண்ணுலகு ஆதாரமாதலின், "மண்ணியல் புகழ்" என்றும், பழி பாவம் வந்தாலன்றி, அப்புகழ் மாயாதாகலின், "அப்புகழ் நின்ற விடத்தே வந்து நிற்கும் பழி" யென்றார். ஒடுவினை ஆண்மைக்கும் கூட்டுக. காமம் கதுவிய மனத்தார்க்கு அதனால் நுகரப்படும் இன்ப நினைவும் அதற்கு அரணும் ஆக்கமாவனவுமன்றிப் பிற நலந் தீங்கு காணும் நல்லாரய்ச்சி நிகழாமையின், "சிந்தை கலக்கு" மென்றும், பொருள்களின் உண்மை நிலையைக் காணும் கண்ணறிவும் சொல்வார் சொல்லின் தூய்மையும் நலமும் கேட்கும் செவியறிவும் பிறவும் நிகழாமையின், "கண்ணொடு கலக்கும்" ‡என்றும் கூறினான். ஒடு, எண்ணொடு. அமிர்தமதிக்கும் அட்டபங்கற்கும் நிகழும் காமக் கூட்டம் இக்குற்றமனைத்தையும் விளைவிக்குமாறு காண்க.
- -----------
1. குறள் 320. 2. குறள் 204.
‡"காமத்திற்குக் கண்ணில்லை" "Never was owl more blind than a lover" எனவரும் பழமொழிகளைக் காண்க.
காமத்தைத் துறக்கத் துணிதல்
உருவினொ டழகு தானு மொளியமை குலனும் பேசின்
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீரிற்*
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்யுந்+
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான். 127
(பாடம்)*சீறிற். +செய்து.
உரை:- உருவினொடு அழகுதானும் - நிறமும் அழகும், ஒளியமை குலனும் - புகழ்பொருந்திய குடிப்பிறப்பும், பேசின் - ஆராயுமிடத்து, திருமகளனைய மாதர் இவளையும் - திருமகளையொப்பவளாகிய இவளையும், சிதைய - தன்மனம் கெடும்படிச்செய்து, சீர் இல் கருமலி கிருமியன்ன - சிறப்பில்லாத பலபிறப்புக்கட்குரித்தாகிய புழுவையொத்த, கடை மகற்கு அடிமைசெய்யும் - கீழ்மகனொருவனுக்கு அடிமைப்பணி செய்யப்பண்னும், துருமதி மதனன் செய்கை - தீய புத்தியையுடைய காமன் சேட்டையை, துறப்பதே - துறந்து நீங்குவதே, சிறப்பது - மேன்மை, என்றான் - என்று நினைத்தான் - எ-று.
உரு, நிறம். ஈண்டு மந்தளிர்போலும் நிறமென வுணர்க. உரு முதலியவற்றால் அமிர்தமதி திருமகளை யொப்பாள் என்பது. சிதைத்தென்பது சிதைய வெனத் திரிந்து நின்றது. பல்வகைப் பாவங்களை யுடைமைக்கு அட்டபங்கனுற்ற குட்டநோய் அறிகுறியாதலின், அவன் பல பிறப்புக்கட்குரியனாதல் பெறப்படுதலின், "சீரில் கருமலி கிருமியன்ன கடைமகன்" என்றான். இழிவு கருதிக் "கிருமி" யென்றான். செய்யும், பிறவினைப்பொருட்டு. துருமதி, வடசொற்றிரிபு; இது துன்மதி யென்றும் வழங்கும். பெண் மக்களில் மிகச் சிறந்தாளொருத்தியை ஆண்மக்களுள் இறப்பவும் கடைப்பட்டானொருவனை விரும்பி யவற்கு அடிமையாக்கலின், காமனை, "துருமதி மதனன்" என்று இகழ்ந்தான். ஏகாரம், தேற்றம்.
--------------
அரசபோகத்தை வெறுத்தல்.
மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணிய லனைய தன்றோ* பெயர்கள் மற்றிவர்கள் யாமும்
கண்ணிய விவர்கள் தம்மைக் கடப்பதே கரும மென்றான். 128
----------
(பாடம்)* லதுவதன்றோ.
உரை:- மண்ணியல் மடந்தைதானும் - மண்ணாகிய அழகிய நிலமகளும். மருவினர்க்கு உரியளல்லள் - தன்னைச்சேர்ந்தவர்க்கே உரியவளல்லள், புண்ணியமுடைய நீரார் புணர்ந்திட - புண்ணியமுடையோர் போந்தவழி, புணர்ந்து - அவரையடைந்திருந்து, நீங்கும் - பின்பு அவர் மாட்டும் தங்காது நீங்குவாள், பெண் இயல் - பெண்களின் இயற்கையும், அனையதன்றோ - அத்தன்மைத்தேயாகும். இவர்கள் பெயர்கள் மற்று - இவர்கட்குப் பெயர்வகைதான் வேறு, கண்ணிய இவர்கள் தம்மை - இயல்பால் ஒருதன்மையராகக்கருதப்படும் இவர்களை, யாமும் கடப்பதே - நாமும் துறந்து போவதே, கருமம் - செயற்பாலது, என்றான் - என்று தனக்குள்ளே முடிவுகொண்டான். எ-று.
தேற்றேகாராம் விகாரத்தால் தொக்கது. தானும்; உம்மை, சிறப்பு; எச்சமெனினுமாம். உரிமை, உடையானோடு உடனிருந்து உடனழிதல், புண்ணியமுடையாரைப் பொருந்தி அவர்பால் அப் புண்ணிய மிருக்குந்துணையும் இருந்து, அது புலர்ந்தபின் அவரை விட்டு நீங்குதலின், "புண்ணியமுடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்" என்றான்; "வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மோடும், உற்றதோ ருரிமைய ளல்லள் யாரோடும், பற்றிலள் பற்றினர் பாலள் அன்னதால், முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் ணீர்மையே"1 என்று பிறரும் கூறினர். "பெண்ணிய லனையதன்றோ" என்றான், அமிர்தமதியின் செயலில்வைத்துக் காட்சியளவையிற் கண்டானாகலின். "பள்ளமுதுநீர்ப் பழகினும் மீனினம், வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம், கள்ளவிழ் கோதையர் காமனோடாயினும், உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ" என்றார் வளையாபதியுடையாரும் என வறிக. நிலமகள், பெண்மகள் எனப்பெயரால் வேறுபாடுண்டேயன்றி, இயல்பு ஒத்திருத்தலின், "பெயர்கள் மற்றிவர்கள்" என்றான். கடத்தல், துறத்தல்.
- ------------
1 சூளா. முக்தி.21.
மறுநாள் யசோதரன் அமிர்தமதியுடன் திருவோலக்க மிருத்தல்
மற்றைநாள் மன்னன் முன்போன் மறைபுலப் படாமை யின்பச்
சுற்றமா யவர்கள் சூழத் துணிவிட* னிருந்த வெல்லை
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள். 129
--------
(பாடம்)* துணிவிலன்; தொல்லவை.
உரை;- மற்றைநாள் - மறுநாள், மறைபுலப்படாமை - முன்னாளிரவிற்போந்து மறைந்திருந்து கண்டதும் பின்பு மனத்தே துறவு கொள்ளக்கருதியதும் பிறரறியாவகை மறைத்துக்கொண்டு, முன்போல் - வழக்கம்போல, இன்பச் சுற்றமாயவர்கள்சூழ - இன்பந்தரும் உரிமை மகளிரும் ஏனை மகளிரும் சூழ்ந்துவர வந்து, துணிவிடன் - அரசவையின்கண், இருந்த எல்லை - அரசுகட்டிலில் வீற்றிருந்தபோது, மா மன்னன்தேவி - பேரரசனாகிய அவனுடைய தேவியான, கற்றைவார் குழலி - கற்றையாய்த் திரண்டு நீண்ட கூந்தலையுடைய அமிர்தமதி, வருமுறை மரபின் - ஓர் அரசியாவாள் வருதற்குரிய முறைப்படியே, மெல்ல வந்து - மெத்தென வந்து, காவலன்பால் இருந்தாள் - அரசன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் எ - று.
முன்நாளிரவில் அமிர்தமதியின் தீச்செய்கையைக் கண்டு மனத்தே மிக்க அருவருப்பை யெய்தினானாயினும், அது வாயிலாக உலகவின்பத்தில் உவர்ப்புக் கொண்டானாயினும், அவற்றை வெளியிடற்குரிய செவ்வி வாயாமையின், “மறை புலப்படாமை” ஒழுகினான் என்றார்; “இகல்வெல்லல் வேந்தற்கு வேண்டும் பொழுது”1 என்பது அரசுமுறை. முன்னாளிருந்த முகமலர்ச்சியும் செவ்வி யெளிமையுமுடையனாயிருந்தானென்றற்கு “முன்போல்” என்றார். முன்போலென வேண்டாது கூறியதன்பயன், அகத்தின்கண் நிகழும் உவப்புக் காய்ப்புக்களை முன்னறிந்து காட்டிவிடும் முதுக் குறைவுடைய முகமும் அது செய்யாதிருந்த செம்மையினை வற்புறுத்தலாம். இயல்பாகவே இன்பத்துறையில் எளியனா யொழுகினானாதலின்,அவ்வின்பச் சுற்றத்தை இப்போது விலக்குவதால் மறை புலப்படுதற் கேதுவாமென்று கருதி, “இன்பச் சுற்றமாயவர்கள் சூழ” வந்தானென்றார். முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவார்க்கு நன்றும் தீதும் ஆய்ந்து நலந்துணிந்து முறை செய்யுமிடமாதலின், அரசவையை, “துணிவிட” னென்றார். அமிர்தமதி பட்டத்தரசியாதல் தோன்ற, “மாமன்னன் தேவி வருமுறை மரபின் வந்து” என்றார். மெல்ல வந்தது, தன்பால் குற்றமுண்மையினைத் தானறிந்து அஞ்சுதலின்; அச்சமுடையார்க்கு விரைந்த நடையில்லை யாதலின். கற்றைவார் குழலி யென்று விசேடித்தார், அவள் தன் முகத்தைப் பலருங் காணக் காட்டாமைபற்றி; இது வெரூஉதல். மெல்ல வென்பதனை இருந்தாளென்பதனோ டியைத்து, முள்மே லமர்வாரைப்போல அச்சமிகுதியால் மெல்ல விருந்தாளென்றலு மொன்று.
- ----------
1.குறள் 481.
அரசன் விளையாட்டயர்தல்
நகைவிளை யாடன் மேவி நரபதி விரலி னின்றே*
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினான் மெய்யை வீழ்த்தித்
திகைகமழ் நீரிற்+ றேற்ற மெல்லியல் தேறி னாளே. 130
--------------
(பாடம்) * விரகினின்றே. + மிகைகமழ் நீரிற்.
உரை : நரபதி-மக்கட்கு அரசனாகிய யசோதரன், நகை விளையாடல் மேவி - இன்ப விளையாட்டை விரும்பி, விரலினின்று மிகை விளைகின்ற - கைவிரலினின்று மேலெழுந்து துவண்டு வீழ்கின்ற, நீலமலரினின் - நீலமலரால், வீசலோடும் - அமிர்தமதியின்மேல் மெல்ல எறிந்ததும், புகைகமழ் குழலி - நறும்புகையூட்டப்பட்ட கூந்தலையுடைய அவ்வமிர்தமதி, சோர்ந்து - ஆற்றாது அறிவு சோர்ந்தாள் போல, பொய்யினால் - பொய்யாக, மெய்யை வீழ்த்தாள் - இருக்கையிலே சாய்ந்தாளாக, திகைகமழ் நீரின் - நாற்றிசையும் மணம் கமழும் பனிநீர் கொண்டு, தேற்ற - உழையிருந்தார் தெளிவிக்க- மெல்லியல் - மெல்லிய இயல்பினளாகிய அவள், தேறினாள்- அறிவு தெளிந்தாள். எ-று.
நரபதி, நரர்க்குப்பதி; அதுவென்னுருபு கெடக் குகரம் விரிந்தது. அரசவைக்கண்ணிருக்கும் வேந்தர் தம் கையில் தாமரை, குவளை முதலிய பூக்கள் வைத்திருத்தல் மரபாதல்பற்றி, யசோதரன் கையில் நீலப்பூ விருந்தமை கூறினார். மிகை, மெல், நீல மலரினின் றெறிதலோடுமென்னாது "வீசலோடும்" என்றார். மெல்லிதாக எறிந்தமை யுணர்த்தற்கு. துவண்ட பூவினிடத்து மென்மைமிக்கு எறிந்தவழிப் புதுப்பூவின் வன்மையுமின்றி மெத்தென்றிருக்குமாதலின், அதனா லொருவர் எத்துணை மெல்லியராயினும் வருத்தமுறுவரால்லராதலின், "சோர்ந்து" என்றும் "பொய்யினால் மெய்யை வீழ்த்தாள்" என்றும் கூறினார். மெய்யை வீழ்த்தாள் என அவளின் மெய்யினைப் பிரித்தோதியதனால், அதனை யவள் வேண்டுமென்றே செய்தமை வற்புறுத்தினாராம். திகைகமழ் நீர், பலவேறு திசையினின்றும் கொணர்ந்த நன்னீர் என்றுமாம். மெல்லியல், சுட்டுமாத்திரையாய் இழித்தற்கண் வந்தது.
------------
அரசன் அவளோடு அசதியாடல்
- புரைபுரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய
இருநிற * மலரினாலின் றிவளுயி ரேக லுற்ற
தரிதினில் வந்த தென்றென் ! றவளுட னசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். 131
----------
(பாடம்) * இருணிற. ! தின்றென்.
உரை:-- புரைபுரை தோறும் - வேர் முதல் நுனிவரையெங்கனும், நீர் சோர்பொள்ளல் - நீர் சுவர்கின்ற துவாரங்களோடு கூடிய, இவ்வுருவிற்றாய - இந்தப் புல்லிய வுருவத்தையுடைத்தான, இருநிறமலரினால் - கரிய நிறமுடைய நீலப்பூவினால், இவள் உயிர் இன்று ஏகலுற்றது. இவ்வமிர்தமதியின் உயிர் இப்போது நீங்கும் நிலையையடைந்தது, அரிதினில் வந்தது - மிகவரிதாக மீண்டுவந்தது, என்று என்று - என்று பலமுறையுஞ்சொல்லி, அவளுடன் அசதியாடி - அமிர்தமதியுடன் விளையாட்டாகப் பேசியிருந்து, விரகினில் - தந்திரமாக, விடுத்து - அரசவையினைக் கலைத்துவிட்டு, மன்னன் - வேந்தனாகிய யசோதரன், வெய்துயிர்த்தனன் இருந்தான் - தனித்ததோரிடத்தே பெருமூச்செறிந் திருந்தான் எ-று.
நீலமலர் நீர்ப்பூவாதலின் அதன் வேர், தண்டு, இலை, காம்பு முதலிய உறுப்பெல்லாம் உள்ளிற் புழையுடைமைகண்டு, "புரை புரைதோறும் நீர் சோர்பொள்ளல் இவ்வுருவிற்றாகிய இருநிறமலர்" என்று விதந்து கூறினான்; இதனால், நீர்வற்றியவழி இதன்பால் வன்மை சிறிது மின்றாகவும், இதனைத் தன்மேல் வீசியது இவட்கு உயிரைப் போக்குவதாயிற்று; இவ்வாறு இவள் உயிர் நீங்கும் நிலை யெய்தியது மெய்யன்று, பொய்ந்நடிப்பு என்று குறித்தானாதலின், "இன்று இவளுயிர் ஏகலுற்றது அரிதினில் வந்தது" என்று அசதி யாடுவானாயினான். என்றென்று என்ற வடுக்குப் பன்மை குறித்து நின்றது. அரசவைக்கண் அசதியாடி யின்புறும் வேந்தன், விரைவில் அதனின் நீங்குவது கூடாமையின், "விரகினில் விடுத்து" என்றும், அவன் செய்கையால் அவட்குத் தன்பால் அன்பின்மையினை விளங்கக் காட்டினமையின், வேந்தன் தனித்தோரிடத்தே, "வெய்துயிர்த்தன னிருந்தா" னென்றும் கூறினார். இது சூழ்ச்சி. வெய்துயிர்த்தான் என்றதனால், யசோதரன் மனத்தே மிக்க வருத்தம் நிகழ்வது காணப்படுகிறது. இருந்தானென்பதற்கு, அரசியையும் ஏனை அமைச்சர் முதலியோரையும் போக்கிவிட்டு அரசன் மட்டில் தனித்திருந்து எண்ணமிடலானான் என்றுரைத்தலு மொன்று.
-----------
யசோதரன் சந்திரமதியிடம் சேறல்
ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணிித்
தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச்
சேயிடை யிறைஞ்ச மற்றித் *திரைசெய்நீ ருலக மெல்லாம்
நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள். 132
----------
(பாடம்)*யிறைஞ்சிநிற்ப, யிறைஞ்சிமற்றித்.
உரை:- ஆயிடை-அவ்வாறு தனித்து வெய்துயிர்த் திருந்தபோது, அரசன்-வேந்தனான யசோதரன், அரசினை விடுப்ப உள்ளத்து எண்ணி-அரசியலைத் துறந்து செல்ல மனத்தேயெண்ணி, தாய் அமர்கோயில் எய்தி-தன் தாயாகிய சந்திரமதி யிருந்த அரண்மனையை யடைந்து, சந்திரமதி தன் முன்னர்-அவள் முன் சென்று, சேயிடை இறைஞ்ச- சேய்மைக் கண்ணே வணங்கி நிற்க, இத்திரை செய்நீர் உலகமெல்லாம்-இந்த அலைபுரளும் கடல் சூழ்ந்த உலகமுழுதும், உயர்குடையின்வைகி-நீயுயர்த்திய வெண்கொற்றக் குடை நிழலில் தங்கச்செய்து, உடன்-அவற்றோடு, நீ நெடிது வாழ்க--நீ நீண்டநாள் வாழ்வாயாக, என்றாள்-என்று அச் சந்திரமதி வாழ்த்தினாள் எ-று.
அரசன் தனித்திருந்தபோது அரசியலைத் துறப்பது தக்கதே என்ற எண்ணம் மறுபடியும் எழுந்தமையின், "ஆயிடை அரசினை விடுப்ப வெண்ணி" என்றார். இக்கருத்தினைத் தன் தாய்பால் உரைத்து அவள் கருத்தை யாராயக்கருதி அவளிருக்கும் அரண் மனையை யடைந்து, அவள் திருமுன்னர்ச் சென்றான் என்க., முன்னர்; அர், பகுதிப் பொருள் விகுதி. துறவுள்ளத்தனாதலின், தேவியின் அருகு செல்லாது சேய்மைக்கண்ணின்று வணங்கினான். சேய்மை, ஐந்துவிற்கிடையில் நின்று வணங்குதல். "ஐவினிலகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு"1 என்று பிறருங் கூறுதல் காண்க. வைகி, பிறவினைப்பொருட்டு, வைக வென்பதன் திரிபாகக் கோடலு மொன்று. துறக்கக்கருதிப் போந்தாற்கு சந்திரமதி வாழ்த்துந் திறங் காண்க. வருஞ் செய்யுள் கூறும் மெய் வேறுபாட்டிற்கு இதுவுமோ ரேதுவாதல் உணர்க.
- -------
1. சீவக. 1711
யசோதரனுடைய முகவேறுபாடு கண்டு சந்திரமதி உற்றது வினாதல்
மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமும் மாறா
அணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கொல்
பிணியெனை யெனது* நெஞ்சிற் பெருநவை யுறுக்கு மையா
துணியலென் உணரச் சொல்லாய் தோன்றனீ யென்று சொன்னாள். 133
--------
(பாடம்) *-பிணியென வெனது.
உரை:- அணிமுடி யரசர் ஏறே-அழகிய முடியணிந்த வேந்தர்கட்குச் சிங்கம் போல்பவனே, மணிமருளுருவம் வாடி-மாணிக்கமணிபோற் சிவந்த நின் நிறம் வாட்ட மடைந்து, பங்கயவதனமும் மாறா-தாமரைபோோலும் முகமும் வேறுபட்டு, அழகு அழிந்து உளது-அழகு மழுங்கியிருக்கின்றது. இது என் கொல்-இதற்குக் காரண மென்னை. ஐயா- ஐயனே, பிணி எனை-நினக்கு உண்டாகிய நோய் யாது, பெருநவை உறுக்கும்-இஃது எனக்கு மிக்க வருத்தத்தை யுண்டாக்குகிறது, துணியலென்-யானும் இன்னதென அறியகில்லேன், தோன்றல்-குலத்தின்வழி எஞ்சாதபடி பிறந்தோய், உணர நீ சொல்லாய்-யான் தெளிய வுணருமாறு சொல்வாயாக எ-று.
ஏறு, ஐயா, தோன்றல் என்பன ஆர்வமொழி. உறுவென்றும் மணியென்றும் கூறினமையின், மாணிக்கமணியாதல் பெற்றாம். உருவமும் வதனபங்கமும் அழகிற்கு ஆக்கமாதலின், வாடி, மாறா என்ற எச்சவினைகள் அழிந்தென்பதனோடு முடிந்தன. மணி மருளுருவம் என்றதற் கேற்ப, பங்கயவதனமும் என மாறுக. உம்மை, எச்சப்பொருட்டு. கொல், ஐயம். ஐயத்தால் அலைப்புண்டலின், விளங்க வுரைத்தல் வேண்டுமென்பாள் "துணியலென் உணரச் சொல்லாய்" என்றாள். குலத்தின்வழி இடையறாது தொடர்தற்குத் தோன்றுதலின், மகனைத் தோன்றல் என்ப. கான்முளை யென்பது போல; இனிப் புகழ்க்குரிய குணங்களுடன் தோன்றியோய் என்றுமாம். சொல்லுதல், ஈண்டு வினாதன்மேற்று.
--------
கனவின்மேல்வைத்து யசோதரன் உற்றதுரைத்தல்
விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக்
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃது
எண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான். 134
உரை:- இறைவி-அரசமாதேவி, விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர்-வானத்தில் விளங்குகின்ற ஒளிமிக்க ஞாயிற்றினை, மதியம் தீர்ந்து-கூடியிருந்த முழுமதியமானது அதனின் நீங்கி, மழுங்க-தன்னொளியும் அந்த ஞாயிற்றினொளியும் கெட, மண்ணிடைச் சென்று-மண்ணுலகை யடைந்து, ஓர் மறையிருள்பருதி சேர-ஒருமறை விடத்தே கிடந்த இருள்வட்டமொன்றைக்கூட,கங்குல் கனவினில்- இரவிற்கண்ட கனவிலே, கண்ணிடைக்கண்டதுண்டு-கண்ணால் பார்த்தேன், எண்ணுடை உள்ளம் தன்னுள்-பலஎண்ணங்கட்கு இடமாகிய மனத்திலேயிருந்து, அஃது-அக்கனவானது, ஈர்ந்திடுகின்றது-என் நெஞ்சினை யறுக்கின்றது, இதற்கு யான் என்செய்வேன், என்றான்-என்று யசோதரன் உரைத்தான் எ-று.
அரசினைத் துறந்த உள்ளத்தாற் பேசுதலின், சந்திரமதியை, "இறைவி" என்றான். காந்திமிகுகதிர், ஞாயிறு. காந்தி,ஒளி. ஞாயற்றோடு கூடி விண்ணிடை இயங்குவதாகலின், விண்ணின் நீங்குதல், ஞாயிற்றின் நீங்குதலெனக்கூறப்பட்டது. பகலில் ஞாயிறும், இரவில் திங்களும் விண்ணிடத்தே யிருந்து ஒளி செய்தலின், இரண்டும் கூடி இத்தொழிலைச் செய்வதாகக் கூறினார். ஞாயிற்றை யசோதரனாகவும், திங்களை அமிர்தமதியாகவும், இருட்பகுதியை அட்டபங்கனாகவும் கொள்க. நனவுபோலக் கனவிற் கண்டேனென்பான் "கண்ணிடைக்கங்குற் கனவினாற் கண்டதுண்டு" என்றான். செய்வகை துணியமாட்டாது தடுமாறி நிற்றல் தோன்ற, "எண்ணுடையுள்ளம்" என்றும், மானத்தால் வருத்தமிகுதலின் "ஈர்ந் திடுகின்ற" தென்றும் கூறினான்.
---------
இது சண்டமாரி வழிபாட்டால் தீரத்தக்க தீமையெனச் சந்திரமதி சொல்லுதல்
கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
இரவினிற் கனவு தீமைக் கேதுவென் றஞ்சல் மைந்த
பரவிநிற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால்
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம், 135
உரை:- நிற்கு இறைவி தேவி-நினக்குக் குலதெய்வமாகிய சண்டமாரிதேவி, கரவினில்-மறைமுகமாக, தீமை கட்டுரைத்திட்டது-எதிர்வில் வரவிருக்குந் தீங்கொன்றினைத் தெரிவித்திருக்கின்றாள், என்னா-என்றுசொல்லி மேலுஞ் சொல்லுவாளாய். இரவினிற் கனவு-நீ இரவில் கண்ட கனவானது, தீமைக்கு ஏது-தீங்குவரவுக்குக் காரணமாம், என்று-என்று நினைத்து, மைந்த-மகனே, அஞ்சல்-நீ அஞ்சாதொழிக, தேவி-அத்தேவியை, பரவிப்பணிந்தனை சிறப்புச்செய்தால்-பரவிப்பணிந்து விழாக் கொண்டாடினால், அத்தீமையெல்லாம்-அத்தீங்ககு முழுதும், விரவிமிக் கிடுதலின்றி-பலவாய்க் கலந்து மிகாமல், விளியும்-முற்றவும் கெடுங்காண் எ-று.
சண்டமாரிக்கும் யசோதரனுக்கும் தொடர்பு காட்டற்கு "நிற்கு இறைவிதேவி" யென்றும். கனவு நிகழ்ச்சிக்கே ஏது அத்தேவிதான் என்பாள், "கரவினில்தேவி தீமை கட்டுரைத்திட்டது" என்றும் கூறினாள். "காலமுலகம்"1 என்ற சூத்திரத்து "பால் பரிந்திசை யாவுயர்திணைமேன" என்றதனால், தேவி கட்டுரைத்திட்ட தென அஃறிணை முடிவுகொண்டது. சிறப்பு, திருவிழா. இதற்கு முன்னும் பின்னும் வழிபாடுண்மையின், "பரவிப்பணிந்தனை சிறப்புச் செய்தால்" என்றார். துன்பம் ஒன்றாயும் தனித்துவாராது பலவாய்த் தொடர்ந்து வரும் பான்மைத்தாதலின், "விரவி மிக்கிடுதலின்றி" யென்றாள். எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டு. மீட்டும் கிளைக்காமைதோன்ற "விளியு" மென்றாள். தெய்வம் நேரே போந்து தனக்கு வழிபாடு வேண்டு மெனக் கூறாதென்பாள் "கரவினில் கட்டுரைத்திட்டது" என்பது ஐதிகம்.
- ----------------
1.தொல். சொல். 58
தேவிக்குச் சிறப்பெடுத்தற்குரிய காலமும் இயல்பும் தெரிவித்தல்
ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னர்*
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்†
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள் 136
------
(பாடம்) * பக்கந்தன்னின். †காளை.
உரை:- ஐப்பசி மதியமுன்னர்-ஐப்பசி மாதத்துப் பூர்ணிமைக்கு முன்னதாகிய, பக்கம் அட்டமி பின்னர்-பக்கத்தில் எட்டாநாட்குப் பின்வரும் நாட்களுள், மைப்படல் இன்றி நின்ற-குற்றமில்லாது நிலவும், மங்கலக்கிழமை தன்னில்-செவ்வாய்க்கிழமையில், கைப்பலிகொடுத்து- சிறியதோர் உயிர்ப்பலியிட்டு, தேவி கழலடி பணியின்- தேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங் குவாயாயின், காளாய்-காளைபோல்பவனே, மெய்ப்பலி கொண்டு-தனக்குப்பொருளாகிய அப்பலியினை அவள் ஏற்றுக்கொண்டு, நெஞ்சின் விரும்பினள்-மனத்தே நின்பால் விருப்பமுற்று, உவக்கும்-தீங்குவாராமைக் காத்து மகிழ்விப்பள் எ-று.
"ஐப்பசி மாதத்துச் சுக்லபட்சத்தட்டமிக்குப் பின்வரும் மங்கல வாரத்தில் தேவிக்குப் பலியிட்டுப் பூசை செய்தனர்" என்ற கருத்தமைந்த வடமொழிச் சுலோகமொன்று கூறப்படுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. கை, சிறுமை; ஈண்டு சிற்றுயிர் மேற்று. ஏதேனுமொரு சிறுபொருளைப் பலியாக வைத்துப பரவி யென்றுமாம். பலியாக இடுவது எத்துணைச் சிறிதாயினும், பெரிதாகவே கருதி மகிழ்ந்து வேண்டுமருளைச் செய்யும் மிக்க அருளுடையவள் தேவி யென்பாள், "மெய்ப்பலி கொண்டு" என்றும், "நெஞ்சின் விரும்பினளுவக்கு" மென்றும் கூறினாள். காளை யென்பது, "ஐயா யாகும்"1 என்பதனால், காளாய் என வந்தது. காளை யென்பது பாடமாயின், அண்மை விளியாகக் கொள்க. வெற்றிக்கடவுளாதலின், தேவி திருவடியை, "கழலடி" யென்றாள்.
- --------------
1. தொல் சொல்.121
நீயே அப்பலியை அவட்குக்கொடுக்க என்று சந்திரமதி கூறுதல்
மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல்
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். 137
உரை:- மண்டு அமர்தொலைத்த வேலோய்-வீரர் நெருங்கிச்செய்கின்ற போரைவென்றொழித்த வேலையுடையோனே, இது மனத்து மதித்துக்கொண்டு-யான் கூறுமிதனை நின் மனதில் பதித்துக்கொண்டு சென்று, குறுமறி ஒன்று-சிறிய தொருமறியாட்டினை, நின் கொற்றவாளில் நீயே கொன்று- நினது வெற்றியினையுடைய வாளால் பிறரையேவாது நீயே கொன்று, சண்டிகை மனம் தளிர்ப்ப-சண்டமாரியின் மனம் மகிழுமாறு, தகுபலி கொடுப்ப-அவட்குத் தக்க உயிர்ப்பலியைக் கொடுத்தால், அத்தையல்-அச் சண்டமாரிதேவி, கண்ட-நீ கண்டு வருந்துகின்ற, நின்கனவின் திட்பம்- உனது கனவுகாட்டிய தீமையின் வலியினை, தடுத்தனள் காக்கும்- தடுத்து உன்னையும் காப்பள், என்றாள்-என்று அச் சந்திரமதி சொன்னாள். எ-று.
பல்வகைத் தானையும் வீரரும் வேந்தரும் நெருங்கிச் செய்தலின் "மண்டமர்" என்றும், பகைத்து எதிர்ப்போரை அறக்கெடுத்து வென்றவழிப் போர் இல்லையாதலின், "தொலைத்த" வென்றும், வேல் வேறற்குத் கருவியாய்ச் சிறத்தலின், "வேலோய்" என்றும் மகனது வீரத்தை வியந்தோதினாள். "மனத்திது மதித்து" என்றலின், அவன் கூறுமாறு பலியிடுதற்கு ஒருப்படாவுள்ள முடையனாதலை அவன் முகம்காட்ட அவள் காணுமாறு பெற்றாம். அதனால், அவள் அவனே அவ்வுயிர்க் கொலையினைச் செய்தல் வேண்டுமென்பாள் "நீயே நின்கொற்றவாளிற் கொன்று" என்றும், கொன்றாலெய்தும் பயன் இதுவென்பாள் "சண்டிகை மனம் தளிர்ப்ப"வென்றும், "கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும்" எனறும், இது தவிர வேறு செயற்குரியதில்லை யென்பாள் "தகுபலி யென்றும் கூறினாள் எனவுணர்க.
-------
உயிர்க்கொலை கேட்டு யசோதரன் வருந்திக் கூறல்
ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுத லோடுந்
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்கருள் செய்ததென்கொல் இதுபுதி தென்று நெஞ்சில்
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன சாற்று கின்றான். 138
உரை:- அவண்-அவ்வாறு, ஆங்கு-அவ்விடத்தே, அவள்-சந்திரமதி, அருள் ஒன்று இன்றி-அருள் சிறிதுமின்றி, மொழிந்திடுதலோடும்-சொல்லுதலும், அரசன்- வேந்தனாகிய யசோதரன், தேங்கலன் - பொறானாய், செங்கை செவிமுதல் செறியச்சேர்த்தி - தன் சிவந்த கைகளால் இரு காதுளையும் இறுகப் பொத்திக்கொண்டு, ஈங்கு-இவ்வாறு, அருள்செய்தது என் - உரைத்தருளியது என்னை, இதுபுதிது- இது புதுமையாக வுளது, என்று - என்று வாய்விட்டுச் சொல்லி. நெஞ்சில் தாங்கலன் - மனதில் துயர்மிகுந்து, உருகி - உருக்கத்துடன், தகுவன - அருளுரைபல, தாய்முன்- தன் தாய்க்கு, சாற்றுகின்றான் - சொல்லலுறுகின்றான் எ-று.
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மொழிந்திடுதலோடும் என்புழி உம்மை, இசைநிறை, தேங்குதல், பொறுத்தல்;மகிழ்தலுமாம். தீமொழி சேட்கவிடாது செவியைச் செறிதலின், "செங்கை" யென்றார். உயர்ந்தாரொடு உரையாடும் மரபு பற்றி, "அருள் செய்தது என்கொல்" என்றான். கொல், அசைநிலை. அருளின்றி யுரைப்பது என்னென்பான், வழிபாடு மறாது குறிப்பு மொழியால் "அருள் செய்தது" என்றானென்றுமாம்; "எழுத் தொடும் பொருளொடும் புணராதாகி, பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியென்ப"1 என்பது இலக்கணம். அருள்பெருகு நெஞ்சினால் தன் அன்னையொடு உரையாடுகின்றானாதலின், இச்சொற்களோடமையாது மேலும் கூறுகின்றமை தோன்றத், "தாங்கலன்" என்றும், தக்கார்க்குரிய அருளுரையைத் தான் வழுங்குதல் பற்றித் "தகுவன சாற்றுகின்றான்" என்றும் கூறினார் "தகுபலி"(137) என்று தாய் கூறியதை மறுத்துத் தகுவது ஈது என்பான் தகுவன சாற்று கின்றான் என்றாரென்றுமாம்.
- -----------
1.தொல்.பொருள்.491.
உயிர்க்கொலை அரசர் அறத்திற்கு மாறாமெனல்
என்னுயிர் நீத்த வேனு மியானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண யாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ * ரல்ல ரோதான். 139
உரை:-இறைவி - அரசமாதேவியே, என் உயிர் நீத்தவேனும் - என்னுயிரைப் போக்கக்கூடிய தீங்குகளைச் செய்தன வென்றாலும், யான் - அரசனாகியயான், உயிர்க்கு - அவ்வுயிர்கட்கு, உறுதிசூழாது-உறுதியானவனவற்றை யாராய்ந்து செய்யாது, என் உயிர்க்கு அரணம் நாடி - என் ஒருவன் உயிர்க்குப் பாதுகாப்பனவற்றையே நினைந்து, உயிர்க்கு - என்னால் காக்கப்படும் அவ்வுயிர்கட்கு, யான் இறுதிசெய்யின் - யான் கொலைசெய்வேனாயின், எனக்கு - கொலைப் பாவியாகிய எனக்கு, இவ்வுலகு காவல் - இவ்வுலகைக் காக்குந்தொழில், என்னை - என்னை பயனைச்செய்யும், மன் உயிர்க்கு - மிகுதியான உயிர்கட்கு, மண்மேல் - நிலவுலகில், அரணம் - பாதுகாப்பாவார், மன்னவர் அல்லரோ - அரசரன்றோ, இனி கூறாய் - இப்பொழுது நீயே கூறுவாயாக எ-று.
முறை செய்து உயிர்களைக் காத்தவேந்தன் தேவியாதலின், வேந்தருடைய அறம்பல அறிந்திருப்பாளெளன்ற அமைதி குறித்து, "இறைவி" என்றும், "கூறாய்" என்றும் இயம்பினான். "மண்ணியல் மன்னர்க்குக் கண்ணெனவகுத்த, நீதி நன்னூலோதிய நாவினள்"1 என்று பிறருங் கூறுதல் காண்க. "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது, இன்னுயிர் நீக்கும் வினை"2 என்பவாகலின் "என்னுயிர் நீத்தவேனும்" என்றும், "யான் உயிர்க்கிறுதி செய்யின்" என்றும் கூறினான். "இன்னா செய்தார்க்கும் இனியவே" செய்தல் வேண்டுமென்பதுபற்றி, யான் உயிர்க்கு உறுதி சூழா தென்னுயிர்க் காரணம் நாடி" யென்றும் எடுத்துக் காட்டினான். தன்னுயிரினும் தன்னாற்காக்கப்படும் உயிர்கட்கு உறுதியை நாடிச் செய்வதே அரசர்க்கு அறமாதலினுலும், அதனினும் ஆக்கம் உயிர்க்கு வேறின்மையாலும், "என்னையிவ்வுலகு காவல் எனக்கு" என்றான். மன்னுயிர்க்கு அரண்செய்வதே வேந்தர்கடன் என யாப்புறுத்தவே, "மன்னுயிர்கரண மண்மேல் மன்னவரல்லரோ" என்றான்.
- -------
1.பெருங்.4:10:13-4 2.குறள். 327. 3. குறள். 987.
உயிர்க்கொலையால் மேலுலக வின்பமில்லை யெனல்
யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்லின்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வு மண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. 140
உரை:- யான் உயிர்வாழ்தல் எண்ணி-யான் உயிரோடிருப்பதொன்றையே கருதி, எளியவர் தம்மைக் கொல்லின்-எளியோர்களைக் கொல்வேனாயின், மேல்-மறுமைக் கண், வான் உயர் இன்பம்-தேவருலகில் பெறும் உயர்ந்த இன்பம், வரும் நெறி திரியும்-என்னை வந்தடைதற் குரிய நெறிமாறி நீங்கிவிடும், அன்றி-அன்றியும், ஊன்உயிர் இன்பம் எண்ணி-உடம்பொடுகூடிய உயிர்க்கு வரும் இன்ப மொன்றையே கருதி, எண்ணம் ஒன்றும் இன்றி-ஏனை யுயிர்கட் குண்டாகும் துன்பத்தைச் சிறிதும் நினையாது, மண்ணில்- மண்ணுலகத்தே, மானுயர் வாழ்வு-மக்கள்வாழும் வாழ்வு, மரித்திடும் இயல்பிற்றன்றே-அழிந்து போகும் இயல்பினதாகும் எ-று.
"தான் வாழ ஏனோர் தனக்கடிமையாக எனும், ஊன அறிவினர்க்கு" விண்ணின்பம் ஒருகாலும் எய்தா தென்னும் அறவுணர்வால் "யானுயிர்வாழ்த லெண்ணி எளியவர் தம்மைக் கொல்லின், வானுய ரின்பமேலால் வருநெறி திரியும்" என்றான். மறுமைக்கண் இன்பமின்றாயினும் இம்மைக்கண்ணாயினும் இனிதிருக்கலா மெனத் தருக்கு வார்க்கு, இம்மையின்பமும் நிலையின்றிக் கெடுமென்பான், "மானுயர்வாழ்வு மண்ணின் மரித்திடும் இநயல்வற் றன்றே" என்றான்,. எளியவர் என உயர்;திணைமேல் வைத்துக் கூறினானாயினும், அஃறிணையும் கொள்ளப்படும். "கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை"1 என்புழிப்போல. கழிந்த நாட்களைப் போல மரிக்கும் நாள் இஃது என உணரற்காகாமையின், காலங் குறியாது வாளா "மரித்திடும் இயல்பிற்றன்றே" என்றான். "சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம், நின்றநாள் யார்க்கும் உணர்வரிது"2 என்று பிறருங் கூறுதல் காண்க. அன்றே என்புழி எதிர்மறை முற்றும் எதிர்மறை யேகாரம் கூடி ஆமென்னும் உடன்பாட்டுப் பொருள்தந்து நின்றன. வானுயர் இன்பம், தேவருலகத்தின் மேற்பட்டதாகிய முத்தியின்பமுமாம்; "மூவுலகுச்சி யின்பம்"3 என்று தேவர் கூறுதல் காண்க. வானுயரின்பம் எய்தாதென்ற கருத்தால், "வரும் நெறிதிரியும்" என்றான். ஆல், அசை.
- -----------
1.குறள். 15. 2. அறநெறி. 69. 3. சீவக. 3117.
உயிர்க்கொலையால் பாவம் மிகுமெனல்
அன்றியு மின்றென்* முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள்
கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர்;
இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். 141
-----------
(பாடம்)* மின்றி.
உரை:- அன்றியும்-அல்லதூஉம், அன்னை-தாயே, முன்னர்-முற்காகலத்தும், நின்குலத்துள்ளோர்கள்-நின்குலத்திற் பிறந்த முன்னோர் எவரும், உயிர்கொன்று கன்றும்- உயிர்களைக் கொன்றுகொன்று அடிப்பட்ட, உள்ளக்கொடுமை -மனக்கோட்டத்தால், செய்தொழிலர்-அக்கொலை வினையைச் செய்யும் செய்கை உடையவர், அல்லர்-இலர். இன்று என்-இப்போது நினக்கு மட்டில் அஃது உண்டாவது என்னை, இன்று-இப்போது. உயிர்கொன்ற பாவத்து- உயிரைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தால், மேல்-மறுமையில், இடர்பலவிளையும்-பல துன்பங்களுண்டாகுமாதலால்., நீ அருளிற்றெல்லாம்-நீ சொன்னது முழுதும் நமக்கும்-மன்னுயிர்க்கேயன்றி நினக்கும் எனக்கும், நன்றி யொன்றன்று-நலம் சிறிது மின்றாம் எ-று.
தன் தாய் மனத்தில் கொலையுணர்வு பிறத்தற்குக் காரணங் காணலுற்ற யசோதரன், அவள் முன்னோர் இயல்பை மனத்தாலாராய்ந்து ஒருவர்பாலும் அஃதில்லாமை யோர்ந்து, வருந்திக் கூறுவான், "நின்குலத்துள்ளோர்கள், கொடுமை செய் தொழிலரல்லர்" என்றும், அவள்பால் அஃதிருத்தற்கு ஏது பெறப்படாமையின்; "இன்று என்" என்றும் கூறினான். "நலத்தின்கண் நாரின்மை தோன்றினவனைக் குலத்தின்கண் ஐயப்"1 படுவது இயல்பாதல்பற்றி, இவ் வாராய்ச்சியுண்டாயிற்றெனவறிக. "இன்று" எனவே, தன் தந்தை அசோகன் காலத்தும் இச்செயல் நிகழாமை துணியப்படும். உயிர்க்கொலையே புரிந்து அதன்கட் கன்றிய மனமுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அச்செயலுண்டாகாதென்றற்கு "கொன்றுயிர் கன்றும் உள்ளக் கொடுமை செய்தொழில்" என்றார். கன்றுதல், செய்துசெய்து பயிற்சி கைவரப் பெறுதல்; தீமைசெய்து பயிறற்கே இக்கன்றுதல் வினை யுரித்து; சூதின்கட் கன்றினான், கொலையின்கட் கன்றினான், காமத்தின்கட் கன்றினான் எனவரும் வழக்காறுகளைக் காண்க. கொடுமை, கோட்டம்; நடுவுநிலை யின்மை. தன்னுயிர்போல் ஏனையுயிரை நினையாமையின், கொடுமை யாயிற்று. உயிர்க்கொலையால் உண்டாகும் பாவம் விடாது தொடர்ந்து வந்து பல பிறப்புக்களிலும் துன்புறுத்தும் என்பான், "இடர்பல விளைக்கும் மேலால்" என்றான்.
- -------
1.குறள். 958.
ஆல், அசை. "தீமையெல்லாம்"(135) என்புழிப்போல, எல்லா மென்பது எஞ்சாப்பொருட்டு. நன்றியொன்றன்று என்புழிச் சிறப்பும்மை தொக்கது. நன்றியன்று, ஒன்றன்று என்றியைத்து அறமுமன்று, ஒருபொருளுமன்று, இன்பந்தருவது மன்று என்றுரைப்பினுமாம். "இன்னுயிர் கொன்ற பாவத்து" என்புழி, இன்றென்பது இம்மைப்பிறப்புக்கும் உரித்து, மேலென்றது மறுமை சுட்டி நிற்றலின், நமக்கும் என்புழி உம்மை எச்சப்பொருட்டு; நம்மிருவர்க்கும் என்றுமாம்.
------
இவை நான்கு பாட்டாலும் உயிர்க்கொலையால் விளையுந் தீங்கு பலவகையாலும் வகுத்துரைக்கப்பட்டது காண்க.
இதுகேட்டு வெகுண்ட சந்திரமதி மாவாற் கோழியொன்று செய்து பலியிடுக என்றல்.
என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்றே*
சென்றனள் முனிவுச் சிந்தைத் தீருவிலி பிறிது கூறும்
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொ டுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். 142
---------
(பாடம்) *யேடவென்றே.
உரை:- என்றலும் - என்றிவ்வாறு யசோதரன் கூறியதும், முனிவுச் சிந்தைத் திருவிலி - வெகுளிபொருந்திய மனத்துடன் அறவுணர்வில்லாத சந்திரமதி, எனது சொல்லை இறந்தனை - என் சொல்வரம்பு கடந்து பேசுகின்றாய், கொடியை - நீ கொடியவன், என்று பிறிது கூறும் - என்று சினந்து பின் மேலுங் கூறுவாளாய், உயிர் கொன்று - ஓர் உயிரைக் கொன்று, களைதல் அஞ்சின் - உன் துன்பத்தைப் போக்கிக் கொள்ள நீ அஞ்சினாயாயின், கோழியை மாவின்செய்து - கோழியினது வடிவமொன்றை மாவாற் செய்து, சென்றனை - தேவிகோயிற்குத் சென்று, பலிகொடுத்து - பலியிட்டு, தேவியை மகிழ்வி - அச்சண்டமாரி தேவியை மகிழ்விப்பாயாக, என்றாள் - என்று சொன்னாள். எ-று.
எளிதில் சினக்கும் இயல்பின ளென்றற்கு "முனிவுச் சிந்தை" யென்றும், அவ்வியல்பினர்பால் அறம் பற்றுக்கோடாக நிற்கும் திரு நில்லாமையின், "திருவிலி" என்றும் கூறினார். அறத்தின்வழி நிற்றல்பற்றி அதனைத் திரு வென்றார். "சிறபபுடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப்படூஉம்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. திருவிலி, அமங்கலையுமாம். தான் கொண்டது விடாப் பேதை யாதலின், பிறிது கூறுகின்றாளெனவுணர்க. "கொன்றுயிர் களைதலஞ்சின்" என்றது, யசோதரனுள்ளத்தை யெழுப்பி உயிர்க் கொலைக்கண் ஊக்குங் குறிப்பிற்றாதலை யுணர்க. "மாவாலாவது மாவினாலாம்" என்னும் உலகுரை பற்றி, "கோழியை மாவிற் என்றும், "பலிகொடுத்" தென்றும், "தேவியை மகிழ்வி" யென்றும் கூறினாள்.
- ----------
1. புறம். 31
யசோதரன் இது வினைவிளை வென்று நினைதல்
மனம்விரி யல்குன் மாய மனத்தவை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்று
எனைவினை யுதயஞ் செய்ய இடர்பல விளைந்த என்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். 143
உரை:- மனம் விரி அல்குல்-ஆடவர் ஆசைபோல் அகன்ற அல்குலை யுடைய அமிர்தமதியின், மாயமனத்தவை- கள்ள நினைவும் செயலும் கொண்டொழுகுந் திறங்களை, வகுத்த-குறிப்பா யுணருமாறு யான் தேவிக்கு வகுத்துரைத்த, மாயக்கனவுரை-பொய்க்கனவுக் கூற்று, பிறிது-வேறாக, தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று-அரசமா தேவியாகிய சந்திரமதியின் உரை வேறொன்றாயிற்று, எனைவினையுதயம் செய்ய-என்பால் வினைதோன்றி வி்டதனால், இடர்பல என் பால் விளைந்த-துன்பங்கள் பல எனக்கு உண்டாயின, வினைகளின் விளைவை-வினைகளால் உண்டாகும் பயனை, விலக்கு நர் யாவர்-விலக்கும் வன்மையுடையார் யாவருளர், என்று- என்று நினைந்து, நின்றான்-சந்திரமதி கூறிய செய்கைக்கண் நிற்கலானான் எ-று.
எல்லையின்றிப் பரந்த அல்குலென்றற்கு "மனம் விரி யல்குல்" என்றான். "அவாப்போ லகன்ற தன் அல்குல்"2 என்று பிறரும் கூறுப.மனம் கணந்தோறும் பொருள்கண்மேல் அவாக்கொண்டு விரிதல் போல, அல்குலும் புணர்வார்க்குப் புணருந்தோறும் புத்தின்பம் பெருகி விரிதலின், அல்குற்கு அவாவினை உவமம் கூறினர்.
- -----
2. யாப். விரு. மேற்,.
மாயம், கள்ளம், பொய் முதலியன ஒரு பொருளன. மானத்தால் வெளிப்படக் கூறாது குறிப்பால் கனவுமேல் வைத்துக் கூறினமையின், "வகுத்த மாயக் கனவுரை" யென்றான். செயவெனெச்சம் காரணப் பொருட்டு, "எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின் சென்றடும்"1 என்பது பற்றி, "வினைகளின் விளைவை யாவர் விலக்குநர்" என்றான்; பிறாண்டும், "வெல்வதற்கரிதால் வினையின் பயன்"(170) என்பது காண்க.
அல்குல் மாயமனத்தவை என்பதற்கு அல்குலையும் மனத்தையுமுடைய தாயாகிய சந்திரமதியென்று உரைப்பது பொருள் சிறவாமையறிக. அவை - அவ்வை, தாய்.
- ----------
1.குறள்.207.
சந்திரமதி யுரைத்தவாறு செய்தற் கொருப்பட் டுரைத்தல்.
உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்
செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்வதற் கிசைந்த தென்றான்
அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான். 144
உரை:-உயிர்ப்பொருள் வடிவு கோறல் - உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைக் கொல்வதும், உயிர்க்கொலை - உயிர்க்கொலையேயாம், என்னும் பயிர்ப்பு - என்னும் ஓர் அருவருப்பு, உளம் உடையனேனும் - மனத்தே கொண்டிருந்தானாயினும், பற்று அறத் துணிவுஇல் மன்னன் - பசையற ஒருதலையாகத் துணியும் மனவன்மை யில்லாத வேந்தனாதலின், செயிர்த்தவள் - தன்னை வெகுண்ட தாயாகிய சந்திரமதி, உரைத்த செய்கை - சொல்லிய செயலை, செய்வதற்கு இசைந்தது - செய்தற்கு என் நெஞ்சு இசைந்து விட்டது, என்றான் - என்று யசோதரன் சந்திரமதிக்குக் கூறினான். அயிர்ப்பது என் - அவன்பால் நாம் ஐயுறுவதாற் பயினில்லை, அறத்தின் திண்மை யறிவதற்கு - அறத்தின் வலியினையுள்ளவா- றறிதற்கேற்ற, அமைவிலாதான் - மனத்திட்பமுடைய னல்லனாதலால் எ-று.
உயிர், உயிரில்லது, நல்வினை, தீவினை, ஊற்று, சம்வரம், நிர்ச்சரை, கட்டு, வீடு என்ற ஒன்பதனையும் பொருளென்றால் சமண்சமயக் கொள்கையாதலின், "உயிர்ப்பொருள்" என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. போலும். உரையசை; இதனை வாக்கியாலங்காரம் என்ப. பயிர்ப்பு, அருவருப்பு. துணிவுடையனாயின், தன்னறிவின்கண் அறிந்து கூறிய அறங்களை விடாது மேற்கொண்டு சந்திரமதியின் கூற்றை மனங்கொள்ளாது தள்ளியிருப்ப னென்றற்கு, "பற்றறத் துணிவில் மன்னன்" என்றார். அவனை யிசைவித்தது அச்சந்திரமதியின் வெகுளியே யென்றற்கு "செயிர்த்தவள்" என்றும், அதற்கு அஞ்சினானென்பார் "செய்வதற்கிசைந்த தென்றான்" என்றும் கூறினார். கொலைப்பாவமும் வினையியல்பும் பிறவும் யசோதரன் எடுத்தோதக் கண்டார், அவன் அக்கொலைவினையைச் செய்தற் கிசைந்தானெனின், கொள்ளாராதலின் "அயிர்ப்பதென்" என்றும் அதற்கு ஏது இஃதென்பார், "அறத்தின் திண்மை யறிவதற் கமைவிலாதான்" என்றும் கூறினார். எனவே, "ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்கா"ப்பெரும் பேதை இவ் யசோதரனென்றாராயிற்று.
--------
மாக்கோழியைப் பலியிடுவான் அநறுத்தல்
மாவினின் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடமதாய
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் செய்தே
ஆவயின்* தன்கை வாளா லரிந்துகொண் டருளி தென்றான். 145
---------
(பாடம்) *யாவவன்.
உரை:- அவ்வையாய பாவிதன்னோடு-தாயாகிய பாவியுடன், மன்னன்-வேந்தனாகிய யசோதரன், படுகொலைக்கு இடமதாய தேவி தன் இடை-மிக்க உயிர்க்கொலைக்கு இட மாகிய சண்டமாரி கோயிற்கு, மாவினின் வனைந்த கோழி வடிவுகொண்டு-அரிசிமாவாற் செய்யப்பட்ட கோழி வடி வத்தை எடுத்துக்கொண்டு, சென்றெய்தி-சென்றடைந்து, சிறப்பொடு வணக்கம் செய்து-திருவிழாவும் வழிபாடும் ஆற்றி, ஆவயின்-அவ்விடத்தே, தன்கைவாளால்-தன்கையில் வாளால், அரிந்து-அக்கோழியின் தலையைக் கொன்றெறிந்து, இது கொண்டருள்-தேவி, இப்பலியை ஏற்றருள் வாயாக, என்றான்-என்று வேண்டினான் எ-று.
"சாலியின் இடியின் கோழி" (146) என்றலின், மா, அரிசிமா வாயிற்று. யசோதரன் மனத்தே அறவுணர்வு அரும்பக் கண்டதும் அதனை வளர்க்காது, மாறாயபாவமே வலியுறச் செய்தாளாதலின், "அவ்வையாய பாவிதன்னோடு" என்றும், இக்கொலைக்கு அவளே முதலாதல்பற்றி, "பாவிதன்னோடு" என்றும், உயிர்க்கொலை நிகழ்தற்கு அத்தேவி கோயில் இடமாதலின், "படுகொலைக்கிடமதாய தேவி தன்னிடை" என்றும் கூறினார். வணக்கம், நாளும் நடைபெறுவது; சிறப்பு, நாள் வழிபாட்டிற்றாழ்வு தீரச் செய்யப்படுவது; "சிறப்பொடு பூசனை செல்லாது"1 என்றார் பிற சான்றோரும். சுட்டு நீண்டது.
- ---------
1. குறள். 18.
மாக்கோழி கூவிக்கொண்டு மன்னன் முன் வீழ்தல்
மேலியல் தெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலிய லரசன் தன்கை வாள்விடுத் துருகி னானே. 146
உரை:- மேல் இயல் தெய்வம் கண்டு - மக்கட்கு மேலாக வழிபடப்படுகின்ற சண்டமாரியாகிய தெய்வத்தைப்பரவி, விரும்பினது - அது விரும்பிய பலியாக, அடையப்பட்ட - படைக்கப்பட்ட, சாலியின் இடியின்கோழி - சாலி நெல்லரி சியை யிடித்துப்பெற்ற மாவாலாகிய கோழியானது, தலை யறிந்திட்டது - தலையறுக்கப்பட்டது, ஓடி - துள்ளியோடி, கோல் இயல் அரசன் முன்னர் - நீதி முறையில் ஒழுகும் இயல்பிற்றாகிய அரசினையுடைய யசோதரன்முன்னே, கூவுபு குலுங்கிவீழ - கூவித் துடித்து வீழ, மால் இயல் அரசன் - மயங்கும் இயல்பினையுடைய அவ்வரசன், தன் கை வாள் விடுத்து - தன் கையினின்றும் வாள் நெகிழ்ந்து வீழ விட்டு, உருகினான் - மனமுருகினான் எ-று.
மக்கட்குரிய வினைப்பயனை வரைந்து தரும் இயல் பிற்றென்று தெய்வத்தைக் கருதுபவாதலின், "மேலியல் தெய்வம்" என்றார். சிறப்பயர்ந்து வழிபட்டுக் கண்ணாரக் காணும் செய்கை தோன்ற, "கண்டு" என்றார். விரும்பினது, சண்டமாரி விரும்பும்பலி. அடையப்படுதல், நிவேதிக்கப்படுதல். தலையரியப்படும் கோழி துள்ளி வீழ்தல் இயல்பாயினும், இம்மாக்கோழி உயிரில்லதாகவும் கூவித் துள்ளி வீழ்ந்த தென்பதாம். கோல், அரசநீதி; அது கோல் போறலின், கோலெனப் பட்டது. கோலியல் என்னு மடை, அரசுக் குரித்து, அதனையுடைய னாதலின், அவன் முன்னர் வீழ்ந்த தென் பார், "கோலியலரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ" என்றார். கூவுபு, செய்பென்னும் எச்சம். குலுங்குதல், துள்ளுதல். கோலியலரசினையுடைய னாயினும், யசோதரன் அதனை யுணராது மயங்கும் அரசன் என்றற்கு, "மாலியல் அரசன்" என விதந்தார். மாலியலரசற்கு வாட்படை யொருபயனும் செய்யாதாகலின், "தன் கைவாள் விடுத்து உருகினான்" என்பாராயிற்று.
--------
மனமுருகிய வேந்தன் வருந்துதல்
என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல்
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுபோன் மென்றான்*. 147
------------
(பாடம்)* போலெனறான.
உரை:-மாவின் செய்கை - மாவினால் செய்யப்பட்டதாகிய இக்கோழி வடிவமானது, இவ் - இவ்வாறு, உயிர் பெற்ற பெற்றி - உயிர்பெற்ற தன்மை, என்கொல் - என்னோ, வாள் - என் கைவாள், சென்னி எறிய - தலையை யரிய, ஓடிச் சிலம்பிய குரல் இது - துள்ளியோடிக் கூவிய இக்குரல், என் கொல் - என்னோ, பின்னிய பிறவிமாலை - ஒன்றினொன்று பின்னப்பட்டது போன்றுள்ள பிறவித்தொடர்பானது, பெருநவைதருதற்கு - எனக்கு மிக்க துன்பத்தைத் தருதற்கு, ஒத்த - ஏதுவா யமைந்த, கொன் இயல் பாவம் - அச்சத்தைச் செய்கின்ற பாவந்தான், என்னைக் கூவுகின்றது போன்ம் - என்னைக் கூவியழைப்பது போலும், என்றான் - என்று சொல்லி வருந்தினான். எ-று.
"மாலியலரசன்" என்று பொதுப்படக் கூறினாராதலின், அதனை விளக்கு முகத்தால் அவன் மனமருட்சியைப் படிப்படியாகக் காட்டலுற்று முதற்கண், மாக்கோழி உயிர்பெற்றுத் துள்ளியோடியதை வியந்து, "மாவின் செய்கை இவ்வுயிர் பெற்ற பெற்றி என்னை கொல்" என்றான். இவ்வென்னும் சுட்டுப்பெயர், உயிர் பெற்ற திறத்தைச் சுட்டிநின்றது. துள்ளியதோ டமையாது கூவியது உயிர் பெற்றதன் பெற்றியை வற்புறுத்தி அவன் மனத்தே சூழ்ச்சி பிறப்பித்தமையின், அதனால், அக்குரலைப் பாவத்தின் குரலாகப் பொருள் செய்துகொண்டு, "பாவ மென்னைக் கூவுகின்றது போன்" மென்றான். போலும் என்பதன் ஈற்றுமிசையிகரம் மெய்நிற்பக் கெட்டது. கொன், அச்சப்பொருட்டாய இடைச்சொல். காரணகாரியத் தொடர்ச்சியாய்த் துன்பம் பயக்கும் இயல்பிற்றாதலின், "பின்னிய பிறவி மாலை" யென்றும், "பெருநவை தருதற்கு" என்றும் கூறினான். நவை, துன்பம், நுகர்ந்தன்றிக் கழியாத பெருமை யுடைமையின், "பெருநவை" யெனப்பட்டது. ஒத்தல், "உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்"1 என்புழிப்போல.
- ---------
1. தொல். பொ. 283.
ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும்
ஆதகா வினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றான். 148
உரை:-அறிவிலேன் - நல்லறிவில்லாத யான், அன்னை சொல்லால் - தாயாகிய சந்திரமதியின் சொற்கிசைந்து, அருளில் செய்கை - இரக்கமில்லதாகிய உயிர்க்கொலை செய்தது, ஆ - மிகவும், தகாது - தகுதியற்றதாகும், அழிந்தபுள்வாய் - பலியாய்த் தலையறுப்புண்டகோழியின் வாயிலிருந் தெழுந்த, அரிகுரல் - அரித்த குரலோசை, நெஞ்சை அரியும் - என் நெஞ்சினை யறுக்கின்றது, ஆதகாது - ஆ, இதுவும் தகுதியற்ற கொடுஞ்செயலாகும், அமிர்தமுன்னா மதியவள் களவு - அமிர்தம் என்னும் பெயர்முன் மதியென்னும் சொல் புணரவரும் அமிர்தவதியென்னும் பெயரினையுடையாளது கள்ளச் செயலும், கொல்லும் - என்னுயிரைக் கொல்லநிற்கும், ஆ தகாது - ஆ இதுவும் தகுதியற்றதாம், வினைகள் - தீவினைகள், என்னையடர்த்து நின்று - என்னை நெருக்கி நின்று, அடுங் கொல் - கொல்லும் போலும், ஆ - ஐயோ, தகா - இவையாவும் எனக்குத் தகுதியல்ல எ-று.
இயற்கை யறிவால் சந்திரமதி கூறிய செயல் தக்கதன்றென் றுணர்ந்தும், திட்பமின்மையின், அயர்ந்து அவள் சொற்கே இசைந்து கெட்ட தன்சிறுமை நினைந்து அவன் தான் வருந்துகின்றமை தோன்ற, "ஆ தகாது" என்றான். ஆ என்னும் இரக்கக் குறிப்பிற்றாய இடைச் சொல், ஈண்டுக் கழிந்ததற் கிரங்கும் இரக்கமிகுதி சுட்டி நின்றது ஏவியது அன்னை செய்கையாகவும், இயற்றியது தன்செய்கையாதலையும்,அதற்கேது தன் அறிவின்மை யெனபதையும், அச்செயகைக் கண்ணுள்ள குற்றம் அருளின்மை யென்பதையும் தெரிந்துணர்ந்து வருந்துமாறு விளங்க, "அன்னைசொல்லால் அறிவிலேன் அருளில் செய்கை" என்றான். மாக்கோழியின் செய்தியால் அதனை யுயிரென்றே கருதினானாதலின், "அழிந்த புள்" என்றான். அரிக்குரல், அரிகுர லெனவும் வரும். "அரிகுரற் கோழி"1 என்றார் பிறரும். களவு, கள்ளக்காம வொழுக்கும். இத்தீவினை காரணமாகப் பிறவியும், வினையும் பெருகுதலின், "வினைகள்" என்றும், அவை தன்னை யடர்த்து வருத்துவது ஒருதலை யென்னு முணர்வால், "அடர்த்து நின்று அடங்கொல்" என்றும் கூறினான். தனக்குத் தகுதி வினையின் நீங்கி விளங்கிய அறிவினைப் பெற்றுச் சிவகதி பெறுவதேயாக, இக் கூறியவாற்றால் வினைகளை யீட்டித் துன்புறுவ தன்மையின், "ஆ தகா" என்றான்; இனி, தகா வென்பதனை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்கி வினையொடு முடிப்பினுமாம். இக்கூற்று, "காவலற் கூற்றும் கொல்லும், வளைகயமடந்தை கொல்லும் தான்செய்த பிழைப்புக் கொல்லும், அளவறு நிதியங் கொல்லும் அருள் கொல்லும்"2 என்பதனோடு கருத்தால் ஒத்து நிற்றல் காண்க.
- --------
1.சீவக.1755. 2.சீவக.260.
தன்மகன் யசோமதிபால் அரசினை வைத்து யசோதரன் தவவனம் படர்தற்கமைதல்
இனையன நினைவு தம்மால் யசோதர னகர மெய்தித்
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்
அனையதை யறிந்துந் தேவி யவமதித் தெனைவி டுத்தான்
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்து வீழ்வாள். 149
உரை:-யசோதரன்-வேந்தனான யசோதரன், இனையன நினைவு தம்மால் - இத்தன்மையான பல நினைவுகளுடன், நகரம் எய்தி - அகநகர்க்கண்ணுள்ள தன்னரண்மனையை யடைந்து, தனையனில் அரசுவைத்து - தன் மகன் யசோமதி பால் அரசபாரத்தை ஒப்பித்து, தவவனம் படர்தல் உற்றான்- தான் தவம்பூண்டு வனத்துக்குச் செல்லக்கருதினான், தேவி- அவன் மனைவியாகிய அமிர்தமதி, அனையதை யறிந்தும்- அதனை விளங்க அறிந்து வைத்தும், எனை அவமதித்து-என்னை யிகழ்ந்து, விட்டான்-இவ்வரசன் துறந்துவிட்டான், என நினைந்து-என்று தனக்குள்ளே நினைந்து, எரி நரகத்து வீழ்வாள்-நெருப்பெரியும் நரகத்தில் வீழபவளாகிய அவ்வமிர் தமதி, ஏது செய்தாள்-யாது செய்தாளென்றால் எ-று.
ஆலுருபு ஒடுவின் பொருட்கண் வந்தது. சண்டமாரியின் கோயில் நகர்க்குப் புறத்தே யுண்மை தோன்ற, "நகரமெய்தி" என்றார். தவவனம், தவம் செய்தற்குரிய காடு. படர்தல், செல்லுதல். உற்றான், நினைத்து அதற்கு முன்னணியாகச் செய்தற்குரியவற்றைச் செய்யலுற்றான் என்பதுபட நின்றது. அறிந்தும் என்புழி உம்மை, சிறப்பு. தேவி, மனைவியாகிய அமிர்தமதி. யசோதரன் துறவு மேற்கொண்டது, தன்பால் பெறலாகும் காமவின்பத்தைப் புறக்கணித்ததாகக் கருதி வெகுள்கின்றாளாகலின் "அவமதித்தெனை விடுத்தான்" என நினைந்தா ளென்றார். அவ்வெகுளி மிக்கதனால், துறவுபூண்டு நலமெய்தக் கருதும் அவ்யசோதரன் உயிர்க்குக் கேடுசூழ்கின்றாளென்பார் "யாது செய்தாள்" என்றும், அச்சூழ் வினையாலவளெய்தும் பயன் இஃதென்பார், "எரிநரகத்து வீழ்வாள்" என்றும் கூறினார். ஆசிரியர் அவளை இகழ்ந்து கூறியதூஉமாம்.
----
அமிர்தமதி வஞ்சனையாக யசோதரனை விருந்துண்ண அழைத்தல்
அரசுநீ துறத்தி யாயின் அமைகமற் றெனக்கு மஃதே
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்த னோடும்*
இரசநீ ரமிர்து† கைக்கொண் டருளுதற் கிசைதல் செய்வாய்‡
அரசுதா னவன தாக அவிது§ நா மடிக ளென்றாள். 150
--------
(பாடம்) *வந்தெனோடும். †அரசநீயமிர்து. ‡ உரிமை செய்தால். § விடுது.
உரை:- விரைசெய்தார் இறைவ-மணம் கமழும் மாலையணிந்த அரசனே, நீ அரசு துறத்தியாயின்-நீ அரச போகத்தைத்துறந்து செல்கின்றாயாயின், அமைக-அவ்வண்ணமே செய்க, எனக்கும் அஃதே-எனக்கும் அதுவே இனி அமைதியாகும். என் வியன்மனை-என்னுடைய அகன்ற மனைக் கண்ணே, இன்று-இற்றைநாளில், மைந்தனோடு-அரசனாகப்போகும் நின் மைந்தனுடன் போந்து, இரசநீர் அமிர்து- யான் நல்கும் சுவைபொருந்திய உணவினை, கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்- ஏற்றுண்பதற்கு மனமிசைய வேண்டும், அரசு-இவ்வரசபோகம், அவனதாக-மகற் குரித்தாய்விடின், அடிகள்-ஐயனே, நாம் அவிதும்-பின்பு நாம் இவற்றின்மேல் செல்லும் வேட்கையவிந்தொழிவோ மாதலின் எ-று.
யசோதரன் துறவு பூண்பதில் தனக்கு விருப்பமின்மை யுணர்த்துவாள், "அரசு நீ துறத்தியாயின்" என்றும், தனக்குத் துறவுக் கண் விருப்பமின்றாயினும், யசோதரன் தன் வேண்டுகோட்கு இசையும் பொருட்டு "எனக்கும் அஃதே" என்றும் கூறினாள். "இரச நீர் அமிர்து" என்றாள், தான் நல்க விரும்பும் உணவின் ஏற்ற முணர்த்தற்கு, உள்ளத்தே துறவு நிகழ்ந்தவழி, தன் சொல்லையும் பிறநலங்களையும் விழையான் என்ற கருத்தால், அமிர்தமதி யசோதரனை, "மைந்தனோடு கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்" என்றும், இனி, இத்தகைய வுணவினைத் தானும் அவனும் கோடற்கா காமையால் "இன்று" என்றும், அதன்பால் வேட்கை யெழினும், அதனை யவித்தொழுக வேண்டுமென்பாள், "அவிதும் நாம்" என்றும் கூறினாள். அடிகள், மகளிர் தம் கணவனை இவ்வாறு அழைப்பது மரபு. "அமுதமுண்க வடிகள் ஈங்கென"1 எனக் கண்ணகியார் கூறுமாறு காண்க.
துறவு மேற்கொள்வாரை விலக்குதல் அறமன்றாதலின், அமிர்தமதி இவ்வண்ணம் கூறினாள் என வுணர்க.
- ----------
1.சிலப். 16:43.
யசோதரன் சந்திரமதியுடன் விருந்துண்ண வருதல்.
ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக என்றே
தாங்கல னவ்வை தன்னோ டவள்மனை தான மர்ந்தான்
தீங்கது குறுகின் தீய நயமுநன் னயம தாமே. 151
உரை:- ஆங்கு-அவ்விடத்தே, அரசன்-அரசனான யசோதரன், அவள் அகத்துமாட்சி அறிந்தனனேனும்- அமிர்தமதியின் மனமாண்புகளை அறிந்திருந்தானாயினும், வீங்கிய முலையினாய்-பெருத்த முலைகளையுடையாய், நீ வேண்டியது அமைக-நீ விரும்பியதனையே செய்வாயாக, என்று-என்று சொல்லி, தாங்கலன்-நீட்டியாது சென்று, அவ்வை தன்னோடு-தாயாகிய சந்திரமதியுடன், அவள் மனை- அவ்வமிர்தமதியின் அரண்மனையை யடைந்து, அமர்ந்தான்- உணவுகொள்ள விரும்பியிருந்தான், தீங்கது குறுகின்-கேடு வருமாயின், தீய நயமும்-தீதுபயக்கும் உரையும், நல்நயம தாம்-முழுதும் நலம் பயப்பதாகவே தோன்றும் எ-று.
அமிர்தமதி அகத்தே கணவன்பால் வெறுப்பும் செயலில் கொடுமையும் கொண்டிருத்தலை நன்கறிந்திருப்பது தோன்ற "அவளகத்து மாட்சி யறிந்தனன் அரசனேனும்” என்றார். “இரசநீர் அமிர்து கைக்கொண் டருளுதற் கிசைதல் செய்வாய்" (150) என்று அமிர்தமதி வேண்டிக்கொண்டதற்கு அவன் இசைந்ததனை "நீ வேண்டிய தமைக" என்றான் என்றார். தங்கலன் என்பது எதுகையின்பங் குறித்துத் தாங்கல னென நீண்டது. அவ்வை, தாய்,.
உணவு கோடற்கு இசைந்தவன் தன் தாய் மனையை யடைந்து அவளையும் உடனழைத்துக்கொண்டு போந்து இனிதிருந்தான் என்பார், "அமர்ந்தான்" என்றும், அக்காலை, அவன் அமிர்தமதி கருதிக் கொண்டிருக்கும் தீமையை நினையாது அவள் வழங்கிய உரையினைக் கேட்டு உண்மை யென்றே கருதி யொழிந்தா னென்றும், அவ்வுரை கேட்டற்கு இனியவா யிருந்தனவே யன்றி, உண்மை யன்பாகிய உள்ளீடு இல்லாதன வென்றற்குத் "தீயநயம்" என்றும் கூறினார்.
சொல் தன் இனிமைத் தோற்றத்தால் கேட்டார் மனத்தே சொல் வார்பால் அன்பம் உண்மையுறவும் கொள்ளச் செய்தலின் "நயம்" எனப்பட்டது. கேடெய்தும் ஊழுடையார்க்கு, அக்கேட்டினைப் பயக்கும் சொல்லும் செய்கையும் நலம் பயப்பனவாய்த் தோன்றி அவரை அவற்றையே விரும்பப்பண்ணுதல் பற்றி, "தீங்கது குறுகின் தீயநயமும் நன்னயமதாமே" என்றார்.
-----------
அமிர்தமதி உணவில் நஞ்சுகலந் தளித்தல்
நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்கள் இருவிரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து* மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
நஞ்சொடு படாத தானு மகனொடு† நயந்து கொண்டாள். 152
----------
(பாடம்)* மஞ்சனை விலக்கி. † பிறரொடு.
உரை:- நஞ்சொடு கலந்த-விடம் கலந்துள்ள, தேனின்
நறுஞ்சுவை-தேனைக் கலந்ததனாலுண்டாகிய நறியசுவை,
பெரியவாக-மிகுதியாகவுடைய, எஞ்சல் இல் அட்டுகங்கள்-
வேறு சுவையிலும் குறைபாடில்லாத பண்ணியங்களை, இருவிரும் அருந்துக என்று-இருவீரும் உண்பீர்களாக என்று,
வஞ்சனை வலித்து-வஞ்சனையான சொற்களால் வற்புறுத்தி,
மாமிதன்னுடன் வரனுக்கு-மாமியாகிய சந்திரமதியடன்
கணவனாகிய யசோதரனுக்கும், ஈந்தாள்-அளித்து உண்பித்தாள். தான் மகனொடு-தான் தன்மகன் தன்னோடு உடனிருக்க இருந்து, நஞ்சொடுபடாத-நஞ்சு கலவாத பண்ணியங்களை, நயந்துகொண்டாள்-விரும்பியுண்டாள் எ-று.
நஞ்சினைத் தேனிற் கலந்து அதனைப் பண்ணிகாரத் தோடு சேர்த்து, நஞ்சின் சுவை சிறிதும் தெரியாவகையிற் சமைத்தமை தோன்ற, "நஞ்சொடு கலந்த தேனின்; நறுஞ்சுவை பெரியவாக" என்றும், இந்நஞ்சு கலப்பால் உண்டாகிய குறைபாடொழிய, வேறு வகையால் எவ்வகைச் சுவைத்திறத்தும் குறைவின்மை விளங்க,
"எஞ்சலில் அட்டுகங்கள்" என்றும் கூறினார். அட்டுகம், இனிப்புப் பண்டம்; பண்ணிகாரம் என்றலும் இதுவே, சுவைமிகுதியால் படைத்த அட்டுகங்கள் தெவிட்டியபோதும், பல்வகை நயவுரைகளால் இருவரையும் வற்புறுத்தி உண்பித்தமை தோன்ற "வஞ்சனை வலித்து" என்றும், நஞ்சுடையவற்றையே நாடி யுண்பித்தமையின் "வஞ்சனை"யென்றும், தன் மகனைக் கோறல் கருத்தன்மையின், அவன், தன்னொடு இருந்து நஞ்சிலாதவற்றை யுண்ணுமாறு செய்தமையின்,
"நஞ்சொடு படாத தானும் மகனொடு நயந்தது கொண்டாள்" என்றும் கூறினார். இனி லட்டுகம் என்றே கொள்ளினுமாம்.
சந்திரமதி தன் மகனோடிருந்து உண்பது குறித்துத் தான் தன் மகனொடு இருந்து உண்பது காட்டுவாளாய், அமிர்தமதி தன் கருத்தை முடித்துக்கொள்ளும் திறம் குறிக்கற்பாற்று. நஞ்சில்லாதவற்றை யுண்டலில் வெறுப்புப் பிறவாமையின் "நயந்து கொண் டாள்" என வுணர்க.
---------
யசோதரனும் சந்திரமதியும் நஞ்சுண்டதனால் இறந்து விலங்குகதியுட் பிறத்தல்
நஞ்சது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தங்கண்
புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரத் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. 153
உரை:- நஞ்சு பரந்த போழ்தின்-விடமானது உடற்குள் பரவிய காலத்தில், நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்-உடல்
நடுங்கி அறிவு கலங்கித் தளர்ந்து நிலத்தில் வீழ்ந்து, மரணம்
அஞ்சினர்-தம்முயிர்க்குக் கேடுவருவதுணர்ந்து அஞ்சினாராக, சிந்தையடைந்தது முதல-பிறந்து நன்று தீது காணும்
சிந்தனையுண்டாகிய நாள்முதலாக, தங்கண்புஞ்சிய தீயவினைகள்-தம்மிடத்தே மிக்குற்ற தீவினைகள், புகுந்தன-தம்பயனாகிய துன்பத்தைச் செய்யலுற்றன, பொறிகள் பொன்றித் துஞ்சினர்-பொறியைந்தும் புலங்கலங்கித் தடுமாறிக் கெட்டு
உயிர்துறந்தனர், துயரம் துஞ்சா விலங்கிடை-துன்பம் குறைதலில்லாத விலங்குகதியுட் பிறப்பாராயினார் எ-று.
நஞ்சு உடலிற் பரவியதும் குருதியின் தூய்மையைக் கெடுத்து அதனைக் குளிர்வித்தலின், நடுக்கமும் மயக்கமும் அடைய வெய்தியது தோன்ற. "நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்" என்றார். நலந்தீங்கினைப் பகுத்துணரும் நல்லுணனர்வு பிறந்தபின்பே வினைகள் தொடர்தலின் "சிந்தை யடைந்தது முதல தங்கண் புஞ்சிய வினைகள்" என்றார். உயிர் நீங்குகாலத்து அதற்கு முன்னாகப் பொறிகள் புலனுணர்வு கெடுதலின் "பொறிகள் பொன்றித் துஞ்சினர்" என்றார். நால்வகைக்கதியும் துன்பத்துக் கிடமாயினும், மக்கட்கதியை
நோக்க, விலங்குகதி துன்பம் பெரிதுடைத்தாகலின் "துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னினார்" என்றார்; பிறாண்டும், யசோதரனும் சந்திரமதியும் விலங்குகதியுள் துன்புற்றது கூறுவார், "ஒல்வதற்கரு மாதுயருற்றனர்"(170) என்று ஓதுதல் காண்க.
--------
அமிர்தமதியை யிகழ்ந்து உழையர் தம்முட் கூறிக்கொள்ளல்
எண்களுக் கிசைவி லாத இறைவியா மிவள்தன் செய்கை
கண்களுக் கிசைவி லாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். 154
உரை:- இறைவியாம் இவள் தன் செய்கை-அரசியாகிய
இவ்வமிர்தமதியின் நினைவும் சொல்லும் செய்கையும், எண்களுக்கு இசைவு இலாத - எண்ணுதற்குச் சிறிதும் பொருந்தாதவையாகும், கண்களுக்கு இசைவிலாத கடையனை - பார்த்தற்காகாத கீழ்மகனான அட்டபங்கனை, நெஞ்சின் கருதி - கள்ளமனத்தால் காதலுற்று, மண்களுக்கு இறைவனாய வரனுக்கு - மண்ணுலகமக்கட்கு வேந்தனும் தனக்குக் கணவனுமாகிய யசோதரனுக்கு, மரணம் செய்தாள்-உயிர்க்கேட்டினைச் செய்தாள், பெண்களின் கோதனாள் - பெண் பிறப்பின் குற்றமெல்லாம் திரண்டு ஓர் உருக்கொண்டாற் போல்பவளான இவ்வமிர்தமதி, பெரிய பாவத்தாள் - பெரிய பாவியாவாள், என்றார் - என்று உழையர் தம்முட் கூறிக் கொள்வாராயினர் எ-று.
செய்கை யெனப் பொதுப்படக் கூறிமையின், நினைவும் சொல்லும் கொள்ளப்பட்டன. எண்ணுந்திறம் பலவாதலின், "எண்களுக் கிசைவிலாத" என்றார். பார்த்தற்கு மனம்பொறாமையின், கண்மே லேற்றிக் கூறினார். தனக்கு அக்கடையன்பா லுண்டாகிய காதலும் கள்ளக்கூட்டமும் புறத்தே தோன்றாவகையிற் கரந்தொழுகுதல் பற்றி, "நெஞ்சின் கருதி" என இகழ்ந்தனர். யசோதரன் மரணத்தால் இவ்வமிர்தமதி கணவனை யிழந்ததே யன்றி நாட்டு மக்கள் வேந்தனை யிழந்தனர் என்றற்கு, "மண்களுக் கிறைவனாய வரனுக்கு மரணம் செய்தாள்" என்பாராயினர். தான் கருதிய தீய காமவின்பம் குறித்துத் தன் கணவனைக் கொன்று நாட்டு மக்கட்கும் அரசனில்லாப் பெருந்துன்பத்தைச் செய்தமை கண்டு மிக்க அருவருப்புற்று இகழ்ந்து பழிக்கின்றார்களாதலின், "கோதனாள்" என்றும் "பெரிய பாவத்தள்" என்றும் பழிப்பாராயினர். கோது, குற்றம்.
---------
பெரியோர் சிலர் தம்முட் கூறிக் கொள்ளுதல்
தீதகல் கடவு ளாகச் செய்ததோர் படிமை யின்கண்
காதர முலகி தன்கண் கருதிய முடித்தல் கண்டுஞ்
சேதன வடிவு தேவிக் கெறிந்தனன் தெரிவொன் றில்லான்
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். 155
உரை:-தீது அகல் கடவுளாக - குற்றத்தைக்கெடுக்கும்
கடவுளாகக் காண்போர் கருதுமாறு, செய்தது ஓர் படிமையின்கண் - செய்யப்பட்டதாகிய ஒரு பதுமையினிடத்தே, காதரம் - உண்டாகிய வெறுப்பும், உலகு இதன்கண் - இவ்வுலகத்தில், கருதிய முடித்தல் கண்டும் - ஒருவர்க்குத் தாம் கருதிய கருமங்களை முடித்துத் தருவதைக்கண்டு வைத்தும், தேவிக்கு - தேவிவடிவாகச் செய்யப்பட்ட அசேதனமாகிய பாவைக்கு, சேதனவடிவு எறிந்தனன் - சேதனமாகிய கோழியின் வடிவம்செய்து அதனைப் பலியிட்டான், தெரிவு ஒன்றில்லான் - ஆராய்ச்சியில்லாத இவ்வேந்தன், ஆதலால் - ஆகையினால்தான், இன்று - இப்போது, வந்தது - இக்கேடு எய்துவதாயிற்று, என்று சிலர்கள் எல்லாம் அழுங்கினர் - என்றுசொல்லிச் சில அறிந்தோர் வருந்தினார்கள் எ-று.
தம்மை வருத்தும் துன்பம் அகற்றுமென்ற கருத்தால் மக்கள் தெய்வ வடிவு சமைத்து வழிபடுகின்றன ரென்றதற்கு, " தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை" என்றும், அதன்பால் ஒருவர் செய்யும் குற்றமும் குணமாய் அவர் கருதிய கருமத்தை முடித்துத் தருவது உண்மையின், ”காதரம் கருதிய முடித்தல் கண்டும்" என்றும் கூறினர். மாக்கோழியைக் கொன்ற குற்றமே இன்று யசோதரற்குண்டாய கேட்டிற்குக் காரணம் என்று நினைந்து கூறுதலின்,
அக்கோழிப் பலி கொடாதிருப்பின் கேடொன்றும் நிகழ்ந்திராதென்ற கருத்தால், "சேதன வடிவு தேவிக் கெறிந்தனன்" என்றும்,
தேவிவடிவும் அசேதன மாதலைத் தெரிந்தில னென்றதற்குத் "தெரிவொன்றில்லான்" என்றும் கூறினர். அசேதனப்பொருளாயினும், சேதனமாகக் கருதிப் பலியிட்டமையின், "சேதனவடிவு" என்றார் எனவறிக. இவ்வாராய்ச்சியினைச் செய்வோர் சிலராதலினாலும், அவரனைவரும் ஒப்பக் கருதுதலாலும், "சிலர்களெல்லாம்" என்றார்கள், விகுதிமேல் விகுதி.
-------
நகரமாந்தர் தம்முட் கூறிக்கொள்ளுதல்
அறப்பொருள் நுகர்தல் செல்லா னருந்தவர்க் கெளிய னல்லன்
மறப்பொருள் மயங்கி வையத் தரசியல் மகிழ்ந்து சென்றான்
இறப்பவு மிளையர் போகத் திவறின விறுதி யின்கண்
சிறப்புடை மரண மில்லைச் செல்கதி யென்கொ லென்றார். 156
உரை:-அறப்பொருள் நுகர்தல் செல்லான் - இவ்வேந்தன் அறத்தால் பொருளீட்டி நுகர்வன நுகர்வதை ஒழித்தான். அருந்தவர்க்கு எளியன் அல்லன் - அரிய தவத்தையுடைய பெரியோரைப் பார்க்க விரும்பிற்றிலன், மறப்பொருள் மயங்கி - மறத்தால் பொருள்செய்து அறிவு மயங்கி, வையத்து அரசு இயல் மகிழ்ந்து - மண்ணுலகத்தே தன்னரசியலில் வரும் போகத்தால் மதங்கொண்டு, சென்றான் - ஒழுகியதுடன், இளையர் போகத்து இறப்பவும் இவறினன் - மகளிர் போகத்தில் அளவுகடந்த பற்றுள்ளம்கொண்டான், இறுதியின்கண் - முடிவிலும், சிறப்புடை மரணம் இல்லை - சான்றோர் புகழும் சிறப்புடைய சாவும் பெறானாயினன், செல்கதி என்கொல் - இவன் சென்ற கதிதான் யாதோ, என்றனர் - என்று தம்முட் பேசிக்கொள்வாராயினர் எ-று.
"சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம்"1 என்பவாகலின், அறமே பொருளீட்டற்கு நெறியாதல் பெற்றாம். அறத்தற் பொருளீட்டக் கருதாமையின், "அறப்பொருள் நுகர்தல் செல்லான்" என்றார். மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. அரிய தவத்தை யுடையவர், காட்சிக் கெளியனாய வழிப்போந்து அல்லன கடிந்து அறமாவன வுணர்த்தி நன்னெறிக்கண் உய்ப்பராதலின் அவரை ஏலாமை இவற்குக் கேடாயிற்று. மறவினை புரிந்து மக்கள் மனம் வருந்தக்கண்டு அருளாது அவர் பொருளை வவ்விப் பெறும் இன்பமே இன்பமாகக் கருதி யொழுகினமையின், "மறப்பொருள் மயங்கி" என்றும், இவ்வாறு நடாத்தும் அரசியற் போகத்தால் செருக்கி, தனக்கு உறுதி நாடாது கெட்டானென்பார், "அரசியல் மகிழ்ந்து" என்றும், கழிகாமம் "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது"2 என்பதனை யுணரானாயினா னென்றற்கு, "இறப்பவும் இளையர் போகத்து இவறினன்" என்றும், போர்ப் புறத்தே பகைவர் வாள்வாய்ப்படாது நஞ்சூட்டப் பட்டு இறந்தமையின், "சிறப்புடை மரண மில்லை" யென்றும், இவ்வியல்பினையுடையோன் இறந்தால் விண்புகான் என்று நூன்முகத்தால் அறிந்திருத்தலின், "செல்கதி யென்கொல்" என்றும் கூறி வருந்தினர்; "நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்"3 என்று சான்றோர் கூறுதல் காண்க.
- --------
1.புறம். 31. 2.பதிற்.22. 3.அகம்.61.
அமிர்தமதி மிக்க துயருற்றாள்போல நடித்தொழுகுதல்.
இனையன வுழையர் தாமும் எழில்நக ரத்து ளாரும்
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழ லரசன் தேவி கருதிய வதுமு டித்தாள்
மனநனி வலிதின் மாழ்கி மைந்தனை வருக வென்றாள். 157
உரை:- உழையர்தாமும்- அரசியற்சுற்றத்தாரும், எழில் நகரத்துளாரும் - அழகிய நகரத்துள்ள சான்றோர்களும்,
இனையன நினைவன - இவைபோல்வன பலவற்றை, நெஞ்சில் நினைந்து - மனத்தில் எண்ணி, நெகிழ்ந்தனர் புலம்பி வாட- உருகிப் புலம்பி வாட்ட மெய்தினாராக, கனைகழல் அரசன் தேவி - ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனுக்கு மனைவியாகிய அமிர்தமதி, கருதிய அது முடித்தாள் - தான் கருதிய கருத்தினை இனிது நிறைவேற்றிக்கொண்டாளாயினும், வலிதின் - வலிய, மனம் நனிமாழ்கி- மனம் மிக வருந்தினாள் போல் நடித்து, மைந்தனை வருக என்றாள். - மகனான யசோமதியை வருமாறு பணித்தாள். எ-று.
உழையோர், அரண்மனைக்கண் இருந்து, அரசப் பெருமக்கட்குக் குற்றேவல் புரியும் பணியாளர்; அரசர்க்கு ஆவன அறிந்து அந்தப்புரம் போந்து அறிவித்தொழுகும் அரசியற் சுற்றத்தார் முதலாயினார். இவர்கள் அரசர்களின் நெஞ்சறிந்தொழுகுபவ ராதலின், முதற்கண் கூறினார். நகரதுளாரெனப் பொதுப்படக் கூறினாரேனும் சிறப்புடைய சான்றோரே அரசனால் மதிக்கப் பெறுதலின், ஈண்டு அவரே கொள்ளப்பட்டனர். யசோதரனைக் "கனைகழ லரசன்" என்றார், அக்கழல்யாப்பு அவற்குச் சிறப்புடை மரணம் தாராது ஒழிந்தமை வற்புறுத்தற்கு. அது கருத்து; அஃதாவது, அரசனைக் கொன்று தான் விரும்பிய அட்டபங்கனோடு கள்ளக்க்காம வின்பம் துய்த்தல், யசோதரனாகிய கணவனும், மாமியாகிய சந்திரமதியும் இறப்பக்கண்டும் மனம் வருத்தமுறாமையின், உலகோர் இகழ்ச்சி யெண்ணி, ஆற் றாது புலம்புவாள் போல் வலிய நடிக்கின்றா ளென்றற்கு, "மனம்நனி வலிதின் மாழ்கி" யென்றார்.
--------
மகனை அரசனாகுக எனப் பணித்தல்
இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். 158
உரை:- நீ தனியையாகி இனையல் - மகனே, நீ தனித்தமையால் வருந்துதல் ஒழிக, இறைவனிற் பிரிந்தது - அரசனை விட்டு யாம் பிரிந்தது, என்கண் வினையினால் விளைவு - என்னிடத்துண்டாகிய தீவினையின் பயனாகும். மனத்து வெந்நோய் விடுத்திடு - நின் மனத்தில் உண்டாகிய மிக்க வருத்தத்தை விடுவாயாக, புனைமுடி கவித்து - பொன்னும் மணியும் கொண்டு புனைந்த முடியினை சூடிக்கொண்டு, பூமி பொதுக் கடிந்து - மண்ணுலகு நினக்கே யுரித்தாமாறு, ஆள்க - ஆட்சி புரிவாயாக, என்று - என்று சொல்லி விடுத்து, மறைபதிக்கு அமுதமாவாள் - இறந்த வேந்தனான யசோதரனுக்கு அமுதம்போல் இன்பந் தந்தவளான அமிர்தமதி, மனம் நனி மகிழ்ந்திருந்தாள்- தன் மனத்தே மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வரலானாள். எ -று.
தந்தை இறந்ததற்குரிய காரணத்தை யறியாது, பிரிவு நினைந்து தாய்முன் போந்த மகனுக்குத் தேறுதல் கூறலுற்றவள், "நீ தனியையாகி இனையல்" என்றாள். நீ இவ்விளமைப் போதில் நின் தந்தையை இழந்து தனித்தற்கு ஏதுவாகிய வினை என்பால் உண்டாகியது எனத் தான் செய்த தீவினையை ஒளியா துரைப்பாள், இறைவனிற் பிரிந்தது என்கண் வினையினால் விளைவு கண்டாய்" என்றாள், அதனை யுண்மை யுரையாகக் கொள்ளாது* துன்ப மிகுதியால் ஆற்றாதுரைக்கும் சொல்லென யசோமதியும் பிறரும் கொள்வரென அவள் நன்கறிவாளாதலின், கண்டாய், அசைநிலை. வலியார் மெலியார் அனைவர்க்கும் நிலம் பொது என்பதை விலக்கி, வலியுடையார்க்கே யுரித்தெனத் தனக்கே யுரித்தாமாறு ஆட்சி புரிதல் வேண்டு மென்றற்கு," பூமி பொதுக்கடிந் தாள்க" என்றாள். மறைபதி, யசோதரன்; கள்ளக்காதலனான அட்டபங்கனுக்கும் இயையும்.
------------
யசோமதி அரசாளுதல்
வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
ஏரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்தி
சீரணி யடிகள் செல்வத் திருவற மருளல் செல்லான்
ஓரணி யாக மாத ருவகையங் கடலு ளாழ்ந்தான். 159
உரை:-வார் அணி முரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த முரசு முழங்க, மணிபுனை மகுடம் சூடி - மணிகளால் புனையப் பட்ட முடி யணிந்து, ஏர் அணி ஆரமார்பன் இசோமதி - அழகிய பூணார மணிந்த மார்பினை யுடையனாகிய யசோமதி, இறைமை எய்தி - அரசு முறை எய்தியும், சீரணி அடிகள் - சிறப்புப் பொருந்திய அடிகளாகிய அருகபரமேட்டி யுரைத் தருளிய, செல்வத் திருவறம் - துறக்க வின்பமும் வீடுபேறும் தரவல்ல அறத்தை, அருளல் செல்லான் - மேற்கொண்டு உயிர்க்கு அருளறத்தைச் செய்யாமல், மாதர் அணியாக - மகளிர் கூட்டமே தனக்கு அணியாகக் கொண்டு, உவகையங் கடலுள் ஆழ்ந்தான் - காமக்களிப்பாகிய கடற்குள் மூழ்கிக் கரையேற மாட்டாது அதனுள் அழுந்தினான். எ-று.
-----------
*உண்மையுரையாகக் கொள்வானால், " இறைவன் நிற்பிரிந்தது என் (நஞ்சூட்டிய) வினையினால் விளைவு" என்று கொள்ளற்பாலன்.
மணிக்குயிற்றிச் செய்த செம்பொன் முடியாதலின், "மணிபுனை மகுடம்" என்றார். ஏர், அழகு. அரசெய்திய பயன், அடிகள் உரைத்த அருளறம் மேற்கொண் டொழுகதலேயாக; யசோமதி அதனைச் செய்யாமையின், "திருவறம் அருளல் செல்லான்" என்றார். மெய்ம்மை சேர்ந்த புகழாதல் தோன்ற, "சீரணி அடிகள்" என்றும், அவர் அருளிய அறம், மறுமையில் துறக்கவின்பமும் அதன் முடிவில் வீடுபேறும் பயக்கும் சிறப்புடைத் தென்பார், "செல்வத் திருவறம்" என்றும் கூறினார். "சீரணி யடிகள்" என்று சிறப்பித்த வதனால், திருவறம் பூண்டார் இம்மையில் புகழ் பெறுதலும் உரைத்தவாறாம். அறத்தைச் "செய்த" லென்னாது, "அருளல்" என்றார், செய்கை உயிர்கட்குச் செய்யும் அருளே என்றற்கு. உயிர்க்கு அருள் செய்தலை அணியாகக் கொள்ளாது, மகளிர் கூட்டமே அணியாகக் கருதினா னென்பார், "மாதர் அணியாக" என்றார். ஓர், அசை. இனி, ஓரணியாக என்றே கொண்டு, ஒருதலையாக என்றுமாம். மாதர் தரும் காமவின்பத்திற்கு அடிமையாகி, அதனின்றும் தன்னை மீட்டுக் கொள்ளும் மதுகையின்றி மெலிந்தான் என்பார், "உவகையங்கடலுள் ஆழ்ந்தான்" என்றார்.
அபயருசி மாரிதத்தனுக்குக் கூறல்
இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவ ராகு மினையரின் விளையு மின்பம்
இனையது தெளிவி லாதார் இருநில வரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். 160
உரை:- வனைமலர் மகுட மாரிதத்தனே - தொடுக்கப் பட்ட மலர்மாலையும் மணிமுடியு முடைய மாரிதத்தனே, ஆயின் - ஆராயுமிடத்து, வினையினாகும் இயல்பு - செய்யும் வினைகளினா லுண்டாகும் பயன், இனையன - இத்தன்மையனவாகும், இது தெரிதி - இதனை யறிவாயாக, துணைவராகும் இளையரின் விளையும் இன்பம் - மனைவி யென்றும் தாயென்றும் துணைசெய்பவராகிய மகளிரால் உண்டாகும் இன்பமும், இனையன - இக்கூறிய இயல்பினவாகும், தெளிவிலாதார் - தெளிந்த அறிவில்லாதார், அரசு செய்கை - அரசு புரியும்திறமும், இனையது - இத்தன்மைத்தாகும், இதுமதி - இதனை மனத்தே எண்ணுவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
ஒருவர் செய்யும் வினையியல்பு, அது விளைக்கும் பயனால் விளங்குதலின், "வினையினாகும் இயல்பு" என்றும், இதனைத் தெரிந்து உணராதவழி வினைகள் பெருகித் துன்பம் பயப்பித்தலின், "இது தெரிதி" என்றும், மனைவியாகிய அமிர்தமதியால் சிறப்பில் இறப்பும், தாயாகிய சந்திரமதியால் கொலைவினையும் எய்தக் காட்டியதனால், "துணைவராகும் இளையரின் விளையும் இன்பம்" என்றும், யசோமதி தெளிந்த அறிவிலனாதலின், மகளிராற் பெறும் காமவின்பமே பெரிதெனக் கருதி மயங்குதலைக் காட்டுதலின், "தெளிவிலார் இருநிலவரசு செய்கை இனையது" என்றும் கூறினான். "மதியிது" என்று மாரிதத்தற்குக் கூறியது, அவனை நன்னெறிக்கட் செலுத்தும் குறிப்பின னாதலை வற்புறுத்திற்று.
இரண்டாவது சருக்கம் முற்றிற்று.
---------------
This file was last updated on 3 May 2015.
.